1

(27-28 அக்டோபர் 1910 இல், தனது 82வது வயதில் டால்ஸ்டாய் தனது வீட்டை விட்டு (Yasnaya Polyana) மருத்துவருடன் வெளியேறினார் (Flight). 07 நவம்பர் 1910 இல் Astapovo ரயில் நிலையத்தில் இறந்தார்.

இது சம்பந்தமாக பல்வேறு சித்திரங்களை, மனம்போன போக்கில், பல்வேறு எழுத்தாளர்கள் தீட்டியிருந்தாலும், கார்க்கியின் இரு கடிதங்கள் முக்கியமானவை. ஒன்று அவரது அகல்வுக்குப் பின் உடனடியாக எழுதப்பட்டது. மற்றது, அதன் தொடர்ச்சியாக, அவரது மறைவுக்குப் பின் எழுதி முடிக்கப்பட்டது.

டால்ஸ்டாய் பற்றி எழுதிய Tomas Mann,  Romain Rolland மற்றும் Stefan Zwigh ஆகிய மூன்று ஐரோப்பிய எழுத்தாளரின் கணிப்பிலும் கார்க்கியின் சித்திரமே விருப்பு வெறுப்பைத் தாண்டி, மிகச் சிறந்ததாய் யதார்த்தபூர்வமாக இருந்தது என்று கணிக்கப்பட்டது. ‘இது ஒரு மேதையின் திட்டமிட்ட தீட்டல்’ எனவும் Romain Rolland கூற நேர்ந்தது (பகுதிகளே இங்கு தரப்பட்டுள்ளன. இதன் மூலத்தை முழுமையாக வாசிப்பது வாசகருக்குப் பயன் தருவது).

புலமை மிகுந்த மேதையர் (Genius) என அழைக்கக் கூடியவர்களில், மிக உயரிய மட்டத்தை அடைந்தவர் டால்ஸ்டாய் என்பதில் ஐயமில்லை. ஆழ்ந்த சிக்கல் வாய்ந்தவரும், தன்னுடனேயே தான் முரண்படும் பண்புகளை எய்தியவருமாக இருப்பது இவரது குணாம்சமாகின்றது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையுமே அற்புதமானது–மிக மிக அழகானது என்பதனைக் கூறியே ஆக வேண்டும். அற்புதம் என்று பொதுவாய்ச் சொல்லும்போது அது குறித்த அவரது நடவடிக்கைக்குப் பொருந்தி வருவது போல, அவரது ஆளுமைக்கும் பொருந்தியே வரும்.

நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்த பின்னரே, டால்ஸ்டாயின் அகலல் பொறுத்த  தந்தியைக் கிடைக்கப் பெற்றேன். எனவே உங்களிடமிருந்த மனத் தொடர்பை அறுக்காமல், தொடர முடிவு செய்து விட்டேன். அதாவது, இக்கடிதத்தை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளேன். உண்மை. எனது குரல்வளையை யாரோ பிடித்து நசுக்குவது போல் இருக்கின்றது.

நான் கிரைமியாவில் இருந்த போது அவரைச் சந்திக்க அடிக்கடி செல்வது வழக்கம். இதே போல் அவரும் என்னை வந்து பார்ப்பதில் பெருத்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரை பற்றிய எனது அபிப்பிராயத்தை வெளிப்படையாக, அவரிடம் சொல்ல எனக்கு உரிமை இருந்தது என நான் கருதினேன். ஏனெனில் அவரது நூல்களையும் அவரையும் அத்தனைக் காதலுடன் அணுகினேன். இது எனக்கு இப்படியான துணிச்சலைத் தந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.

ஏதோ ஒன்று, என்னை இப்படி கூறக் கட்டாயப்படுத்துகின்றது:

“பாருங்கள் அன்பர்களே. எங்கள் பூமியில் எப்படிப்பட்ட ஒரு மனிதன் வாழ்கின்றான் என்பதை. அனைத்தையும் பார்க்கக்கூடிய, தொட்டுணரக்கூடிய, அவதானிக்கக்கூடிய–மொத்தத்தில் மனிதருள் மனிதனாக–அவன் வாழ்கிறான் என்பதைப் பாருங்கள்”.

ஆனால் அவரது முரட்டுத்தனமிக்க பிடிவாதமான, அவரது கோமகனின் வாழ்வை, ஒரு முற்றும் முழுதான துறவியின் வாழ்வாக மாற்றும் முயற்சியை இட்டு, நான் கிளர்ந்தெழவே செய்தேன்.

