எழுத்தாளர் மதிவதனி பத்மநாதன் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றார். மதுரையில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர் வாணமதி , மதிவதனி ஆகிய பெயர்களில் இலக்கிய  உலகில் அறியப்பட்டவர். கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் சிறுவர் இலக்கியமென இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.

புகலிடத் தமிழர்கள் மத்தியில் சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டி வரும் எழுத்தாளர்களில், குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களில், நானறிந்தவரை,  பத்மா இளங்கோவன் (பிரான்ஸ்), ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா (கனடா), வாணமதி (சுவிஸ்) ஆகியோர் முக்கியமானவர்கள். (ஏனைய நாடுகளிலும் சிறுவர் இலக்கியத்துறையில் பங்களித்து வரும் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.) பல்வேறு இணைய இதழ்கள், அச்சிதழ்கள் ஆகியவற்றில் எழுதிவரும் இவரது பல படைப்புகள் முத்துக்கமலம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றை நீங்கள் http://www.muthukamalam.com/writer/vaanamathy.html என்னும் இணைய முகவரியில் வாசிக்கலாம்.

தமிழகத்தில் பாரதி புத்தகாலய வெளியீடுகளாக ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கொக்கோவும், மிங்கியும், குழவிப் பூங்கா, லொற்றோ ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஓவியா பதிப்பக வெளியீடுகளாகவும் இவரது நூல்களான எச்சங்கள் (சிறுகதைத்தொகுப்பு), ஒரு புன்னகை போதும் (கட்டுரைத்தொகுப்பு) ஆகியவை வெளியாகியுள்ளன.


புகலிடத்தமிழர் மத்தியில் சிறுவர் இலக்கியம் பற்றிய தகவல்களை , குறிப்பாக அத்துறையில் பங்களித்துவரும் ஆளுமைகளை அறிந்தவர்கள் அவை பற்றிய , அவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும். குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவர் இலக்கியமானது மிகவும் முக்கியமானதோரிடத்தை வகிக்கின்றது. அது ஆரோக்கியமானதொரு பங்களிப்பு. இவ்வகையில் புகலிடத்தில் இத்துறையில் ஈடுபட்டுவரும் அனைவரும் பாராட்டுதற்குரியவர்கள்.  அவர்களின் வாணமதியும் ஒருவர். அவரது சிறுவர் இலக்கியப் பங்களிப்பும் முக்கியமானது.


இலங்கையில் கூட சிறுவர் இலக்கியமானது முறையாக, விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பல்வேறு ஊடகங்களில் வெளியான சிறுவர் இலக்கியப் படைப்புகள் சேகரிக்கப்பட வேண்டியது அவசியம். இன்று நன்கறியப்பட்ட எழுத்தாளர்கள் பலர் பல்வேறு ஊடகங்களில் இடம் பெற்ற சிறுவர் பகுதிகள் மூலம் எழுத்துலகுக்கு அடியெடுத்து வைத்தவர்கள்தாம் என்பதொன்றே சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்தை எடுத்துரைக்கப் போதுமானது.