அத்தியாயம் இரண்டு: புக்காரா நகரம்

புக்காரா நகரத்தின் மத்தியில் உள்ள வாவி ( Phewa Tal) அழகானது.நாங்கள் காட்மாண்டுவிலிருந்து புக்காரா என்ற இரண்டாவது பெரிய நகரத்திற்குப் புத்தா விமானச் சேவைக்குரிய விமானத்தில் பயணித்தோம்.

நமது நாட்டில் முருகன் உணவுக்கடை, பிள்ளையார் விலாஸ் , லட்சுமி அடைவு கடை என பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு மனேஜர்களை வைத்து வர்த்தகத்தை பெருக்குருக்கிறோம். நேபாளத்தில் புத்தர் மட்டுமே ஒரு மார்கெட்டிங் மனேஜர் ஆக பல வியாபார நிறுவனங்களுக்கு உதவியாக தொழிற் படுகிறார் . அவரது பெயரில் உணவகம், நட்சத்திர விடுதிகள், லொரி சேர்விஸ் எனப்பல உண்டு. நேபாளிகள் புத்தரில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறார்கள் விமானத்தின் யன்னலோரத்து ஆசனத்தில் அமர்ந்து, இமையமலைச் சிகரங்கள் மேலாக பறக்கும்போது மனதில் டென்சிங்கையும் எட்மண்ட் ஹிலாரியையும் நினைத்துப் பார்க்காது இருக்கமுடியாது .

காலையில் செல்லவேண்டிய புத்தா விமானச்சேவை பல மணிநேரம் தாமதமடைந்து புறப்பட்டது. இமயமலை மேலாக பறப்பதால் காலநிலை சரியாக இருக்கவேண்டும். நாங்கள் சென்ற நாளன்று மேகமூட்டமாக இருந்தது. நேபாளத்தில் பல இடங்களில் மேகம் உயரத்தில் இல்லை. தரையில் வந்து இறங்கிவிடும். எனக்கும் மனைவிக்கும் இடையிலும் வந்துவிடும் என்றால் பாருங்களேன்.

புக்காரா அரை மில்லியன் மக்கள் வாழும் அழகான நகரம். அன்னபூரணா மலைச் சிகரத்துக்கு அண்மித்த பள்ளத்தாக்கில் உள்ளது. இங்கிருந்து மலையடிவாரத்துக்கு வாகனங்களில் மற்றும் ஹெலிக்கப்டர்களில் போவார்கள். புக்காரா மிகவும் சுத்தமான நகரம். மிகவும் அதிகமான கடைகள் உல்லாசப்பிரயாணிகளை நம்பியுள்ளன. அடுத்த நாள் காலை செல்லுமிடம் குளிரான மலைப்பிரதேசமானதால் அன்று மாலை ஆறு மணியளவில் ஒரு கடையில் இரண்டு குளிர் உடுப்புகள் வாங்கியபோது, அங்கிருந்த இளைஞனிடம் இரண்டை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி எனப் பேரம் பேசத் தொடங்கியபோது, ஆங்கிலத்தில் அவன் “ இதுவே எனது முதல் விற்பனை. நேற்று எதுவும் விற்காமல் சென்றேன் “ என்று தனது சோகத்தை பாடியதும், எதுவும் பேசாது பணத்தைக்கொடுத்தேன்.
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, ஜீப்பில் Sarangkot என்ற மலை அடிவார நகரத்திற்குச் சென்று மலைச் சிகரங்கள் ஊடாக சூரியன் உதிப்பதை அங்குள்ள மொட்டை மாடிகளில் ஏறி நின்று பார்க்க முடிந்தது
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, ஜீப்பில் Sarangkot என்ற மலை அடிவார நகரத்திற்குச் சென்று மலைச் சிகரங்கள் ஊடாக சூரியன் உதிப்பதை அங்குள்ள மொட்டை மாடிகளில் ஏறி நின்று பார்க்க முடிந்தது. நேபாளத்தில் ஒரு நல்ல அரசு அமைந்தால் சுவிட்ஸர்லாந்தைப்போல் அழகான நாடாக மாறும். ஆனால், அது தற்பொழுது தென்னாசியாவிலே வறுமையான நாடாக விளங்குகிறது.

