முன்னுரை  
ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறிதமிழில் வளமான இலக்கண மரபுகள் காலந்தோறும் உருப்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் பாட்டியல் இலக்கண நூல்கள் தனக்கென தனித்ததொரு மரபினை உடையனவாகத் திகழ்கின்றன. பாட்டியல் இலக்கண நூல்கள் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலேயே உருப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்தாலும், தமிழக வரலாற்றின் இடைப்பட்ட காலமான சோழர் காலத்திலேயே (9-ஆம் நூற்றாண்டு), அவை தனக்கென தனித்ததொரு கோட்பாட்டுத் தளத்தினை நிறுவிக்கொண்டன. அத்தகைய காலப்பகுதியில் தோன்றிய பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் ஆகிய இரு நூல்களின் ஊடாக வெளிப்படும் சோழர்கால புலமைத்துவ செல்நெறிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோழார் காலப் பாட்டியல் நூல்களில் புலமைத்துவம்
சோழர் காலத்தில் உருவான பாட்டியல் இலக்கண நூல்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று பன்னிருபாட்டியல், மற்றொன்று வெண்பாப்பாட்டியல். இவையிரண்டும் பொருத்த இலக்கணம், பிரபந்த இலக்கணம் ஆகியவற்றைக் கூறுவனவாயினும், வெண்பாப்பாட்டியல் மட்டும் புலமைக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. பன்னிருபாட்டியலில் புலமைத்துவ இலக்கணம் கூறாமைக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. எனினும் ‘பின்புலத் தேவைகளே பிரதிகளின் உருவாக்கம்’ என்ற நோக்கில் அது உருவான காலப்பகுதியில் அதற்கான தேவை எழவில்லை என யூகிக்கமுடிகிறது.

சோழர்காலப் புலமை
  ‘புலமை’ என்ற பண்பை உணர்த்தும் சொல் ‘புலம்’ என்ற அடிச்சொல்லின் வழியாகத் தோன்றியது. ‘புலன்’ என்னும் சொல் ‘புலம்’ என்பதன் மரூஉ சொல்லேயாகும். அறிவைக் குறிக்கும் புலன், புலம் என்னும் சொற்கள் முதலில் நிலத்தைக் குறித்தது. புலன் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் அறிவு, வயல் என்னும் பொருளில் வந்துள்ளது. புலவர்களைப் புலனறி உழவர் எனக் கூறும் மரபு இருந்துள்ளது.1 ஆக, புலவர் என்பது அறிவுப்புலத்தைக் குறித்து நிற்கிறது. புலமை என்பது நிகழ்காலத்தில் பொதுவாகக் கவிஞர்களின் கவித்துவ பிரவாகத்தையே குறித்து நிற்கிறது என்றாலும், சோழர் காலத்தில் இது பரந்துபட்ட அறிவுடையோரையும்,  ஆழ்ந்த சிந்தனையுடையோரையும் குறித்து நின்றது. புலவர் என்பவர் யார் யார் என்பதை,

  “கவிமகன் வாதியே வாக்கியெனக் காசில்
  புவியின் மேல் நால்வர் புலவர்”  (வெண்பா. செய். 1)

என்று வெண்பாப்பாட்டியல் குறிப்பிடுகின்றது. தொடர்ந்து கவி, கமகன், வாதி, வாக்கி ஆகிய நால்வரின்  தன்மைகள் என்னவென்பதை விளக்குகிறது.

 கமகன் என்பவர் இதுவரைக் கற்றறியாத பல்துறைசார்ந்த நூல்களையும் தம்முடைய சுய அறிவினாலோ தாம் கற்றறிந்த கல்வியாலோ விவரிப்பவராவர்.2 வாதி என்பவர் தாம்கொண்ட கொள்கைக்குத் தகுந்த எடுத்துக்காட்டையும் அதற்கான காரணத்தையும் எடுத்துக்கூறி, பிறர் கொள்கையை மறுப்பவர் ஆவார்.3 வாக்கி என்பவர் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருளைக் கலவாமல் தனித்தனியாகக் கவித்துவமானச் சொற்களால் கேட்போர் விரும்பத் தெளிவாகக் கூறுபவர் ஆவர்.4

