- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -


பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 -
1. ' ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - - ஆபிதீன் -

- ஆபிதீன் -வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை ,  பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை புரட்டினேன். வருடா வருடம் எழுதும் டைரி அல்ல அது. கிழிந்துபோன வாழ்க்கை மொத்தத்திற்கும் ஒன்று. ஊரில் பால் பண்ணை வைத்து சொந்தக்காரர்களால் ஏமாந்தது, நாகப்பட்டினத்திற்கு கப்பலில் வந்து இறங்கிய காலத்தில் திமிர் பிடித்த கஸ்டம்ஸ்காரன் போட்ட டூட்டி, பினாங்கில் வாங்கிய தொப்பித் துணி சாயம் போயிருந்தது , பூட்டியா ஆயிஷாம்மா கனவில் சொன்ன சில செய்திகள் பின் உண்மையாகிப் போனது, குணங்குடியப்பாவின் எக்காலக்கண்ணி ஒரிரண்டு, கையானம் காய்ச்சுவது எப்படி?, நான் பிறந்தபோது அசல் சீனாக்காரன் சாயலில் இருந்தது, 'கடவுள் மனது வைத்தால் கழுதை கூட குஸ்தி போடும்' என்ற கனைப்புகள் என்று பலதும் அதில் இருக்கும். மோதிரம் பற்றி மட்டும் இல்லை. 'கமர் பஸ்தா ஹோனா' என்று தலைப்பிட்டு , எந்த ஆலிம்ஷாவோ பேசியதை பேசியதுபோலவே எழுதி அடிக்கோடிட்டும் வைத்திருந்த 786வது பாரா மட்டும் என்னைக் கவர்ந்தது. 'மாக்கான் வருவான்' என்று பிள்ளைகளுக்கு - நாலு வருடத்திற்கு ஒருமுறை ஊர் வந்து- பூச்சாண்டி காட்டிய வாப்பா பயந்ததின் அடையாளங்களில் ஒன்று. 

'நாம பயப்படுறதுலெ 99.99% நடக்குறதில்லை. எது நடந்துடுமோண்டு நினைக்கிறோமோ அது நடக்காது. பயம் வருதுல்லெ? ஒரு தாள்லெ எழுதி வச்சுக்குங்க. இப்படி ஒரு பயம் வருது...இப்படி ஆயிடுமோண்டு தோணுதுண்டு குறிச்சி வச்சிக்குங்க. அப்புறமா அதை எடுத்துப் பாருங்க. ஒண்ணும் நடந்திருக்காது!. இப்படி உள்ள பயம்தான் நம்ம லை·ப்லெ முக்காவாசி நேரத்துலெ செஞ்சிட்டு வரோம்ட்டு புரியும்..வேற வார்த்தையிலெ சொன்னா உங்க லை·ப்லெ இதே மாதிரி முட்டாள்தனமான காரியத்துக்குத்தான் டைம் செலவு பண்ணியிருக்கீங்கண்டு புரியும். 'புள்ளக்கி அம்மை வாத்துடுமோண்ட நினைப்பு..அந்த நினைப்புலெ சோறு உண்ண முடியாம போறது...பேச வேண்டிய செய்தியை பேசாம போறது..·போன் call-ஐ அட்டென்ண்ட் பண்ண முடியாம ஆயிடுறது...நல்லா பேசுறாவங்கள்ட்டெ கூட தூக்கியெறிஞ்சி பேசுறது..இந்த reactionலாம் வரும். எழுதிவைங்க. அப்பவே பயம் பாதி குறைஞ்சி போயிடும்!'

இதை மட்டும் எழுதிய வாப்பா தனது பயங்களை ஏன் எழுதி வைக்கவில்லை; எல்லா சபராளிகளுக்கும் அது பொதுவென்றா என்ற கேள்விகள் எழுந்தன. அடுத்த நிமிடம் தூக்கில் போடப் போகிறவனிடமோ அல்லது உயிரைத் துச்சமாக நினைத்து களத்தில் நிற்கிற போராளியிடமோ, ரிபோர்ட்டரிடமோ 'எழுதி வை; ஒன்றும் நடக்காது' என்று சொன்னால் அறிவுரை சொன்ன அந்த ஆலிம்ஷாவைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் வந்தது.

ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டதால்தான் 'ஷைத்தானுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்' என்று கட்டளையிடும் ஆண்டவன் பயந்துகொண்டு வெளியில் தலைகாட்டுவதில்லை என்று பட்டது. அப்படியும் சொல்ல முடியாது. பயத்தைச் சொன்னால் , 'பயப்படாதீங்க. எல்லாம் சரியாப் பொயிடும்' என்று மூக்குப்பொடி அடைத்த தாயத்து போடுபவர்களுக்கு அந்த ஆலிம்ஷா எவ்வளவோ தேவலைதான். தாயத்து பற்றி எழுதும்போது நண்பன் பாஸ்கரனின் ஞாபகம் வருகிறது. சூலமேந்திய சிவனுக்கும் துர்க்கைக்கும், வெட்டரிவாளோடு திரியும் வால்முனீஸ்வரனுக்கும் பயப்படாதவன் ('டேய் அமீரு... இதெல்லாம் எங்கள்ட்டேர்ந்து அவங்களை பாதுகாக்கடா..!') மேலவாவூர் போய்விட்டு இரவில் திரும்பும்போது இரத்தம் கொட்டும் கண்களை உடைய ஒரு வெண் உருவத்தை , காந்திமேடைப் பக்கத்தில்-பார்த்து பயந்து போனான். அது இடிப்புகளின் இன்னல் தெரிந்த தேசப் பிதாவாகக் கூட இருக்கலாம். வீட்டையே சுட்டெரிக்கும் அகோரக் காய்ச்சல். வாசலில் வேப்பிலை. 'ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி...' - தேவராய சுவாமிகள் அருளியதெல்லாம் காக்கவில்லை. எஜமானின் தர்ஹாவுக்கு போகலாமா?

'தேனே யுறுதி வையவர் பேரிலே - யவர்
தானே யுதவு வாரினு நேரிலே'

தானாகவே கையால் 'பூட்டு' பூட்டிக் கொண்டு தலை விரித்தாடும் எத்தனை பேய்கள் வந்து திரும்புகின்றன அங்கே! சாபுமார்களின் 'சாவி' காரணமா அல்லது அவர்களின் அத்தனை கடைகளையும் மீறி முற்றத்தில் புகுந்து கொட்டும் அருள் காற்றா?

'போவாதீங்க....சாம்பிராணியோட 'ஹாஹ¥வ்ஹ்.'ண்டு  புரியாத பாஷையிலெ பேசி கூடவே மொட்டையும் அடிச்சிடுவாங்க...' என்ற லூயிஸ் சார் கடற்கரை சர்ச்சுக்கு கூட்டிப் போனார். அன்பைக் கொட்டுவார் சார். அன்பு , நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது; அது திரளான பாவங்களை மூடும்.  பயப்படத்தான் வேண்டும். சர்ச்-இல் 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியமெ'ன்று சொன்னதும் பாவி பாஸ்கரனின் அதைரியம் கூடிப் போனது. . கடைசியாகத்தான் வண்ணாந்தெரு நாராயணசாமியார். அங்கேதான் தாயத்து கட்டப்பட்டது. ஆனால் குணமாகக் காணோம். ஆஜாத்பட்டறையில் வேலையில் பார்க்கும் அவன் தி.க. மாமா தாயத்தை உடைத்துப் பார்த்தால் பால்டின் தகரத்தில் (வெள்ளி!) ஒரே ஒரு கீறல்! பாஸ்கருக்கு கொஞ்ச நாளில் தானாகவே - மனநல மருத்துவர் மஸ்தான் மரைக்காயரிடம் காட்டியும் கூட - சரியாகிவிட்டது.  பிறகும் குழப்பம் குறையாத அவன், நல்ல சீடனாக அந்த தகட்டை எடுத்துக் கொண்டு போய் சாமியாரிடமே காட்டியிருக்கிறான்.

'அது கோடல்ல மகனே. நான்! நான் போட்ட கோடு!'  - என்ன ஒரு சூ·பிஸ்ட் டச்! ஊர் அப்படி!

பாஸ்கர் இங்கேதான் புத்திசாலியாக மாறினான். ஒரு பெரிய கோட்டை சாமியார் வீட்டு வாசலில் போட்டு அதற்கப்புறம் அதைத் தாண்டவே இல்லை!

இப்போது ஊரில் பெரிய அரசியல்வாதியிருக்கும் அவனுடைய துணிச்சல் எனக்குக் கிடையாது.

'Tora! Tora! Tora' என்று என் சின்ன வயதில் ஒரு சினிமா வந்தது. 'Tora' என்றால் புலி என்று அர்த்தமாம் . இதை 'துரத்தித் துரத்திக் கொலை' என்று மொழிபெயர்த்திருந்தார்கள் போஸ்டரில்! எப்படி பார்க்க முடியும் ? பயத்தை விரட்ட , இரத்தம் சீறிப்பாயும் புடைத்த செந்'தலை'  காட்டி ஒருவர் நிர்வாணமாகி விடும் சிறுகதை ( திரு.அஞ்சாநெஞ்சன் எழுதியது என்று நினைக்கிறேன்) ஒன்றை ஒரு இணைய தளத்தில் போனவருடம் படித்துவிட்டு - நடை நன்றாக இருந்தாலும் - வெலவெலத்துப் போனேன். பெண் பேயோ? பெரும் நோயோ? அற்புதமாக எழுதும் பெண் எழுத்தாளர் வனமோகினியின் எந்தப் பட்டியலிலும் இடம்பெறும் அவரது 'பின்னே ஒரு பிசாசு'வை அந்தத் தலைப்பாலேயே இதுவரை படிக்கவில்லை. சமயங்களில் சில கவிஞர்கள்...

பெர்முடா முக்கோணப் பேயின் ரகசியத்தை எனக்குச் சொன்ன கவிப்புலி வீரமுத்து துணிந்து துப்புவதாவது:

'ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.
வீரம் வரும்'

கெட்டகனவு வந்தால் இடதுபுறமாக துப்ப வேண்டும் என்று ஹதீஸை எப்படி புதுப்பிக்கிறார்! உலகம் , 70.8% தண்ணீராலானதா? யார் சொன்னது?

எச்சில் ஐயா, எச்சில்!

உப்பத் தெரிந்தும் துப்பத் தெரியாத கவியரசனோ , 'கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆ....ஆ...ஆ.....'  என்கிறான் . மரைக்கான் வீட்டுப் பெண்கள் , தமிழச்சி அல்லவோ? எனது பயங்கள் , முகம் பார்த்து தாய்ப்பால் கொடுத்த (அந்த காலம்!) தாயாரிடமிருந்துதான் ஆரம்பித்தன. 'மஹரி நேரத்துலெ போவாணாம்...ரூஹ்ரூஹானி வரும்டா முருவம்..!' என்று வீரத்தை முளையிலேயே கிள்ளுகிற அச்சுறத்துலையும் மீறி தெருவில் விளையாடும் 'ஹராங்குட்டிகளி'ன் ஊளைகளும் , மறக்காமல் அத்தனை விளக்குக் கம்பங்களின் நிழல்களையும் அகலக்கால் வைத்து தாண்டியபடி வரும் வாவூர் குடிகாரர்களின் அலறல்களும்  'ஆவுசம்..ஆவுசம் போச்சு' என்றுதான் குறிப்பிடப்படும். ஆவுசம் என்றால் ஜின்..அது உண்மையிலேயே இருக்கிறது என்று தனி அத்தியாயமே ஒதுக்கியிருக்கிறது இறைமறை. ஜின்கள், மறைவாக இருக்கும் மேற்படியான்கள். கண்ணுக்குத் தெரிந்தால் தாங்களும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு விடுவோமென்ற பயமோ? இதில் 'ஏன்?' என்று கேட்டவர்கள் கெட்ட ஜின்கள்!

'ஆவுசமாம் ஆவுசம்; எல்லாம் வேஷம்' என்றார் ஒரு சஹர் பாவா - தாழ்ந்த குரலில் , சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு!

உண்மை தெரியாமல் வீட்டுக்குள் உறங்கும் பெண்கள் தெருவிற்கு வந்து எட்டிப் பார்த்தால் அல்லவா தெரியும் , 'ஆவுசம்' எந்த சபராளி வீட்டு நாச்சியாரிடம் கொசறுகிறது அல்லது எந்தத் திண்ணையில் எந்த சின்னப் பையன்களின் பின்பக்கத்தோடு ஒட்டிக்கொண்டு மூச்சிரைக்க உருளுகிறதென்று... என்னை ஒண்ணுக்கு கூட சரியாகப் பேய விடாத தாயாரால் நான் வளர்ந்தேன்.  அதட்டி, 'பேயிடா..' என்றால்!

'பயப்படுறவங்களை பார்த்தா எனக்கு ரொம்ப பயம்' என்று அடிக்கடி இருட்டறையில் கிசுகிசுப்பார் எனக்கு புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொடுத்த (1/15 sec at f22 = 1/30 sec at f16... ) ஒருவர். ஹைதர் காலத்து கேமராவில் அவர் எடுத்த Double Exposureல் மினாராவில் பறக்கும் பாவட்டத்தின் அசைவுகளில் ஒரு சிறு மாறுதல் கூட தெரியாதது அப்போதைய ஆச்சரியம். சாதாரணISO 100 speed ·பிலிமில் Shutter Speed 1 sec வைத்து (aperture f2.8) அவர் எடுத்த தர்ஹாவின் வாண வேடிக்கை ·போட்டோவும் ஊரில் மிகவும் பிரபலமானதுதான் . அதற்காக அவர் கைகள் என் மானியில் அடிக்கடி உரச வேண்டுமா? இப்படி செய்வதின் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரிவதற்குள் வாழ்வை எப்போதும் பயமுறுத்தும் சாவுக்கு இரையானார்.

ஒழுங்காக வாழ்ந்தால் சாவு ஏன் பயமுறுத்துகிறது ? 'ஆண்டவனே, என்னுடைய அடிப்பாகத்திலிருந்தும் நான் தாக்கப்படுவதிலிருந்தும் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன்' என்ற 'துஆ' , அர்த்தத்தோடுதான் கொடுக்கப் பட்டிருக்கிறது!.

பேய்க்கதை மன்னனின் கதைகளில் வருவது போல 'கும்ம்ம்ம்ம்' இருட்டோடு இருக்கும் என் வீட்டின் பெரும் நடுக்கட்டு... கரும் பிசாசுகளாய் மாறிவிடும் நெல் பத்தாயங்கள்... மறைந்து மறைந்து தெரிந்து பயமுறுத்துவதற்காகவே உயிர்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு முட்டை விளக்கு.... 'பித்தம் படபடங்குது பீக்குழா தெறிக்கப் பாக்குது' என்பார்களே..அப்படி வரும். முகச்சதை 'ஜிவ்'வென்று இழுத்துக் கொள்ளும் . கல்யாணமாவதற்கு முன்பு வரை கூட ஏதாவது வேகமாகப் பாடிக் கொண்டோதான் ஓடிக் கடந்திருக்கிறேன். எல்லா ஒலிம்பிக் ரிகார்டுகளும் அவுட்! . சமயத்தில் அந்தப் பாட்டே ஆந்தை முழியுடன் பயமுறுத்தும். 'பயமெனும் பேய்தனை யடித்தோம்...ஜயபேரிகை கொட்டடா-கொட்டடா...!' தமிழ் சினிமாக்களில் திகில் காட்சிகள் வந்தால் (ராஜேந்தர், ராமநாராயணன் படங்கள் தவிர தமிழ் சினிமாவே ஒரு திகில்! ) கண்களைப் பொத்திக் கொண்டு விரலிடுக்குகளின் வழியாகத்தான் வீரத்தோடு பார்த்து முடிப்பது. பாடிவரும் பேய்களை இன்றுவரை நெஞ்சம் மறப்பதில்லை! 'யா அலி.. என்னைக் காப்பாற்றுங்கள்..!'. இந்த லட்சணத்தில் நான் அப்போது பெரியார் பக்தன் ! ஐயாவுக்கும் பயம் கிடையாதா என்ன? இப்போது வந்து அவர் சீடர்களைப் பார்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

யார்தான் , எதுதான் பயப்படவில்லை? கார்கில் வீரராயிருந்தால் கருந்தேளுக்கு பயப்பட மாட்டாரா என்ன?  கணினிக்கு வைரஸ் பயம். காலாகாலத்துக்கும் வறுமை பயம். தவளைக்கு பாம்பு பயம். பாம்புக்கு கீரி பயம். ஒரு நிமிடம் நின்று உற்றுப் பார்த்தால் சின்னஞ்சிறு கல் கூட தன் ஆதித்தோற்றத்தையும் மாற்றத்தையும் கதைகதையாய் சொல்லி பயமுறுத்துகிறது.

பயத்தின் மூலத்தைப் பார்க்க , Hypnotic Regression செய்யத் தெரிந்தவரிடம் நம்மை ஒப்படைத்து , 'அஞ்சல குஞ்சம் ஆறுமுக தாடி ஏழு பளிங்கு எட்டண கொட்டை துளாங்கு ராஜா தூசிக்கு ராஜா' விளையாடிய நிலைக்கும் கீழே சென்று , இதையும் தாண்டி தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும்போது நமக்கு ஏற்பட்ட உணர்ச்சிக்கும் கீழே போய் பார்த்து உண்மையை கண்டு பிடிக்கலாமாம். அவர் அங்கே தன்னையே பார்ப்பதற்கும் வாய்ப்பு உண்டுதான். ஆனால் அப்படி கண்டு பிடிப்பவருக்கு நேற்று போட்ட வண்ணான் பில்லோ பகல் ஆக்கிய வவ்வால் மீன் பொரியலோ நினைவில் இருக்கும் என்பதற்கு சாட்சி இல்லை.

மண்ணறைப் புழுக்கள் நெளியாத மனமோ இந்த பாழாய்ப்போன பிரபஞ்சம் எழுப்பும் கேள்விகளில் குழம்பாத இனமோ உண்டா? இறைவனை நெருங்கினால் எல்லா மர்மமும் புரியும் என்று ஹஜ்ரத் உவைஸ் கர்னீ கூறுகிறார்கள். அது எப்படி என்று கிலோமீட்டர் கணக்கு பார்த்து காலம் செலவழிப்பதை விட பெரியவர்கள் செய்வதற்கும் சொல்வதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நம்பிப் போவது நல்லது.

ஒருமுறை, 'உள்ளூர் மையத்தாங் கொல்லைக்கும் வெளியூர் ஆற்றுக்கும் பயப்படனும்' என்று ஒரு பெரியவர் சொல்லும்போது, எனது பயங்களைப் பழிக்கும் சுல்தான் என்னைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்: 'பறக்குற பிளேன்லெ ஏறி மனுஷன் நிக்கிற காலத்துலெ பொன்னப்பயலுங்களுக்கு பேப்பயம்! நான்லாம் நடு ராத்திரிலெ கூட சுடுகாடு போயி வந்திக்கிறேன், தெரியுமா? ஆம்புளைண்டா பயப்படக்கூடாதுடா!'

எப்போதுமே எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டு தூங்கும் என்னைப் பார்த்து அந்த 'ஹிம்மத்வாலா ' வேறொன்றும் சொன்னான். ஜெயிலில்தான் அப்படி தூங்குவார்களாம். நம் நாட்டு ஜெயில் அல்ல. அங்கு எங்கே விளக்குகள் இருக்கின்றன? சௌதி ஜெயில். இவனுக்கு எப்படித் தெரியும் ? 35 லட்சம் ரியால் கம்பெனி காசை திருடியதாக தவறாக சந்தேகப்பட்டு போலீஸ் ஜெயிலில் வைத்து விட்டதில் வந்த அனுபவம். சௌதி அரபிகள் முட்டாள்கள். முழு மூடன்கள். சுல்தான் திருடியது முப்பத்து நாலே முக்கால் லட்சம் மட்டும்தான். எப்படியோ அவனுடைய அண்ணன்காரன் பணத்தை தோது பண்ணிக் கொடுத்து ( இதற்கு வேறு அரபி!) ஊர் போய் , அங்கே ஒரு ஆளை போட்டுத் தள்ளி விட்டு துபாய். கழிந்து கொண்டு பேய்கள் ஓடாமல் என்ன செய்யும் ? அஞ்சுவ தஞ்சாமை பேதமை என்கிறார் செந்நாப் போதார் எனும் நபி.

சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டிருந்து விட்டு பின் அதன் size பெரிதானதும் கோபித்து தினசரிப் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்து விட்ட எழுத்தாளர் வீரத்தெருமகன், 'Taking a new step, uttering a new word, is what people fear most....ஸம்சயாத்மா விநச்யதி' என்றார். கீதாவ்ஸ்கி!  'பயம் என்பது வியாதி' என்று சொல்லிக் கொண்டே பைத்தியக்காரனாகவும், பிச்சைக்காரனாகவும், துறவியாகவும் மாறி மாறி நடந்து போகும் (இந்த நொடியில் தான்ஜானியாவின் வடபுறத்திலுள்ள Kilimanjaroவிலோ பெருவின் Machu Picchuவிலோ இருக்கிறார்.) இருக்கும் இவரிடம் தன் படைப்புகள் எதையும்  கொடுக்க நண்பர்கள் பயப்படுகிறார்கள். ஆனாலும் அவர் நடந்து கொண்டே....

வீ.தெ, 'இருட்டை விரட்ட டார்ச்லைட் தேவை' என்று துணிவானந்தா போல எளிமையாகச் சொல்லி கூடவே ரீசார்ஜபிள் பேட்டரிகளும் அனுப்பி இருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். ஞானத்தின் திறவுகோலான அந்த டார்ச்லைட்டும் சபராளிகளுக்கு உதவும் என்ற உத்தரவாதம் இல்லை. நானும் கல்யாணபின் பேயை விட மனைவிக்கே அதிகம் பயப்பட்டேன். பாட்டனாவின் இரத்தம்! உம்மா வீட்டிலிருந்து என் புகுந்த வீடு (எங்கள் ஊர் வழக்கம்) இருக்கும் ஜீயான் தெரு போவதற்குள் 'அஸ்மா வூடு வரைக்கிம் வரவா தம்பி?' என்று அப்போது ஊர் வந்திருந்த வாப்பா கேட்பார்கள்.

வாப்பாவின் உண்மையான கரிசனத்திற்கு , மரங்கள் விரித்த கூந்தலுடன் ஆடும் , தெருவின் திருப்பத்திலுள்ள இருட்டுப் பள்ளிக் கூட மைதானம் காரணமாக இருக்காது . அப்போதெல்லாம் மோதிரம் போட்டிராத வாப்பாவின் தைரியம் தெரிந்ததுதான். '----காரனாலெ கலவரம் அடிக்கடி நடக்குது இப்பல்லாம். கல் வேகமா எரியிறானுங்க. ஜன்னல் கண்ணாடிலாம் நொறுங்கி முத்தத்துக்கு வந்து வுழுது' என்று படித்த என் தங்கச்சி மூலமாக உம்மா போட்ட கடிதத்திற்கு, அழகான நீண்ட திண்ணைகள் உள்ள வாசல் பக்கத்தை இடித்துவிட்டு கண்ணாடி துண்டுகள் பதித்த (நொறுங்கி விழுந்தவைகளே இப்போது உதவின. Recycling!) பெரும் சுவரை உடனே எழுப்பச் சொன்னவர்கள். பயணத்தில் இருந்தால் எதுவும் சொல்லலாம்!

