வெங்கட் சாமிநாதன்எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக்கிறார்கள்.  வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த், ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம்  நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று.நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று.  ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது.  ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.

 இன்னம் ஒன்று. ஏந்திரன் பற்றி எழுதியது போதும் என்று சில அன்பர்கள் சொன்னது இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், எந்திரன் பற்றி நான் எழுதியதைப் பொறுக்கமாட்டாது ஆபாசமாகத் திட்டி வந்த பின்னூட்டங்கள் நிறையவென்றும், ஆனால் அவை ஆபாசமாக இருந்ததால் அவற்றை வெளியிடவில்லை என்று அருண் சொல்கிறார். மாதிரிக்கென்று ஒன்றிரண்டை வெளியிட்டிருந்தால், அவை எத்தனையில் ஒன்றிரண்டு என்றும் சொல்லியிருந்தால் நம் தமிழ் சமூகத்தில் ரஜனி சாரின் ரசிகர்கள், எப்படிப்பட்ட எதிர்வினையைக் காட்டுபவர்கள் என்பதோடு நம் தமிழ் சமூகத்தின் சீரழிவு எத்தனை ஆழ வேர்கொண்டதும், பரவலானதும், கொடூரமானதும் என்பது தெரிந்திருக்கும். நம் ஆபாசங்களை, நம்மைப் பீடித்திருக்கும் பயங்கர நோய்களை நாம் அறியாது மூடி மறைப்பானேன்?. நம் வியாதியைப் பற்றி நாம் அறியாதிருப்பதும் கண்மூடிக்கொள்வதும்,  நோயை பயங்கரமாக முற்றச் செய்துவிடும். செய்துவிடும் என்ன, முற்றிவிட்டது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