ஒருவன் பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்பவன் கள்ளக்கவி. ஒருவனது கவியிசையில் வேறொரு செய்யுளியற்றுவோன் சாத்துக்கவி. தன் முன்னோர்களின் வழி கவிபாடுவோன் பிள்ளைக்கவி. புன்மொழிகளால் கவிபாடுவோன் வெள்ளைக்கவி. இத்தன்மைகள் அனைத்துமோ அல்லது ஒன்றையோ உடையவன் கவிஞனாவான்5 என்று புலமைத்துவவாதிகளை வெண்பாப்பாட்டியல் விளக்குகிறது. இப்புலமைத்துவவாதிகளுக்கான விளக்கத்தைக் காணும்போது, சோழர் காலத்தில் சிறந்த புலமையூட்டம் ஒன்று நிலவி வந்தமையைக் காணமுடிகிறது.

 இப்புலமை ஊட்டமானது, பல்லவ ஆட்சியுடனேயே தொடங்குகின்றது. ஏனெனில் இக்காலப் பகுதிகளிலேயே சமண, பௌத்த செல்வாக்குகள் உச்சநிலை அடைந்துள்ளன. இச்சமயங்களுக்கிடையேயான பொதுவான அடிப்படைத்தன்மைகளில் ஒன்று தருக்கரீதியாகச் சிந்தித்தல் என்பதாகும். கமகன், வாதி என்பவர் பற்றிய விளக்கங்கள் சமண, பௌத்த மெய்யியல்களுடன் ஒத்துப்போகின்ற தன்மையினையுடையனவாய்த் தெரிகின்றன. கமகன் பற்றிய வரையறைகள் யோகமுறை என்ற மெய்யியல் அடிப்படைகளைக் கொண்டதாகவும்,6 வாதி பற்றிய வரையறைகள் சமண, பௌத்த மெய்யியல்களின் ஒரு பகுதியான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்விரு புலமைகளும் புலவருக்குரியதாகக் கொள்ளப்பட்டவை.

வாக்கி என்பது எப்பொருள் பற்றியது என்று வெண்பாப்பாட்டியல் கூறினாலும், அவ்விளக்கங்களில் மயக்கங்கள் சில உள்ளன. அறம், பொருள், வாக்கி என்பது இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருள்களைத் தனித்தனியாகவா அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சேர்த்துக் கூறுவதா என்று வினாக்கள் எழுகின்றன. ஏனெனில், நாற்பொருள்களையும் சேர்த்துப் பாடுவது ‘பெருங்காப்பியம்’ என்றும், நாற்பொருள்களில் ஒன்று குறைந்து வருவது ‘காப்பியம்’ என்றும் மற்றொரு நூற்பா ஒன்றில் வெண்பாப்பாட்டியல் கூறுன்றது.7 அவ்வாறாயின் இவ்இரண்டிற்குமான வரையறையில் மயக்கம் ஏற்படுவதுடன் ஆசிரியர் கூறியது கூறல் குற்றம் புhpந்துள்ளாரா என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு இல்லையெனில், தனி ஒரு பிரபந்த வகையில் இதனைச் சேர்க்காமல் புலமையின் ஒரு வகையாக விவரித்த காரணமென்ன என்ற சிந்தனையைக் கிளறுகிறது. ‘கவிப்பனுவல் குன்றாத சொல்லால் தெளிவுபெறக் கூறுவோம்’ என்ற அடிகளினால் இதற்கு விளக்கம் கிடைக்கக் காணலாம். கவிதை படைக்கும் கவித்துவச் சொற்களால் உரையாக விளக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். மேலும், வாக்கி என்ற சொல்லிலே (வாக்கு - சொல்லுதல்) இதன் பொருள் விளங்கக் காணலாம். சமய பரப்புரை, இலக்கிய உரையாடல்கள் ஆகியவற்றை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்தலை இதற்கு ஒப்பாகக் குறிப்பிடலாம். கவிஞர் பற்றிய வரைவிலக்கணத்திற்கு மாற்றாக யார் யார் எத்தகைய கவிஞர் என்பதை,

  “ஆரொருவன் பாக்களை யாங்கொருவ னுக்களிப்போன்
  சோரகவி சார்த்தொலியிற் சொல்லுமவன் - சீரிலாப்  
  பிள்ளைக் கவிசிறந்த பின்மொழிக்காம் புன்மொழிக்காம்
  வெள்ளைக் கவியவனின் வேறு”  (வெண்பா. செய். 48)

