தூங்கும் நள்ளிரவு! இரவு வான்!
விரிவெளி!
இரவுப்பட்சிகளில்லை.
மாநகரின் நள்ளிரவில்.
நத்துகள் எங்கே?
நள்ளிரவு ஆந்தைகளெங்கே?
வவ்வால்கள்தம் சலசலப்புமில்லை.
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள் மட்டும் உப்பரிகைகளில்.
விரிவெளி ஒளிச்சிதறல் தூண்டும்
விரிவெண்ணங்கள் விரிமனவானில்.
எங்கோ ஒரு கோடியில்..
இங்கு நான்! அங்கு நீ!
சாத்தியமுண்டா?
சாத்தியமுண்டா?
நானுண்டாயின் நிச்சயம் நீயுமுண்டே.
நீளும் நம்பிக்கையில் நான்.
சந்திப்பு எப்போது?
நம்பிக்கை அதிகம் எனக்குண்டு
அவ்விடயத்தில்
ஆனால் (If) அல்ல
எப்போது (When) என்பதுதான்
இப்போதுள்ள  நிலை.
அது புரிந்தவன் நான்.
நம்பிக்கை அவ்விடயத்தில்
மிக்கவன் நான்.

அப்போதுதான் கேட்டேன் அக்குரலை!

விரியும் காலவெளி அடுக்குள்
அப்போது கேட்டதந்தக் குரல்.
எங்கிருந்து வருகின்றதோ
அந்தக் குரல்?
சுற்றுமுற்றும் பார்த்தேன்.
யாருமில்லை.
யாராகவிருக்கும்?
மீண்டுமந்தக் குரல்:

"நண்பா! உன்னால் என்னை வெளியில் எங்கும்
காணவே முடியாது. எங்கு நீ பார்க்கின்றாய்?
அங்கு பார்ப்பதைத் தவிர்.
பார்வையை இங்கு திருப்பு.
இங்கு பார்"

வெளியில் இல்லையா? பின் உள்ளேயா?
உள்ளே என்றால்
எங்கே உள்ளே?
குழப்பத்தில் சித்தம் குழம்ப
மீண்டுமந்தக் குரல்.
இப்பொழுது
அதன் இருப்பிடத்தை உணர முயற்சி செய்தேன்.
உண்மைதான்.
அது வெளியிலிருந்து  அல்ல.
உள்ளிருந்துதான் ஒலிக்கின்றது. ஆம்!
உள்ளிருந்துதான்.
அது மீண்டும் தொடர்ந்தது:

"நண்பா! நல்லது. நீ சரியான திசையில்
நோக்கத்தொடங்கி விட்டாய்."
மேலும் அது தொடர்ந்தது:
"ஆனால் உன் காலவெளியில்
உன்னால் ஒருபோதும் என்னைப்
பார்க்க முடியாது.
ஏன் தெரியுமா?
ஏனென்றால்
உன் காலவெளிப் பரிமாணங்கள்
நான்கினை மீறியவன் நான்.
நான்கு. நான்கு சுவர்களுக்குள் உன்
இருப்பு. ஆயின் என் இருப்போ?
அது போல் நான்கு மடங்குச்
சுவர்களுக்குள். புரிகிறதா?
பரிமாணங்கள் பதினாறு.
உங்களால் ஒருபோதும் எங்களைக்
காணமுடியாது. ஆயினும்
உங்களை நாம் எப்போதும் கண்டு
கொண்டுதானுள்ளோம்.
இருந்தாலும் ஒன்று சொல்வேன்.
உன் சிந்தனையலைகளில் என்னால்
கலக்க முடியும்.
அது கூறும் தகவல்களை என்னால் அறிய முடியும்.
அவ்விதமே இப்பொழுதும் நானுன் சிந்தனையலைகளில்
கலந்துள்ளேன்.
உன்னுடன் உரையாடுவதும் அவ்வகையில்தான்.
அதுதான் கூறினேன் நண்பா , நான் வெளியில் அல்ல.
உன்னுள் உள்ளே என்று.
நல்லது நண்பா!
என்னிருப்பை அறிவிக்க இவ்வழி தேர்ந்தேன். அறிவித்தேன்.
நான் சென்று வருகிறேன். அவ்வப்போது வருவேன். உன்னுடன்
அளவளாவுவேன். "

என்ன! எங்கே அந்த அயலுலகவாசி?
என்னுள்ளிருந்து உரையாடினாய்!
நீ எங்கே?
விரிகாலவெளி அலைக்குள் அலையானாயோ?
உன்னுடன் உரையாடியதை எவ்விதம் விளக்குவேன்
என்னவருக்கு?
அயலுலகவாசியே! அதற்குமொரு வழி
கூறாமல் ஏன் சென்றாய்?
இருந்தும்
காலவெளிக்கூம்புக்கு
அப்பாலிருந்திங்கு நீ பயணித்தாய்.
என்னுடன் அளவளவாவிட அவாக் கொண்டாய்.
அது போதாதா? போதும்! போதுமெனக்கு!
அது போதும்! அது போதும்!
அகவிரிவு தந்தாய் அண்டவாசியே!
அது போதும்! அது போதும்!
அது போதும். அதுபோதும்.
அது போதும் அண்டவாசியே.
அது போதும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.