(தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர்.  அன்னாரது 115 ஆண்டு பிறந்த நாள் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது)

தந்தை செல்வநாயகம்தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  இருபத்தேழு ஆண்டுகள் (1956 - 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 - 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 3 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம்.  தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கிறோம். சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவால் கொண்டு வந்து நிறேவேற்றப்பட்ட 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அதே ஆண்டு நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்து வாக்களித்தவர். அப்போது தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.  அதன் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார்.  1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,000 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பொன்னம்பலம். "கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக" என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது.  ஆனால் 1948  இல் அதே அய்க்கிய கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயக்காவோடு அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசினார்.  பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.  அவர்களது வாக்குரிமை பறிபோவதைப் பற்றி அவர் எண்ணிப்பார்க்கவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டி.எஸ. சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது.  ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று முழங்கிய திரு. பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதன் காரணமாக "தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா" என்ற நிலைக்குத் தாழ்த்தினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற  தேர்தல் (திருத்தம்)   சட்டத்தில் (Parliamentary Elections (Amendment) Act of 1949)  ஒற்றைவரித் திருத்தத்தைக் கொண்டு வந்து மலையகத் தமிழர்களது வாக்குரிமையையும் டி.எஸ். சேனநாயக்கா பறித்தார். ஏற்கனவே (1948) அமைச்சரவையில் மீன்பிடி கைத்தொழில்  அமைச்சராகச் சேர்ந்துவிட்ட திரு.பொன்னம்பலம் இந்தச் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் "இன்று மலைநாட்டுத் தமிழர்கது   கழுத்துக்கு கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சிமொழிபற்றி முடிவு செய்யும் நேரம் வரும்போது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்" எனத் தீர்க்கதரிசனத்தோடு பேசினார்.  1956 ஆம் ஆண்டில் திரு. பண்டாரநாயக்கா "சிங்களம் மட்டும்" சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் தீர்க்கதரிசனம் உண்மையாகியது. ஜி.ஜி. பொன்னம்பலத்துக்கு இந்த தீர்க்கதரிசனம் இருக்கவில்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது குடியுரிமைச் சட்டம் சுதந்திரம் பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் டி.எஸ். சேனநாயக்க  இந்தச் சட்டத்தின் மூலம் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில்  தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியதன் மூலம் தமிழர்களது நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தைப் பாதியாகக் குறைத்தார். பின்னால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கும்  இன முரண்பாடுகள் கூர்மை அடைவதற்கும் இந்தச் சட்டம் வழிகோலியது. 

மலையகத் தமிழரை சிங்கள ஆளும் வர்க்கத்திற்குக் காட்டிக் கொடுத்த திரு. பொன்னம்பலத்தின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலை எதிர்க்கு முகமாகத்  தந்தை செல்வநாயகம் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய தந்தை செல்வநாயம் 1949 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் நாள் தமிழ் அரசுக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், வட - கிழக்கு (மாகாணங்கள்) அவர்களது பாரம்பரிய தாயகபூமி, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஒழித்து விட்டு இணைப்பாட்சி அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு தன்னாட்சி அரசை நிறுவுவது தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் இலட்சியம் எனப் பிரகடனப் படுத்தப்பட்டது.

வட-கிழக்கில் சிங்கள அரசின் ஆதரவுடன் இடம்பெறும் பாரிய சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதென்பது அந்தக் கட்சியின் அடுத்த முக்கிய குறிக்கோளாக இருந்தது.

தமிழ் அரசுக் கட்சியின் கொடியாக யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்களது இடபக் கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர்தான் இது மூவர்ணக் கொடியாக மாற்றப்பட்டது.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தந்தை செல்வநாயகம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.  பார்த்திருக்கவும் மாட்டார்கள். 

மெல்லிய ஆனால் நெடுத்த உருவம். நேர்க்கோடு வகுத்து வாரிய தலை. சற்றுப் பெரிய காது. கவர்ச்சிகரமான முகம். சந்தன நிறம். பட்டு வேட்டி, பட்டுச் சால்வை, பட்டுச் சட்டை. வயது அய்ம்பதைத் தாண்டிவிட்டாலும்  இளமை குன்றாத தோற்றம்.

