எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் எழுதியவர் அதை நிறுத்தி விட்டுத் தன் தாய்மொழியில் எழுத ஆரம்பித்தவர். காலனித்துவவாதிகளின் மொழிகளில் எழுதுவதில் காலனித்துவச் சிந்தனைகளும், அடையாளங்களும், மரபுக் கூறுகளும் உள்ளடங்கி இருக்கும் என்று நம்பியவர். காலனித்துவ ஆதிக்கம் காலனித்துவாதிகளின் மொழிகளை முக்கியப்படுத்துவதாகக் கருதினார். அதனால்தான் தாய்மொழிகளில் படைப்புகள் எழுதப்பட வேண்டும். அவை வேண்டுமானால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம் என்று கருதியவர்.
நாவல் ,நாடகம், கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. பேராசிரியரான இவர் வாழ்க்கை நிறைவானது. கொண்டாடப்பட வேண்டுயது.
கூகி வா தியாங்கோ நினைவாக அவரது நேர்காணலொன்றுக்கான யு டியூப் காணொளியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
Talk Africa: A Conversation with Ngugi Wa Thiong’o - https://www.youtube.com/watch?v=kao7D04M1sA
பிரவாதம்: எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்'
பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை ஆசிரியராகவும், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மெளனகுரு, செல்வி.திருச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய ஆசிரியர் குழுவைக்கொண்டதாகவும் வெளியான சஞ்சிகையே 'பிரவாதம்'. அரையாண்டுச் சஞ்சிகையான இதன் தொகுதி 3 ஜனவரி - ஜூன் 2003இல் வெளிவந்தது. பிரவாதம் சமூக, விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகை.
மேற்படி தொகுதி 3 கூகி வா தியாங்கோ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் என்று பெயரிட்டிருக்காவிட்டாலும் அவ்விதமே அவரைப்பற்றிய கட்டுரைகள், அவரது எழுத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. கூகி வா தியாங்கோ பற்றியும், அவரது காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பிலக்கியம் பற்றியும், நவீன காலனியாதிக்கம் எவ்விதம் ஆபிரிக்காவைக் கூறு போட்டுத் தன் நலன்களைப் பேணுகின்றது என்பது பற்றியும், காலனியாதிக்க ஆதிக்கத்தின் மொழிகள் எவ்விதம் அடிமைப்படுத்தப்படும் நாடுகளின் மீதான ஆதிக்கத்தில் பங்காற்றுகின்றன என்பது பற்றியும் நல்லதோர் அறிமுகத்தைத் தரும் சிறப்பிதழாக மேற்படி தொகுதி 3 இதழ் வெளிவந்துள்ளது.
இவ்விதழில் கலை, இலக்கியத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்' கட்டுரை முக்கியமான சிறப்புக் கட்டுரை. கூகி வா தியாங்கோ பற்றியும், ஆபிரிக்க இலக்கியம் பற்றியும், காலனித்துவ, நவீன காலனித்துவத்தின் ஆதிக்கம் பற்றியும், அவற்றின் மொழி எவ்விதம் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டப் பாவிக்கப்படுகின்றது என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இக்கட்டுரையையும், கூகி வா தியாங்கோவின் எழுத்துகளையும் உள்ளடக்கிய மேற்படி இதழை வாசிக்க - https://noolaham.net/project/81/8021/8021.pdf
இவரைப்பற்றிப் பதிவுகள் இணைய இதழில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஞா.டிலோசினி எழுதிய கட்டுரை
(பதிவுகள்.காம்) ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து கூகி வா தியாங்கோவின் ( Ngugi wa Thiong’o) சிந்தனைகள் - ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம் - கூகி வா தியாங்கோ கிழக்கு ஆபிரிக்காவில் கென்யாவில் தோன்றிய திறமையான, தரம்வாய்ந்த எழுத்தாளராகக் காணப்படுகிறார். பல பல்கலைக்கழகங்களில் கடமையாற்றிய இவர், ஒப்பிலக்கியம் மற்றும் அளிக்கைகள் தொடர்பான பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
தியாங்கோ நாவல், நாடகம், சிறுகட்டுரை முதலானவற்றையும் இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் எழுதியுள்ளார். 1977 இல் நாவல் எழுத ஆரம்பித்தார். தியாங்கோ சாதாரண மக்களைக் கருத்திற் கொண்டே தனது படைப்புக்களை எழுதினார். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது நாவல்களாகும்.
தியாங்கோவின் படைப்புக்கள் ஆபிரிக்க இலக்கியம், அரசியல், மற்றும் அடிமை வாழ்க்கை குறித்து எழுதப்பட்டவையாகும். ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற கூகி வா தியாங்கோவின் நூலை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து தியாங்கோவின் சிந்தனைகளை அறியமுடியும்.
காலனிய ஆதிக்கத்தில் இருந்து தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆபிரிக்கப் படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள் அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற தமது நூலில் ஆபிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளில் இருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்ச் செயற்பாடுகளை விபரித்துள்ளார்.
ஐரோப்பிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசரின் காலனியம், அமெரிக்க ஏகாதிபத்தியம், உள்நாட்டு நவகாலனிய ஆட்சி, அதிகாரம் ஆகியவை ஆபிரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆபிரிக்க மக்களின் மொழி, கலை மற்றும் பண்பாடு ஆகியன காலனிய ஆதிக்கத்தால், சீரழிக்கப்பட்டன.
இக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனைகளோடு போராட்டத்தை நடத்தியவர்களில் கூகி வா தியாங்கோ முக்கியமானவர். ஆபிரிக்க மொழி, அரங்கம், இலக்கியம் ஆகியவற்றைக் கைப்பற்றி அடையாளப்படுத்த வேண்டிய தேவை குறித்து தியாங்கோ விவாதித்தார்.
முழுமையாக வாசிக்க - https://www.geotamil.com/.../2021.../5810-ngugi-wa-thiongo