இருட்டு எனக்கு எப்போதும் பயத்தை தரும். அதை விரட்ட வரும் அஸ்மாவின் - என் மனைவி - துணிச்சல் அதை விட... நடு இரவில் வயிற்றைப் புரட்டும்போது கொல்லைக்குப் போனால் எனக்கு பாதுகாப்பாக வரும் அவள் ( என் உம்மாவின் வேண்டுகோள்) நான் கழுவிவிட்டு வெளியே வரும்வரைசமையல் கட்டு பின்புற வாசலில் தனியாக உட்கார்ந்த்திருப்பாள். கொல்லையைப் பார்த்தாற்போல் இருக்கும் சமையற்கட்டு ஜன்னல் , மூங்கில் சட்டங்களிலான பெருக்கல் குறிகள் கொண்டது. உள்ளிருந்து ஜன்னல் வழியாகக் கசிந்து பக்கவாட்டிலும் மெல்லப் பரவும் வெளிச்சமும் இருளும் அவளது வெள்ளை முகத்தில் போடும் கோடுகளின் நெளிச்சல் - இதை அதிகரிக்க அவள் ரொம்ப சாலிஹ்-ஆன பெண்ணாய் தலையை மறைத்திருப்பது - மற்றும் 'நடு ஜாமத்தில் வந்தேனே....' பாட்டு... மறுமுறையும் நான் கழுவ ஓட வேண்டியிருக்கும். தூங்கும்போதோ அவளுக்கு முழு இருட்டு வேண்டும். நான் எதிர்த்ததால் ஒரே ஒரு சிவப்பு விடி லைட்.....வேண்டுமென்றே செய்கிறாள் இந்தக் கச்சடா..!

அஸ்மாவுக்கு பயமே கிடையாதா ? 'இன்னும் கொஞ்சம் இன்னுங்கம்மா' என்று முதுகில் கால்போட்டு இறுக்கிப் பிணைத்த வண்ணம் என்னைக் கொஞ்சுவதற்குப் பின்னே அது இருக்கிறது. ஊர்லே இருக்க மாட்டாஹலே மச்சான்..!. ஆனால் மச்சான் ஊர்லேயே இருந்துடுவாஹாண்டும் பயம்...!

முதல் வளைகுடா யுத்தத்தின்போது 'இங்கே குண்டு போட்டுக்கிட்டிக்கிறான் புள்ளெ..' என்று ஒரு சௌதி மாப்பிள்ளை சொன்னதற்கு 'அப்படித்தான்மா சும்மா பொய் சொல்வாஹா. நீங்க அங்கேயே இரிங்க' என்று 'தொதல்' சொன்னதாம். அப்படி வீண் தைரியம் சொல்பவள் அல்ல அஸ்மா. ' ஊருக்கு வந்துருங்க மச்சான், அல்லா இக்கிறான் நமக்கு' என்றாள் அப்போது துபாய்க்கு பிழைக்க வந்த என்னிடம். ஆனால் கூடவே மறக்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதியதை மாற்றிச் சொன்னால் 'அஸ்மா' என்கிற வார்த்தைக்குள் உள்ள 'ஸ' என்ற எழுத்தின் மேலுள்ள புள்ளியில் உட்கார வைக்க முடிகிற நானூறு கோடி அனுக்களில் ஒன்றை மட்டும் எடுத்துப் பிளந்தால் வரும் குண்டு.

'இங்கெ நீங்க வந்துட்டா நம்ம புள்ளங்கெ கதி?' என்றாள்.

சதி!

வேலைக்கு என்று அரபுநாடு வந்த காலத்திலிருந்து எப்போ அரபி திருப்பி அனுப்பி விடுவானோ என்ற பயம்தான் தினமும் வதைக்கிறது. வேலையே செய்யாமல் அரபியையே பயமுறுத்திக் கொண்டிருப்பவர்களை விட்டு விடுவோம். 'ஏ நாயே, பார். தூசி!' என்று அரபி , சுட்டுவிரலால் தொட்டு நீட்டினான் என்றால் தன் சுட்டுவிரலை தூசியில் தொட்டு நடுவிரலை அவனுக்கு காட்டும் எமகாதகன்கள். ஆனால் என்னைப்போன்ற சோதாக்களுக்கு அலுவலகத்தில் காலை வைக்கும்போதுதான் 'அப்பாடா, இன்னும் வேலையில் இருக்கிறோம்' என்ற நம்பிக்கை வரும். ஆனால் நாளை? அது அனைவரையும் பயமுறுத்துவதற்கென்றே இருக்கிறது. அச்சங்களின் தலைக்காவிரி அது.  'இன்றி'ல் வாழ்ந்து விட முடியும். நாளை எனும் குன்றில் வாழ துணி(வு) வேண்டும். அலுவலகத்தில் உள்ள முக்கியமான ஒருவர் விடுமுறைக்குப் போவதாகச் சொன்னால் அந்தத் துணியும் பறந்து நாணக் கேடாகிவிடும்.

மேனேஜர் அ·ப்தாப் ஹஸன் , அமெரிக்காவுக்கு (பிள்ளைகள் வேலை பார்ப்பதால் அந்நாடு இப்போதெல்லாம் அவர் மதத்தைக் கருவறுக்க நினைப்பதில்லை! ) விடுமுறையில் போவதாகச் சொன்னதும் அடிவயிறு கலங்கிற்று.

விடுமுறை காலங்களில் அவர் துபாயை விட்டு எங்கும் போனவரல்ல. விடுமுறை சம்பளம், டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை எடுத்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுவார். ஒரு ஒரே முறை தன் தாயார் மௌத்திற்கு ஒன்றரை நாள் கராச்சி போய் வந்தார். அவர் தாயும்  என் பயத்தைப் புரிந்து கொண்டு வியாழன் காலை வ·பாத்தாகியிருந்தது. வெள்ளி விடுமுறை. தப்பித்தேன்.

இந்த முறை இரண்டு மாதம் கச்சிதமாக என்னை சாகடிக்கப் பார்க்கிறார்.

உதவி மேனேஜர், Personnel Dept. வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தா, பியூன் மூவரையும் கம்பெனி 'ஆப்பம்' என்று வேதனையுடன் கிண்டலடிக்கப்படும் onewayல் அனுப்பியிருந்ததால் கம்ப்யூட்டர்களில் கணக்கும் அவைகளின் பிணக்கும் பார்க்கும் கடன்காரன் நான்தான் அவர் வேலைகளையும் பார்க்க வேண்டும்.

அவர் வேலைதான் என்ன? l..C சம்பந்தமான கடிதங்கள் எழுதுவது, அரசாங்கப் பண்ணைகளுக்கான கொட்டேஷன் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு கொடுக்கும் லஞ்சம் (Sales Promotion Code : 5201001) சம்பந்தமாக பிரிட்டிஷ்காரர்களுடன் பேசுவது, Bank Rreconciliation. இதர நேரங்களில் தனக்கு கம்பெனி கொடுத்திருக்கும் சீறிப்பாயும் 'ஜாகுவார்'க்கு செலவுகள் வைப்பது. கார் , அமெரிக்காவிலுள்ள பிள்ளைகளுடன் சதா மொபைலில் பேசும்.

விதவிதமாக சூட்களும் போடும்.

கார் ஒட்டுவது தவிர்த்து மற்ற வேலைகள் அனைத்தையும் நானும் செய்துவிட முடியும். ஆனால் பலுச்சிகளான அர்பாப்களிடம் அவர்களுக்கு விளங்குமாறு கரிக்கோடு போட்டுச் சொல்லும் கணக்கும், அவர்களின் கொடூரமான குதறல்களுக்கு தகுந்தாற்போல் தைரியமாக அவர் சமாளிக்கும் விதமும் எனக்கு அறவே வராது. தவிர தேசிய மொழியான மலையாளத்துடன் போட்டிபோடும் ஹிந்தியோ எனக்கு தடுமாறும்.

மூத்த முதலாளி வந்தால், 'என்றும் சாகாத பின்லேடன் புகழ் வாழ்க'. நடு முதலாளி வந்தால், 'ஒட்டகத்திற்கு எப்படி நகம் வெட்டுவது?'. இளைய முதலாளி வந்தால், 'லெபனான்காரிட முலைதான் டாப்'.

அற்புதம். இந்தா Golden Sandல் Central A/cயோடு Fully furnished 3 Bedroom Flat!

இத்தனை வசதிகளுக்குக் காரணமாக அவர் சொல்வது ராவல்பிண்டியில் பார்த்த ஒரு ·பகீரை! அங்கே அவர் பேங்க் கிளர்க்காக வேலை பார்த்தபோது நடந்த சம்பவம்.

'உதறவைக்கும் குளிர்...கம்பளி போர்த்தி, கால் பக்கம் ஹீட்டர் வைத்துக் கொண்டு உறவுக்காரரின் இல்லத்தில் வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன் - கடுமையாக மழை பெய்கிறது....நனைந்து கொண்டே வாசலில் ஒரு ·பகீர் போனார். அவரை அந்த ஊரில் நான் பார்த்ததே இல்லை. நேரே என்னிடம் வந்தார். உடல் தெரியும்படி வெறும் ஒரு மெல்லிய உடை...சும்மா வந்து நின்றார். மற்றவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் 'ச்சாய்' வேண்டுமா என்று கேட்டு கொடுத்தேன். குடித்தார். 'அடுத்த மாதம் நீ இங்கிருக்க மாட்டாய். உனக்கு எல்லா வசதிகளும் வரும்' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இவர்? 20 கி.மீ தூரத்தில் கோல்ரா ஷரீ·ப் என்று இருக்கிறது. அங்கேதான் இப்படிப்பட்ட ஆட்கள் - நேக் ஆத்மிலோக் - சுற்றுவார்கள்...நான் வெளியில் வந்து பார்த்தேன். யாரும் இல்லை..மறைந்து விட்டார்! அடுத்த மாதம் துபாய்க்கு வந்து விட்டேன். எது சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் முதலாளி... என் வாழ்க்கையே மாறி விட்டது. தனக்கென்று எதுவும் கேட்காதவர்கள் பிறருக்காக கேட்கும் 'துஆ' பலிக்கத்தான் செய்கிறது..!' - ஹஸனுக்கு இன்னும் வியப்பு மாறவில்லை.

ஹஸன் எனக்கென்று கேட்டாலும் பலிக்கும். ஆனால் அவர் இப்போது ·பகீர் அல்ல. எனவே நான் ஒரு நல்ல ·பகீராக , அல்லது நல்ல ·பகீருக்காக காத்திருக்க , அலுவலகம் இருக்கும் குடவுனிலேயே - புல்கட்டுகளுக்கு பக்கத்தில் - தனியாக ஒரு பழைய போர்டபிள் கேபினில் தங்க சிபாரிசு செய்திருக்கிறார். ·பகீர் வந்தாலும் வருவார். மழை வராது. புழுதிக் காற்றுதான் எப்போதும். எல்லா வசதியானவர்களுக்கும் பின்னால் ·பகீர்கள் இருக்கிறார்கள்.

·பகீரைப் பார்க்கப் போய் அந்த ·பகீரிடமிருந்தே வாங்கித் தின்ன ஆரம்பித்தவர்களின் கதையும் எனக்குத் தெரியும். .·பகீரை நினைக்கும்போதெல்லாம் மேனேஜர் நினைவுதான்.

மேனேஜர் இந்தமுறையும் இங்கேயே இருந்திருப்பார்தான். மகளுக்கு இவர் போனால்தான் பிரசவமாகும் என்பதில்லை. ஆனால் கம்பெனி இருக்கிற சூழ்நிலையில் இப்போதே Gratuity காசை கொஞ்சம் கொஞ்சமாக பலமாதிரி எடுத்தால்தான் உண்டு. அர்பாப்களை பயமுறுத்தும் Staff Loan போட்டுச் சென்றார்.

எப்படி சமாளிக்கப் போகிறோம் ? பெரும் உருவம் என்னை இறுக்கிக் கட்டிப் பிடித்தது.

'நாம யார்ண்டு தெரியிறதுக்கு சரியான சான்ஸ்ங்கனி இது!' என்று ஆன்மீகம் பேசினார் ஒரு அன்பர். நாமூஸின் வருகையால் திடீரென ஒளிவெள்ளமும் அதைத் தொடர்ந்து dtsல்  இடிமுழக்கம் போன்ற எதிரொலியும் எழுந்து அலையெனைப் பரவிய குகை... 'அதுக்கு கண்ணாடிலெ பாத்தா போதாதா ? ஏன், என்னைப் பாருமேன் நீம்பரே இப்ப' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன். 'தட் தட்'டென்று காலடி மெள்ள வைத்தவண்ணமோ, 'சர சர' என்று சருகுகளின் மீது ஊர்ந்த வண்ணமோ இனம் தெரியாத விலங்குகள் என்னைத் தொடர அனுமதிக்கக் கூடாது.

அது பயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இருக்கிற குழப்பங்கள் போதும்.

ஹஸனுக்கு அசாத்திய தைரியம். Mazen Danaவாகவோ மனித வெடிகுண்டாகவோ மாறியிருக்கக் கூடியவர். 'உலகம் முழுதும் நம்மவங்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பயம்தான் அடிப்படை' என்பார். யாருடைய பயம்? 'நம்மவங்கள்'தான் உலகமா ? 'பரஸ்பர நம்பிக்கையின்மையால் அல்லவா?' என்று கேட்டேன். 'ஜாடு !' என்று ஒற்றுமையை விளக்குமாறால் அடித்துவிட்டு ஒரு 'கானா கராப் கரேகா' பார்வை பார்த்தார் பாருங்கள்....

இப்போது நினைத்தாலும் 'வெதக் வெதக்' என்றிருக்கிறது.

அவர் பார்வை பற்றிய என் பார்வை சரிதானா?

அறியாமைதான் பயத்தின் விஷ விதையென்றால் அதைத் தோண்டி எடுத்துவிட்டு தெளிவெனும் மலர் தூவ வேண்டிய வேண்டிய கனவுகளோ தீங்கனவுகளாக வந்து தொலைக்கின்றன. துரத்தி வரும் பேய்கள் நெஞ்சின் மேலேறி நின்று குரல்வளையை மிதிக்கும். வற்றி வரண்டு கிடக்கும் அணையின் தெரியும் ஒரே ஒரு சொம்பு தண்ணீரில் நூறு நரகல்கள். கொதிக்கும் கல்லில் வைக்கப்பட்டும் விறைத்து நிற்கும் குறியை யானையின் பாதமென்று மிதித்துக் கூழாக்கும். Greomeன் 'Solomons_Wall' பாதிப்பில் நான் வரைந்திருந்த பெருஞ்சுவர், கேன்வாஸிலிருந்து குதித்து வெளியேறி பிள்ளைகள் மேல் சரியும். ...ஐயோ, ஒலுவுடன் ஓதிப் படுத்தும் ஓடவில்லை என் பயம். அபயமளி ஆயத்துல் குர்ஸியே!

'யா முதகப்பிரு' என்று 21 தடவை தினமும் ஓதிவந்தால் கெட்டகனவு வராது' என்று அஸ்மாவுல் ஹ¥ஸ்னா (இறைவனின் திருநாமங்கள்) வில் போட்டிருக்கிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தால் ஈராக் ஜனங்கள் பயன்படுத்தி இருப்பார்களே....! பிஸ்மில்லா ஹில்லதி லா யளுற்று மஅ அஸ்மிஹ் ஷைஉன் வஹ¤வஸ் சமீஉல் அளீம்' என்று ஓத வேண்டுமோ?

'தூங்கும்போது பயமுறுத்தும் கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் சாப்?' - மேனேஜரிடம் ஒருநாள் கேட்டேன். மார்க்கமும் அதிகம் தெரியும் அவருக்கு.

'உடனே முழித்து விட வேண்டும்!' - டுமீல்!

கரைத்துத்தான் குடித்திருக்கிறார். Electroencephalographஐயே இவர்தான் கண்டு பிடித்தாரோ?
பாதாளத்திலிருந்து புறப்பட்டு வரும் பேய்களை சாந்தப்படுத்தவும், சந்தோஷப்படுத்தி விரட்டவும் முன்னேறிய தைவான்காரர்கள் ஆடும் நிர்வாண நடனம்கூட  இவர் சொல்லிக் கொடுத்ததாகத்தான் இருக்கும்.

இவரிடம் கேட்டிருக்கக் கூடாது. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தானாகவே எல்லாம் தெரியும். 'மந்தூக்' என்று அழைக்கப்படும் கம்பெனியின் P.R.O ஊர் போயிருந்த சமயம் கம்பெனி டிரைவர்-ஐத்தான் P.R.O வேலையை பார்க்கச் சொன்னார் முதலாளி. அவன் பயந்தான். முதலாளி சொன்னார்: ' சாதி கே பெஹ்லே தும்கோ மாலும் தா? bபாத் 'காம்' அச்சீதரா(ஹ்)ஸே மாலும் ஹோகயானா?!'

அதாவது முதலிரவில் மனைவியோடு சேர்வதற்கு ஒத்திகையா பார்த்து கொள்கிறோம் என்று....ஒன்றும் தெரியாமல் பூந்து (தெரியாமல் பூந்தால்தானே சுவாரஸ்யமே!) விளையாடுவதற்கும் நிஜமான வேலையின் பிரச்சனைகளுக்கும் வித்யாஸம் இல்லையா?

நான் மானேஜரிடம் கண்டிப்பாகச் சொன்னேன்: 'உங்கள் இடத்தில் சசி-ஐ வைத்து விட்டுப் போங்கள்.' சசி, அர்பாபின் வேறொரு அலுவலகத்தில் இவர் பார்க்கும் அதே வேலையை குறைந்த சம்பளத்தில் பார்க்கும் மலையாளி.  பத்மராஜனை நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது பாக்யராஜைப் பார்ப்பவன். அதிசயமாக இவன் கொடுத்த மலையாள கேஸ்ஸட்டில் ஒரு ஆவி, இன்னொரு ஆவி தன்னைத் தொடும்போது பயந்து போய் திரும்பும்!

இந்த மலையாளிகளின் நகைச்சுவையே தனிதான்...!

சசிக்கு என் மீது பிரியம் பிறந்தது Customer Statement Reportக்கும் Receivable Listingக்கும் தொகைகளில் வேறுபாடு வரும்போது அதை கண்டுபிடித்து master dbf ·பைலில் தானாகத் திருத்தம் செய்யும் சின்ன ·ப்ரோக்ராமை எழுதிக் கொடுத்ததால். இவனுக்கும் தெரியாத விஷயமே இல்லை. பிளேன் கூட ஓட்டத் தெரியும் ! ரொம்ப சுலபம்தான் அது. வால் பக்கம் நின்று கொண்டு வேகமாக தள்ளிக் கொண்டே போனால் 'டக்'கென்று பறந்து விடும். அந்த சமயம் நாம் உள்ளே குதித்து உட்கார்ந்து விட வேண்டும். அவ்வளவுதான்! 'சம்ச்சா' மட்டும் தனக்கு அதிகம் வராது என்று சொல்லிக் கொள்வான்.

பரவாயில்லை. 'மஸ்கா' தெரிந்தவன் ஓரிரு நாளில் அதை கற்றுக் கொள்ள முடியும். சாதி கே பெஹ்லே...

'அக்கௌண்ட்ஸ¤க்குத்தான் நீ இருக்கிறாயே.. L.Cக்களை அவன் ஆ·பீஸில் இருந்தே சசி பார்த்துக் கொள்வான். அந்த 'ஜமானா' எல்லாம் இப்ப எங்கேப்பா? கொட்டேஷன் மட்டும் அப்பப்ப அடிச்சி கொடுத்துடு. Cheque/Cash PV போடுறதுக்கு காசிம்-ஐ இங்கே வச்சிடுறேன்'

யா 'ரப்'பே... அவரா? ஊர் 'பிஸாது' தவிர அவருக்கு வேறு என்ன தெரியும்?. எந்தத் துப்பட்டி எவன் தொட்டு அழுக்கானது என்று 'கபர்' கொடுத்துக் கொண்டிருப்பார் எப்போதும்...இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கிறது சிக்கத்-அல்-ஹைல் ரோடில். என் தயக்கத்தைச் சொன்னேன் மேனேஜரிடம்.

'முக்கியமாக இந்த 'நஹயத் bபேவகூ·கள்'-ஐ சமாளிக்கத் தெரியும்'

அர்பாப்களைத்தான் அதி முட்டாள்களென்று சொன்னார். அறிவாளிகளை வேலை வாங்குபவர்கள் முட்டாள்களா? சரியென்று வைத்துக் கொண்டாலும் அப்படி அவர்கள் இருப்பதால் அல்லவா இன்னும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன! 'வழிச்சி நக்கிட்டு போனப்புறம் வந்திக்கிறீங்களே' என்று சிலர் சொல்வதெல்லாம் சும்மா.

காசிம் காக்கா வந்தார். தேஜஸ் பொங்கும் ஹஸன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த  எனக்கு தேரைக்கு முடி முளைத்தாற்போல இருக்கும் புது முகம் எப்படியோ இருந்தது. எங்கள் குடவுன் ஒன்றின் சூப்பர்வைசர்-ஆக இருக்கும் அவரது முகம் பரிச்சயமானதுதான். ஆனால் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் வரவில்லை.

அவருக்கும் இது தற்காலிக இடம் என்று தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் மேனேஜர் வேலை தெரியாத இந்த மேனேஜருக்கு கம்பீரம் கூடவே வந்து முகத்தில் உட்கார்ந்து கொண்டது. நாற்காலியின் சக்தியோ ? எங்கள் ஊரிலேயே அதிகம் படித்து உயர்நீதிமன்ற நீதிபதியான ஒருவரின் ஞாபகம்....  நீதிபதி, அந்த சமயம் தமிழக கவர்னர் இறந்ததால், தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்டார். அடுத்த நாள் கவர்னராகவே ஊருக்கு பந்தாவாக வந்து அலம்பல் பண்ணிவிட்டுப் போனார். ஒருவாரம் அவரை எல்லோரும் கவர்னர் என்றுதான் அழைத்தார்கள். அதுபோல இப்போது 'முதீர்' என்றால் இந்த முதிர்ந்த காக்காதான்.

'ஆடிஓடி அலிபாதுஷாவை கொலுவுலெ வச்ச மாதிரிலெ நம்மளை வச்சுப்புட்டாஹா!' என்றார் என்னிடம் பெருமையாக.

'அலி பாதுஷாவா?'

'அந்தக்காலத்துலெ அப்பாஸ் நடகம்டு, நம்ம ஊர்லெ ஒன்ணு போட்டாஹா. அதுலெ வர்ரவறு..'

அந்த அலிபாதுஷாவே இவர் முன்னால் எலிபாதுஷா ஆகிவிடுவார் போலிருந்தது. காக்கா அத்தனை அழகாக அர்பாப்களின் குருட்டுக் கேள்விகளை சமாளித்தார்.

'நாம ஆபீஸ் வேலை செய்யாக்காட்டி கூட பரவால்லே. இவனுங்களுட அஹடம்புஹடம் வேலைலாம் கரெக்டா செஞ்சிடனும்' என்றார். அர்பாப்களின் ஈரான் சொந்தக்காரர்களுக்கு மாறிமாறி transit visa எடுப்பது, அவர்களின் அமானத் கணக்கில் (உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு வினோத கணக்கு!) இருக்கிற நண்பர்கள் அனைவருக்கும் Dewa, Etisalat பில்கள் மறக்காமல் கட்டுவது, குடவுனில் வளர்க்கப்படும் ஆடு கோழிகளுக்கு தீவனம் வாங்கிப் போடுவது...

Sign Authorityயாக உள்ள பெரிய முதலாளி Sponserஆக இருக்கும் இன்னொரு கம்பெனியின் பார்ட்னருக்கு , கப்பியும் கயிறுமாய் இணைந்த கூட்டாளியாக இருந்தார் காக்கா. ரொம்ப நல்லதாகப் போயிற்று எனக்கு. அர்பாப்களின் தொந்தரவாவது பரவாயில்லை, இந்த அஜியா டிரேடிங் தொந்தரவு.. அல்ஐன்-ல் உள்ள மராய் பண்ணையிடமிருந்து செக் வந்துவிட்டதா என்று நாள் முழுவதும் உயிரை எடுத்து விடுவார்கள். அங்கேயுள்ள சூடானி அக்கௌண்டன்டிடம் கேட்டபடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் - இத்தனை டன் அல்·பால்·பா (ஒரு வகை புல்) போனது வந்து என்று. போகாமலேயே போடப்படும் இன்வாய்ஸ¤க்கும் அதற்கான செக்குக்கும் தனி கணக்கு..! கணக்குக்கு நான். கமென்ட்ரிக்கு காக்கா. காக்கா , அஜியா டிரேடிங் தவிர (மாட்டிவுட்டுடவான் மரைக்கான்!) மற்ற கம்பெனிகளின் எந்த விசாரணக்கும் பதில் கொடுப்பதில்லை. 'டர்ர்ர்' என்று கிழிக்கும் சத்தம் வந்தால் எங்கிருந்தோ ·பேக்ஸ் வந்திருக்கிறது என்று அர்த்தம்.