அவர், ஒரு நீண்ட கொடுந் துன்பத்தை அனுபவிக்க, எப்படி தன்னை, நீண்ட நாட்களாய்த் தயார்படுத்தி வந்தார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். இதனை அவர் Yevgeni Solovyovக்கும் Sulerருக்கும் சொல்லாமல் இல்லை. தன் ஆன்ம பலத்தை வெறுமனே பரிசோதித்து கொள்வதற்காக, அவர் இப்படியான பரிசோதனை முயற்சியை மேற்கொள்வதாயும் இருக்கவில்லை. தன் கோட்பாடுகளின் வலிமையை அல்லது ஏற்புடைமையை இச்செயற்பாட்டிற்கூடாக அதிகரிக்க முடியும் என்றும் இக்கோட்பாடுகளின் புனிதத்தை ஏனைய மனிதருக்கு தெரிவிக்கும் ஒரு பிடிவாத முயற்சியாகவே, அவர் இச்சோதனையில் இறங்க தொடங்கினார்–பிடிவாத முடிவா? ஆம். அது அப்படியானதுதான். பிடிவாதமாய், மனிதரை பலவந்தப்படுத்தி முட்டி மோதும் ஒரு முயற்சிதான். ஏனெனில், இக்கோட்பாடுகளின் உள்ளார்ந்த பலமின்மையை அவர் அறிந்தவராகவே இருந்தார்.

அவரது நாட்குறிப்புகள் வெளியாகும் போது நீங்கள் அறிவீர்கள் –அவரது இந்த நம்பிக்கையீனத்தை! கூடவே, அவரது இந்த ஆளுமையையும் நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவே செய்வீர்கள்.

அவர் அனைத்தையும் அறிந்தவராகவே இருந்தார்: ‘தியாகிகளும், தம்மைதாம் வருத்தி கொள்பவர்களும், ஈவிரக்கமற்ற கொடுங்கோலராய், ஒடுக்குபவர்களாய் இருந்தார்கள்’ என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆம். அனைத்தையுமே அவர் அறிந்தே இருந்தார்.

இருந்தபோதிலும், அவர் கூறவே செய்தார்: ‘என் கோட்பாடுகளுக்காக நான் துன்புற்று சகிப்பேன் எனில், அது, எனது கோட்பாடுகளுக்கு எல்லையற்ற வலிமையை சேர்ப்பதாகவே இருக்கும் –அவை முற்றிலும் வித்தியாசமான ஒரு நம்பிக்கையை விதித்து, அவற்றில் தாக்கங்களைச் செலுத்துவதாகவே இருக்கும்’. இதுவே, என்னை அவருக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதாக எப்போதுமே இருந்து வந்துள்ளது. ஏனெனில், என்னை நிர்பந்திக்கும் எதையுமே நான் விரும்பினேன் இல்லை. அவரது இந்தக் கோட்பாடுகள் என் மனசாட்சியை ஆக்கிரமிக்கவோ அல்லது அதனை ஒரு தியாகியின் ரத்தத்தால் குளிப்பாட்டி வைக்கவோ அல்லது சுருக்கமாகச் சொன்னால், என் கழுத்தைச் சுற்றிக் கிடக்கும் நுகத்தடியாகப் பூட்டப்படுவதிலோ நான் ஆசைப்பட்டதில்லை. அவர் எங்கேயும் எப்போதும் அடுத்த உலகில் கிட்டக்கூடிய சாகாத் தன்மை குறித்த துதிகளைப் பாடி வருபவரானார். ஆனால், இவ் உலகில் அவர் பெறக்கூடிய சாகா வரத் தன்மையே, அவரது சுவையரும்புக்கு ஏற்புடையதாய் இருக்கும்.

ஒரு தேசிய தன்மையின், அனைத்து அம்சங்களும் அவரில் அடக்கமானது. அத்தேசத்தின் அல்லது தேசியத்தின்–பலவீனங்கள், பலங்கள், சரித்திரம் ஆகியனவும் அதே நேரத்தில் அவை பெற்றிருக்கக் கூடிய வடுக்கள், சிதைவுகள்–யாவற்றையும் அவர் சுமக்கவே செய்திருந்தார். இதனாலேயே அவரது பிரசாரங்களும், ஒரு தேசியத்தின் எதிரொலியாயின. இதனை உதறித் தள்ளவே இன்றைய வளர்ச்சிகள் முயல்வதாகவும் இருக்கின்றன.