எந்திரனைப் பற்றி இன்னம் கொஞ்சம் சொல்லி விட்டு பின் மற்றவற்றிற்கு நகர்கிறேன். ஏனெனில் இது பற்றி நாம் மிகவும் பெருமைப் பட்டுக்கொள்கிறோம். தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே இப்படத்தின் தொழில் நுட்பமும், கற்பனையும் விஞ்ஞானத்தைக் கலையாக்கியதாகவும், எல்லாம் ஒரு உச்ச கட்ட சாதனையென்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. குத்தாட்டம், ஸ்டண்ட் காட்சிகள், வட்டாரப் பேச்சு, கிராமம் , காமிக் என்று எந்த ஒன்று ரசிகப் பெருமக்களின் வரவேற்பைப் பெற்று அதிக வரும்படிக்கு வழி காட்டுகிறதோ, அதையே பின் வரும் நிறைய படங்கள் காப்பி அடிப்பது நம் சினிமா மரபு ஆதலால், இனி நிறைய எந்திரன் காப்பிகள் வருவதை எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அதன் ஒவ்வொரு அத்தியாயமும் இப்படித்தான் நீளும். எந்த மசாலா சர்க்கு வெற்றியடைந்து, காபி செய்யப்பட்டு எத்தனை வருடங்களுக்கு எத்தனை படங்களுக்கு அது நீடித்தது பின் எந்த மசாலா எந்த வருடம் எந்தப் படத்தில் புகுந்து வெற்றிக்கு வழிவகுத்தது என்று அந்த அத்தியாயங்கள் நீளும்.  ஆனால் இது எப்படி ஒரு தமிழ் சினிமாவின் சாதனையாகும் என்பது முக்கியமான கேள்வி. இந்த படத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகச் சொல்லப்படும் சமாசாரங்கள் எதுவும் தமிழ் மண்ணைச் சேர்ந்ததில்லை. தமிழனின் படைப்பல்ல. நான் ரஜனி சாரைச் சொல்லவில்லை. அவர் இங்கு தான் தன் சினிமா வாழ்வையும் வளத்தையும் கண்டவர். அவரும் நம் தமிழ் அரசியல் வாதிகளைப் போல, தமிழைக் கோஷமாக்கியே தன் அனேக காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அவர் மூச்சிலே தமிழ் இருக்கும் என்று பிரகடனம் செய்தவர். தமிழ் தான் இருக்குமே தவிர காவிரித் தண்ணி இருக்காது. அது கன்னடம் தான் பேசும். ஆக, காவிரித்தண்ணி பற்றி மட்டும் பேசிவிடக்கூடாது. அதற்கு அவரை மட்டும் தனித்துக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நம் அரசியல் தலைவர்களும், தமிழினத் தலைவர்களும் மிகவும் அடக்கித் தான் வாசிக்கிறார்கள். காவிரி, பாலாறு, ஈழத் தமிழர் பற்றியெல்லாம் ஏதும் வீராவேச முழக்கங்கள், அறை கூவல்கள் விடுவதில்லை. ஆனால் எப்படி, நமது உலக நாயகனின் ஒவ்வொரு படத்துக்கான அவதார வேடங்கள் அனைத்துக்கும் ஹாலிவுட் ஒப்பனைக் காரர்
எவராவது அழைத்து வரப்பட்டால் அது எப்படி தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப அல்லது கலைநுட்ப சாதனையாகும்? இதுகாறும் அனேகமாக எல்லா வேஷங்களும் போட்டுத் தீர்ந்துவிட்டதால், உலக நாயகன் இஸ்பானிய காளைச் சண்டை வீரராகிறார். மன்மதன் விட்ட அம்பு படத்தில் எம்ஜிஆர் சிங்கத்தோடு சண்டை போடவில்லையா? அதுக்கும், முன்னால், எப்பவோ முப்பது நாற்பதுக்களில், ஒரு சிறு குழந்தையாக, மூன்று வயசுக் குழந்தை, கண்ணன் ஒரு  ராக்ஷஸ பாம்பை வளைத்துப் பிடித்து அதன் மேல் காளிங்க நர்த்தனம் செய்யவில்லையா? வேண்டியது ஒரு தேர்ந்த காமிராமேன். அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரோ இல்லை உலக நாயகனோ, பாகிஸ்தானிலிருந்து வரும் கோரி, கஜனி ஏவு கணைகளை  அவை வரும் வழியிலேயே ஆகாயத்துக்கு எம்பி குதித்து அவை தாக்கும் முன்னரே தம் ஒற்றைக் கையில் பிடித்து விடுவார்கள். பாபா படத்தில் இதன் ஆரம்பங்களைப் பார்க்கவில்லையா என்ன? இதெல்லாம் கிடக்கட்டும். சினிமாவில் வரும் பீதாம்பர வித்தைகள் இவை. அந்த வித்தை காட்டுபவரோ நம்மூரில் பிறந்தவர், வளர்ந்தவர். வித்தை கற்றுக் கொண்டவர். எனவே அதைத் தமிழனின் சாதனையாகக் கொள்ளலாம். ஆனால் உலக நாயகன் படங்களுக்கு வந்து அவருக்கு ஒப்பனை செய்யும் ஹாலிவுட் காரர் யாரோ ஒருத்தர். அதை நம்மது என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது? சன் பிக்சர்ஸ் காரரிடம் 150 கோடியோ என்னவோ அநாயசமாக அள்ளிவிட பணம் அம்பாரம் அம்பாரமாகக் கொட்டிக்கிடக்கிற காரணத்தால் சங்கர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்கு (எனக்கு இதற்கெல்லாம் தமிழில் என்ன சொல்வது என்று தெரியாது.