'ஸ்பெயின் கம்பெனிக்கு 24000 டன் பெல்லட்ஸ் ஆர்டர் கொடுத்தோமே , என்னாயிற்று?'

'அர்பாப், குறைந்தது ரெண்டு லட்சம் டன் எடுக்க வேண்டும் என்கிறார்கள்' என்பார் ·பேக்ஸை பார்த்தார் போல. ஈமெயில் பார்க்கும் நான் 'காக்கா' என்று குரல் கொடுத்தால் ' 'ஆமா, அந்த ஸ்டேட்மென்ட்தான். பிரிண்ட் எடுங்க' என்று திசை திருப்புவார். 'சப் கஸ்டமர்ஸே பாக்கி வசூல் கர்ணா அபி ஜரூரி ஹை' - இது அர்பாபுக்கு. என் அருகே வந்து ' எல்லா 'பலா'வையும் தாடி வந்து பாத்துக்குவான்..நீங்க பயப்படாம இரிங்க. இவனுங்க தரையிலெ நீந்தச் சொன்னா நாம தரைக்கு அடியிலே நீந்துறமாதிரி பாவ்லா காட்டனும்' என்றார்.

நவீன தீயணைப்புக் கருவிகளை உடனே குடவுனில் பொருத்தச் சொல்லி Defence அலுவலகத்திலிருந்து ஒருநாள்  ·பேக்ஸ் வந்தது.

'டர்ர்ர்ர்ர்'

நான் பதறினேன்.

'அட, சும்மா இரிங்க அமீர்தீன். இவன்லாம் இப்படித்தான் பயமுறுத்துவான். எந்த இங்கிலீஸ் கம்பெனியாச்சும் இவனுங்களை பயமுறுத்தியிருப்பான். அதான்...! இப்படித்தான் முன்னாலே ஒரு ஷார்ஜா கம்பெனிலே வேலைபாக்கும்போது வர்றதையிலாம் கிழிச்சிப் போடுவேன். ரொம்ப கெடுபுடியான

·பேக்ஸா இருந்தா மட்டும் என் முதலாளிட்டெ - தங்கமானவன் அந்த அரபி - கொடுக்குறது'

'அப்பாடா..'

'குஷ் ஹ¥ம்மக்......' ண்டு அவன் கிழிச்சிப் போட்டுடுவான்!

இதைத்தான் அண்டர்ஸ்டாண்டிங் என்கிறார்கள். அந்த அரபி, 'காசிம் மௌஜூத்?' என்று கரகரத்த குரலில் காக்காவின் பெண்டாட்டியிடம் கேட்டால் ' அஹ பாத்ரூம்லெ குளிச்சிக்கிட்டிக்கிறாஹாம்மா..' என்று பதில் சொல்லுமாம். அரபிக்கும் புரிந்துவிடும்!  புரிந்து கொண்டு, பயங்களை வேரறுத்தால் முன்னுக்கு வந்து விடலாமோ? என் சம்பளமே வாங்கும்  காக்கா குடும்பத்தை வரவழைத்திருக்கிறார்.

வாடிக்கையாளர்கள் குடவுனில் இவரிடம் கொடுக்கும் பணம் குறைந்தது மூன்று மாதத்திற்குப் பிறகுதான் - தான் ஒரு ஹாஜியாரென்ற நினைப்பு வந்தவுடன் - RVயாக மாறும். ரொட்டேஷனுக்கு சைட் பிஸினஸாக 'உண்டியல்'. களிமண் கண்டவனெல்லாம் உண்டியல் செய்கிற துபாயில் இவருடையது உடையாதது. ஆயிரம் ரூபாய்க்கு 50 ·பில்ஸ் (பைசா) மட்டும் எனக்கு டிஸ்கவுண்ட்.  பிற அனுகூலங்களும் கிடைத்தன.

ஆபீஸ் கம்ப்யூட்டரை upgrade செய்கிறேன் என்று ஊரிலுள்ள கம்ப்யூட்டருக்கு தேவையானதையெல்லாம் வாங்கிவிட்டேன். Light Pen , DVD Writer, Web Camera..பழைய மேனேஜர் போல ஏன், எதற்கு என்று கேட்காமல் உடனே செக்! நான் ஏனோ எனது வெகுநாள் கனவான IBM Thinkpad வாங்கிக் கொள்ளவில்லை..!

'அமீர்தீன், நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரனா இக்கிறதுக்கு...மனசுவச்சா என்னா வேணும்லாம் செய்யலாம். அஞ்சு நாளைக்கி ஒருமுறை இவனுங்க வூட்டுக்கு தலைக்கி ஆறாயிறம்டு போவுது. கையெழுத்து வாங்கிட்டு அறுபதாயிரம்டு மாத்துனா இந்த  மடையனுவளுக்கு தெரியவா போவுது ?' என்றார் ஒருநாள்.

என் முகம் வெளிறியது.

'ஆனா நாம ஈமான்தாரிங்க.. அப்படிலாம் செய்ய மாட்டோம்' என்றார் 'வத்துகல்லிமுனா அய்தீஹ¤ம் வ தஷ்ஹது அர்ஜுலுஹ¤ம் பிமாகானு யக்சிபூன்'  என்று சூரா யாஸீன் ஓதும்போது நெஞ்சம் நடுங்குபவர். கைகளும் கால்களும் மறுமை நாளில் சாட்சி சொல்லுமாம். தோலே சொல்லுமே வேதத்தில்!

சாட்சி சொன்னால்தான் இறைவனுக்கும் தெரிவதை எண்ணி நடுங்கத்தான் வேண்டும்...!

'சூரத் யாசீன் பொருட்டாலே
சொர்க்கம் தருவாய் ரஹ்மானே'

தினமும் பட்டான் ரெஸ்டாரெண்ட்டில் மணக்கும் புலாவும், தள தளவென்ற 'நிஹாரி'யும் , கூடவே இரவுக்கான பார்சல்களும் கிடைத்தன. மலையாளி கடையில் இரவுக்கு ஏதாவது கறி வாங்கி அதை மூன்று வேளை வைத்துக் கொள்கிற எனது பிசுக்குத்தனம் எங்கே போயிற்று? காலையில் வரும்போதே காக்கா , காசுபிடுங்கும் கராமா ஹோட்டல்களிலிருந்து சுதியான டி·பன் வேறு வாங்கி வருகிறார். சரவணபவன் தோசைக்கு கராச்சி தர்பார் கடாய்கோஷ்தான் சட்னி!

ஹர்ஜ் புல்கட்டுகள் வாங்க Imprest Accountல் காக்காவிற்கு கொடுத்திருந்த 25000 திர்ஹத்திற்கு, வாங்கிவிட்டதாக ஒரு Purchase Voucher (SRVயுடன் சேர்த்து) போட்டால் என் Staff Advance ,  ஒரு JV மூலம் , முதலாளி போலவே கையெழுத்திட்ட காக்காவால் காணாமல் போகும்..

'ஆடிட்டர்ண்டு ஒத்தவன் இக்கிறான் காக்கா...'

'கொடுக்குற காசுக்கு ரிபோர்ட் எழுதுறவன்தான் தம்பி துபாய்லெ ஆடிட்டர் !அவனுவளும் பொழைக்கத்தானே வந்திக்கிறானுவ..'

'..... .... .....'

'மிஞ்சி மிஞ்சி என்னாவும்? சௌதி மாதிரி காட்டான் ஊரா இது , தலைவெட்ட ? காசையிலாம் செலவு பண்ணிட்டேண்டு சொன்னா கொஞ்சநாள் ஜூமைரா ஜெயில்லெ வச்சிட்டு ஊருக்கு ஒரேயடியா அனுப்புவான். மயிறு ஒண்ணாச்சு. நமக்கு நல்லதுண்டு எடுத்துக்கப் போறோம் !' என்ன துணிச்சல்! ஊர்க்காரர்களின் குறைகளையெல்லாம் ஒன்று விடாமல் தமாஷாகச் சொல்லி எப்படியெல்லாம் இறுக்கத்தைக் குறைக்கிறார்! என் பயத்தை எழுதிவைக்கவில்லை என்றாலும் ஆலிம்ஷா எழுதியிருந்தது சரிதான் என்று பட்டது. நாம்தான் வீணாக பயப்படுகிறோம்.

'தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே..'

ஒரு மாதம் ஓடிய சுவடே தெரியவில்லை. தீய கனவுகளும் வரவில்லை! பயங்கரமான தைரியம். சான்றாக , ஒரு நாள் விடுமுறை போட்டுவிட்டு எல்லா மெகா சீரியல்களையும் பார்த்ததைச் சொல்லலாம். ஒரே ஒரு பிரச்சனை , அடுத்த நாள் நான் ஒரு அடி எடுத்து வைக்க அரை நாளாயிற்று, அவ்வளவுதான்!

இன்னும் மூன்று வருடத்தில் நடக்கப் போகிற மகளின் கல்யாணத்திற்கும் பயப்பட வேண்டியதில்லை போலிருக்கிறதே... வேலையில்லாமல் ஊருக்கு விரட்டியடிக்கப்பட்டாலும் கூட வீட்டுத் திண்ணையில் ஒண்டிக் கொள்வதெற்கென்று ஒரு நசுங்கிய அலுமினிய குவளையை வாங்க வேண்டிய அவசியமும் இல்லைதான். செல்லும் என் வாய்ச் சொல்.... வாப்பா போல கடைசி காலத்தில் பயந்து சாக வேண்டியதில்லை. 

வாப்பா மலேசியாவில் எல்லாவற்றையும்  முடித்து விட்டு ஊரோடு வந்த போதுதான் அந்த தங்க மோதிரம் போட்டிருந்தார்கள். சிலபேரைப்போல கையை விடப் பெரிதாக கல் வைக்காமல் மிகச் சிறியதாக ஒன்று பதிந்திருந்தது. ·பைரோஸ் என்று நினைக்கிறேன். மோதிரத்தில் முத்திரையெல்லாம் இல்லை. இருந்திருந்தால் 'காதர்ஷா' 'முஸ்லிம்' 'சபராளி' என்று மூன்று வரிகள் இருக்கலாம். ஆனால் பயணம் முடிந்த சபராளி கிழவர்களுக்கு முத்திரையால் பயன் என்ன?

மோதிரம் எப்படியும் இரண்டு பவுன் இருக்கும். புதியது மாதிரி தெரியவில்லை. ஆனால் பாலிஸ் பண்ணப்பட்டு பளபளப்பாகவே இருந்தது. நான் ஆசைப்பட்டதற்காக ஒருநாள் எனக்கு மாட்டிக்கூட பார்த்தார்கள் வாப்பா. தொளதொளவென்று இருந்தது. கொஞ்சநாளைக்கு பிறகு எனக்கு சரியான அளவில் வந்து விடும் என்றார்கள். இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் என்ன...பட்டும் தங்கமும் ஆண்களுக்கு விலக்கப்பட்டதல்லவா என்று ஆளாளுக்கு கேள்வி. 'நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹ¥ அலைஹிவஸல்லம் போட்டார்கள்- போடவில்லை- போட்டவரை கடிந்தார்கள்- வெள்ளி முலாம் பூசிய இரும்பு - இல்லை வெள்ளியேதான்' என்று குழப்பினாலும் அது ஹராம் என்பதில் சந்தேகமே இல்லை அவர்களுக்கு. எடு ஹதீஸ்களை!

தன்னை நெருப்பு வளையத்தில் இறக்கியவர்களுக்கு பதில் சொல்லாமல் வாப்பா சிரித்துக் கொள்வார்கள். கேட்பவர்களின் தங்கப்பல் நினைத்தோ?

'ஊண்டி நடக்குற வயசுலெ ஊண்டு கேக்குதோ ஒன் மாப்புள்ளைக்கி? இன்னுமா மஹண்டுபோயி கெடக்குறாஹா?!' என்று கிழத் தோழிகள் வீட்டில் கேலி செய்வதை பொறுக்காதவர்களாய்,  'வாதனை...கலட்டித்தான் என்னெட்ட கொடுங்களேன்....' என்று உம்மா கேட்டதற்கும் அதே சிரிப்பு. வாப்பாவின் நண்பர்கள் - நெய்னா மாமா, செல்லமாலிமார் போன்றோர் - கடைசி காலத்தில் மனைவி பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்டு பரம்பைசா இல்லாமல் கிழிந்த கைலியும் பரட்டைத் தலையுமாய் தர்ஹா வாசலில் போவோர் வருவோரிடம் காசு வாங்கித் தின்றதை நினைக்கிறார்களா ? 'ஒதவும்....கையிலெ ஏதாச்சும் இருக்கனும்..' என்று முணுமுணுப்பது மட்டும் கேட்கிறது.....

சௌதியில் இருக்கும்போது வாப்பா மௌத்தான செய்தி... 'சந்துக்'-இல்தான் எடுத்தார்களாம். இப்போதும் வாப்பாவை நினைத்தால் மோதிரக் கையோடுதான் நினைக்கத் தோன்றுகிறது. கஜ்ஜாலி மரைக்காயர் தெரு முனையில் , சைக்கிள்கடை ஜப்பாரின் கேலிகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கேயுள்ள உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் வாப்பா.....பேப்பரை பிடித்துக் கொண்டிருக்கும் சுருங்கிய கைக்கு பொருந்தாத மோதிரம்....அது கடைசியில் என்னாயிற்று என்று உம்மாவிடம் கேட்க எனக்கு பயம்.

மோதிரத்தை விற்றுவிட்டார்களா அல்லது மாப்பிள்ளை பவுனாக மருமகன்களுக்குப் போயிற்றா? துணிந்து ஒருநாள் கேட்டதற்கு , வாப்பா தோட்டத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறுதலாக போட்டு விட்டார்கள்; ஆட்களை இறக்கித் தேடியும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு உம்மா என்னை வெறுப்பாகப் பார்த்தார்கள். 'பெரீய ரசூலுல்லா மோதிரம் பாரு..' என்று முணுமுணுத்தார்கள். தெரியாமல் சொன்னாலும் அதற்கும் ஒரு ஹதீஸ் இருக்கிறது! மூன்றாம் கலீ·பாவான உதுமான் (ரலி) , ஒரு கிணற்றில் 'தவறுதலாக' ரசூல் (ஸல்)ன் முத்திரை மோதிரத்தை நழுவ விட்ட சம்பவம். மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லையாம். விட்டுவிட்டார்கள். முடியையும் நேசிப்பவனுக்குத்தான் தெரியும் மோதிர நஷ்டம். உம்மா சொன்னதில் நம்பிக்கை வரவில்லை. எனக்குள் வார்த்தைகள் புரண்டன...

கனவுகள் ஊறும் பச்சைக்கிணற்றில்
ஏணியிருக்கும் இறங்கிப் போக
ரத்தப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
பக்கச்சுவர்கள் குத்திக் கிழிக்க
ஆழம் போனால் காலம் நீளும்
வானம் ஏணி தூக்கிப் போகும்!

இதேபோலத்தான் நான் ஹைஸ்கூல் படிக்கும் சமயத்தில் உம்மாவின் தங்க வளையல் ஒருமுறை காணாமல் போயிற்று. 'பால்கிதாப்' பார்த்த தைக்கால்சாபு,  அது கிணற்றில் விழுந்துவிட்டது என்று சொல்லியதால் மொத்தக் கிணற்றுத் தண்ணீரையும் சேறையும் வெளியில் கொட்டினார்கள்.

வளையல் அகப்படவில்லை.

'தேடிப் பார்த்தோம்; காணவில்லை என்று சொல்லி விட்டு வா' என்று உம்மா சின்னமாமாவை அனுப்பினார்கள். சின்னமாமாவுக்கு சாபுவை பிடிக்காது.

எந்த அவுலியாக் குஞ்சுகளையும்தான். ஆனாலும் போனார் என்னையும் அழைத்துக் கொண்டு. சொன்னபேச்சைக் கேட்காவிட்டால் சோறு கிடைக்காதென்ற பயம். அங்கே ஒரே பெண்கள் கூட்டமாக இருந்தது பார்க்க வித்தியாசமான இருந்தது. சாபுக்கு ஒரு பெண்மணி மிக மரியாதையாக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். ' இந்த ---ளுவ மாப்புள்ளைக்கி ஒரு கிளாஸ் தண்ணி கூட கொடுத்திக்க மாட்டாடா....பாத்துக்க' என்றார்

மாமா குசுகுசுவென்று. இதை சாபிடம் சொல்ல அவரால் முடியாது. செவுனை செய்து விட்டால்?!. என்னைப் பார்த்ததும் 'யாரு...சின்னாச்சி மவனா?' என்று சிரித்துக் கொண்டே கேட்ட சாபு மறுபடியும் கணக்கு போட்டு ,'வெளிலே வந்துட்டேங்குதே...! அள்ளிப்போட்ட சேத்தையெல்லாம் தோண்டிப்பாக்கச் சொல்லு' என்றார்கள் மாமாவிடம்.

சேற்றில்தான் இருந்தது! அந்த சாபு இப்போது உயிரோடு இல்லை. பால்கிதாபை விட படைத்தவன்கிதாப் மர்மமானது. ஆயிரம் ஜந்த்ரி வந்தாலும் அளக்க இயலாதது.

வாப்பாவை மோதிரத்தோடு அடக்கியிருக்கவும் மாட்டார்கள். அது எங்கோ இருக்கிறது தேடிக்கொண்டு -  முழுதாகவோ வடிவம் மாறியோ..

அமெரிக்காவிலேயே பழைய மேனேஜர் தங்கி விட்டால் அந்த மாதிரி மோதிரம் நூறு வாங்க முடியும் என்னால். என் வாழ்க்கை வடிவம் மாறிவிடும்தான்.... அப்போதுதான் அவரிடமிருந்து மெயில் வந்தது : 'நான் இங்கே ஜன்னத்திலே இருக்கிறேன். க்யா ஜபர்தஸ்த் மால்ஹை! ஆமாம்,

அங்கே பிரச்சனை இருக்கிறதா?'

'மொபைல் எடுத்துக் கொண்டு போங்க சாப்... ஏதும் பிரச்சனை இருந்தால் கேட்கிறேன்' என்று போகும்போது நான் சொன்னதற்கு 'தொந்தரவு எல்லாம் செய்யாதே...அவசியம் இருந்தால் மட்டும் ஈமெயில் செய்' என்று கறாராகச் சொன்ன மேனேஜரின் நெஞ்சுக்கு என்னாயிற்று?

ஏ தாடி, நீ வந்தால்தான் பிரச்சனை... சொர்க்கப் பூங்கா உனக்கு மட்டுமா? இப்போதெல்லாம் கனவுகளில் என் இரு இருபக்கங்களிலும் விக்டோரியாவும் நயாகராவும் கொட்டுகிறது. மடியில் குழந்தைகள்.
எதிரே தெரியும் மானசரோவர் சுத்தமான பாலால் நிரம்பியிருக்கிறது. அதில் மேடைபோட்டு நான் மயங்கும் குலாம் அலி கச்சேரி நடக்கிறது. 'துக் கிலஹர்னே ச்சேடா ஹோகா' கஜலில் அவன் வேறுபடுத்திக் காட்டும் லஹர் (Wave) களில் ஒரு லஹர் , எனக்காகவே ஹார்மோனியத்திலிலிருந்து புரண்டு வந்து காலை நனைக்கிறது! நுரையாக சாரங்கி....  பாடியே என் பயம் போக்கும் குலாம் அலிக்கு பாப்·போபியா! புனிதமான மேடை , குட்டிக்கரணம் அடிப்பதற்கு அல்ல என்பான். இருந்தாலும் நமது எல்லா பயங்களையும் மட்டுமல்ல எல்லை பயங்களையும் போக்கும் நிஜக் கலைஞன். நான் அவனது கஜலில் திளைக்க என் மனைவியோ அவள் பாட்டுக்கு 'பியார் கியாதோ டர்னா க்யா...' என்று குஜல் பாடிக் கொண்டிருக்கிறாள் உற்சாகமாக. ஆமாம் என் விலா எலும்பே...!

'ஒரு பிரச்சனையும் இல்லை ' என்று ஹஸனுக்கு பதில் அனுப்பிய அடுத்த நாள் கனவின் தன்மை மாறிவிட்டது. பிரமாண்டமான கக்கூஸ் பேஸினில் பாதி உயிரோடு மிதந்தேன். என் மனைவி எத்தனை முறை Flush செய்தும், வாளி வாளியாக தண்ணீர் ஊற்றியும் தொட்டிக்குள் போகாமல் சுற்றிச் சுற்றி வந்தேன். நகங்களை முடிகளாகக் கொண்ட ஒரு தடித்த ஆணின் கை (ஆனால் வளையல் போட்டிருந்தது) எங்கிருந்தோ நீண்டு வந்து அவளை அறைந்து தள்ளிற்று. என்னைப் பிடித்துத் தூக்கி, மூத்திரம் ஆறாய் ஓடும் தரையில் போட்டு உற்றுப் பார்த்தது...  திடுக்கிட்டு எழுந்து ஒன்றன்பின் ஒன்றாக சிகரெட்களை ஊதித்தள்ளினேன். துற்சொற்பனம் நீங்க  வீரகவிராஜ் இராமசாமி எழுதிய அருட்ப்பா புகையிடையே தெரிந்தது. என்றோ படித்து மறந்து புதைந்த ஒன்றை வேரோடு பிடுங்கி , சரியான சமயத்தில் கொடுக்கும் நமது சக்தியே ஒரு பயம்தான்....

'மீரான்ற னிணையடியை மறவாவிம் மனத்தினிலே மேவுகாட்சிப் பேரான கனவில்வரும் பெண்ணாசை யுறமேவும் பிணியை நீக்கி...'

அறைக் கதவு மெள்ளத் தட்டப்படும் சப்தம்.... பயந்து போனேன். இந்த அதிகாலையில் யாராக இருக்கும்? திறந்து பார்த்தால் அங்கே யார் நிற்பார்கள் ?

'எதுக்கும் பயப்படக் கூடாது தம்பி...உத்துப் பாருங்க...பிரச்சனையை நேரா மோதனும்..' என்று மௌத்தான வாப்பாவின் குரல் கேட்பதுபோன்ற உணர்வு.... நிஜமாகவே என் சீதேவி வாப்பா வந்து விட்டார்களா ? 'காணாமல் போன' மோதிரத்தோடு இருப்பார்களா?

தைரியமாகக் கதவைத் திறந்தால் நாத்தூர் நின்றான். சுபுஹ் தொழுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னாலேயே தயாராகி விடுபவன். இறையச்சம் மிக அதிகம்.

'க்யா பீர்பக்ஷ்?'

'ஹஸன் சாப் வாபஸ் ஆகயா ஜீ' வந்திறங்கியதுமே விமான நிலையத்திலிருந்து அவனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். நரகத்தில் இறங்க ஜனங்கள் மிகவுமே அவசரப்படுகிறார்கள்...'இத்னி ஜல்தீ க்யூங் ?' - அமைதியாகக் கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்தேன். உறக்கம் வரவில்லை. காசிம் காக்காவுக்கும் தகவல் தெரிந்திருக்கும். அவர் இனி நேராகவே ஆபீஸ் வராமல் குடவுனுக்கு போய் விடுவார். குளித்து விட்டு சீக்கிரமே அலுவலகம் போனேன். எனக்கு முன்னால் ஹஸன் இருந்தார் - எல்லா ·பைல்களையும் , வவுச்சர்களையும் புரட்டிப் பார்த்தபடி.

