புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார்புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார். இராஜேஸ்வரி, கந்தப்பர் குழந்தைவேல் - கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தையாவார். இராஜேஸ்வரி  1969 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் அவர்களை திருமணம் செய்து,  இராஜேஸ்வரி மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர். 1970களில் இருந்து இன்றுவரை இலண்டனில்   வசித்து வருகிறார். இலண்டனிலே இவர் தம்மை முழுமையாக இலக்கிய உலகில் அர்ப்பணித்துள்ளார். இவர் சிறுகதை,  நாவல், கட்டுரைகள் முதலான ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். இராஜேஸ்வரி,  யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணி புரிந்தார். பின்னர்,  இலண்டன் சென்று பல ஆண்டுகளுக்குப் பின், தமது குழந்தைகள் வளர்ந்த பின் பல துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பட்டம் (BA) (London College of Printing 1988)  பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத் துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

இலங்கையில் 1960 களுக்குப் பின்னர், பல பெண் எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் பிரவேசிக்கத் தொடங்கினர். இக்காலப்பகுதியில் இலக்கிய ரீதியான தமிழகத் தொடர்பு நெருக்கமுற்றமையும் எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு துணை புரிந்தது. இக்காலப் பகுதியில் பெண்கள் தொடர்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய கதைகளை முதல் முதலாக எழுத முற்பட்டவர் பவானி ஆழ்வாப்பிள்ளை. இக்கால கட்டத்திலே இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி இராசதுரை, நயீமா சித்திக், இராஜம் புஸ்பவனம், பூரணி, பத்மா சேமகாந்தன், தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா போன்ற பெண் எழுத்தாளர்களையும் விதந்து கூறலாம். அதிகளவு புலம்பெயர் நாவல், சிறுகதைகளைப் படைத்த பெண்ணிய எழுத்தாளராகவும் இன்றுவரை இலக்கிய உலகில் எழுதுபவராகவும் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளராகவும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,   தமது எழுத்துக்களால் பிரபல்யம் அடைந்துள்ளார். மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய ஆக்க இலக்கியங்களையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். 

மருத்துவ நூல்கள்

1.    தாயும் சேயும்
இவரது ‘தாயும் சேயும்’ என்ற மருத்துவ நூல் 2002ஆம் ஆண்டு மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒரு பெண்ணின் முக்கிய சவால்களான கருத்தரித்தல், கர்ப்ப காலம், மகப்பேறு, புதிய சிசுவை வளர்த்தெடுத்தல் முதலானவற்றை இராஜேஸ்வரியின் தாயும் சேயும் என்ற நூல் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது. இந்நூலில் தாயினதும் சேயினதும் உடல், உள வளர்ச்சி பற்றி விபரிக்க முனைந்துள்ளார். இந்நூல் தாய்மையின் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறந்து முதல் ஐந்து வருடங்களையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

2.    உங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி
மருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த இந்நூல் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இவரது இரண்டாவது மருத்துவ நூலாகும். இது தமிழ் மக்களின் ஆரோக்கிய விருத்தியை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  இருதய நோய்கள், நீரிழிவு, உளவியல், பாலியல் முதலானவை பற்றி இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை பல ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள விடயங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி நூல்

1.தமிழ்க்கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்

இந்நூல் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆசிரியர்  இந்நூலில் இந்தியாவிலும்  இலங்கையிலும் தமிழ்க் கடவுள் முருகன் பெறும் இடத்தினை நன்கு புலப்படுத்துகின்றார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ‘முருகக் கடவுள்’ பற்றிய மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிப்பதற்கு தமிழ் கடவுள் முருகன் பற்றிய  ஆராய்ச்சியைச் செய்தார். அதன் போது கிடைத்த பல சரித்திரக் கதைகளின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலில் ஆரியர், திராவிடர் இன, மொழிச் சிக்கல்களையும் எடுத்துக்காட்டியுள்ளார். முருக வழிபாட்டின் இயல்பை, இனிமையை, வாழ்வை, வரலாற்றை ஒரு துறை சார் ஆராய்ச்சியாக மட்டும் நோக்காமல் தொல்லியல், வரலாறு, மாந்தரியல், நாட்டுப்புறவியல், தமிழியல் எனப் பல்துறை சார்ந்து ஆராய்ந்துள்ளார்.