என்ற வெண்பாப்பாட்டியல் நூற்பா தருகின்றது. நாற்கவிகளான சோரகவி, சாரகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி ஆகிய சோழர்காலப் புலமைத்துவத்தினைப் புலப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

புலமைத்துவ மரபில் கவிஞனின் வகிபாகம்
 சோழர்காலப் புலமைத்துவ மரபில் கவித்துவத்திற்கான தனித்த முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. எனவே புலமை மரபில் கவிஞர்கள் மிக மதிக்கத்தக்கவராய் விளங்கினர். எனவேதான் கவிஞரைப் பற்றிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் பாட்டியல்கள் தருகின்றன. இன்னொன்றை இங்கே மனதில் கொள்ளுதல் வேண்டும். கவிதை, கவித்துவம், கவிஞர் ஆகியவற்றிற்கு என்றேதான் யாப்பியல், பாட்டியல் என்ற மிக நீண்ட இலக்கண மரபுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மற்ற புலமைத்துவ வகைப்பாட்டுகளான கமகன், வாதி, வாக்கி ஆகியவற்றை விவரிப்பதற்கென்று தனித்த நூல்களோ இலக்கண விவரணங்களோ காணக்கிடைக்கவில்லை.

கவிஞர் தமது கற்பனைத் திறத்தினால் வாசகனையோ அல்லது அரங்கேற்றத்தின் போது அரசவையில் கேட்போரையோ மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறார். இன்னொரு வகையில் பார்க்கப்போனால் புலமையருக்கான அத்தனைத் தகுதிகளையும் பெற்றவராகிறார். தனது கவிதையிலே கமகனைப் போல் தமது கல்வி மற்றும் சிந்தனை திறத்தினாலே புதிய புதிய கவிதை மரபுகளைத் தோற்றுவிக்கிறார். இது ஒருவகையில் ஞான ஆசிரியனுக்கு ஒப்பானதாகும். அரசவை அரங்கேற்றத்தில் வாதியைப் போல் கவிதைக் கொள்கையைக் கருத்தைத் தகுந்த காரணத்துடன் எடுத்துக்காட்டி தாம் எதிர்கொண்ட ஐயங்களை மறுத்து தம் கொள்கைகளை நிறுவுகிறார். வாக்கியைப்போல் தம்மை ஒரு பிரசங்கியாக ஏற்றுக் கொண்டு வாசகனுக்கு தாம் விளக்க வந்த கதையோ அல்லது கருத்தையோ தம் கவிதையில் விவரிக்கிறார். கவிஞன் இவ்வாறு தம்மை முழுமைபடுத்திக் கொள்ள புலமைத்துவத்தின் எல்லை வரை செல்கிறான். எனவேதான் புலமைத்துவ மரபில் முடிசூடா மன்னன் ஆகிறான்.
 
கவிஞனை உருவாக்கிய கவிதைகள்
 பொதுவாக, கவிஞன் தான் கவிதைகளை உருவாக்குகிறான். ஆனால், பாட்டியல் மரபில் கவிதை வகைபாடு கவிஞர் வகைபாடாகப் பரிணமித்துள்ளது. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என நால்வகைக் கவிதைகளைப் பற்றி வெண்பாப் பாட்டியல் விளக்குகிறது. மேலும்,
  
  “ஆசு மதுரமே சித்திரம்வித் தாரமெனப் 
  பேசுவார் நால்வர்க்கும் பேர்” (வெண்பா. செய். 1)
என்கிறது வெண்பாப்பாட்டியல்.

சோர, சார்த்து, பிள்ளை, வெள்ளைக்கவிஞர் என நால்வர் பட்டியல் தரப்பட்டிருக்க ஆசு மதுரம், சித்திரம், வித்தாரம் என தனியொரு நால்வர் பற்றித் தரப்பட்டிருப்பது ஏன் என்ற சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. வெண்பாப்பாட்டியலின் காலத்திற்கு முன்னதாக கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ள திவாகர நிகண்டில், பாட்டியல் இலக்கணங்களில் கூறப்படும் கவி, கவிஞன், கவித்துவம் போன்ற சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. அவற்றில்,

