1. வாய்க்கும் நல்ல தீபாவளி

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மனமெங்கும் மகிழ்ச்சியது
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி !

பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

ஓலைக் குடிசையிலும் ஒழுகிநிற்கும் வீட்டினிலும்
கூழைக் குடித்தாலும் குறையெனவே எண்ணாமல்
வாழக்கிடைத்ததை வரமாக எண்ணி நிதம்
வாழ்கின்றார் மகிழ்ந்துவிட வந்திடட்டும் தீபாவளி !

ஏழையொடு பணக்காரர் எல்லார்க்கும் தீபாவளி
வாழ்வினிலே வருவதனை வையகத்தில் பார்க்கின்றோம்
வசதிபல வந்தாலும் மனமகிழ்ச்சி வரவேண்டும்
மனநிறைவு பெற்றவர்க்கே வாய்க்கும் நல்லதீபாவளி !


2. வரம்கேட்போம் வாருங்கள் !

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபங்கள் எரியட்டும் பாவங்கள் பொசுங்கட்டும்
கோபங்கள் மடியட்டும் குணமங்கே பிறக்கட்டும்
சாபங்கள் தொலையட்டும் சந்தோஷம் மலரட்டும்
தீபங்கள் ஒளிபரப்பத் தீபாவாவளி சிறக்கட்டும் !

கோவில்சென்று கும்பிடுவோம் குணம்சிறக்க வேண்டிடுவோம்
பாவவினை போகவெண்ணி பக்குவமாய் வணங்கிநிற்போம்
தூய்மைநிறை மனம்கேட்போம் துட்டகுணம் அறக்கேட்போம்
வாய்மையுடன் வாழ்வதற்கு வரம்கேட்போம் வாருங்கள் !

குறைசொல்லும் குணமகல குட்டிக்குட்டிக் கும்பிடுவோம்
கறைபடிந்த மனம்வெளுக்க கைகூப்பி தொழுதழுவோம்
வறுமைபிணி நோயகல மனமார வேண்டிநிற்போம்
மறுமைமையிலும் வாய்மையுடன் வாழ்வதற்கு வரம்கேட்போம் !

ஏழையாய் பிறந்தாலும் கோழையாய் இருக்காமல்
தாழ்மையிலும் தளர்வின்றி தலைநிமிர வேண்டிடுவோம்
பொய்களவு சூதுவாது பொறாமைக் குணமணுகாமல்
தெய்வமே காத்திடென தெண்டனிட்டு வணங்கிநிற்போம் !

எத்திக்கும் ஒளிபரப்பும் தித்திக்கும் தீபாவளி
எமைநோக்கி வருகிறது இன்முகமாய் வரவேற்போம்
சுற்றியெமைச் சூழ்ந்திருக்கும் துன்பமெலாம் பறந்தோட
சுமைதாங்கும் இறைவனைநாம் தொழுதேத்தி வணங்கிநிற்போம் !

3. நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

மாநிலத்தில் நாமுயர ஏணியாய் இருந்தார்கள்
மாசகற்றி எம்மனதை மாண்புபெறச் செய்தார்கள்
தாம்படித்து எமக்களித்து தலைநிமிர வைத்தார்கள்
தாமுரமாய் ஆகிநின்றார் தலைசிறந்த ஆசான்கள் !

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமானார்
ஆசான்கள் எம்வாழ்வில் அனைத்துக்கும் தெய்வமானார்
ஆன்மாவை தூய்மையாய் இஆக்கிவிடும் அவர்களின்
அடியினைத் தொழுதுநாம் அவராசி பெறுவோமே !

வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்
தாழ்வெனும் சிக்கலில்  மாட்டிடா வண்ணம்
ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்
ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ  !

நீதிநெறி நடவென்பார் நெஞ்சைதூய்மை ஆக்குவென்பார்
போதனைகள் பலசொல்லி பொறுப்பதனை உணர்த்திடுவார்
பேதாமிலா மனம்வளர பெருங்கதைகள் பலவுரைப்பார்
பாதகங்கள் களைந்தெறிவார் பண்புநிறை ஆசான்கள் !

பாகற்காய் படிப்பையெலாம் பக்குவமாய் எமக்காக
பதப்படுத்தி சுவையேற்றி பதியவைப்பார் நல்லாசான்
சோதனைகள் வந்தாலும் சுமையின்றி நாம்படிக்க
சாதகமாய் வழிசொல்வார் சரியான ஆசான்கள் !

பள்ளிசென்று நாம்படிக்க உள்ளமதில் ஆசைதனை
மெள்ளமெள்ள நுழைப்பதற்கு நல்லவழி கண்டுநிற்பார்
கள்ளமனம் கரைந்தோட கனிவுடனே வகுப்பெடுத்து
உள்ளமதில் அமர்ந்திடுவார் உண்மைநிறை ஆசான்கள் !

ஒருநேரம் அடித்தாலும் பலநேரம் அரவணைப்பார்
சிலநேரம் திட்டிடினும் அருள்வாக்காய் அமைந்துவிடும்
குறைகண்டு விட்டாலும் நிறைவாக்க நினைந்திடுவார்
அறிவுடனே அணுகிடுவார் அன்புநிறை ஆசான்கள் !

பட்டம்பல பெற்றாலும் பதவிதனில் உயர்ந்தாலும்
படிப்பித்த ஆசான்கள் பக்கத்தில் இருப்பார்கள்
அவர்களது ஆசிகளும் அவர்களது வாழ்த்துகளும்
அனைத்துமே எமையிப்போ அகமகிழ வைக்கிறதே !

நல்லாசான் வாய்த்துவிட்டால் நமெக்கென்றும் ஒளிமயமே
நல்லாசன் நம்வாழ்வில் நாழுமே வந்துநிற்பார்
நல்லாசன் கிடைத்தவர்கள் நாளுமே உயர்ந்திடுவார்
நல்லாசான் வாழ்த்துப்பெற்று நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R