(* ஆகஸ்ட் 2016 காலச்சுவடு 200வது இதழில் வெளியாகியுள்ள ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை முன்வைத்து சில கருத்துப்பகிர்வு)


எதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா?

- லதா ராமகிருஷ்ணன் -

சமீபத்தில் இறந்த மூத்த எழுத்தாளர் கோமதி தனது புதினம் ஒன்றை பல வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய பத்திரிகைக்கு அனுப்பிவைத்திருந்த தாகவும், பல மாதங்களுக்குப் பிறகு அந்தக் கையெழுத்துப்பிரதி சாவகாசமாகத் திருப்பியனுப்பப்பட்டு, அதன்பின் பின் அதே புதினம் சில நுட்பமான மாற்றங்களோடு (?!?!?!?!!!) இன்னொரு பெரிய எழுத்தாளரின் பெயரில் வெளிவர ஆரம்பித்ததாகவும் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்தார். எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதை ஒன்று சில நுட்பமான (?!?!?!?!!!) மாற்றகளோடு வேறொருவர் பெயரில் திரைப்படமாக வெளிவந்ததாக சூடாமணியின் மறைவின்போது எழுதப்பட்டிருந்த அஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டிருந்தது. மொழிபெயர்ப்புப் பிரதிகள் விஷயத்திலும் இதேவிதமான நுட்பமான மாற்றங்கள் (அதாவது, வெட்கங்கெட்ட திருட்டுகள்) நடந்ததுண்டு; நடந்துவருவதுண்டு. இப்பொழுது, காலச்சுவடு மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையை வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு படி மேலே போய், மூலப் படைப்பாளரை (இந்த விஷயத்தில், காலச்சுவடு வெளியீடான ஆத்மாநாம் கவிதைகள் என்ற நூலின் தொகுப்பாசிரியரான கவிஞர் பிரம்மராஜனை) மதிப்பழித்து, கேவலப்படுத்தி அவருடைய உழைப்பை ‘சல்லி’சாக அபகரித்துக்கொள்ளும் நூதனமான வழியைத் தேர்ந்துகொண்டிருக்கிறது. இல்லையெனில், மேற்குறிப்பிட்ட அவதூறுக் கட்டுரையை வெளியிட்ட அதே இதழிலேயே, குறைந்தபட்சம் ‘ஆத்மாநாம் தொகுப்பை வெளியிட்டு மூன்று நான்கு பதிப்புகள் ‘உள்ளது உள்ளபடி’ வெளியிட்டிருக்கும் பதிப்பகம் என்ற பொறுப்பேற்போடு காலச்சுவடு பதிப்பகமே சில கருத்துகளை வெளியிட்டிருக்க முடியும். அதைச் செய்யவில்லை. தொகுப்பாசிரியரிடம் அந்தக் கட்டுரையை அனுப்பி அதற்கான சில பதில்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆக, அந்தக் கட்டுரை காலச்சுவடில் வெளியிடப் பட்டிருப்பதற்கான உள்நோக்கம் வெளிப்படை.

வாடகை வீடு மாறும்போது புத்தகங்களை மூட்டை மூட்டையாய்க் கொண்டுபோய் இறக்கினால் வீட்டு உரிமையாளர்கள் பயந்துபோய்விடுகிறார்கள் என்பதால் புத்தகங்களைச் சின்னச்சின்னப் பையில் குவித்து எடுத்துப்போய் பாத்திர பண்டங்களைப் போல் சாதுவாக அவற்றை இறக்கி கட்டிலின் கீழ் போட்டாயிற்று. ஆனால், மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திரு. கல்யாணராமன் திறனாய்வு என்ற பெயரில் இப்படிக் கிறுக்கித் தள்ளியிருக்கிறாரே, அச்சுப்பிழைகளை யெல்லாம் தீவிரவாத சதித்திட்டமாய், நவீன தமிழ்க் கவிதைகளுக்குப் பொருள்கூற இவர்தான் ‘அத்தாரிட்டி’ என்பதுபோல் என்னென்னவோ உளறிக்கொட்டி யிருக்கிறாரே, இவர் மாதிரி ஆட்களுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டிய நிலைக்கு சிற்றிதழ் வாசகர்களும் படைப்பாளிகளும் ஆளாக்கப்பட்டிருக்கிறோமே, அதற்காக பேசாமலிருந்தால் இப்படிப்பட்ட அரைகுறைத் திறனாய்வு களுக்கு அங்கீகாரம் வழங்கினாற்போலாகிவிடுமே என்று மனதில் பலவாறாய் எண்ணங்கள் ஓட, புத்தகங்கள் இருந்த பைகளைத் துழாவி ஆத்மாநாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடி வெளியே எடுத்தேன்.

முதலில் கைக்குக் கிடைத்தது ‘மீட்சி’ இதழ் 28.(january - march 88) பக்கங்கள் 47 முதல் 51 வரை ஆத்மாநாமின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. “இக்கவிதைகள் ஆத்மாநாமின் குறிப்பேடுகள் 2 மற்றும் 4இலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. 1983 – 84வருடங்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். “உறைந்து போன நேரம்” கவிதை, கவிதை யாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.” என்று மீட்சி ஆசிரியர் பிரம்மராஜனின் குறிப்போடு வெளியாகியுள்ளன.
என்னிடம் உள்ள மீட்சி இதழ் 28இல் கண்டுள்ள அளவில், ஆத்மாநாமின் அக்கவிதையின் இறுதி வடிவத்தில் ’வெடிப்பு’ என்ற வார்த்தை அவராலேயே விலக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கவிதைக்கு முன்னோட்டமாக அவர் எழுதியுள்ள வரிகளும் அவருடைய குறிப்பேட்டில் கண்டபடி அந்த இதழில் தரப்பட்டுள்ளன – ’உறைந்துபோன நேரம்’ கவிதை கவிதையாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்று அந்த மீட்சி இதழில் பிரம்மராஜன் குறிப்பிட்டிருப்பது அதைத்தான். அந்த வரிகளும் மீட்சி 88 இதழில் தரப்பட்டுள்ளன: அவை ஒரு கவிதையை எழுத ஆத்மாநாம் எடுத்துக்கொள்ளும் கவனத்தையும் தன் க விதையில் தான் பயன்படுத்திய வார்த்தைகளை இறுதிவடிவத்தில் அவரே நீக்கிவிடும் பழக்கத்தையும்( இது எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ள பழக்கம்தான்) எடுத்துக்காட்டுகின்றன: மீட்சி இதழ் 28இன் பக்கம் 48இல் 3 என்ற எண்ணில் அந்தக் கவிதையின் முதல் வடிவம் ஆத்மாநாமால் வடிவமைத்துக் கொள்ளப்பட்ட விதத்தில் இப்படி இடம்பெற்றுள்ளது.