அய்ம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் தமிழரசுக் கட்சி மேடைகளில் தோன்றிய தந்தை செல்வாவின் இந்தக் கம்பீரமான தோற்றத்தைப் இளைய தலைமுறைகள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இளமை குன்றி முதுமை எய்தி, நடை மெலிந்து, மேடைகளிலும் சரி, நேரிலும் சரி, ஒவ்வொரு சொல்லாகத் தட்டுத் தடுமாறி மெல்லிய குரலில் பேசும் தந்தை செல்வாவைத்தான் பலருக்குத் தெரியும். பிற்காலத்தில் அவரைப் பீடித்த பார்க்கின்சன் நோய்  (Parkinson’s disease) தந்தை செல்வாவின் உடல் நிலையையும், நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வெகுவாகப் பாதித்தது.

இதனால் போலும் தந்தை செல்வநாயகம, தந்தை பெரியாரைத் தமிழ்நாட்டில் சந்தித்துக் கொண்டபோது தன்னைவிட வயது குறைவாக இருந்தும் தன்னைவிட மூப்பாகத் தெரிகிறார் என்று பெரியார் சொல்லிக் கவலைப் பட்டார்.

தந்தை செல்வநாயகம் மட்டும் அரசியலுக்கு வந்திராவிட்டால், அல்லது 1948ஆம் ஆண்டு அன்றைய சிங்கள ஆட்சியாளரால் பத்து இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஆதரிக்க முடிவு செய்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.ஜி. பொன்னம்பலத்தோடு சமரசம் செய்து கொண்டு போயிருந்தால், அல்லது முரண்பட்டுக் கொண்டு அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டிருந்தால் தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் தடம் புரண்டிருக்கும் என்பதில் இருவித கருத்து இருக்க முடியாது.

தந்தை செல்வநாயகம் பிறந்தது மலேசியாவில். படித்தது யாழ்ப்பாணத்தில். தொழில் பார்த்தது கொழும்பில். மறைந்தது சொந்த ஊரான தெல்லிப்பளையில்.

கொழும்பில் உள்ள பிரபல்யமான  St.Thomas கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள்  கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் (Advocate)  பட்டம் பெற்று வெளியேறினார்.

தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த சிவில் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களுக்கே உரித்தான பந்தாவோ மேல்தட்டுக்குரிய படோபடமோ இன்றித் தனது கட்சிக்காரர் பக்கம் உள்ள நியாயங்களை சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் முன் எடுத்துக்காட்டுக்களோடு வழக்குரைத்து வழக்குகளை எளிதில் வென்றுவிடும் ஆற்றல் அவரிடம் அபரிமிதமாகக் காணப்பட்டது. இதனால் சக வழக்கறிஞர்கள் மட்டும் அல்லாது நீதிபதிகளும் அவரிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.

முப்பதுகளில் நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் திட்டம் அதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரிப் பிரதிநித்துவ முறையை ஒழித்து அனைவருக்கும் வாக்குரிமை (Universal suffrage) என்ற அடிப்படையில் சட்டசபைக்குத் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப் படுத்தியது. அதனை சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடுமையாக எதிர்த்தார்.  "டொனமூர் என்றால் இனித் தமிழர் இல்லை என்று பொருள்" (Donoughmore means Thamils No More) என்று குரல் எழுப்பினார். புதிய தேர்தல் முறையில் தமிழரின் பிரதிநித்துவப் பலம் பெருமளவு குறைந்தது. அமைச்சரவையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு நூற்றுக்கு நூறு சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவை உருவாகியது.  டொனமூர் அரசியல் யாப்பின் பின்னரே பெரும்பான்மை சிங்களவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அரசியல் அதிகாரம் தங்களது கையில் இருக்க வேண்டும் என எண்ணத் தொடங்கினார்கள்.

தமிழ் அரசுக் கட்சியின் தொடக்க காலத்தில் தந்தை செல்வாநாயகத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்களில் மூன்று  பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருவர் இரும்பு மனிதர் என்று  எல்லோராலும் அழைக்கப்பட்ட டாக்டர் இ.எம்,வி.நாகநாதன். இரண்டாமவர் கோப்பாய்க் கோமான் திரு.கு. வன்னியசிங்கம். மூன்றாமவர் இளம் சட்டத்தரணி வி.நவரத்தினம் இந்த மூவரும் தந்தை செல்வநாயகத்தின் வலது இடது கைகளாகச் செயல்பட்டார்கள்.