1905இல் எழுதப்பட்ட அவரது, ‘புத்திஜீவிகள், அரசு, மக்கள்’ எனும் கடிதத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு வெறுக்கத்தக்க ஆவணமாக இருந்தது அது. ‘நான் அப்போதே கூறவில்லையா’ என்ற மறுப்பு தெரிவிப்பவரின், கேவலமான வெளிப்பாடு அது.

ரஷ்ய மக்கள், தமக்காகப் பேசக்கூடிய உரிமையை உங்களிடம் இருந்து என்றோ பறித்து விட்டனர்’ என்பதாக நான் எழுதிய இதற்கான மறுப்புரையை நீங்கள் அறிவீர்கள். இது பொறுத்து அவரிடம் கதைக்க வந்த மக்கள் கூட்டத்தினரை-அவர்களது மனவேதனையை - அவர் எப்படி கேட்க மறுத்தார் என்பதற்கான சாட்சியாளனாக நான் இருந்துள்ளேன். இது பொறுத்து என்னால் எழுதப்பட்ட கடிதமானது மிகவும் முரட்டுத்தனமாக காணப்பட்டதால் அதனை அவரிடம் சேர்ப்பிப்பதில் இருந்து தவிர்த்துக் கொண்டேன்.

இப்போதும், அவர் எதில் இறங்கியுள்ளார் என்றால், தனது கோட்பாட்டுக்கு முடிந்தளவு ஒரு வலுச் சேர்க்கும் ஓர் இறுதி முயற்சியில்தான். Vasily Buslayev போன்று இவரும், பாய்ச்சல்களில், ஆர்வம் கொண்டவர்தான். இந்த முயற்சியானது தனது சிந்தனைகளுக்கு ஒரு வலுவை ஏற்படுத்தி, தனது தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் நம்புகிறார். விசாரணை என்ற ரீதியில் இது சிற்சில அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும், ரஷ்யாவின் பண்டைய வரலாறும் கூடவே ஒரு மேதை அனுபவித்த தனிப்பட்ட துன்பங்கள் என்பதும், இதனை நியாயப்படுத்தி விடும்.

தூய்மையானது, வெறும் தியானங்களாலும், எமது பாவங்கள் பொறுத்த சிந்தனையாலும் வாழ்வதற்கான வேட்கையை, அடிமைப்படுத்திவிடும் எனில்…
லியோ டால்ஸ்டாய் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தீவிர வெறுப்பலைகளை என்னுள் உருவாக்குவதற்கூடு என் ஆன்மாவைத் துயரத்தில் தள்ளியுள்ளார் எனலாம்.

அவரது அளவுக்கு மீறிய தன்னைப் பற்றிய சிந்தனையானது, ஓர் அதி பயங்கர காட்டுமிராண்டிதனமான சுவாத்தியத்தை உருவாக்குவதாகும். இது கிட்டத்தட்ட ரஷ்ய ஐதீகத்தின் ராட்ஷச உருவமான Bogatyr Suyatogor போல–இந்நிலம் தாங்கமாட்டாததும் ஆகும். ஆம். அவர் மிக உயர்ந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அவர் கூறிய அனைத்திற்கும் மேலாக, அவரது மௌனம் குறித்து, எந்தவொரு ஜீவராசிகளிடமும் அவர் கதைக்கப்போவதில்லை என்பது தெளிவானது–அவரது நாட்குறிப்புகளும், அவரது சம்பாசனைகளும் இதற்கான தடயங்களை, அவ்வப்போது, மட்டுமட்டாக வெளிப்படுத்தியதும் உண்மைதான். எங்களின் வாசிப்புக்காக, அவர் எனக்கும் Sullerருக்கும் தந்த இரு தொகுதிகள் (நாட்குறிப்புகள்), அவர் கூறியுள்ள யாவற்றையும், கிட்டத்தட்ட, நிராகரிப்பதை உள்ளடக்கி இருந்தன. இது ஒரு முழுமையான சூன்யவாதம் (Nihilism) என்பதில் சந்தேகம் இல்லை (தான் கூறியவற்றை பின் இல்லை என மறுத்துரைப்பது). இந்த சூன்யவாதமானது, மிக ஆழமான நம்பிக்கையீனத்தாலும், தனிமையினாலும் உருவானது என்பதும் – இதனை எந்தவொரு சக்தியாலும் இதுவரை அழிக்க முடிந்ததில்லை என்பதும், இதனை மிக தெளிவாக உணர்ந்த ஒரு சிலரில், ஆழமாய் உணர்ந்தவர் உண்டெனில், அது டால்ஸ்டாய் மாத்திரமே எனவும் கூறத் துணியலாம்.

