யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக இயக்குநர் சொக்கநாதன் யோகநாதன் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றினால் மறைந்தார் என்ற செய்தி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நீண்டகாலமாக சமூகப்பணியாற்றி வந்திருக்கும் திரு. யோகநாதன் ( வயது 73 ) அவர்களின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணியாளர்களுக்கும் மற்றும் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமரர் யோகநாதன் அவர்கள் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா முதலான மாவட்டங்களில் வதியும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர் அமைப்புகளின் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.

அன்னாரின் திடீர் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளது.

அமரர் யோகநாதனின் குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் பங்கேற்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம் எனவும் அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3-30 மணிக்கு மறைந்த யோகநாதனின் இறுதி நிகழ்வுகள் இன்று முற்பகல் 11-30 மணிக்கு நடைபெற்றது. சமூக இடைவெளிபேணலுடன் நிகழ்ந்த இந்த இறுதி நிகழ்வில் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாகப் பணியாளர் செல்வி காயத்திரி தங்கராசா மற்றும் கணக்காளர் திரு. பொன்னம்பலம் தினேஷ் ஆகியோர் மாத்திரம் கலந்துகொண்டனர்.

தகவல்: லெ. முருகபூபதி ( தலைவர் )

இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.