  “ஆசுமதுரஞ் சித்திரம் வித்தாரமென பாவகை
  பாடுவோன் கவியெனப் படுமே”8 

என்ற நூற்பா செய்யுள் கவிதையின் வகைகளைக் கூறுகின்றது. இங்கு நான்கு பாவகைகளைப் பாடுவோன் கவிஞன் எனப்படுவான் எனக் கூறப்பட்டுள்ளதே தவிர கவிஞர்களின் வகைகளாகத் தரப்படவில்லை. ஆனால், வெண்பாப்பாட்டியல் காலக்கட்டத்தில் இந்நிலை முற்றிலுமாக மாறிப்போனது. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய கவிதை வகைகளின் எழுச்சியின் பிரதிபலனாய் அப்பெயர்கள் சோழர் காலத்தில் கவிஞர்களுக்கு ஏற்பட்ட கவித்துவ மேன்மையைக் காட்டுகின்றது. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற பெயர்களைக் காணும் பொழுது இவைத் தமிழ்ப்பெயர்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. “ஆசு என்னும் சொல்லுக்குத் தமிழில் - பற்றுக்கோடு, குற்றம், நுட்பம், ஐயம், அற்பம், துன்பம், இலக்கு, பற்றாசு, கவசம், ஆணவம், வாலியின் கைப்பிடி, நூலிழைக்கும் கருவி - என பல வகைப்பொருள்கள் உள்ளன. ஆயின், ஆசுக்கவி என்னும் பொழுது இப்பொருள்களில் ஒன்றும் பொருந்தி வரவில்லை. வடமொழியில் உள்ள ‘ஆசு’ என்பதற்கு விரைவு என்று பொருள். ஆசுகவி என்பது அச்சொல்லடியாகவே பிறந்தது எனலாம்.9 ஆசு என்ற சொல்லைப் போலவே மற்ற மூன்று சொற்களும் வடமொழியின் அடியாகவே வருகின்றன. இந்நான்கு கவித்துவமும் அமைய வல்லவனே கவிஞன். அல்லது இவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டமை பெற்றிருப்பதும் கவிஞனின் வல்லமையாகச் சோழா; காலத்தில் கருதப்பட்டது.

கவிஞனின் தகுதிகள்
  கவிஞன் கவிதையைக் கவித்துவமாகப் புனையும் ஆற்றல், கவிதை இலக்கணம் அறிதல் ஆகியவற்றையும் மட்டுமல்லாது, மேலும், சிலவற்றைப் பாட்டியல் நூற்கள் தருகின்றன. அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் ஆகியோரும், எல்லாப் பொருட்களைப் பற்றியும் அறிந்தோரும், தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்தவரும், நாற்கவிகளையும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் அறிந்தோரும், இருபது முதல் எழுபது வயதிற்குட்பட்டோரும், நோயில்லாது வாழ்வோரும், கவிதை படைப்பதற்கான அடிப்படைத்தகுதி உடையோர் ஆவர். மேலும், நாற்சாதிக்குரிய ஒழுக்கமும், அவர்களுக்குரிய இயல்புகளையும், கடமைகளையும் வெண்பாப்பாட்டியல் கூறுகிறது.10 வெண்பாப்பாட்டியல் கூறும் கவிஞருக்கான தகுதிகளில் நாற்சாதியினரும், தெய்வ வழிபாட்டினரும் மட்டும் கவிதை புனைய வேண்டும் என்ற வரையறையானது, சோழர் கால சமூகத்தில் சாதி ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டமையும், தெய்வ வழிபாட்டினருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் அக்காலத்தில் நாத்திகர் வாழ்ந்தமையையும் அவர்களும் கவி புனைந்தமையையும் இதன் நேர் - எதிர் தன்மைகளின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கவிதை உருவாக்க நெறிமுறைகள்
  கவிதை படைப்பாக்கத்தில் இடம்பெற வேண்டிய சில முக்கியமான விடயங்களை வெண்பாப்பாட்டியல் கூறுகிறது. அகலகவியாகிய தனிநிலைப் பாடல்களுக்கும் தொடர்நிலைச் செய்யுளுக்குமான பெயர்த் தலைப்புகள் இடப்பட வேண்டிய முறைகளைப் பற்றி கூறுகின்றது.

