- எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -

நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.

தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.

நான் எழுதத் துவங்கிய ஆரம்பத்திலேயே என் முன்மாதிரியென தோழமையோடு குடியேறியவர் அவர்தான். என் ‘சத்ரு’ கதையை உலகின் தனித்துவமிக்க பத்து கதைகளில் ஒன்று என எழுதி ஒரு ஆரம்பகால படைப்பாளியைத் திக்குமுக்காட வைத்தவர். மரங்களையும் பழங்குடி மனிதர்களையும் காடுகளையும் அதன் பச்சைய வாசனையையும் பவாவின் கதைகளில் நான் உணர்ந்தது போல வேறெங்கும் உணந்ததில்லையென எழுதிய கைகளை ஒரு நிமிடம் நான் பற்றிக் குலுக்க கூட அனுமதியாதவர். அக்கணத்தில் தனக்கு எது சரியென்றுத் தோன்றுகிறதோ அதன் பின்விளைவுகள் எதுவாயினும் எந்தக் கணக்கும் போட்டுப் பார்க்கத் தெரியாமல் அப்படியே உதறித் தள்ளி எழுந்து தனக்கு விருப்பமானதை நோக்கி நடக்கத் தெரிந்த ஒரு உண்மைத் துறவியின் மனம் எப்போதுமே பிரபஞ்சனுக்கு உண்டு.

ஒரு பிரபலமான வாரப் பத்திரிகையில் தான் எழுதிக் கொண்டிருந்த தொடர்கதையை ஏதோ சில மனநெருக்கடிகளால் எழுத முடியாமல் அவரின் பிரியப்பட்ட ‘சுமதி’ யை மௌண்ட்ரோட்டின் ஸ்பென்சர் முன் அநாதையாய் நிற்க வைத்துவிட்டு நட்ட நடு இரவில் திருவண்ணாமலைக்கு பஸ் ஏறின பிரபஞ்சனை இப்போது இக்கணத்தில் நினைத்துக் கொள்கிறேன். அதிகாலை திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் அவரை அழைத்துவர என் பைக்கோடு நின்றிருந்த என்னைப் பார்த்து, ”இப்பத்தான் மனம் சந்தோஷமாக இருக்கு, அச்சு ஊடகம் படைப்பாளியின் வயிற்றைக்கீறி குடலை உருவக்கூடாது சார், நல்ல காபி உங்க ஊரில் எங்கு கிடைக்கும்?” என இயல்புக்குத் திரும்பிய ஒரு மனிதனை நீங்கள் எந்த வகையில் சேர்ப்பீர்கள்? ஒரு நல்ல காபிக்காக, பல மைல்கள் நடந்தும், ஆட்டோவில் பயணித்தும் பருகத் தெரிந்த ருசி வாய்த்தவர் அவர். ராயப்பேட்டை சரவணபவனின் அதிகாலைத் திறப்பு, என்பதே பிரபஞ்சனின் ஒரு குவளை தேநீருக்காகத்தான் எனத் தோன்றும். எல்லாத்தரப்பு மனிதர்களுமே அவரின் தோழமைப் பட்டியலில் உண்டு. மனிதர்களை எதன் பொருட்டும் வரிசைப்படுத்தத் தெரியாதவர் அவர். மேன்சன் வாட்ச்மேன், கூரியர் கொண்டுவரும் பையன், சத்யம் தியேட்டர் வாசலில் பர்சைத் தொலைத்துவிட்டு ஊருக்குப் போக வழியில்லாமல் நிற்கும் ஜீன்ஸ் போட்ட இளைஞன், ‘மகாநதி’ படிச்சிட்டு அப்படியே உங்களைப் பாக்கப் புறப்பட்டு வந்தேன் சார் எனச் சொல்லிஅதிகாலையிலேயே கதவைத்தட்டும் ஆய்வு மாணவி இவர்களோடுதான் அவரின் காலை, அல்லது மதிய உணவு பகிர்ந்து கொள்ளப்படும்.

