ஜெயதேவன் என்னும் பெயரில் கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,
இவர் சொந்தமாக "ஓடம் "என்ற மாத இதழை ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலர் அதில் பங்களிப்பு செய்துள்ளனர். அத்தோடு "ஆனந்த விகடன்* வார இதழின் ஆசிரியர் துறையில் சில காலம் பணியாற்றியுள்ளார். அதேபோல சாவி இதழிலும் சில காலம் நிருபராக பணியாற்றி உள்ளார்
இவர் 10 கவிதை நூல்கள் எழுதி உள்ளார் .அவற்றில் குறிப்பிடத்தக்கன விடியலை நோக்கி, இன்றைய செய்திகள், சுய தரிசனம், ஐந்தாவது யுகம் , கண்ணாடி நகரம், முச்சூலம், அம்மாவின் கோலம் ,ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல மற்றும் யூகலிப்டஸ் கவிதைகள் என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது* சுய தரிசனம் *கவிதை தொகுப்பு 1997 கான தமிழ்நாடுகலை இலக்கிய பெரு மன்றம் தமிழக அளவில் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவருடைய **அம்மாவின் கோலம்* கவிதை தொகுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் நடத்தி வருகிற எழுத்து அறக்கட்டளை விருதினை பெற்றது .அத்தோடு எழுத்து அறக்கட்டளை நிறுவனமே அந்த நூலை வெளியிட்டது.
துவக்கத்தில் மரபுக் கவிதை எழுதிக் கொண்டு இருந்தவர் படிப்படியாக வளர்ந்து புதுக்கவிதை நூல்களை வெளியிட்டார். 2006க்கு மேல் படிப்படியாக நவீன கவிதைக்கு மாறி நவீன கவிதையில் குறிப்பிடத்தக்க கவிஞராக விளங்கி வந்தவர்.
வாழ்வை தத்துவ நோக்கில் கவனிக்கும் கவிதைகள் இவருடைய பெரும்பாலான கவிதைகள். அத்தோடு சமூகம் சார்ந்த விஷயங்களையும் தன்னுடைய பாடுபொருளாக கவிதைகளில் வைத்துள்ளவர்... குறிப்பாக பெரும்பாலான இவருடைய கவிதைகள் சமகால அரசியலை பேசுவன..உலக மயமாக்களின் நல்விளைவு மற்றும் தீ விளைவுகளை பேசக்கூடியவை. இதற்கு உதாரணமாக இவரது கண்ணாடி நகரம் கவிதை தொகுப்பை குறிப்பிடலாம். மரபின் மூச்சை உள்வாங்கி நவீனத்துவத்தோடு வெளியிடுவது இவரது கவிதை பார்வை ஆகும்.
சிறந்த படிமங்களையும் , நவ நவமான உவமைகளையும், கவிதைக்கு உரிய முரண்களையும் தன்னுடைய கவிதைகளில் உரிய இடத்தில் வைத்திருக்கிறார். எதைப் பாடினாலும் அழகியலோடு பாட வேண்டும் என்பது இவரது இலக்கியப் பார்வை ஆகும். ஏறக்குறைய 40 ஆண்டுகள் இலக்கிய உலகில் இயங்கி வந்தவர்.
பட்டியல் எதிலும் இவருடைய பெயர் இடம்பெற்றதில்லை.நவீன கவிதை ஆர்வலர்களுக்கு இவர் இனங்காட்டப்பட்டிருப்பாரோ - சந்தேகமே. நல்ல தமிழ்க்கவிஞராக எந்த அயல்நாட்டுக்கும்போய் இவர் கவிதை வாசித்ததில்லை. இவருடைய கவிதைகள் கவித்துவத் திறனாய்வுக்கு மேற்கோள்க ளாகக் காட்டப்பட்டதில்லை. நான்கைந்துபேரே திரும்பத்திரும்ப நற்றமிழின் நவீன கவிஞர்களாக கட்டங்கட்டிக் காட்டப்படும் குக்குறும் வட்டத்தில் இந்தக் கவிஞர் இருந்ததெல்லாம் வெளியே தான் பெரும்பாலும் மிக மிகப் பெரும்பாலும் மொழிநடை, உவமான உவமேயம் குறியீடு கொள்கை கோட்பாடு என்றெல்லாவற்றிலும் முன்நிபந்தனைகளும் முன்னறிவிப்புகளுமாய் முண்டியடிக்கும் மூழ்கடிக்கும் புதைசேற்று இலக்கியமண்ணில் அதையும் இதையும் சொல்லி அவரிவரைமுன்னுக்குத் தள்ளி வாயில்லாதோர்க்கு வாய்களாக வாகைசூடும் சூட்டப்படும் வன்சூழலில் சமூகப்பிரக்ஞையுள்ள கவிஞராக இவரை சிலாகிக்க அவகாசமில்லா கவிதைப்பிதாமகர்கள் கீறல் விழுந்த ரிகார்டாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
சில பெயர்களையே திரும்பத்திரும்ப.