புஷ்ஷ¥க்குப் புதிதாக முளைத்த முடிகள் பற்றி ஹஸன் பேசாதது குறித்து ஆச்சரியம்தான். சீக்கிரமே அன்று வந்த அர்பாப்களிடம்தான் மெல்லிய

குரலில் ஹிந்தியில் என்னமோ பேசினார். மஹ்ரிப் முடிந்ததும் என்னிடம் தன்மையாக அடுத்த வாரம் oneway-ல் ஊர்போக தயாராக இருக்குமாறு கூறினார். அதிர்ந்துபோய் நின்ற என்னிடம் 'நகல் க·பாலத்' (Visa Transfer) கொடுக்க முடியாததும், 'ஹர்மான்' (6 month Ban) ஐ தவிர்க்க முடியாததும் தன்னை மிகவும் துன்பத்தில் ஆழ்த்துவதாகச் சொன்னார். பதினைந்து வருடம் சேர்ந்து வேலைபார்த்த என்னை மறக்க முடியாது என்று தழுதழுப்பான குரலில் கூறியவர் முதலாளி , தனது நினைவாக வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்ததாக ஒரு பழைய மோதிரமும் கொடுத்தார். வாப்பா அணிந்திருந்த அதே மோதிரம்....!

அருஞ்சொற்பொருள்:
கமர் பஸ்தா ஹோனா - Be Courageous
எஜமான் - இறைநேசர் சாஹ¥ல் ஹமீது பாதுஷா
துஆ - பிரார்த்தனை
சபராளி - வெளிநாடு போய் வருபவர்
சஹர் -  நள்ளிரவிலிருந்து அதிகாலை பாங்கு சொல்லும் வரை உள்ள நேரம்
மஹரி / மஹ்ரிப் - அந்தி நேரத் தொழுகை நேரம்
ஹராங்குட்டி - சைத்தானுக்கு பிறந்தவன்
ரூஹ்ரூஹானி - பேய்
மைய்யாத்தாங்கொல்லை - அடக்கஸ்தலம்
மௌத் / வ·பாத் - இறப்பு
தொதல் - தடியானவர்களை கிண்டலாக சொல்வது
அர்பாப் - முதலாளி
நாமூஸ் - ஜிப்ரயில் (அலை)
நேக் ஆத்மிலோக் - பக்திமான்கள்
ஆயத்துல் குர்ஸி - குர் ஆன் 2வது அத்தியாயம் 255வது வசனம்
சம்ச்சா / மஸ்கா - காக்கா பிடிப்பது
ரப் - இறைவன்
கபர் - செய்தி
பிஸாது - வதந்தி
குஷ் ஹ¥ம்மக் - ஆபாசமான திட்டு
மௌஜூத்? - இருக்கிறானா?
கானா கராப் கரேகா - வயிற்றலடிப்பேன் என்று சொல்வது
முதீர் - மேனேஜர்
bபலா - பிரச்சனை
ஈமான்தாரி - (மார்க்கத்தைப் பேணும்) நம்பிக்கையானவர்
சூரா யாஸீன் - குர் ஆனின் இதயம் என்று சொல்லப்படும் 36ஆம் அத்தியாயம்.
ரஹ்மான் - இறைவன்
சுதியான - பிரமாதமான
வாதனை - வேதனை
மஹண்டு - மகிழ்ந்து மயங்கி
நாயகம் - நபி (ஸல்)
ஹராம் - (மார்க்கத்தில்) விலக்கப்பட்டவை
ஹதீஸ் - நபி (ஸல்) அவர்கள் சொன்னது/செய்தது/அங்கீகாரம் கொடுத்தது
சந்துக் - மைய்யத்துப் பெட்டி
பால்கிதாப் - 'ரமல்' போல அரேபிய எண்கணித சோதிட முறைகளில் ஒன்று
ஜந்த்ரி - பஞ்சாங்கம்
செவுனை - செய்வினை
அவுலியாக்குஞ்சு - இறைநேசர்கள் போல் நடிப்பவர்
ஜன்னத் - சொர்க்கம்
கனியாப் பெண்கள் - கன்னிப் பெண்கள்
நாத்தூர் - Watchman


பதிவுகள் ஏப்ரல் 2005 இதழ் 64
2. சிறுகதை: உயிர்த்தலம்!  - ஆபிதீன் -

- ஆபிதீன் -தொடையில் ஓங்கி ஒரு அடி..!

வலியில் , வஹாப் - என் தம்பி - எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது. இது வலி என்றோ அது எந்த இடத்திலென்றோ அல்லது  அடித்தது தன் லாத்தாதான் என்றோ அவன் உணர்வானா ? பார்வை , எப்போதும் வானத்தை மறைக்கும் முற்றத்துப் பந்தலின் ஏதாவது ஒரு மூங்கிலில் பட்டு நிதானமில்லாமல் அலைய, எச்சில் வடிகிற கோணல் வாயில் மொய்க்கும் ஈக்களை விரட்டத் தெம்பில்லாத தன் திருகிய கைகைளைத் தொட்டியில் அடித்துக் கொண்டு இருப்பவன் அவன். தொட்டியின் கம்பிகளைச் சுற்றிப் பிணைந்துள்ள அவன் சூம்பிப் போன கால்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவன் மூளைக்கும் தெரியும். மூளை இருக்கிறதா ? உடலின் எந்த பாகங்களுக்கும் வித்யாஸம் தெரியாத ஒரு பிறவியை குழந்தையென்று சொல்வது பொருந்துமா ? இப்போது அவன் பேண்டிருக்கும் மலத்தின் நாற்றம் கூட அவனுக்குத் தெரியவில்லையே...

நாற்றமெல்லாம் நமக்குத்தான்.

எல்லோரும் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது குபீரென்று கிளம்பும். அது ஒன்றுமில்லை என்பதுபோல பாவனை காட்டுவார்கள் பெரியவர்கள். அவர்களில் ஒருவர் பிசுக்கி விட்டிருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதே... இல்லை, இது வஹாப் செய்த வேலையேதான். தொள தொளவென்று தொங்கும் அரை நிஜாரின் வழியே தொடைப் பக்கத்தில் புடைத்துக் கொண்டு மலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது...வயிறு சரியில்லாத சமயங்களில் சத்தத்துடன் பிய்த்துக் கொண்டு தொட்டியின் இடுக்களின் வழியே தாழ்வாரத்தில் ஊற்றும்.

சுத்தம் செய்ய தாழ்வாரத்துத் தொட்டிதான் வசதி. வஹாபின் கழிவுகள் எல்லாம் முற்றத்தில் பாய்ந்து அப்படியே அதன் ஓரத்தில் இருக்கும் சாராக்குழியின் வழியாக தெருவுக்கு ஓடிவிடும். டெட்டால் வாசம் வீட்டில் மணத்தாலே வஹாபு வெளிக்கிப் போயிருக்கிறான் என்று அர்த்தம். லாத்தாதான்  கொஞ்சமும் அருவருப்பு படாமல் கழுவும். நாற்றமே தெரியாது லாத்தாவுக்கு. சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனோடு மாக்குவலி போட்டுக் கழுவிய உம்மா , தூக்கிச் சுமக்க முடியவில்லை என்று பொறுப்பை இப்போது லாத்தாவிடம் ஒப்படைத்து விட்டார்கள். கழுவுவதாவது பரவாயில்லை, வஹாபின் சாமானைப் பிடித்து ஒரு கிளாஸில் விட்டு அவனை ஒண்ணுக்குப் பேய வைப்பதற்கு கனியாப்பிள்ளையான என் லாத்தாவை தொழத்தான் வேண்டும்.

'நான் செய்றேனே லாத்தா..' என்று உதவிக்குப் போனால் 'அவன் எனக்குத்தான் அடங்குவான்டா' என்பாள் லாத்தா. அதுவும் உண்மைதான். அவளது கையின் வலிமை அவனுக்குத்தான் தெரியும். உம்மாவிடமிருந்து வந்த வலிமை.

அவர்களைத் தப்பும் சொல்ல முடியுமா? திடீர் திடீர் என்று வரும் ஜூரத்தின் உச்சத்தில் வெட்டு வந்து அடங்கிய பிறகு இரண்டு மூன்று நாளைக்கு வஹாபின் பிடிவாதம் தாங்காது. எதையும் வாயில் வைக்காத பிடிவாதம். நன்றாக இருக்கும்போது கொடுப்பதே ஆடிக் கொண்டேயிருக்கும் கோணவாயின் உள்ளே போகாமல் பாதி சட்டையில் சிந்துகிறது... இப்போதோ , பேச்சும் வராமல் 'வ்வாஆ ஆ..' என்று கத்திக் கொண்டே உடம்பை அஷ்ட கோணாலாய் புழுவென வளைப்பதில் , உணவென்ற பெயரில் கொடுக்கும் பிசைந்த இட்லியும் உணர்வூட்டக் கொடுக்கப்படும் மருந்துகளும் தொட்டிக்குத்தான் போகிறது.

வஹாப் பிறந்த இரண்டு வருடத்திற்குப் பிறகு இந்த தொட்டிதான் அவன் வீடு என்று சொல்ல வேண்டும். பலவீனமான உத்தரத்தில் தொங்கும் வீடு. எப்போது அறுந்து விழும் என்று யாருக்கும் தெரியாது..

இந்தத் தொட்டிக்கு வரும் முன்பு அவன் இருந்த துணித் தொட்டில் அழகு - அவனைப் போலவே. கூட்டுப் புருவம் வைத்துக் கொண்டு , கொழுகொழுவென்று...'உம்மாட சீன புக்கான் மூக்கும் வாப்பாட தலையும்!' என்று கிண்டல் செய்யப்பட்டாலும் பார்க்க அம்சமாகத்தான் இருந்தான் - 'ஒங்க வூட்டு புள்ளையிலுவளுக்கு சிக்லாவை ரெண்டு பக்கமும் கவுத்து வச்சாப் போல ஒரு கன்னம்..!' என்ற குடும்ப அடையாளத்தோடு.

தலை மட்டும் நிற்காமல் ஆடிக் கொண்டே இருந்தது. எப்போதும் அது அவனது மார்பின் துணையைத் தேடியது. 'நரம்புக் கோளாறு; சரி செய்து விடலாம்' என்றுதான் ஜமால் டாக்டர் சொன்னார். என்னென்னமோ மருந்து மாத்திரைகள். தலை போகட்டும்,  போலியோ வந்து போன பிறகு நிற்க முடியவில்லையே என்று காலுக்கு எல்லா வகை வைத்தியமும் பார்த்தார்கள். கடைசியில் காசு செலவு இல்லாத , மன்ணில் புதைத்து வைக்கும் மருத்துவமே சரியென்று கண்டார்கள்.

வஹாபின் இடுப்பு அளவுக்கு வாசலில் குழி தோண்டப்பட்டது. வேலைக்காரன் நாவப்பாதான் கூடவே இருப்பான். பெண்கள் வாசலுக்கு வர முடியாது. உம்மாவும் லாத்தாவும் கண்ணீரோடு ஜன்னலில் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஓரிரு மணி நேரம்தான். நான் கடைக்கு ஏதாவது சாமான் எடுக்க வீட்டுப் பக்கம் வரும்போது சமயத்தில் பார்ப்பதுண்டு. என்னைப் பார்த்ததும் வஹாபுக்கு அப்போதெல்லாம் புன்சிரிப்பு வரும். புரிந்து கொண்டதன் அடையாளமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மண்ணின் கீழுள்ள அவன் கால்களைப் பற்றியும் புரிந்திருப்பானா ?

'இந்தோ அந்தோ' என்று நம்பிக்கையாய் எதிர்பார்த்து அது பொய்த்துப் போனதும் தொட்டிலோடு அடக்கி விட்டார்கள்.  நானா  செளதி போகும்போதெல்லாம் கூட இப்போதுள்ள அளவு மோசமில்லை. ஒரு பெரும் ஜூரத்தில் காலும் கையும் முறுக்கிக் கொண்டு கண் மேலே பார்க்க ஆரம்பித்து விட்டது.  'எப்படி இருக்கிறான் வஹாபு?' என்று நானாவிடமிருந்து கடிதம் வரும்போதெல்லாம் சமாளிப்பாக பதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். வாப்பாவிடமிருந்து சரியாக பணம் காசு வராத நிலையில் அவரும் கோபித்துக் கொண்டால் என்னாவது ? பயந்து, நேர்ந்து கொண்டு  தர்ஹாக்களுக்கு போவதைக் கூட மறைத்தார்கள். கடைசியில் நானாவுக்கு  விஷயம் தெரிய வந்தபோது அவர் ஒன்றும் கோபித்துக் கொள்ளாதது எனக்கு ஆச்சரியம். நம்பிக்கையால் குணமானால் நல்லதுதான் என்று எழுதி விட்டார். வஹாபுக்கு காசு செலவு பண்ணத் தயங்கித்தான் இந்த மழுப்பல் என்று வீட்டில் பேச்சு வந்தது.  வஹாபை ஏதோ ஒரு மரக்கட்டையை பார்க்கிற மாதிரி பார்க்கும் அஸ்மா மச்சியை நினைக்கும்போது அது உண்மையாக இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

நானாவின் மகன், 'வகாபு சின்னாப்பா' என்று பிரியத்தோடு தொடப்போகும்போது ' 'ஏ' இக்கிம். போவாதே..' என்று அதட்டும் மச்சியை எனக்கு பிடிக்கவில்லை. 'சூ.சு' என்று ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறேன் அவர்களுக்கு . அர்த்தம் என்னைத்தவிர யாருக்கும் தெரியாது. மச்சியைப் பிடிக்காதே தவிர  நானாவின் மகன் அனீஸை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னைப் போலவே ரஜினி பிரியன். ரஜினி சண்டை போட்டால் 'என் லை·ப்லெ இந்த மாதிரி சண்டை பாத்ததில்லை ' என்பான் அந்த மூணு வயது வால்! வீட்டிற்கு வரும் சமயங்களில் கடைத் தெருவுக்கு கூட்டிப் போய் ஏதாவது வாங்கிக் கொடுத்து அவனை சந்தோஷப் படுத்தலாம் என்றால் மகனை இலேசில் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்கிறது மச்சி...

எங்கள் வீடு முழுக்க மல நாற்றமாம்!

மச்சியின் அலட்சியத்தைக் கழுவாத நானாவையும் இப்போதெல்லாம் பிடிக்கத்தான் இல்லை. தவிர , இவரால் அல்லவா லாத்தாவும் நானும் படிக்க முடியாமல் போனது! நானாவின் படிப்பால் வாப்பாவுக்குக் கடன் சுமை. அவர்களால் செலவுக்குச் சரியாக அனுப்ப முடியாமல் போனதில் நான் காலேஜ் போக முடியாமல் காடம்படி ITயில் காக்கிச் சட்டையோடு பொருமினேன். லாத்தா , வயசுக்கு வரும் வரை -குடும்பத்தின் எதிர்ப்போடு- படித்தாள். 'நம்ம சமூகத்துலெ பொம்பளைப் புள்ளைங்க படிச்சாச்சான் தன்னோட புள்ளைங்களை சபர் செய்ண்டு பேயா விரட்டாது' எனும் வாப்பாதான் அவளுக்கு ஆதரவு. புரியாத புத்தகங்களையெல்லாம் புரிந்த மாதிரி பந்தாவாக படிக்கும் நானாவும் ஆதரவுதான். ஆனால் அப்போது அவர் செளதி போயிருக்கவில்லை. 'பயணம் போவாத பண்டி' எப்படி ஆதரவு கொடுக்க முடியும் ? காலேஜ் படிப்பை முடித்து விட்டு தர்ஹாலைனிலுள்ள சிங்கப்பூர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேலை விஷயத்தில் நானும் அவரும் ஒன்றானது அந்த சமயத்தில் எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் படிச்சவன் பயணம் போவட்டும் என்று அவருக்கு மட்டும் உம்மா பல தர்ஹாக்களுக்கும் நேர்ந்து கொண்டிருந்ததில் அந்தப் பெருமை தொலைந்தது. ஒரே நேரத்தில் எனக்கும் நானாவுக்கும் நேர்ந்தால் அவுலியாவுக்கு பிடிக்காது போலும். 'நீ நேந்துக்கிறதுனாலேதான் எனக்கு விசா கிடைக்க மாட்டெங்குது' என்று நானா கோபப்படுவார்.

நானா பெரிய அவுலியா எதிரி. ஒருமுறை , ஏதோ ஒரு வீட்டுக் கல்யாணத்துக்காக  எழுபதடிபாவா அடங்கியுள்ள ஊர்ப் பக்கம் போய் , பாவாவின் கபுருக்கு பக்கத்தில் இருந்த மிக உயரமான பனை மரத்தைப் பார்த்து விட்டு ' பாவா , ஜட்டியை காயப் போடுறதுக்கா இது?' என்று கேட்டு அடி வாங்கியவர் ! இப்போது மட்டும் எப்படி மாறினார்? அந்தப் பனைமரம் அங்கேயேதான் அப்படியே இருக்கிறது.

வஹாபைக் கூட்டிக் கொண்டு ஒரு பாவாவின் தர்ஹாவுக்குப் போகும்போது  நானும் உடன் போயிருந்தேன். நாய்பாவா தர்ஹா. கூத்தானூர் குளத்துப் பக்கம் இருக்கிறது. வாலையில் இரண்டு நாள் இருந்தோம். வஹாபைப் போல எத்தனையோ பேர்... யாருக்கும் குணமான மாதிரி தெரியவில்லை. ·பாத்திஹா ஓதுபவர்கள்தான் திடகாத்திரமாக இருந்தார்கள். பாவாவோடு அலைந்த நாய்கள் இப்போது வருவதில்லையாம். பாவா உயிரோடு இருக்கும்போது வஹாபைக் கொண்டு போயிருக்க வேண்டும்.

நாய்பாவாவை நான் பார்த்ததில்லை. வீட்டில் அவர்களின் ஒரு பழைய ·போட்டோ மட்டும்  இருக்கிறது பூச்சி அரித்துப் போய் . பாவா இன்னும் நாயோடு இருக்கிறார்கள் என்பது சேச்சிமாவின் நம்பிக்கை. சேச்சிமா என் பாட்டியா. 'நம்புனா எல்லாம் குணமாவும்' என்பார்கள். 'அப்படிண்டா அல்லாவை நம்ப வேண்டியதுதானே ?' என்று நானா கேட்பார் எகத்தாளமாக. படித்தவர் இல்லையா ? 'அல்லாதான் அவுலியாவை நம்பச் சொல்றான்' என்று வாதம் பண்ணும் சேச்சிமாவிடம் நானாவின் விஞ்ஞான விளக்கம் எல்லாம் செல்லுபடியாகாது. 'போடா போடா பொக்கப் பயலே' என்று புறமொதுக்கிவிடும். அந்த  நாய்பாவாவின் ஹந்தூரி ரொம்ப விசேஷம். ஊரே ஒற்றுமையாகத் திரண்டு , மத பேதம் பார்க்காமல் , வரும் பக்தர்கள் அனைவருக்கும்  சோறு போடுவது பெரிய விஷயம். தண்டவாளத்தை ஒட்டிய திடலில் நடக்கும் விருந்து. தான் போகாமல் இருந்தாலும் யாரிடமாவது சொல்லி அந்த சீராணியின் ஒரு பருக்கையையாவது , 'அஹட சோத்துக்கு ஒரு தனி மணம்..' என்று வாயில் வைக்கும் வரை சேச்சிமாவுக்கும் தூக்கமே வராது. இதை அவர்கள் சொல்லும்போது 'சோ', 'சூ'வாக ஒலிப்பதில் மற்ற பெண்களுக்கும் தூக்கம் வராது!

நாய்பாவா என்றால் சேச்சிமாவுக்கு அவ்வளவு பிரியம். ஒருசமயம் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சேச்சிமாவை தன் மடியில் இறுக்கிக் கொண்டு கொஞ்ச நேரம் இருந்தார்களாம் பாவா. இது பாட்டிமார்கள் பிஸாதில் இடம்பெறும்போது 'பாவாட வப்பாட்டியா இக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே..!' என்று சேச்சிமா சொல்லி எல்லோர் வாயையும் அடைத்து விடும். சேச்சிமாவின் மூத்த பையனான சேத்த காக்காவை பாவா அல்லவா நடக்க வைத்தார்களாம்..! 'ஒங்க ஊருலே ஒரு புலியை வச்சிக்கிட்டு இங்கே ஏண்டி வந்தே கச்சடா சிறுக்கி' என்று சேச்சிமாவை திட்டியபடி சேத்த காக்காவின் தொடையில் ஓங்கி ஒரு அடி - இப்போது வஹாபுக்கு லாத்தாவும் உம்மாவும் செய்கிற மாதிரி. இது தொந்தரவின் விளைவு. அதுவோ உயிர் மேல் உள்ள கருணை. நாய்களுக்குக் கருணை காட்டியவர்கள் மனிதர்களுக்கு காட்ட மாட்டார்களா?

'அடிச்ச அடிலெ புள்ளெ சுருண்டுட்டான்.. 'போ ஊருக்கு திரும்பி'ண்டாஹா. வந்த மூணே நாளுலெ நடக்க ஆரம்பிச்சிட்டான்..!' என்றார்கள் சேச்சிமா வியப்புடன். சேத்த காக்கா நடப்பதற்குப் பெயர் நடையா ? கோணல் மாணலாகப் புதையும் கால்களின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ்வைக் கேலி செய்வது போல இருக்கிறது. வேகமாக வீசிப்போகும் கைகளோ - காற்றோடு கூடிக்கொண்டேயிருந்து - குத்தும் ஊரின் கேலி அணுக்களை விலக்கி விலக்கிக் கொண்டு.... ஆனாலும் உயிர் நடப்பதென்பது அழகு.

வஹாப் நடக்க முடியாது. கனவில் வந்தாலும் தொட்டியில்தான் சுருண்டிருப்பான். வேகமாக ஓடிவந்த நாயின் இரைப்பும் காளையின் சீற்றமும் கலந்த ஒரு சப்தம் வெளியாகிக் கொண்டிருக்கும். வீட்டுக் குழந்தைகளை யார் அடித்தாலும் வெளிப்படும் மாறாத உறுமல்...

உம்மா , 'கொடுத்தவன் நேராக்குவான்..' என்று இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ' நீ மச்சானுக்கு அளவுக்கு மீறி கொடுத்ததனாலதான் கோணலாச்சு ' என்று மாமி சொல்லும் உம்மாவிடம். 'கொடுத்தது' என்று சொல்லும்போது குரலில் ஒரு குஷி. 'வாங்குன பொறவு வயித்துக்கு மாத்திரை போட்டா வர்றது வயிறெரியிற மாதிரிதான் வரும்' என்று 'வ'னாவிலேயே வாரவும் செய்யும். மாமியும் நானா வைத்திருக்கும் புத்தகங்களை படிப்பார்களோ என்னவோ... நானா படிக்கும் புத்தகங்கள் எல்லாம் அவரது  பரு வெடித்த முகம்  மாதிரிதான் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அவரது நண்பர்களோ..எல்லாம் லூசுகள்! தன் அத்தை பெண்ணிடம் 'பூந்து பொறப்பட' ஆசைப்பட்ட சிவகுரு என்ற லூசு , 'சுகாதாரம் மட்டுமல்ல. நல்ல்லா செய்யலாம்' என்ற நானாவின் பேச்சைக் கேட்டு சின்னத்து செய்து கொண்டு தன் வீட்டுக்குள் பூற முடியாமல் எங்கள் வீட்டிலேயே கொஞ்சநாள் கிடந்தது.