தொடர்ந்த பெயர்கள் தொழிலளவு காலம்
இடம்பொருள் பாவுறுப்போ டெல்லை - நொடங்கியாய்
பாடினான் பாடுவித்தான் பாடப் படுபொருளான்
நீடும் புரவு நிறைந்து”  (வெண்பா. செய். 45) 

இவ்வாறு கவிதையின் தலைப்புப் பெயர்கள் அமையலாம் என்ற வரையறையைத் தருகிறது. கவிதையை எப்பாவால் பாடப்பெறவேண்டும் என்பதை பாடப்பெறுவோரின் சாதித்தகுதியை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று பாட்டியல்கள் கூறுகின்றன. இதற்குத் தக பாக்களுக்குரிய நிலம், நிறம், நாள், ராசி, தேவதை, பூ, சந்தனம், ஆடைகள், அணிகலன் ஆகியவை குறிப்பிடுகின்றன.

.

எண் 
 பா  சாதி  நிலம்  நிறம்  நாள் ராசி   தேவதை
 1  வெண்பா  அந்தணர்  முல்லை  வெண்மை  கார்த்திகை, ஆயிலியம்  கர்க்கடகம், விருச்சிகமமீனம்  சந்திரன், வியாழம்
 2  ஆசிரியப்பா  அரசர்  குறிஞ்சி  செம்மை  மகரம், விசாகம்  மேஷம், சிங்கம், தனுசு  ஆதித்தன், செவ்வாய்
 3  கலிப்பா  வணிகர்  மருதம்  பொன்மை  அனுடம், அவிட்டம்  மிதுனம், துலாம், கும்பம்  புதன், சனி
 4  வஞ்சிப்பா  சூத்திரர்  நெய்தல்  கருமை  சதயம், பரணி  இடபம், கன்னி, மகரம்  சுக்கிரன், இமராகு, கேது

மேற்கண்டவை போலவே பூவும் சாந்தும் ஆடையும் அணிகலனும் அவ்வவ்பாவிற்கு நிலத்திற்குத் தகுந்தாற் போல் அமையவேண்டும் என்கிறது.11 மேற்கண்டவாறு கவிதையின் பா தேர்வுடன் கவிதையின் துவக்கத்தை எவ்வாறு ஆரம்பிப்பது குற்றமற்ற கவிதைகளை எவ்வாறு புனைவது குறித்த விளக்கங்களை இலக்கணிகள் வகுத்துள்ளனர். பாடற் தலைவனின் ஊர்பெயர் அல்லது இயற்பெயரைக் கவிதையின் முதல் அடியின் முதற்சீரில் எதுகை வைத்துப் பாடுதல் சிறப்பு. வழக்கு, மரபு என்ற இரண்டிற்கும் பொருத்தமான வடமொழியல்லாத, கவிநயமிக்க, சான்றோர்களால் முன்பே கூறப்பட்ட சொற்களால் கவிதை அமைதல் வேண்டும். பலபொருள் தரும் சொற்ளையும் நிச்சயப் பொருள் தன்மை இல்லாத சொற்களையும் பெய்து எழுதுதல் கவிதையில் குற்றம் உள்ளதாகக் கருதப்படும் என்கிறது.

அவையும் அரங்கேற்றமும்
 ஒரு படைப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்றால் நிகழ் காலத்தைப் போல சோழர் காலத்தில் அவ்வளவு எளிதில் சாத்தியமானதல்ல. அப்படைப்பானது கவிஞரால் அவையில் அரங்கேற்றம் செய்யப்படுதல் வேண்டும். அவ்வாறு அரங்கேற்றம் செய்யப்பட்ட படைப்பானது பல்வேறு வாத விவாதங்களுக்குப்பின் சான்றோரால் ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பின்பே உலக வாசிப்பிற்கு ஏற்றதாக தக்க சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். அரங்கேற்றம் புரியும் அவை அமைய வேண்டிய விதத்தை எவ்வவைகளில் ஒரு படைப்பு அரங்கேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதையும் கவிஞர்கள் தொpந்து வைத்திருத்தல் அவசியமாகிறது.  அவையினை நல்லவை, தீயவை, நிறையவை, குறையவை ஆகியனவற்றை அவையறிந்து அரங்கேற்றம் செய்யப்பட வேண்டும் (வெண்பா.செய்.9,10,11).
நல்லவையிலும் நிறையவையிலும் கவிதையரங்கேற்றம் செய்யலாம். தீயவையில் அரங்கேற்றம் செய்யலாகாது. கவிதை தீயவையில் அரங்கேற்றம் செய்யப்படின் கவிதைக்குத் தகுந்த மதிப்பிருக்காது என்பதை இந்நூற்பாக்கள் உணர்த்துகின்றன. அவ்வாறு நல்லவையிலும் தீயவைகளிலும் எல்லா நேரங்களிலும் அரங்கேற்றம் செய்ய முடியாது. குறித்த நல்ல நேரத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்படல் வேண்டும்.