கையில் பணம் கிடைக்கும் தருணங்களில் நீங்கள் பிரபஞ்சனை அருகிலிருந்து அவதானிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு வள்ளல் அவர் கைகளில் புகுந்து பரப்பரப்பான். கடைசி ஒரு ரூபாயும் தன்னிடமிருந்து அகலும் வரை அவரின் வெறிபிடித்த அடவுகள் தொடரும். எந்தக் காரணத்துக்காகவும் தன்னிடமுள்ள பணம் செலவழிந்துவிட வேண்டுமென நினைக்கும் ஒரு மனதைவிட வேறென்ன மேன்மை வேண்டும் ஒரு படைப்பாளிக்கு?

“சார், சில நண்பர்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். கூட்டி வரட்டுமா?” என எஸ்.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் கேட்கிறார்.

“ரொம்பச் சந்தோஷம், வாங்க ராமகிருஷ்ணன். எத்தனை பேர் கூட வருவாங்க?”

“பத்திருபது பேர்”

“சந்தோஷம். உடனே வாங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில் பீட்டர்ஸ் காலனி வீட்டையடைந்த அவர்களுக்கு, பூட்டிய வீடு அதிர்ச்சியைத் தருகிறது.

அணைத்து வைக்கப்பட்ட தொலைபேசி, தெரிந்தவர்களின் விசாரிப்புகள், அவர் வழக்கமாக போகுமிடங்கள் என எல்லாத் தேடுதல்களும் தோல்வியில் முடிய, அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இப்படியான சிறு ஏமாற்றுதல்களை அவர் எப்போதும் சிரமேற்கொண்டு கைக் கொள்வதில்லை. அது அவரின் இயல்பு. பத்துநாள் கழித்து ஒரு இலக்கியக் கூட்டத்தில் ராமகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே கேட்கிறார். "எங்களை வரச்சொல்லிட்டு வீட்டைப் பூட்டிட்டு எங்கேயோ போய்ட்டீங்களே சார்”. அவர் தனக்குக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறார். ஒரு நண்பரைப் பார்க்க அவசரமாகப் போக வேண்டியிருந்தது. அது பொய் என இருவருக்குமே தெரியும். இருந்தாலும் ஒரு உயர்ந்த படைப்பாளி சொல்கிறார், இன்னுமொரு பிரபலமான எழுத்தாளனிடம். அது எப்படிப் பொய்யாகும்? அன்று அந்நண்பர்களுக்குச் செலவழிக்க அவர் சட்டையில் பணமில்லை என்ற உண்மை இருவருக்கும் இடையேயிருந்த இடைவெளியில் ஒரு நாய்க்குட்டிபோலப் படுத்துக்கிடந்தது. நண்பர்களை எப்போதும் போஷிக்க வேண்டுமென்பதை பிரபஞ்சனிடமிருந்தே நான் அடைந்தேன். விரும்பியபடி பணமில்லையென்பது எப்போதுமே அவருக்கு, தற்காலிகச் சோகம் மட்டுமே. அதன் பொருட்டு எவனை எப்படிப் புகழ்ந்தால் அதை அடைய முடியுமென அவர் மனம் எப்போதும் கணக்கு போட்டதில்லை.

