நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்! - வ.ந. கிரிதரன் -நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.

இவ்விதமான நகரத்து மாந்தரின் அந்நகர் அவர்களது மனங்களில் ஏற்படுத்திவிடும் மனப்பிம்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரப்பகுதிகளாக ஐந்து விடயங்களை பேராசிரியர் கெவின் லிஞ்ச் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் இனங்கண்டார். அவையாவன:

1. நகரின் மாந்தரின் நடமாட்டத்திற்கு உதவும் பல்வகைப் பாதைகள் (Pathways)
2. நகரின் பல்வேறு தனமையினைப் பிரதிபலிக்கும் பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districs)
3. நகரின் பல்வேறு பகுதிகளைப் பிரிக்கும் ஓரங்கள் (Edges)
4. நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் போன்ற நில அடையாளச் சின்னங்கள் (Lanadmarks)
5. நகரின் பல்வேறு செயற்பாடுகளின் மையப் புள்ளிகளாக விளங்கும் நகரின் பகுதிகள் ( Nodes)

நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய அவரது மனப்பிம்பங்களை முக்கிய ஆதாரப்பகுதிகளாக விளங்குபவை மேலுள்ள ஐந்து பகுதிகளுமே என்பதைப் பேராசிரியர் லிஞ்சின் மேற்படி 'நகரின் பிம்பம' என்னும் ஆய்வு புலப்படுத்தும். இனி இன்னும் சிறிது விரிவாக மேற்படி ஐந்து ஆதாரப் பகுதிகள் பற்றியும் பார்ப்போம்.

1. பாதைகள் (Pathways)
நகரொன்றில் அந்நகரத்து மாந்தரின் நடமாட்டத்துக்குதவும் வகையில் பல்வேறு பாதைகள் பிரதான கடுகதிப் பாதைகளிலிருந்து, புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் தொடக்கம் குச்சொழுங்கை வரையிலெனப் பல்வேறு பாதைகள் காணப்படும். மேற்படி பேராசிரியர் லிஞ்சின் ஆய்வின்படி பாதைகள் நகர மாந்தரின் நகர் பற்றிய் பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிப்பதை அறிய முடிந்தது. பல்வேறு காரணங்களுக்காக நகரத்து மாந்தர் மற்றும் அந்நகருக்கு வருகை தரும் பயணிகள் ஆகியோர் மேற்படி பாதைகளினூடு பயணிப்பர். அவ்விதமான பயணங்களின்போது மேற்படி பாதைகளினூடு பயணிக்கும் அனுபவமானது மேற்படி பயணிகளுக்கு, நகர மாந்தருக்குப்ப் பல்வேறு வகையிலான ம்னப்பதிவுகளை,மனக்கிளர்ச்சிகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்தே அவர்களது அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன. ( யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது மாலை நேரங்களில் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிக் கல்லுண்டாய் வெளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடு செல்வதை இச்சமயத்தில் எண்ணிப் பார்க்கின்றேன். ஓட்டு மடத்தில் தொடங்கி காரைநகர் நோக்கிச் செல்லும் பிரதான பாதையது. ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் குடியிருப்பான பொம்மை வெளி தாண்டினால் அடுத்து விரிவது காக்கைதீவுக் கடற்புறம். மீன் சந்தையுடன் கூடிய முக்கியமான யாழ்நகரின் நெய்தல் நிலப்பகுதி அது. ஒரு புறம் ஆனைக்கோட்டை மறுபுறம் காக்கைதீவுக் கடற்பகுதி. இதனைத் தாண்டினால் விரிவது நவாலியின் புகழ்பெற்ற மண்மேடுகளுடன் கூடிய மருதநிலப் பகுதி. மேற்குப்புறம் புல்வெளியுடன் கூடிய கடல்சிறிது உள்வாங்கிய காக்கைதீவுக் கடற்பிரதேசம். மருதமும் நெய்தலும் இணையும் அற்புதம். அதனைத் தாண்டினால் கல்லுண்டாய் வெளியும் , உப்பளமும். மேலும் நீளும்பாதை வடக்கு அராலி, தெற்கு அராலியெனப் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டையில் இணைந்து ஒன்று காரைநகர் நோக்கியும் அடுத்தது சித்தன்கேணி நோக்கியும் செல்லும். வடக்கு அராலி/ தெற்கு அராலியெனப் பாதை பிரிவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழுக்கியாறு அராலிக் கடலுடன் கலப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள சிறிய பாலமொன்றைக் காணலாம். மேறபடி வழுக்கியாறு பற்றிய பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த 'நடந்தாய் வாழி வழுக்கியாறு' என்னும் பயணக்கட்டுரைத் தொடர் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு பயணத் தொடராக அப்பருவத்தில் எனக்குப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. மேற்படி பாதையானது என் இளம் பிராயத்திருப்புடன் பின்னிப் பிணைந்துள்ள பாதைகளிலொன்று. என் பால்யகாலம் வன்னி மண்ணில் கழிந்தததென்றால் அதன்பின்னான என் பதின்ம பருவம் யாழ் மண்ணிலும் அதன் சுற்றாடலிலும் கழிந்திருந்தது. அவ்வயதில் மேற்படி கல்லுண்டாய் வெளியினூடு காரைநகர் நோக்கி நீண்டிருக்கும் பாதையானது என் மனதிலேற்படுத்திய பதிவுகள் , பிம்பங்கள் பற்பல. அந்தியில் அவ்வழியே பயணித்தலோரினிய அனுபவம். ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கேற்ப அப்பயணத்தின் அனுபவங்களும் பலவகையின. அதிகாலையில் துவிச்சக்கர வண்டிகளில் நகர் நோக்கிப் படையெடுக்கும் தொழிலாளர்கள் அந்திசாயும் நேரங்களில் தத்தமது கிராமங்களை நோக்கி மீள் படையெடுப்பர். அதி காலைகளில் வழுக்கியாறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ள பாலத்தினடியில் மீனவர்கள் இறால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பருவங்களில் காக்கைதீவுக்கும், கல்லுண்டாய் உப்பளத்திற்குமிடையிலான பாதையின் ஓரங்களில் மீனவர்கள் பிடித்த கடலட்டைகளை அவித்துக் காயப்போட்டிருப்பார்கள். அப்பிராந்தியமெங்கும் கடலட்டைகளின் அவியும் மணமும், உலரும் மணமும் நிறைந்திருக்கும். கடலட்டைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் அப்பகுதி கடற்றொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது. காலை நேரங்களில் காக்கைதீவுக் கடற்கரையில் அமைந்திருந்த மீன்சந்தை ஒரே ஆரவாரமாக விளங்கும். கடற்பறவைகளால் நிறைந்திருக்கும். அந்திக் கருக்கிருளில் கட்டுமரங்களில் க்டலில் மீன்பிடிப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கியிருப்பர் கடற்றொழிலாளர்கள். தொலைவில் சற்றுமுன்னர்தான் கடலுக்குள் மூழ்கியிருந்த கதிரவனால் சிவந்து சிவந்து கிடந்த வானம் மேலும் சிவந்திருக்கும். இவ்விதமாக அப்பாதையானது என்னிடத்திலேற்படுத்திய மனப்பதிவுகள், பிம்பங்கள் அழியாத கோலங்களாக இன்றுமென் சிந்தையின் ஆழத்திலுள்ளனவென்றால் பாதைகள் எவ்விதம் நகர மாந்தரின் மனப்பிம்பங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றனவென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.)

2. பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districts)
நகரானது பலவேறு அம்சங்களுடன் கூடிய சுற்றுப்புறங்களையும் (Component neighbourhoods) அல்லது பிரதேசங்களையும் (Districts) உள்ளடக்கிக் காணப்படும். உதாரணமாக உள்நகர் (Downtown) , புறநகர் (uptown), அதன் மையப்பகுதி, வர்த்தக மையப் பகுதி, தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகள், பல்கலைக்கழகப் பிரதேசங்கள் மற்றும் 'டொராண்டோ' போன்ற பல்சமூக மக்கள் வாழும் நகர்களில் அவ்வினங்கள் அதிகமாக செறிந்து வாழும் அல்லது வர்த்தகம் செய்யும் பிரதேசங்கள் எனப் பல்வேறு தனித்த அமசங்களைப் பிரதிபலிக்கும் பிரதேசங்களை அல்லது சுற்றுப்புறங்களைக் காணமுடியும். சில சமயங்களில் மேற்படிப் பிரதேசங்கள் தமக்கேயுரிய தனித்த அடையாளங்களுடன் ('டொராண்டோ'வின் நிதிமையமான உள்நகர்ப் பகுதி) விளங்கும். இன்னும் சில சமயங்களிலோ தனித்த சிறப்பியல்புகளற்று சிறப்பியல்புகளின் கலவையாகவும் (மான்ஹட்டனின் நடுநகர்ப் பிரதேசம் போன்று (midtown) விளங்குவதுண்டு. இவையெல்லாம் நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றனவெனலாம்.