முடிவுரை
 புலமை என்ற சொல் புலம், புலன் என்ற சொல்லின் வழியாகத் தோன்றியது. புலமை என்பது புலவா;களின் அறிவுப் பரப்பையும் புலவர் என்பது பரந்துபட்ட அறிவுடையோரையும் பல்வகைப்பட்ட சிந்தனை உடையோரையும் குறித்து நிற்கிறது. கமகன், வாதி, வாக்கி, கவி ஆகிய இலக்கணங்கள், சோழர் காலத்தில் சமண, பௌத்த சமயங்களால் ஏற்பட்ட புலமை ஊட்டத்தைப் புலப்படுத்துகின்றன. சோர, சார்த்து, பிள்ளை, வெள்ளை கவிஞர் வகைகள் சோழர்காலக் கவிஞர்களின் கவித்துவ இயலாமையையும் தற்சார்பு இன்மையையும் வெளிப்படுத்துகின்றன. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நான்கு கவிதை வகைகளிலும் வல்லவன் இக்கவிதைப் பெயர்களைத் தமக்கு உரிமையாகப் பெறுவான் என்று வெண்பாப்பாட்டியல் கூறுகிறது. சோழர்கால சமூகத்தில் சாதி ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டமையும், தெய்வ வழிபாட்டினருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், நாத்திகரும் அக்காலத்தில் கவிதைப் புனைந்தமையையும் அறியமுடிகிறது.

கவிதையின் பெயர்த்தலைப்புகள் தொழில், அளவு, காலம், இடம், பொருள், பா, உறுப்பு, எல்லை, செய்தோன், செய்வித்தோன், பாடுபொருள், இடுகுறி ஆகிய காரணங்களால் பெயர்த்தலைப்புகள் அமைதல் வேண்டும். மேலும், பாடல் தலைவனின் சாதிக்கு தக்க பாக்களை அமைத்து, இராசியும் தேவதையும் பூவும் சந்தனமும் ஆடையும் அணிகலனும் பாடலில் கூறப்படுதல் வேண்டும் என்கிறது வெண்பாப்பாட்டியல். சோழர் கால புலமை அரங்கேற்ற அவைகள் நல்லவை, தீயவை, நிறையவை ஆகியவையாகும். இவற்றில் நல்லவையிலும் நிறையவையிலும் நல்ல நேரத்தில் கவிதையை அரங்கேற்றம் செய்யப்பட்டன. ஆக, பாட்டியல் இலக்கண நூல்கள் புலமைத்துவவாதிகளுக்கு தலைச்சிறந்த கைநூலாக விளங்கின எனலாம்.

குறிப்புகள்
1. தேவ. பேரின்பன்,(ப.ஆ), தமிழர் சிந்தனை மரபு, ப. 18
2. வெண்பாப்பாட்டியல், செய்யுளியல், நூற். 46
3. மேலது, நூற். 46
4. மேலது, நூற். 47
5. மேலது, நூற். 48
6. யோகம் என்றால் சில குறிப்பிட்ட கற்பனைப் பயிற்சி முறைகள், அசாரதாரண
   ஆற்றல்களைப் பெறுவதற்கு உகந்தவை எனப்படும்.   
   (மிருணாள் காந்தி காங்கோபாத்தியாயா, இந்தியாவில் மெய்யியல், பக். 71 - 72)
7. வெண்பாப்பாட்டியல், செய்யுளியல், நூ.ள். 40 - 43
8., திவாகர நிகண்டு, நூற். 2330
9.  தமிழன்பன், தனிப்பாடல் திரட்டு  - ஓர் ஆய்வு, ப. 151
10. வெண்பாப்பாட்டியல், செய்யுளியல், நூ.ள். 7 - 8
11. வெண்பாப்பாட்டியல், செய்யுளியல், நூ.ள். 4 - 6

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R