பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று, கிறித்துவம் நமக்கு போதிக்கிறது. இங்கே, பரிசுத்த ஆவி என்பது, இறைத்தன்மை கொண்ட, ஒற்றை ஆத்துமாவைக் குறிக்கிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று, இந்துமதத்தின் அத்வைதம், நமக்கு போதிக்கிறது. இந்துமதத்தின் இன்னொரு நிலையான, த்வைதம், பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்று நமக்கு போதிக்கிறது. ஆக, இந்து மதம் சொல்லும் மனிதனின் ஜீவாத்மாவும், ஒரு ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. மனிதனின் படைப்பைக் களிமண்ணில் துவக்கிய இறைவன், பின்னர், அவனது சந்ததிகளை, நீரின் சத்திலிருந்து உருவாக்கி, பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான் என்று, இசுலாம் நமக்கு போதிக்கிறது. இங்கே, இசுலாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தை, ஆத்துமாவைக் குறிக்கிறது. ஆக, இந்த மதத்தில் சொல்லப்படும் ஆத்துமாவும், ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. இப்படி, இன்று உலகில், பெரு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் மதங்கள், ஆத்துமாவைப் பற்றி, இரண்டு விசயங்களை, நமக்குப் பொதுவாய்ச் சொல்லுகின்றன.

1.       ஒரு மனிதனுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது.

2.       ஆத்துமா என்பது, மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது. (சில மதங்கள், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆத்துமா இருப்பது போலப் பேசினாலும், ஆறறிவிற்குக் கீழே உள்ள உயிர்களின் ஆத்துமாக்கள் குறித்து, அவை அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.)

அப்படியென்றால், இந்தக் கட்டுரை சொல்லப்போகும் இரட்டை ஆத்துமாக்கள் யார்? சற்று விரிவாக இங்கே பார்ப்போம். அதற்கு முன்னர், நான் கண்ட மற்றும் படித்த சில காட்சிகளையும், அதன் மூலம், எனது சிந்தனையில் எழுந்த சில கேள்விகளையும், உங்கள் பார்வைக்கு, முதலில் வைக்கிறேன்.

நான், திருச்சிராப்பள்ளி செல்லும் போதெல்லாம், சமயபுரம் மாரியம்மனைத் தரிசிப்பது வழக்கம். இந்த முறையும், நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து, சமயபுரம் பயணமானேன். வழியில், ஒரு சிக்னல் வந்தவுடன், ஆட்டோ ஓட்டுனர், தனது வண்டியை நிறுத்தினார். அவரது ஆட்டோ வண்டியைப் போலவே, நிறைய வண்டிகள், பச்சை விளக்கு எரிவதை நோக்கி, காத்துகொண்டு இருந்தபோது, திடீரென இரண்டு திருநங்கைகள், அங்கே வந்து, தங்கள் கைகளை ஏந்தினர். சிக்னலுக்குக் காத்துக்கொண்டு இருந்த, ஒவ்வொரு வண்டி ஓட்டுனரிடம், தங்கள் கைகளை ஏந்திப் பணம் வசூல் செய்தனர். நான் ஏறி வந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அந்தத் திருநங்கைகள் வந்த போது, எதுவும் பேசாது, அந்தத் திருநங்கைகளுக்குப் பணம் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர், அதன் பின், தானாகவே, அவரது தலையைக் குனிந்து காட்ட, பணம் பெற்றுக்கொண்ட அந்தத் திருநங்கைகள், அந்த ஆட்டோ ஓட்டுனரின், தலையை ஆசிர்வதித்து, பின் அடுத்த வண்டியை நோக்கி நகர்ந்தனர். பணம் கொடுத்த அந்த ஆட்டோ ஓட்டுனர், தனது தலையைத் திருப்பி என்னிடம் சொன்னார். “இந்தத் திருநங்கைகளுக்குன்னு ஒரு இறைச்சக்தி இருக்குது சார். இவங்க ஆசிர்வாதம், நமக்கு ரொம்ப நல்லது சார்” என்றார். எனக்குள் ஆச்சரியம் கலந்த சிந்தனை. “திருநங்கைகளுக்கென ஒரு இறைச்சக்தி இருக்கிறதா? அப்படி இருக்கிறதென்றால். பின் ஏன், ஆப்ரகாம் சார்ந்த பெரு மதங்கள், இவர்களின் இறைச்சக்தியை ஏற்றுக்கொள்ளவில்லை? உலக வரலாற்றில், இந்தத் திருநங்கையரின் இறைச்சக்தி, எங்காவது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனவா? இப்படியாக, எனது முதல் கேள்வி, உங்கள் பார்வைக்கு.