3
1. நடையியல்

2. பயிலுமுன்

3. கிழி

4. பற

5. தூள்

6. தூள்

7. நூல்


23. கிழிந்த காகிதம்

24. உடைந்த ப்ளாஸ்டிக்

25. தகரச் சிதறல்கள்

26. கிழிந்த பை

27. நீளமான பை

28. தேவையான பணம்

8. குடி
31. தூக்கு

33. கொட்டகை


9. விளக்கு வரிசை

20. காலம்
21. சென்றவரின்

22. புகைப்படம்


10. சீப்பு

19. சிகரெட்

29. பலப்பம்

30. ஷேவிங் சாமான்கள்

11. காகிதம்

18. பேனா
32. எழுத்து

12. ஓலோலம்

13. புராதன இசை

14. வழியும் மை

15. பஸ்ஸுக்குள்
16. ஊர்ந்து செல்லும்
17. மண் புழு

34. ஒற்றைக் கம்பளி

35. பட்டன்.
36. உருண்டைப் பந்து

37. சூனியத்தில் வெடித்த

38. முற்றுப் புள்ளி

உறைந்து போன நேரம்
நடையியல்

பயிலுமுன்

கிழி

பற


5. தூள்

தூள்

நூல்

குடி

விளக்கு வரிசை


10. சீப்பு

காகிதம்

ஓலோலம்

புராதன இசை

வழியும் மை.


15. பஸ்ஸுக்குள்

ஊர்ந்து செல்லும்

மண் புழு

பேனா

சிகரெட்


20. காலம்

சென்றவரின்

புகைப்படம்

கிழிந்த காகிதம்

உடைந்த ப்ளாஸ்டிக்


25. தகரச் சிதறல்கள்

கிழிந்த ட்ராயர்

நீளமான பை

தேவையான பணம்

பலப்பம்


30. ஷேவிங் சாமான்கள்

தூக்கு

எழுத்து

கொட்டகை

ஒற்றைக் கம்பளி


35. பட்டன்

உருண்டைப் பந்து

சூனியத்தில்

முற்றுப் புள்ளி.

*ஆக, கவிதையாக்கப் போக்கில் ஆரம்பக்கட்டத்தில் கவிஞர் வரிசைப்படுத்திக் கொண்டுள்ள வார்த்தைகளில் இடம்பெறும் வெடிப்பு என்ற அதன் இறுதி வடிவத்தில் கவிஞர் ஆத்மாநாம் விலக்கியிருக்கிறார். அந்த வார்த்தை அவருக்கு redundant ஆகத் தோன்றியிருக்கலாம். இந்த ‘உறைந்துபோன நேரம்” கவிதை குறித்து மேதகு ’ஆத்மாநாம் ஆய்வாளர்” அல்லது Athmanam’s ‘Instant Noodles Critic’ காலச்சுவடு கட்டுரையின் கடைசிப் பத்தியில் பின்வருமாறு அங்கலாய்த்திருக்கிறார்: “ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்துபோன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டு சொற்களைச் “சூனியத்தில் முற்றுப்புள்ளி”(2002: பக்கம் 49 – 50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள் “சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி” என்றுதான், ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படையில், மீட்சியில் (இதழ் 28: ஜனவரி – மார்ச் 1988; பக்கம் 50 – 51) வெளிவந்தபோது இடம்பெற்றிருந்தன. ”

இதோ, என் கையில் மீட்சி 28 இதழ் (ஜனவரி மார்ச் 88) இருக்கிறது. உறைந்துபோன நேரம் கவிதையின் கடைசி மூன்று வரிகள் (பக்கம் 51இல் இடம்பெறுகின்றன)

பட்டன்

உருண்டைப் பந்து

சூனியத்தில்

முற்றுப் புள்ளி

இதோ முழுக்கவிதை ( மீட்சி 88இல் வெளிவந்துள்ளது)

1. நடையியல்

2. பயிலுமுன்

3. கிழி

4. பற

5. தூள்

6. தூள்

7. நூல்


நடையியல்
பயிலுமுன்
கிழி
பற
5. தூள்
தூள்
நூல்
குடி
விளக்கு வரிசை
10. சீப்பு
காகிதம்
ஓலோலம்
புராதன இசை
வழியும் மை.
15. பஸ்ஸுக்குள்
ஊர்ந்து செல்லும்
மண் புழு
பேனா
சிகரெட்
20. காலம்
சென்றவரின்
புகைப்படம்
கிழிந்த காகிதம்
உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
கிழிந்த ட்ராயர்
நீளமான பை
தேவையான பணம்
பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
தூக்கு
எழுத்து
கொட்டகை
ஒற்றைக் கம்பளி
35. பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி.

*மீட்சி88இல் ஆத்மாநாமின் ’உறைந்து போன நேரம்’ கவிதை மேற்கண்டவிதமாய்த்தான் அச்சாகியிருக்கிறது. ஆனால், மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் என்னமாய் பொய்பேசியிருக்கிறார் பாருங்கள் :

”ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்துபோன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டு சொற்களைச் “சூனியத்தில், முற்றுப்புள்ளி (2002: பக்49 – 50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள் “சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி” என்றுதான். ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படை யில், மீட்சியில் (இதழ் 28: ஜனவரி – மார்ச் 1988: பக்கம் 50 – 51) வெளிவந்தபோது இடம்பெற்றிருந்தன.