இந்த என் குறைபாட்டை கேடிவி, சன் பிக்ஸர்ஸ் நடத்துபவரோ, அல்லது அவரது தாத்தாவுமோ கோவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எந்திரன் படத்துக்கான மொத்த செலவில் 40 சதவிகிதம் செலவழிக்க முடிகிறது. .சாகஸ காட்சிகளை உருவாக்க மாட்ரிக்ஸ் படத்தில் வேலை செய்த யுவென் வோ பிங்கையும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவை க்ராஃபிக்ஸ்க்கும், அழைத்து வந்து செய்து கொண்டால் அது எப்படி சங்கருக்கோ சன் பிக்சர்ஸ்க்கோ, ரஜனி சாருக்குமோ பெருமை சேர்க்கும்?. இதெல்லாம் போகட்டும். ஐஸ்வர்யா ராய் இதில் காட்சி தரும் 57 வித உடையலங்காரங்களையும் சூப்பர் ஸ்டார் ரஜனி ஸார் தோன்றும் 55 வித உடைகளையும் வடிவமைத்து தயார் செய்து கொடுத்தது மேரி ஈ.வொட் என்பவர். எங்கிருந்து வந்தாரோ தெரியாது. ஆக ரோபோ வும் இறக்குமதி. அதன் இயக்கமும் தந்திர, சாகஸக் காட்சிகளும் இறக்குமதி செய்த பல தொழில் நுட்ப மூளைகளின் வேலைகள்.போயும் போயும் உடையலங்காரங்கள் கூட இறக்குமதி. என்றால் அதில் நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அதிலும் அந்த உடைகள் எந்த நியாயத்துக்கோ தர்க்கத்துக்கோ கட்டுப் பட்டவை அல்ல. ஏதோ இஷடத்துக்கு கற்பனை செய்து கொள்ளப் பட்டவை. க்ராஃபிக்ஸூக்கு இந்தியா தான் சிறந்த இடம் என்றும் அதிலும் சென்னை தான் முன்னணியில் இருக்கிறது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவையும் யுவென் வோ பிங்கையும் தான் நாடவேண்டியிருந்திருக்கிறது.  ஏனெனில் நம்ம படம் 150 கோடி படம் உலகத் தரத்துக்கு இருக்கவேண்டுமே. இவ்வளவையும் இறக்குமதி செய்துவிட்டு உலகத் தரத்துக்கு தயாரித்திருக்கிறோம் என்று பெருமையடித்துக்கொள்வது எப்படி சாத்தியமாகிறது? அதில் என்ன நியாயம் இருக்கிறது. பணம் தான் நம்மது. ஐஸ்வர்யா ராயைக் காதலிக்க ரோபோவுக்கும் ரஜனிசாருக்கும் போட்டி என்ற கற்பனையும் நம்மூர் கற்பனை. தான். சரி.  வேறு எது இதில் நம்மது? பணம் கொடுத்து அமெரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கியதைக் காட்டி இது உலகத் தரத்துக்கு நான் செய்ததாக்கும் என்றால் அது கேலிக்கூத்தல்லவா? வெட்கப் படவேண்டாமா? I

ஆக, இதில் நம்மது, தமிழ்  சினிமா சம்பந்தப்பட்டது எது? கலப்படமில்லாத தமிழ்ச் சரக்கு எது என்று பார்த்தால் அது ரஜனி சாரும்,  சங்கரின் கற்பனை வளமும், வழக்கமான தமிழ் வெற்றிப் படத்துக்கான ஆவி வந்த ஃபார்முலாக் கதை இருக்கே பின்னர் அந்தக் கதைக்கு தாளிக்கப்படும் கடுகு உளுத்தம் பருப்பு சமாசாரமாக, பாட்டு, டான்ஸ், சாகஸ காட்சிகள், எல்லாம். அது தான். அது இந்தப் படத்துக்கு மாத்திரம் இல்லை.எல்லாத் தமிழ் படத்துக்குமான தாளிப்பு தான். மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்கள். ஆக எந்திரன் படத்தை மாத்திரம் தனிப்படுத்திப் பேசுவதில் அர்த்தமில்லை. எல்லா தமிழ் சினிமா படங்களையும் கணக்கில் கொண்டு தான் சொல்கிறேன்.