அதிகமாய் பிடிவாதம் கொண்டவராயும், விட்டுக்கொடுக்காத மனநிலை உடையவராயும், ஈடுபாடற்றவராயும், பலரில் அசிரத்தை மிக்கவராயும் பலருக்கும் இவர் காட்சியளிப்பார் எனில், அது, இவரது உயர்ந்த, சக்திவாய்ந்த ஆளுமையின் காரணமாகவே. ஏனையோரை சிறு பூச்சிகள் போல், அவர்களது, வாழ்வியல் நடவடிக்கைகளையும் வெறும் கோமாளித்தனங்கள், கீழ்த்தர கேவலங்கள் என்ற அளவில், இவர் வரையறுப்பது சகஜமாயிற்று.

இவர்கள் அனைவரிடம் இருந்தும் ஒதுங்கி, தனது பாலைவனத்தில், தனிமையில் தன்னை இருத்தி தன் ஆன்ம சக்தி அனைத்தையும் தனிமையில் செலவிட்டு, வாழ்வின் மிக முக்கிய விடயத்தை அவர் கண்டுகொண்டார்: ‘மரணம்’.

தன் வாழ்நாள் முழுவதும் அவர் மரணத்தை எதிர்கொண்ட விதம் அச்சமும் வெறுப்பும் கலந்த ஒன்றெனலாம். தன் வாழ்நாள் முழுவதும் அவர் ஏற்கனவே அனுபவித்திருந்த மாரடைப்பு நினைவுகளால் அவதிப்பட்டார் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். (செப்டெம்பர் 02-03, 1869). இறுதியில், இந்த டால்ஸ்டாய், இறந்துதான் ஆக வேண்டுமா என்பதே கேள்வியானது. உலகத்தின் அத்தனைக் கண்களும், ஏன் இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனைக் கண்களும், அவர் மீதே குவிந்திருக்க, இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற அத்தனை நாடுகளில் இருந்தும், ஆழ்ந்த தொடர்புகள் அவரது ஆன்மாவுடன் பின்னிப் பிணைந்ததாய் இருக்க, இயற்கை, தனது இரும்பு விதிகளில் இருந்து விலகி, அவருக்குத் தனிப்பட விலக்களித்து, அவரைச் சாகா வரம் பெற்ற மனிதராய் வாழவிட்டால் என்ன? ஆனால் இந்த நியாயப்பாட்டை எந்தவொரு மந்திரமும் இங்கே நிறைவேற்றப் போவதில்லை–இதற்கு, இடம் தரவும் போவதில்லை. இது, தெளிவானது. அவருக்கும் தெளிவானது. காரணம், அந்த அளவில் அவர் புத்தி கூர்மையுடனும் பகுத்தறிவுடனும் இருந்தார் எனலாம்.

மறுபுறத்தில், அவர்  கலகக்காரனாக,  கிளர்ச்சி வீரனாக,  ஆய்வாளனாக இருந்த அதேசமயம், தெரியாத ஒரு  போர்ப் படையின் படையெடுப்பில் திக்குமுக்காகிவிடும், ஓர் இளம் அனுபவமற்ற புதுப்படை வீரனின் மனக்கசப்பும் பயமும் அவரைப் பீடிக்காமல் விட்டது இல்லை.

ஒருமுறை, Gaspraவில், அவரது சுகயீனத்தின்பின், Lev Shestovவின் Good and Evil in the Teaching of Nietzsche and Count Tolstoy என்ற நூலை வாசித்து முடித்தார். அதன் பின் செக்கோவிடம் கூறினார்: “இந்நூல் என்னைக் கவரவில்லை…”. தொடர்ந்தார்: “வேடிக்கையான நூல். மோசமில்லை. முழு ஈடுபாட்டுடன் எழுதப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தால், ஓரளவில் சுவாரஷ்யமானது. நம்பிக்கையற்றோர் (CYNICS) எனக்குப் பிடித்தமானவர்கள்தான்-அவர்கள், உண்மையாக இருப்பார்கள் எனில்…’.

“ஓரிடத்தில் இவர் கூறுகின்றார்: ‘உண்மை முக்கியமானதல்ல’ என.