எத்தனை அப்பட்டப் பொய்! இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட, மனசாட்சியற்ற ஆய்வாளர்களி டமிருந்து, அவருடைய பொய்கள் மூலம் ஆதாயம் தேட முனைவோரிடமிருந்து, அத்தகையோரை விசுவாசத்தோடு கண்மூடித்தனமாக ஆதரிப்போரிடமிருந்து பிரம்மராஜனைக் காப்பாற்றுவதற்கு முன் ஆத்மாநாமையும் அவர் கவிதைகளையும் காப்பாற்றியாக வேண்டும்.

”சூனியத்தில் முற்றுப்புள்ளியாகி முடிந்துபோய் விடுபவரல்லர் ஆத்மாநாம்; சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளியாய் பெருவெடிப்பின் சாட்சியாய்த் தற்கொலையிலிருந்து தம் எழுத்துகள் வழி ‘என்னை அழித்தாலும், என்னை அழிக்க இயலாது” (2013:ப.27) என்று உயிர்த்தெழும் ‘பழமையினால் சாகாத’ பெருங்கலைஞர் அவர்”. என்று நாடகபாணியில் வெற்று rhetoric முழக்கமிட்டிருக்கிறார் இந்தப் பொய்ப்பித்தலாட்ட ஆய்வாளர்.

ஆத்மாநாமின் எழுத்துகளை யாரும் அழிக்க முடியாது. தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாமை இப்படிக் கண்டபடிக்கு யாரும் படுகொலை செய்வதையும் அனுமதிக்கலாகாது.

மேலும், மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர் ஆத்மாநாம் எழுதிய சுதந்திரம் கவிதையில் ‘ஸ்வரம்’ இதழில் 'உனதுயிர் மீது ஆசை இருந்தால்' என்றுதான் வெளியாகி யிருப்பதாகவும் ஆனால், பிரம்மராஜன் அதை ‘உன்மீது ஆசை’ என்பதாகச் செறிவுபடுத்திவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். (தன்னையும் அறியாமல் செறிவு என்ற வார்த்தையை அவர் இங்கே பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது!) உனதுயிர் மீது ஆசை’ என்பதில் உயிர்மீது என்பதை redundant ஆக உணர்ந்து ஆத்மாநாம் அதை நீக்கியிருக்க வேண்டும். என் உயிர் இல்லாமல் என் மீது நான் ஆசை கொள்ள வழியேயில்லையே!)

கவிஞர் பிரம்மராஜன் 1989 செப்டம்பர் 1989இல் தன் நண்பரை மரியாதை செய்யும் விதமாய் தன்யா & பிரம்மா வெளியீடாய்க் கொண்டுவந்த ஆத்மாநாம் கவிதைகள், தொகுப்பில் இவ்விதம் குறிப்பிடுகிறார்:

”பிரக்ஞாபூர்வமாக எதிர்கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மை யானவர். எதிர்கவிதை அழகியலை இரண்டாவது நிலைக்குத் தள்ளுகிறது. ஆத்மாநாமின் கவிதைகளில் படிமங்களோ, உருவகங்களோ அவற்றின் செயல் பங்குக்காகப் பயன்படுத்தப்ப்ட்டிருக்கின் றனவே அன்றி, வாசகனை ஏமாற்றும் வார்த்தைகளின் அளவில் நீர்த்துப்போகிற ஜாலங்கள் அல்ல”.

ஆத்மாநாம் படைப்புகள் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டுள்ள முதல் பதிப்பில் (டிசம்பர் 2002) தனது பதிப்புரையில் கவிஞர் பிரம்மராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“பொதுவாகத் தன் கவிதைகள் வெளிவந்த இதழ்கள் மற்றும் மாதம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து வைப்பது பற்றி ஆத்மாநாம் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளிவந்தவை, வெளியிடப்படாதவை என்று பிரித்து என்னிடம் இரண்டு கோப்புகளைக் கொடுத்திருந்தாரே ஒழிய வெளிவந்த இதழ்கள் பற்றிய குறிப்புகள் அவற்றில் இல்லை.

இவை தவிர ஆத்மாநாமின் இறப்புக்குப் பிறகு அவரது அம்பத்தூர் வீட்டிலிருந்த 6 நோட்டுப்புத்தகங்களை நண்பரும் கவிஞருமான திரு. எஸ். வைத்தியநாதன் பத்திரமாக எடுத்துவைத்திருந்து என்னிடம் கொடுத்தார். அந்த இரண்டு கோப்புகளில் இல்லாத பல புதிய கவிதைகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் காணப்பட்டன.
அவ்வாறே சில மொழிபெயர்ப்புகளும். என்றாலும் ப்ரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதிவைத்திருந்தார் ஆத்மாநாம் – ஒருவேளை பிறகு சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்படி விட்டிருக்கலாம்.

மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை அவர் மொழியாக்கம் செய்தவற்றையும் சிற்றிதழ்களில் வெளியிட்டவற்றையும் பற்றி அவர் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. சில மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறார். ‘எல்சால்வடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையின் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதியும் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. கணையாழியில் அது வெளிவந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தேடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. இது தவிர, மேலும் சில விடுபடல்கள் எனது கவனக்குறைவின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்திருந்தது போலவே கையெழுத்துப் பிரதிகளின் ஒரு கோப்பினை தன்னிடமும் ஆத்மாநாம் கொடுத்ததாக ஞானக்கூத்தன் கூறினார். அவரிடம் கொடுக்கப்பட்ட கோப்பில் இருந்தவற்றிற்கும் என்னிடம் தரப்பட்ட கோப்பில் இருந்த கவிதைகளுக்கும் ஏதும் விடுபடல் இருக்கிறதா எனச் சரிபார்த்து, விடுபடல்கள் எதுவுமில்லை என்று எனக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் சின்னச் சின்ன வார்த்தை மாற்றங்கள் – இரண்டு அல்லது மூன்று கவிதைகளில் – இருப்பதாக அவர் எழுதியிருந்தார்.