தமிழ் சினிமா மாறிக்கொண்டு வருகிறதாக்கும். என்னென்னவோ புது புது சோதனைகள் செய்கிறார்களாக்கும் என்கிறார்கள். சமீபத்தில் மகிழ்ச்சி என்று ஒரு படம். நீல பத்மனாபனின் தலைமுறைகள் என்னும் நாவலை படமாக்கியது என்றார்கள். தமிழ் சினிமாக் கதைகளுக்கும் தலைமுறை நாவலுக்கும் எப்படி முடிச்சு போட முடியும், ஒன்று மொட்டைத் தலை, இன்னொன்று முழங்கால், என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அதில் வரும் ஒரு ஆச்சி பிரமாதமான சிருஷ்டி. நாவல் முழுதும் வியாபித்து இருப்பவள். தலைமுறைகள் நாவலின் மைய பாத்திரம். தமிழ் இலக்கியத்திலேயே உன்னத சிருஷ்டிகளில் ஒன்று. ஜானகிராமனின், ஜமுனா போல, புதுமைப் பித்தனின் கந்தசாமிப் பிள்ளை போல, இமையத்தின் ஆரோக்கியம் போல. இந்த ஆச்சியைத் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வர, தமிழ் சினிமாக் காரர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லை. அவர்கள் புத்தி சுவாதீனத்தில் உள்ளவர்கள் தான் தம் வழிவந்த வெற்றிக்கு உத்தரவாதம் தரும் மரபைப் பேணுபவர்கள் தான். ஆகவே, கஞ்சா கருப்புக்கு தலைமுறை நாவலில் என்ன வேலை என்று கேட்கமுடியாது. அதன் சினிமா அவதாரமான மகிழ்ச்சியில் அவசிய வேலை உண்டு. நான் பார்த்த இரண்டு அல்லது மூன்று நிமிட துணுக்கில் அந்த ஆச்சி நூற்றுக்கு நூறு சதவிகித தமிழ் சினிமாவில் ஆகி வந்த ஆச்சி தான். தலைமுறை நாவலின் ஆச்சி அல்லள்.

நந்த லாலா பாருங்கள். இது உலகத் தரம் வாய்ந்த க்ளாஸிக் என்று இங்கு சில அன்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சிபாரிசுக்காகக் கட்டாயம் பார்ப்பேன். அது தொலைக் காட்சியில் வரும்போது. தியேட்டருக்கு போய் அல்ல. ஆனாலும் நான் பார்க்கக் கிடைத்த சில நிமிட துணுக்கு எனக்கு உற்சாகம் தருவதாக இல்லை. இயல்பு என்பது நம் வசத்தில் சிக்க மறுக்கிறது. எதைச் செய்தாலும் ஒரு நாடகத் தன்மை கட்டாயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அது படம் முழுதும் வியாபித்து பயமுறுத்துகிறது. இயல்பாக இருப்பது என்பது தமிழனுக்கு என்றுமே சாத்தியமாகாத ஒன்று என்று தோன்றுகிறது. இது என்ன இன்று நேற்று பீடித்த வியாதியா என்ன?

இதன் உச்ச கட்டமே “அவள் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள்” சமாசாரத்தை அறுபது வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட உலக நாயகன் அதில் தான் கண்ட சினிமா நயத்தை இன்றும் நினைத்து மலைத்து நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். யார் சொன்னது? உலக நாயகன் தான். ஆக, முன்னால் ஜெயகாந்தன் சொன்னது போல, திடீரென தமிழன் எட்டடிக்கு உயர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பார்க்கவேண்டும்.


மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (13)

வெங்கட் சாமிநாதன்கமல் ஹாஸன் சாரைப்பற்றி எழுத வேண்டும் என்று அன்பர்கள் சொல்கிறார்கள். எழுதலாம் தான். சினிமா சம்பந்தப்பட்ட  ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரைப் பற்றியும் எழுத நிறையவே இருக்கும். அது சுவாரஸ்யமாகவும் மாத்திரமே இங்கு தமிழ் சினிமாவைப் பற்றி விஷயத்தில் இருக்கும். சுவாரஸ்யம் என்று நான் சொன்னது அவர்களது கலை பற்றி அல்ல. அது பற்றிச் சொல்ல யாரைப்பற்றியும் என்ன இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ் சினிமாவில் கலைஞராக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள் என்று சொல்லப் புகுந்தால், ஒரு சிலர் இருக்கிறார்கள் தான். அது அவர்களது சங்கீத ஆளுமை, வியாபகம் பற்றிய தாகத்தான் இருக்கும். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு கால கட்டம் வரை அதில் இடம்பெற்ற சங்கீதம் மாத்திரமே இன்று தமிழ் சினிமாவை இன்றும் பொருட்படுத்தத் தகுதியான ஒன்றாக ஆக்கியிருக்கிறது. அது தவிர, வேறு காரணங்களுக்காக, ஒரு சிலர் தனி மனிதராக உயர்ந்து நிற்பவராகக் காணப்படுவார்கள். அந்த தனிமனித குணச் சிறப்புக்களைப் பற்றிச் சொலவதாக இருக்கும்.