இதுவும் உண்மையாக இருக்கலாம். இவரைப் பொறுத்தமட்டில் உண்மை என்பது, தேவையற்ற ஒன்றே - நாளை இறப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றால்!. அவரது, இவ்வார்த்தைகள் நன்கு புரிந்துகொள்ளப்படவில்லை என்பதைக் கண்டதும், அவர் மேலும் களிப்புடன் கூறினார்: ‘ஒரு மனிதன், சிந்திக்கத் தெரிந்து கொண்டால், அவனது சிந்தனை முழுவதுமே, அவனது மரணத்தைச் சுற்றியே வரும். எல்லாத் தத்துவஞானிகளின் விடயத்திலும் அப்படியே. இதனால், உண்மை என்பதன் மொத்த பெறுமானம் என்ன–இறப்பு நிச்சயம் என்று அறிந்தபின்…”.

தொடர்ந்து, உண்மை பொறுத்து மேலும் விளக்கங்கள் தந்தார்: ‘கடவுளால் நேசிக்கப்படும் அத்தனைப் பேருக்கும் உண்மை ஒன்றாகத்தான் இருக்கின்றது’. இதனை அவர் அசிரத்தை மிக்க சோர்வான தொனியில்தான் குறிப்பிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது. பகலுணவின்பின், மீண்டும் அந்நூலைக் கையில் எடுத்துக் கொண்டார்: ‘டால்ஸ்டாய், டஸ்டாவஸ்கி, நீட்சே போன்றோருக்கு, அவர்களது கேள்விகளுக்குப் பதிலற்று இருப்பதில் சம்மதம் இல்லை. எந்தவொரு பதிலும், இந்தத் தானும், பதிலற்ற நிலைமையைவிட மேலானது என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது’.

வாய்விட்டுச் சிரித்தார்: ‘என்ன துணிச்சலான முடி திருத்துனன் இவன். இதன் உண்மையான அர்த்தம்: ‘நான் என்னை மட்டுமல்ல–பிறரையும் ஏமாற்றுகின்றேன் என்பதே. இதுதான் நாம் வந்தடையக் கூடிய வெளிப்படை முடிவாகும்…’

Suller இடைமறித்து கேட்டார்: ‘ஆனால் ‘சிகை அலங்காரன்’ என்பது எதற்காக?’.

‘நல்லது’. சிந்தனையுடன் அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்: ‘இது வெறுமனே என் சிந்தனைக்கு எட்டிய ஒன்று–குறித்த இவ் எழுத்தாளன் ஒரு அலங்காரப் பிரியர் போலவே செயல்படுகின்றார். ஞாபகத்திற்கு வருகிறது. முடி திருத்தும் ஒரு நபர் ஒரு சமயம் கிராமத்திற்கு வருகை தந்திருந்தார். அவரது உறவினரின் திருமணத்திற்காக. அவரது, நடை, உடை, பாவனை அனைத்தும் அற்புதமானவை. நடன வகைகளை வேறு அழகாக ஆடத் தெரிந்திருந்த மனிதர் அவர். இதனாலேயே, அவர் அனைவரையும் கீழாக நோக்கத் துணிந்தார்…’

என்னைப் பாதித்த அனைத்தையும் நான் சிறுகுறிப்பெடுக்காமல் விட்டதில்லை… … டால்ஸ்டாயை நான் மிக மிக கவனமாகவே அவதானித்து வந்தேன். காரணம், நான் இறக்கும் நாள் வரையிலும், இக்கிரகத்தில் ஒரு உண்மை மனிதனாக, தனது நம்பிக்கைகளுக்காக உலவிய ஒரு மனிதனை நான் அவதானித்து வரவே செய்வேன்…… … … …

‘மீண்டும் மேற்படி கதைக்கு, திரும்புவோமானால்…’

‘வாழ முடியாது’ எனக் கூறுகின்றார். இது, எப்படி அவருக்குத் தெரியுமாம்… ஒருவர் வாழ முடிவதும் முடியாததும்… அப்படியே தெரிந்திருந்தாலும் கூட, குறித்த அந்நபர், இது போன்ற சிறு துணுக்குகளை எழுதிக் கொண்டிருக்க மாட்டார் என நினைக்கின்றேன். இதைவிட கனமான, புத்தரை போன்று ஏதாகிலும் பெரிதான, சிரத்தை உடைய… தம் வாழ்நாளில்…’

யாரோ ஒருவர் குறிப்பிட்டார். குறித்த எழுத்தாளர் (Shestov) ஒரு யூதர் என.