வெளியூர்ப் பயணம் முடிந்து பாண்டிச்சேரி வீட்டிற்கு வந்த ஒரு நள்ளிரவில், மேசையில் கிடந்த புதுவை அரசுக்கடிதம் அவரை ஆச்சர்யப்படுத்துகிறது. அரசுக் கவியாக வரமுடியுமா? என பாண்டிச்சேரி மன்னன் கேட்கிறானா? அப்படியெனில் அதை நிராகரித்துவிட்டு விடிவதற்குள் சென்னைக்கு பஸ் ஏறி விட வேண்டுமென கடிதத்தைப் பிரிக்கிறார். வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரோடு சரியாக அச்சிடப்பட்ட அவர் வீட்டு விலாசம். அத்தனிமையில் மிகுந்த அருவருப்போடு அக்கடிதம் அவரால் பார்க்கவும், படிக்கவும் படுகிறது. ஒரு முழு சிகரெட்டின் கரைதலுக்குப் பின் அவருக்கு எல்லாமும் பிடிபடுகிறது. அவரின் இப்போதைய தேவை ஒரு விடியல் மட்டுந்தான். விடிந்ததும் தன் உறவினரும் பாண்டிச்சேரியின் அப்போதைய அமைச்சருமான ஒருவர் வீட்டில் அக்கடிதத்தோடு இருக்கிறார். அவர் புன்னகைத்துக் கொள்கிறார். நன்றி சொல்ல வந்தவரை பின் எப்படி வரவேற்பது? பிரபஞ்சன் சொல்கிறார், இப்படி ஒரு கேவலமான ஆணையை எனக்கு அனுப்ப வேண்டுமென உனக்கு எப்படித் தோன்றியது? அமைச்சரின் முகம் இறுகுகிறது. “பிரபஞ்சன் என்ற பெயரில் மானுட விடுதலைக்கும், வைத்தியலிங்கம் என்ற பெயரில் லாஸ்பேட்டையில் கள்ளுக்கடை எடுத்து வியாபாரம் செய்வேன் என நீ நெனச்சே பாரு, உன்னை விடக் கேவலமா இந்த உலகத்துல யாரும் என்னை நெனச்சிருக்க முடியாது” என அக்கடிதத்தை ஆறிக் கொண்டிருந்த தேநீர் கோப்பைக்குக் கீழே வைத்துவிட்டு நடந்த பிரபஞ்சனின் மன உலகம் எதுவென நமக்கு புரிந்து கொள்ள முடியுந்தானே! அந்த இயல்பிலிருந்துதான் அவரின் அத்தனை படைப்புகளும் திமிறியது. கலங்கிய ஏரியில் கையால் மீன் பிடிக்கும்போது நீருக்கு மேல் துள்ளும் விரால்கள் எவர் கைகளுக்குள்ளும் அடங்காது தோழனே! எழுத்தாளன் எப்போதும் மனதாலும், உடலாலும் சுத்தமானவன் என்ற கொள்கையுடையவர் அவர். தொடர்ந்து அவரை நட்பால் பின் தொடரும் முருகேசபாண்டியன் போன்றவர்கள் அவரின் உடைகளைப் பற்றி மட்டுமே ஒரு தனிக்கட்டுரை எழுதிவிடக்கூடும். நல்ல உடை, நல்ல உணவு, சுகாதாரமான இருப்பிடம் இவை மட்டும்தான் சாகித்ய அகடெமி விருது உட்பட பல விருதுகளைக் குவித்த ஒரு தமிழ் எழுத்தாளனின் எளிமையான கனவு. ஆனால் ஒருபோதும் அவை அவருக்கு எளிமையாகக் கிட்டியதில்லை.அதற்கே அவர் தினம் தினம் போராட வேண்டியிருக்கிறது. என் ‘எல்லா நாளும் கார்த்திகை’யில் அவரைப் பற்றி ‘இழப்பதற்கும், அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்’ என்ற ஒரு கட்டுரையில், ‘ஒரு கலைஞன் ஒட்டுமொத்த மானுடப் பசியைப் போக்க ஒரு பக்கம் பாடிக்கொண்டே, தன் சொந்த பசிக்கான ரொட்டித் துண்டுகளையும் தினம்தினம் தேட வேண்டியிருக்கிறது” என எழுதியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு மழை இரவில் பிரபஞ்சன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். இரண்டு பக்கமுமே மௌனம் நீடித்த அதற்கும் உரையாடல் என்றே பெயர் சொல்லப்பட்டது. தெளிவற்ற வார்த்தைகள் உடைந்து சிதறி அவரிடமிருந்து வந்ததை, அதற்கு முன்னும், பின்னும் அப்போது மட்டுமே கேட்டிருக்கிறேன். “என் ஐம்பது வருஷத்தை வீணாக்கிட்டேன்னு நெனெச்சேன் பவா, இல்ல நானும் இச்சமூகத்துக்கு ஏதோ செஞ்சிருக்கிறேன். அதுதான் உங்க எழுத்துல தெறிக்குது. நன்றி.” நான் அவரைத் தொடர்வதற்குள் அவர் வெகுதூரம் போய்விட்டிருந்தார்.