1930-லிருந்து இன்று வரை ஒரு 80 வருட கால தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி கலைஞர்களாக(சங்கீதம்), தனிமனிதர்களாகப் போற்றுதற்குரியவர்கள் என ஒரு சிலர் தான் கிடைப்பார்கள். இத்தகைய பாக்கியம் பெற்றது தமிழ் சினிமா என்பது நம் பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆனால் நடிகர்களாக, சினிமா கலைக்கு வளம் சேர்த்தவர்களாக எத்தனை பேரைச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இதை நான் எப்படி விளக்கிச் சொல்வது புரிய வைப்பது, புரிய வைப்பது என்றால் நான் ஏதோ Unified Field theory ஐப் பற்றிச் சொல்லப் புகுந்து  உங்களுக்குப் புரியாமல் போய் விடுமோ என்ற வகையான கவலை இல்லை. நான் இங்கு சொல்வதெல்லாம் மிகச் சாதாரண, பொதுப்புத்திக்குப் புலப்படும் விஷயங்கள் தான். உண்மையில் மூடி மறைக்காமல் சொல்வதென்றால், இந்த தமிழ் சினிமாவும், அரசியலும் - (இரண்டும் ஒரே பைத்தியக்காரத்தனத்தின் இருமுகங்கள் தான்} – தமிழ் நாட்டில் எல்லோரையும் கரும்புள்ளி செம்புள்ளி குத்திய சட்டியைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு ,கோமாளித்தனமாக தெருவில் நடந்துகொண்டு செல்லும் மனிதர்களாக ஆக்கியிருக்கின்றன. நான் சொல்வது, இந்தத் தலையில் கவிழ்த்துக்கொண்ட சட்டி, கோமாளித்தனம் எல்லாம் வேண்டாம், சாதாரணமாக இருங்கள் என்பது மட்டுமே. எனவே இதில் புரிவதற்கும் புரியாது போவதற்கும் ஏதும் இல்லை. மேலும் இதை நான் தான் சொல்லவேண்டு மென்பதும் இல்லை. தமிழ் சினிமாவின் காட்சி ஒவ்வொன்றையும் சாதாரண பொதுப்புத்தி உள்ள, அவன் படிக்காதவனாக இருந்தாலும் கூட, “ஏங்க இவங்க இப்படியெல்லாம் செய்யறாங்க?” மறை கழண்ட கேசுங்களா இவங்கள்ளாம்” என்றுதான் கேட்பான். இப்படிக் கேட்காத ஜீவன்கள் படித்தவர்களும், சினிமாக்காரர்களும் தான் அவர்கள் எல்லாம் மேதைகள், புத்தி ஜீவிகள் என்று உலா வருகிறவர்கள்.

ஒரு பெரிய சிக்கல், தமிழ் மொழி சினிமாக் காரர்களாலும், அரசியல் தலைவர்களாலும் மிகவும் கேவலப்பட்டு, ஆபாசப் படுத்தப்பட்டு, மிக்வும் மலினப்பட்டு, அர்த்தமிழந்து கிடக்கிறது. கலை, நடிப்பு, உணர்ச்சி, கலைஞர், சினிமா என்றெல்லாம் வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படும் போது தமிழர்களுக்கு, இந்த வார்த்தைகள் தரும் அர்த்தங்கள், தமிழ் மொழி ஒருகாலத்தில் கொண்ட அர்த்தங்களுக்கு முற்றிலும் வேறாக, ஆபாசமும் மலினமும் படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கெல்லாம் அகராதி அர்த்தம் சொல்லி விளக்கி புரியவைப்பது என்பது சாத்தியமில்லாதது. அவ்வப்போது நான் எழுதி வரும்போது எந்த வார்த்தைகளை எதற்கு உபயோகப்படுத்துகிறேன் என்று பார்த்து அவரவர்களே யூகித்துப் பொருள் கொண்டால் தான் உண்டு. .

