- ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இளம்பிறை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  'இவரது   அரசு பதிப்பகமும் பல சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பினை நல்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  'இளம்பிறை'யின் இதழ்கள் சிலவற்றை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்: - பதிவுகள்.காம்- 


மூத்த தலைமுறையினருக்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி பற்றி நன்கு தெரிந்திருக்கும். கியூபாவில் அரசியல் மாற்றத்தை ஃபிடல் காஷ்ரோவுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தினால் ஏற்படுத்திய புரட்சி இளைஞர் சேகுவேராவின் பெயரை அக்கால ஊடகங்கள் அப்போது அதற்குச் சூட்டி, சேகுவேரா போரட்டம் என்று வர்ணித்தன. ஏர்ணஸ்ட் சேகுவேராவுக்கும் அந்தக்கிளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! அப்போது நான் படித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இருந்தேன். எம்மைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாடுவதற்கும் அப்போது அஞ்சினோம்.

எமது வீட்டிலே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களுக்கிடையில் நூல்களை பரிமாறிப் படித்தோம். அந்த நூலகத்தில் இணைந்திருந்தவர்கள் மல்லிகை இதழையும் யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் வரவழைத்து படித்தோம். 1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம். அதில் எமது நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

குறிப்பிட்ட நூலகத்திற்குத் தேவைப்பட்ட இலக்கிய நூல்களை வாங்குதற்காக கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில் அமைந்திருந்த ரெயின்போ அச்சகத்தில் இயங்கிய அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு அக்காலப்பகுதியில் சென்று சில நூல்களையும் வாங்கினேன். அப்போதுதான் அதன் உரிமையாளர் எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மான் அவர்களை முதல் முதலில் சந்தித்தேன். அந்த அச்சகத்தில்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொ. என்ற எஸ். பொன்னுத்துரையை முதல் முதலில் பார்த்தேன்.

ரெயின்போ அச்சகத்தில் அச்சிடப்பட்ட அரசு வெளியீடுகளான மு. தளையசிங்கம் எழுதிய புதுயுகம் பிறக்கிறது, மஹாகவி  உருத்திரமூர்த்தியின் குறும்பா, அகஸ்தியரின் நீ ( உணர்வூற்று உருவகச்சித்திரம் ) எஸ். பொ. வின் வீ, எஸ். பொ. அறிக்கை, ஏ. ஜே. கனகரத்னாவின் மத்து, உட்பட சில நூல்களைப் பெற்றேன். நூலகத்திற்காக அவை வாங்கப்பட்டமையால் ரஹ்மான், எனது இலக்கிய ஆர்வத்தை பார்த்துவிட்டு குறைந்த விலையில் தந்தார்.

இவ்வாறு அரைநூற்றாண்டுக்கு முன்னர் எனக்கு அறிமுகமான ரஹ்மான் அவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி 90 வயதாகப்போகிறது. கடந்த வாரமும் சென்னையிலிருந்து என்னுடன் வெகு உற்சாகமாக நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடினார். இவரும் இரசிகமணி கனகசெந்தி நாதன், எஸ்.பொ., மஹாகவி  உருத்திரமூர்த்தி, வி. கந்தவனம், ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோரும் எங்கள் நீர்கொழும்பூரில் மூன்று நாட்கள் நடந்த தமிழ் விழாவுக்கு வருகைதந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அந்த விழாவில் நாடகங்களும் நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. நாடகங்கள் புரிந்தளவுக்கு இலக்கியப்பேச்சுக்கள் புரியாத பருவம் அது.

வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணிக்கு நான் 1972 இல் விண்ணப்பித்தபோது, மல்லிகையில் எனது ஆரம்பகால எழுத்துகளை பார்த்துவிட்டு, என்னை பரிந்துரைத்து கடிதம் எழுதித்தந்தவர்தான் எம். ஏ. ரஹ்மான். அந்தவகையில் என்னை ஊடகவியலாளனாக்கிய பெருமையும் இவரையே சாரும் என்பதை நன்றியோடு தெரிவிக்கின்றேன்.