நான் படிக்க நேர்ந்த இரண்டாவது செய்தி. 1954-இல் பிறந்த, திரு பீட்டர் ஜேம்ஸ் ஸ்டோன், இங்கிலாந்தின், ஆங்கிலிகன் கிறித்துவத் திருச்சபையில், 1979-இல், போதகர் ஆனார்,. ஆங்கிலிக்கன் வழக்கப்படி, திருச்சபையில் பணி புரியும் போதகர் விரும்பினால், திருமணமும் செய்து கொள்ளலாம். கிறித்தவப் போதகர் ஆவதற்கு முன்பே, மார்கரெட் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பன் ஆனார், போதகர் திரு பீட்டர் ஜேம்ஸ் ஸ்டோன். தான் மத போதகர் ஆன பின்னர், 1983-இல், தான் முதலில் மணந்து கொண்ட, மார்கரட்டை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் போதகர் ஜேம்ஸ். பின்னர், அந்தப் பெண்ணையும், விவாகரத்து செய்தார் போதகர் திரு பீட்டர் ஜேம்ஸ் ஸ்டோன். இத்தோடு, அவர் நிறுத்தவில்லை. 2000-இல், அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு, ஆணில் இருந்து பெண்ணாக மாறினார், போதகர்  திரு பீட்டர் ஜேம்ஸ் ஸ்டோன். அத்தோடு, தனது பெயரையும், திருமதி கரோல் ஆன் ஸ்டோன் என்ற பெண் பெயருக்கு மாற்றிக்கொண்டார். ஆணில் இருந்து பெண்ணாக மாறிய திரு பீட்டர், திருமதி கரோலாய், மறுபடியும் மத போதகி ஆகப் பணிசெய்ய, ஆங்கலிக்கன் திருச்சபைக்குள் நுழைந்தார். சிலர், அந்தத் திருநங்கை போதகரை எதிர்த்த போதும், பெரும்பான்மையான திருச்சபை அங்கத்தினர், அவரை போதகியாக ஏற்றுகொண்டதால், அவர் சாகும்வரை, ஒரு வெற்றிகரமான கிறித்துவ மத போதகியாக இருந்து, 2014-இல், ,இறைவனடி சேர்ந்தார் என்று, செய்திகள் நமக்குக் கூறுகிறது.

இப்போது எனது சிந்தனையில் உதித்த கேள்விகள். திருநங்கையரை, பாவிகள் என, இறைவன் நினைத்து இருந்தால், பின் எப்படி, ஒரு பெண்ணின் உணர்வுகளை, 22 வருடங்களாக தனது மனதுக்குள் மறைத்து வைத்து இருந்த ஆண் ஒருவரை, போதகராகப் பணி செய்ய, இறைவன் அனுமதித்து இருப்பார்? அத்தோடு, திருநங்கை ஆன பிறகும், அதே போதகரை, எப்படி, 14 வருடங்கள், போதகியாக இருக்க, இறைவன் அனுமதித்தார்? கிறித்து பிறப்பதற்கு முன்னர், திருநங்கை போதகர்கள், உலகில் இருந்தனரா? அவர்களை கிறித்துவம் என்ன செய்தது? இந்த, எனது இரண்டாவது கேள்வி, உங்கள் பார்வைக்கு.

மூன்றாவது காட்சி. உலகின் பல வளர்ந்த மதங்களில், நாம் திருநங்கை தெய்வங்களைப் பார்க்கிறோம். ஆனாலும், உலக அளவில், திருநங்கைகளின் சமூக அங்கீகரிப்பு என்பது, இன்னும் குறைவான அளவிலேயே இருந்து வருகிறது. அப்படி இருக்க, எனது சிந்தனையில் தோன்றிய கேள்வி இதுதான். ஆண் இனத்தையும், பெண் இனத்தையும் பெருவாரியாகக் கொண்ட இந்த உலகத்து சமூகம், திருநங்கைகளை, இன்றளவும், மட்டப்படுத்திப் பேசும் இந்த சமூகம், எந்த நாளில் இருந்து, அர்த்தநாரி தெய்வங்களை, அங்கீகரிக்கத் தொடங்கியது? அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? இது எனது மூன்றாவது கேள்வி. உங்கள் பார்வைக்கு.

நான் மேலே சொன்ன, மூன்று கேள்விகளுக்கும் விடை தேட, இந்த எனது கட்டுரை முயல்கிறது. முதலில், மதங்கள் தோன்றிய விதம், அதன் வளர்ச்சி போன்ற எனது பார்வையை, இங்கே பார்ப்போம். இது எனது பார்வை.

