வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்'போட்டோஷாப்' மென்பொருளை உருவாக்கியவர்களிலொருவரான தஞ்சாவூர்த்தமிழரான சீதாராமன் நாராயணன் என்னும் தமிழருடனான நேர்காணலை விகடன் பிரசுரித்திருந்தது. அதன் வாசிப்பின்போது தோன்றிய சிந்தனைத்துளிகளே எனது இக்குறிப்புகள்.

'சுந்தர் பிச்சை மற்றும் சீதா ராமன் நாராயணனைப்போன்றவர்களெல்லாரும் எதற்காகச் சொந்த மண்ணுக்குப் பயன்படாமல் பிறதேசத்தவர்களுக்குப் பயன்படும் வகையிலான வாழ்வினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்? எப்பொழுது தமிழர்கள் உருவாக்கும் மென்பொருள்கள் அவர்கள் வாழும் மண்ணிலிருந்து உலகெங்கும் பரவிச்சாதிக்கப்போகின்றது? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. சபீர் பாட்டியா போன்று என்று நம்மவர்கள் சொந்தமாகத் தங்கள் மென்பொருள்களை உருவாக்கிச் சாதனைகள் புரியப்போகின்றார்களென்று எண்ணுவதுண்டு.

இந்தப்பேட்டியில் இவர் கூறிய கருத்தொன்று என்னைக் கவர்ந்தது. அது: "ஆர்வமும், திறமையும்,தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுகாதீங்க மாணவர்களே"

உண்மையில் தாய்மொழியில் படிப்பதால் திறமை மேலோங்குமென்பது என் கருத்து. அதற்குத் தாய் மொழியில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பெயர்த்தல் வேண்டுமென்பது மிகவும் அவசியம். அன்னியர்களின் கீழ் நூற்றாண்டுகளாக தம் அறிவினை விற்று வாழ்ந்து வந்ததாலோ என்னவோ நம்மவருக்குத் தாய்மொழி மீது ஒருவித தாழ்வு மனப்பான்மை இருப்பதுபோல் தெரிகிறது. ஜப்பானியர்கள், ருஷ்யர்களால் தம் சொந்த மொழிகளில் படித்துச் சாதனை புரிய முடியுமென்றால் , ஏன் 'கல் தோன்றி முன் தோன்றிய' மூத்த குடியால் முடியாது? smile emoticon

ஆனால் அவ்விதம் சொந்த மொழியில் படித்துச் சாதிப்பதற்குரிய அரசியல் சூழல் , ஆக்கபூர்வமான அரசியல் சூழல், இருந்தால் மட்டுமே அவ்விதமான சாதனைகளுக்குச் சாத்தியங்களுள்ளன. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மொழிபெயர்த்துச் சொந்த மொழியில் சாதிக்கும்போதுதான் 'திறமான அந்தப்புலமையினை வெளிநாட்டார் வணக்கம் செய்வார்கள்'.

சொந்த மொழியில் மாணவர்கள் கற்றுச் சாதிப்பதற்கு அரசுகள் முதலில் அவ்விதமான கல்வித்திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் திறமையான மாணவர்களைக்கண்டெடுத்து வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவ்விதம் படிப்பதால் உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகள் கிடைக்குமென்றால் ஏன் மாணவர்கள் பிறநாடுகளை நாடிப்படையெடுக்கப்போகின்றார்கள்?

"ஆர்வமும், திறமையும்,தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுகாதீங்க மாணவர்களே" என்று கூறிய சீதா ராமன் நாராயண தொடர்ந்தும் " .எனக்கு தெரிந்தவரை சிலிக்கன் வேலியில் இன்னும் திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கிறது." என்று கூறியிருக்கும் நிலை மாறி "எனக்கு தெரிந்தவரை தமிழ் மண்ணில் திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன" என்று கூறும் நிலை வரவேண்டுமேனால், தமிழர்கள் வாழும் மண்ணில் தமிழில் அறிவியல் துறைகளைப் படிக்கும் நிலை வரவேண்டும். சகல அறிவியற் துறை நூல்களும் தமிழில், இலகுவான நடையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவ்விதம் படிப்பவர்களுக்கு அவர்களது துறைகளில் உடனடியாக வேலை பெறும் நிலை உருவாகவேண்டும்.