அந்த லூசுகள் படிக்கும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயரெல்லாம் 'ஸ்கி', 'ஸ்கி' என்று முடியும். அல்லது அப்படிப்பட்ட பெயரைப் பார்த்துத்தான் படிக்கிறதோ என்னவோ.... 'தமில்லெ யாருமே இல்லையாண்ணே? என்று ஒரு லூசிடம் கேட்டதற்கு 'ஒனக்கு இது போதும்' என்று வண்ண நிலவன் என்பவரின் கதை ஒன்றை படிக்கக் கொடுத்து 'திருந்துடா!' என்று வேறு சொன்னது. என்ன திமிர் பாருங்கள் ! தலைப்பு, எஸ்தரோ புஸ்தரோ.. கதை சொன்ன விதம் புதுமையாகவும் எனக்குப் பிடித்தும் இருந்ததுதான். ஆனால் கதை என்றால் குடும்பப்பத்திரிக்கை 'அல்லி'யில் வருவது போல பிரச்சனையில்லாததாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டாமா ? 'அல்லி..அலஹான பொம்பளை. ஆனா பின்னாலெ செய்யத்தான்
லாயக்கு!' என்று நானா கிண்டல் செய்வதை விடுங்கள், அந்தக் கதை என்னை ரொம்பவும் பயமுறுத்தியது. பஞ்சம் பிழைக்க வெளியூர் போகும் குடும்பத்தின் பொம்பளை ஒருத்தி , சாகக் கிடக்கும் கிழவியை கழுத்தை நெறித்து கொன்று போடும் பயங்கரம்... அதைப் படித்து ரொம்ப நாள் உம்மாவும் வஹாபைச் சாக அடித்து விடுவார்கள் தொந்தரவு தாங்காமல் என்று மிகவும் பயந்தேன். மழை சீசனில் வஹாபைத் தொட்டிலோடு நடுவூட்டு அறையில் போடுவார்கள் . தொட்டியிலிருந்து தனியே பிரித்து தூக்கி எடுத்து வைப்பது சிரமம் என்றுதான் இப்படி. தவிர தரையின் சில்லிப்பு ஏறி அவனுக்கு வெட்டு வந்து விடும் என்றும். முற்றத்தில் படுக்கும் நான் , அறையிலிருந்து காலையில் உம்மா வெளி வரும்போதே வஹாபின் மவுத் செய்தியைச் சொல்லி விடுவார்களோ என்று அவர்களின் முகத்தையே 'உர்...'ரென்று பார்ப்பேன்.

இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவ்வளவு பெரிய பஞ்சத்தில் எங்களை வாப்பாவும் நானாவும் வைக்காததுதான் காரணம். பஞ்சம் இல்லாவிட்டால் என்ன, 'மொட்டைப் பூலான்களைக் கருவறுப்போம்' என்று வெளிப்படையாகவே வெறுப்பைக் கரைத்து எழுதி ,  பழைய பஸ் ஸ்டாண்ட் சுவரில்  - பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனைக் கண்டு கொள்ளாமல்  அல்லது அவர்களின் ஆசியோடு  - துணிச்சலாக வைப்பவர்களால் அந்த நிலைமை வந்து விடுமாம் - மூட்டிவிடுகின்றன சில அரசியல் கட்சிகள். செம்படபுரத்திற்கும் பெருமாவீதிக்கும் இடையே , கிடுக்கிப் பிடியில் அல்லவா எங்கள் தெருக்கள் மாட்டி இருக்கின்றன! உண்மையில் , ஆட்டுவதா நீட்டுவதா என்று அடித்துக்கொண்டிருக்கும் இந்த கட்சிகளுக்கிடையில்தான் நாங்கள் மாட்டிக்கொண்டிருப்பது தெரியாமல் பயம்...உம்மாவோ லாத்தாவோ தப்பி ஓடினால் அந்தக் கதையில் வரும் சம்பவம்போல நடந்தும் விடலாம்தான்...

ஊனமுற்ற ஊர்பாட்டுக்கு ஊர். அதோடு ஓடிக்கொண்டே நம் ஊனங்களை நாமே சரிசெய்துகொள்ள வேண்டும். 'லகத் கkhலக்னல் இன்ஸான ·பி அஹ்ஸனி தக்ரீம்' என்கிறது இறைமறை. நம்பிக்கையின் அர்த்தம் : நிச்சயமாக அல்லாஹ் மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்துள்ளான். அத்தியின்மீதும் ஜெய்த்தூனின்(olive) மீதும் சத்தியமாக!

வஹாப் விஷயத்தில் உம்மா செய்வார்களோ இல்லையோ, இல்யாஸ் மாமா செய்து விடுவார் போலிருந்தது. மாமா அதிகம் படித்தவர் அல்ல. ஆனால் விஷய ஞானம் உண்டு. நிறைய பத்திரிக்கைகள் படிப்பார். euthanasia என்று ஒன்று இருக்கிறது என்று அவர்தான் அடிக்கடி சொல்வார். தவிர வஹாப் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டான் என்று அவன் பிறக்கும்போதே டாக்டர் அவரிடம் சொன்னாராம். அதிக பட்சம் 16 வருஷம் என்றாராம் . இப்போது வஹாபுக்கு பதினேழு நடக்கிறது. நாள் குறித்த டாக்டர் உயிரோடு இல்லை!

எல்லோருக்கும் நல்ல பெயரைக் கொடுக்க , நக்கரித்துக்கூடப் போகத் தெரியாத வஹாப் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் போலும். ஆனால் அவனுக்குத் தன்னையே தெரியாதே... சின்னம்மா மகன் மஹதி அப்படித்தான் ஹொத்துவா பள்ளி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். என்னை விட ஒரு வயதுதான் சிறியவன். பார்க்க சேட் வீட்டு பிள்ளை மாதிரி இருப்பான். வெடிப்பாகப் பேசுவான். நாலு வருடங்களுக்கு முன் மூளைக் காய்ச்சலில் மாட்டி காது சுத்தமாகக் கேட்காமல் போய் விட்டது. சென்னையில் வைத்து நிறைய செலவு செய்தும் பலனில்லாமல் போனதில் வெறுத்து விட்டது அவனுக்கு. வெறுக்க வைத்து விட்டார்கள் என்பேன். தான் சொல்வது மற்றவர்களுக்கு சரியாகக் கேட்காது என்று அவனாகவே ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு ரொம்பவும் சத்தமாக இழுத்து இழுத்து பேசுவதைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்களே...! சிரிப்பவர்கள், தாங்கள் சொல்வது மஹதிக்கு கேட்காது என்பதற்காக கையை அதிகமாக அசைத்தும் முகத்தின் தசைகளையெல்லாம் ஒரே சமயத்தில் இயக்கியும் பதிலுக்கு விளக்குவதில் அவனுக்கு வேறு ஏதோ ஒன்று விளங்கி விட்டது...முதல் முறை , வீட்டுக் கிணற்றில் விழுந்து தப்பித்துக் கொண்டான். இரண்டாம் முறைதான் பள்ளிக் கிணறு. துல்லியம். தொழுகை நடக்கும்போது 'யா அல்லாஹ்..' என்று வெளியில் ஒரு குரல் கிளம்பி அடுத்து 'தொளக்...' என்ற நீரின் பெரும் சப்தமும் வெளியில் கேட்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் மின்விசிறி நின்று போனால் மட்டும் புழுங்கி விடும்!

'அல்லா ஜல்ல ஜலாலஹ¥த்தஆலா தந்த உசிரை மனுசன் அவனா போக்கிக்குறதுக்கு உரிமை கிடையாது. தற்கொலை செய்றவங்க எப்படி அதை செஞ்சாங்களோ அதே மாதிரிதான் நரகத்துலெ இருப்பாங்கண்டு நாயஹம் சொல்லியிருக்குகின்றா¡ர்கள் ' என்று கொஞ்ச நாள் , கேட்டவர்களின் உயிரையெல்லாம்  இறுக்கினார்கள் பbயானில். நரகத்தில் பள்ளிக் கிணறும் இருக்குமா ? என்னதான் அங்கே இல்லை ? அங்கே இல்லாதது பbயான் மட்டும்தான்.

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்- குர்ஆனில் வரும் வசனம்...

'ஹாலந்து கோர்ட்லெ வேதனை தாங்காத நோயாளிக்கு சாக அனுமதி கொடுத்திருக்காங்க !' என்று இல்யாஸ் மாமா வேதம் ஓதினார் வாயாலெ சாபுவிடம். எதாவது நாம் வினோதமாகச் சொன்னால் ,'உங்க வாயாலெ சொல்லாதீங்க..' என்று ஒரு விதமான ராகத்தில் சொல்வதால் சாபுவுக்கு அந்த பெயர்.

'ஏடா கூடமா எதையாவது சொல்லாதீங்க... சாக கெடக்கும்போது ஹராமான பொருளைக் கூட சாப்புட  நம்ம மார்க்கம் அனுமதிக்குது - உசிரு பொழைக்கிறதுக்கு. ஆனா சாவுறதுக்காக எதைச் செய்யவும் நமக்கு அனுமதி கொடுக்கலே ரப்புல் ஆலமீன்' என்று பதில் சொன்னார் சாபு.

'சாவு ! உங்களுக்கு என்னா தெரியும் ? எந்த கேள்வியும் கேக்காம அல்லாட பாதையிலெ போர் செய்யுங்கண்டு எங்களை சாவ சொல்லிட்டு  நீங்க போவ மாட்டீங்க! ' - மாமா ஆழம் பார்த்தார்.

'அடடே..தப்பா புரிஞ்சிக்கிட்டிங்களே..!. அந்த சின்ன ஜிஹாத் - ஜிஹாதுல் அஸ்கர்- முடிஞ்சி போச்சி. ஜிஹாதுல் அக்பர் - மனசோட போராட்டம் நடத்தி ஜெயிக்கிற பெருசு- தான் இப்ப வேணும்டு சொல்றோம். அப்படி ஜெயிச்சவங்கதான் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தைக் கடக்க முடியும்'

'நான் ஏன் அந்த பாலத்தை கடக்குறேன் ? அடுத்த பக்கம் போவாம கீழே குதிச்சிடுவேன் !'

'மார்க்கத்துலெ விளையாடக் கூடாது' - வாயாலெ சாபு காதைப் பொத்திக் கொண்டு முடிவாகச் சொன்னார். வாயாலெதான் !

மற்றவர்கள் அவர் முன் அப்படிப் பேச முடியாது. என் வீட்டுக்கு நெருக்கமான சாபு என்பதால் மாமாவுக்குத் துளிர் விடுகிறது. வீட்டில் ஏதாவது ·பாத்திஹாக்கள் நடத்தும் போது வாயாலெ சாபுதான் வருவார்.  ஊருக்கு ஒரு 'அதாரிட்டி' மாதிரி இருக்கிற சாபு எங்கள் வீட்டுக்கு வருவதில் எங்களுக்கு பெருமைதான்.

வாயாலெ சாபு மேல் எனக்கும் பிரியம் உண்டு. வீட்டுக்கு வந்தால் எப்போதும் வஹாப் அருகில் போய் தொட்டிக் கட்டையில் உரசு உரசி நிரந்தரமாகப் புண்ணாகிப் போயிருக்கிற அவன் நாடியை அன்போடு தடவிக் கொடுப்பவர் அவர். 'அல்லாஹ் ஏன் இப்படி சிலருக்கு வேதனை கொடுக்குறாண்டு தெரியலேயே..' என்று அலுத்துக் கொள்வார். எப்பேர்ப்பட்ட மேதைக்கும் கிடைக்காத பதில் சாபுக்கு மட்டும் கிடைக்கும் முனகலாக : 'ம்... எதுக்கோ கொடுக்குறான்!'

நேற்று வந்த சாபு மறுபடியும் அலுத்துக் கொண்டபோது , 'துஆ செய்யுங்க சாபு..' என்று உம்மா சொன்னார்கள் . தழுதழுத்த குரல்.

'உங்க வாயாலெ அதை சொல்லாதீங்க. மாப்புளெ இந்த தடவை வரும்போது எல்லாம் சரியாப் போயிக்கிம் , இன்ஷா அல்லாஹ். தொட்டியை விட்டு வஹாபுதம்பி இறங்கிடுவாரு பாருங்களேன்..'

'இவனோட தொசங்கட்டி மாளலே..அல்லா கருணை காமிக்கட்டும்..'

'எளியவன் மேலே நீங்களும் காட்டணும். ரெண்டு முழுத் துப்பட்டி சொல்லியிருந்தேன். இதுவரைக்கிம் அனுப்பலே ஒங்க மாப்புளே..'

'எலுதுறேன் சாபு..மறந்திருப்பாஹா வஹாபுட கவலையிலெ...'

'ஆங்.. வஹாபுண்ட ஒடனே ஞாபகம் வருது. சின்னத்து செஞ்சிடுங்க அவனுக்கு'

'ஆவு! ஒங்க வாயாலெ சொல்லாதீங்க சாபு..' - உம்மாவுக்கு கண் கலங்கியது.

நானா இருந்தால் எதாவது சாபுவிடம் கேட்பார். மகனுக்கு சின்னத்து பண்ணும்போது அவன் அழுத அழுகையைப் பார்த்து , 'வுட்டுடுங்க..அவன்ற வாப்பாட மாதிரியே இந்துட்டு போவட்டும்' என்று ஒரு உம்மா சொல்வதாக ஒரு 'தமாஷ்' சிறுகதை எழுதியவர். 'சொர்க்கத்தின் சாவி தொழுகை என்றால் பூட்டு எது?' என்று வித்யாசமாகக் கேட்டவராயிற்றே! ஆனால் அவர்தான் 'அல்லா இக்கிறானா?' என்ற என் கேள்விக்கு 'இக்கிறானா இல்லையாண்ட கேள்வியே இக்கிறதுனாலேதானே வருது! 'உலகில் இல்லதற்கு இல்லை பெயர்'ண்டு தொல்காப்பியம் சொல்லுதுப்பா' என்று , தோல்காப்பியம் மட்டும் தெரிந்திருந்த எனக்குத் தெளிவு தந்தவர். அவருடைய அந்தக் கதையால் நானும் சில விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன்.

சின்னத்து, ஆரம்பத்தில் யூதர்களின் பழக்கம்; இன்றும் அது அவர்களுக்கு ·பர்ளும் கூட; ரசூலுல்லாவுக்கு , பிறக்கும்போதே அப்படி பண்ணப்பட்டு இருந்தது; சின்னத்து செய்வதால் ஆண்குறியின் முன்புறமுள்ள 'மாவு' (அழுக்கு ) நீக்கப்பட்டு தொழ ஏதுவாக உடல் சுத்தமாகிறது etc... சில ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பெண்களுக்கு செய்யப்படும் வக்கிரமான FGM பற்றியும் அறிந்து அதிர்ந்தேன்.  'ஒரசுனா ரொம்பக் கேக்கும்டு 'நோனி'லெ பண்ணுனாஹா. உம்அதியா சொல்ற ஹதீஸ் கூட அபுதாவுதுலெ இக்கிது. ஆனால் அது லாயி·ப் ' என்று ஒரு பாத்திரம் சொல்லும் வரிகூட ஞாபகம் இருக்கிறது. விஷயம் எனக்கு முழுக்கப் புரியாவிட்டாலும், தைப்பது போன்ற சித்திரவதைகளையும் சொல்லிச் செல்லும் கதை.

ஆனால் இப்போதைய பிரச்சனையில் நான் என்ன சொல்வது?

மனிதர்களுக்கு , அவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரு அடையாளம் மட்டும் போதாதா -  'கடைசி அடையாளம்' வரை என்று எனக்குள் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கும் சிந்தனை வருமாக்கும்! ஒரே ஒரு சந்தேகம், அத்தனை அற்புதமான ஒழுங்கோடு உடலைப்படைத்த நாயன் 'அங்கே' மட்டுமா மறந்து போயிருக்க முடியுமா என்பதுதான். மறந்தானென்றால் அது இறையின் ஊனமல்லவா? ஹ¥ம், என்னை யார் கேட்கிறார்கள்?

எப்போதும் கையில் sharpner வைத்திருப்பவர் மாதிரி மாமா மட்டும் தீர்க்கமாய் சொன்னார் : 'அந்த காலத்துலெ இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் எம்ப்ளது வயசுலெ தனக்குத்தானே சின்னத்து பண்ணிக்கிட்டாஹலாம், தெரியுமா ? பாக்க அலஹ¥ மட்டுமில்லேங்கனி.. சீவுன பென்சில்தான் எழுதும் !'

பேனாவினால் எழுத வேண்டியதுதானே..? ஓ, அப்போதும் மூடியைத் திறக்க வேண்டியிருக்குமோ...?! கடைத்தெருக் கூட்டாளி ஒருவனிடம் சந்தேகம் கேட்டேன். 'டேய்..ஒனக்கு பண்ணியாச்சா இல்லையாண்டே சந்தேஹமா இக்கிது..கடற்கரைக்கி வா!' என்றான் அந்த முட மசுரு முளைத்தவன். 'குஞ்சமா இருந்து தலைப்பாக்கட்டா மாறிய'தைப் பார்க்க அத்தனை ஆர்வம்! நான் போகவில்லை. 'அவுத்துப் பார்த்தா இவனுங்க யாருண்டு தெரிஞ்சிடும்' என்று 'யாருக்கும் தெரியாத' வழி சொல்லும் முனிரத்னஹாசன் படம் , பாதுஷா திரையரங்கத்தில் ஓடக் கூடாது என்று உண்ணாவிரதம் நடத்திய  வேறொரு கூட்டாளியிடமும் கேட்டேன். அவனோ கம்ப்யூட்டர் கொஞ்சம் படித்தவன். format செய்ததை unformat செய்ய முடிகிற மாதிரி ஒரு புது டெக்னாலஜியை நாசுவர்கள் கண்டு பிடித்து விட்டால் பிரச்சனை இருக்காது நமக்கு என்றான்.

பஜாரில் இப்போதெல்லாம் படித்தவர்களாகப் போய் விட்டார்கள். எனக்கு அவன் சொன்னது சரியாக விளங்கவில்லை. இப்போது சாபு சொல்வது மட்டும் விளங்குகிறது.

' இப்ப,  பொறந்து ஒரு வாரத்துக்குள்ளெ எல்லா ஆம்புளைப் புள்ளைக்கிம் அரபு நாட்டுலெ பண்ணிடுறாஹா.. மவுத்து- ஹயாத் எல்லாத்துக்கும் இக்கிது. இவனும் இப்பவோ அப்பவோண்டு கிடக்குறான்லெ?...' என்றார்

'மொஹத்துலெ பிளேடு பட்டாவே அவனுக்கு கொப்பளம் கொப்பளமா வருதுண்டுதான் தாடி மீசையெல்லாம் வளந்து மிஸ்கீன் மாதிரி இக்கிறான் . இப்ப 'மானி'லேயா ? வெட்டு வந்து பொரக்கணையில்லாம போயிடுவான் சாபு ..டாக்டர் வாணாண்டுக்கிறாரு. வாணாம்.' என்றது லாத்தா தீர்மானமாக.

'எந்த டாக்குடர்ர்ரூ..? ஒண்ணுக்குப் போயிட்டு கழுவாதவனாயிக்கிம்..!'

'கழுவுறவனுவ மட்டும் காசு வாங்காமத்தான் வைத்தியம் பண்ணுறானோ?' - லாத்தா அவரது திமிரை அடித்தாள்.

'முஸ்லீம் பேரை வச்சிட்டு முஸ்லீம் புள்ளையாவே போய் சேருறதுதான் நல்லது..பண்ணிடுங்க உடனே... இது வாஜிபு.! ' என்று தீர்மானமாக உம்மாவிடம் சொல்லி விட்டு ஏதோ அனுமதி வாங்குவது போல 'என்னங்கனி...மஜ்குத்தா பண்ணி காக்காக்கு கொஞ்சம் பிச்சிக் கொடுப்போமா ?' என்று வஹாபிடம் வேறு கேட்டார் வாயாலெசாபு. வாஜிபுதானா? இருக்கலாம்; இல்லை. தீர்மானமாக யாருக்குத் தெரியும்? இல்யாஸ்மாமா பாங்காக் போயிருக்கும் இந்த சமயத்தில் மார்க்கம் தெரிந்தவர் வாயாலெசாபுதான். ஆயிரத்தெட்டு ஹதீஸ் தொகுப்புகளையும் அவரால்தான் புரட்ட முடியும். லாத்தா துடைக்கத் துடைக்க வஹாபின் வாயிலிருந்து தொடர்ந்து வழியும் வாணியைக்கூட கவனிக்கவில்லை சாபு.  வஹாப் ஏதோ முனகியதைக் கேட்டு , ' இப்ப பண்ணலேண்டா அப்புறம் நாசுவன் அரிவாளை எடுத்துட்டு வர்ற மாதிரி ஆயிடும்குறாறு வஹாபுதம்பி..' என்று அனைவருக்கும் விளக்கம் சொன்ன சாபு இன்னொன்றும் சொன்னார்.

சாதாரண சமயத்தில் அது சிரிக்கக் கூடியதுதான். அலங்கரிக்கப்பட்ட உரலில் , அசைய முடியாமல் தொடைகள் விரிக்கப்பட்டு , 'தயாராக' உட்கார்ந்திருந்த ஒரு வளர்ந்த பையனின் குறியைப் பார்த்து (குலவை சத்தத்தில் எனக்கெல்லாம் உள்ளே போய்விட்டது அன்று!)  ஒரு நாசுவன்...வேண்டாம் , ரொம்பப் பச்சையாக இருக்கும். ஒவ்வொரு சின்னத்துகல்யாணத்தின் போதும் சொல்லப்படும் அந்த 'ஜோக்'கால்தான் எல்லா இளங்காய்களும் பழுக்கின்றன என்று மட்டும் சொல்லி நகர்ந்து விடுகிறேன். இது சிரிக்கும் சமயமல்ல.

சாபு சொன்னபோது , கொல்லை சமையல்கட்டுப் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த உரல்தான் ஞாபகம் வந்தது. வஹாப் உட்காரப்போகும் சமயத்தில் ஜிகினா பேப்பரெல்லாம் ஒட்டப்பட்டு அலங்காரமாகிவிடும் அது, நெருங்கி வரும் மவுத்தின் அடையாளமாகப் பட்டது. இந்த மவுத்துதான் எத்தனை வடிவங்கள் எடுக்கிறது! உரலில் வைத்துத்தான் செய்வார்களா அல்லது தொட்டியில் வைத்தே கதையை முடித்து விடுவார்களா? வாப்பா , நானா இதற்கு அனுமதிப்பார்களா ? அல்லது 'பிரமிடு' தவிர்க்கும் பெரியாஸ்பத்திரிக்கு போகச்சொல்வார்களா? நேர்த்திக்குறைவை விடுவோம், அங்கே மவுத் வராதென்பதற்கும் என்ன உத்தரவாதம்? கத்தியால் முடியாவிட்டாலும் புத்தியாலாவது அதை வரவழைத்துவிட மாட்டாரா காதர்ஒலி டாக்டர்? எல்லாவற்றுக்கும் முடிவைத் தரத்தானே இந்த மவுத்தும் இருக்கிறது...

'மவுத் என்பதே உயிரை சின்னத்து செய்வதுதான்' என்பார் என் நானா கண்ணைச் சொருகிக் கொண்டே . சமயத்தில் தலைக்கு மேலே மிதக்கும் தன் இரு கண்களை எடுத்துப் பொருத்திக்கொண்டு. என்ன அர்த்தம் இதற்கு ? எனக்கு ரொம்பக் குழப்பமாக இருக்கும்.

வஹாபுக்கு ஒரு குழப்பமும் இல்லை. அற்ப விஷயத்துக்குப் போய் ஜனங்கள் இப்படி பயப்படுகிறார்களே என்று நினைத்திருப்பானோ என்னவோ...