நானறிந்து தமிழில் எழுதத் துவங்குகிற படைப்பாளிகளுக்கு அவர் தரும் உத்வேகம் எதைக் கொண்டும் அளவிடமுடியாதது. அதிலும் பெண்கள் எழுத ஆரம்பித்தால் பிரபஞ்சன் கொண்டாடித் தீர்ப்பார். பத்து வருடங்களுக்கு முன் பால் சக்கரியாவின் கதைகளை மொழிபெயர்த்து முடித்து இது சரிதானா தோழர் என தயங்கித் தயங்கி பிரபஞ்சனிடம் நீட்டிய கே.வி.ஜெயஸ்ரீக்கு முன்னுரையுடன் சேர்த்து, அதைப் புத்தகமாக்கி ஜெயஸ்ரீ கைகளில் கொடுத்தவர் அவர். நானறிந்து இது வேறெந்த மூத்த படைப்பாளிகளுக்கும் வாய்க்காத மனது. ஒவ்வொரு புத்தாண்டுக்கும் கட்டுக்கட்டாகத் தாள்களையும், உயர்ந்த விலையுள்ள பேனாக்களையும் வாங்கி, ஷைலஜாவுக்கும், ஜெயஸ்ரீக்கும் அனுப்பி வைப்பார்; அல்லது அவரே பஸ் ஏறி வந்து கொடுத்துவிட்டுப் போவார். பெண்கள் எழுத ஆரம்பித்தால் மட்டுமே பல நூறு ஆண்டுகளாகப் புதையுண்டு கிடக்கும் மௌனம் உடையும். போர்ப் பாடல் கேட்கும். அது கரடு தட்டிப்போன இந்த மானுடச் செவியின் பறைகளைக் கிழிக்கும் என உறுதியாய் நம்பும் வெகு சில படைப்பாளிகளில் பிரபஞ்சனே முதன்மையானவர்.

‘மாறும்’ என்ற சொல் மட்டுமே மாறாதது என்பது பிரபஞ்சனுக்கு மட்டுமே நூறு சதவீதம் பொருந்தும். எக்காலத்திலும் எந்நிலையிலும் அவர் எல்லோரையும் ஒரே மாதிரி ஏற்றுக் கொண்டதில்லை. அசோகமித்திரனின் படைப்புகள் உலகத்தரமானவை எனக் கொண்டாடிய பிரபஞ்சன், இந்துத்துவாவிற்குச் சாய்வான அவரின் புனைவில்லாத எழுத்திற்கு முன் நின்று எதிர்விணை ஆற்றியுள்ளார். தனக்குப் பிடித்தமான படைப்பாளியாயிற்றே என மௌனம் காப்பது, அக்கருத்துக்கு மறைமுகமாகத் துணைப் போவதுதானே! ஒரு நேர்மையான படைப்பாளியாக அதை ஒருபோதும் அவர் செய்ததில்லை. எல்லாக் காலங்களிலும் ஒரு படைப்பாளியை அவர் கொண்டாடியதில்லை. அவர் வாசிப்புக்குத் தக்கவாறு படைப்புகளின், படைப்பாளிகளின் முதன்மைப்பட்டியல் மாறிக்கொண்டேயிருக்கும். அது ஒரு எழுத்தாளனின் ஆகப்பெரும் தகுதியும், நேர்மையும்கூட.

எல்லாக் காலத்திலேயும் தன்னை முதலிடத்தில் நிறுவிக் கொண்ட ஒரு படைப்பாளியை, ஒரு இளம் படைப்பாளி தன் ஒரே கதையால் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்பது பிரபஞ்சனின் கொள்கை. அதை ஏற்று அங்கீகரிக்கிற மனம் மிகப் பெரிது. அது எப்போதுமே பிரபஞ்சன் என்ற ஆளுமையிடம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதுதான் நம் மொழியின் அதிஷ்டம். பாண்டிச்சேரிக் கடற்கரையில் எப்போதாவது கால் நனைக்கிற மாதிரி, தமிழ்த் திரைப்பட உலகிலேயும் எப்போதாவது அவர் கால் நனைத்திருக்கிறார். அந்த அனுபவங்கள் எல்லாத் தமிழ் படைப்பாளிக்கும் நேர்ந்தது போலவே அவருக்கும் எந்தக் கௌரவத்தையும் தந்துவிடவில்லை., எத்தனை கதைகளையும், எவன் பேரில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் எனக்கு காசநோய் சிகிச்சைக்குக் காசு வேண்டுமென புதுமைப்பித்தன் சொன்னது போலவே,‘எனக்குப் பெயர் வேண்டாம். ஊதியம் மட்டும் போதும்’ என்ற சமரசத்தை நோக்கி அவரை நெட்டித் தள்ளியதும் இதே வாழ்வுதான். பீர் முகமது அப்பாவின் ஒரு கதையில் பகலில் அனுமன் வேஷம் போட்டுத் தெருவில் பிச்சை எடுக்கும் ஒருவனை, உண்மையான அனுமன் என நம்பி அவனைப் பின் தொடரும் ஒரு குழந்தையின் மனநிலையே எப்போதும் பிரபஞ்சனின் மனநிலை. யாருமற்ற புளியமரத்தடியில் நின்று தன் வேட்டியைத் தளர்த்தி சிறுநீர் கழித்து, பீடிபற்ற வைக்கும் ஒரு கணத்தில், ‘இது நிஜ அனுமன் இல்லை, சாதரண மனிதன்’ என ஊர் திரும்பும் குழந்தையும் அதே பிரபஞ்சன்தான். இந்த இரு வேறு மனநிலைகளில்தான் ஒரு பெரும் படைப்பாளி தன் ஜீவித காலம் முழுக்கத் தமிழ்ச் சூழலில் பயணிக்க வேண்டியுள்ளது.