மேலும் தாய் மொழியில் படிக்கும் ஒருவருக்கு, அவருக்குரிய திறமையினை அங்கீகரிக்கும் சூழல் சொந்த மண்ணிலேயே கிடைக்கும்போது அவர் வெளிநாட்டொன்றுக்கு வேலை நாடி அல்லது உயர்கல்வி நாடிச் செல்ல வேண்டிய தேவையுமில்லை. அவரது கல்வியும், திறமையும் சொந்த மண்ணுக்கே இதன் மூலம் பயன்படும் நிலை உருவாகுகின்றது.

தமிழில் படிப்பதன் மூலம் மேனாட்டு அறிவியலைக் கற்றுக்கொள்ள முடியாது என்று யாரும் கூறினால் ஜப்பானியர்களை, ருஷியர்களைப்பாருங்கள். தம் மொழியில் அறிவியல் கற்று அவர்கள் சாதிப்பதைப்பாருங்கள். ஏன் சீதாராமன் நாராயணன் கூடத் தனது பத்தாவது வகுப்பு வரையில் தமிழில்தான் கல்வி கற்றதாகக்கூறியிருப்பதை உணருங்கள்.

உண்மையில் இவர்களைப்போன்றவர்கள் சொந்த மண்ணை விட்டு நீங்குவதற்கு முக்கிய காரணங்களிலொன்று இவர்களது திறமைக்கு உரிய களம் அமைத்துக்கொடுக்கும் சூழல் இவர்கள் வாழும் மண்ணில் இருப்பதில்லையென்பதுதான். இவர்கள் பிறந்த மண்ணில் நிலவும் அரசியல் ஊழல்களும், சமுதாய அமைப்பும் ஆக்கபூர்வமாக மாறாதவரையில் இவர்களைப்போன்றவர்களைப் பிறதேசங்களே பயன்படுத்துக்கொள்ளப்போகின்றன.


2. தற்போதுள்ள ஈழத்து அரசியற்சூழல் பற்றிய சிந்தனைகள்......

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்  ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஓய்ந்து போனது. அதுவரை நடைபெற்ற யுத்தத்தினால் ஈழத்தமிழர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமான பாதிப்புகளாகக் கீழ்வருவனற்றைக் குறிப்பிடலாம்:முள்ளிவாய்க்காலில் யுத்தம் இலட்சக்கணக்கான தமிழர்களைப்பலிகொண்டதுடன்

1. ஈழத்தமிழர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டமை.
2. தந்திரமாகச் சரணடைய வைக்கப்பட்ட போராளிகள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை. 3. சரணடைந்த , சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை. 4. தம் உடமைகளை, இருப்பிடங்களை பொதுமக்கள் இழந்தமை. 5. யுத்தத்தில் , அரசின் அடக்குமுறைகளினால் தம் கணவரை அல்லது மனவியரை அல்லது குழந்தைகளை இழந்த தமிழர்களின் நிலை. 6. போராட்டத்தால், போரால் பாதிக்கப்பட்டு அங்க அவயங்களை இழந்த போராளிகள், பொதுமக்களின் சிதைந்த வாழ்வு. 7. தாய், தந்தையரை இழந்து அநாதரவாக்கப்பட்டு பல்வேறு சமூக நலன் பேணும் அமைப்புகளினால் பராமரிக்கப்படும் குழந்தைகளின் நிலை. 8.சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்காகச் சிறைகளில், இரகசியத்தடுப்பு முகாம்களில் வாடும் தமிழர்கள், முன்னாள் போராளிகள் நிலை. 9. வடகிழக்குத்தமிழ்ப்பிரதேசங்களில் தேசிய பாதுகாப்பு நலனுக்காக என்ற போர்வையில் ஆயிரக்கணக்கில் நிலைகொண்டிருக்கும் படையினரின் ஆதிக்கம்.

இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேடுவதாக, போர்க்குற்றம் புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டுவதாக, வடகிழக்குத்தமிழ்ப்பகுதிகளிலிருந்து படையினரை விலகச்செய்வதற்கு வற்புறுத்துவதாக இந்தப்பாராளுமன்றத்தேர்தலில் அனைத்துத்தமிழர்களும் ஒன்றுபட்டுக்குரல் கொடுத்திருக்க வேண்டும். இவையொன்றுமே நடக்கவில்லை.