திரைப்படங்கள்

1. Escape From Genocide  – A Video (Based on Tamil  Refugees  from  Srilanka) – 1986
இது தமிழ் அகதிகள் பற்றியது. தமிழ் அகதிகளுக்கு ஆதரவு தேடுவதற்கு உதவுகின்ற வகையில் இத்திரைப்படம்  அமைந்துள்ளது. இந்த டொக்கியுமென்டரி மூலம் தமிழர் பிரச்சினையை உலகமயப்படுத்தியுள்ளார். இது ஜேர்மனியில் நடைபெற்ற பட விழாவிலும்,  பல மனித உரிமைகள் ஸ்தாபனங்களிலும் காண்பிக்கப்பட்டது.

1. 2.    The Private Place – A 16 mm Film(Issues on Rape in Marriage) – 1988
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான  போராட்டத்தை தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்திய இராஜேஸ்வரி, இத்திரைப்படங்கள் மூலம் மக்களுக்குப் பல விடயங்களைக் கூற முனைந்துள்ளார். திரைப்படத் துறையில் பட்டம் பெற்றதன் விளைவாக இத்திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

சிறுகதைகள்

புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் ஈழத்தின் கிழக்கு மண்ணைச் சேர்ந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  அவர்கள் புனைகதை வடிவமான சிறுகதைகளையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது  சிறுகதைகளில் 79 இற்கு  மேற்பட்டவை வாசகருக்கு ஏற்ற வகையில் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் ஆறு சிறுகதைத் தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன (அம்மா என்றொரு பெண், நாளைக்கு  இன்னொருத்தன், ஏக்கம், அறைகுறை அடிமைகள், இலையுதிர்   காலத்தின் ஒரு மாலை நேரம்) . இவரது சிறுகதைகள் இந்தியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்மு  மற்றும் இங்கிலாந்து முதலான  நாடுகளில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆங்கிலத்தில் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். உதாரணம் : Mother of Srilanka. இது இலண்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது.

நாவல்கள்

நாவள்: அம்மா என்றொரு பெண்இனப் பிரச்சினையோடு தொடர்புடைய,  அதனைப் பொருளாகக் கொண்ட வகையில் இராஜேஸ்வரியின் ‘ஒரு கோடை விடுமுறை’(1981) என்ற நாவல் அமைந்துள்ளது. இலங்கையை விட்டு வெளிநாடு சென்று வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஒருவன் (பரமநாதன்) விடுமுறை ஒன்றில் ஈழத்திற்குத் திரும்பி வந்த போது, பெற்ற அனுபவங்களின் ஊடாக ஈழத்து  (குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேச ) இனக்கொலை உணர்வோட்டங்களைப் பதிவு செய்வதாக இந்நாவல் காணப்படுகிறது. தேசிய இனப் பிரச்சினையின் சில பரிணாமங்கள் இந்நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதற் பாகம் பரமநாதனின் விடுமுறைக்கால ஈழத்துக் கதை நிகழ்வாகவும், இரண்டாம் பாகம் இலண்டன் மீண்ட பின்னரான கதை நிகழ்வாகவும் அமைந்துள்ளது.  இன ஒடுக்குமுறையின் கீழ் அல்லல்படும் போதும் அந்தச் சமூகம் பாரம்பரிய சாதி மற்றும் சீதனக் கொடுமைகளில் இருந்து விடுபடவில்லை என்பதையும் இந்நாவல் புலப்படுத்தியுள்ளது. இந்நாவல் இலங்கை, இந்திய எழுத்தாளர்களிடமும் முற்போக்கு வாதிகளிடமும் சென்றடைய, பிரசித்தி பெற்ற இலக்கிய ஆர்வலரான திரு பத்மநாப ஐயர் பெரும்பாடுபட்டுள்ளார். இந்நாவல் வெளிவர யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த  நித்தியானந்தன் மற்றும் நிர்மலா, அத்துடன் யாழ் ‘அலை’ இதழாசிரியர் அ. யேசுராசா போன்றோர் உதவியுள்ளனர்.