நான் கூடுமானவரை என்னிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில்தான் இந்தத் தொகுப்பு நூலைப் பதிப்பித்திருக்கிறேன்.”

_ இவ்வளவு விவரமாக வெளிப்படையாக, தன் தொகுப்பாக்கம் குறித்துப் பேசியிருப்பவரை ஆத்மாநாமின் Instant Noodles Critic மதிப்பழிப்பதே குறியாகக் கட்டுரை எழுதுவாராம் . கவிதைமேல் உள்ள ஆர்வம், அக்கறை காரணமாக, கவிஞர் ஆத்மாநாமின் மேல் அவர் கவித்துவம் மேல் உள்ள அபிமானம், மரியாதை காரணமாக அரும்பாடு பட்டு பிரம்மராஜன் 270 பக்கங்கள் போல் உருவாக்கியுள்ள ஆத்மாநாம் படைப்புகளை மூன்று நான்கு பதிப்புகள் வெளியிட்டு முடித்த நிலையில் காலச்சுவடு அந்தக் கட்டுரையை தங்கள் 200வது இதழில் வெளியிடுமாம். அவதூறுக் கட்டுரையை எழுதியவரும் சரி, அந்தக் கட்டுரையை ’கறாரான விமர்சனக் கட்டுரையாக அடையாளங்காட்டத் துடிப்பவர்களும் சரி, காலச்சுவடை எந்தக் கேள்வியுமே கேட்கமாட்டார்களாம். அவர்களுக்கு பிரம்மராஜன் பதில் சொல்லியாகவேண்டு மாம்.

மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ பிரம்மராஜனைக் திறனாய்வுக் கழுமேடையில் ஏற்றும் அதீத முனைப்பில் பின்வருமாறு குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்:
“ஸ்வரத்தில் (இதழ் : 12: ஜனவரி 1983: ப.12) முதலில் சுதந்திரம் கவிதை வெளிவந்தபோது, இதன் மூன்றாம் வரி ‘பறிக்கப்படுமெனின்’ என்றுதான் பிரசுரமாகியிருந்தது. இதனை பிரம்மராஜன் ‘பறிக்கப்படுமெனில்’ எனப் பதிப்பித்துள்ளார். மேலும், இக்கவிதையீன் பஃதினோராம் வரியில், ‘மற்றவரை’ என்றிருந்ததைப் பிரம்மராஜன் ‘மாற்றானை’ எனப் பிழையாகப் பதிப்பித்துள்ளார். மற்றவர் (Other) என்பதற்கும், ‘மாற்றான் (Opponent) ‘ என்பதற்குமான வேறுபாடு மிகச் சிறியதன்று. ‘மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்து’ என்பது, கவிஞனின் ஆற்றலுக்குச் சான்றாகும். ‘மாற் றானைத் தூண்டும் உன்னெழுத்து’ என்பது, கவிஞனின் சார்பினைக் கேள்விக்குட்படுத்துவதாகும். இவ்வரிகளில், சொல்லுக்கும் செயலுக்குமான போராட்டத்தின் பல்வேறு  சலனங்களையும்  முரண்பட்ட பல்வகைக் கருத்துநிலைகளின் ஊடாட்டத்தையும் வெளிப்படையாகக் காணலாம்.”

 

மற்றவரை மாற்றான்  ஆக்கியது தொகுப்பாசிரியர் என்று திட்டவட்ட மாகக் கட்டுரையாளர் தீர்ப்பளிப்பது எப்படி என்ற கேள்வி ஒருபுற மிருக்க, மற்றவர், மாற்றான் என்ற இரு சொற்களுக்கும் கட்டுரையாளர் தரும் ஒரே பொருள்தானா? மாற்றான் என்றால் என்கிறார். எந்த அர்த்தத்தில் அந்த ஆங்கில  வார்த்தையைக் கூறுகிறார். தமிழ் அகராதி மாற்றான் என்றால் தரும் பொருள்களில் ஒன்று ’பகைவன்; எதிரி. ’மற்றவர்’ ஐ ’மாற்றானா’க்கிவிட்டார் என்று குற்றம்சாட்டுவதே குறியாக இருக்கும் மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர் ’மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்து’ என்பது, கவிஞனின் ஆற்றலுக்குச் சான்றாகும், ‘மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்து’ என்பது கவிஞனின் சார்பினைக் கேள்விக்குட்படுத்து வதாகும்’ என்று நீட்டி முழக்கி ’மற்றவரை, மாற்றானாக்கியது தொகுப்பாளரே என்றும் அப்படிச் செய்ததன் மூலம் கவிதையின் பொருளை பல மாற்றுகள் குறைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். இதில் அவர் மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்து என்பதில் உள்ள ’தூண்டும்’ என்ற சொல்லை எப்படிப் பொருள்கொள்கிறார் என்பதுதான் கேள்வி. அந்த வார்த்தை தான் அந்த வரியின் பொருளை நிர்ணயிப்பதாக என் வாசகப் பிரதிக்கு எட்டுகிறது. எமர்ஜென்ஸி காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதை இது என்ற கூடுதல் தகவலும் நமக்குக் கிடைக்கிறது. அப்படியெனில் ‘பிறராகிய ‘மற்றவரோ, எதிரியாகிய மாற்றானோ அந்த ‘உன்னெழுத்து தூண்டும் – அதாவது எழுச்சியூட்டும் அல்லது ஆத்திரமூட்டும். ’மாற்றானி’ல் ஒருசேரக் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு அர்த்தங்கள் மற்றவர் என்ற சொல்லில் கிடைக்காது என்று, கல்லூரிப் பேராசிரியராகப் பண்புரியும்மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளருக்குத் தெரியாவிட்டாலும், தமிழ் இலக்கணம் படிக்காவிட்டாலும், ஏன், பள்ளிக்கே செல்லாவிட்டாலும் தமிழ்மொழியில் ஆர்வமும், தமிழ்க்கவிதையில் ஆர்வமும் கொண்ட ஆத்மாநாம் போன்ற கவிஞர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும் என்ற உண்மை இந்தத் தமிழ்க்கவிதை வெளியில் புழங்கும் அனைவருக்குமே பரவலாகத் தெரியும்.

மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ பின்வருமாறு பிரம்மராஜனை குற்றஞ்சாட்டியுள்ளார்:

“ஆத்மாநாமின் ‘டெலெக்ஸ்’ என்ற கவிதை, முதலில் நிஜங்களில் (ஏப்ரல் 1982: ப.15) வெளிவந்தது. பிறகு படிகளில் (இதழ் 15: 1983: ப.&) மறுபிரசுரமானது. படிகளில் இக்கவிதையின் தலைப்பு ‘டெலக்ஸ்’ எனத் திரிந்துவிட்டது. நிஜங்கள், ப டிகள் ஆகிய இரண்டு இதழ்களிலுமே, இக்கவிதையின் மூன்றாம்வரி, ‘1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்றுதான் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையைத் தம் பதிப்பில் பிரம்மராஜன், ‘1,75,843’  தலைகள் வீழ்ந்துள்ளன” என்று, ஆயிரம் தலைகளைக் கூட்டிப் பதிப்பித்துவிட்டார். கணக்கைச் சரிபார்க்க ஆத்மாநாம் இல்லாவிட்டாலும் அவரது வாசகர்கள் உள்ளார்களே என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை.”

எத்தனை ஆழமான திறனாய்வு பாருங்கள். ‘டெலெக்ஸ்’, டெலக்ஸ்’ எனத் திரிந்துவிட்டதாம். 1,74,843 என்பது 1,75, 843 என்று பிரம்மராஜன் பதிப்பில் ஆயிரம் தலைகள் அதிகமாக வந்துவிட்டதாம். ஆத்மாநாம் வாசகர்கள் ஆத்மாநாம் கவிதைகளை வாசிப்பது இந்தவிதமான   அச்சுப்பிழைகளை அங்கலாய்ப்பதற்கா? இவை அச்சுப்பிழைகள் இல்லையென்று மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரால் ஆதாரபூர்வமாகச் சொல்லமுடியுமா? அப்படியே இவை பிழைகளல்ல, பிரம்மராஜனால் வேண்டுமென்றே செய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால் ‘what is the motive?

(பி.கு: கேட்காமலிருக்க முடியவில்லை. தமிழ் இலக்கணத்தை நவீன தமிழ்க்கவிதைகளுக்குள் பொருத்திப் பொருத்தித் தவறுகளைச் சுட்டிக்காட்டும் மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ ‘என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை’ என்று பற்றி பிரம்மராஜன் ஆகிய சொற்களுக்கிடையே ‘ப்’ போடுவது சரியா? தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்).

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு !

(நன்றி: ஞானக்கூத்தனுக்கும், ஆத்மாநாமுக்கும் – இருவரும் இந்தத் தலைப்பில் கவிதை எழுதியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஞானக்கூத்தன் கையாண்டுவிட்ட காரணத்தால் ஆத்மாநாம் தனது கவிதையை வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு (இரண்டாம் பதிப்பு) என்று பெயரிட்டதாக 1989இல் பிரம்மராஜன் பதிப்பித்த ஆத்மாநாம் கவிதைகள் தொகுப்பிலிருந்து தெரியவருகிறது.) உ.வே.சா.வின் ’என் சரித்திரம்’ நூலில் பல இடங்களில் நாங்கள் சல்லாபித் துக்கொண்டிருந்தோம்’ என்பதாய் வரும். அதாவது, நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம், அளவளாவிக் கொண்டிருந்தோம் என்ற பொருளில்! வார்த்தைகள் காலப்போக்கில் பல மாற்றங்களை ஏற்று புழக்கத்தில் இருக்கின்றன. இதுவே மொழி உயிர்த்திருப்பதற்கான அடையாளம். அதுவும், கவிதையில் ஒரு சொல் அதன் வழக்கமான, பழக்கமான பொருளிலிருந்து வேறுபட்ட பொருளில் இடம்பெறுவது வெகு இயல்பு. நவீன கவிதைக்கே உரிய அம்சம் அது என்றும் கூறலாம்.

நவீன கவிஞர்கள் எல்லோரும் தமிழ் இலக்கணத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் அல்ல. இதையே மாற்றிச் சொன்னால், தமிழ் இலக்கணத்தைக் கரைத்துக் குடித்திருப்பதாலேயே ஒருவர் கவிஞராகிவிட முடியாது. நவீன தமிழ்க் கவிதையில் வாசகப்பிரதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திறந்தமுனை கொண்டிருப்பது நவீன கவிதையின் அடையாளமாக விளங்குகிறது என்றும் சொல்ல முடியும்.

மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ – கவனிக்கவும், மேதகு ஆத்மாநாமுக்கு அல்ல, ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ என்ற சிறப்புப் பட்டத்திற்கு உரிய(வராகத் தன்னை அசட்டுத்தனமாக முன்னிறுத்த முயன்றுகொண்டிருப்பவருக்கு) கல்யாணராமன், ஆத்மாநாமின் சிறுகவிதை திருஷ்டியைத் திருகிக் குதறி பொருள்பெயர்த்துத் தன்னை தமிழ்க் கவிதையின் முதலும் முடிவுமான வாசகராக நிறுவ முயன்றிருப்பதைப் படித்தால் ‘நாமெல்லாம் என்ன மண்ணுக்கு கவிதை படிக்கிறோம் என்றவிதமாய் ஒரு கிலி பரவுகிறது பாருங்கள். அதைச் சொல்லிப் புரியவைக்க இயலாது!