ஈழத்தமிழர்களின் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் சமஷ்டி கோரிக்கை வைக்கப்பட்டு, பின்னர் தனிநாட்டுக்கோரிக்கை வைக்கப்பட்டு, பின் மிதவாதப் பாராளுமன்ற அரசியலிலிருந்து ஆயுதப்போராட்டமாகத் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் உருவெடுத்தது, பின்னர் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. தற்போதுதான் ஓரளவு அமைதியான சூழல் நிலவுகின்றது. ஆனால் இன்னும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை.

நிலவும் இந்த அமைதியினைத் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு (மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் உள்ளடக்கி) தமிழர்கள் பாவிக்க வேண்டும். அவ்விதம் பாவிக்காமல், தென்னிலங்கை இனவாதிகளின் சீண்டல்களினால் உணர்ச்சிவசப்பட்டுக் கோரிக்கைகளை முன்னெடுப்பது, ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்குப்பதில் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவது இவையெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் மீண்டும் இனவாதச்சக்திகளை அதிகாரத்துக்குக்கொண்டு வந்து, மேலும் தமிழர்கள்மீது கடுமையான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கே உதவும். தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்குள் சிக்கித் தமிழர்களும் அவ்விதமான அரசியலை முன்னெடுப்பது மீண்டும் தமிழர்கள் துன்பம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

எனவே தற்போதுள்ள சூழலில் ஈழத்தமிழர்கள் மற்றும் ஈழத்தின் அனைத்துச் சிறுபான்மைச் சக்திகளெல்லாம் தீர்க்கதரிசனத்துடன் செயற்படுவது அவசியம். இரண்டு பேய்களில் சிறுபான்மைச்சமூகங்கள் சிறிதளவாது மூச்சு விட அனுமதிக்கின்ற பேயுடன் பேசிப்பார்க்கலாம். அதற்கும் அனுமதிக்காமல் இரத்தம் குடித்த, குடிக்கின்ற பேயுடன் பேசுவது சாத்தியமற்றது.

காலப்போக்கில் ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், தமிழர்கள் மீது அடக்குமுறைகள் அதிகரிக்குமானால் அப்பொழுது தானாகவே மீண்டுமொருமுறை போராட்டம் வெடிக்கும். ஆயுதப்போராட்டம் வெடிக்கும். ஆனால் அதற்கான சூழல் இதுவல்ல.

அதே சமயம் இலங்கை மக்களின் சமூக, விடுதலைபோராட்டமென்பது அனைத்து மக்களினாலும் முன்னெடுக்கப்பட வேண்டியது. வர்க்கம், தீண்டாமை போன்றவற்றிலிருந்து , உபகண்ட , சர்வதேச ஆதிக்கத்திலிருந்து பூரண விடுதலை என்பதே அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும். அவ்விதமான விடுதலை அனைத்துச்சிறுபான்மை சமூகங்களின் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமையினையும் அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். ஆனால் அவ்விதமானதொரு விடுதலை ஒருபோதுமே பாராளுமன்ற அரசியலால் தற்போதுள்ள சூழலில் சாத்தியமற்றது. அவ்விதமானதொரு விடுதலையினைத் தவிர்ப்பதற்காக அனைத்துச்சக்திகளும் இனவாதம் , தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகியவற்றைக்கட்டவிழ்த்துக்கொண்டே இருப்பார்கள்.

எனவே அவ்விதமானதொரு விடுதலைக்கனவினை வைத்திருக்கும் எவருமே தற்போதுள்ள சிறிதளவாவது அமைதி தவழும் சூழலை முறையாகப்பாவிக்க வேண்டும். ஈழத்தமிழர்களும் ஏனைய சிறுபான்மைச்சக்திகளும் மீண்டும் மகிந்த ராஜபக்ச கும்பல் வந்துவிடும்படியாகச் செயற்படக்கூடாது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் தமிழர் வாக்குகளைப்பிரித்திடும் வகையில் அமைந்திருந்தாலும், தெரிவாகும் அனைத்துத்தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு, ஒட்டுமொத்தமாகத்தமிழர்களின், சிறுபான்மையினரின் உரிமைக்காகக்குரல் கொடுக்க வேண்டும்.