பயங்காட்டும் பெரும் ஒலியை அவன் எழுப்பினான். அது சிரிப்பா , அழுகையா ? யாருக்கும் தெரியாது. அந்தச் சத்தத்தில் வெளியேறிய பீ மட்டும் அனைவரது கண்ணுக்கும் தெரிந்தது. ஒரு புட்டு மொத்தத்திற்குக் கறுத்த புழுவாக நெளிந்தபடி அது அவனது சிறுவார் வழியாக வெளியேறியது. உம்மா உட்பட எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டு கொல்லைக்கு நழுவினார்கள் மெல்ல. ' உம்மாடி.. தாங்கலையே.. எப்பவும் இல்லாத அளவுக்குலெ இக்கிது ' என்று தண்ணீர் எடுத்து வரப்போனாள் லாத்தா. வஹாபின் பக்கத்தில் நின்றிருந்த சாபு , 'அல்லாஹ்வே...பெரிய அல்லூறாவுலெ இக்கிது - ஆலத்தையே பொரட்டிப் போடுற மாதிரி..! ' என்று தொட்டியை வேகமாக தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினார் பொறுக்க முடியாமல்.

நிலை குலைந்து ஆடும் தொட்டியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அருஞ்சொற்பொருள்

லாத்தா - அக்கா
மாக்குவலி போடுதல் - மல்லுக்கட்டுதல்
கனியாப்பிள்ளை - ('குமர்' என்று சொல்லப்படும்) கன்னிப்பெண்.
சிக்லா - சிறிய மண்கோப்பை
நானா - அண்ணன்
சபர் - ச·பர். பிரயாணம்
அவுலியா - இறைஞானி
வாலை - தர்ஹாவில் பக்தர்கள் தங்குமிடம்
·பாத்திஹா - இறந்தவர்களுக்காகவும், அவுலியாவை முன்வைத்தும் இறைவனை இறைஞ்சுதல்
சீராணி - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
பிஸாது - அவதூறு
பbயான் - மார்க்கப் பிரசங்கம்
தொசங்கட்டியடித்தல் - தொடர்ந்து துன்பம் தருதல்
·பர்ளு - அவசியமான கடமை
மவுத்து ஹயாத் - இறப்பும் வாழ்க்கையும்
சிராத்துல் முஸ்தகீன் -  (இஸ்லாமிய நம்பிக்கையின்படி) நேரான வழி மற்றும் மறுமை நாளில் சொர்க்கத்து இட்டுச் செல்லும் ஒரு பாலம். வாளைவிடக் கூர்மையாகவும் ரோமத்தை விட மெலிதாகவும் இருக்கும் இதில் நடக்கும் நம்பிக்கையற்றோர் தவறி நரகத்தில் விழுவர்
சின்னத்து - ஆண்குறியின் முன்தோலை அகற்றும் ('கத்னா' என்கிற) மார்க்கச் சடங்கு. நபி (ஸல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் பின்பற்றும் 'சுன்னத்' என்பதன் மரூஉ
நோனி- யோனி
லாயி·ப் - பலவீனமான
மானி - ஆண்குறி
பொரக்கணை - பிரக்ஞை
வாஜிபு -  கடமை
மஜ்குத் - மஜ்பூத். சிறப்பாக
அல்லூறு - கொடும் சாக்கடை நாற்றம்
ஆலம் - பிரபஞ்சம்


பதிவுகள் அக்டோபர் 2009 இதழ் 118
3. போனாலும்... - மீண்டும் ஒரு சஃபர் கதை  - ஆபிதீன் -

- ஆபிதீன் -RESCUE' என்று சிவப்பு ஸ்டிக்கரில் பெரிதாக எழுதியிருந்த அரசாங்க வாகனம் ஒன்று , பிரதான சாலையான ஷேக் ஜாயித் ரோட்டின் ஓரத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. பார்த்ததும், என்னை உருட்டித் தள்ளிய எங்கள்வீட்டுப் பொடியனின் கேள்விதான் ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவோ தடவை நான் விழுந்திருக்கிறேன். எவ்வளவுதான் நீங்கள் அடித்துச் சொன்னாலும் அதை நம்பாமல் , புத்திசாலியென்று என்று என்னை நினைத்துக்கொண்டு நான் எடுக்கிற முடிவுகள் உதைக்கிற அபாரமான உதைகளால் அடிக்கடி விழுவேன் . 'என்னய்யா எழுதுறே நீ , இக்கிது புக்கிதுண்டு..' என்று எகிறுவார் ஓர் எழுத்தாளர். 'மன்னிச்சிடுங்கண்ணே' என்றபடி மல்லாந்து விழுவேன். 'இவ்ளோ வருஷமா அரபுநாட்டுல இருக்கியே அத்தா... என்ன சேர்த்தே?' என்று அடிப்பார் பயணத்தைப் பணயம் என்று குறிப்பிடும் பயில்வான். 'கடன்' என்று சொல்லிக் கண்ணீருடன் விழுவேன். நொடிதோறும் விழுவேன்ஆபிதீன் 'RESCUE' என்று சிவப்பு ஸ்டிக்கரில் பெரிதாக எழுதியிருந்த அரசாங்க வாகனம் ஒன்று , பிரதான சாலையான ஷேக் ஜாயித் ரோட்டின் ஓரத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. பார்த்ததும், என்னை உருட்டித் தள்ளிய எங்கள்வீட்டுப் பொடியனின் கேள்விதான் ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவோ தடவை நான் விழுந்திருக்கிறேன். எவ்வளவுதான் நீங்கள் அடித்துச் சொன்னாலும் அதை நம்பாமல் , புத்திசாலியென்று என்று என்னை நினைத்துக்கொண்டு நான் எடுக்கிற முடிவுகள் உதைக்கிற அபாரமான உதைகளால் அடிக்கடி விழுவேன் . 'என்னய்யா எழுதுறே நீ , இக்கிது புக்கிதுண்டு..' என்று எகிறுவார் ஓர் எழுத்தாளர். 'மன்னிச்சிடுங்கண்ணே' என்றபடி மல்லாந்து விழுவேன். 'இவ்ளோ வருஷமா அரபுநாட்டுல இருக்கியே அத்தா... என்ன சேர்த்தே?' என்று அடிப்பார் பயணத்தைப் பணயம் என்று குறிப்பிடும் பயில்வான். 'கடன்' என்று சொல்லிக் கண்ணீருடன் விழுவேன். நொடிதோறும் விழுவேன்.

விழுவதற்காகவே நொடியில் எழுவேன்.

சரிந்து விழுவதற்காக நான் சிரமப்படவும் தேவையில்லை. 'பொத்தசுரைக்கா' மாதிரி ஓர் உடல்வாகு. என் முயற்சியல்ல, 'இந்தா' என்று குடும்பம் தூக்கிக் கொடுத்தது. புகழ்பெற்ற எங்கள் வீட்டுச் சண்டை ஒன்றை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மரைக்கார் இப்படிச் சொன்னார்: 'நீங்களுவ அருவா, கம்புண்டு தூக்கிக்கிட்டு அடிச்சுக்கவே தேவையில்லை. சும்மா யார் மேலெயாவது வுளுந்தாவே போதும், மவுத்..'. இவ்வளவு பெருமைமிக்க பின்னணியுள்ள நான் , என்னைப் பாடாய்படுத்துகிற அரபி முதலாளி மேல் விழுந்து அவனை நசுக்கிவிடலாம் என்று பார்த்தால் நான் சாய ஆரம்பிப்பதற்குள் ஒய்யாரமான ஓர் ஒட்டகத்தைத் தூக்கி என் மேல் வைத்து விடுகிறான். என்ன செய்ய? அந்த காலத்தில், அவன் கம்பெனியில் வேலைக்கு சேர்ப்பதற்காக என்னை அனுப்பிய எங்கள் ஊர் ஆள் ,'தம்பியை அனுப்பிக்கிறேன், ரொம்ப படிச்ச புள்ள, பாத்து ஏதாச்சும் வேலை குடுங்க' என்று சிபாரிசு செய்தார். அந்த மூதேவி மானேஜர் என்ன சொல்லலாம்? 'தம்பியா, ஒரு மலையே சரிஞ்சி இருக்கு இங்கெ' என்றிருக்கிறான். ராஸ்கல். உண்மையைச் சொல்கிறான்.

அன்றிலிருந்து நான் விழும் வேகம் அதிகரித்தது. சிறு குன்றாக மாறிப்போனேன். அதற்கும் ஒரு வெடிகுண்டு வைத்து தகர்த்து விட்டானே இந்தப் பயல். என்ன டாப் கிளாஸ் கேள்வி.. அதிர்ந்து விட்டேன்.

அந்தக் கேள்வியை எழுதுவதற்கு முன்பு , சிலமாதங்களுக்கு முன்பு படித்த ஒரு புத்தகத்தைப்பற்றியும் ஓரிரு வரி எழுதிவிடுகிறேன். இல்லையேல் மறந்து விடும். 'கடவுள்' என்ற புத்தகம். 170 ரூபாய் கடவுள். கடவுள்தான் கொடுத்தார் அந்தப் புத்தகத்தை. காசு எங்கே என்னிடம்? தவிர, புத்தகத்தில்தான் கடவுளும் இருப்பார். ஓரிரு இலைக்கு மேல் அதிகம் பறிக்கப்பட்டால் 'டானின்' என்கிற வஸ்துவை அதிகம் சுரந்து 'குடு' என்ற மிருகத்திற்கு உணவு குடுக்காமல் விரட்டும் அதிசய ஆப்பிரிக்க மரத்தைச் சொல்லும் சுஜாதாஸ்யமான புத்தகம். அதில் காணப்பட்ட , 'எப்படி உலகம் உருவானது என்பதைவிட ஏன் உருவானது?' என்பது போன்ற , விஞ்ஞானிகள் குழம்பும் மெகா கேள்வியெல்லாம் அல்ல இப்போது இவன் கேட்டது. ரொம்ப ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் பொடிப்பொடியாய் என்னை உதிர்த்து விட்டானே.. அல்லாவே, உன் முதுகில் கொஞ்சம் சாய்ந்து கொள்ளவா? 'சாய்ந்திருப்பது என் முதுகுதான் என்றுகூட தெரியாத முட்டாளாக இருக்கிறாயே' என்று நீயும் எட்டி உதைக்காதே.

பதில்தான் சொன்னான். கேள்வி போன்ற பதில்.

ஒன்றுமில்லை, சும்மா ஒரு பொய்க்கோபம், அவனைப் பயமுறுத்துவதற்காக. ஊருக்குப் போயிருக்கும்போது அந்த நாலு வயசுப் பொடியனைப் பார்த்து நரம்புகள் புடைக்க கத்தினேன். 'வூடாடா இது? நரஹம். நரஹம்டா நரஹம். எப்பப் பாரு, அதை ஏன் வாங்கிட்டு வரலெ, இத ஏன் வாங்கிட்டு வரலெ, அதுக்கு காசு தாங்க, இதுக்கு காசு தாங்கண்டு.. ஒரு நிமிஷம் மனுஷன் நிம்மதியா இருக்க முடியுதா இங்கே? ஒரு பாட்டு கேட்க முடியுதா? அட, கொஞ்சம் படிக்கத்தான் முடியுதா? போறேண்டா..போறேன். துபாய்க்கு இப்பவே போறேன்' என்று வீடே கிடுகிடுக்க கத்திவிட்டு , போவது போல் ஓர் 'ஆக்ட்'டும் கொடுத்துவிட்டு, நைசாக திரும்பிப் பார்த்தேன்.

குழப்பமான பார்வையுடன் அவன் என்னைப்பார்த்து மெதுவாகக் கேட்டான் : 'சூட்கேஸை எடுத்துட்டு போவலெ?'

கடகடவென்று சிரிக்கும் சப்தம் கேட்கிறது. சூட்கேஸ் சிரிக்கிறதா? அதுவுமா? இல்லை. அஸ்மா. மாப்பிள்ளை விழுவதைப் பார்த்து ரசிப்பவளுக்குத்தான் மனைவி என்று பெயர்.

'நாந்தான் அப்பவே சொன்னேனே மச்சான், அவன்ட்டெ உஷாரா பேசுங்கண்டு' என்கிறாள். உண்மைதான். சொன்னாள்தான். வந்த முதல்நாளே பட்டேன்தான். தான்.. தான்.. வருஷங்கள் கழித்து வீட்டில் நுழைந்ததுமே 'அடியை கொடுங்க' என்று அஸ்மா கேட்கிறாளே என்று அசட்டுதனமாக இளிப்புடன் அவளை நோக்கினால் 'ச்சீ.. அவனுக்கு அடியை போடுங்கண்டு சொன்னேன்' என்று ஜக்கரியாவைக் காட்டினாள். 'போன தடவை இருந்தப்ப பேச்சே வரலையே இந்த படுவாவுக்கு? ரொம்ப விஷமம் பண்ணுறான் போலக்கிதே இப்ப' என்று சொல்லிக்கொண்டே - தோசைமாவு இருந்த பாத்திரத்தில் மண்ணைக் கலக்கிக் கொண்டிருந்த ஜக்கரியாவை நெருங்கினேன், முத்தமிட . பிள்ளைகளை முத்தமிடுவது எங்கள் நபிப் பெருமானுக்குப் பிடித்தமானது. 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்' என்ற அன்ணல். 'பேயன் பைத்தியக்காரன் மாதிரி செய்யாதீங்க. ஏண்டா செஞ்சாண்டு முதல்லெ அதட்டுங்க அவனெ' - அஸ்மா அதட்டினார் அன்போடு. மரியாதைக்கு மறுபெயரும் மனைவிதான்.

'ஏண்டா செஞ்சே?'

'அப்படித்தான் செய்வேன்' - மின்னல் வேகத்தில் வந்தது பதில். மின்னல் என்ன வேகம், தெரியுமா?

'வீணை யின்பக் குரலே வா
வீட்டின் இன்பச் சுடரே வா
தேனைப் பழித்த சுவையே வா
தேடும் நீண்ட விழியே வா'

- சேய்ச் செல்வத்தை இப்படித்தான் புகழ்ந்தார் புலவர் ஆபிதீன் காக்கா. பிறகு , 'ஏங்கிமுகம் வீங்கிமிக ஏழையவன் தானழுதால் ஏனென்றுங் கேட்கஒரு பேயுமில்லை எம்மவரே' என்று கொழும்பு சென்று குமுறினார் - குடும்பத்தைப் பிரிந்து. அவர் எங்கே பிரிந்தார்? ஊரில் இருந்தால், அதுவும் எழுத்தாளனாக இருந்தால், உதைத்து அனுப்பிவிட மாட்டார்களா? துபாயில் மட்டும் என்ன வாழுது? வேலை கொடுக்கிற மாதிரி இருந்த எங்கள் ஊர்க்கார முதலாளி நான் எழுதுவேன் என்று - யார் மூலமாகவோ - தெரிந்ததும் பதறித்தான் போனார். 'நல்லவேள சொன்னிங்க தம்பி.. தப்பிச்சேன். எழுதுறவன்லாம் பெரிய சோம்பேறியாவுலெ இருப்பானுவ' என்றாராம். ஊர்ப் பேயன்களுக்கு, மன்னிக்கவும், பேய்களுக்கு அரபியே பரவாயில்லை என்று முடிவெடுத்தேன். அதலபாளத்தில் விழுந்தேன். விரிவாகச் சொல்ல அலுப்பாக இருக்கிறது.

அட , வெட்டிப்பேச்சு விருதாப்பேச்சையெல்லாம் விடுங்கள், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? குழம்பிப் போனேன். இதென்ன வேடிக்கை, கொஞ்சம் நடுங்கினால் அதைவைத்து நாலு வார்த்தை வேகமான வசனம் பேசலாமென்றால் முதலிலேயே தூக்கி வீசி விடுகிறானே பயல். எதிர்வீட்டு ராவியாபேகத்திற்கு பேய் பிடித்தபோது அவள் மாப்பிள்ளை, 'டியே... யார் வூட்டுலேர்ந்து வந்திக்கிறா நீ?.. இப்பவே உன்னை அடிச்சி வெரட்டுறேன் பாரு தர்ஹாக்கு' என்று - சுற்றிலும் பொம்பளைகள் உட்கார்ந்திருந்ததால், பந்தாவாக - அதட்டியபோது 'பெண்' சொன்னது : 'போடா தடியா'. பறந்துபோய் பாங்காங்கில் விழுந்தார் அவர். அந்த மாதிரியல்லவா இருக்கிறது.

'என்னா புள்ளே இவன்..' என்று அஸ்மாவிடம் பரிதாபமாகக் கேட்டேன். 'அப்படித்தான் பேசுறான் இப்ப..' என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே அவனைப் பாசத்தோடு கட்டிக்கொண்டாள். என் பிள்ளைகளும் 'ஜக்கரியா மச்சான் படலம்' பாடின.

எப்போதும் அவன் இருப்பது எங்கள் வீட்டில்தான். எங்கள் வீடு என்றால் அஸ்மாவின் வீடு. அவள் நானா (அண்ணன்) வீடு , இதே தெருவில் வெகுதூரத்தில் இருக்கிறது. ஆமாம், பக்கத்து வீடு. இதேவீட்டின் பகுதியாகத்தான் அது முதலில் இருந்தது. கொல்லைவரை நடுவில் சுவரெழுப்பி , நன்றாக வாழப்போகிறோம் என்று 'ஒற்றுமையாக'ப் பிரித்து விட்டார்கள். இவன் ஏன் இங்கேயே இருக்கிறான் என்றால் மாமி மேல் அத்தனை பாசம். பிறந்ததிலிருந்து மாமிதான் அவனை தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறாள். ராத்திரி படுக்க மட்டும் அவன் வீட்டுக்குப் போவான் தன் உம்மா-வாப்பாவின் தொணதொணப்பு தாங்காமல். அங்கேயும் தொந்தரவுதானாம். அசந்து மறந்து ஜோடிகள் கட்டிப்பிடித்துக் கொண்டால், 'என்னா வாப்பா, காதல் பண்ணுறீங்களா?' என்று கேட்கிறானாம். என் மச்சினன் அதுமட்டுமா பண்ணுகிறான்? பேசுகிறான் என்றால், எல்லாம் இந்த பாழும் டி.வி. செய்வது. அவனை ஏமாற்றி , வீட்டார் பார்க்கும் 'மானாட மானோட கொட்டையாட' விளைவிக்கும் விபரீதம். 'உம்மா.. இங்கே பாரு... பாலுலாம் டிங்குடிங்குண்டு ஆடுது..'

தூங்கி எழுந்ததும் நேராக மாமி வீடு -> ஸ்கூல் -> மாமி வீடு. ஸ்கூலிலும் டீச்சர் கேட்கிற கேள்விக்கு அதேமாதிரி பதில்தானாம். 'ஏண்டா, பக்கத்து பையனை அடிச்சே?'. 'அப்படித்தான் அடிப்பேன்'. யு.கே.ஜி. டீச்சர் ஏன் மறு கேள்வி கேட்கிறாள்? 'UKG is carrying 10 KGS' என்று வருத்தப்படும் டீச்சர் அவள். என் பிள்ளைகள் சிரித்துக்கொண்டே எல்லா ரகளைகளையும் சொன்னார்கள். அவர்கள் மட்டும் பேசவே தெரியாத பிள்ளைகள் போல. எஸ்ஸெல்ஸி படிக்கிற மகன் அனீஸிடம் வாத்தியார் கேட்டிருக்கிறார்: 'முஹம்மது - அனீஸ் - மரைக்கார். மூணு பெயர்.. முஸ்லீம் பையங்க ஏண்டா இப்படி பேரு வச்சிருக்கீங்க'

'நீங்க மட்டும் அட்டல் - பிஹாரி - வாஜ்பாயிண்டு வச்சுக்கலாமா?'

எப்படி? குரலும் கர்ணகடூரம். 'காண்டாமிருகம் மாதிரி இக்கிதுடா உன் குரல்' என்று சொன்னேன் , ·போன் பேசும்போது. 'உங்க குரல் மாதிரியே இருக்குண்டு எல்லாரும் சொல்றாஹா வாப்பா' என்றான். 'சரியாகக் கேட்கவில்லை' என்று வைத்துவிட்டேன்

மகள் அஸ்ராவும் 'வெடுக்'தான். அஸ்மாவின் மகளாயிற்றே.. பிள்ளைகளுக்காக ஹந்திரி கடையில் வாங்கிய புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்தேன் ஒருநாள். விற்றவன் , ராஜாவின் 'எனக்குப் பிடித்த பாடல் உனக்குப் பிடிக்குமே'-ஐ பிய்த்து உதறினானே... ரவீந்திரனின் 'வார் முகிலே...'வை ரகளை பண்ணினானே.. எனக்கு மட்டும் ஏன் , காற்று மட்டும் - அதுவும் 'பா...ங்..' என்று - வருகிறது? இஸ்லாமிய இன்னிசை வேந்தரை முயற்சிக்கலாமா? 'மவுத்தையே நீ மறந்து..' - குழலின் துவாரங்கள் அடைத்துப்போய் காதுகள் வழியாக காற்றெல்லாம் வெளியேறியதுதான் மிச்சம். சே, ஒன்றுமே சரிவரவில்லையே..

'அவன் தெரிஞ்சி செய்றான், நீங்க தெரியாம செய்றீங்க வாப்பா' என்று வாரினாள் அவள். கரெக்ட். தெய்வத்தின் குரல். குழந்தையும் தெய்வமும் ஒன்று - குழி பறிப்பதில். விழுவுதற்கு காரணமெல்லாம் தெரியாமல் போய் விழுவதால்தான். இனி தெரிந்தே விழுகிறேன் தேன் மகளே.. உன் கல்யாணத்திற்காக நிறைய விழ வேண்டியிருக்கிறது.

வளர்ந்த இவர்களிம் பேசுவதை விட ஜக்கரியாவுடன் பேசிக்கொண்டிருக்கலாம். கொடகொடவென்று எதையாவது மழலையில் சொல்லிக்கொண்டிருப்பான். 'ர' எல்லாம் 'வ' ஆகும். போனமாசம் மஸ்கட் போன பொறையார் மாமா அவனுக்கு பயணக்காசு கொடுக்கவில்லையாம். இவன் கேட்டபிறகுதான் கொடுத்தாராம். 'கள்ளப்பயல பாவுங்க..' என்று அவர் எல்லோரிடமும் சொன்னதற்கு, 'கேட்டாத்தான் கொடுப்பிங்களா?' என்று பதிலுக்கு இவன் கேட்டானாம். எல்லோரும் சிரித்தார்களாம். அப்புறம்.. வீடு மாறும்போது கொல்லையிலுள்ள மரங்களை வெட்டிவிட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. அழுகை அழுகையாக வந்ததாம்... நானும் எதையாவது சொல்லிக்கொண்டிருப்பேன், அவனுக்கு விளங்குமா இல்லையா என்பதுபற்றியெல்லாம் பொருட்படுத்தாமல். நான் எழுதும் விதமே அப்படித்தானே?

'நாக மரங்கள் அதிகம் இருந்ததால் மட்டும் நம்மூருக்கு நாகவூர் என்று பெயர் வரவில்லை - 'நானிலம் போற்றிடும் நாகவூர் தர்ஹா' புத்தகங்கள் சொல்வதுபோல. நம் வீட்டுப் பக்கத்திலுள்ள நாகநாத சுவாமிகள் கோயிலாலும்தான் அந்தப் பெயர் வந்ததுடா ஜக்கரியா. அதன் ஸ்தல புராணம் கேள். முன்பொரு காலத்திலே சம்புபத்தன் என்னும் பிராமணன் தன் குடு....'

எவ்வளவு அருமையாக நான் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று பார்த்தால் பயல் தூங்கிக்கொண்டிருக்கிறான். சரி என்று நகர்ந்து போனால் அவன் கால் ஜோராக ஆடுகிறது.

யாரும் கேட்காவிட்டால் என்ன, தெருக்கள் தோறும் ஊரில் வழிந்து ஓடும் துவேஷத்தை ஒழிக்க சொல்லிக்கொண்டிருப்பேன். உங்கள் மார்க்கம் எங்களுக்கு; எங்கள் மார்க்கம் உங்களுக்கு - புகழ்ந்து சொல்ல. இதுதான் சரி. உதாரணம் சொல்லவா? நான் சிரிப்பாக எழுதுவதாக ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன, அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாரா? அட, சொல்கிறார். பொய்தான். ஆனால், ஜிலுஜிலுவென்று இருக்கிறதே. சொன்னவர் மேல் அன்பும் பெருகிறது. நானும் சொல்கிறேன், நீங்களும்தான் என்று. அவருக்கு சந்தோஷம். இலக்கியம் தொலையட்டும், உறவு வளர்கிறதா இல்லையா? அதுவல்லவா முக்கியம்?