தில்லையாற்றங்கரை(1987) - மூன்று பெண்கள், மூன்று  தலைமுறைகளின் சட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடியதைப் பற்றிய அல்லது போராடியதாக நினைத்ததைப் பற்றிய ஒரு நாவலாகும். இந்நாவல் கோளாவில் கிராமத்தின் 1957 – 1962 ஆம் ஆண்டு வரையான  காலப்பகுதியைப் பின்னணியாகக் கொண்டது. உலகமெல்லாம் வியாபாரிகள்(1991) -       1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் மக்களிடையே காணப்பட்ட பிரச்சினைகளை இந்நாவல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் சில கோட்பாடுகள் பண்பாடு என்ற போர்வைக்குள் ஒருத்தரை ஒருத்தர் சுரண்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்கள் முதலானவற்றின் அனுபவப் பிரதிபலிப்பாக இந்நாவல் காணப்படுகின்றது. 1970 களில் இலண்டனுக்குச் சென்ற முற்போக்கான பல தமிழ் இளைஞர்களை இந்நாவல் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

தேம்ஸ் நதிக் கரையில்(1992) - இந்நாவல் 1972 – 1974 காலகட்டத்தில் தாமே உழைத்துக் கல்வி கற்கும் நோக்குடன் இலண்டன் மாநகருக்கு வந்து வாழ்ந்த இளைஞர்களின் மன ஓட்டங்கள், அவர்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் என்பவற்றை அடிப்படையாக வைத்து  எழுதப்பட்டுள்ளது. 1983 இற்குப் பின் அகதிகளாக வந்த தமிழ் இளைஞர்கள் 1970 களில் புலம்பெயர்ந்து சென்ற இளைஞர்களில் இருந்து வேறுபட்டவர்கள். இவர்களது அரசியல், காதல், கலை என்பன முற்றிலும் மாறுபட்டவை.  இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணக் கிராமங்களில்  இருந்து வந்த தமிழ் இளைஞர்கள் இலண்டனில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இந்நாவல் வெளிப்படுத்துகின்றது.

பனி பெய்யும் இரவுகள்(1993) - இது ஒரு முக்கோணக் காதல் கதையை கூறும் நாவலாக இருந்தாலும், சமூகப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தும் நாவலாக உள்ளது. இந்நாவல் ஒரு விசித்திரமான, வியப்பான காதல் கதையைக் கூறுகின்றது. காதலர்களிடையே ஏற்படும் சந்தேகங்கள், பிணக்குகள், பொறாமை உணர்வுகள், அவற்றால் ஏற்படக் கூடிய மனத் துன்பங்கள் யாவும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. பருவகால அடிப்படையில் தோன்றும் காதல், காதலுக்காகத் தன்னை அரப்பணிப்பது, பரஸ்பரம் உணர்ந்து கொண்டவர்களின் இன்டெலெக்சுவல் காதல் என காதலை மூன்றாகப் பிரித்துப் பார்க்கும் கோட்பாட்டை மூன்று கதை மாந்தர்களின் தனிப்பட்ட காதல் உணர்வுகள் மூலம் இந்நாவலில் சித்திரித்துள்ளார்.