பேசாப்பெயர்களைக்கொண்ட தரமான கவிஞர்கள் பொருளுடைய சொற்களோடு பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்- புறக்கணிக்கும் சக படைப்பாளிகளின் முதுகுகளோடு. வருங்காலத்திலேனும் சில முதுகுகள் அர்த்தஞ்செறிந்த அந்தச் சொற்களின் ரீங்காரம் கேட்டு சிலிர்த்து பாராமுக அரசியலைப் புறந்தள்ளிவிட்டுத் தன்னிச்சையாய் திரும்பிப்பார்க்கக் கூடும்.....
ஜூன் 11 அன்று இரவு கவிஞர் ஜெயதேவன் அமரராகிவிட்டதாக முகநூலில் செய்தி படித்ததும் மேற்காணும் கவிதையை எழுதி அவருக்கு சமர்ப்பணம் செய்யத் தோன்றியது. முகநூலில்தான் நாங்கள் நட்பினரானோம். சமூக, அரசியல், இலக்கியம் தொடர்பாக அவர் எழுதும் சில விஷயங்கள் குறித்து என்னுடைய எதிர்க்கருத்தைப் பதிவு செய்வேன். மாற்றுக்கருத்தாளர்களையும் மதிப்பவர். இதமான குரலில் தான் எதிர்த்துப் பேசுவதும். கண்ணியங்குறையாத எழுத்து. அவருடைய நண்பரான ஒரு திரைப்படப் பாடலாசிரியரை , அவர் கவிஞராக நிறையவே பெயரும் புகழும் பெற்றுவிட்டபோதிலும், அவரையும் தமிழின் முன்னணிக்கவிஞர்களில் ஒருவராக நிறுவ தொடர்ந்து முயற்சி செய்வார் திரு.ஜெயதேவன். அப்படி அவர் உங்கள் பெயரை எங்காவது குறிப்பிட்டிருக்கிறாரா, அவர் நினைத்தால் உங்களுக்கு பெரிய பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாமே என்று ஆதங்கத்தோடு பலமுறை எழுதியிருக்கிறேன். பல நேரங்களில் அவர் ஒரு கருத்தை முன்வைப்பது மற்றவர்களிடையே ஓர் உரையாடலைத் தொடங்கவும், மாறுபட்ட கோணங்களை அறியவுமே என்று எனக்குத் தோன்றும். அவருடைய 20, 25 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். மனப்பூர்வமாக மகிழ்ச்சியை வெளிப்படுத் துவார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் முகநூலில் தனது பக்கத்தில் பதிவேற்றியிருந்த கவிதையும் அதனுடைய என் ஆங்கில மொழிபெயர்ப்பும் இதோ:
(*ஜூன் 10ஆந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் இந்தக் கவிதையைப் பதிவேற்றியிருக்கிறார் கவிஞர் ஜெயதேவன்)
நம்மிடம் என்ன சொல்லிவிட்டுப் போனது இந்த ஞாயிற்றுக்கிழமை
யார் அனுப்பி வைத்தது திங்களை..?
காதலிகளுக்கு கைக்குட்டைகளை மாறி மாறி பரிசளிப்பது போல
அல்லது காதலிகளை மாற்றிக் கொள்வது போல
நேற்றுண்ட வெடக்கோழி வாசம் மாறுவதற்குள்
இன்றைய தயிர் வாசம் வீசுகிறது
விடிகாலை வாசலருகே
கிழமைகளுக்கும் வயசாகிறது
சிறுவயதில் பார்த்த ஞாயிற்றுக்கிழமையின் கையில் இருந்தது அயிரை மீன் பிடித்த ஆறுகளும்
தொபீர் என விழுந்து முங்கி எழுந்த
தோப்புக் கிணறுகளும்
இன்றுள்ள ஞாயிறுகளின் வயிறு வீங்கி இருக்கிறது மின்காந்த சுறா எலும்புகளால்....நகரமுடியா உடலோடு
வார நாட்களில் ஏறி பயணிக்கிறோம்
மிக மிக களைப்பாகி விடுகின்றன
நொடி முட்கள்
விடுமுறை நாட்களில் சோம்பல் முறிக்கின்றன.
