'

நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்'  என்று எனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன். இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள். சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர், சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும் எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு, உருவாகியிருக்கிறார்கள். அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.

எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன், வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.

இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா. இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.

வ. ராசையா மாஸ்டரின் தலைமையில் கொழும்பில் நடந்த இலக்கிய கூட்டங்களிலும் உரையாற்றினேன். இந்தத் தொடர்புகளினால், அவரது புதல்வி வசந்தி எனக்கு அறிமுகமானார். ராசையா மாஸ்டர் வீட்டில் நடக்கும் சந்திப்புகளின்போது, எமக்கு சிற்றுண்டி , தேநீர் தந்து உபசரிக்கும், வசந்தியும் தாயார் பூரணம் அவர்களும் அந்தக் கலந்துரையாடல்களில் பார்வையாளர்களாக இருப்பார்கள். வசந்தி அப்போது மாணவியாக இருந்திருக்கவேண்டும். எழுத்தாளர்களின் கருத்துக்களை கூர்ந்து அவதானிப்பார். வசந்தியின் பெற்றோர்கள், கலை, இலக்கிய, இசைத்துறை ஆர்வலர்களாக இருந்தமையால், வசந்தியையும் இந்தத் துறைகள் தொற்றிக்கொண்டன.

வசந்தி, மற்றுமொரு இலக்கியவாதி திருமதி மனோன்மணி சண்முகதாஸின் சகோதரர் தயாபரனை காதல் திருமணம் செய்த பின்னர், இலக்கிய ஈடுபாட்டிலும், எழுத்துத்துறையிலும் தீவிரமானார். மூன்று புத்திரர்களுக்கு தாயான பின்னரும்கூட வசந்தி, தனது இலக்கியச் செயற்பாடுகளை தங்கு தடையின்றி தொடருகின்றார். கொழும்பில் இயங்கிய தமிழ்க்கதைஞர் வட்டம், ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மாதாந்தம் இலங்கைப் பத்திரிகைகளில், இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறந்த சிறுகதைகளைத் தேர்வுசெய்து, பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வந்தது. இந்த அமைப்பில் வசந்தியும் ஒரு தூணாகவே நிற்பவர்.

மாணவப்பராயத்தில் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, இசை, நடனத் துறைகளிலும் ஈடுபட்டவர். கணவர் தயாபரனின் சகோதரி மனோன்மணி, பேராசிரியர் அ. சண்முகதாஸின் அன்புத் துணைவியார். இத்தகைய பின்புலங்கள் அனைத்தும், வசந்தியையும் தேர்ந்த வாசகராகவும், எழுத்தாளராகவும் இலக்கியச்செயற்பாட்டாளராகவும் உருவாக்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ( இளங்கலைமாணி தமிழ் சிறப்பு ) பயின்ற வசந்தி, கணக்கியல், வங்கியியல் கற்கை நெறிகளிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போது மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

வசந்தி கொழும்பில் வாழ்ந்தமையால், சிங்கள மொழியையும் கற்றிருக்கிறார். தனது அம்மம்மாவிடமிருந்து குழந்தைப்பருவத்தில் கதை கேட்டு வளர்ந்தவர். தாயார் வாசிக்கும் பழக்கத்தை தூண்டியவர். தந்தையார் நூல் நயப்புரைகள் எவ்வாறு அமையவேண்டும் என சொல்லிக்கொடுத்தவர். கணவர் தயாபரன், சமூகச் செயற்பாடுகளில் வசந்திக்கு பக்கபலமாகத் திகழ்பவர். இவ்வாறு உருவானவர்தான் இந்த முதல் சந்திப்பு தொடரில் நான் சொல்ல விரும்பிய இலக்கிய சகோதரி திருமதி வசந்தி தயாபரன்.

தமிழ்க்கதைஞர் வட்டத்தில் தொடக்ககாலத்தில் இணைந்திருந்த சிலர் இன்றில்லை. எனினும், அதனைத் தொடர்ந்தும் இயக்கி வரும் வசந்தி தயாபரன், தற்போது அதன் செயலாளராக பணியாற்றுகிறார். அன்று அந்த மூத்த தலைமுறையினர் தொடக்கி வைத்த இலக்கிய அமைப்பு, தற்போது மற்றும் ஒரு தலைமுறையைச்சேர்ந்த இலக்கியவாதியினால், முன்னெடுக்கப்படுகிறது.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழுவிலும் இணைந்திருக்கும் வசந்தி, சங்கத்தின் செயற்பாடுகள் பலவற்றின் திட்டமிடலிலும் , ஒழுங்கமைப்பிலும் ஈடுபட்டு வந்திருப்பவர். சங்கத்தின் ‘ஓலை ‘ இதழின் ஆசிரியர் குழு, தமிழிசைச் சிறப்பு மலர்களின் ஆசிரியர் குழு முதலானவற்றிலும் அங்கம் வகித்திருக்கும் இவர், சங்கம் நடத்திய போட்டிகளிலும் , பாடசாலைகள் நடத்தும் விவாதப் போட்டிகளிலும் நடுவராக இயங்கி வருகிறார். அவ்வப்போது நூல் வெளியீட்டு அரங்குகளில் தனது தேர்ந்த வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பித்து வருகிறார்.

மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் இயக்கிய முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் பணிகளிலும் சுமார் பதினைந்து வருட காலம் இணைந்திருந்தவர். அத்துடன் நீர்வையின் இறுதிக்காலத்தில் அவரது நூல்களின் உருவாக்கத்திலும் பங்கேற்றவர்.

நீர்வை, சில இலக்கிய ஆளுமைகள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை எழுதும் வாய்ப்பை தனக்கு வழங்கியமை குறித்தும் பெருமிதமடைந்திருக்கும் வசந்தி தயாபரனின் முதலாவது சிறுகதை ( புதிய முகம் ) தினக்குரல் வார இதழில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 2002 டிசம்பரில் வெளிவந்திருக்கிறது.

வசந்தி தயாபரனின் முதல் சிறுகதைத் தொகுதி : காலமாம் வனம். சிறுவர் இலக்கிய வரிசையில் இவர் வரவாக்கியிருக்கும் நூல்கள்: குடை நடை கடை - மண்புழு மாமா வேலை செய்கிறார் - அழகிய ஆட்டம் - பச்சை உலகம். இலக்கியப்பரிசல்களும் பெற்றிருக்கும் வசந்தி தயாபரன், ஆசியா பவுண்டேஷன் உட்பட வேறும் சில நிறுவனங்களுக்காக, ஆங்கிலம், சிங்களம் மொழிகளிலிருந்து சிறுவர் இலக்கியப் படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்தும் இலக்கியப்பிரதிகள் எழுதி வரும் வசந்தி தயாபரன், அரங்குகளிலும் நூல் நயப்புரைகளை நிகழ்த்தி வருகிறார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.





4