தொகுப்பில் அத்தனை நுணுக்கமாய் பிழைகளைச் சுட்டியிருக்கும் ஆய்வாளர் – அங்கே ஒரு வரி இல்லை, இங்கே ஒரு வரி இல்லை’ என்று அப்படி அங்கலாய்த்திருக்கும் ஆய்வாளர், கவிதையின் தலைப்பைக் குறிப்பிடாமல் விட்டது ஏன், தெரியவில்லை. பிழை சுட்டியே தமிழ்க் கவிஞர்களைவிடத் தன்னுடைய வாசகப்பிரதியே மேலானது முழுமையானது என்று ஒற்றைமேலாதிக்கப்போக்கை வலியுறுத்தப் பார்ப்பதில் முனைப்பாய் இருப்பவர் கவிதையின் தலைப்பையே குறிப்பிடாமல் காற்றில் விட்டுவிட்டது சரியா? ஏனெனில், நவீன தமிழ்க் கவிதைகள் பலவற்றில் தலைப்பு கவிதையின் குறியீடாய், கவிதைக்கான திறவுகோலாய், கவிதையோடு இரண்டறக் கலந்த அம்சமாய் இருப்பது வெளிப்படை.

ஆத்மாநாமின் கவிதை இதோ:

திருஷ்டி
பானைத்தலை சாய்த்து

புல் பிதுங்கும் கைகளோடு

சட்டைப் பொத்தான் வெடிக்க

தொப்பையில் புல் தெரிய தனியாய்

யாருன்னைத் தூக்கில் போட்டார்

சணற் கயிற்றால் கட்டிப்போட்டு

உன் காற்சட்டை தருவேன்

சென்றுன் எதிரியைத் தேடு.

இந்தச் சிறிய கவிதைக்கு என் வாசகப்பிரதியில் குறைந்தபட்சம் 40 பக்கங்கள் எழுத முடியும். எந்த சிறுபத்திரிகை வாசகராலும், படைப்பாளியாலும் செய்ய முடியும்.
இந்தக் கவிதையில் தொகுப்பாளர் பிரம்மராஜன் ஓரிரு வார்த்தைகளை மாற்றிவிட்டதாகவும் அதனால் கவிதையின் பொருள் அனர்த்தமாகிவிட்டதாகவும் மேதகு ’ஆத்மாநாம் ஆய்வாளர்’ அப்படியொரு அங்கலாய்ப்பு அங்கலாய்த்து பின்வருமாறு கூறுகிறார்:

“உன் காற்சட்டை மட்டும் கொடு’ எனக் கணையாழியில் பிரசுரமாகியுள்ளதற்குப் பதிலாக ‘உன் காற்சட்டை தருவேன்’ எனப் பிழையாகப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். இது கவிதையின் மையப் பொருளையே மாற்றிவிடக்கூடிய பிழையாகும். ‘உன் காற்சட்டை தருவேன்’ என்ற கூற்றைப் பண்பாடு காப்போரைக் குத்தும் கேலியாக வாசிக்கலாம்; ‘உன் காற்சட்டை மட்டும் கொடு’ என்ற யாசிப்பைக் கேட்பவனின் வறுமையோடு தொடர்புபடுத்தி வாசிக்கலாம். இந்தக் கவிதையின் ஒன்பதாம் வரியான ‘என் உயிரும் தருவேன்’ என்பதைப் பிரம்மராஜன் முழுவதுமாகவே விட்டுவிட்டார்”.

ஆய்வாளரின் தொனியிலிருக்கும் அதிகாரம் ஆத்மாநாமே மாற்றியிருந் தாலும்கூட என்னைக் கேட்காமல் எப்படி மாற்றலாம் என்று கேட்பதுபோல் இருக்கிறது.
’யாருன்னைத் தூக்கில் போட்டார்’ என்பதுதான் கவிதையின் மையம் என்பதுதான் என் வாசகப்பிரதியும். ஆனால், பிரம்மராஜன் தொகுத்திருக்கும் அளவில், ‘தூக்கில் போடப்பட்டு, தொங்கிக்கொண்டிருப்பவனுக்கு காற்சட்டை மட்டும் கிடைக்குமானால் அவனால் உயிர்த்தெழுந்து சென்று தன் எதிரியை எதிர்கொள்ள முடியும்.
மாறாக, காற்சட்டை மட்டும் கொடு, உயிரையும் தருவேன்’ என்று கவிதைசொல்லி கேட்பதென்றால் அது எத்தனை அனர்த்தம்(அதாவது, ஆத்மாநாம் ஆய்வாளரின் கவிதை பொருள்கொள்ளல் முறையில்) சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உயிரையே கொடுத்த பின்பு காற்சட்டையை ஒருவர் போட்டுக் கொண்டிருந்தால் என்ன, இல்லையானால் என்ன?

அப்படியில்லாமல், பிரம்மராஜனின் தொகுப்பாக்கத்தில், உன் காற்சட்டை தருவேன்/ சென்றுன் எதிரியைத் தேடு’ என்னும்போது தூக்கில் போடுவதைவிட அவமானகரமாய் காற்சட்டையையும் உருவி யிருக்கிறார்கள் (இப்போது நாம் இத்தகைய ஆணவ அடக்குமுறைகளைப் பற்றி தினம் தினம் கேள்விப்படுவதில்லையா என்ன?) அதனால் தான் கவிதைசொல்லி உன் காற்சட்டை தருவேன் என்கிறார். அப்படிச் சொல்வதிலிருந்தே கவிதைசொல்லி அந்த அவமானப்படுத்தப்பட்டிருக்கும் சோளக்கொல்லை பொம்மையை(பொம்மையை ஒத்த மனிதர்களை) எத்தனை சகமனிதநேயத்தோடு பார்க்கிறார் என்பது தெளிவாகிறது.

(நல்லவேளை, ’உன் காற்சட்டை தருவேன்’ என்று தொகுப்பாளர் மாற்றியிருக்கிறாரே, அப்படியென்றால் அவர்தான் கவிதைசொல்லியின் காற்சட்டையைக் களவாடியவர் என்பது தெள்ளத்தெளிவாகிறது என்று மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் சொல்லவில்லையே என்று பிரம்மராஜன் ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம்.)
‘உன் காற்சட்டை தருவேன், சென்றுன் எதிரியைத் தேடு’ என்பதன் மூலம் நம்மைக் காத்துக்கொள்ள நாம்தான் போராட வேண்டும் என்று ஆத்மாநாம் சொல்வதாக என் வாசகப்பிரதி சுட்டுகிறது.