நடிப்பு என்றால், அதிலும் சினிமாவில் நடிப்பு என்றால் நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன்?. தமிழ் சினிமாவும் ஹிந்தி சினிமாவும் பார்த்துப் பழகிய மனங்களுக்கு நடிப்பு என்றால் என்ன பதிவுகள் இருக்கும்? இடையில் நமக்குப் பாலமாக இருக்கும் மொழி இதில் என்ன உதவி செய்யக் கூடும்? என்ற சந்தேகங்கள் தான். Good Earth படத்தில் பால் முனி வாங் லங்காக நடித்துப் பார்த்தது ஏதோ ஜன்மத்தில். இருப்பினும் அந்த ஒரு நாள் பால் முனியை இன்னமும் நினைவுகள் அழிக்கவில்லை. Becket  Larence of Arabia, Last Emperor போன்ற படங்களில் பார்த்த நினவுகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை எப்படிச் சொல்வது?. நம்ம ஊருக்கே திரும்பலாம். நஸருதீன் ஷா தில்லி தேசிய நாடகப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றவர். நாடகப் பயிற்சிதான் பெற்றவர். இருப்பினும்,  அவரை ஸாம்வேல் பெக்கெட்டின் Waiting for Godot நாடகத்திலும் பார்த்திருக்கிறேன். அங்கூரிலிருந்து இன்று வரை பல ஹிந்தி படங்களிலும் பார்த்திருக்கிறேன். நாடகப் பயிற்சியே பெற்றிருந்தாலும், சினிமாவில் நடிக்கும் போது அவர் நடிப்பு படத்திற்குப் படம், ஏற்கும் பாத்திரத்திற்கு பாத்திரம் பெறும் மாற்றங்களையும், பார்த்திருக்கிறேன். பின் இடையில் பெக்கெட்டின் Waiting for Godot நாடகத்தில் நடிக்கும் போது அவர் நடிப்பு மறுபடியும் சினிமாவை மறந்து நாடக மேடையில் ஏறியதும் நாடகத்திற்கும் அதில் தான் ஏற்றுள்ள பாத்திரத்திற்கும் ஏற்ப அவர் நடிப்பும் மாறுவதையும் பார்த்திருக்கிறேன். இது நடிகராக மாத்திரமே. இந்த மாற்றங்களை நாம் எத்தனை பேரிடம் தமிழ் நாட்டில் பார்த்திருக்கிறோம் என்றும் நினைத்துப் பார்க்கிறேன். பதில் எனக்குக் கிடைப்பதில்லை.

இதன் பின்னும் அவர் சினிமாவையும், நாடகத்தையும், தியேட்டரை  விட்டு வெளியே நின்று ஒரு சாதாரண வெளி உலக மனிதனாக நாடகத்தையும் சினிமாவையும் தனக்கும் அவற்றுக்கும், பின்  அவற்றிற்கும் வெளியே உள்ள சமூகத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான அர்த்தங்களையும், உறவுகளையும் பற்றி சிந்திப்பதையும் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இது போல ஹிந்தி சினிமா உலகில் இன்னும் சிலர், ஆனால் வெகு சிலர் இருக்கின்றனர். ஓம் பூரி, ஷாப்னா அஸ்மி, சௌமித்ரா சட்டர்ஜீ, போன்ற நடிகர்கள்,, பின் ஷ்யாம் பெனெகல், மிருணால் சென் போன்ற இயக்குனர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். அதிலும் ஷ்யாம் பெனெகல் விளம்பரத் துறையிலிருந்து வந்தவர். இவர்களெல்லாம் சினிமாவைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் ஒரே நோக்கில் பார்ப்பவர்கள். ஒன்றில் மர்றதன் தாக்கத்தைக் காட்டுபவர்கள்.