“இருக்காது. அவர் அப்படி ஒன்றும் யூதர் போலவே இல்லை. யூதர்களில் கடவுள் மறுப்பாளர்கள் இல்லை–ஒருவரையாவது உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? யாருமே இருப்பதாக இல்லை…”

சில வேளைகளில், இந்த வயோதிப மந்திரவாதி, இறப்புடன் விளையாடி அதனை ஏதோ ஒரு வழியில் வென்றுவிட முயற்சிக்கின்றார் எனத் தோன்றுவதும் உண்டு. ‘உன்னைக் கண்டு நான் பயந்தேனில்லை. உன்னைக் காதலிக்கின்றேன் என்று நீ வருவாயென்று காத்திருக்கின்றேன்’. இருந்த போதிலும், அனைத்து சமயங்களிலும் அவரது சிறிய கூர்மையான கண்கள் கேள்விகளைத் தொடுத்தவாறு இருக்கும் –‘நீ எப்படிப்பட்டவன்? நல்லது. உனக்குப் பின்னால் நின்று உன்னை இயக்குவிப்பது யார்? என்னை முழுவதுமாகத் துடைத்தெறிந்து விடுவாயா அல்லது சிலவற்றை மிச்சம் வைக்கப் போகின்றாயா…’

அவரது வார்த்தைகளான, ‘நான் சந்தோசமாய் இருக்கின்றேன்… முற்று முழுதாய்தான்… அபரிமிதமாக…’ என்பவை ஒரு வித்தியாசமான மனநிலையில் உருவானவை என்பது தெளிவு.

ஆனால், இதனுடன் இணைந்தாற்போல், சடுதியாக அவர் கூறத் துணிவார்: ‘துன்பத்தைச் சகித்துக்கொள்ள… துன்புற… நான் இங்கே வேதனையுற’–இதுவும் கூட அவரிடம் உண்மையாகக் காணப்பட்டதுதான். இதற்காகவே, அவர் ஏதாகிலும்  ஒரு சிறைச்சாலை கைதியாக வைக்கப்பட வேண்டும் அல்லது நாடு கடத்தப்பட்டவராக அலைந்து திரிய நிர்பந்திக்கப்பட வேண்டும்–இவை ஒரு தியாக மணிமுடியை இறுதியில் அவருக்குச் சூட்டக் கூடும் எனில் - நான் சந்தோசப்படவே செய்வேன்.

ஏனெனில், மரணத்தைப் பற்றிய அவரது கணிப்பு, கேள்விக்குறியதாக இருக்கின்றது. மரணம் என்பது தியாகச் செயல்களை உள்ளடக்கும் எனில், (பொதுப் பார்வையிலாவது) அது, புரிந்துகொள்ளப்பட கூடியதாகவும் ஏற்று போற்றப்படகூடியதாகவும் இருக்கும். இருந்தும், அவர் என்றுமே மகிழ்வுடன் இருந்திருப்பார் என நான் கருதுவதற்கில்லை. ஓர் பேரறிவைத் தரக்கூடிய ஒரு நூலில் அவர் அழும் போதோ அல்லது ஒரு குதிரையின் முதுகில் ஏறிச் சவாரி செய்யும் போதோ அல்லது எந்தவோர் பெண்ணின் அரவணைப்பில் இருக்கும் போதோ அவர் தன்னை மறந்த ஒரு மனநிலையை எட்டினார் எனக் கொள்வதற்கில்லை. அவரில் காணப்பட்ட பகுத்தறிவு இதற்கெல்லாம் இடம் தரக்கூடியதல்ல. மேலும், மறுபுறத்தில் மனிதர்கள் பொறுத்தும் வாழ்க்கை பொறுத்தும் அவரது புரிதல் என்பதும் இதற்கெல்லாம் இடம்தர போவதில்லை.

இஸ்லாமிய தலைவர், அப்துல் ரஹ்மான், பதினான்கு சந்தோசமான நாட்களைத் தன் வாழ்நாளில் கழித்ததாகக் கூறப்படுகின்றது. எனது வாழ்வில் அப்படி ஒன்றும் சொல்வதற்கில்லை. காரணம், எப்படி வாழ்வதென்ற விடயம் நான் அறியாத ஒன்று. அது எனக்காகவா அல்லது என் ஆன்மாவுக்காகவா –எப்படி இருந்தாலும் இறுதிக் கணிப்பில் என் வாழ்வானது பிறருக்காகவே வாழ்ந்து முடித்ததாக இருக்கின்றது’.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.