திரும்பிப் பார்த்தால் பிரபஞ்சன் தன் கதைகளில் மேன்மையான மனிதர்களை, விடுதலையை மௌனமாகவேணும் கோரும் பெண்களை, கடவுள், மனிதன் என்ற கற்பனையும் நிஜமுமான ஊசலாட்டத்தில் மனிதனின் பக்கம் மட்டுமே நிற்கும் மனிதர்களை, குமாரசாமியின் பகல்பொழுதுகளை, எம்.பில்., பி.எச்.டி., என்ற பெருங்கனவுகளுக்காகத் தங்கள் வறுமையிலிருந்து எழுந்து பல்கலைக் கழகங்களின் வாசல்வரைவந்துவிடும் பெண்களை, வஞ்சிக்க நினைக்கும் பேராசிரிய அதிகாரங்களைஅவர் எப்போதுமே தன் புனைவிலும், புனைவில்லாத எழுத்திலும் எதிர்த்தே எழுதியிருக்கிறார். காலந்தோறும் பெண்களை வஞ்சிக்கும் ஆண் மனங்களின் அவலத்தை அவர் அளவிற்குப் புரிந்து எழுதியவர் என யாரையும் அடையாளப்படுத்த முடியவில்லை. தன் சார்புக் கொள்கை, தான் சார்ந்த தத்துவம் என்பதற்காக பெண்கள்மீது இழைக்கப்படும் அதிகார அத்துமீறல்களை, அது எவனாய் இருந்தபோதிலும், எச்சூழலிலும் எதிர்க்கத் தவறியதில்லை என்ற உண்மை அவரின் ‘பெண்’ தொகுப்பைப் படிப்பவர்களுக்குப் புரியும். இதுதான் ஒரு காலத்திய உன்னதமான கலைமனதின் மேன்மை. நடைமுறைத் தவறுகள், தான் உயிரென நம்பும் இயக்கத்தில் நடந்தாலும்கூட அவன் பேனாவை மூடிவைத்து விடக்கூடாது என்ற உலகளாவிய பேரன்பும் மானுட அக்கறையுமது. இதன் வழியேதான் பிரபஞ்சன் தன் எழுத்தில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் பயணிக்கிறார். கலங்கல் இல்லாத, ஆர்ப்பரிக்காத, நகருகிறதோ எனச் சந்தேகிக்க வைக்கும் ஒரு நதியின் பயணத்தை அதன் கரைகளில் அமர்ந்து கவனிக்கலாம். நூறு ஆண்டுகளாய் அதைக் கடக்கும் நீராலும் கரைக்கமுடியாத கூழாங்கற்களின் முழு உருவம் அதற்கடியில் தெளிவாகத் தெரியும். தன்னில் குளிப்பாட்டப்பட்ட ஒரு குழந்தையின் சரும வாசனையை, தன்னில் மிதந்த ஒரு இளம் பெண்ணின் தாங்க முடியாத கனத்தை, தன்னில் மூழ்கிய ஒரு தோல்வியுற்ற கலைஞனின் மொத்த வாழ்வை அது அறியும்தானே. அக்கூழாங்கற்களைப் போலத்தான் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட கலைஞனாக ஜீவிக்கிறார் பிரபஞ்சன். அதிலிருந்துதான் ஆகச்சிறந்த படைப்புகள் அவரில் முகிழ்கின்றன. பிரும்மம், மீன், பச்சைமாமி மெஸ், மரி என்கிற ஆட்டுக்குட்டி, ஒருமனுஷி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் எனத் தொடரும் எல்லாக் கதைகளுமே மனித வாழ்வின் மேன்மையையும், மனிதர்களின் உயர்வையும் மட்டுமே பேசுகின்றன.