கடிகாரம் காலத்தைத் தின்கிறது
ஒரு சுற்றில் ஒரு சொட்டு உயிர் உதிர்கிறது
ஓர ஆண்டுக்கு ஒரு நரைமுடி என
கணக்கிட்டு மொத்தமாய்
வெள்ளையாய் பூத்து விடுகிறது
அறுபதாம் ஆண்டு.
காலத்தை நாம் கடத்துகிறோம்
காலம் நம்மைக் கடத்துகிறது
இந்த ஓயாத விளையாட்டைத்தான்
வாழ்க்கை என கைப்பிள்ளை பொம்மையாய் பற்றிக் கொண்டிருக்கிறோம்
பற்று விடச் சொன்ன பட்டினத்தார்
சமாதி அருகே
ஒரு சக்கரம் எத்தனை மைல்களைக் கடந்திருக்கும் சாலையில்
எனிலும் சுற்று ஒன்றுதானே.
உயிர் கூட ஒன்றுதான்
உனக்கும் ஒரு பூரானுக்கும் கொள்ளளவு வேறுபாடு உண்டா என்ன?
A POEM BY JEYADEVAN
Translated into English by Latha Ramakrishnan (* The Poet had uploaded the original Tamil version of this poem of his on the 10th of June around 3.30 am)
What has this Sunday told us and left?
Who has sent Monday?
Just as gifting the beloveds with handkerchiefs one after another
Or changing the beloveds
Even before the smell of ‘Vedakozhi’ relished yesterday evaporates
there emanates the smell of today’s curd rice
at the threshold of dawn.
Days, months and years too grow aged.
In the hands of my boyhood Sundays
there were the rivers where ‘Ayirai fish’ were caught
and the grove-wells where leapt inside with a thud
and in grandeur emerged.
The Sundays of Mow have bellies bloated
with electro-magnetic shark bone,
with body that can't move on.....
Climbing on the week days we travel
Clock’s second hands
turn fatigued to the core.
During holidays they stretch and yawn
Clock devours Time
In one round one drop of life withers and drops
One strand of gray hair for one year
So calculating it turns all White
At the Sixtieth Year.
We spend time
Time spends us.
It is this infinite game
Life - we name
and hold it as our toy
near the tomb of Pattinathaar
who asked us to renounce attachment
How many a mile a wheel would have gone past
along a path
Yet the circling round is one and only one – is it not?
The essence of Life too is but just one
Between you and a centipede
is there in volume any variation ?
கவிதைகள் குறித்து நான் பெற்ற வாசக அனுபவங்களை எழுதிய கட்டுரைகளில் அவருடைய கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றிலொன்று இதோ:
கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..
கவிஞர் ஜெயதேவனுடைய ஒரு கவிதை இது:
நீங்கள் வீட்டைச் சுமந்து கொண்டே வெளியே போகிறீர்கள்
அதுதான் உங்கள் பஞ்சாரம்
அதுதான் உங்கள் முட்டை
தேக்கு மர நிலைப்படிகளில் இரு கை பதித்துதான் உங்கள் தாய்
உங்களை தினம் பெற்றெடுக்கிறாள்.
ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்புடன் மனைவிகளின் காதல் சிறு
காம்பில் காமப் பெரும் பலா.
உங்கள் வாகன ஒலிக்காய்
படிக்கட்டு பலூன்களாய் பிள்ளைகள்.
வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறது
கடந்த காலமும் எதிர் காலமும்
கிறீல் கதவு தேய்மானத்தில்
பாட்டியும் தாத்தனும்.
டைனிங் மேசையில் வீசும்
புலால் வாசமும் தயிர் சாதமும்
உங்கள் உடம்பாய்
ஒவ்வொரு தட்டிலும் கோப்பையிலும் உங்கள் ரத்தம்
குளியல் சோப்புக் கட்டிகளில் கரைந்து கொண்டே போகின்றன
உங்கள் பிறவி வாசம்.
உடைகளில் இன்னொரு உடம்பைப் பெறுகிறீர்கள்
மறுநாள் உடையில் மறு உடம்பு
வீட்டில் ஒரு மகப்பேறு நிகழ்கிறது
தொட்டிலில் நீங்களும் ஆடுகிறீர்கள்.