அதே சமயம் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் மிகத் திறமை உள்ள ஒரு நடிகர் என்று நான் எண்ணி பரவசம் அடைந்திருந்த ஷிவ் புரி என்ற நடிகர், அவரை அறுபதுகளிலிருந்து தர்ம் வீர் பாரதியின் அந்தா யுக், மோலியேரின் கஞ்சூஸ் போன்ற நாடகங்களில் பார்த்து மலைத்து வாய் பிளந்த வியப்பில்  இருந்த எனக்கு அவர் பிழைப்பை நாடி ஹிந்தி சினிமாவுக்கு போய் நம் தமிழ் சினிமா வீரப்பன், ரங்கா ராவ் போல ஹிந்தி சினிமா, அப்பாவாகி, வில்லனாகி பாழாய் போனதையும் பார்க்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.. சினிமாவுக்கு தன் நடிப்பை மாற்றிக்கொள்ள முடியுமா என்பதை அறிய முடியாதவாறு ஹிந்தி சினிமா வில்லன் பாத்திரங்கள் தான் அவருக்குக் கிடைத்தது. அதற்கு ஒரு நம்பகமான உருத் தரும் வகையில் ஹிந்தி சினிமா இருக்கவில்லை. அப்போது ஹிந்தி சினிமாவில் ஷ்யாம் பெனெகலோ, மிருணால் சென்னோ, அபர்ணா சென்னோ இன்னும் உதயமாகி யிருக்கவில்லை. அது ராஜ் கபூர், தேவ் ஆனந்த் காலம்.  

எதற்காக இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், சினிமா, நாடகம், நடிப்பு இவற்றை அர்த்தமுள்ளதாக ஆக்கி, அவற்றுக்கும் வெளி உலக வாழ்க்கைக்கும், தன் சொந்த வாழ்க்கைக்கும் இடையேயான உறவையும் அர்த்தமுள்ளதாகக் காணும், ஆக்கும் சிந்தனைகள் உள்ள மனிதர்கள் இவர்கள். அப்படி யாரும் தமிழ் சினிமா, உலகில் இருக்கவில்லை அன்றும் இன்றும். அந்நிலையில் தான் நான் சினிமாவில் இருப்பவரை அவரது நடிப்பைக் கலையாக, அவரை கலைஞராக நான் காண்பது, சொல்வது சாத்தியம்.

ஒரு காலத்தில் இருந்தார்கள். தமிழ் நாடக உலகில். அக்கால நாடகங்களை நாடகங்களாக நாம் இன்று மதிக்க மாட்டோம். ஆனால் அவர்களில் சிலருக்கு பாஸ்கர தாஸ் போன்றவர்களுக்கு ஒரு தாகம் இருந்தது. தாம் வாழும் வாழ்க்கைக்கு, சார்ந்திருக்கும் நாடகங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். தனிப்பட்ட முறையில் அவர்கள் கூத்தாடிகள் இல்லை. பெரிய மனிதர்கள். லக்ஷிய புருஷர்கள். தாம் வாழும் வாழ்க்கையால், தாம் பிழைக்க வந்த நாடகத்தால், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க வந்தவர்கள். ஆனால் அதெல்லாம் பிரசாரமாகைப் போயிற்று. கலையாக இருக்கவில்லை. பிரசாரத்தால் பிழைத்தவர்கள் இல்லை. ஆனால் தம்  பிரசாரத்தால் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவர்கள். அப்படி இருந்த நாடக சினிமா கலைஞர்கள் தமிழ் நாட்டில் சென்ற நூற்றாண்டு முப்பது நாற்பதுகளில் ஒரு சிலர் இருந்தார்கள்.

