அ.ந.கந்தசாமியின் 'நாயினும் கடையர்', 'காளிமுத்து வந்த கதை'  ஆகிய கதைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. 'நாயினும் கடையர்' வீரகேசரியிலும், 'காளிமுத்து வந்த கதை' தேசாபிமானியிலும் வெளிவந்ததாக அறிகின்றேன். உங்களுக்கு அவை பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள். இவற்றை வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இக்கதைகளை வாசித்தவர்கள் அவை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  இவை மலையகத்தமிழ் மக்களைப் பற்றியவை

அ.ந.கந்தசாமி மறைவதற்கு முன்னர் 'கழனி வெள்ளம்' என்னுமொரு நாவலையும் எழுதி  வைத்திருந்தார். அதுவும் மலையகத் தமிழ் மக்களைப் பற்றியது. அது எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது. அதனை அவர் 83 இனக்கலவரத்தில் இழந்து விட்டார். அவரும் அந்நாவல் பற்றிய கருத்துகள் எதனையும் பதிவு செய்திருக்காததால் அதன் கதைச்சுருக்கம் பற்றியும் அறிய முடியவில்லை. அது பற்றியும் அறிந்தவர்கள் தமது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அ.ந.க வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் ஸ்தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்’ என்று தனது ”ஈழத்துச் சிறுகதை மணிகள்’ நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன்.

இது பற்றிய அந்தனி ஜீவாவின் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்’ ”வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.” என்று பதிவு செய்யும்.

மேற்படி 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத் தொடரில் அந்தனி ஜீவா அ.ந.கந்தசாமியின் மலையகம் சார்ந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடுகையில் ' கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார்.' என்று குறிப்பிடுவார்.

ஆனால் இன்றுள்ள மலையகத் தமிழ் எழுத்தாளர்கள்  பலருக்கு இவையெல்லாம் தெரியவில்லை. அதனால் அவை பற்றி அவர்கள் தம் எழுத்துகளில் குறிப்பிடுவதில்லை. அந்தனி ஜீவா மட்டும் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றார். மிகவும் பயனுள்ள குறிப்புகள் அவை. அதற்காகத் தமிழ் இலக்கிய உலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.  அவர் ஒருவரே முதன் முதலாக அ.ந.க.வின் ஒட்டுமொத்த இலக்கிய, அரசியல் பங்களிப்பு  பற்றிய தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றார்.

அ.ந.க.வின் (கவீந்திரன் என்னும் புனைபெயரில் எழுதிய) தோட்டத் தொழிலாளர் பற்றிய 'பாரதி' இதழில் வெளிவந்த கவிதை கீழே:

தேயிலைத் தோட்டத்திலே

- அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -

1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! "நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு"மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்!

2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!

3.
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மணஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!

4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!

5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.