வசந்தம் வந்து போய் விட்டது - இந்நாவல் 1997 இல்வெளிவந்தது. மாறிவரும் பண்பாட்டுச் சூழலில் புகலிடத் தமிழ்ப் பெண்கள் எவ்வாறு முகங் கொடுக்க முற்படுகிறார்கள் என்பதை இந்நாவல் அதிர்ச்சியுடன் வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் இனப் பிரச்சினைத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் முகமிழந்த வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கின்றது. தம் மண்ணை விட்டு, மக்களை விட்டு , கலாசாரத்தை விட்டு எங்கோ தொலைவில் நிறவெறித் தாக்குதல்கள், காழ்ப்புணர்ச்சி இவற்றுக்கிடையில் முற்றிலும் எதிர்மாறான ஒரு கலாசாரத்தில் இணைந்து கொள்ள வேண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் திசை திரும்பி விடுகிறது என்பதை நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் நன்கு சித்திரித்துள்ளார். பெண்கள் எந்த நாட்டை, எந்தக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆணாதிக்கக் கருத்தியலின் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் நாவலின் பெண் கதாபாத்திரங்கள் வாயிலாக ஆசிரியர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

அவனும் சில வருடங்களும்(2000) - இந்நாவல் இலண்டன் திரைப்படக் கல்லூரிப் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. அவ்வகையில் இது ஒரு புதுவகை தொழில்நுட்ப கலாசார அம்சங்களை வெளிப்படுத்துகின்றது. இலண்டன் திரைப்படக்கல்லூரியில் பயிலும்  பல நாட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் கதை மாந்தர்களாகக் காணப்படுகின்றனர். உலகெங்கிலுமுள்ள பெரும்பாலான சினிமாக்களின் மையக்கருவான காதல், திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் மத்தியிலும் முக்கியத்துவம்  பெறுவதாக  கதை புனையப்பட்டுள்ளது. இந்நாவலின் கதை காதல் கதை மட்டுமல்லாது இலங்கை அரசியல் பற்றிய விடயங்கள், எயிட்ஸ் நோய் பற்றி, கறுப்பர் அரசியல் நிலை பற்றியெல்லாம் பேசுகின்றது.

நாளைய மனிதர்கள் - இந்நாவல் 2003 ஆம் ஆண்டு புதுப்புனல் வெளியீடாக வெளிவந்தது. தமது கலாசாரம் மீதும், மொழியின் மீதும் பற்றுக்கொணட புலம்பெயர் தமிழர்களது இன்றைய வாழ்வின் நிலையைப் புலப்படுத்துவதாக இந்நாவல் அமைந்துள்ளது. இந்நாவல் ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான போராட்ட உணர்வை விரிவாக வெளிப்படுத்துகின்றது. பழைமைப் பிடிப்புக்களில் இருந்து  தமிழ்க் கலாசாரம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.  கற்பு, பெற்றோரின் சொல்லையே வேதமாக ஏற்றல் முதலிய தமிழ்ப் பண்பாட்டின் பிற்போக்கான கூறுகளை இனியும் கடைப்பிடிக்க முடியாது. இனம், மதம் என்பவற்றைக் கடந்தும் அன்பைப் போற்ற முடியும். ஆதிக்கங்களை எந்த வடிவிலும் ஏற்க முடியாது போன்ற விடயங்களை இந்நாவல் புலப்படுத்துவதாக அமைகின்றது.             

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி ஆகும். ஆகவே குறிப்பிட்ட காலத்தில் காணப்படுகின்ற சமூக, அரசியல், பொருளாதார யதார்த்த நடைமுறைகளை இலக்கியங்கள் சித்திரிப்பதாக அமைய வேண்டும். இராஜேஸ்வரியின் படைப்புக்கள் உண்மைச் சூழலைப் புலப்படுத்துவதோடு,  அவர் நேரடியாக அனுபவங்கள்   ஊடாகப் பெற்ற  விடயங்களையும், இலங்கையில் தமிழர்  வாழும் பிராந்தியத்தின் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கலை, கலாசார, சமுதாய, அரசியல்,பொருளாதார மாற்றங்களையும் பிரதிபலித்துக்காட்டுவனவாக உள்ளன.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R