கலாநிதி பொ.இரகுபதி எழுதிய Early Settlements in Jaffna நூலில் கோப்பாய்க் கோட்டை பற்றிய இரு பக்கக் கட்டுரையுமுள்ளது. அக்கட்டுரை தற்போது இராசமாளிகை என்றழைக்கப்படும் காணித்துண்டொன்று பற்றிய தகவற் கட்டுரையே. உண்மையில் இது போன்ற இடங்களைப்பற்றிய ஆய்வுகளின்போது அவை பற்றி ஏற்கனவே ஆய்வுக்கட்டுரைகள் அல்லது தகவற் கட்டுரைகள் வெளியாகியிருந்தால் அவற்றையும் தேடிப்பிடித்து வாசித்து அவை பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது ஆய்வாளரின் ஆய்வுச்சிறப்பை எடுத்துக் காட்டும்.
 
கோப்பாய்க் கோட்டை இருந்ததாகக் கருதப்படும் 'பழைய கோட்டை' (Old Castle) பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் கட்டுரையொன்று எழுதியிருந்தார் ( (Ceylon Antiquary and Literary Register 2(3), Jan 1917, pp.194-195, 'Sankily's Fortress at Kopay'). அது பற்றி கலாநிதி கா.இந்திரபாலாவைச் சந்தித்தபோது சுட்டிக்காட்டியிருந்தார்.  அது யாழ் பல்கலைக்கழக நூலகத்திலுள்ளது. அது பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள் தகவலையும், அக்கட்டுரை வெளியான பக்கங்களையும் பகிர்ந்துகொண்டால் மிகவும் நன்றியுள்ளவனாகவிருப்பேன்.
 
ரகுபதி அவர்கள் மேற்படி சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரையையும் உள்வாங்கி மேற்படி கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாகவிருந்திருக்கும்.
 
சுவாமி ஞானப்பிரகாசர் கோப்பாய்க் கோட்டை இருந்த இடம் எதுவென்பதை அடையாளம் கண்டு (திருமதி வேர்ட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமான கோப்பாயிலுள்ள old castle என்னும் பகுதியே அது) அதுபற்றி விபரித்திருந்தார். உடனேயே அப்பகுதியைப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. கோப்பாய் சென்று பழைய கோட்டையின் (old castle) அன்றிருந்த நிலை பற்றி சிறு கட்டுரையொன்றினை எழுதி வீர்கேசரி பத்திரிகைக்கு அனுப்பினேன். அது 'கோப்பாய் பழைய கோட்டையின் கோலம்' என்னும் தலைப்பில் 15.3.1981 அன்று வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகியது. சுவாமி ஞானப்பிரகாசரின் காலத்தில் ஒருவருக்குச் சொந்தமாகவிருந்த அக்காணி நான் சென்று பார்த்தபோது பிரிக்கப்பட்டுப் பலருக்குச் சொந்தமாகவிருந்தது. தற்போது தனியாருக்குச் சொந்தமாக அது இருந்த இடமே அடையாளம் காணமுடியாதவாறு மாறியுள்ளது. அது பற்றியும் முகநூற் பதிவொன்று எழுதியிருந்தேன். அதற்கான இணைப்பையும் இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
 
வீரகேசரியில் வெளியான 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரையை முழுமையாகக் கீழே தருகின்றேன்இக்கட்டுரைக்கு வீரகேசரி நிறுவனத்தினர் ரூபா 35 அனுப்பியிருந்தார்கள். மறக்க முடியாது.

(வீரகேசரி) கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்! - வ.ந.கிரிதரன் -
 
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.
 
மானிப்பாய் கைதடிச் சந்திக்குச் சற்று அப்பால் வீதியின் வலது புறமாக இருந்த ஒரு பழமையான வாயில் முகப்பை காட்டிய அவர் 'இதுதான் பழைய கோட்டை' (Old Castle) என்ற போது தனிமையான நிலையில் நீண்ட காலமாக அமைதியுடன் காத்து நிற்கும் ஒருமனிதனைப் போன்று அந்தப் பகுதி எனக்குத் தோன்றியது.
 
அந்த வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். சற்குணசிங்கம் சொன்னார்:
 
'அருகிலுள்ள எல்லாக் காணிகளுமே பழைய கோட்டை என்றுதான் அழைக்கப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொருத்தரின் கைக்கு மாறிக் காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறி விட்டன. கடைசியாக உள்ள காணி மட்டும் இன்னும் விற்க படாமலுள்ளது..'
 
அந்தப் பின்புறக் காணித் துண்டை அடைந்ததுமே ஒருவித பழமை வாய்ந்த சூழலின் இனிமையில் மனது மூழ்கி விடுகின்றது. புதுமையானதொரு உலகிற்கு வந்து விட்டது போன்றதொரு உனர்வு ஏற்படுகின்றது. சற்குணசிங்கம் மேலும் கூறலானார்:
 
'இந்தக் காணியில் முன்பொருமுறை நான் வேம்பொன்றை வெட்டியபோது எலும்புத் துண்டுகள் அகப்பட்டன. நிலத்தில் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன. அதோ அங்கே நிலத்தைப் பாருங்கள்.'
 