பூமியில் உயிர்கள் தோன்றியது குறித்தும், பரிணாம வளர்ச்சியால், மனிதன் தோன்றியது குறித்தும், எண்ணற்ற கருத்துக்கள், நம்மிடம் இருக்கின்றன. நான் அவைகளுக்குள் போக விரும்பவில்லை. மாறாய், மன வளர்ச்சி அடைந்த, ஆதி மனிதர்களில் இருந்து, என் வார்த்தைகளை ஆரம்பிக்கிறேன். ஆதி மனிதன், எப்போதும் மகிழ்ச்சியுடன்தான் இருந்தான். இருப்பினும், அவனுக்குள் ஒரு பயம், அவன் கூடவே பயணித்தது. அதற்குக் காரணம், அவனைச் சூழ்ந்து இருந்த இயற்கைதான். நாளெல்லாம், பகலினை உருவாக்கி, வெளிச்சத்தைக் கொடுத்த சூரியனால், மகிழ்ந்து போன மனிதன், அதே சூரியன் இரவில் மறைந்து, இருளைக் கொடுத்தது கண்டு, அவனுக்கு பயம் வந்தது. மழையில் நனைந்த மரங்கள், பூக்களைக் கொடுத்து, காய்களைக் கொடுத்து, கனிகளைக் கொடுத்தபோது, மகிழ்ந்து போன மனிதன், அதே மழை, புயலோடு சேர்ந்து, மரங்களை எல்லாம், வேரோடு சாய்த்தது கண்டு, அவனுக்கு பயம் வந்தது. நோய் நொடிகள் எதுவும் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்த தனது சொந்தங்களோடு, கூடிக் குலாவி மகிழ்ந்த மனிதன், அதே சொந்தங்கள், திடீர் திடீர் என, கொள்ளை நோய்களுக்குப் பலியானது கண்டு, அவனுக்கு பயம் வந்தது. இப்படி, தனக்கு சந்தோசத்தையும், பயத்தையும், மாறி மாறிக் கொடுக்கும், ஏதோ ஒரு சக்தி தன்னைச் சுற்றி இருக்கிறது என மனிதன் நம்பியபோது, அந்த மனிதனின் நம்பிக்கை, கடவுளாக(ஆவிகளாக) மாறியது. அந்தக் கடவுளின்(ஆவிகளின்) விருப்பத்தை அறிந்து, அதற்கேற்ப நாம் நடந்து கொண்டால், நம் பயம் மறைய, கடவுள்(ஆவிகள்) உதவி செய்வார் என, மனிதன் நம்பினான். ஆனால், அந்தக் கடவுளோடு பேச, அந்தக் கடவுளின் விருப்பத்தை அறிந்துகொள்ள, நம்மில் யாருக்குத் திறமை இருக்கிறது என்று மனிதன் சிந்தித்தபோது, அந்த மனிதர்களில் சிலர், மந்திரவாதிகள் ஆனார்கள். கடவுளோடு பேசும் அந்த மந்திரவாதிகள், மனிதர்களுக்குச் சொன்ன போதனைகளின் மூலம், அனிமிசம் என்ற மதம், முதன் முதலாய், உலகில் பிறந்தது. கிறித்துவ மதம், இசுலாம் மதம், இந்து மதம் போன்ற மதங்களுக்கு எல்லாம் முன்னால், முதன் முதலில் உலகில் தோன்றிய மதம், அனிமிசம் மதமே. அனிமிசம் மதத்தின் கொள்கைகளில் ஒன்று, “ஆத்மா என்பது, உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் இருக்கிறது. உயிரற்றவைகளிடமும் இருக்கிறது”. அதாவது, ஆத்மா என்பது, மனிதனிலும் இருக்கும், செடியிலும் இருக்கும், தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும். பின்னால் தோன்றிய, கிறித்துவம், இசுலாம் போன்ற கட்டுக்கோப்பான மதங்கள், அனிமிச மதத்தின், இந்தக் கொள்கையை எதிர்த்தன.

அனிமிச மதத்தின் கோட்பாடுகள், இத்தோடு இன்று விடவில்லை. கடவுளோடு(ஆவிகளோடு) பேசும், அந்த மந்திரவாதிகள் எத்தகைய தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், அனிமிசம் நிர்ணயிக்கிறது. இங்கேதான், நாம் கட்டுரையில் பேசப்போகும் இரட்டை ஆத்துமாக்கள் வருகிறார்கள். உயிர்களுக்கும், உயிரற்ற பொருட்களுக்கும், ஆத்துமா இருப்பதாகச் சொன்ன அனிமிசம் மதம், அந்த ஒவ்வொரு உயிருக்கும் அல்லது ஒவ்வொரு உயிரற்ற பொருளுக்கும், ஒரு ஆத்துமா இருப்பதாகச் சொன்னது. ஆக, ஆணுக்கு ஒரு ஆத்துமா. பெண்ணுக்கு ஒரு ஆத்துமா, நரிக்கு ஒரு ஆத்துமா. பரிக்கு ஒரு ஆத்துமா. மரத்துக்கு ஒரு ஆத்துமா. செடிக்கு ஒரு ஆத்துமா. கல்லுக்கு ஒரு ஆத்துமா. மண்ணுக்கு ஒரு ஆத்துமா.