3. ஓரங்கள் (Edges)
ஓரங்களை நகரின் பிரதேசங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் குறிப்பிடலாம். இவை பாதைகளைப் போல் முக்கியமானவையாக இல்லாதபோதும் நகர் மாந்தரொருவரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிப்பவை. பெரும் வாவியினை உள்ளடக்கிய 'டொராண்டோ' போன்ற மாநகர்களைப் பொறுத்தவரையில் குளக்கரையானது நகரையும் நீரையும் பிரிக்குமோரெல்லையாக ஓரமாக விளங்குகின்றது. இவ்விதமே கடுகதிப் பாதைகளையும், மக்கள் வசிப்பிடங்களையும் பாதுகாப்பு, மற்றும் வாகன ஒலித்தொல்லை போன்றவற்றிலிருந்து பிரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள நீண்ட சுவர்களையும் ஓரங்களிலொன்றாகக் குறிப்பிடலாம். (சீனாவின் நீண்ட சுவரினயும் இங்கு நினைவு கூரலாம்). முதலாவதில் ஓரமானது நீரையும் நிலத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அநத ஓரமானது நிலத்திலிருந்து நீருக்கோ அல்லது நீரிலிருந்து நிலத்திற்கோ மாந்தரின் நடமாட்டத்தைத் தடுப்பதில்லை. ஆயினும் இரண்டாவது உதாரணத்தில் சுவரானது ஓரெல்லையாக விளங்கி மக்கள் அதனூடு ஊடறுத்துச் செல்வதைத் தடுக்கிறது. இன்னும் சில சமயங்களில் ஓரமொன்றினைக் கண்டறிவது கடினமானது. உதாரணமாக 'டொராண்டோ'வின் கிழக்கில் அமைந்திருக்கின்ற சீனந்கர்ப் பிரதேசமானது அதற்கணமையில் அமைந்துள்ள 'குட்டி இந்தியா' பிரதேசத்துடன் படிப்படியாக ஆடையொன்றின் இரு பகுதிகள் இணைவதைப் போல் இணைந்து கலந்து விடுவதைக் காணலாம்.

4. நில அடையாளச் சின்னங்கள் (Landmarks)
அடையாளச் சின்னங்களும் நகர் பற்றிய பிமபங்களை நகர மாந்தரிடையே உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகின்றன. இத்தகைய அடையாளச் சின்னங்கள் தனித்து, உயர்ந்து தொலைவிலிருந்தும் அந்நகரினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம் அல்லது 9-11இல் அழிந்த இணைக் கோபுரங்களான 'உலக வர்த்தக மையக்' கட்டங்களைப்போன்று வான் முட்டும் கட்டடங்களாகவோ அல்லது 'டொராண்டோ'வின் புகழ்பெற்ற 'சி.என்' கோபுரம் (C.N.Tower) போன்ற கோபுரங்களாகவோ இருக்கலாம். தஞ்சையின் புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில் , பாரிஸின் சாயும் கோபுரம் மற்றும் குதுப்மினார் போன்ற கட்டடங்களையும் இவ்விதம் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பூங்காவிலுள்ள கட்டடமாகவோ அல்லது நீரூற்றாகவோ அல்லது சிலையாகவோ கூட இருக்கலாம். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, புகழ்பெற்ற அரண்மனைகள், ஆலயங்கள், தாதுகோபங்கள போன்ற கட்டடங்களை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

5. மையப்புள்ளிகள் ( Nodes)
இவையும் மேற்படி அடையாள சின்னங்கலைப் போன்று விளங்கினாலும் இவ்விதமான மையப் புள்ளிகள் வேறுபடுவது மற்றும் முக்கியத்துவம் பெறுவது அப்புள்ளிகளில் நடைபெறக்கூடிய செயற்பாடுகளிலிருந்துதான். நகரில் காணப்படும் பிரதானமான சதுக்கங்கள், பாதைகள் சந்திக்கும் சந்திகள் போன்றவற்றை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம். நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கம் , 'டொராண்டோவின்' புதிய நகர மணடபமும் அதனுடன் கூடிய 'நேதன் பிலிப்' சதுக்கமும், மற்றும் புதிதாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 'டன்டாஸ்' சதுக்கமும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் காரணமாக நகரின் முக்கிய மையப்புள்ளிகளாக இருக்கும் அதே சமயம் முக்கியமான நில அடையாளச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. மேலும் 'டைம்ஸ்' சதுக்கம் அப்ப்குதியில் சிறப்பியல்பு காரணமாக அந்நகரின் முக்கியமான பிரதேசங்களிலொன்றாக (District) விளங்குவதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இவ்விதமாக மேற்படி ஐந்து ஆதாரப்பகுதிகளும் எவ்விதம் நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் நகரின் விம்பம் பற்றிய பேராசிரியர் கெவின் லிஞ்சின் நகர அமைப்பு பற்றிய கோட்பாடானது நகர அமைப்புத் துறையின் முக்கியமானதொரு கோட்பாடுகளிலொன்றாக விளங்குகின்றது. நகரின் புனரமைப்புத் திட்டங்களில், அல்லது நிர்மாணத்திட்டங்களில் மேற்படி கோட்பாட்டின் பயன் மிகவும் முக்கியமானதே.

[இச்சமயத்தில் மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றிய நினைவுகள் மீளெழுகின்றன. அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. ஏற்கனவே பதிவுகளில் வெளியான இக்கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R