அய்ம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வழக்கறிஞர் தொழிலில் கைநிறையச் சம்பாதித்த பணத்தை தந்தை செல்வநாயகம் தண்ணீராகச் செலவழித்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் சம்பாதிக்கலாம் என்ற நியதி இருந்த கால கட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டுத் தன் செல்வத்தை இழந்தார்.

கொழும்பில் அய்ம்பது ஆண்டுகளாக வாழ்ந்த அவர் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் நினைத்திருந்தால் கொழும்பில் ஒன்றல்ல ஒன்பது வீடுகள் அவரால் வாங்கியிருக்க முடியும்.

கொழும்பு, தமிழர்களுக்கு அந்நியமான மண். வடக்கும் கிழக்குமே தமிழர்களுக்கு உரித்தான சொந்த மண். இது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர் கடைசிவரை கொழும்பில் வாடகை வீட்டில் இருந்ததற்கு அதுவே காரணமாகும். தனது பிள்ளைகள் தாங்கள் பிறந்த மண்வாசனையையும் மண்ணுக்குரிய பண்பாடுகளையும் மறக்கக் கூடாது என்பதற்காக பள்ளி விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தெல்லிப்பளைக்கு அவர்களை அனுப்பி வைத்து விடுவார்.

தந்தை செல்வநாயகத்திடம் தான் பெரிய தலைவர் என்ற எண்ணமோ, புகழ் பெற்ற கியூ.சி. என்ற பெருமையோ எள்ளத்தனையும் இருந்ததில்லை. காட்சிக்கு எளியவர் என்று சொல்வோமே? அதற்குத் தந்தை செல்வநாயகம் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அதில் மெய்ப் பொருள் காண்பது, சொல்பவர் உருவுகண்டு எள்ளாமை, சொல்பவரை இடை மறித்தல் செய்யாது எல்லாவற்றையும் பொறுமையோடு செவி மடுக்கும் பழக்கம் அவரிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன.

வேறு யாராவது குறுக்கிட்டுச் "சொன்னது போதும் அய்யாவுக்கு எல்லாம் விளங்கும்" என்று மற்றவர்கள் சொன்னாலும் "இல்லை. அவரைப் பேசவிடுங்கள்" என்று சொல்லிவிடுவார்.

சில சமயங்களில் கட்சித் தலைவர்களது குறைநிறைகளைப்பற்றித் தொண்டர்கள் முறைப்பாடு செய்வார்கள். அவற்றைப் பொறுமையோடு கேட்டுவிட்டு அவர் திருப்பிக் கேட்கும் கேள்வி "சரி நோயை சொல்லி விட்டீர்கள். அதற்குரிய மருந்தையும் சொல்லுங்கள்" என்பதுதான்.

கட்சித் தொண்டர்கள்,  நாடாளுமன்றத்துக்கு ஒழுங்காகப் போகாமலோ அல்லது தொகுதிகளுக்குப் போகாமல் தங்கள்  சட்டத் தொழிலைப் பார்ப்பதில் காலத்தைப் போக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி முறையிட்டால் அதற்கு தந்தை செல்வாநாயகம் இறுக்கும் பதில் "ஆட்களை இணக்கமுடியாது. உள்ளதை வைத்துத்தான் சமாளிக்க வேண்டும்."

தந்தை செல்வநாயகம் அரசியல் மேடைகளிலும் சரி, நீதிமன்றங்களிலும் சரி அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக நீதிமன்றங்களில் தேவைக்கு அதிகமாக ஒருவார்த்தைதானும் பேசமாட்டார். "எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறேம் மனிதர் இவ்வளவு சுருக்கமாகப் பேசிவிட்டு உட்கார்ந்து விட்டாரே வழக்கு வென்றமாதிரித்தான்" என்று ஏங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.

அவருக்கு வாலாயமான சில தமிழ் சொற்றொடர்களை தந்தை செல்வநாயகம் தனது பேச்சில் அடிக்கடி பயன்படுத்துவார். "அவர்கள் எங்களை அழிக்க நினைப்பது துலாம்பரமாகத் தெரிகிறது" "எங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவது என்பது ஒரு வில்லங்கமான காரியம்" "சிங்கள மேலாண்மையை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் இல்லாவிட்டால் அழிந்து போவோம."