ஆனால், அதே அனிமிச மதம், பெண்தன்மை கொண்ட ஆண் மற்றும் ஆண்தன்மை கொண்ட பெண் ஆகிய இவர்களுக்கு மட்டும் இரண்டு ஆத்துமாக்கள் இருப்பதாக நம்பியது. ஆக, திருநங்கையும், திருநம்பியும், இரட்டை ஆத்துமாக்கள் கொண்ட உயர்நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். இந்த நம்பிக்கையால், திருநங்கையும், திருநம்பியும், கடவுளோடு(ஆவியோடு) பேசும், மந்திரவாதி நிலைக்கு, தகுதியானவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டார்கள். அனிமிசம் மதம் இருந்த காலங்களில், ஒரு ஆண் மந்திரவாதிக்குக் கொடுக்கபட்ட முக்கியத்துவத்தை விட, ஒரு பெண் மந்திரவாதிக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையை விட, ஒரு திருநம்பி அல்லது திருநங்கை மந்திரவாதிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், சற்றுக் கூடுதலாக இருந்தது என்று, பல ஆராய்ச்சிகள் நமக்குச் சொல்லுகின்றன. சரி, உலகம் முழுவதும், இந்த இரட்டை ஆத்துமாக்கள் இருந்தார்களா என்பது குறித்து, இனி நாம் பேசுவோம்.

தமிழர் பண்பாட்டில், நாம் ஐவகை நிலங்களைப் பார்க்கிறோம். ஆதி மதம் ஆன, அனிமிசம் மதம் பரவி இருந்த இடங்களை, நாம் மூன்றாகப் பிரிக்கலாம்.

1.       கடலாடிகள் (நெய்தல்). கடலை நம்பி வாழ்ந்த ஆதி மனிதர்கள். இவர்கள், கடலுக்குள், நிறைய சக்தி வாய்ந்த ஆவிகள் இருப்பதாக நம்பினார்கள். அந்த கடல் ஆவிகளோடு பேச, இரட்டை ஆத்துமாக்கள் கொண்ட திருநங்கை மந்திரவாதிகளை நம்பினார்கள் என்பதற்கு, நிறைய வரலாற்றுக் குறிப்புக்கள் இருக்கின்றன.

2.       வனமாடிகள் – (குறிஞ்சி மற்றும் முல்லை). காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், ஆறுகளிலும், மரங்களிலும், கொடிகளிலும், செடிகளிலும், ஆவிகள் இருப்பதாக நம்பியவர்கள். இவர்களும், இரட்டை ஆத்துமாக்களை நம்பினார்கள் என்பதற்கு, நிறைய வரலாற்றுக் குறிப்புக்கள் இருக்கின்றன.

3.       சமவெளியாடிகள் – (மருதம் மற்றும் பாலை). ஆற்றுவெளியை ஒட்டி இருந்த சமவெளிகளில் வாழ்ந்த மனிதர்கள். இந்த வகை மனிதர்கள் இடையே, ஆற்று நாகரீகம், மிக வேகமாக முன்னேறியது. அனிமிசம் சொல்லும் மந்திரவாதிகள், இங்கேயும் வாழ்ந்து வந்த அடையாளங்கள், வரலாற்றில், அங்கங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன. என்றாலும், இரட்டை ஆத்துமாக்கள் வாழ்ந்து வந்ததற்கான குறிப்புக்கள், அவ்வளவாக இல்லை. உதாரணத்திற்கு, சங்க கால இலக்கியங்கள், அனிமிசம் சொல்லும் மந்திரவாதிகள் குறித்த தகவலை, நமக்குச் சொல்லுகின்றன என்றாலும், திருநங்கை மற்றும் திருநம்பி போன்ற இரட்டை ஆத்துமாக்கள் குறித்த தகவல்களை, நமக்குக் குறிப்பிடவில்லை. ஆனாலும் கூட, சமவெளிகளில் வளர்ந்த நாகரீகங்களில், அர்த்தநாரி போன்ற தெய்வங்கள், சில ஆணும் பெண்ணும் கலந்த கிரேக்கக் கடவுள்கள் போன்றோர், தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டு இருந்தனர் என்பது, நாம் அறிந்ததே. இது பற்றியும், நாம், நம் கட்டுரையில் பார்ப்போம்.