அவர் தன் கதைகள் மூலம் எப்போதுமே உபதேசித்ததில்லை. ஆகவே மானுடா! எனப் பெருங்குரலெடுத்துக் கத்தியதில்லை. ‘சைக்கிள் நிறுத்த இடமில்லையென நீ வெட்டிவிட்ட முருங்கைமரம் துளிர்த்துவிட்டது நண்பா’ என நம் தோள்மீது தோழமையோடு கை போட்டுக் கொள்கிறார். இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தவரைப் பார்க்க, நானும் ஷைலஜாவும் ஒரு மத்தியான நேரத்தில் போனோம். தனக்குப் பிரியமான மடையைக் கண்டதும் உடையத் தோன்றும் வாய்க்கால் நீரைப் போல எங்களைப் பார்த்ததும் தன்னை உடைத்துக் கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவுடன் என் மகன் கேட்டான். “பாண்டிச்சேரிக்கா? திருவண்ணாமலைக்காப்பா?” எங்கள் குடும்பத்தோடுச் சேர்த்து உங்கள் குடும்பத்தையும் வைத்திருந்த அவன் நம்பிக்கை அந்நேரம் சிலிர்ப்பூட்டியது ஷைலஜா. எங்கள் கண்ணீரால் மட்டுந்தான் அவ்வார்த்தைகளை ஒற்றியெடுக்க முடிந்தது.

மூன்று மாதத்திற்கு முன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களோடு மூன்று முழு நாட்கள் தங்கியிருந்தபோது தன் நீண்ட வாழ்வின் ஆழ அகலங்களை விசாலமாகப் பகிர்ந்து கொண்டது ஒரு பேரனுபவமாக எங்களுக்குள் விரிந்தது. எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர் சட்டென எழுந்து வம்சியின் பைக்கில் உட்கார்ந்து “நீ எடுத்த படம் பாக்கணும் வா” என அவனைக் கை பிடித்தழைத்தபோது எதுவும் தெரியாதவனைப் போல் அவர்களிருவரையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தொடக்கமும், தொடர்ச்சியும் போல் அவர்களிருவரும் பைக்கில் போவது அத்தனை பெருமிதமாக இருந்தது எனக்கு.

பிரபஞ்சனின் ‘கருணையில்தான்’ கதை எப்போதோ நான் படித்துச் சிலிர்த்த ஒன்று. அத்தனை வருடங்களாக எனக்குள் அடைகாத்த அக்கதை, என் ஒரு கதை சொல்லலில் முட்டை ஓடு உடைந்து, உயிர்த்துடிப்புடன் வெளிவந்து வம்சியின் கைகளைப் பற்றிக் கொண்டது. அவன் அக்கதையைப் படமாக்கினான். அதற்கு ‘வலி’ என அவனே தன் பெரியப்பாவின் அனுமதியுடன் பெயரிட்டான். அத்தனை மகத்தான ஒரு படைப்பாளியோடு, தான் மட்டும் தனித்திருந்து ஒரு பூட்டிய இருட்டறையில் அவர் கதையின் காட்சி வடிவத்தை அவருக்கே போட்டுக் காண்பிக்க வாய்த்தது அவனுக்கு. ‘நான் உங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கிறேனா பெரியப்பா?’ என சொற்களால் அல்ல கண்களால் ஏறெடுத்த அவனை, அப்படியே அணைத்துத் தன்னுள் புதைத்துக் கொண்ட மகத்தான கலைஞன் பிரபஞ்சனுக்கு இம்மாதம் இருபத்து ஏழாம் தேதி எழுபத்து மூன்று நிறைகிறது என்பது நம்பமுடியாத ஒன்றுதான். தமிழ்ச் சமூகம் தன்னுள் அவரை இருத்திக் கொள்வது அது பெற்ற பாக்கியம்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R