இவரது ரெயின்போ அச்சகத்திலிருந்துதான் 1964 ஆம் ஆண்டு தொடக்கம் இளம்பிறை மாத இதழும் வெளிவரத்தொடங்கியது. இவர்தான் அதன் நிருவாக ஆசிரியர். அருள் வாக்கி அப்துல் காதர் மலர், சாகித்திய மலர் , கல்வி மலர், இளைஞர் மலர் , ஆசாத் மலர் , திருக் குர் ஆன் மலர், மீலாத் மலர், மற்றும் காந்தி நூற்றாண்டு மலர் உட்பட பல சிறப்பு மலர்களையும் இளம்பிறை அக்காலப்பகுதியில் வெளியிட்டது.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை வாசகர்கள் தெரிந்துகொள்வதற்கும் இளம்பிறை இதழ்கள் பெரிதும் உதவியிருக்கிறது. உள்ளடக்கத்தில் இஸ்லாமிய மார்க்க சிந்தனைகள் மட்டுமன்றி, கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள், நூல் அறிமுகங்கள் என்பனவற்றுக்கும் போதிய களம் வழங்கியது. வாசகர்கள் தமிழ் நூலகம் ஆவணகத்தில் இளம்பிறையின் சில இதழ்களை பார்வையிடலாம்.

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் என்ற கிராமத்தில், சீதளி வடகரை என்ற இடத்தில் வர்த்தகராக வாழ்ந்த யூசுப் ராவுத்தர் – சைனப் பீபி தம்பதியருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் ரஹ்மான், இரண்டாவது பிள்ளை. சன்மார்க்க கல்வி பயில்வதற்காக இலங்கை வந்தவர், அதனையும் படித்துக்கொண்டு, அச்சகம் நடத்தத் தொடங்கியிருக்கிறார். இளமைப்பருவத்திலே என்ற தனது முதல் நூலை தமது அருமைத்தாயருக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையைச்சேர்ந்த எழுத்தாளர் கலாபூஷணம் ஏ. பீர். முகம்மது எழுதி வெளியிட்டிருக்கும் 'இளம்பிறை எம். ஏ. ரஹ்மான் : இருட்டடிப்புகளை மீறி வெளிச்சத்திற்கு வந்தவர்'  என்ற நூலில் ரஹ்மானின் வாழ்வின் சில பக்கங்களை நாம் தரிசிக்க முடியும்.

1970 களில் தலைநகரில் நடந்த இலக்கியக்கூட்டங்களில் ரஹ்மான், தவறாமல் கலந்துகொள்வதை அவதானித்திருக்கின்றேன். அதற்கு முன்னர் 1960 களில் கொழும்பு சாகிறா கல்லூரியில் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மகாநாடு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அங்கு நடந்த விவாதங்களையடுத்து, எஸ். பொ., வ. அ. இராசரத்தினம் ஆகியோர் வெளியேறியபோது, அவர்களுடன் வெளிநடப்பு செய்தவர்தான் ரஹ்மான். இந்த இலக்கிய சர்ச்சைகள் யாவும் எனக்கு கேள்வி ஞானம்தான். முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்த பலருடன் எனக்கு நெருக்கமான உறவு இருப்பது தெரிந்தும், என்னுடன் அன்று முதல் இன்று வரையில் சகோதர வாஞ்சையுடன் உறவாடுபவர் ரஹ்மான்.

இவர் தமிழ் நாட்டுக்கு மீண்டும் நிரந்தரமாகச்சென்ற பின்னரும், சென்னையில் அச்சகம் தொடங்கி நூல்களை பதிப்பித்தார். 1990 ஆம் ஆண்டு நான் குடும்பத்தினருடன் சென்னை சென்றவேளையில் வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றிருந்த எஸ். பொ. வின் புதல்வர் அநுரா, சென்னையில் ஆரம்பித்த மித்ர பதிப்பகத்திற்கும் ரஹ்மான் பக்கபலமாகத் திகழ்ந்தவர். மித்ர பதிப்பகம் பல சிறந்த நூல்களை வெளியிட்டிருக்கிறது.

'எங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த தலைமுறை படைப்பாளி ரஹ்மான், இந்த முதிய வயதிலும் முகநூலில் உற்சாகமாக இயங்குகிறார்.' என்று எனது இலக்கிய நண்பர்கள் சொல்லித் தெரிந்துகொண்டிருக்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.