சரி, அனிமிசம் காலங்களில் வாழ்ந்த இரட்டை ஆத்துமாக்கள் என்ன ஆனார்கள்? இன்னும், அவர்கள் இருக்கிறார்களா? என்பதற்கு, உலகின் சில வரலாறுகளை, நாம் இனி இங்கே பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, வட அமெரிக்காவில், பரவலாக வாழ்ந்த பழங்குடியினரிடம், இரட்டை ஆத்துமாக்களைப் போற்றும் வழக்கம் இருந்து வந்து இருக்கிறது. சைபீரியாவில் இருந்து, அமெரிக்காவுக்குள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நுழைந்தவர்களாக கருதப்படும் இந்தப் பழங்குடிகள், அமெரிக்க-கனடா எல்லையில் பிரமாண்டமாய் விரிந்து நிற்கும், மகா ஏரிகள்(Great Lakes), கலிபோர்னியா, அரிசோனா போன்ற பகுதிகளில், பெரும்பான்மையாய் வாழ்ந்து இருக்கிறார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள் கூட்டத்தில் இருந்த திருநங்கையர், மற்றும் திருநம்பியருக்கு, எப்போதும் ஒரு தனிமதிப்பு இருந்து வந்து இருக்கிறது. பெர்டாச் என்று சொல்லக்கூடிய, இந்தத் திருநங்கை, திருநம்பியரே, சாமான் என்று சொல்லக்கூடிய, ஆவிகளிடம் பேசும் மந்திரவாதிகளாக, அந்த அமெரிக்கப் பழங்குடியினர் இடையே, வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். பழங்குடி மக்களின், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும், இந்த இரட்டை ஆத்துமாக்கள் இடம் பெறுவர். அந்த இரட்டை ஆத்துமாக்களுக்கு, அவை போன்ற நிகழ்ச்சிகளில், உயர் மரியாதை கொடுக்கப்பட்டு வந்து இருக்கிறது. இவை தவிர, நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தம் குடிமக்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை வழங்கல் போன்ற வேலைகளிலும், இந்த இரட்டை ஆத்துமாக்கள் ஈடுபட்டு வந்து இருக்கின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, ஒரு உயரிய இடத்தில் மதிக்கப்பட்டு வந்த, இந்த திருநங்கை மற்றும் திருநம்பி பழங்குடி போதகர்களுக்கு, ஐரோப்பியர்களின் மூலம், இருபதாம் நூற்றாண்டில் சோதனை வந்தது. வட அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த ஐரோப்பியர்கள், தங்கள் கூடவே, கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டு வந்தனர். அப்படிக் கொண்டுவந்த, தங்கள் கிறித்துவ போதனைகளை, அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டு இருந்த அமெரிக்கப் பழங்குடியினரிடம் போதித்தபோது, அதில் கவரப்பட்ட, நிறைய அமெரிக்கப் பழங்குடியினர், கிறித்துவ மதத்திற்கு மாறினர். கிறித்துவ மதம், மாந்திரீகத்திற்கும், இரட்டை ஆத்துமாகளுக்கும் எதிரானது ஆகும். எனவே, மாந்தீரீகம் மூலம், உயர்நிலையில் இருந்து வந்த, இரட்டை ஆத்துமாக்களுக்கு, அமெரிக்காவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வெள்ளைக்காரர்களால், அமெரிக்காவின் திருநங்கை மற்றும் திருநம்பி மந்திரவாதிகள் வேட்டையாடப்பட்டனர். சிலர், தப்பித்து ஓடினர். உதாரணமாக, கலிபோர்னியாவில் வாழ்ந்த திருநங்கை/திருநம்பி மந்திரவாதிகள், வேட்டைநாய்கள் கொண்டு கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. இவை போன்ற கொடுமையான நடவடிக்கைகளால், இரட்டை ஆத்துமாக்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில், மிகவும் குறைந்து போனது. மறைந்து மறைந்து வாழ்ந்த இந்த இரட்டை ஆத்துமாக்களுக்கு, இருபத்தோராம் நூற்றாண்டில்தான், விடிவுகாலம் பிறந்தது என, அமெரிக்க வரலாறு, நமக்குச் சொல்லுகிறது.

        - பிசு குருமார்கள் நடத்தும் சடங்கு -

இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று, சுலவேசி. இந்தத் தீவின், தெற்குப்பகுதியான, தெற்கு சுலவேசியில், புகிஸ் என்ற பழங்குடியினர் வாழ்கிறார்கள். அந்தக் காலங்களில், புகிஸ் மக்களில் ஒரு சிலர், சிங்கப்பூருக்கு பயணித்து வந்து, வாழ்ந்த இடம்தான், இன்று புகிஸ் என, சிங்கப்பூரில் அழைக்கப்படுகிறது. புகிஸ் மக்களுக்கென, ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் இருக்கிறது. இவர்கள், பாலியல் ரீதியாக, மனித இனங்களை, ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்கள். ஓராணி என்ற ஆண் இனம், மக்குன்றை என்ற பெண் இனம், சலலை என்ற திருநம்பி, சலபை என்ற திருநங்கை, பிசு என்ற திருநங்கை/திருநம்பி மற்றும் ஊடுபாலின(intersex) மந்திர குருமார்கள், என்று ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டார்கள்.  இவர்களில், பிசு என்ற மூன்றாம் பாலின மந்திரகுருமார்களுக்கு, ஒரு உயரிய மரியாதை, புகிஸ் சமூகத்தில், எப்போதும்  இருந்து வந்தது. புகிஸ் ஆண்களும், பெண்களும், பிசு குருமார்கள் சொல்வதைக் கேட்டு நடந்தார்கள். புகிஸ் சமூகத்தின் கல்யாணம், இழவு போன்ற எல்லா நிகழ்வுகளிலும், மேல்சொன்ன ஐந்து வகை இன மக்களும் கலந்துகொண்டால்தான், அந்த விழா, ஒரு நிறைவு அடையும் என்பது, புகிஸ் மக்களின் நம்பிக்கை. புகிஸ் சமூக மன்னர்களின், முடிசூட்டு விழாக்கள் கூட, பிசு குருமார்களால்தான் நடத்தப்பட்டது என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு, நமக்குக் கூறுகிறது. இஸ்லாம் மதம், இந்தோனேசியாவிற்குள் வரும்வரை, இந்த புகிஸ் சமூகத்தின் பிசு இனம், உயரிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், இஸ்லாம் மதம், இந்தோனேசியாவில் பெருகப்பெருக, புகிஸ் சமூகத்தின் பெருவாரியான மக்கள், இஸ்லாம் மதத்தைத் தழுவினர். எனவே, மூன்றாம் பாலினமான பிசு இனம், கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்தது. சில பிசுக்கள், இந்தோனேசியாவின் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர். பல மூன்றாம்பாலின பிசுக்கள், தங்கள் மந்திரவாதத் தொழிலை விட்டுவிட்டு, விவசாயிகளாக மாறிப்போயினர். எனினும், இந்தோனேசியா மற்றும் மலேசிய நாடுகளில், மாந்திரிகம் மீதான நம்பிக்கை, இன்றளவும் இருந்து வருகிறது என்பதை, இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.