தந்தை செல்வநாயகம் மதத்தால் கிறித்தவராக இருந்தாலும் தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் ஆர்வமுள்ளவர். கர்நாடக இசை சரி, நாதசுர இசை சரி இரண்டிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் நாதசுரக் கச்சேரியை மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து  கொண்டு ஆடாமல் அசையாமல் மணித்தியாலக் கணக்கில் கேட்டு மகிழ்வார்.

தமிழ்ப் பண்பாடு காப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு திருமணம் ஆகி நாலாம் நாள் சடங்கில் மேற்கத்தைய பாணியில் மேசையில் பீங்கான் கோப்பை முள்ளுக் கரண்டி சகிதம் தனது மாமனார் விருந்து ஏற்பாடு செய்திருந்ததை விரும்பாது தனது புது மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டது ஆகும்.

தந்தை செல்வநாயகத்தின் இந்தக் கொள்கைப் பிடிப்பு அரசியலிலும் இருந்தது. சந்தர்ப்பவாதம், சமரசம் அவரது அரசியல் அகராதியில் இல்லாத  சொற்கள். முடிவு மட்டுமல்ல அதனை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாகும். 

1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்காவின் புதிய ஒற்றையாட்சி யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக தந்தை செல்வநாயகம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித்தள்ளி தமிழ்மக்கள் ஆதரவு யார் பக்கம் என்பதை எண்பிக்க இடைத் தேர்தல் நடாத்துமாறு ஆட்சியாளருக்கு அறை கூவல் விடுத்தார். மூன்று ஆண்டுகள் காலத்தைக் கடத்திய பின்னர் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் தன்னோடு எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளரை 15,000 க்கும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். இப்படி இடைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் வி. பொன்னம்பலம் சில ஆண்டுகள் கழித்து தமிழீழக் கோரிக்கையை ஏற்று அதனை முற்றாக ஆதரித்தார் என்பது தந்தை செல்வாநாயகத்தின் அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அவரது அரசியல் எதிரிகளும் தந்தை செல்வநாயகத்தின் கொள்கை கோட்பாட்டை விரும்பாவிட்டாலும் அவரது நேர்மையில் ஒருபோதும் அய்யப்பட்ட கிடையாது. தமிழ் மக்கள் அவரை "ஈழத்துக் காந்தி"என்று அன்போடு அழைத்தார்கள்.

முன்னர் கூறியதுபோல தந்தை செல்வநாயகம் அரசியலுக்கு வந்திராது தான் உண்டு தனது தொழில் உண்டு குடும்பம் உண்டு என்று இருந்து பின்னர் தன்னைத் தேடிவந்த உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியை ஏற்று ஓய்வு பெற்றிருந்தால் தமிழினத்தின் அரசியல் வரலாறு நிச்சயமாக மாலுமி இல்லாத படகுபோலத் திசை மாறிப் போயிருக்கும்.

சுயநலத் தமிழ்த் தலைவர்களுக்கு பணம், பதவி, பட்டங்கள் கொடுத்து முழுத் தமிழினத்தையுமே சிங்கள ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கியிருப்பார்கள். அதன்பின் தமிழர்களை தாலாட்டுப்பாடித் தூங்க வைத்து கழுத்தை அறுத்திருந்திருப்பார்கள். தமிழினம் மீளா அடிமைத் தளையில் கட்டுண்டு அழிந்து போயிருக்கும்.

இதைத் தடுத்தி நிறுத்தி குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்து, சிறை சென்று, உடல் நலம் கெட்ட போதும் தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச்சென்று சுதந்திரத் தனித் தமிழீழமே தமிழினத்தின் முடிந்த முடிவு அதுவே தமிழர்களுக்கு விடிவு என்று கடைசி உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்தவர் தந்தை செல்வநாயகம். ஆனால் இன்று முதலுக்கே மோசம் வந்துள்ளது. தமிழர்களது இருப்பே கேள்விக் குறியாகி வருகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இரண்டில் தமிழர்கள் சிறுபான்மையராக ஆக்கப்பட்டுவிட்டனர்.  வட மாகாணம் துரித கெதியில் சிங்கள மயப்படுத்தப் பட்டு வருகிறது. அங்கு இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R