ம்.. சொல்லலாம். ஊரோடு இருந்தால் , பிறசமூகத்தின் பெருமைகளை சொல்லிச் சொல்லி பிள்ளைகளை வளர்க்கலாம். ஆவேசமும் , 'உலகை மாற்றப்போகும் ஒரே மத'ப் பெருமையும் அவர்களுக்குக் குறையும் . அத்தனை தூரத்திற்கு விட்டுப்பிரிந்துவிட்டு, எப்படி , யாரால் இவர்கள் மாறுவார்களோ என்ற பதட்டமல்லவா எப்போதும் ஆட்டிப் படைக்கிறது? ஏன், என் வாப்பாவும் - எத்தனையோ வாப்பாக்கள் போல - பிரிந்துதான் இருந்தார்கள் மலேயாவில். மொத்த வாழ்க்கையில் 313 நாட்கள்தான் குடும்பத்தோடு ஊரில் இருந்துவிட்டுப் போனார்கள். ஆனால் , நான் அடங்கித்தானே வளர்ந்தேன்? வாசிப்பா , நட்புக்கு இலக்கணம் வகுத்த நண்பர்களா (இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?) , வாப்பாவின் ஆசையா? அவர்களின் ஆசையாகத்தான் இருக்கும். 'எல்லாரும் நமக்கு வேணும்ங்கனி' என்பார்கள். சொந்தங்களைப் பார்க்க அறந்தாங்கி , ஏம்பல் போகும்போதெல்லாம் ஆவுடையார்கோயிலில் இறங்கி ,கோயிலில் நுழைந்து, ஒவ்வொரு சிலையாக விவரித்து வளர்த்த வாப்பா... கல்லிலும் தெய்வம் காண்பவர்கள் கபடமில்லாதவர்கள் என்று சொன்ன வாப்பா.. 'எல்லாப் பறவைகளுக்கும் அத்திபழமே உணவாக இருக்க முடியாது' என்று சொன்ன மௌலானா ரூமியை நேசித்த சீதேவி வாப்பா..

எல்லாம் சரிதான், கொஞ்சம் பிழைக்கத் தெரியாத ஏமாளியாகப் போய்விட்டேனே வாப்பா...

'கொஞ்ச நஞ்சமா?' என்பாள் அஸ்மா.

'ஊரோட வர்ரவன் பணக்காரனா இக்கிறாண்டா, வரும்போதே அவன் அரபியை 'போட்டுட்டு' வர்றான். சூப்பர்மார்கெட்டா தொறக்குறான். உமக்கு அது புடிக்கலெ, கஷ்டப்படுறியும். ஓய், போடுறதா இருந்தா நம்ம நாட்டுலெயே நல்லா போடலாம், வந்துடுறியுமா?' என்பார் ஜப்பார்நானா. அவர் சொல்வது சரிதானா? முஸ்லீம் கட்சிகளே நூறு நூறாகப் பிரிந்து ஆளுக்கு ஓர் உண்டியல் வைத்துக்கொண்டு அள்ளுகின்றனவா? ஜப்பார் நானா என் உஸ்தாத் போன்றவர். ஹஜ்ரத்தின் மவுத்திற்குப் பிறகு அவர்தான் ஆறுதலுக்கு. அவர் சொல்வது எனக்கு விளங்குவதில்லை. உஸ்தாதின் கேள்விகள் விளங்கினால் நான் ஏன் கதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்? அதையும் சரியாகச் சொல்கிறேனா? ஜக்கரியாவை விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறேன். என் அலைச்சல் எழுத்தையும் விட்டுவைக்கவில்லை, உங்களையும் விட்டுவைக்கவில்லை.

ஜக்கரியாவால் ஊரில் பொழுது போனது.

12
34
56
78
910

என்று , நேர்கீழான வரிசையில் சுவரில் அவன் கிறுக்கியிருந்ததைப் பார்த்தேன். கோணல்மாணலான எண்கள். புத்தியுள்ளவன்தான், சந்தேகமில்லை. Permanent Markerல் பிரமாதமான கிறுக்கல். Arabic Calligraphyக்காக நான் வாங்கி வைத்திருந்தது. கடுப்பு வந்தது. கூடவே கண்ணையும் சுழற்றியது. ஓர் இழவும் விளங்கவில்லையே... என்ன கணக்கு இது? கூட்டல் போட்டிருப்பானோ? ஐந்தோடு ஐந்து கூட்டினால் பதினொன்று என்று என் மகள் இரண்டு கைவிரல்களையும் வைத்துக்கொண்டு வினோதமான ஒரு கணக்கு சொல்வாள் சின்னவயதில். 10,9,8,7,6 என்று இடது கை விரல்களை - பெருவிரலிலிருந்து ஆரம்பித்து - மடித்துக்கொண்டே வருவாள். 'இப்ப ரைட் ஹேண்டில் அஞ்சு வெரல் இக்கிதா? 5+6=11' என்பாள். பதினோரு விரல்களாலும் தலையைப் பிய்த்துக்கொள்வேன், ஏதோ எனக்கு முடி இருப்பது மாதிரி. அந்தக் 'கணக்கு' அவளது டீச்சர் சொன்னதாம். இப்போதும் எனக்கு புரியமாட்டேன் என்கிறது. அதேபோல் , ஜக்கரியாவின் வகுப்பில் எதாவது சொல்லிக் கொடுக்கிறார்களா? முஸ்லீம் பாடசாலைகளுக்கென்று தனியாக ஒரு கணக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் இப்படியா? ம்ம்.. வரிசையில் மட்டும் ஏதோ ஓர் ஒழுங்கு தெரிகிறதே.. மிஸ்டர் ராமானுஜம், கொஞ்சம் உதவிக்கு வருகிறீர்களா? மகனிடம் கேட்டேன். 'அட, ஒண்ணு, ரெண்டு, மூணுதான் வாப்பா. அப்படி அளகா - பக்கத்து பக்கத்துல - எழுதி வச்சிக்கிது புள்ள' என்றான். இல்லை, இது சரிவராது, இடிந்து விழாத ஒரே ஒரு சுவரிலும் இப்படிக் கிறுக்கினால் இடிதான் தலையில் விழுமென்று ஓவியத்திற்கு மாற்றினேன். கிறுக்கர்களுக்கு ஓவியம் இயல்பாக வரும். க்ரையான்கள் கொடுத்தேன். கப்பல் ஒன்றை வரையச்
சொன்னேன்.

கப்பலின் முனையில் கப்பலின் நீளத்தை விடப் பெரிதாக ஒரு பெரிய கரண்டியை வரைந்திருந்தான்.

'இது எதுக்குடா?' என்றால் போகும்போதே மீன் பிடித்துக்கொண்டு போகுமாம். அதைவிட வேடிக்கை அந்தக் கப்பல் , வீடு என்கிற இரண்டு கோடுகளின் மேல் உட்கார்ந்திருந்தது. கப்பலுக்கு ஒரு காதும் இருந்தது. சந்தேகமில்லை, இவன் வான்கோவேதான். கந்தூரியெல்லாம் அதிகம் பார்த்தால் அப்படித்தான் கற்பனை வருமென்று கடற்கரைக்கு கூட்டிப் போனேன். நான் பெற்ற மகனுக்கு சாயந்தரமானால் உசேன்போல்ட் ஞாபகம் வந்து விடும். உதறிக்கொண்டே கலெக்டர் ஆஃபீஸ் ஓடுவான். அங்கேதான் ஸ்டேடியம் இருக்கிறது. பள்ளி மைதானம் பத்தாது என்று இதுவேறு. தினம் தினம் ஒரு விளையாட்டு. 'என்னடா இது? ·புட்பால், பேஸ்கட்பால்ண்டு எதாச்சும் ஒரு விளையாட்டுல ஸ்பெஷல் அட்டென்சன் கொடுக்காம எல்லாத்தையும் போட்டு ஒழப்பிக்கிட்டு.. கேவலாமாவுலெ இக்கிது' என்றால் 'இதை விட கேவலம் ஒண்ணு இக்கிது வாப்பா' என்கிறான் என்னவாம்? ஸ்கூல் சார்பாக போட்டிகளுக்குப் போகும் எல்லா ஊர்களிலும் கிடைக்கும் தோல்விதான். தாளாளர் சொல்வதை தட்டாமல் கேட்கும் பி.டி வாத்தியார் துணை. ஆனாலும் துவளாதவன் என் மகன். அஸ்ரா? கனவு மிதக்கும் கண்களோடு எப்போதும் படிப்பு. கணிதம் படிக்கிறாள் கல்லூரியில். 5+5= பத்து சூர்யா.

அஸ்மாவோடு போகும்போது ஐடியல் துணை ஜக்கரியாதான். ஸ்கூட்டர் என்ற பெயருள்ள என் புராதன கூட்ஸ்வண்டியில் , முன்னால் அவன் நின்று கொள்ள பின் சீட்டில் பேரழகி - பூதம் போன்ற புர்க்காவோடு. ஆனால் அவளுடையது உரசும்போதே, புர்க்காவைச் சொல்கிறேன் , கிளம்பிவிடும் - ஸ்கூட்டர். சரியாக, கடற்கரைக்கு 3 கி.மீ தூரத்தில் நின்றுவிடும். நாங்கள் புறப்பட்ட இடம் அதுதான். அஸ்மா வீடு. சே, என்று ஆட்டோ பிடித்து சேர்வோம். அவனை அங்கே விளையாட விட்டுவிட்டு வஞ்சித்தோப்பு ஓரமாக அலைகளையும் அவனையும் பார்த்தபடி நாங்கள் இங்கே விளையாட ஆரம்பிப்போம். எல்லாம் பேச்சுதான். 'முதல்லெ மாதிரி முடியல புள்ளே.. மூச்சு வாங்குது' . 'முதல்லெ சிகரெட்டை வுடுங்க'. 'அங்கேயா ? சுடும்டி'. 'சீ.. கோணப்பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லெ'. 'உன் மவள்ட்டெயும் சொல்லிவை.. திடீர்திடீர்ண்டு அறையிலெ நுழைஞ்சுடுறா'. 'அத சொல்லிக்கிட்டே ஏன் கை இங்கே நோண்டுது? ச்சூ..யாரும் பாத்துடப் போறாஹா'. 'பாக்க மாட்டாஹா, பயணத்துலேர்ந்து வந்திக்கிறாண்டு தெரியும்'. 'ம்..'

நிறுத்திவிடுகிறேன். 'ஏண்டா இதெல்லாம் எழுதுறே?' என்று ஈ-மெயில் வருகிறது. கடவுளாகத்தான் இருக்கும்.

கடவுளை அறிய புத்தகமா வாங்குவார்கள்? சும்மா கடலைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதுமே... மனம் நிறைந்து விடும். எவ்வளவு பெரும் கருணை.. தன் வரம்பு மீறாமல் , குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிற தர்ஹா யானை போல கம்பீரமாயும் அடக்கத்தோடும்.. துலாவித் தழுவும் அலைகளை தும்பிக்கைகள் எனலாமா? பார்க்கப்பார்க்க அலுக்காத பரவசம். கொல்லையில் தேங்காய் பறித்துக்கொண்டிருக்கும்போது உம்மாதான் சொல்வார்கள், 'யார் தலையிலெயும் வுழாது தம்பி. ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிது மரம்லாம், தெரிஞ்சுக்க' என்று. நினைவுக்கு வரும். அது போலத்தான் கடலும். நாலுவருஷத்துக்கு முன்னால் சும்மா லே...சா கொஞ்சம் சிணுங்கியது. எங்கள் ஊரில் மட்டும் நாலாயிரம் பேர் புதைந்தார்கள். இன்னும் அதன் வீச்சம் காற்றில் பரவி நிற்கிறது. இ·தென்ன கருணையா? என்று நடுக்கத்துடன் கேட்டால், ஆம். 'எதிரி' நாடுகளை அழிப்பதற்காக பரிசோதனைகள் என்ற பெயரில் எங்கெங்கோ தன் அடியில் குண்டுகள் நீங்கள் வைத்ததற்கு இந்த அளவாவது விட்டுவைத்ததே அது.

'மச்சான், எப்படியோ வருதும்மா... ராத்திரி பாத்துக்கலாம்'

அட, கொஞ்சம் இயற்கைக் காட்சியை சித்தரிக்க விடமாட்டாளே.. 'கைப்பிடியளவு கடலாய் இதழ்விரிய உடைகிறது மலர் மொக்கு' என்கிறாண்டி கவி பிரமிள். இரு, அப்படியே நாசர்மாமா பற்றியும் இங்கே சொல்லிவிடுகிறேன். அறுபது வருடமாய் சிங்கப்பூர் சபராளியாக இருந்து - ஊரோடு போய் தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று வந்த எழுத்தாளர். 'சுள்ளடி' என்று நாங்கள் அழைக்கும் கடற்கரைக்கு தவறாமல் வருவார். பேசிக்கொண்டிருப்பேன். இங்கே, இதே இடத்தில்தான் என்னிடம் அழுதார். 'தம்பி.. தயவு செய்து அந்த மாதிரி பேத்தனமா முடிவு எடுத்து ஊரோட வந்துடாதீங்க. சல்லிக்காசுக்கு மதிக்க மாட்டாளுவ.. 'மச்சான்..மச்சான்'டு இருந்தா என் பொண்டாட்டி - என்னெட்டேர்ந்து காசு வந்த வரைக்கிம். இப்ப தன்னோட புள்ளைங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே என்னய தூக்கி எறிஞ்சிட்டா.. வேலைக்காரன வுட இப்ப கேவலமா பொய்ட்டேன் தம்பி.. ப்ளீஸ், வெளில யார்ட்டெயாச்சும் சொல்லிடாதீங்க..' என்றார்.

கண்கலங்கி விட்டது எனக்கு. மதநல்லிணக்கக் கூட்டங்களில் முன்நின்று செயல்படும் முக்கியமான ஆள். 'பைத்துல்மால்' எனும் பொதுநிதிக்கான அமைப்பு எங்கள் ஊரில் ஏற்படக் காரணமாக இருந்தவர். அவருடைய நகையுணர்வும் ரொம்பவும் ரசிக்கத்தக்கது. சென்ற முறை, ஈகைப்பட்டினத்தில் அவர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு போய்விட்டு , வரும் வழியில் சரவணா ஹோட்டலில் ஏதோ டி·பன் வாங்கினேன். வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். ஊர் போவதற்காக யார் வண்டிக்காகவோ காத்திருக்கிறார் போல. என் ஸ்கூட்டரிலேயே அவரையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்ற எண்ணம். அவருக்கும் ஒரு நெய்தோசை பார்சல் வாங்கிக்கொண்டேன். பார்சல்களை அவர்கையில் கொடுத்து, 'ஊர் வர்ற வரைக்கிம் இத கையில் வச்சிக்கிட்டு பின்னால உக்காந்துக்குங்க மாமா, தப்பா எடுத்துக்காதிங்க' என்றேன். 'அட நீங்க ஒண்ணு தம்பி, தோசை வாங்கி கொடுத்திருக்கீங்க. ஒரு சிமெண்ட் மூட்டைய தோள்ல வச்சாக்கூட தூக்கிக்கிட்டு வருவேன்' என்றார்.

கஷ்டப்படுறவனுக்கெல்லாம் நகைச்சுவை சும்மா பொங்குகிறது.

அவரைப்போல எவ்வளவோ பேர் ஊரில். இவராவது வந்து அடிவானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், எப்போது அதில் இணைவோம் என்பது போல. பலபேர் வீட்டுத்திண்ணையிலேயே முடங்கி விடுவார்கள் , அதுநாள்வரை அவர்களின் ரத்தம் உறிஞ்சிய மனைவியும் மக்களும் தினந்தினம் தலையில் கொட்டுகிற அவமானத்தைத் தின்றுகொண்டு. சங்கிலி போடாதவரை சந்தோஷம்தான்.

நானும் அப்படித்தான் ஆவேன், சந்தேகமேயில்லை. 'உங்கள யாரு போவ சொன்னா? இங்கேயே சம்பாதிங்களேன்..' என்று இப்போதும் அஸ்மா சொல்கிறாள். சம்பாதிக்க முடியாது, மூதலீடில்லாமல் என்று தெரிந்த பிறகுதான் ஆனந்தமாக ஆறுதல் சொல்லலாமே.. ரொம்பவும் வீறாப்போடு பணம் கொண்டுபோனவனெல்லாம் அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் மூளை குழம்பிப்போய் திரும்ப வந்து தொலைவதைப் பார்க்கும்போது எப்படி முடிவு எடுப்பது? என் மூலதனமோ ஒரு புத்தகமாக இருந்து தொலைகிறது.

Recession-இல் மாட்டிக்கொண்டு விழிக்கிற துபாயின் நிலைமையோ கவலைக்குரியதாக இருக்கிறது. வலையுலகில் சில மாதங்களுக்கு முன்பு உலாவிய அலிபாபா ஜோக்கை படித்தீர்களா? இப்போது 'அலிபாபாவும் 30 திருடர்களும்' மட்டும்தானாம். மீதி 10 பேர்? அவர்களுக்கு வேலை போய்விட்டது. நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில் அலிபாபா மட்டும்தான் இருப்பான். அநேகமாக கடவுள் பற்றி தன் 'ப்ளாக்'கில் எழுதிக்கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். அவனிடம் இந்த செய்தியைச் சொல்லவும்: 'மூணு பேர் செய்ற வேலையை ஒரே ஆளா செய்றவனையெல்லாம் ஊருக்கு அனுப்பு' என்றது ஒரு கம்பெனி. முட்டாள் எனக்கு ஆச்சரியம். நண்பர்தான் உடைத்தார். அதாவது, 'பத்து பேர் செய்ற வேலையை ஒரே ஆளா செய்றவங்களை வச்சுக்க' என்று அர்த்தமாம். Gone are the days....

அமெரிக்காவுக்கு விழுந்த அடியில் இங்கே ஆயிரம் 'ப்ராஜக்ட்'கள் நின்று போனாலும் ஆடம்பரங்களை குறைத்துக் கொள்ளாத அரசாங்கம். வெள்ளியில் முக்கிய நரகல் போல விறைத்து நட்டிக்கொண்டு நிற்கும் ஒரு குறி. பெயர் 'புர்ஜ் துபாய்'. 'புர்ஜ்' என்றால் Tower. உலகிலேயே உயரமாம். உலகு எவ்வளவுப்பா உயரம்? அப்புறம்.. சொகுசு மெட்ரோ. Dream Train. 28 பில்லியன் திர்ஹத்தை இதுவரை விழுங்கி விட்டதாம். நாள்குறித்து, நாலே வருடங்களுக்குள் 'கமுக்கமாக' பாதிவேலையை முடித்தது சாதனை. இதற்காகவே நாலுதடவை அது நிற்கலாம். அலுவலகம் அருகேயுள்ள ஸ்டேஷன்களைப் பார்த்து , 'எப்படித்தான் அடியில் இப்படித் தோண்டினார்களோ?' என்று வியந்ததற்கு , 'இதைவிடப் பெரிய குழியை முதலாளி அபு கலிஃபா நமக்கு தோண்டி வைத்திருக்கிறார் யா ஹபீபி' என்றான் ஆறிய கம்பெனியின் 'சூடானி'. அப்படியாவது நாடு முன்னேறினால் சரிதான். இந்த செலவையெல்லாம் யார் தலையில் கட்டுவார்கள்? 'பிஸ்மி' சொல்லி, பஸ் கட்டணத்தை மூணு மடங்கு கூட்டு; 'அட்டை'யாக உறிஞ்சு. ஆச்சா?

'Guardian'ஐ மேற்கோள் காட்டி , 'துபாயில் கஞ்சித்தொட்டி' என்று ஒரு நண்பர் போட்ட பதிவைப்பார்த்த அன்று எனக்கு தூக்கமே வரவில்லை, தெரியுமா? 'அட நீங்க ஏன் கவலைப்படுறீங்க? துபாயத்தான் அபுதாபிட்ட வித்துட்டாரே நம்ம ஷேக்கு..' என்று வேறு திகில் காட்டுகிறார்கள். அரபு நாடுகளை உலகபோலீஸ்களிடம் விற்றுவிட்டதை விடவா திகில்? ஈரானை வைத்து விளையாடும் இன்னொரு 'விளையாட்டு'ம் காத்திருக்கிறது தலைமேல் கத்தியாக. 'போங்கடா எல்லாரும்' என்று எந்த நிமிடம் விரட்டுவானோ? கொஞ்சிக் குலாவிய வெள்ளைக்காரன்களையே 'உங்கள் தேனிலவு முடிந்துவிட்டது' என்று கெஞ்சி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 'ஹிந்தி'யும் பாகிஸ்தானியும் எந்த மூலைக்கு? அதிகம் பேசினால் 'புர்ஜ் துபாய்'-இன் கூர்முனையில் வைத்து பிளந்து விடுவார்கள் பிளந்து.

நிலைமை ரொம்ப மோசம். பார்க்க: டபுள்யூடபுள்யூடபுள்யூ...

பத்துக்கு ஒன்பது வாடிக்கையாளர்களின் காசோலைகள் எங்களுக்கு 'பவுன்ஸ்' ஆகின்றன. அபு கலிஃபாவின் மூஞ்சு அசல் குரங்காக இருக்கிறது. 'மாலிஷ்' (பரவாயில்லை), அல்லா மாலிக்' என்று அவன் சொல்கிறான். ஏனென்றால் ரியல் எஸ்டேட் மன்னனான அவனது காசோலைகளின் கதியும் அதுதான். இந்தநிலையில் எப்படி 'மாஷ்' (சம்பளம்) கொடுப்பான்? மாசி சம்பால்தான் கொடுப்பான் - மாசி வாங்கிக்கொடுத்தால். 'அரபி வாலுலெ தீப்பிடிச்சி' என்கிறான் 'innocent' குரலில் செக்ரடரி. சேட்டா, தீயணைப்பு வண்டிகள் நெருப்பில் சிக்கிக்கொள்கின்றன. பரவாயில்லையே, முந்தைய வரியையே தலைப்பாக இந்தக் கதைக்கு வைத்துவிடலாம் போலிருக்கிறதே. அன்றைக்குக் கூட 'படக்' என்று ஒரு வரி வந்தது. 'சரியான சமயத்தில் வரும் / out of service பஸ் '. ம்.. கம்பெனியால் காசு வருகிறதோ இல்லையோ கச்சிதமாக 'பஸ்க்கூ' வருகிறது. அதையா அஸ்மாவுக்கு அனுப்ப முடியும்? உதைப்பாள், நாலு கால்களால்.

போனமுறை ஊர்போனதே பெரும்பாடு. சொந்த டிக்கெட்டில்தான் போய் வந்தேன். நொந்த உள்ளத்திற்கு ஜக்கரியா மட்டும் ஊரில் இருந்திருக்காவிட்டால் ரொம்பவும் பாடாகத்தான் போயிருக்கும். அவன் உதவியால் கார்ட்டூன்கள் பார்த்து கவலையை மறந்தேன். யாரையும் பார்க்க விடமாட்டான். கெஞ்சிக்கெஞ்சி , பரவாயில்லை ரகமான 'ஜனங்க டி.வி'யில் செய்திகள் பார்த்தேன். 'அடக்குங்க வாப்பா, பார்க்கவே வெறியாவுது' என்பான் அனீஸ்.

'இல்லடா.. நல்ல ப்ரோக்ராம்லாம் இருக்கு இதுலெ.. 'நில்லு, தமிழ்ச் சொல்லு'ண்டு ஒண்ணு. ரொம்ப நல்லாருக்கும். பனியனுக்கு சுத்தமான தமிழ் என்னா தெரியுமா? மெய்யொட்டி. நல்லாருக்கில்லெ?'

