- ஜீவநதி சஞ்சிகையின் ஜூன் பதிப்பு  ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில்  வெளியாகியுள்ள   ''திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்'  நூல் பற்றிய சிந்தனைகள்!' ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை. -


'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் ஈழக்கவியின் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.  ஜீவநதி வெளியீடு. பேராசிரியரின் மொழியியல்ரீதியிலான  பங்களிப்பை ஆராயும் நூல். உண்மையில் பேராசிரியர் எம்,ஏ.நுஃமானின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் பலரும் அவரது கவிதைப் பங்களிப்பு, திறனாய்வுப் பங்களிப்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி எழுதுவார்கள். பேராசிரியர் நுஃமானும் அவ்விடயங்களிலேயே அதிகமான கட்டுரைகளைப் பொது வாசகர்களுக்காக எழுதுவார். ஆனால் உண்மையில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழியியல் அறிஞரும் ஆவார். மொழியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைகக்ழகத்தில் பல வருடங்கள் பணி  புரிந்தவர். ஆய்வரங்குகளில் மொழியியலில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இந்நிலையில் அவரது மொழியியற் சிந்தனைகள், ஆய்வுப் பங்களிப்புகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இக்கவனத்தைச் செலுத்துவதற்கான தூண்டலை ஈழக்கவியின் இந்நூல்  செய்திருக்கின்றது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்க நூலாக  இதனைக் கருதலாம்.

இந்நூல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பற்றிய  நல்லதோர் அறிமுகத்தையும்  , குறிப்பாக அவரது, குடும்பப் பின்னணி.  கல்வித் தகைமைகள் , இலக்கியப் பங்களிப்புகள் (திறனாய்வு உட்பட), கல்விப் பங்களிப்பு  ஆகியவற்றைச் சுருக்கமாக விபரிக்கும் . அதே சமயம் மொழியியல் அறிஞராக அவரது மொழியியல் துறைப்பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றது.

பேராசிரியர் நுஃமானின் மொழியியல் கல்வித்தகைமைகள், அது தொடர்பாக அவர் எழுதிய நூல்கள், ஆய்வரங்குகளில் சமர்ப்பித்த கட்டுரைகள் என்பவற்றை ஈழக்கவி இக்கட்டுரையில் ஆதாரங்களாகப் பாவித்திருக்கின்றார். பேராசிரியர் நுஃமானின் மொழியியற் பங்களிப்புகள் பற்றிய விபரங்களை அவரது ஆய்வரங்கப் பங்களிப்புகள் பற்றி எடுத்துரைக்கும் மாணவர்கள்  கூற்றுகள் வாயிலாகவும் அணுகியிருக்கின்றார்.

