எண்பதுகளில் மார்க்சிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தபொழுது என் முன்னால் புதியதோர் உலகம் விரிந்தது. முதன் முதலாக மானுடரின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினையை மார்க்சிய சிந்தனைகளூடு நோக்க, அணுக முடிந்தது. மார்க்சிய நூல்களில் விவாதிக்கப்பட்டிருந்த பொருளியல்வாத, கருத்துமுதல்வாதத் தர்க்கங்கள் மேலும் சிந்தனையை விரிவு படுத்தின. இவ்விதமானதொரு சூழலில் அதுவரை அறிந்திருந்த என் அபிமானக் கவி பாரதியை அணுகியபோது என் கவனத்தை ஈர்த்த அவரது கவிதை 'நிற்பதுவே! நடப்பதுவே!' என்று ஆரம்பிக்கும் அவரது 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையே.
 
அக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தபோது அக்கவிதையில் பாரதி கருத்துமுதல்வாதமா? அல்லது பொருள்முதல்வாதமா ? எது உண்மை? என்பதைத் தர்க்கித்திருப்பது புரிந்தது. பாரதி கவிதையின் இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்கும் , பொருள்முதல்வாதத்துக்குமிடையில் ஒருவித சமரசத்தை ஏற்படுத்தி பொருளும் சக்தியும் ஒன்றே என்று முடிப்பதை உணர முடிந்தது. நவீன இயற்பியற் கோட்பாடுகளும் அதனைத்தானே கூறுகின்றன. ஐன்ஸ்டைனின் பொருளுக்கும் சக்திக்குமிடையிலான தொடர்பைப் பிரதிபலிக்கும் பிரபலமான சூத்திரமும் அதனைத்தானே கூறுகின்றது என்று தோன்றியது.
 
இந்நிலையில் அக்கருத்தை முன்வைத்து 'பாரதி பொருளியல்வாதியா? அல்லது கருத்துமுதல்வாதியா' என்றொரு கட்டுரையினை 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க ஆண்டிதழான 'நுட்பம்' சஞ்சிகைக்காக எழுதினேன். அப்பொழுது அச்சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்தவர் நண்பர் பிறேமச்சந்திரா.
 
பின்னர் பல வருடங்கள் கடந்து கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் அக்கட்டுரை என்னிடமில்லாததால் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் அதே கருத்தினை மையமாக வைத்துக் கட்டுரையொன்றினை எழுதினேன். அக்கட்டுரை பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாகின.
 
பாரதியின் இக்கவிதை பாரதியின் இருப்பு பற்றிய தேடலை வெளிப்படுத்தும் கவிதை. அவனது சிந்தனைத்தேடலும், அது பற்றிய தர்க்கமும், தெளிவும் இக்கவிதை முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
 
'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! ' என்னும் அக்கட்டுரையினை இங்கு அவரை நினைவு கூரும் முகமாகப் பதிவு செய்கின்றேன்.
 
பாரதி பற்றித் 'தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதியுள்ளேன். அவற்றில் சில வருமாறு:
 
1. பாரதியின் பக்திப்பாடல்களும் சமுதாயப்பற்றும் - வ.ந.கிரிதரன் -
2. பாரதியும் மனிதகுல விடுதலையும் - வ.ந.கிரிதரன் -
3. பாரதியின் அஞ்சா நெஞ்சு - வ.ந.கிரிதரன் -
4. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. - வ.ந.கிரிதரன் -
5. இன்று புதிதாய்ப்பிறந்தோம் பாரதியின் வழியொன்று. - வ.ந.கிரிதரன் -
6. பொதுவுடமை பற்றிய பாரதியின் பார்வை. - வ.ந.கிரிதரன் -
 


பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! - வ.ந.கிரிதரன் -
 
தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்.
 
"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்.."
 
'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?
 
"..விண்டுரைக்க அரிய அரியதாய் விரிந்த வானவெளியென நின்றனை. அண்ட கோடிகள் வானிலமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை. மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே! நினைக் காளியென்றேத்துவேன்.."
 
மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....
 
"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? பலதோற்ற மயக்கங்களோ? கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே! இளவெயிலே! மரச்செறிவே! நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதினால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்ற ஒரு நினைவும் காட்சியென்ற பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?.."
 
இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.
 
"..சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்..."
 
ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான். அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான். இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப் பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான். உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான். உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.
 
"..மாயை பொய்யென முற்றிலும் கண்டனன். மற்றுமிந்த பிரமத்தினியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன். தன்னுடை அறிவினுக்கு புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடை கொள்வதாம் தீய பக்தியியற்கை வாய்ந்திலேன். சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."
 
மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி, 'அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன் என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.
 
 
* 'பதிவுகள்' செப்டம்பர் 2003 இதழ் 45 [ 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' - 1981 ' இதழில் வெளியான எனது 'பாரதி கருத்துமுதல்வாதியா? அல்லது பொருள்முதல்வாதியா' என்னும் கட்டுரையின் இன்னுமொரு வடிவம். ]'
 
* பாரதியார் ஒவியம் விகடன் இதழிலொன்றில் வெளியானது. அதற்காக நன்றி விகடனுக்கு.

பாரதியாரின் 'உலகத்தை நோக்கி வினவுதல்'
 
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
 
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
 
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
[விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு
சேர்ப்பாரோ?
 
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
(காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.