இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன.  தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.

இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப்போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச்சென்றவர் ! 1869 அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி வன்முறையினால் கொல்லப்பட்டார்.

ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்... எனப்பாடி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு அந்த ஒற்றுமைக்காகவே தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக ஒரு இந்துவான நாதுராம் கோட்சேயினால் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்சேயின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதற்கு முன்னர் உனது இறுதி விருப்பம் என்ன ? – என நீதிமன்றில் கேட்டபொழுது, “பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி என்றைக்கு மீண்டும் பாரதத்திற்குள் திரும்பி வருகிறதோ அதற்குப்பின்னர்தான் தனது அஸ்தி (சாம்பல்) கரைக்கப்படவேண்டும். அதுவே எனது கடைசி விருப்பம் . “ எனச்சொல்லியிருக்கிறான். அதனால் - அவனது அஸ்தி இன்னமும் கரைக்கப்படவில்லை என்றும் தகவல் உண்டு.

பாரதநாடு சுதந்திரம் பெற்றகையோடு பாக்கிஸ்தானும் பிரிந்தது. இரத்த ஆறும் ஓடியது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் இந்தியா - பாக்கிஸ்தான் உறவு சுமுகமாகவில்லை. இடைப்பட்ட காலத்தில் பாக்கிஸ்தானிலிருந்து பங்களாதேஷும் பிரிந்தது. பின்னர் பஞ்சாப்பும் பிரியப்பார்த்தது. சீக்கியரின் பொற்கோயிலிலும் (Operation Blue Star ) தாக்குதல் நடத்தி அதனை முறியடித்த இந்திரா காந்தி அதற்குப்பரிசாக தமது மார்பில் மகாத்மாகாந்தியைப்போன்றே குண்டுகளை ஏந்திக்கொண்டு மடிந்தார். காஷ்மீர் தொடர்ந்தும் கொந்தளிக்கிறது.

மகாத்மா காந்தி பிறந்த குஜராத்திலிருந்து வந்தவர்தான் இன்றைய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி பிறந்த அந்த மண்ணிலும் இரத்த ஆறு ஓடியது. குற்றவாளியாக சித்திரிக்கப்பட்ட நரேந்தரமோடி தனது கரத்தில் இரத்தக்கறை இல்லை எனச்சொல்லிக்கொண்டு அமோக ஆதரவுடன் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார். தற்போது அயோத்தியில் இராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்திவிட்டார்.

குஜராத் கலவரங்களின் சூத்திரதாரி என்ற ஒரே காரணத்திற்காக அமெரிக்காவினால் முன்னர் விசா மறுக்கப்பட்ட நரேந்திர மோடி, அதே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் கைகுலுக்கி பேசிச்சிரித்து விட்டு நாடு திரும்பினார். பின்னரும் சென்று வந்தார். எங்கள் மகாத்மாவே நீங்கள் மேல் உலகத்தில் இருப்பீர்களாயின் இந்த வேடிக்கைகளையும் பார்த்துக்கொண்டு உங்கள் கதர் ஆடைக்காக கைராட்டை சுழற்றுவீர்கள்.

நீங்கள் பாரதம் சுத்தமாகவேண்டும் என்பதற்காகவே எளிமையாக வாழ்ந்து காட்டியவர். சுத்தம் என்பது அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் தனது வாழ்விடத்திலும் பேணப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினீர்கள். அன்று ஒருநாள் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட வேளையில் நரேந்திர மோடி சொன்ன கருத்துக்கள்தான் எமக்கு மகாத்மா காந்தியின் தனிப்பட்ட வாழ்வையும் நினைத்துப் பார்க்கத்தூண்டுகிறது. காந்தி பிறந்த நாளில் தமது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் தங்கள் மலகூடங்களை தாங்களே சுத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

காந்தியும் தனது மலகூடத்தை தானே சுத்தம் செய்தவர்தான். தனது மனைவி கஸ்தூரிபாயும் அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று பணித்தார். அதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தர்க்கமும் நிகழ்ந்திருக்கிறது. அவர் தனது மனைவியை மலகூடத்தை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தும் காட்சி The Making Of The Mahatma என்ற திரைப்படத்தில் வருகிறது. ஊருக்குத்தான் உபதேசம் பெண்ணே... ஆனால் - உன்னக்கில்லையடி கண்ணே... என்று காந்தி, கஸ்தூரிபாயை கொஞ்சவில்லை.

காந்தியும் சிறையில் அடைபட்டார். நாட்டுக்கு சுதந்திரம் கேட்டதற்காக மாத்திரமே அடைபட்டார். அவர் தனக்கு மின்விசிறி கேட்கவும் இல்லை. Attach Bath room அவருக்கு அவசியப்படவில்லை. குளிர்சாதனமும் அவருக்கு தேவைப்படவில்லை. அங்கிருந்தும் அவர் கைராட்டை சுற்றி நூல் எடுத்தவாறு பகவத்கீதைதான் படித்தார். ரகுபதி ராகவ ராஜாராம் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
சுத்தம் மலகூடத்தில் மட்டுமல்ல அரசியலிலும் நீடித்தால்தானே ஆரோக்கியமான தேசம் உருவாகும்.

ஐக்கிய நாடுகள் சபையினால் நவம்பர் 19 ம் தேதி ‘உலக கழிப்பறை தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் 25 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இருந்திருந்தால் ஆண்டுதோறும் 15 இலட்சம் குழந்தைகளை இறப்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். இந்தியாவில் 61.5 கோடி பேர் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது நம் மக்கள் தொகையில் 50 சதவீதத்தைவிட அதிகம். நமக்கு கைப்பேசி முக்கியம். 59% இந்தியக் குடும்பங்களில் கைப்பேசி உண்டு. ஆனால் - 47% குடும்பங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன.

21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவின் இந்த மலகூடப்பிரச்சினை பேசப்படுகிறது என்பதற்கு மேலே தொடக்கத்தில் சொன்ன இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதாரம். எமது ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது வீடுகளில் சம்பளத்திற்கு வேலையாட்களை வைத்திருந்து தமது வீட்டு வேலைகளைச்செய்யாமல் தமது வீட்டு கழிவறை உட்பட தமது வீட்டையும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் துப்பரவு செய்துகொண்டுதான் இயந்திரமாக உழைத்து தமது குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு ஊருக்கும் பணம் அனுப்புகிறார்கள். ஆனால் ஊரில் இருப்பவர்களோ தமது வீட்டில் வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு தமது வீட்டு கழிவறை தொடக்கம் வீட்டின் உட்புறம் - வெளிப்புறத்தையும் வேலைக்காரர் வைத்து சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் தயவில் ஊரில் உறவுகள் மட்டுமல்ல வேலைக்காரர்களும்தான் வாழ்கிறார்கள்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையும் நினைவு தினத்தையும் அர்த்தமுள்ள தினமாக ஏற்றுக்கொள்வோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.