நவீன மொழியியற் கோட்பாடுகள் வளர்ச்சியுற்ற நிலையில் , அவை தமிழ் மொழியியல் துறையில் நன்கு உள்வாங்கப்படவில்லை யென்பது பேராசிரியரின் ஆதங்கம். அதற்காகவே அவர் நீண்ட காலமாக , நவீனச் சிந்தனைகளை உள் வாங்காமல் , கற்பிக்கப்பட்டுவரும் தமிழ் இலக்கணத்தில் அச்சிந்தனைகளை உள்வாங்கி 'அடிப்படைத்தமிழ் இலக்கணம்' நூலை எழுதியதாகக் குறிப்பிடுகின்றார். இதனைப் பேராசிரியர் மேற்படி நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.இதனை நூலாசிரியர் ஈழக்கவி இந்நூலில் சுட்டிக்காட்டுகின்றார்.  பேராசிரியர் நுஃமானின் முக்கிய  மொழியியல் துறைப்பங்களிப்புகளில் ஒன்றாக  இதனைக் கருதலாம். மேற்படி நூலுக்கான 'என்னுரை'யில் பேராசிரியர் நுஃமான் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"பாடசாலைகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இலக்கணம் பெரிதும் நன்னூலை அடிப்படையாகக் கொண்டே இன்றுவரை கற்பிக்கப்பட்டு வருகின்றது. நன்னூல் சுமார் எழுநூறு அல்லது எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் (கி. பி. 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டது. பண்டைக்கால மற்றும் இடைக்காலத் தமிழின் அமைப்பையே அது விளக்குகிறது. நன்னூலார் காலத் தமிழில் இருந்து இக்காலத் தமிழ் பெருமளவு மாற்றம் அடைந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியத் தமிழறிஞர்களின் தொடர்பினாலும், இந்த நூற்றாண்டில் நவீன மொழியியல் கோட்பாடுகளின் வளர்ச்சியினாலும் தமிழ் இலக்கணச் சிந்தனையிலும், இலக்கண ஆராய்ச்சியிலும் பெரிய முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலத்துள் தமிழ் இலக்கண மரபு பற்றியும், தமிழ் மொழியின் பண்டைக் கால, தற்கால இலக்கண அமைப்புப் பற்றியும் மொழியியல் நோக்கில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், நூல்களும் வெளி வந்துள்ளன. இவற்றின் பயன் எதுவும் பாடசாலை,கல்லூரி மாணவர்களையோ ஆசிரியர்களையோ இன்னும் சென்றடையவில்லை. தமிழ் கற்பித்தலும், தமிழ் மொழிப் பாடநூல்களும் இன்னும் பழைய இலக்கணச் சிந்தனை முறைகளையே முதன்மைப்படுத்துகின்றன. உதாரணமாக, மையீற்றுப் பண்புப் பெயர்ப்புணர்ச்சி விதிகளின்படி நன்னூல் என்பதை மாணவன் நன்மை + நூல் என்று பிரித்து எழுத வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். நல் + நூல் என எழுதுவது தவறு எனக் கருதுகிறோம். தற்காலத் தமிழின் ஒலியமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல், தனிக் குற்றெழுத்து அல்லாத ஏனைய எழுத்துகளின் பின்னே சொல்லின் இறுதியில் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம்' என்னும் வாய்ப்பாட்டையே இன்னும் சொல்லிக் கொடுக்கிறோம். இன்றையத் தமிழின் அமைப்புக்குப் பொருத்தமற்றது எனினும், நல்லன், கரியன் என்பன குறிப்புவினை முற்றுகள் என்றும், இவை குறிப்பாகக் காலம் காட்டுகின்றன என்றும் கற்பிக்கிறோம். பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயர் முதலியவற்றை, அவற்றின் தொடரியல் அம்சங்களைக் கருத்தில் கொள்ளாது சொல் நிலையிலேயே விளக்குகிறோம். இத்தகைய இலக்கண அம்சங்கள் தொடர்பாக இதுவரை நடைபெற்றுள்ள மொழியியல் ஆய்வுகள் பற்றி மொழிகற்பித்தல் துறையினர்க்கு எதுவும் தெரியாது. இந்நிலையில், இலக்கணம் கற்பித்தல் தொடர்ந்தும் பழைய தடத்திலேயே செல்வது தவிர்க்க முடியாதது."

இவ்விதம் பழைய தடத்தில், நவீன மொழியியல் சிந்தனைகளை உள் வாங்காமல் தமிழ் இலக்கணம் கற்பிப்பது மாற்றப்பட வேண்டுமென்று அவர் கருதுகின்றார். அதற்காகவே ,அவ்விதம் நவீன மொழியியல் சிந்தனைகளையும் உள்வாங்கி , மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் , 'அடிப்படைத்தமிழ் இலக்கணம்'  என்னும் நூலை அவர் எழுதினார். இவ்வகையில் எழுதப்பட்ட முதலாவது தமிழ் இலக்கண நூல் என்றும் அவர் மேற்படி நூலுக்கான 'என்னுரை'யில் குறிப்பிடுகின்றார். 

"பாடசாலைகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இலக்கணம் பெரிதும் நன்னூலை அடிப்படையாகக் கொண்டே இன்றுவரை கற்பிக்கப்பட்டு வருகின்றது. நன்னூல் சுமார் எழுநூறு அல்லது எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் (கி. பி. 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டது. பண்டைக்கால மற்றும் இடைக்காலத் தமிழின் அமைப்பையே அது விளக்குகிறது. நன்னூலார் காலத் தமிழில் இருந்து இக்காலத் தமிழ் பெருமளவு மாற்றம் அடைந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியத் தமிழறிஞர்களின் தொடர்பினாலும், இந்த நூற்றாண்டில் நவீன மொழியியல் கோட்பாடுகளின் வளர்ச்சியினாலும் தமிழ் இலக்கணச் சிந்தனையிலும், இலக்கண ஆராய்ச்சியிலும் பெரிய முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலத்துள் தமிழ் இலக்கண மரபு பற்றியும், தமிழ் மொழியின் பண்டைக் கால, தற்கால இலக்கண அமைப்புப் பற்றியும் மொழியியல் நோக்கில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், நூல்களும் வெளி வந்துள்ளன. இவற்றின் பயன் எதுவும் பாடசாலை,கல்லூரி மாணவர்களையோ ஆசிரியர்களையோ இன்னும் சென்றடையவில்லை. தமிழ் கற்பித்தலும், தமிழ் மொழிப் பாடநூல்களும் இன்னும் பழைய இலக்கணச் சிந்தனை முறைகளையே முதன்மைப்படுத்துகின்றன."

இவ்விதம் 'என்னுரை'யில் குறிப்பிடும் பேராசிரியர்  'தமிழ் இலக்கண மரபு பெரிதும் சொல்லிலக்கண மரபேயாகும்.  சொற்களுக்கிடையில் உள்ள  வாக்கியங்கள் உறவுகள் பற்றிய தகவல்கள் தமிழ் இலக்கண நூல்களில் அரிதாகவே காணப்படுகின்றன.  வாக்கிய அம்சங்களும் சொல்லிலக்கண அடிப்படையிலேயே விளக்கப்படுகின்றன.  இதனால், தமிழ் இலக்கணம் கற்கும் மாணவனுக்குச் சொற்களுக்கிடையே உள்ள வாக்கிய உறவுகள் பற்றிய தெளிவு கிடைப்பதில்லை. மொழிப் பயன்பாட்டில் வாக்கியம் ஒரு அடிப்படை அலகாகும்ச் செம்மையாக வாக்கியங்களைப் பயன்படுத்த முடியாவிட்டால் மொழிமூலமான தொடர்பாடல் ஆற்றலுடன் அமையாது. வாக்கிய அமைப்புப் பற்றிய பயிற்சி இன்மையால் நன்கு சொல்லிலக்கணம் கூறப் பயின்ற மாணவர்கள் கூடப் பிழையின்றி வாக்கியம் எழுத முடியாதவர்களாக உள்ளனர்.'  என்பதையும் சுட்டிக்காட்டி, இக்குறைபாட்டினைத் தீர்க்கும் முகமாகவே தான் நவீன மொழியியலாளர்கள் கூறும் தமிழ் வாக்கியவியல் (Syntax)  சிந்தனைகளையும் உள்வாங்கி 'தமிழ் அடிப்படை இலக்கணம்' நூலைப் படைத்ததாகக் குறிப்பிடுகின்றார்.

அடிப்படைத் தமிழ் இலக்கணம், "ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் - ஒரு மொழியியல் அணுகுமுறை' (2002), 'மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் சொற்றொகை ஆய்வு' , 1982 ( யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நுஃமான் முதுகலைமாணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பித்த ஆய்வு), 'தமிழ் சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு' , 1984 (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப்பட்டத்துக்ககாப் பேராசிரியர் நுஃமான் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை), 'மொழியும் இலக்கியமும்' (2007) - ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள், தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம், ஆக்க இலக்கியக் கோட்பாடுகள், 'பாரதியின் மொழிச்சிந்தனைகள்  ஒரு மொழியியல் நோக்கு ' (1984), மார்க்சியமும் ம், இலக்கியத்திறனாய்வும் (1987) மற்றும் திறனாய்வுக் கட்டுரைகள் (1985)  இவை பற்றியெல்லாம் கவனத்திலெடுத்து, இவற்றின் உள்ளடக்கங்களூடு, தன் கருத்துகளை முன் வைக்கின்றார். 