 ன்னும் அதிக எண்ணிக்கையில் தம் சங்கீதத் திறத்தால் நாடகத்தையும் சினிமாவையும் அந்த நாடகங்களும், சினிமாவும் கலை சார்ந்ததாக இல்லாது போனாலும், ஏதோ ஒரு கலை அம்சம், சங்கீதம் என்ற கலை அம்சம் உள்ளடக்கிய ஒன்றாக ஆக்கியிருந்தார்கள். அவை அந்நாளைய நாடக ரூபத்திலும், பின்னர் அவை புகைப்படம் எடுக்கப்பட்ட நாடகமாக ஆன அந்நாளைய சினிமாவிலும், கலைஅனுபவம் தரும், இசை ரூபத்தில் கதை சொல்லப்பட்டதால், அவற்றை இசை நாடகம் என்ற கலைவடிவாக ஏற்றுக்கொள்வதில் தடை ஏதும் இல்லை. அவை சினிமாவாக இல்லாது போனாலும். மேலும் அதில் பங்கு பெற்ற சங்கீத கலைஞர்கள் கலைஞர்களாகவே இருந்தார்கள். தண்டபாணி தேசிகர் தண்டபாணி தேசிகராகவே இருக்க முடிந்திருக்கிறது அந்த நாற்பதுக்களில். அவரை யாரும் ”கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா? என்று பாடச் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அவர் பாடியிருக்க மாட்டார். பாபநாசம் சிவன் சினிமாவுக்கும் தான் பாட்டு எழுதினார். இசை அமைத்தார். ஆனால் அவரை யாரும் ருக்குணி ருக்குமினி ஷாதிகி ராத் க்யா ஹுவா” என்றெழுதி அதற்கு இசை அமைக்கச் சொல்லவில்லை. அதற்கு இந்த யுகத்தில் ஒரு ரஹ்மான் ஸார் வரவிருக்கிறார். ”ரண்டக்கா ரண்டக்கா, அண்டங்காக்கா கொண்டைக்காரி” என்றும் பாட்டெழுத இந்த யுகத்தில் ஒருவர் தோன்றவிருக்கிறார்.

 ஒரு காலத்தில் தான் கதை எழுதும் பாட்டு எழுதும் படத்திற்கு கே.பி.சுந்தராம்பாள் தான் பாடவேண்டும் என்று அன்றைய கருணாநிதி சொல்ல, அதற்கு கே.பி.சுந்தராம்பாள், ”தெய்வத்தைப் பழிக்கும் எந்தப் பாடலையும் நான் பாடமாட்டேன்,” என்று மறுத்ததும் உண்டு. பின் கருணாநிதி சுந்தராம்பாளை தன் வாய் சாலகத்தால் தாஜா செய்ததும் உண்டு. அது அறுபது வருடங்களுக்கு முந்திய காலம். இப்போது அதற்கெல்லாம் அவசியமில்லை. சினிமா உலகமே கந்த சஷ்டிக்கு முருகன் ஆலயத்துக்கு முன் கூடும் பக்த கோடிகளாக கோபாலபுரத்தாரை வாழ்த்தி பாசுரம் பாடும் கூட்டமாகியுள்ளது. அது ஒரு காலம். அந்த சினிமா என்னவோ வாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் நடிக்கத் தெரியாத ஒருவராக இருந்த போதிலும் பாடத்தெரிந்த ஒருவர் “மாட்டேன்” என்று சொன்ன காலம் அது. அவர்களுக்கும்  தம் வாழ்க்கைக்கும் பிழைக்க வந்த நாடகமோ சினிமாவோ அதற்கும் ஒரு உறவு உண்டு, அர்த்தம் உண்டு என்று நினைத்தார்கள். கே.பி.சுந்தராம்பாள் பள்ளிப் படிப்பு கூட இல்லாதவர் தான். படிப்பில்லாதவர்களிடமும் ஒரு கலாசாரமும் பண்பாடும் நாகரீகமும் ரத்தத்தில் ஊறியிருந்த காலம்  அந்தநாகரீகமும் கலாசாரமும் இப்போதைய சந்தர்ப்பத்தில் நமது கமல்சாரிடமும் இல்லை என்பதைத் தான் சொல்ல வருகிறேன். அதற்குத்தான் இவ்வளவு பீடிகையும்..

வெளி உலகில் வயிறு பிழைக்க கால்வைக்கத் தான் வேண்டும். ஆனால் அதே சமயம் அந்த வெளி உலகத்துடன் அவனுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அது தன்னையும் தான் வாழும் உலகத்துடனான தன் உறவுக்கு அர்த்தம் இருக்கச் செய்யவேண்டும். இரண்டையும் தனனையும் தான் வாழும் உலகத்தையும் மேம்படுத்த வேண்டும். வளப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை பரவலாக இருந்த காலம்..

Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>