பார்த்தேன். அவர் காட்டிய இடத்தில்; பூமியினூடு எட்டிப் பார்த்தபடி செங்கற்கள் சிரித்தன. அவரே தொடர்ந்தார்:
 
'நிலத்தின் அமைப்பைப் பாருங்கள் தம்பி. ஒரு பக்கம் பதிந்தும், இன்னொரு பக்கம் உயர்ந்தும் கிடப்பதை. உயர்ந்து கிடக்கும் பகுதியைத் தோண்டிப் பார்ப்போமாயின் பழைய கோட்டையின் சரித்திரம் தெளிவாகலாம்'.
 
எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. மனுஷன் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். அத்துடன் அவர் ஒரு கதையையும் கூறினார்:
 
'நல்லூர்க் கோட்டையையும் , இந்தக் கோட்டையையும் இணைக்கும் ஒரு சுரங்கப் பாதை இருந்ததாக ஒரு கதை உள்ளது.'
 
அப்போதுதான் சுவாமி ஞானப்பிரகாசர் தனது கட்டுரையில் எழுதியிருந்த கோட்டை வாய்க்கால் பற்றி நினைவிற்கு வரவே கோட்டை வாய்க்காலைப் பற்றி வினவினேன். அந்தப் பழைய கோட்டை எனப்படும் காணித்துண்டுகளின் அருகாகச் செல்லும் சிறிய ஒழுங்கையையே கோட்டை வாய்க்கால் என்கின்றார்கள். அந்த ஒழுங்கையானது பழைய கோட்டை எனப்படும் நிலப் பகுதியிலும் தாழ்வானதாக அமைந்துள்ளது. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இந்தக் கோட்டை வாய்க்காலையே பழைய கோட்டையின் அகழியாகக் கருதுகின்றார்.
 
கோட்டை வாய்க்கால் என்னுமிப்பகுதி வயலுடன் முடிவடைகின்றது. பழைய கோட்டையின் பின்புறமாக உள்ள வயற்பகுதியும் வெகு தாழ்வானதாக உள்ளது. அவ்வயலில் பயிர் விளைவிக்கும் விவசாயியும் தான் மண்ணைக் கொத்துகையில் எலும்புகள் கிடைத்ததாகக் கூறினார்.
 
ஒரு காலத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கிய அப்பகுதியின் இன்றைய பரிதாப நிலை கண்டு வயிறு பற்றியெரிந்தது. சற்குணசிங்கம் கூறினார்:'இப்பகுதியில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பாதுக்காக்கப்பட வேண்டும் ' அவரது குரலில் அப்பகுதியின் இன்றைய நிலைகண்டு படர்ந்த கவலை நியாயமானதுதான்.
 
வரலாற்றில் ஒரு தெளிவின்றிக் கிடக்கும் இலங்கைத் தமிழினத்திற்கு இன்றைய நிலையில் தேவையானது வெறும் வாய்ச் சவடால்களல்ல. ஆக்கபூர்வமான ஆய்வுகளே. இதற்கு தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் பழைமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், அழிபாடுகள் என்பவை பேணிப்பாதுகாக்கப்படல் மிகவும் அவசியமானதொன்றாகும்.
 
இலங்கையின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் புகழ்பெற்ற இராஜதானியாக விளங்கிய நகர்தான் நல்லூர். இன்றோ அது காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறிக்கொண்டு வருகின்றது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேணிப் பாதுகாக்கப் படவேண்டிய அந்நகரின் பழமையின் சின்னங்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டு வருகின்றது. பொதுமக்களோ, அரசியல்வாதிகளோ இது பற்றிக் கவனிக்காமல் இருப்பது வருத்ததிற்குரியது. யமுனாரி (யமுனா ஏரி) செல்லும் மண்பாதையிலும் நிலத்தில் காணப்படும் செங்கற்களை ஆராய்ந்து பார்ப்பின் அவை எத்தனையோ கதைகளைக் கூறக்கூடும்.
தமிழ் இனத்தின் சரித்திரத்தை விளக்கக்கூடிய சின்னங்களே அரிதாகக் காணப்படும் இன்றைய காலகட்டத்தில் , காணப்படும் ஒருசில சின்னங்களையாவது பேணிப்பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

கோப்பாய்க்கோட்டையின் இன்றைய நிலை பற்றி அண்மையில் முகநூலில் எழுதிய பதிவுக்கான இணைப்பு: https://www.facebook.com/GiritharanVN/posts/10157367484008372
 
முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffna  நூலினை வாசிக்க: Early Settlements in Jaffna: https://noolaham.net/project/18/1733/1733.pdf
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.