பேராசிரியரின் 'மொழியும் இலக்கியமும்' நூல் பற்றிக்குறிப்பிடுகையில் ஈழக்கவி  "எம்.ஏ.நுஃமான் அவர்ஃகளது மொழி பெயர்ப்புப் படைப்புகளும், மொழிபெயர்ப்பு சம்பந்தமான ஆய்வுகளும் நேர்த்தியாகவும், கனதியாகவும் அமையக் காரணம் அவர் மொழியியல் நுட்பங்களை பிரக்ஞைபூர்வமாய் அறிந்திருப்பதே என்பது வெள்ளிடைமலை. "  என்று கூறுவார். 

'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' நூல்  பற்றிக் குறிப்பிடுகையில் "தமிழ் இலக்கணம் தொடர்ச்சியாக வெறும் நெட்டுருப்பாடமாகவே கொள்ளப்பட்டு வருகிறது.  மொழியியல் அறிஞரான நுஃமான் , இதற்கு எதிராக எழுதியும், கற்பித்தும், இலக்கண நூல்களை ஆக்கியும் வருகின்றார்.  மொழியியல் அடிப்படையில் தமிழ் இலக்கணத்தை உருவாக்குவது பற்றிய பல ஆய்வுகள் 'ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் - ஒரு மொழியின் அணுகுமுறை' என்ற அவரது நூலில் காணப்படுகின்றன." என்றும் ,   'மொழியியல் சிந்தனைகளைத் தழுவி அமைந்த முதல் பாடலூலாக இது அமைந்துள்ளது.... மரபு வழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியல் கருத்துகளையும் இணைத்து, தற்காலத்தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை மிக எளிமையாக விளக்க இந்நூல் முயல்கிறது. கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு மொழியியலாளர்கள் தமிழ் மொழியின் இலக்கண அமைப்புப் பற்றி ஆராய்ந்து கண்ட  முடிவுகள் பலவற்றை இந்நூல் ஆதாரமாகக்கொண்டுள்ளது. '  என்றும் குறிப்பிடுவார்.

இதிலுள்ள மொழிபெயர்ப்பு பற்றிய இரண்டு ஆய்வுக்கட்டுரைகள் -  'ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள்', 'தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம்'.  இவை பற்றி ஈழக்கவி விரிவாகவே அவதானித்திருக்கின்றார். நுஃமானின் மொழிபெயர்ப்புப் பற்றிய சிந்தனைகளை  மேற்படி கட்டுரைகளிலிருந்து எடுத்துக்காட்டித் தன் கருத்துகளை  முன் வைக்கின்றார்.  இவற்றின் அடிப்படையில் வரும் முடிவு:

"எம்.ஏ.நுஃமான் அவர்ஃகளது மொழி பெயர்ப்புப் படைப்புகளும், மொழிபெயர்ப்பு சம்பந்தமான ஆய்வுகளும் நேர்த்தியாகவும், கனதியாகவும் அமையக் காரணம் அவர் மொழியியல் நுட்பங்களை பிரக்ஞைபூர்வமாய் அறிந்திருப்பதே என்பது வெள்ளிடைமலை. " (பக்கம் 25) 

'பாரதியின் மொழிச்சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு' பற்றிக்குறிப்பிடுகையில்  'இந்நூல் பாரதி ஆய்வாளர்களால் இதுவரை பார்க்கப்படாத பாரதியின் ஓர் அம்சத்தை ஓரளவு விரிவாக ஆராய்கின்றது.  பாரதியின் மொழி உணர்வு, பாரதியும் தமிழ் இலக்கணமும், மொழி மாற்றமும் பாரதியும், மொழி வளர்ச்சியும் பாரதியும், இந்தியாவுக்குப் பொதுப்பாசை ஆகிய ஐந்து தலைப்புகளில் பாரதியின் மொழிச்சிந்தனைகளின் பலத்தையும் பலவீனத்தையும் மொழியியல் விஞ்ஞான நோக்கு நிலை நின்று இந்நூல் பரிசீலனை செய்கின்றது.  அவ்வகையில் 'பாரதி இயலு'க்கு இது ஒரு புதிய பங்களிப்பாகும்.' என்பார். 

