புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும் அழைத்துச் சென்றிருந்த போதிலும், இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் – அந்த இயல்புகளுக்கும் அப்பால், அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் – புகலிட இலக்கியத்தை ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி பெற்றுள்ளது. “அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மெய்நிகர் வழியாக நடைபெற்ற எழுத்தாளர் விழா, இம்முறை சிட்னியில் இம்மாதம் 10 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் தூங்காபி சமூக மண்டபத்தில் ஆரம்பமாகிறது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தினால் (Australian Tamil Literary & Arts Society) ஒழுங்குசெய்யப்படும் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக   Cumberland City Council  மேயர் லிஸா லேக், மற்றும் Strathfield City Council மேயர் கரன் பென்சபென் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து மாநகரங்களில் வதியும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் , வானொலி ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடும் இவ்விழாவில், இம்முறை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவருபவரும், தமது நூல்களுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகள் உட்பட பல இலக்கிய விருதுகளையும் பரிசில்களையும் பெற்றிருப்பவருமான எழுத்தாளர் தாமரைச்செல்வி பாராட்டி கெளரவிக்கப்படவிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்க மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றும் தமிழ் மாணவர்கள் தமிழையும் ஒரு பாடமாக கற்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களுக்கு உசாத்துணையாக அவுஸ்திரேலியாவில் இதுவரையில் வெளிவந்த தமிழ் இலக்கிய நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் என்பனவற்றின் கண்காட்சியும் இவ்விழாவில் இடம்பெறவிருக்கிறது. இக்கண்காட்சியை பிரதம விருந்தினர்கள் திறந்துவைப்பார்கள். அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் படைப்பாளிகள் இந்த வருடம் வெளியிட்ட புதிய நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மலையகம் 200 என்னும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறும்.

விழாவின் இறுதி நிகழ்ச்சிகளாக குறும்படக்காட்சியும், இசைக்கலைஞர் அருண். குமாரசாமியின் இசையரங்கும் இடம்பெறும்.

அனுசரணை : சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம்
Cumberland Council, Wentworth Ville Library

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.