கொரோனா வைரசின் தாக்கத்தால் முக்கியமாக சீனர்கள் வருகை இங்கில்லை.

ஐரோப்பியர்களுக்கு சீசனில்லை. இந்தியர்கள் வருகிறார்கள். இந்துக்கள் பெரும்பாலனவர்கள் தல யாத்திரையாக வருகிறார்கள் புத்த மதத்தினர் கம்போடியா, தாய்லாந்து மற்றும் யப்பானிலிருந்து லும்பினிக்கு அதிகமாக வருகிறார்கள். இப்படியான மத யாத்திரீகர்கள் குறைந்தளவில் பணத்தை செலவழிப்பவர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திற்கு அடுத்ததாக நேபாளம் தங்கியிருப்பது இந்த உல்லாசப்பிரயாணிகளையே! தற்போதைய அரசு இடதுசாரி அரசு. அதாவது மாவோயிட்ஸ்களும் மற்றைய கம்மியூனிஸ்டுகளும் சேர்ந்து உருவாக்கியது . பலரோடு பேசியபோது அரச நிர்வாகம் ஒழுங்கில்லை, வேலை வாய்ப்பில்லை என்றார்கள். விவசாயம் பெரிதளவில் வருமானம் தராதமையினால், நிலத்தை விற்கிறார்கள். அதில் வரும் பணம் வெளிநாடு செல்ல உதவுகிறது. நேபாளத்திலும் விவசாய நிலங்கள் வீடுகளாகின்றன. உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வருகிறது. கடல் வழியற்ற நாடானதால் தொடர்ச்சியாக இந்தியாவின் அழுத்தமுள்ளது.

வருடத்திற்கு ஒரு முறை ஆயிரம் இளைஞர்களை ஹெங்கொங் , பிரித்தானிய பொலிசிற்கும் பிரான்ஸ் இராணுவத்திற்கும் இங்கிருந்து எடுப்பார்கள். அதற்கு ஐந்து இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் வருடத்திற்கு ஐந்தாயிரம் மாணவர்கள் நாட்டுக்கு திரும்பி வரும் நோக்கமற்று அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள்.
புக்காரா நகரத்தின் மத்தியில் உள்ள வாவி ( Phewa Tal) அழகானது.
புக்காரா நகரத்தின் மத்தியில் உள்ள வாவி ( Phewa Tal) அழகானது. நான்கு பக்கமும் உயர்த்த மலைகளில் இருந்து வரும் மழைநீரால் உருவாகியது. அந்த வாவியில் ஒரு மணிநேரம் ஒரு பெண்ணோட்டியின் படகில் பயணித்தபோது அந்தப் பெண்ணைப்பற்றி விசாரித்தேன். அவள் 35 வயதானவள் . இரண்டு குழந்தைகள் . பத்து வருட காலமாக படகைச் செலுத்துவதாகச் சொன்னாள் . அங்குள்ள படகுகள் பல வர்ணத்திலிருந்ததால் கண்ணைக்கவர்ந்தன.
கும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்

நிலத்திற்குக் கீழ் ஒரு குகையில் கும்ப ஈஸ்வரரை ( சிவன்- Gupteshwor Mahadev Cave ) வைத்திருக்கிறார்கள்.நிலத்திற்குக் கீழ் ஒரு குகையில் கும்ப ஈஸ்வரரை ( சிவன்- Gupteshwor Mahadev Cave ) வைத்திருக்கிறார்கள். அங்கு ஈரமான படிகளில் கீழ்நோக்கி குகைக்குள் செல்லவேண்டும். பல இடங்களில் குனிந்தபடி செல்லவேண்டும். சில இடத்தில் கடினமாக இருந்தது. தவழ்ந்து செல்லவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் பக்தியுடன் செல்கிறார்கள் . மனைவி கூட ஆங்காங்கு புத்த விகாரைகளிலும் ஆலயங்களிலும் வணங்கி வணங்கி புண்ணியத்தைச் சேமித்துள்ளார் . நான் மட்டும் உல்லாசப்பிரயாணியாகச் செல்வதால் நம்மீது கும்ப ஈஸ்வரர் ஏதாவது கல்லையோ பாறையையோ தலையில் தட்டிவிடலாம் என்ற எண்ணம் வந்து போகவும் தவறவில்லை .