கட்டில்களில் தேவனாயும் மிருகனாயும்
உங்கள் வீட்டு முதியவரின் "லொக் லொக் " இருமலில் நீங்கள் எதையும் கேட்பது இல்லை
நீங்கள் தெய்வத்தை தேடி பூக் கூடையுடன் கோவிலில் மெளனித்து
வழிபடும் போது அங்கே ஒலிக்கும்
மணி ஒலி இந்த முதியவரின் இருமல்
என்பதை எப்போது புரிவீர்
எப்போதோ ஒலிக்கும் காலிங் மணி
அப்போது உண்மையில் விடை பெறுவீர்கள்
பிறகு
இந்த வீட்டின் ஜன்னல் திறக்கும்
வேறு ஒருவருக்காக
(விடியாத காலை..4.00 மணி)
முழுவதும் புரியாத கவிதை நம் மனதில் இனம்புரிந்தும் புரியாததுமான உணர்வுகளைக் கிளர்த்தி நெகிழச் செய்து சில கணங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்து நம்மையும் காலத்தையும் உறையச்செய்து விடுவதைப் போலவே முக்கால்வாசி அல்லது முழுவதும் புரியும் கவிதையும் நம்மைத் தன் வசப்படுத்திவிடுவதும் உண்டு.
இதையே தலைமாற்றியும் சொல்லலாம்.
கவிதை நம்மில் ஏற்படுத்தும் புரிதல் என்பது ஒரு பரிவதிர்வு. வாசிக்கும் நம் மனதில் குழம்பிக் கலங்கித் தெரியும் சில காட்சிகளைத் தெளியச் செய்யும் பரிவதிர்வு. நம் கண்ணெதிரே உள்ள ஒன்றின் நாம் பார்த்தறியா ஒரு கோணத்தை, ஒரு பக்கத்தை நமக்கு தரிசனமாய்க் காட்டி உணரச் செய்வது. மருத்துவரிடம் போய் குணப்படுத்த வழியில்லாத சில வாழ்வார்த்த அக புற நோய்களுக்கு நிவாரணமளிக்கும் சஞ்சீவிமலை யாய் சிலபல வரிகளை நமக்கு வரமாய் அளிக்கும் நிவாரணியாதல், நனவோடையில் பின்னோக்கிப் பயணப்படவைத்தல், வாழ்வில் நாம் மட்டுமல்ல சுகப்படுவதும் சோகப்படுவதும் என்று தெளிவுண்டாக்குதல் என கவிதை நமக்கு எத்தனையோ தருகிறது.
இதனாலேயே இத்தனை திறப்புகளையும் அளிப்பதாக பாவனை செய்யும் கவிதைகளை நமக்குப் பிடிக்காமல் போவதும்.
ஒரு கவிதையின் புரியாமை என்பது வேறு; பாவனை என்பது வேறு.
கவிஞர் ஜெயதேவனின் இந்தக் கவிதை ஒரு வாசிப்பாளராய் என் மனதிற்கு நெருக்கமானதற்குக் காரணம் இதில் விரியும் வாழ்வு.
கவிதையில் வரும் நீ, நீங்கள், நாம், அவன், அவள், அவர் எல்லாமே நிறைய நேரங்களில் அதே அர்த்தம் தருவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான். கவிதையெழுதும்போது கவி தன்னிலை, முன்னிலை, படர்க்கை, உயர்திணை, அஃறிணை, முக்காலங்கள், ஆதிமனிதன் முதல் நவீன மனிதனாகிய நீள்தொடர்ச்சி என்று என்னவெல்லாமோ ஆகிறார்.
’நீங்கள் உங்கள் வீட்டைச் சுமந்துகொண்டே வெளியே போகிறீர்கள் / அதுதான் உங்கள் பஞ்சாரம் / அதுதான் உங்கள் முட்டை. இவைமுதல் மூன்று வரிகள். குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு என்பது பணம் ஈட்டலோடு நின்றுவிடுவதில்லை. அதுதான் நம்முடைய, நாம் வாழ்வதற்கான அடையாளம் என்றாகிவிட்ட நிலை.
(சுமந்துகொண்டே என்ற சொற்றொடர் ஒருவேளை மூட்டை அச்சுப்பிழைக்குள்ளாகி முட்டையாகிவிட்டதோ என்று ஒருகணம் எண்ணவைத்தது. ஆனால், பஞ்சாரம் என்ற சொல்லாடல் அப்படியில்லை என்று தெளிவுபடுத்தியது. அச்சிடப்படும் கவிதையில் ஒவ்வொரு வார்த்தையும் அக்கவிதை வரையும் காட்சியின் ஒரு முக்கியத் தீற்றல் என்பதால் கவிதையில் நேரும் அச்சுப்பிழை வாசிப்பையே அனர்த்தமாக்கிவிடக் கூடியது. ஆனால், அச்சுப்பிழையில்லாமல் கவிதை வெளியாவது எல்லாநேரங்களிலும் சாத்தியமாவதில்லை என்பதே நடப்புண்மையாக இருக்கிறது.)