அனிமிசம் என்ற, ஆவிகளைத் தொழும் மந்திரவாதத்தின், உலகின் மையமாக, நாம் சைபீரியாவைச் சொல்லலாம். சாமான்கள் என்று சொல்லக்கூடிய, ஆவிகள் உலகத்தோடு தொடர்புடைய இத்தகைய சைபீரிய மந்திரவாதிகளில் ஒரு கூட்டம், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு பரவியது என்றும், இன்னொரு கூட்டம், மங்கோலியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் குடியேறியது என்றும் வரலாறு நமக்குச் சொல்லுகிறது. குறிப்பாக, சைபீரியாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும், பேரிங் நீரிணையை ஒட்டி, சைபீரியன் சுக்சீ என்ற கடலோடிகள் இனம் வாழ்ந்து வந்து இருக்கிறது. இந்த இனத்தில், சூபான் என்ற மூன்றாம் பாலின மந்திரவாதிகள், நிறைய பேர் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். சைபீரியச் சாமான் மந்திரவாதக் கோட்பாட்டின்படி, சாமான் மந்திரவாதிகள், ஆணையும் பெண்ணையும் சாராத உடைகளையே அணிந்து, தங்கள் பணிகளைச் செய்து இருக்கிறார்கள். சைபீரிய சாமான் மந்திரவாதிகளில், வெள்ளைச் சாமான் மந்திரவாதிகள், நோயைக் குணப்படுத்தினார்கள். கருப்பு சாமான்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளை எடுப்பது மற்றும் உருவாக்குவது போன்ற பணிகளைச் செய்தார்கள். மஞ்சள் சாமான்கள், புத்தமதச் சடங்குகள் செய்பவர்கள் ஆக இருந்தார்கள். சிவப்புச் சாமான்களோ, மற்ற சாமான் மந்திரவாதிகளுக்கு தேவையான, சாமான் கருவிகள் செய்து தரும் பொற்கொல்லர்கள் ஆக இருந்தார்கள். இந்த அனைத்துவகைச் சாமான்களிலும், மூன்றாம் பாலின மக்கள், ஒரு குறிப்பிட்ட அளவில், இருந்து வந்து இருக்கிறார்கள். இந்தச் சாமான்கள், பிற்காலத்தில், ரஷ்யாவின் கிறித்துவ மதத்தால் ஒடுக்கப்பட்டு, ஒழிக்கப்பட்டனர் என்று குறிப்புக்கள் சொல்கிறது.

