எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல இலங்கையிலிருந்து  வெளியான சிறந்த தமிழ்ச் சிறுகதைகளிலும் ஒன்று என்று கூறலாம். இந்தச் சிறுகதை இலங்கையின் போர்ச்சூழலின் முக்கிய காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் அதே சமயம் ,  போர்ச்சூழலில் குடும்பங்களின் அலைதல்கள், அவை ஏற்படுத்திய மன உளைச்சல்கள், அமைப்பையே மாற்றிவிடும் உத்வேகத்துடன் எழுந்த இளையவர்கள்தம் கனவுகளின் சிதைவுகள், காரணமான அவர்களுக்கிடையிலான உள் முரண்பாடுகள்,  நண்பர்களின்  இழப்புகள், பிரிதல்கள்  என்பவற்றையெல்லாம் இந்த ஒரு சிறுகதை எடுத்தியம்புகின்றது.

ஒரு மழையிரவில்  அவனுக்கு மிகவும் பிடித்த இயற்கை நிகழ்வான மழைக்காட்சியில் மனது மூழ்கிக்கிடக்கும் கதையின் நாயகனுக்கு அம்மழைப்பொழுது அவன் வாழ்வில் அவன் எதிர்கொண்ட மூன்று மழை இரவுகளை  நினைவுக்குக் கொண்டு  வருகின்றது. அவற்றை அவன் விபரிப்பதுதான் கதையாக விரிகிறது. 

முதல் மழை இரவு இயற்கை நிகழ்வின் அத்துமீறல்.  இயற்கை அழகின் பின் மறைந்திருக்கும்  ஆபத்தை எடுத்துக்காட்டும்,  இயற்கையின் கோரத்தாண்டவத்தை விபரிக்கும் இரவு மழை அது.  இரண்டாவது மழை இரவு  இலங்கை அரச விமானப்படையினரின் குண்டு வீச்சையும், பதுங்கு குழிகளுக்குள் அடைக்கலம் நாடிய மக்களின் நிலையையும், பரிதவிப்பையும் விபரித்தால்  அடுத்த மூன்றாவது மழை இரவு அமைதி காக்க வந்த அமைதிப் படை அமைதி கொல்லும் படையாகி புரிந்த அடக்குமுறைச் சூழலை  விபரிக்கும். 

மழைக்காட்சி எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்த இயற்கை நிகவுகளில் ஒன்று. குறிப்ப்பகா இரவு மழை எனக்கும் மிகவும் பிடித்த இயற்கை நிகழ்வு. இரவு மழையை, இருண்டு கிடக்கும் இரவு வானை இரசித்தபடி படுத்துக்கிடப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.  இக்கதை நாயகனும் அத்தகைய ஒருவன் என்பதை  மழையுடனான தன் அனுபவத்தை , உணர்வுகளை அவன் விபரிப்பதிலிருந்து உணர முடிகின்றது. அதனால் அவனோடு இலகுவாக மனம் ஒன்றிடவும்  முடிகிறது. 

வாசிக்கும் எவருக்கும் தாம்  இரசித்த இரவு மழையின் ஞாபகங்கள் தோன்ற ஆரம்பித்து விடும் வகையில் கதையின் இரவு மழை அனுபவம் பற்றிய ஆரம்பம் அமைதிருக்கின்றது. எஸ்.கே.வியின் மொழி மண்வாசனை மிக்கது. அது இக்கதையின் இன்னுமொரு முக்கிய அம்சம் .

இவ்விதம் நாயகனான இளைஞனின் மழையுடனான ஈடுபாட்டை அவனுடன் சேர்ந்து இரசிக்கத்தொடங்குகையில் அவன் தன் மறக்க முடியாத மூன்று மழைக்கால இரவுகளை நினைவு கூரத்தொடங்குகின்றான்.  அவன் நினைவு கூர்ந்து முடிக்கையில் நாமும் அவனுடன் இணைந்து அவனடைந்த துயர மழையில் முற்றாக நனைத்து விடுகின்றோம்.  அவன் வாழ்வில் கடந்து போன முதல் மூன்று மழை இரவுகளை நினைவு கூர வைக்கும் இந்த மழைக்கால இரவு இனிமேல் எம் வாழ்வில் மறக்க முடியாத நான்காவது மழைக்கால இரவாகி விடுகின்றது. 

சரிநிகர் சஞ்சிகையின் ஜனவரி 9 - 22, 1997  பதிப்பில் வெளியான கதையை வாசிக்க - https://noolaham.net/project/57/5668/5668.pdf