சதா சுமந்தபடி போய்வந்துகொண்டிருக்கும் வீட்டையும் அதன் அங்கத்தினர்களையும் கவி விவரிக்கும் பாங்கு எத்தனை கவிநயம் மிக்கது!
/தேக்கு மர நிலைப்படிகளில் இரு கை பதித்துதான் உங்கள் தாய்
உங்களை தினம் பெற்றெடுக்கிறாள்./
/ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்புடன் மனைவிகளின் காதல் சிறு காம்பில் காமப் பெரும் பலா.
உங்கள் வாகன ஒலிக்காய்
படிக்கட்டு பலூன்களாய் பிள்ளைகள்.
வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறது
கடந்த காலமும் எதிர் காலமும்
கிறீல் கதவு தேய்மானத்தில்
பாட்டியும் தாத்தனும்./
வேலை நிமித்தம் வெளியே போயிருக்கும் பிள்ளை வீடுதிரும்பும் வரை தாய் கவலையோடு அவனுக்காகக்காத்திருப்பதை, அவளுக்கு மகன் மேல் உள்ள அக்கறையை மட்டுமா ‘உங்கள் தாய் உங்களை தினம் பெற்றெடுக்கிறாள்’ என்ற வரி எடுத்துரைக்கிறது!
கணவன் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக் கும் மனைவி உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்: எதற்கு?
/ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்புடன் மனைவிகளின் காதல் சிறு காம்பில் காமப் பெரும் பலா./
மனைவிகளின் காதல் சிறுகாம்பில் காமப்பெரும் பலா என்ற வரி மனைவியின் தேவையை அழகிய உவமைவழியே எடுத்துரைக்கிறது. உரைநடையை வரிகளாக வெட்டிவெட்டித் தந்தால் அது நவீன கவிதையாகிவிடும் என்று சிலர் இளக்காரமாய்க் கூறக் கேட்டதுண்டு. மேற்கண்ட வரிகள் எதுகை-மோனை இலக்கணத்தில் அடங்காதவை. அதனால், அவை வெட்டிப்போட்ட உரைநடைவரிகள் என்று சொல்லிவிட முடியுமா? இந்த நான்குவரிகளில் குறைந்தபட்சம் நான்கு முழுப்பக்க உரைநடையாவது compress செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது!
/உங்கள் வாகன ஒலிக்காய்
படிக்கட்டு பலூன்களாய் பிள்ளைகள்./
பிள்ளைகளைப் படிக்கட்டு பலூன்கள் என்று வர்ணித்திருப்பது எத்தனை அழகாக இருக்கிறது!
சில விஷயங்களைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேர் எழுதியிருப்பார்கள். மழை, தனிமை, மரணம், குழந்தைகள், வீடு, நட்பு, காதல் – இப்படி. இவைகளில் ஒன்றையே ஒரு கவிதை பேசும்போது அது இதற்கு முன்பு இந்தக் கருப்பொருளில் படித்திருக்கும் கவிதைகளை நம்மையுமறியாமல் நம் நினைவுக்குக் கொண்டுவந்து ஒப்புநோக்கச் செய்யும். ஒரேமாதிரியான விவரிப்புகள் இருந்தால் நமக்கு வாசிக்க சலிப்பாயிருக் கும். அதிகம் கையாளப்படும் கருப்பொருள்களையே கையாளும்போது கவிஞர் கூடுதல் பிரக்ஞையோடு இயங்கவேண்டியது அவசியம்.
நாம் கோபமாக இருக்கிறோம் என்று எண்ணும்போதே நாம் அந்தக் கோபத்திலிருந்து விலகிநிற்பவர்க ளாகிறோம் என்று சொல்வதுண்டு. இசைநிகழ்ச்சி களில் மனமுருகிப் பாடும் இசைக்கலைஞர்களிடமும் ஒருவித விழிப்புநிலையும் இருந்துகொண்டே யிருக்கும்தான். அதுபோலவே தான் கவிதை யெழுதும்போது கவியின் மனநிலை யிலும் ஒருவித விழிப்பும் பொருந்தியிருக்கும். அதன் உதவியோடு தான் கவி ஒவ்வொரு வார்த்தையாகத் தேடித்தேடி யெடுத்துக் கோர்க்கிறார்.
