Dr. Rajini Thiranagamaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ராஜினி திரணகம ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடியவர். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திப் போராடியவர். வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கக் கூடியதொரு சூழலில் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த சொந்த மண்ணுக்குத் திரும்பியவர். போராட்டச் சூழலில் தமிழ் மக்கள்மேல் அனைத்துப் பிரிவினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல்கொடுத்தவர். அவற்றை 'முறிந்த பனை' என்னும் நூலில் பதிவு செய்தவர். அதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டவர். அவரைக்கொன்றவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் , குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், இவை யாவும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால் எம்மாலும் அவ்விதம் குற்றஞ்சாட்ட முடியவில்லை. இவரை யார் படுகொலை செய்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதுவொரு களங்கமாகத்தானிருக்கும். நிராயுதபாணியான பெண்ணொருவர், இரு குழந்தைகளின் தாய், சொந்த மண்ணில் மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருபோதுமே நியாயப் படுத்த முடியாது. இதுபோல் பலர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அல்லது காணாமல் போயிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும், அமைப்புகளும் இக்காலகட்டத்தில் தமது கடந்த கால வரலாற்றைப் பாரபட்சமின்றிச் சுயபரிசோதனை செய்வது அவசியம். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை மேலும் வலுப்படும். தவறுகளுக்காக,  தம்மைத்தாமே மீளாய்வு செய்வதென்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு. எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதொன்று.

ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்புகளின் உள் முரண்பாடுகள் விளைவித்த அழிவுகள், புற முரண்பாடுகள் விளைவித்த அழிவுகள் இவை யாவுமே சுய பரிசோதனை செய்யப்பட வேண்டியவை. இன்று பல முன்னாள் போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் தங்களது அனுபவங்களைப் பதிவு செய்து வருகின்றார்கள். இவற்றில் எவ்வளவுக்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இவ்விதமான சுய மீளாய்வுப் பதிவுகள் ஆரோக்கியமானவை. இவை பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கு முக்கியமானவை. இதுவரை காலமும்  ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம்மைப் பலியாக்கிய அனைவரினதும் தியாகங்கள் வீணாகக் கூடாதென்றால், தொடரும் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை கேள்விக்குறியாக்கப்படக்கூடாதென்றால் பேராசிரியர் ராஜினி திரணகமவின் நினைவு நாளில் ஈழத்தமிழர்கள் தம் வரலாற்றைச் சுய பரிசோதனை செய்வது அவசியம் பற்றிக் குரல் கொடுப்பதும் பொருத்தமானதே. இழைக்கப்பட்ட தவறுகளைத் துணிவுடன் பொறுப்பேற்றுக்கொண்டு, தொடர்ந்தும் உரிமைகளுக்காகப் போராடுவது தமிழ் மக்களின் போராட்டத்தினை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல வைக்கும். முரண்பாடுகளுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது இலட்சியத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்றால் இது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலேயே தமிழ் மக்களின் போராட்டம் தொடரும் அபாயமுள்ளது.


விக்கிபீடியாவிலிருந்து ...

Dr. Rajini Thiranagamaராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். இவருக்கு நிர்மலா, சுமதி, வாசுகி என்ற மூன்று சகோதரிகள் உள்ளனர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மருத்துப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டுக் பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார்.

1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R