எனரீ என்ற ஒரு மூன்றாம் பாலின சமூகம், ஈரானில் இருந்து வந்து இருக்கிறது. இந்த சமூகம், திருநங்கை  சாமான் மந்திரவாதிகளையும் உள்ளடக்கிய ஒரு சமூகம் ஆகும். சித்தியன் மதம் என்பது இவர்கள் மதம் ஆகும். இந்த சமூகத்தில், மன்னர்களும் இருந்து வந்து இருக்கிறார்கள். இந்த மன்னர்களின் பக்க பலமாக, இந்த எனரீ என்ற திருநங்கை சமூகம் , உயர்நிலையில் வாழ்ந்து வந்து இருக்கிறது. இந்த எனரீ சமூகம், அர்திம்பசா என்ற திருநங்கைக் கடவுளின் வரம் பெற்றவர்கள் என்ற நம்பிக்கையில், சித்தியன் மன்னர்கள், இந்த எனரீ சமூகத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். எனரீ சாமான்கள், பெண் உடை அணியும் ஆண்கள் ஆவார்கள். எனரீக்கள், பெண்களைப் போலவே நடை, உடை, பாவனை கொண்டவர்கள் ஆக இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல இடங்களில், திருநங்கை/திருநம்பிகளுக்கென, ஒரு உயரிய மரியாதை, அங்கே கொண்டுவரப்பட்ட, காலனித்துவ ஆட்சிக்கு முன்னர், வழக்கத்தில் இருந்து வந்து இருக்கிறது. கானா நாட்டில், டகாபா என்றோர் பழங்குடிகள் இருக்கிறார்கள். இவர்கள் வழக்கத்தில், ஆண், பெண் என்று பாலியல் ரீதியாகப் பிரிக்கப்படுவது, அவர்தம் பிறப்புறுப்பினால் இல்லை. மாறாக, ஒரு மனிதனது, உடல் சக்தியை வைத்தே, அவர், ஆண் என்றும், பெண் என்றும் தீர்மானிக்கப்படுகிறார். இந்த பாலியல் கொள்கையின்படி, ஒரு ஆண் சக்தி இல்லாதவராக இருந்தால், அவர் பெண்ணாகத் தீர்மானிக்க வாய்ப்புண்டு. பல ஆப்பிரிக்கப் பழங்குடிகள், பூப்பெய்தல் அல்லது பதின்மவயது வரும்வரை, ஒருவரது பாலினத்தை, நிர்ணயிப்பது கிடையாது. பிறந்ததுமே, ஒரு குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கும், மேற்கத்தியக் கலாசாரத்துக்கு, இது மாறான ஒரு கொள்கை ஆகும். ஆப்பிரிக்காவின், மாலி பழங்குடியினரைப் பொறுத்தவரை, ஒரு நிறைவான மனிதன் என்பவன், ஆணின் குணமும், பெண்ணின் குணமும் கொண்ட, ஒரு திருநங்கை அல்லது திருநம்பியே. மாலி ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, ஒரு மாலி ஆணும் ஒரு மாலி பெண்ணும், மாலித் திருநங்கைகளோடு ஒப்பிடுகையில், தகுதி குறைந்தவர்கள் என்பது மாலி இன மக்களின் நம்பிக்கை. அதனால்தான், இந்தப் பழங்குடிகள் வழிபட்டு வந்த, நம்மோ என்றோ தெய்வம், ஒரு அர்த்தநாரி தெய்வம் ஆக இருந்து வந்து இருக்கிறது. காங்கோ, உகாண்டா போன்ற பல ஆப்பிரிக்கப் பழங்குடிகள், இன்றளவும், திருநங்கை/திருநம்பி  மனிதர்களையே, தங்கள் பூசாரிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி, உலகின் பல இடங்களில், அனிமிசம் மதம், பரவலாக இருந்து வந்து இருக்கிறது. ஆவிகளோடு பேசும், மந்திரவாதம் இருந்து வந்து இருக்கிறது. மூன்றாம் பாலின மந்திரவாதிகள், உயர்நிலையில் இருந்து வந்து இருக்கிறார்கள். என்றாலும் கூட, வளர்ந்த நாகரிகங்களாக அறியப்படும். கிரேக்க நாகரிகத்திலோ, தமிழர் நாகரீகத்திலோ, அனிமிசம் குறித்த் செய்திகள், அவ்வளவாக இல்லை. இத்தகைய நாகரீகங்களில், மாந்தரீகம் இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், திருநங்கை/திருநம்பி உள்ளிட்ட மூன்றாம் பாலின மந்திரவாதிகள் குறித்த செய்திகள், நம்மிடம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்த வரை, அனிமிச மதமே, இங்கேயும் ஆதியில் இருந்திருக்கலாம். நாகரீகம் வளர, வளர, உருவவழிபாடு தோன்றியபோது, மேலே சொன்ன மந்திரவாதிகள் பலர், தெய்வங்களாக மாற்றப்பட்டு இருக்கலாம். உதாரணத்திற்கு, கிரேக்க மதத்தில், நிறைய ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத தெய்வங்கள் இருந்து வந்து இருக்கின்றன. சைவ மதத்தில், அர்த்த நாரீஸ்வரும், வைணவத்தில் லட்சுமி நரசிம்மரும், மூன்றாம் பாலினத் தெய்வங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதற்கு, நாம் மேலே சொல்லும், அனிமிச மதத்தின் திருநங்கை/திருநம்பிக் கோட்பாடும் ஒரு காரணமாய் இருந்து இருக்கலாம் என்பது எனது சிந்தனை. இந்த மதங்களில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களில், இவை போன்ற, பல வகையான, அர்த்தநாரித் தெய்வங்கள் இருக்கின்றன என்பதற்கு, பல ஆதாரங்கள் இருக்கின்றன.