நான் படித்தவரை குழந்தைகளை படிக்கட்டு பலூன்களாக அழகுற வர்ணிப்பது இதுவே முதல் கவிதை என்று தோன்றுகிறது. பலூன்கள் பற்றிய நம் அறிதலோடு படிக்கட்டு குறித்த நம் அறிதலும் சேர்ந்து என்னவெல்லாம் அர்த்தசாத்தியங்களுக்கு வழியேற்படுகிறது! படிக்கட்டு பலூன்கள் என்ற சொற்றொடர் வளர்ந்தபின் குழந்தைகள் பறந்துவிடுவார்கள் என்று குறிப்புணர்த்துவதாகவும் கொள்ளலாம்.
வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறது
கடந்த காலமும் எதிர் காலமும்
கிறீல் கதவு தேய்மானத்தில்
பாட்டியும் தாத்தனும்.
’வீட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறது கடந்த காலமும் எதிர்காலமும்’ என்ற வரிகள் தாத்தாவோடு சிறுமியாய் நான் திருவல்லிக்கேணி வீட்டுக் கூடத்தில் காலால் தரையில் தாத்தா தேய்த்துத் தேய்த்து ஊஞ்சலை முன்னும் பின்னும் வீசிவீசி ஆட்ட, அதை ஒரு பஸ்ஸாக பாவித்து நான் கையிலுள்ள சின்ன விசிலை ஊதியது, பின், அதே ஊஞ்சலில் என் சித்தப்பாவின் குழந்தையை அமரவைத்து நான் காலால் தரையில் அழுத்தி ஊஞ்சலை வீசி ஆட்டியது, இன்று தாத்தா இல்லாதது, அந்த வீட்டிலிருந்த ஒரு பகுதி இடிந்துவிழுந்தது, ஆலங்காத்தாப் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த, பந்துவிளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் வீசிய பந்து எங்கள் வீட்டு ஜன்னலில் பட்டுவிட, என் அப்பா கோபத்தில் ஏதோ கெட்ட வார்த்தையில் அவனைத் திட்ட, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் அவர் அப்படித் திட்டியது தவறு என்று என் அப்பாவிடம் கூற, அவர் அந்தப் பையனை அழைத்து மன்னிப்பு கேட்டது, தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது, சினிமா, சீரியல் தந்தை தாத்தாக்களாய் அன்பை வெளிப்படுத்தத் தெரியாத தாத்தாவின் கன்னத்தில் ஒற்றைக்கோடாய் கண்ணீர் ஒழுக ‘அவனுக்கு பதில் நான் போயிருக்கலாம்’ என்று ஒற்றைவரியில் தன் புத்திர சோகத்தை வெளிப்படுத்தி முடித்தது, 103 வயது வரை வாழ்ந்த தாத்தாவின் அஸ்தியை அவருக்குப் பிடித்தமான மெரீனா கடற்கரைக்குச் சென்று அங்கிருந்த கடலில் கரைத்தபோது (நவம்பர்2, 2004) 100 வயதிற்கு மேலானவர்களின் அஸ்தியைக் கரைத்தால் கடல் பொங்கும் என்ற ஸ்பானியர்களின் தொன்ம நம்பிக்கை குறித்து One Hundred Years of Solitudeஇல் (என்று நினைக்கிறேன்) படித்தது நினைவுக்கு வந்தது, அதேபோல் 2004 டிசம்பரில் சுனாமி வந்தது என என்னவெல்லாமோ நினைவுக்கு வருகிறது. பொதுவாக நான் கடந்ததைத் திரும்பிப் பார்ப்பதில்லை – அதை எட்டிப்பிடிக்கவே முடியாது என்பதால். ஆனாலும், இந்தக் கவிதை வரிகள் அத்தனை அன்பாய் என்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றனவே – என்ன செய்ய?
/டைனிங் மேசையில் வீசும்
புலால் வாசமும் தயிர் சாதமும்
உங்கள் உடம்பாய்
ஒவ்வொரு தட்டிலும் கோப்பையிலும் உங்கள் ரத்தம்/
இந்தக் கவிதை குடும்பவாழ்வு என்பதை என்னவாகப் பார்க்கிறது என்பதை கவிதையின் ஆரம்பத்தில் வரும் ‘நீங்கள் வீட்டைச் சுமந்துகொண்டே வெளியே செல்கிறீர்கள்’ என்ற வரியிலுள்ள ’சுமந்துகொண்டே’ என்ற சொல்லாடல் குறிப்புணர்த்துகிறது.