 

3. வெகுசன இதழ்களும், ஓவியர்களும் பற்றிய நனவிடை தோய்தல்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்என்னுடைய பால்ய காலத்து வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த ஓவியர்களாக ஓவியர் வினுவையும், ஓவியர் கல்பனாவையும், ஓவியர் கோபுலுவையும் கூறுவேன். குறிப்பாக ஓவியர் வினுவின் ஓவியங்கள் சரித்திர, சமூக நாவல்கள் மற்றும் சித்திரக்கதைகள் போன்ற பல்வகையான படைப்புகளையும் நிறைத்திருக்கும். கல்கியின் பொன்னியின் செல்வன் நான் வினுவின் ஓவியங்களுடன் வாசித்ததால் என் மனக்கண்ணில் வந்தியத்தேவன், குந்தவைப்பிராட்டியார், கொடும்பாளூர் வானதி, சின்ன / பெரிய பழுவேட்டரையர்கள், பூங்குழலி, ஆழவார்க்கடியான் என அனைவரும் ஓவியர் வினுவின் ஓவியங்களினூடான சித்திரிப்புகளாகவே தென்படுவார்கள். அதுபோல் அவரது ஓவியங்களுடன் வெளிவந்த பல சரித்திரத்தொடர் நாவல்களில் ஜெகசிற்பியனின் 'பத்தினிக்கோட்டம்', கெளசிகனின் 'பாமினிப்பாவை', அகிலனின் 'கயல்விழி', கொத்தமங்கலம் சுப்புவின் 'பொன்னி வனத்துப்பூங்குயில்; ஆகியவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

அவரது ஓவியங்களுடன் வெளியாகிய சமூக நாவல்களில் முக்கியமாக நினைவிலுள்ளதாக ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' நாவலைக்கூறுவேன். அதில் வரும் பாத்திரங்களான திரிவேணி, ரங்கமணி ஆகியோரின் உருவங்கள் வினுவின் சித்திரிப்புக்களாகவே நெஞ்சில் விரிகின்றன.

ஓவியர் வினுவைப்போல் ஓவியர் கல்பனாவின் கைவண்ணமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது ஓவியங்களுடன் பல சமூகத்தொடர்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் எனக்குப் பிடித்தவையாக இன்னும் நினைவில் நிற்பவைகளாக ஜெகசிற்பியனின் 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்' , உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' மற்றும் கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' ஆகிய நாவல்களைக் கூறுவேன். மிகவும் செந்தளிப்பான (லக்சுமிகரம் என்பார்களே அவ்விதம்) புன்னைகையுடன் கூடிய முகங்களைக்கொண்டவை இவரது ஓவியங்கள்.

ஓவியர் கோபுலுவின் ஓவியங்கள் எப்பொழுதுமே நெஞ்சினில் இன்பத்தைத்தருபவை. இவரது ஓவியங்களில் வெளியான படைப்புகளில் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்' ஓவியங்கள், அகிலனின் 'சித்திரைப்பாவை', சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ஓவியங்கள், உமாசந்திரனின் 'முழு நிலா', ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ! நான்! நிலா!", ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்றவை உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன.

இவர்களைத்தவிர ஓவியர் லதா (சாண்டில்யனின் கதைகளுக்குப் பெரும்பாலும் ஓவியங்கள் வரைந்தவர்), ஓவியர் மாருதி, ஓவியர் விஜயா (பி.வி.ஆர் எழுதிய 'மணக்கோலம்', கோமகளின் 'இனிக்கும் நினைவுகள்'), ஓவியர் மாருதி, ஓவியர் ஜெயராஜ், ஓவியர் மாயா (மணியனின் பல நாவல்களுக்கு ஓவியம் வரைந்தவரிவர்) மற்றும் ஓவியர் ராமு போன்றோரின் ஓவியங்களுடன் வெளியாகிய படைப்புகளையும் வாசித்திருக்கின்றேன்.

எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உயிரூட்டியவையாக அப்படைப்புகளுக்கு ஓவியங்களை வரைந்தவர்களின் ஓவியங்களைக் குறிப்பிடலாம். அதனால்தான் இப்படைப்புகளை நூல்களாக வெளியிடும்போது வெளியாகியபோது வெளியான ஓவியங்களுடன் வெளியிடுவது வாசிப்பு இன்பத்தினை அதிகரிக்கும் என்பதென் கருத்து. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்' நாவலை வெளியிட்டபோது வெளியான போது வெளிவந்த ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் ஓவியர் வினுவின் ஓவியமொன்றினைப்பார்த்ததும் தோன்றிய நினைவுப்பதிவிது