வேந்தனார் குழந்தைப்பாடல்கள் 38 உம், மூன்று தனித்தனி நூல்களாக , குழந்தைகளின் வயதிற்கேற்றபடி மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.இப் பாடல்கள் அனைத்தும் இசைவடிவிலும் கொடுக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் 'நூலகம் இணையத்தளத்தில்' உள்ளன.  (www.noolaham.org இல் aavanaham.org உள்ளன.)

இப்பாடல்களில் ஏழு எட்டு பாடல்கள் ,கடந்த 70 வருடங்களாக இலங்கைத் தமிழ் சிறுவர் பாடசாலை பாடப் புத்தகங்களில் வெளிவந்து கொண்டுள்ளன. ( அம்மா, பாட்டி , எங்கள் வீட்டுப்பூனை , புள்ளிக்கோழி , மயில்,கூண்டிற்கிளி, அணில் , உதவி , ஒழுக்கம் மற்றும் சில பாடல்கள்...) வேந்தனாரின் குழந்தைப் பாடல்கள் 38 உம் , குழந்தைகள் தாமாகவே சிந்தித்து , உணர்வுடன் பாடுவதாக அமைந்துள்ளன. தூய, இனிய, எளிய தமிழில் , குழந்தைகளின் உள்ளத்தில் அன்பு , கருணை , பாசம் , பற்றுப் போன்ற உணர்வுகளை விதைக்கக் கூடியதாக இப் பாடல்கள் அமைந்துள்ளன.

அம்மா , பாட்டி , ஆசைமாமா, நண்பி போன்ற உறவுகளை பூனை , மயில்,கோழி , குயில்,அணில் , மான், கிளி போன்ற உயிரினங்களை பந்தடிப்போம், ஊஞ்சல் ஆடுவோம், இளநீர் குடிப்போம் , கரும்பு தின்போம் போன்ற செயற்திறன்கொண்ட பாடல்களை நிலா , மல்லிகைப் பூந்தோட்டம் , வாழை , கீரிமலை, பண்ணைப்பாலம் போன்றவற்றை உதவி , தொண்டு , கால் இழந்த ஏழை, கண்பார்வையற்ற ஏழை போன்ற , குழந்தைகள் உள்ளத்தில் கருணையை ஊட்டும் பாடல்களை நாவலர், பொன்.இராமநாதன் போன்ற பெரியார் பற்றிய பாடல்களை நாட்டில் அன்பு வேண்டும் , இளமைப்பருவம் போன்ற நாட்டுணர்வுமிக்க பாடல்களைக் கொண்டதாக , பல துறைகளையும் சார்ந்த 38 குழந்தைப் பாடல்கள் , குழந்தை மொழியாக, குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.

வேந்தனாரின் 38 குழந்தைப் பாடல்களும் , நான்கு வரிகள் கொண்ட பந்திகளாக , சுமார் 250 பந்திகள் , 1000 வரிகள் , நாலாயிரத்திற்கும் மேற்பட்ட , இனிய , தூய , எளிய தமிழ் சொற்களில், குழந்தைகள் இலகுவாக உச்சரிக்கக் கூடிய , எதுகை,- மோனை ' சந்தம் கொண்டுள்ள, பாடல்களாக அமைந்துள்ளது சிறப்பாகும்.

வேந்தனார் குழந்தைமொழி பாகம் 1
( 13 பாடல்கள் - வயது 3 -6 வயதினர்க்கு உகந்தது)

வேந்தனார் குழந்தை மொழி - பாகம் 2
(12 பாடல்கள் - வயது 6-9 வயதினர்க்கு உகந்தது)

வேந்தனார் குழந்தைமொழி - பாகம் 3
(13 பாடல்கள் - வயது 9- 12 வயதினர்க்கு உகந்தது)

இப் பாடல்கள் அனைத்தும் இசை அமைக்கப்பட்டு , குறுந்தகடுகளில் பதியப்பட்டு , மேற்படி நூல்களுடன் இணைக்கப் பட்டுமுள்ளன. இலங்கை , இந்தியாவில் வாழ்கின்ற நம் தமிழ்க் குழந்தைகளும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற நம் தமிழ் குழந்தைகளும் , இப் பாடல்களைப் பாடி ,ஆடிக் கூடி மகிழ முடியும். அத்துடனல்லாது இப்பாடல்கள் குழந்தைகளுக்கு, உறவுகளில் பாசத்தை, வீட்டுப் பிராணிகளில் அன்பை, உயிரினங்களில் பற்றை ஊட்டும் வகையாக அமைந்துள்ளதும் சிறப்பாகும். குழந்தைகள் தம் வயதிற்கேற்ற , நாலாயிரத்திற்கும் மேற்பட்ட இனிய தூய தமிழ் சொற்களை அறிந்திடவும், இப் பாடல்கள் வழி வகுக்கின்றது. இன்றைய தலைமுறையினர் பலர் , வேந்தனாரின் குழந்தைப் பாடல்கள் பலதை அறியாதிருப்பது வருத்தத்திற்குரியதே. பயன்பெற விரும்புவோர் ,இப் பாடல்களைப் பிழையின்றி தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்துப் பயன்பெற முடியும்.