மனித நாகரீகத்தின் வளர்ச்சிப்போக்கில் வந்துநிற்கும் இடம்தான் குடும்பம். என்றாலும், இதிலுள்ள சுமைகளினால் அயர்வுறும்போது, இதன் செக்குச்சுழற்சியில் மீளமுடியாமல் மாட்டிக்கொண்டு அலைவுறும்போது புவியிலான வாழ்க்கை வேறு விதமாக இருந்திருந்தால்? அந்த வேறுவிதமாய் எவ்வாறு இருந்திருக்கும் என்றெல் லாம் மனிதமனம் நினைத்துப்பார்ப்பது தவிர்க்கமுடியாத தாகிறது. இப்படித்தான் வாழ்ந்தாகவேண்டும் என்று யார் விதித்தது? ஏன் விதிக்கப்பட்டது? என்பதான கேள்விகள் நம் மனங்களில் எழவேசெய்யும். பணத்தை ஈட்டினால்தான் இங்கே வாழமுடியும் என்ற நிலை நிறைய நேரங்களில் நம் மூச்சுத்திணறவைப்பதை அனுபவரீதியாகவே நாம் உணர்ந்திருப்போம். இந்த மூச்சுத்திணறலைக் கவிஞர் எப்படி விவரிக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியம்.
/குளியல் சோப்புக் கட்டிகளில் கரைந்து கொண்டே போகின்றன
உங்கள் பிறவி வாசம்.
உடைகளில் இன்னொரு உடம்பைப் பெறுகிறீர்கள்
மறுநாள் உடையில் மறு உடம்பு
வீட்டில் ஒரு மகப்பேறு நிகழ்கிறது
தொட்டிலில் நீங்களும் ஆடுகிறீர்கள்.
கட்டில்களில் தேவனாயும் மிருகனாயும்./
பின்வரும் வரிகளில் கவிதை வேறு ஒரு தளத்தை எட்டுகிறது. வீட்டை சுமந்து கொண்டிருக்கும் மூச்சுத்திணறல் ஒருபுறம். ஏற்கெனவே வீட்டைச் சுமந்து முடித்தவரின் லொக் லொக் இருமல் ஒருபுறம். இங்கே கவிதையில் வரும் ‘நீங்களும்’ ’இருமும் முதியவரும்’ ஒருவரா? இருவரா?
வீட்டைச் சுமந்துகொண்டே யிருப்பதில் உளைச்சலுறும் ஒருவரால் வீட்டில் இருமிகொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி உதவமுடியும் என்ற கேள்வியும் கவிஞரின் வரிகளில் தொக்கிநிற்பதாகச் சொல்லமுடியுமா? அப்படி எண்ணலாகாது என்று அவருடைய அடுத்தவரிகள்:
/உங்கள் வீட்டு முதியவரின் "லொக் லொக் " இருமலில் நீங்கள் எதையும் கேட்பது இல்லை
நீங்கள் தெய்வத்தை தேடி பூக் கூடையுடன் கோவிலில் மெளனித்து
வழிபடும் போது அங்கே ஒலிக்கும்
மணி ஒலி இந்த முதியவரின் இருமல்
என்பதை எப்போது புரிவீர்/
மேற்கண்ட வரிகள் முதியவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பைப் பேசுவதாகவே தோன்றுகிறது. கோயில் மணி ஓசையை முதியவரின் இருமல் ஒலியாகப் பேசும் இந்த உவமானமும் நான் இதுவரை படிக்காதது! குழந்தையும் தெய்வமும் என்கிறோம்; Old is Gold என்கிறோம். அப்படித்தான் அவர்களை நடத்துகிறோமா? அந்த வயதுகளில் நாம் அப்படித்தான் நடத்தப்பட்டோமா? இப்போது நாம் நடந்துகொள்வது அப்படித்தான் இருக்கிறதா?
இறுதிப் பத்தியிலுள்ள வரிகள் மரணத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? அல்லது, ஒருவித துறவற மனநிலையை, Detached Attachment state of mindஐப் பேசுவதாகக் கொள்ளலாமா?
/எப்போதோ ஒலிக்கும் காலிங் மணி
அப்போது உண்மையில் விடை பெறுவீர்கள்
பிறகு
இந்த வீட்டின் ஜன்னல் திறக்கும்
வேறு ஒருவருக்காக
(விடியாத காலை..4.00 மணி)/
மேற்கண்ட இறுதிவரிகள் வாழ்வின் ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ நிலையைப் பேசுவதாகக் கொள்ளலாமா? ஆனால், ஏன் வீட்டின் வாசல் திறக்கும் என்று சொல்லவில்லை கவி? ஏன் வீட்டின் ஜன்னல் திறக்கும் என்று சொல்கிறார். வாசல் திறப்பதற்கும் ஜன்னல் திறப்பதற்கும் இடையில்தான் எத்தனை வித்தியாசம்! அந்த வேறு ஒருவர் பொதுவானவரா? குறிப்பானவரா?