இப்படியெல்லாம் இருக்க, இன்றைய உலகின் வளர்ந்த மதங்களில், அவை போற்றும் ஆன்மீக உலகில், மூன்றாம் பாலின ஆன்மீகவாதிகள் எந்த அளவிற்கு போற்றப்படுகிறார்கள் என்று பார்த்தால், நமக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். ஆபிரகாம் மதங்களான, கிறித்துவ மதமோ, இசுலாம் மதமோ, மூன்றாம் பாலினத்தை, இன்றளவும் முழுமையாய் ஆதரிக்கவில்லை. ஆனால், உண்மை தெரியுமா? ஓரினச்சேர்க்கைக்கு மரண தண்டனை என்று இருந்த அந்தக் காலங்களில், ஒரு பெண் தன்மையுடைய ஆணோ, அல்லது ஆண் தன்மையுடைய பெண்ணோ, தங்கள் மூன்றாம் பாலின உணர்வுகளை மறைத்துக்கொள்ள, பல நேரங்களில், மேலே சொன்ன ஆபிரகாம் மதங்களையே தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அதாவது, இன்றைய கிறித்துவ குருமார்களில், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், தங்களை வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளாத, மூன்றாம் பாலினம் ஆக இருக்கிறார்கள் என்பதை, நாம் முற்றிலும் மறுத்து விட முடியாது. இசுலாமிலும், இந்த நிலை இருக்கலாம். இந்து மதத்தின் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளில், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், பெண் தன்மை நிறைந்த, ஆண்கள் ஆவார்கள். ஆனால், இந்த மூன்றாம் பாலின மதகுருமார்கள், “நாங்கள் மூன்றாம் பாலினம்” என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டால், பின்னர் அவர்கள் நிலைமை என்ன ஆகும்?  அவர்கள் வெளியே துரத்தப்படுவார்கள் அன்றோ?

அனிமிச மதம், மூன்றாம் பாலின குருமார்களை, ஆணையும் பெண்ணையும் விட, ஒரு படி மேலே கொண்டு போய், இரட்டை ஆத்துமாக்களாக வைத்து, அழகு பார்த்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த மதங்களோ, மூன்றாம் பாலினத்தையே வெறுக்கிறது. இது ஒரு சமூக அவலநிலை அல்லவா?  நான், மூன்றாம் பாலின ஆன்மீகவாதிகளை, ஆணை விட, பெண்ணை விட, இரட்டை ஆத்துமாக்கள் ஆக, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால், ஆண், பெண் ஆன்மீகவாதிகள் போல, மூன்றாம் பாலின ஆன்மீகவாதிகளும், மதிக்கப்படலாமே? இந்தியா, இப்போது மூன்றாம் பாலினத்தை ஆதரிக்கிறது. நல்ல விசயம்தான். ஆனால், அதன் சமயச்சடங்குகளில், மூன்றாம் பாலின அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் வெளிப்படையாக அனுமதிக்கப்படும் நாள், எப்போது வரும்?

கிறித்துவ மதத்தைத் தோற்றுவித்தது ஒரு ஆண். இறைத்தூதர் ஒரு ஆண். கிறித்துவின் சீடர்கள் எல்லாருமே ஆண்கள். இசுலாம் மதத்தைத் தோற்றுவித்தது ஒரு ஆண். இறைத்தூதர் ஒரு ஆண். பரப்பியவர்கள் ஆண்கள். புத்தமதத்தைத் தோற்றுவித்தது ஒரு ஆண். இப்படி, வளர்ந்த மதங்கள் எல்லாமே, ஆண்களால் தோற்றுவிக்கப்பட்டவை. அந்தக் காலங்களில், ஆணாதிக்கம், பெண்களை அடிமைப்படுத்தியது. கூடவே, தங்களை விட, ஆன்மீகத்தில் உயர்ந்து நின்ற, திருநங்கை/ திருநம்பிகளை, அடித்துத் துரத்தியது. 

இறுதியாய் ஒன்று, மாந்தீரீகத்தின் மீது, நான் நம்பிக்கையே இல்லாதவன். ஆனால் நான், கடவுளின் மீது நம்பிக்கை உள்ளவன். “எனக்கும் மேலே, ஒரு சக்தி இருக்கிறது” என்று, நான் முழுமையாய் நம்புபவன். “நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது” என்ற இந்த நம்பிக்கை, அனிமிச மந்திரவாதத்திலும் இருக்கிறது. வளர்ந்த மதங்களிலும் இருக்கிறது. மூட நம்பிக்கைகள், அனிமிச மதத்தில் பெருமளவு இருக்கிறது. வளர்ந்த மதங்களிலும் ஒரு கணிசமான அளவு மூட நம்பிக்கைகள் இருக்கிறது. பல விசயங்களில், மாந்தரீகமும், இப்போதுள்ள மதங்களும், ஒன்றை ஒன்று ஒத்துப்போகின்றன. அப்படி இருக்க, கண் முன் தெரியாத அந்தக் கடவுள் சக்தியை, ஆணும் பெண்ணும்தான், மத குருமார்களாக நின்று, வழிநடத்த வேண்டும் என்று சொல்வதும், ஒரு வகை மூட நம்பிக்கைதானே? எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்றால், மூன்றாம் பாலின ஆன்மீகவாதிகளும், கடவுளின் பிள்ளைகள்தானே?

எனவே, மூன்றாம் பாலின எண்ணிக்கை, உலகில் கூடக்கூட, அவர்களையும் மதகுருமார்களாக, வளர்ந்த மதங்கள், நிச்சயம் ஏற்றுக்கொள்ளும். இது காலத்தின் கட்டாயம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.