காற்சட்டை தருவேன் என்று தொகுப்பாளர் கூறியது அவருடைய அதிகாரவெறியைக் காட்டுகிறது என்றுகூட மேதகு ஆய்வாளர் முழக்கமிடலாம். ஆனால், ‘அம்மணக்கோண்டியாக’ வெளியே சென்றால் அதையே காரணமாகக் காட்டி சிறையில் தள்ளிவிடுவார்களே என்றுதான் கவிஞரோ அல்லது தொகுப்பாளரோ அப்படிக் குறிப்பிட்டிருக்கவேண்டும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய வாசகப்பிரதி!

மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். Internal Assessment மதிப்பெண்களில் கைவைத்துவிடுவாரோ என்று பயந்து அவருடைய மாணாக்கர்கள் அவர் சொல்வதற்கெல்லாம் ‘தேமே’ன்னு தலையாட்டிக்கொண்டிருக்கக்கூடும் – உள்ளூரக் கறுவியவாறே. ஆனால், நவீன தமிழ் இலக்கிய வெளியில் அவர் இப்படி யெல்லாம் ஆய்வுரையாற்றி தன்னை பெரிய இலக்கியத் திறனாய்வாளராக நிறுவிக் கொண்டுவிட முடியாது. நவீன தமிழ் இலக்கிய வெளி இதுபோல் எத்தனையோ ‘திடீர்த் திறனாய்வாளர்களைப் பார்த்தாயிற்று.

காலச்சுவடில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி இருந்திருந்தால் அவர் இந்தக் கட்டுரையைக் கண்டிப்பாக காலச்சுவடில் வெளியிட்டிருக்க மாட்டார். எழுத்தாளர், கவிஞர் என்ற வகையில் ஆய்வாளர் கல்யாணராமனின் கட்டுரை எத்தனை elementary level இல் அமைந்திருக்கிறது என்பதை அவரால் எளிதாக உள்வாங்கிக்கொண்டிருக்க முடியும். எனவே, இந்த ஆய்வு(?!?!?!!!!)க் கட்டுரை வேறு எந்த இதழில் வெளியாகியிருந்தாலும் அதைத் தன்னுடைய இதழில் ‘கிழி கிழி’யென்று கிழித்திருப்பார். அது சரி, பின்வரும் ஆத்மாநாமின் கவிதையை மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ எப்படி பொருள்பெயர்ப்பார் என்று தெரிந்துகொள்ள ஆசை:(இந்தக் கவிதையில் பிரம்மராஜன் தன் கைவரிசையைக் காட்டி அதனால் சேர்த்திருக்கும் சொத்தை ஸ்விஸ் வங்கியில் சேமித்திருப்பதாக அவர் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்):

நிஜம்
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்

ஆத்மாநாம் கவிதைகளின் தொகுப்பாசிரியர் பிரம்மராஜனைப் பழித்து, மதிப்பழித்துக் குற்றஞ்சாட்டி குறைசொல்லிச் சொல்லி களைப்பாகி விட்டதோ என்னவோ, மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திடீரென்று ‘ழ’ சிற்றிதழ் மேல் பாய்கிறார்:

‘அவசரம் ‘ என்ற தலைப்பில், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய புகழ்பெற்ற கவிதை, பிரக்ஞையில் (செப்டம்பர் 1975: இதழ் 12: ப.2) வெளிவந்துள்ளது. ஆனால், இதுபற்றி, ‘ஆத்மாநாமின் இக்கவிதை (அவசரம்), எந்த இதழிலும் வெளியாகவில்லை. ஞானக்கூத்தன், இதைக் கையெழுத்துப் பிரதியாகவே படித்ததாக நினைவு கூர்கிறார்”(உயிர்ம: மார்ச் 2016, ப.64) என்கிறார் நஞ்சுண்டன். இத்தகவல் முற்றிலும் தவறு என்பதைக் கண்டோம். ஆனால், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய இக்கவிதை மட்டுமன்று, இது தொடர்பான அவரது பிற கவிதைகளும் ழ வெளியீடாக வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் ஏனோ சேர்க்கப்படவில்லை. இந்தப் ‘பதிப்பரசியல்’ குறித்தும் விவாதிக்கவேண்டிய தேவைஇ இன்றுள்ளது.

1981இல் வெளியான காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மாநாமின் கவிதைகளடங்கிய சிறுநூலின் ஆரம்பவரிகள் இவை:

“எட்டாண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டுவரும் ஆ த்மாநாமின் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளில் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னமேயே அச்சேறிய கவிதைகளில் ஒரு பகுதியையும், இன்னும் அச்சேறாத கவிதைகளில் ஒரு பகுதியையும் இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கிறது.” இலக்கியத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள் ஒரு சிறு முயற்சியாய் கைக்காசைப் போட்டு ழ இதழ் கொண்டுவந்து, ஆத்மா நாமின் கவிதைகளை வெளியிடவேண்டும்  என்ற ஆர்வம் காரணமாக வெளியிட்ட, ஆத்மாநாம் கவிதைகளின் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட்ட நிலையிலும் அவர்கள் செய்திருப்பது பதிப்பர சியலாம். (அந்த நூலுக்குப் பின் வந்த ஆத்மாநாம் கவிதைகள் (1989), மற்றும் காலச்சுவடு பதிப்பு இரண்டிலுமே அந்தக் கவிதை இடம்பெற் றிருக்கிறது.)

காசில்லாத காலத்தில் கைக்காசைப் போட்டு சிறிய நூல் பதிப்பித்திருப்பதில் இத்தனை பதிப்பரசியலைப் பகுப்பாய்வு செய்து துப்பு துலக்கி யிருக்கும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர், பிரம்மராஜன் தொகுப்பாக்கத்தில் பிழை மலிந்திருப்பதாய் பிழையான கருத்தைத் தன் கட்டுரை முழுவதும் திரும்பத் திரும்பப் பலவாறு வலியுறுத்துபவர்,
அத்தனை பிழைபட்ட நூலைத் திரும்பத் திரும்பப் பதிப்பித்திருக்கும் காலச்சுவடு பதிப்பகம் குறித்து மருந்துக்கும் ஒரு கண்டனத்தை முன்வைப்பதில்லை!
இதில் உள்ள ’பதிப்பரசியலைத் தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். கவிஞர் பிரதாபருத்ரன் காலச்சுவடு கட்டுரை தொடர்பாகக் கீழ்க்கண்ட கேள்விகளைத் தனது முகநூல் பக்கத்தில் எழுப்பியிருந்தார்; காலச்சுவடுக்கும் அனுப்பியிருக்கிறார்.