இந்த இறுதிவரிகளோடு சேர்த்து அவற்றின் தொடர்ச்சியாய் அவற்றின் கீழே அடைப்புக்குறிக்குள் உள்ள ‘விடியாத காலை’ 4.00 மணி’ என்பதையும் சேர்த்து வாசித்தால் கிடைக்கும் அர்த்தம் இன்னும் அடர்செறிவானது.
ஒரு கவிஞர் நமக்குப் பரிச்சயமானவராயிருந்தால், நம் நட்பினராயிருந்தால் அந்த உறவுநிலை அவருடைய கவிதை வரிகளை அவர் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கச் செய்யும். இது எல்லாநேரமும் அவர் எழுதிய கவிதை குறித்த சரியான அர்த்தத்தை நமக்குத் தரும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. கவிதை எழுதுபவர் சக மனிதராகப் பரிச்சயமாகியிருக்கும் நிலையில் கவிதையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் வெறும் மேம்போக்கானவை, போலியானவை என்ற முடிவுக்கு வர இயலும். ஆனால், அப்படியான முடிவுக்கு வருவது எவ்வளவு தூரம் சரி என்றும் தெரியவில்லை. சபரிமலைக்கு வருடாவருடம் சென்றுவரும், குடிப்பழக்கமுடைய நண்பரொருவர் அந்த 40 நாட்களாவது குடிக்காமல் இருக்கவேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாகவே அப்படிச் செல்வதாக என்னிடம் சொன்னதுண்டு. நிஜ வாழ்வில் தான் எப்படியிருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அப்படியிருக்க முடியாமல் போகிறதோ அந்த விருப்பின் தொடர்ச்சியாகவே கவி தன் கவிதையில் வெளிப்படுகிறார் என்ற அர்த்தத்தைத் தரும்படியாக கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு கூட்டத்தில் கூறியபோது நானும் வேறு சிலரும் அதை ஏற்றுக்கொள்ள வில்லையென்றாலும், இப்போது யோசித்துப் பார்க்கும்போது அந்தக் கருத்தைப் புறக்கணித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதையை இருநூறு அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும்போது கவிஞரைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் வாசிக்கிறோம். அவர் எழுதிய வரிகள் அவரை மீறி அவரை வெளிப்படுத்தலாம், வெளிப்படுத்தாமல் போகலாம். அவர் எழுதிய கவிதை நம்மில் பரிவதிர்வு ஏற்படுத்தும்போது அது நாம் எழுதிய கவிதையாகிவிடுகிறது. அதில் நாம் தேடும் அர்த்தங்களை, நமக்குக் கிடைக்கும் அர்த்தங்களை அள்ளியெடுத்துக்கொள்கிறோம்; அந்த அர்த்தங்களை சாத்தியமாக்கும் வரிகளை எழுதிய கவியைக் கொண்டாடுகிறோம்.
கவிஞர் ஜெயதேவனை நான் முகநூலுக்கு வந்தபிறகே அறிவேன். அவருடைய கவிதைகளின் வழியே தான் அவர் எனக்குப் பரிச்சயம். அவருடைய டைம்-லைனில் அவர் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கும் விதமும், எந்தவொரு மாற்றுக் கருத்தையும் நிதானமாக, மற்றவர்களின் கருத்துகளையும் பொருட்படுத்தி, வெளியிடும், எதிர்வினையாற்றும் தன்மையும் மதிக்கத்தக்கது.
அதேபோல் அவருடைய கவிதைகளும் _ இங்கே நான் பேச எடுத்துக்கொண்டுள்ள கவிதையும், எனக்கு அவருடைய ஃபேஸ் புக் பக்கத்தில் வாசிக்கக் கிடைத்த வேறு பல கவிதைகளும் _ அலங்காரப்பூச்சற்றவை; ஆழமானவை. அடர்செறிவான சொற்களாலா னவை. நிறைய சிந்திக்கவைப்பவை. நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருபவை.
கவிஞர் ஜெயதேவனிடம் தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. அவருடைய கவிதைகள் குறித்து ஒரு முழுநாள் கருத்தரங்கள் நடத்த வேண்டும் என்று நிறைய தடவை எண்ணியிருக்கிறேன். எண்ணம் நிறைவேற எத்தனையோ வாழ்வியல் சார் தடைகள். தரமான கவிஞர். அவருடைய கவிதைகள் வாசிப்போர் மனங்களில் நிறைய கலந்துரை யாடும்; கலந்துறவாடும் – நேற்றும் இன்றும் நாளையும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.