'பெரிய இடத்துப் பெண்' ஆர்.ஆர்.பிக்சர்ஸின் வெற்றிப்படங்களிலொன்று. ஆர்.ஆர்.பிக்சர்ஸ் டி.ஆர்.ராஜகுமாரி தனது சகோதரர் ராமண்ணாவுடன் இணைந்து ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். குலேபகாவலி, பாசம் , பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம். இப்படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். கிராமத்தவனாக வரும் எம்ஜிஆருக்கு மச்சாள்மாருடன் இணைந்து பாடும் சுவையானதொரு பாடல் 'கட்டோடு குழலோடு ஆட' பாடல். எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. பாடல் வரிகள், இசை, நடிப்பு, ஒலிப்பதிவு எல்லாமே பிடித்திருக்கும் பாடல்களிலொன்று இப்பாடல். மச்சாள்மார்களாக மணிமாலா, ஜோதிலட்சுமி இருவரும் நடித்திருப்பார்கள். நடிகை ஜோதிலட்சுமியின் நடிப்பில் வெளியான முதற் திரைப்படம் 'பெரிய இடத்துப் பெண்' என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமி, மணிமாலா இருவரும் இப்பாடற் காட்சியில் மிகவும் சிறப்பாக ஆடி, நடித்திருப்பார்கள். இசை மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன். பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி. 'மாட்டுக்கார வேலன்', 'சகலகலா வல்லவன்' போன்ற பின்னாளில் வெளியான இரட்டை வேடப் படங்கள் பலவற்றுக்கும் தூண்டுகோலாகவிருந்த படம் 'பெரிய இடத்துப் பெண்'.

இப்பாடல் எனக்குப் பிடித்துப் போனதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஒரு முறை முகநூலில் இப்பாடலைக் கேட்டு இரசித்துக்கொண்டிருந்தேன். என் முகநூல் நண்பர்களிலொருவரான கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் நான் பதிவு செய்திருந்த இப்பாடலைக் கேட்டு இரசித்த பின்னர் முதன் முறையாக இப்பாடல் பற்றிய தனது கருத்துகளை அறியத்தந்திருந்தார். நான் ஆச்சரியமடைந்தேன். அன்று முதல் எப்பொழுது இப்பாடலைக் கேட்டாலும் எனக்கு அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவில் தோன்றுவார். அவர் இப்பாடல் பற்றிய கருத்துகள் நினைவுக்கு வரும். வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'பதிவுகள்' இணைய இதழ் மேல் பற்றும் , மதிப்பும் வைத்திருந்தார். இறுதிவரை 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தனது படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.

மீண்டுமொரு தடவை இப்பாடலைப் பகிர்ந்துகொள்வதுடன் அன்று இப்பாடல் பற்றி எனக்கும், வெ.சா அவர்களுக்குமிடையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தையும் இங்கு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்துகொள்கின்றேன்.

Venkat Swaminathan:
இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு, ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது. (January 25, 2013 at 11:50pm)

Giritharan Navaratnam:
வணக்கம் திரு வெ.சா. அவர்களே, உங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. பொதுவாக அறுபதுகளில் வெளியான எம்ஜிஆரின் படப்பாடல்கள் எனக்குப் பிடித்தவை. அத்துடன் எம்ஜிஆரின் ஆளுமையும், முக வசீகரமும் என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணம்: தமிழ் சினிமாவின் அறிமுகமே எம்ஜிஆர்/ஜெயலலிதா/சரோஜாதேவி திரைப்படங்கள் மூலம்தாம் கிடைத்தது. பால்ய காலத்து நிகழ்வுகள், விருப்பங்கள் எல்லாமே ஒவ்வொருவரது மனதிலும் , குறிப்பாக ஆழ் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவது வழக்கம். அந்த வகையில் எனக்கும் அன்றைய காலகட்டத்து எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள் பிடித்தவை. எம்ஜிஆரின் இறுதிக்காலகட்டத்துப் படப்பாடல்களை விட, அவரது கறுப்பு வெள்ளைப் படப்பாடல்களே பொதுவாக என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணங்கள்: இளமையான , அழகான, வசீகரம் மிக்க எம்ஜிஆர், அவருக்குப் பொருத்தமான டி.எம்.செளந்தரராஜனின் / பி.சுசீலாவின் அற்புதமான இளங்குரல் இனிமை, பாடலின் கருத்தாழமிக்க வரிகள். இவையெல்லாம் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்கும். முகநூலை நான் அதிகமாகப் பாவிப்பது எனக்குப் பிடித்த பதிவுகளை, பாடல்களை ஓரிடத்தில் சேர்த்து வைக்கும் சேமிப்புத் தளமாகவே. தேவையானபோது தேடி அலையத் தேவையில்லையே. அதனால்தான் அவ்வப்போது கேட்பதை, வாசிப்பதை இங்கு பதிவு செய்கின்றேன். இன்னுமொரு எனக்குப் பிடித்த பாடல் 'மானல்லவோ கண்கள் தந்தது'. (January 26, 2013 at 12:30am)

Venkat Swaminathan:
ஆச்சரியம். இந்நேரம் நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஒரு வேளை நீங்கள் இரவிலும் உறங்காது உழைப்பவரோ. இப்போதுதான் 'பதிவுகளு'க்கு செல்லப்பா பற்றிய நீண்ட கட்டுரையின் முதல் பகுதியை அனுப்பி அது "sending" என்றே சொல்லிக்கொண்டிருக்க, அனுப்பியாகட்டும் என்று காத்திருந்தேன். உடனுக்குடன் உங்கள் பதில். பழைய பாடல்கள் தான் எனக்கும் பிடிக்கும். ஐம்பதுகள் வரைப் பாடல்கள். அதன் பின் வெகு வெகு சிலதான். இன்னும் சிலவற்றை நான் தவற விட்டிருக்கக் கூடும். இப்படி உங்கள் பதிவு சிக்கியது போல, நான் அதன் பாதையில் தடுக்கி விழுந்தால் தான். தேடிச் செல்வது என்பது வருடத்துக்கு 200-300 படங்கள் எடுத்துத் தள்ளும் தமிழ் சினிமா காட்டுக்குள் நான் இந்த வயதில் புகுந்து தேடி எடுத்து வெளி வருதல் சாத்தியமில்லை. இப்படி எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தங்களூக்கு என் நன்றி. இப்படி எங்கோ மூலையில் இருக்கும் உங்களூடன் பேச, உறவாட வழிசெய்துகொடுத்திருக்கும் கம்ப்யூட்டருக்கும் யூ ட்யூபுக்கும் நன்றி. (January 26, 2013 at 12:44am)

பாடலைக் கேட்டு மகிழ: https://www.youtube.com/watch?v=7qv4wm0EN4k