Pradhaba Rudhran August 10 at 11:20am ·

“சூன்யத்தில் வெடித்த முற்றுப்புள்ளி” காலச்சுவடு 200வது இதழில் வெளிவந்துள்ள திரு.கல்யாணராமனின் கட்டுரையை முன்வைத்து சிலகேள்விகள்.

கல்யாணராமன் என்பவர் யார்? அவர் ஒரு முனைப்பான இலக்கியவாதியாக இருந்திருந்தால், அவருடைய இலக்கிய முனைப்பு இத்தனைக் காலம் என்ன செய்துகொண்டிருந்தது? கல்யாணராமன் என்கிற இந்த திடீர் இலக்கிய தர்மவாதி சிறுபத்திரிக்கை இலக்கிய உலகிற்கு செய்த பங்களிப்பு என்ன? “ஆத்மாநாம் கவிதைகள்” என்று பிரம்மராஜன் தொகுத்து 2002ல் காலச்சுவடு வெளியிட்ட தொகுப்பில் 147 கவிதைகள் மட்டுமே உள்ளதாகவும், தன்னிடம் 156 எண்ணிகைகள் கொண்ட கவிதைகள் உள்ளதாக திரு.கல்யாணராமன் சொல்கிறார். விடுபட்டவை 9 கவிதைகள். 14 வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தார்?. இந்த முக்கியமான கவிதைகளை இந்த கட்டுரையிலேயே வெளியிட்டிருக்கலாமே? “காகிதத்தில் ஒரு கோடு” தொகுப்பில் ஏற்கனவே வெளிவந்திருந்த 6 கவிதைகளை “ழ” குழுவினர் நுண்மாற்றம் செய்துவிட்டதாக திரு.கல்யாண ராமன் சொல்கிறார். தொகுப்பு வெளிவந்த வருடம் 1981. ஆத்மாநாம் இறந்த வருடம் 1984. ஆத்மாநாமின் படைப்புக்காலம் 1972லிருந்து 1984 வரை. இந்த காலகட்டங் களிலேயே அவரது பெரும்பாலான படைப்புகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகி விட்டதை அறியமுடிகிறது. (கசடதபற, படிகள், ழ, கவனம், ஸ்வரம், கணையாழி, பிரக்ஞை) ஏற்கனவே இதழ்களில் பிரசுரமாகிவிட்டது என்கிற காரணத்திற்காக பின்வரும் காலங்களில் ஒரு படைப்பாளி தனது படைப்புகளை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளக் கூடாதென்கிற சட்டதிட்டங்கள் ஏதேனும் நடைமுறையில் இருக்கிறதா திரு.கல்யாணராமன் அவர்களே? ஆத்மாநாமின் 4 கவிதைகள் “கசடதபற” இதழ் 24, செப்டம்பர் 1972ல் வெளிவந்துவிட்டது என்றும், ஆனால் காலச்சுவடு 2002ல் வெளியிட்ட தொகுப்பில் “வெளிவராத கவிதைகள்” என்று தலைப்பிட்டு வந்துள்ளதாக தற்போது தனது கருத்தினை முன்வைக்கிறார். மேலும், “படிகள்” இதழில் வெளிவந்திருந்தும், பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு வெளியிட்ட தொகுப்பில் விடுபட்டிருக்கிற சில மொழிபெயர்ப்பு கவிதைகளின் தலைப்பை தற்போது பட்டியலிடும் திரு.கல்யாணராமன், 2002ல் ஏன் செய்யவில்லை?

திரு.கல்யாணராமன் முன்வைக்கும் கவிதைகளின் பட்டியல்களையும், திருத்தங்களையும் 1989ல் பிரம்மராஜன் வெளியிட்ட தொகுப்பிற்கு பின்பாகவோ அல்லது 2002ல் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்தபோதோ உடனடியாக சுட்டிக்காட்டியிருந்தால் அதன் இரண்டாவது பதிப்பிலேயே சரி செய்திருக்கலாம். ஐந்தாவது பதிப்பு வெளிவரும்வரை என்ன செய்துகொண்டிருந்தார்?.

1980களில் மாதம் ஒருமுறை தவறாது ஊட்டியிலிருந்த  பிரம்மராஜனுடன் தங்கி இலக்கிய உரையாற்றி வந்த காலச்சுவடு பதிப்பகத்தின் ஆஸ்த்தான கவிஞர் திரு.சுகுமாரன் என்ன செய்து கொண்டிருந்தார்?

திரு.கல்யாணராமன் 14 வருடங்களுக்குப்பிறகு முன்வைக்கும் “சில திருத்தங் களும் கருத்துக்களும்” ஆத்மாநாமின் ஒட்டுமொத்த படைப்புகளை இந்த இலக்கிய உலகத்திற்கும், வாசகர்களுக்கும் அறியத்தர வேண்டும் என்கிற பரந்துபட்ட எண்ணத்தில் இல்லை. அது பிரம்மராஜனுடைய இலக்கிய செயல் பாடுகளின் மீது ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைக்கவேண்டும் என்கிற இலக்கை நோக்கியே நகர்கிறது.

இந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, இன்னும் “செம்மைப்படுத்தப்பட்ட தொகுப்பு” என்று புதிய பதிப்பாகவும், இந்த தொகுப்பிற்கு திரு.கல்யாண ராமனையே தொகுப்பாசிரியராக செயல்பட வைக்கவும் நடக்கிற “இலக்கிய அரசியல் தில்லுமுல்லு” என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R