கோமாளிகள் பற்றியொரு நனவிடை தோய்தல்!கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது.

எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்ணன் - நேசம் இரட்டையர் அமைத்திருந்தனர். ஒளிப்பதிவு - ஜே. ஜே. யோகராஜா. இராமநாதன், யோகராஜா இருவரும் சிங்களத்திரையுலகில் நன்கு பிரபலமானவர்களாக விளங்கினார்கள். படத்தைத்தயாரித்தவர் வர்த்தகரான எம். முகம்மது எஸ்.ராம்தாஸ், அப்துல் ஹமீட், ஆனந்தராணி இராஜரத்தினம் (இன்று ஆனந்தராணி பாலேந்திரா), சுப்புலட்சுமி காசிநாதன், சில்லையூர் செல்வராசன், கே.ஏ.ஜவாஹர், செல்வம் பெர்ணாண்டோ, கமலினி செல்வராசன், எஸ்.செல்வசேகரன், ரி.ராஜகோபால், ஜேசுரட்னம், கே.சந்திரசேகரன் என்று புகழ்பெற்ற வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தார்கள்.

'பல்கலைவேந்தர்' சில்லையூர் செல்வராசனின் வானொலி, திரைப்படப்பங்களிப்பு முக்கியமானது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். அது பற்றிக் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனும் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். நினைவுக்கு வருகின்றது. சில்லையூர் செல்வராசன் 'தணியாத தாகம்' (திரைப்படச் சுவடி), விவரணத்திரைப்படங்கள் ( ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது).

அண்மையில் யு டியூப்பில் 'கோமாளிகள்' திரைப்படத்தின் தெளிவான பிரதியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. கே.பாலச்சந்தரின் 'எதிர்நீச்சல்'' நினைவுக்கு வந்தது. பல்லின ,மத & சாதிக் குடும்பங்கள் அனைவரும் மாளிகையொன்றைக் கட்டி வாழ்ந்து வருகின்றார்கள். அம்மாளிகை சந்தர்ப்ப சூழல் காரணமாக ஏலத்தில் விற்கப்படும் நிலை உருவாகின்றது. அதனை தணிகாசலம் என்பவர் வாங்குகின்றார். தொடர்ந்தும் அக்குடும்பங்களை அங்கு வாழ அனுமதிக்கின்றார். அவர் தான் மறைந்ததும் அங்குள்ள ஒருவருக்கே நன்னடத்தையின் அடிப்படையில் அம்மாளிகையினை வழங்கப்போவதாகத் தனது உயிலில் எழுதிவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார். தணிகாசலமாக நடித்திருக்கும் ஜவாஹர் தென்னிந்திய திரைப்பட நடிகர் செந்தாமரையை நினைவுபடுத்துகின்றார். அம்மாளிகையைத் தாமே பெற வேண்டுமென்று அங்குள்ளவர்கள் செய்யும் பல்வகை முயற்சிகள்தாம் கதை. அதில் அவர்கள் வெற்றியடைகின்றார்களா என்பதைப்படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கோமாளிகள் பற்றியொரு நனவிடை தோய்தல்!
காதலர்களாக வரும் சில்லையூர் செல்வராசனும், கமலினி செல்வராசனும் ஆடிப்பாடி படத்துக்குச் சுவையூட்டுகின்றார்கள். சுப்புலட்சுமி காசிநாதன், செல்வசேகரன், எஸ். ராமதாஸ், கமலினி அப்துல் ஹமீட் ஆகியோரின் நடிப்பு நினைவில் தொடர்ந்தும் நிற்கிறது.

இப்படத்தின் இன்னுமொரு சிறப்பு இப்படத்தின் ஆரம்பத்தில் வரும் கொழும்பு நகரக் காட்சிகள். எழுபதுகளில் கொழும்பு நகர் எவ்விதமிருந்தது என்பதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அக்காட்சிகள். அவ்வகையிலும் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகின்றது. கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் கோயிலுக்கு முன்னாலிருக்கும் ஜெம்பட்டா வீதியைக் கண்டபோது ஒரு காலத்தில் அவ்வீதியால் எத்தனை தடவைகள் நடந்து திருந்திருப்பேன் என்று எண்ணிக்கொண்டேன்.
கோமாளிகள் பற்றியொரு நனவிடை தோய்தல்!
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, கலையுலகுக்கு வானொலிக் கலைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதொன்று. திறனாய்வாளர்கள் பலராலும் புறக்கணிக்கப்படும் அப்பங்களிப்பு பற்றி விரிவாக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம். சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரையென பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அது ஆற்றிய பங்களிப்பு பற்றி விரிவான ஆய்வுகள் வெளிவருவது அவசியம். அங்கு எழுத்துலகின் ஆளுமைகள் பலரின் பங்களிப்புகளும் கவனத்திலெடுதுக்கொள்ளப்பட வேண்டியவை.

கோமாளிகள் பற்றியொரு நனவிடை தோய்தல்!
'கோமாளிகள்' திரைப்படத்தைப் பின்வரும் இணைய இணைப்புகளில் கண்டு களியுங்கள்:

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.