அருவியின் பெயர் தேவியின் அருவி . தற்பொழுது டேவிஸ் அருவியாகி உள்ளது ( Devi’ Fall/ Davis Fall) என்ன அழகான பெயர் மாற்றம்?

நிலத்தில் தவழ்ந்து வந்த அருவி இறுதியில் 100 மீட்டர்கள் குகைக்குள் இறங்கி ஆழத்தில் வீழ்ந்து மறைந்துவிடுகிறது. இதயத்தை கையால் இறுக்கிப் பிடித்தபடியான நடைப்பயணம் . விரைவாகச் சென்றால் ஒரு மணித்தியாலத்தில் சென்று திரும்பமுடியும்.

ஜப்பானியர்கள் சுனாமியின் நினைவாக மிகப்பெரிய பகோடாவை இங்கு கட்டியுள்ளார்கள். சுனாமி அழிவு நேர்ந்த முதல் மூன்று நாடுகளாக இந்தோனேசியா இலங்கை மற்றும் இந்தியாவென இருக்க, சுனாமியின் பாதிப்பு வராத நேபாள நாட்டில் புக்காரா நகரத்தில் நாட்டில் கட்டியிருப்பது எனக்கும் புதுமையாகவிருந்தது.

“அங்கு அமைதியாக இருங்கள் “ என ஒரு அறிவிப்பு இருந்தது. இது எப்படி எனக்கேட்டேன். முக்கியமாக இந்தியர்கள் இங்கு கூட்டமாக வருவது பற்றியும் சத்தமாகப் பேசுவது பற்றியும் நேபாளமெங்கும் முறைப்பாடு உள்ளது என்றார். இப்படியான முறைப்பாடு சீனர்கள் மீதும் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்படுகிறது. நோர்வேயில் ஒரு உணவகத்தில் எனக்கு அடுத்ததாக காலையுணவுக்கு நின்ற பெண்மணி “இன்னம் சிறிது நேரத்தில் சீனர்கள் இங்கே கூட்டமாக வருவார்கள். அதற்கு முன்பாக நாம் உணவை அருந்தவேண்டும் “ என்றார்.

புக்காராவில் மலைகள் சம்பந்தமான கண்காட்சியிருந்தது. அதில் உலகத்தின் 8000 மீட்டாருக்கு உயரமான சிகரங்களில் பெரும்பாலானவை நேபாளத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றின் பல அமைப்புகளினால், மனிதர்களால் ஏறமுடியாதவை. மனிதர்களால் ஏறப்படும் எவரெஸ்ட் போன்ற சிகரங்கள் அவ்வாறு ஏறுபவர்களால் மாசடைந்து போகிறது என்பதை ஆதாரங்களுடன் காட்டியிருந்தார்கள்.
இம்மலைப்பகுதியில் படர்ந்துள்ள பனிப்படலங்கள் புவி வெப்பமடைவதால் குறைந்துள்ளதையும் பல உதாரணங்களுடன் பார்க்கமுடிந்தது.

இருவர் மலையேறும்போது அவர்களது தேவைகளுக்கான பொருட்களைக் கொண்டு செல்ல 15 செப்பாய்கள்  (Sepoy- காவுபவர்கள்) தேவை.

இந்த செப்பாய்கள் திபெத்திய இனத்தவர்கள். இவர்களது தொகை மொத்த நேபாளிய இனத்தில் ஐந்துவீதத்திலும் குறைவு. மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து குறைந்த உயரத்துடன் உறுதியான தோள்களுடன் மிகவும் குறைந்த பிராணவாயுவைச் சுவாசித்து வாழ இசைவாக்கமுடையவர்கள். இவர்களற்று எவரும் மலையேறமுடியாது.

பேஸ் காம்ப் எனப்படும் மலையடிவாரத்திற்குச் சென்று வர முயற்சித்தபோது, எவெரெஸ்டிலும் அன்னபூரணாவிலும் பனிச்சரிவு ஏற்பட்டதால் ஹெலிக்கப்டர்கள் எதுவும் பறக்கவில்லை. அருகில் சென்று பார்க்கவும் முடியாது போய்விட்டது . மீண்டும் விமானத்தில் பறந்தபோது யன்னலூடாக பார்த்து எனது ஏமாற்றத்தை போக்கிக் கொண்டேன்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.