இவ்விதமாகப் பேராசிரியர் நுஃமானின் மொழியியல் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் இந்நூலில் பேராசிரியரின் 'மார்க்சியமும் , இலக்கியத்திறனாய்வும்' (அன்னம் வெளியீடாக 1987இல் வெளியான நூல்) நூல் பற்றி விரிவான விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றார். இது ஒரு முக்கியமான விமர்சன நோக்கு. இதில் பேராசிரியர் நுஃமான் மார்க்சியவாதியா, நடுநிலையாளரா என்பது பற்றியெல்லாம் தன் பார்வையைத் திருப்பியிருக்கின்றார் ஈழக்கவி. ஆனால் இப்பகுதி 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் நூலின் தலைப்புக்கு அப்பால் செல்கிறது என்பதையும் கூறத்தான் வேண்டும். மேற்படி பேராசிரியரின் 'மார்க்சியமும் ,இலக்கியத்திறனாய்வும்' நூலிலுள்ள கட்டுரைகள் எவ்விதம் பேராசிரியரின் மொழியியற் சிந்தனைகளைப் பிரதிபலிக்கின்றன என்னும் நோக்கில் இந்நூலை ஈழக்கவி அணுகியிருந்தாரானால் அது அவரது இச்சிறு நூலின் கனத்தை அதிகரிப்பதாக அமைந்திருக்கும். இருந்தாலும் பேராசிரியரின் மார்க்சிய நோக்கு, சிந்தனைகளைப் பற்றிய அறிமுகத்தைத்தரும் பகுதியாகவே ஈழக்கவி இந்நூலில் இப்பகுதியைச் சேர்த்திருப்பதாகக்  கருத முடிகின்றது. 

பகுதி எட்டு மொழியியல் சிந்தனைகள் பற்றிய சிறு அறிமுகத்தைத் தருகின்றது. நூலின் தலைப்பு பேராசிரியரின் மொழியியல் சிந்தனைகளைப் பற்றியது என்பதால், இப்பகுதியை நூலின் ஆரம்பத்தில் உள்ளடக்கி, அதன் பின் பேராசிரியர் நுஃமானின் குடும்ப, கல்விப்பின்னணி, அவரது மொழியியற் சிந்தனைகள், அவற்றைப் பிரதிபலிக்கும் அவரது எழுத்துகள், அவரது மொழியியல் பட்டறைகள், கல்வித்துறைப்பங்களிப்புகள் என்னும் பிரிவுகளில் , நூலின் அமைப்பிருந்திருந்தால் , அது வாசிப்பவர்கள்  பேராசிரியர் நுஃமானின் மொழியியற் சிந்தனைகள், எழுத்துகள் மீதான வாசிப்பினை இன்னும் இலகுவாக்கியிருக்கும் என்றோர் எண்ணமும் , இதனை வாசிக்கையில் தோன்றுகின்றது.

இவ்விதம் பேராசிரியர் நுஃமானின் எழுத்துகளை மொழியியல் சிந்தனைகள் அடிப்படையில் அணுகி  ஈழக்கவி வழங்கியிருக்கும்  'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் இந்நூலின் முக்கியத்துவம் நூலாசிரியர் ஈழக்கவியின்  பேராசிரியர் நுஃமானின் மொழியியற் பங்களிப்புகள் மீது செலுத்தியிருக்கும் கவனமெனக் கொள்ளலாம்.  இந்நோக்கில் பேராசிரியர் நுஃமானின் மொழியியற் பங்களிப்புகள் பற்றிய திசையில் மேலும் தீவிர, விரிவான ஆய்வுகளை இந்நூல் வேண்டி நிற்கிறது.  நூலின் இறுதியில்  'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுடைய ஆக்கங்கள் அனைத்திலும் மொழியியல் நுட்பங்கள் இழையோடி இருப்பதை அவதானிக்கலாம்.  அதனால்தான் அவரது சிருஷ்டிகள் அனைத்தும் நேர்த்தியும் , மொழித்தெளிவும் , கருத்தாழமும் மிக்கதாக மினுக்கமுறுகின்றன.'  என்று ஈழக்கவி வந்தடைந்திருப்பது  சரியானதொரு  புரிதல். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.