ஒரு கலவரம் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்தது. அடுத்த இருபத்தாறு ஆண்டுகள் நாட்டைக் கொடிய போர்ச்சூழலுக்குள் தள்ளிவிட்டது. நாட்டின் அனைத்து மக்களும் அப்போரின் வெம்மைக்குள் வாடினார்கள். கூடிய அழிவினைத் தமிழர்கள் அடைந்தனர். அந்த இனக்கலவரம் மட்டும் நடைபெறாமலிருந்தால் என்று நான் சிந்திப்பதுண்டு. ஆனால் அந்த இனக்கலவரம் உருவாகக் காரணமாக இருந்த அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனேயின் அரசு.  77இல் பதவிக்கு வந்தது தொடக்கம் 1983 வரையில்  தமிழ் மக்கள் மேல் கொடிய அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. 77இல் பதவிக்கு வந்ததுமே நாட்டில் இனக்கலவரமொன்றை அவரது அரசு உருவாக்கியது. அதற்கு  முக்கிய காரணங்கள் தமிழர்கள் தமிழீழத்துக்கு வாக்களித்ததும், எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் வந்ததுமே.  அக்காலகட்டத்தில் 'போர் என்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்னும் அவரது உரை தொடங்கிய கலவரத்தை மேலும் பற்றியெரிய வைத்தது.  அவரது ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. படையினரின் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் இடம் பெற்றன.

யாழ் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. புகழ்பெற்ற நூலகமும் கூடவே எரிந்தது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் கொடிய இனக்கலவரத்தை ஜூலை 83இல் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டது ஜே.ஆரின் அரசு. ஜே.ஆரின் அமைச்சர்களான சிறில் மத்தியூ உட்படப் பலர் அக்கலவரம் அகோரமாகப் பற்றியெரியக் காரணாமாக விளங்கினர்.

அதன் பின் அடுத்த 26 ஆண்டுகள் நாட்டைப் பேரழிவுக்குள், யுத்தத்தினுள் மூழ்கடிக்க வைத்ததற்கு முக்கிய  காரணம் ஜே.ஆர் அரசின் அணுகுமுறையே.

தமிழ் மக்களின் மேல் வன்முறையினை , மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விட்ட ஜே.ஆர் அரசு சிங்கள இடதுசாரிகளை  ஒடுக்குவதற்கும் அந்நிலையினைப் பயன்படுத்தத் தவறவில்லை. மக்கள் விடுதலை முன்னணியைத்தடை செய்தது. நாட்டின் 83 இனக்கலவரத்துக்கு இடதுசாரிகளே காரணமென்று பொய்யாகக் குற்றஞ்சாட்டி ஜேவிபி போன்ற கட்சிகள் தலை மறைவாக இயங்கும் நிலையை உருவாக்கியது.

இலங்கைச் சரித்திரத்தின் வரலாற்றில் தமிழ் மக்கள் மேல் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், சிங்கள மக்கள் மேல் இடம் பெற்ற மனித உரிமை , மலையக மக்கள் மேல் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் மேல் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் இவையெல்லாம் கறைகள். இவை போன்று மீண்டும் கறைகளை ஏற்படுத்தாமல் இலங்கையின் அனைத்து அரசியல்வாதிகளும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஜே.ஆர் .அரசின் ஆட்சியைப்பற்றி விரிவானதோர் ஆய்வு செய்யப்பட வேண்டும். நாடு மீண்டுமொரு யுத்தத்தினுள் சிக்காதவாறு பார்த்துக்கொள்வதற்கு ஜே.ஆரின் ஆட்சியின் தவறுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அவ்வாய்வு பாரபட்சமற்ற முறையில் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். மீண்டும் நாடானது போருக்குள் தள்ளப்படாமலிருப்பதற்கு, மக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்வதற்கு  ஜே.ஆர் அரசு நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளும் அமைதியான வழியில், ஆரோக்கியமான வழியில் தீர்க்கப்படக்கூடிய செயற்திட்டங்களைக்கொண்டவையாக அரசின் செயற் திட்டங்கள் அமைய வேண்டும்.  எப்படி நாடு ஆட்சி செய்யப்படக் கூடாது என்பதற்குரிய ஆய்வு நூலாக, பாட நூலாக அவ்வாய்வு விளங்க வேண்டும்.

எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தைத் தருமொரு விடயம் இவ்வளவு தூரம் நாட்டுக்கு, நாட்டின் பல்லின மக்களுக்குத் துன்பங்களைத் தரக்காரணமாகவிருந்த ஜே.ஆர் பற்றி ஏன் யாருமே பெரிதாகக் கதைப்பதில்லை என்பதுதான். பண்டா  - செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தது ஜே.ஆரின் கண்டிக்கான  பாத யாத்திரை என்பதையும் மறந்துவிடக் கூடாது.

83 இனக்கலவரத்தை எண்ணும் சமயங்களிலெல்லாம் ஜே.ஆர் ஆட்சியில் நடைபெற்ற 77 இனக்கலவரம், பயங்கரவாதத்தடைச்சட்டம், அதன் காரணமாகக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள், யாழ் நூலக எரிப்பு , வெலிக்கடைச்சிறைச்சாலைப் படுகொலைகள் எனப் பல நினைவுகள் கூடவே எழுவதையும் தடுக்க முடிவதில்லை. கறுப்பு ஜூலை எண்பத்திமூன்றினை நினைவு கூர்வோம். அதே சமயம் கூடவே மீண்டுமொரு கறுப்பு ஜூலை ஏற்படாமலிருக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.