'அப்ப ஜட்டிக்கு என்னா, 'கீழ் மெய்யொட்டி'யா? சரியான லூசு வாப்பா நீங்க' - பொரிவான். சீரியல் பார்க்க இயலாத எரிச்சலில் சிரிப்பாள் அஸ்மா, என் மாமியாரோடு. 'மாப்புள வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆவுதே..பயணம் போவலையா? ' என்று கவலைப்படும் மாமியார். அவர்கள் என்னிடம் நேரடியாக சொல்ல மாட்டார்களாம். வெட்கம். உம்மா அப்படிக் கேட்டதாக அஸ்மா சொல்வாள். வெட்கங்கெட்ட நானும் கேட்டுக்கொண்டிருப்பேன். அங்கே, என் வீட்டிலோ , 'ஹை.. Pigமாமா வந்துடிச்சி' என்று என்னைக் கூப்பிடுகிற தன் மகள் வயிற்றுப்பேத்தியின் வாயில் அடிக்காமல் , 'வந்து நாளாச்சே தம்பி..' என்று வம்பளக்கும் உம்மா.. எல்லார் வீட்டு அடுப்பங்கரை ரகஸ்யங்களையும் பேசி முடித்துவிட்டு, 'ம்ம்.. நமக்கு ஏன்மா வீண் பொல்லாப்பு?' என்று முடிப்பார்களாம் என் உம்மா - என் மகள் சொல்வாள். அவ தனி. அவதானி.

'அடுப்பங்கரை ரகஸ்யம்' என்றால் என்னவா? 'நம்ம மச்சான் ரொம்ப நல்லஹதான். ஆனா, ராத்திரி ஒம்பது மணிக்கு மேலெ பேய் புடிச்சிடுது' என்று - அடுப்பங்கரையில் - பேசிக்கொள்ளப்படும் விஷயங்கள்தான். பிடிக்காவிட்டால் இவர்களுக்கு 'பார பைத்தியம்' பிடித்து ஆட்டுகிறதே.. எச்சிப்பிசாசு மாதிரி ஏறி அமுக்குகிறார்களே... அதைமட்டும் ஏன் மறைக்கிறார்களாம்?

நம்ம கதைக்கு வருகிறேன். லூசு என்னை லூசு என்று சொல்லிய அவனை ஓங்கி அறையலாம் என்று வந்தது. கோர்ட்டுக்கு போய்விட்டால் என்னாவது? 'இந்தகாலத்து பிள்ளைகள் தன் வாப்பாக்களிடம் எவ்வளவு ·ப்ரீயாகப் பேசுகிறார்கள்' என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். என் வாப்பாவிடம் நான், என் தம்பிகள் தங்கச்சிகள் அப்படிச் சொன்னதேயில்லை. பயணத்திலிருந்து அவர்கள் வந்தாலே எங்கள் வீடு 'கப்சிப்' என்றாகிவிடும். கண்டிப்பல்ல, மரியாதை. எதிரில் வந்தால் நைஸாக நகர்ந்து விடுவோம். வலிய அவர்கள் எங்களை இழுத்து வைத்து பேசினால்தான் உண்டு. கடைசி சபருக்கு முன்பு வரை அவர்கள் கொண்டுவந்த சாப்பாட்டு ஐட்டங்களைத்தான் மறக்க முடியுமா? டப்பாவில் அடைக்கப்பட்ட பழங்கள்...அப்புறம் , கறுப்பு நிறத்தில் ஒருவித அரிசி... பிசினரிசி என்போம். உம்மா அதை அவித்துச் சமைக்கும் விதம் அற்புதம். காலைப் பசியாறலின்போது அந்தப் பழங்களும் பிசினரிசியும் ரவாவில் செய்த'துல்லிசோறு'ம் கண்டிப்பாக இருக்கும். அதெல்லாம் வாப்பா தினமும் மலேயாவில் சாப்பிடுவது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தால் வாப்பாவின் நண்பரான ஆதம்காக்காதான் என்னிடம் - நான் வேலைதேடி அந்தப்பக்கம் சென்ற சமயம் - சொன்னார்: 'சூப்பு வித்துப் பொளச்சாரு உம்ம வாப்பா இங்கே. மூணு வேளையும் காஞ்சிப்போன ஆப்பம்... எப்பப்பார்த்தாலும் உங்களுவ நெனப்புதான். நீம்பரு எளுதுன காயிதம்லாம் காமிப்பாருங்குனி ரொம்ப பெருமையா..'

ஊரில் காலூன்ற எடுத்த முயற்சிகள் அத்தனையும் சொந்தங்களின் துரோகங்களால் தோற்றுப்போக, தன் பிள்ளைகளாவது பிறந்த மண்ணில் பெருமையோடு வாழ நினைத்த வாப்பா.. ஆனால் பணரீதியாக அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை. படித்துமுடித்த நானும் சென்னையில் முயற்சித்திருக்கிறேன். வெறும் 150 ரூபாயும் ஒரு டேபிளும் கொண்டுபோய் விளம்பர ஏஜென்ஸி வைத்திருக்கிறேன். முக்கியமான வேலை , கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி மானோக்ராம் ஆர்டர்கள் பிடித்து செய்வது. எந்த ஆங்கில எழுத்துக்களைப் பார்த்தாலும் அவைகளை விதவிதமான வடிவத்தில் சேர்த்துப் பிணைத்து வரைவேன். அப்போது உதவவில்லை. ஆனால் அஸ்மாவுடன் சேரும்போது உதவிற்று, பல சுளுக்குகளுடன். எங்கோ போகிறேனே, மண்ணடி மாமேதைகளோடு மாரடித்து சாக்கடையாக சஃபரில் விழுந்த கதையை பிறகு சொல்கிறேன்.

ஜப்பார் நானா சொல்வார் : 'எல்லாம் உம்ம தப்புங்கனி.. ஆண்டவன் ஒமக்கு தனீயா ஒரு தெறமை தந்தான். வரையறது. எங்களாலெ முடியுமா? ஹஜ்ரத்தை வரைஞ்சியுமெ.. எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்லாம் டிரை பண்ணியிக்கிறான்.. ஆனா நீம்பர் வரைஞ்சதுதான் பெஸ்ட்'

'ஏன்?'

'அது ஹஜ்ரத் மாதிரியே இந்திச்சி'

'வேற ஆளை வரைஞ்சிப்பேன் போலக்கிது'

'உம்மை கெடுக்குறதே இந்த எடக்கு பேச்சுதான். அத முதல்ல விட்டுத் தொலையும். இங்கேயே அளகா வளராம.. அரபுநாட்டுக்கு ஓடிட்டியுமே.. - கம்ப்யூட்டர்லெ புடுங்கப் போறேண்டுட்டு'

'அப்ப எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணல நானா. சொல்லமுடியாத கஷ்டம் , அவமானம் '

'கொஞ்சம் பொறுத்துப்பார்த்திருக்கலாம் நீம்பரு. நம்ம ஊருலேர்ந்து ரெண்டுபேரு ஒரேசமயத்துலெ சினிமாவுக்கு வசனம் எழுதப்போனானுவ. பயங்கரமா கஷ்டப்பட்டானுவ. ஒத்தவன் திரும்பிட்டான் முடியாம. ஏன்? அவனுக்கு ஊர்வந்தா சோறு இந்திச்சி. வராம, அங்கேயே நிண்டான்லெ இன்னொருத்தன், அவன்தான் ஜெயிச்சான்'

'யாரு, இந்த குதிரை, நாய்க்குலாம் வசனம் எழுதி சம்பாதிச்சாரே, அவர்தானே?'

'அவனேதான். ஒரு தட்டுல சோத்தை வச்சிட்டு அந்த ப்ரொடியூசர் சொல்வானாம் 'அடேய் சாயபு.. பீய வச்சிருக்கேன் தட்டுல, தின்னு'ண்டு. திண்டிருக்கான் அழுவிக்கிட்டே. ஆனா இண்டஸ்ட்ரிலெ பெரிய ஆளாயிட்டான். பொறுக்கனும், வளர்றதுக்கு'

இதையெல்லாம் எடுத்துச் சொன்ன அவர் ஏன் வளரவில்லை என்று கேட்கச் சொன்னது என் மண்டைப்பூச்சி. பிறக்கும்போதே பிறந்தது. பொறு என்றேன். வேறு என்ன சொல்ல? வளரவேண்டுமே..

கை நடுங்குகிற இந்த வயதில் இனிமேல் என்ன செய்வேன்? நடக்காததை எழுதிப் பிரயோசனம் இல்லை. 'அடுத்த மாசம் துபாய் போயாகனுமே, இந்த மாசத்தை ஓட்டப் பணம் வேணுமே' என்று இந்த கடங்கார வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டு தலைசாய்ந்திருந்த நேரத்தில், ஸ்கூலிலிருந்து திரும்பிய ஜக்கரியா இன்னொரு கேள்வி கேட்டான். வீசினான் என்பதுதான் சரி.

'இன்னும் போவலெ மாமா?' - குழந்தை.

'குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், உங்களிடமிருந்து அல்ல' என்று ஒரு ஞானி சொன்னானே, அதே குழந்தை. 'கழிச்சல்ல போவான், மாமாவ அப்படிலாம் கேக்கக்கூடாது. அஹலுக்கு தெரியாது எப்ப போவனும்டு?' என்று அஸ்மா கடுகடுத்தாள். 'அவனை ஏன் திட்டுறா புள்ளே?' என்றதற்கு 'அப்படித்தான் திட்டுவேன்' என்றாள். ஓ, இவள்தான் வில்லா? உனக்கு ஜக்கரியாவே தேவலாம்டி.. உன்னைத் தெரியாதா? என்னையும் சேர்த்து 'மொத்தமாக' நாலு பேர் இருந்த ஒரு புகைப்படத்தைக் கொடுத்து ,'இணையத்தில் போடப்போகிறேன், தலைப்பு சொல்லு புள்ளே' என்றதற்கு 'மூணு அறிவாளிகள்' என்றவள் நீ. மனைவி மக்களோடு ஊரில் வாழ்பவர்கள் அறிவாளிகள். ரொம்ப கரெக்ட். யாரால் நான் முட்டாள் ஆனேன்?

நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர் என்கிறான் அல்லாஹ். எச்சரிக்கை எண் : எட்டுலட்சத்து ஒண்ணு, நிச்சயமாக. விரோதிகளை ஏன் படைத்தான் என்று கேட்டு விரோதியாக வேண்டாம். விரோதிகள் எதற்கு? சகித்துக்கொள்ளத்தான்.

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தேன். ஒன்றும் ஆகவில்லை - அஸ்மாவின் நெஞ்சு. கவலை வந்தால் அவள் மார்புதான். வராவிட்டாலும் அவள் மார்புதான் என்பது சஃபர் குறிப்பு. எங்கே தொட்டாலும் பால்கோவா போல இனிப்பவள். 'எல்லாம் உங்க குலாப்ஜானுக்குத்தான்' எனும் அஸ்மா நரை தெரியும் இந்த வயசிலும் பேரழகு. ஐஸ்வர்யா அழகாக இருந்தால் எப்படி இருப்பாளோ அப்படி இருக்கிறாள் , இன்னமும். இத்தனை மொபைல் வசதிகள் இருக்கிறதே, மனைவி , பிள்ளைகள் பேசும்போது அவர்களின் மணம் வீசுவது போல ஒன்று கண்டுபிடித்தால் என்னவாம்? அஸ்மாவின் மணம் அன்னாசி, இல்லை, டொரியான் பழம். டொரியான்பழத்தை நீங்கள் சாப்பிட்டதில்லையே? வாப்பா கொண்டுவருவார்கள் அப்போதெல்லாம். குடலைப் புரட்டும் மலநாற்றம் அடிக்கும் முதலில். சகித்துகொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டால் சுவையில் சொக்கி விடுவீர்கள் சொக்கி.

பிள்ளைகளுக்கு என்ன மணம்? அவர்களே மணம்தான். இந்த அரபுநாட்டு வாசம் மட்டும் அடிக்கக்கூடாது. போதும் பட்டது. ஆனால், இயலுமா? ஒரே ஒரு முறை வாப்பா என்னை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். நாகவூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீடு வரை பொங்கிப்பொங்கி அழுதார்களாம். கண்ணெல்லாம் சிவந்து போய்விட்டதாம். உம்மா சிரித்துக்கொண்டே இதைச் சொல்லும்போதெல்லாம் என் கண்கள் சிவக்கும். கண்களால் அவ்வளவுதான் செய்ய முடியும்.

இந்த ஜக்கரியா என்னாவான் ? பத்தாவது முடிப்பதற்குள் வந்து 'பைக் மெஸ்ஸஞ்ச'ராகப் போவானா அல்லது 'ETA'வில் ('எல்லாம் தமிழ் ஆட்கள்' என்பதன் சுருக்கம்) இன்ஜினியர் ஆவானா? என் மகனும் சபராளிதானா? எங்கே? பாத்ரூம் வாசலில் பழியெடுக்க வைக்கும் 'பளபளா' துபாயா? அல்லாவே, வேண்டவே வேண்டாம். சவுக்கடி பட்டாலும் சவுதியே பெட்டர். அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணிவரை ஆளுக்கு 15 நிமிடங்கள் - காலைக்கடனுக்காக - தரப்படுகிற ஒருவரின் 'தேறா' அறையில் ஒரு வேடிக்கை நடந்தது. நிலைமை புரியாமல், புதிதாக விசிட்விசாவில் வந்த ஒருவருக்கு முதல்நாள் 20 நிமிடம் கொடுக்கப்பட்டது. அடுத்தநாளும் அதே 20 நிமிடங்களை அவர் எடுத்தவுடன் பெரிய சண்டை. 'இன்னொரு ஆளோட 5 நிமிசத்தை கடன் வாங்கிதான் நேத்து கொடுத்தோம் - இண்டர்வ்யூ போறீங்களேண்டு. இன்னமே முடியாது , இடத்த காலி பண்ணுங்க'. எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏராளம் உண்டு. பார்க்கிறீர்களா என் பின்பக்கத்தை? இப்போதுதான் தப்பித்திருக்கிறேன், இந்த விஷயத்தில் மட்டும். அலுவலகம் இருப்பது அல்-ரிகா ரோடு என்றாலும் தங்கியிருப்பது அல்-கூஸ். சோனாபூர் மாதிரிதான் இந்தப் பகுதியும். 'Oasis' மாதிரி ஓரிரண்டு 'கேம்ப்'கள் இருந்தாலும் மற்றதெல்லாம் ஆடுமாடுகளுக்கான 'மஜ்பா' (பண்ணை) போன்றது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் - படுக்கையில் bedpan வைக்காத குறையுடன் - அடைபட்டுக் கிடக்கும் இடம். நான் தங்கியிருப்பது , சாக்கடைகள் கருநிறத்தில் மலத்துடன் வழிந்தோடும் ஏரியா. எப்போதும் டேங்கர்களின் உறுமல். கழிவு வெளியேற்ற காசு வசூலித்த அரசாங்கம் கண்மூடியிருப்பதாலும் , காசு வாங்கிக்கொண்டு டேங்கர்களில் அள்ளும் பட்டான்கள் அதை அல்-அவீர் சென்று வெளியேற்றாமல் நைஸாக - அபராதத்திற்கு பயப்படாமல் - இங்கேயே கலந்துவிடுவதாலும் உருவாகும் நரகம். ஐந்து நிமிட மழைக் காலத்திலோ சொல்லவே வேண்டாம். தாங்க இயலாதவர்கள் துணிந்து வீதிக்கு வந்து போராடுவதும் அவர்களைக் கொத்தாக 'cancel' செய்து அனுப்புவதும் நடக்கிறது. இந்த 'அல்-குஸ்'ஸில்தான் எனக்கு தனியறை - நின்றுகொண்டே தூங்க. கம்பெனி உபயம். இதேபோன்ற நிலையில்தான் பத்துவருடம் நான் தங்கியிருந்த ராஸ்-அல்-கோர் பகுதியும் இருந்தது. அங்குள்ள சாக்கடையும் சகதியும் சரியானதும் இங்கே வந்திருக்கிறேன். ரூமை விட்டு வெளியே வந்து நின்றால் வெகு தூரத்தில் கண் சிமிட்டும் ஏழு நட்சத்திர 'Burj-al-Arab'. ஏன் இத்தனை இடைவெளி?

அன்று 'பர்துபாய்' நண்பரின் அறைக்குப் போயிருக்கும்போதுகூட ஒருவன் மூக்கைச் சுளித்துக்கொண்டு சொன்னான், 'இங்கே யாராச்சும் அல்-கூஸ் ஆளு வந்திக்கிறாங்களா?'.

என் கதைகள் நாறுவதற்கான காரணத்தை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கடவுளே, வழியே பிறக்காதா என் தாய்த் திருநாட்டில்? வயதாகி, ஊரோடு ஒரேயடியாகப் போகுபவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை கொடுத்தால் என்ன? மானத்தோடு மரணம் வர மனமிரங்குவானா ஆண்டவன்? பல கேள்விகள்... ' வெறும் ஐநூறு திர்ஹம் சம்பளத்திற்காக பொசுக்கும் வெயிலில் ரோடு போடுகிற, கட்டிடம் கட்டுகிற ஜீவன்களைக் காட்டிலும் உன்னை நல்ல நிலையில்தானே வைத்திருக்கிறேன் , என்னை வணங்கு' என்று கடவுள் சொல்லக்கூடும். தெரியாமல்தான் கேட்கிறேன், வணங்கிய அவர்களை ஏன் அவர் கைவிட்டார்? வணங்கு... இப்படி கேட்டுப் பெறுவது பற்றியே பல கேள்விகள் இருக்கின்றன எனக்கு. 'கேட்காதது கிடைக்காது. கேட்பதும் முறைப்படி கேட்காவிட்டால் கிடைக்காது' என்பார்கள் ஹஜ்ரத்.

'ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை'.. ரொம்ப நல்ல பாட்டு. படம் , ஆயிரத்தில் ஒருவனா? ஏன் இதைக் கேட்கிறேன் என்று தெரியவில்லை. பத்தாயிரத்தில் ஒரு சபராளிக்கு குடும்பத்தோடு வாழும் கொடுப்பினை - ஒரு ·ப்ளாட்டிலிருந்து இன்னொரு ·ப்ளாட்டுக்கு மாறிமாறிப் போய் ஊர் வதந்திகள் பரப்பும் திருக்கூட்டத்தில் 'சங்கம'மாக. லட்சத்தில் ஒரு சபராளிக்கு மட்டும் கேள்வி கேட்காத , கேட்காமலேயே அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுகிற வாழ்வு. பெருமைக்கு எருமை மேய்க்கும் மற்றவனெல்லாம்? செத்தான். வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.. - சிவவாக்கியார். இவர் எப்போ Gulfக்கு வந்தார்டி?

நான் கேட்ட , கேள்விப்பட்ட கேள்விகளை வைத்து கோடிப் பக்கங்கள் எழுதலாம். எதற்கு, எரிக்கவா? நாளாயிற்றே என்று சிறுகதை எனும் பெரும் வதை தந்தேன், அவ்வளவுதான். ஆமாம், கேள்விகளோடு நிப்பாட்டினால் போச்சா? தலைக்குப்புற என்னை விழவைத்த ஒரு பதிலையும் எழுதவேண்டாமா முடிவாக? எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களும் உண்டு. என்ன ஒன்று, நமக்கு அது தாமதமாகத் தெரியும். சமயத்தில், இறந்துபோனபிறகு தெரியலாம். அது எப்படி தெரியும்? என்று கேட்காதீர்கள். அதுதான் சொன்னேனே... வேண்டுமானால் நீங்கள் இங்கே வாருங்கள்.

அந்த பதிலால் நான் அடைந்த அதிர்ச்சிக்கு நிகராக 'மூலம்' சம்பவத்தைச் சொல்லலாம். என்னுடையது அப்புறம், இது வேறொருவருடையது. அப்போது நான் 'கராமா'விலுள்ள ஒரு 'வில்லா'வில் தங்கியிருந்தேன். பழைய அரபி வீடு. அதிலுள்ள நாலு அறைகளில் கிட்டத்தட்ட நூறுபேர் தங்கியிருந்தோம். வாடகைக்குப் பிடித்து அதை நடத்திக்கொண்டிருந்தவரின் ரூமில்தான் நான் இருந்தேன். 'குரங்காட்டி வீடு' என்றால் எல்லோருக்கும் தன் குடும்பத்தைத் தெரியும் என்று பெருமையாகச் சொல்வார். இந்தப் பெருமை எதிலெல்லாம் வருகிறது என்று ஆச்சரியப்பட்டு , பட்டப்பெயரை யாராவது கிண்டல் செய்தால் 'ஆமா.. ஊர்ல உள்ளவன்லாம் குரங்குங்க. நாங்கதான் ஆட்டி வைக்கிறோம்' என்பார். எங்களையும் இங்கே ஆட்டிவைத்துக் கொண்டிருந்தார் - வாடகை விசயத்தில். அதை விடுவோம், வேலைமுடிந்து களைப்பாக நான் ஒருநாள் ராத்திரி வந்தபோது அறையில் யாரும் இல்லை, அவரைத் தவிர. சோகமாக இருந்தார். வயதான குரங்குதான் வந்துவிட்டதே, என்ன சோகம்? 'பட்டக்ஸ்லெ சின்ன கட்டி மாதிரி இந்திச்சிங்க.. மலையாளி டாக்டர்ட்டெ போனேன். 'பைல்ஸ்'ண்டு சொல்லிட்டான்..' என்று சொன்னார். தரையில் அமர்ந்த நான் அசுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருக்கும்போதே.. அவர், அந்த குரங்காட்டி.. 'பாருங்க பாய்' என்று சடாரென்று வழித்து...

அமீரகமே இருளில் விழுந்ததில் அதிர்ச்சியடைந்து சுதாரிப்பதற்குள் - நான் ஏதோ சந்தேகப்படுகிறேன் என்று நினைத்துக்கொண்டு - அடுத்த நொடியில் வேறொன்றும் செய்தார். என் கையை எடுத்து 'அதில்' வைத்துவிட்டார். அடப்பாவி...

இதேபோல அதிர்ச்சியும், அருவருப்பும், பயமும் தந்த பதில். அது கேள்வியா பதிலா? தெரியவில்லை. கேடு கெட்ட சபரில் அதை கேட்டுத்தான் ஆகவேண்டும்.

'பாடாவதி சபர்' என்று சொல்வார்கள். ரொம்ப வருடங்களாக ஊருக்கே போகாதவரை அப்படிச் சொல்வார்கள். பத்திருபது வருடங்கள் கழித்துப் போனால் ஓர் உலக்கையைப் போட்டு அவரை தாண்டச் சொல்லும் ஊர்களும் உண்டு. என்னமோ ஒரு சம்பிராதயம். உலக்கையால் சாத்தாதவரைக்கும் நல்ல சம்பிரதாயம். உள்ளேபோன பிறகு அடிப்பார்களோ என்னவோ. திரும்ப இல்லம் வந்து சேர உதவுவதற்காக , இறைவசனமான 'இன்னல்லதீ ·பர்ள அலைக்கல் குர்ஆன ளராதுக இலா மஆத்'-ஐ , வெற்றிலையால் சுவற்றில் எழுதி (தாளில் எழுதி ஒட்டிவிட்டு, ஒவ்வொருமுறையும் அதை 'டிக்' அடித்துச் செல்லும் சுறுசுறுப்பான ஆட்களும் உண்டு) விட்டுப் போன கணவர் , அத்தனை வருடங்கள் கழித்து - அரை மைய்யத்தாக - வந்தால் அடிக்கவேண்டியதுதான். எதையுமே முழுசா செய்யனும், இல்லையா? ஆறு மாதத்திற்கு மேல் மனைவியைப் பிரிவதே ஹராம். இது ஹதீஸ் அல்ல, காமம் தாங்காமல் படுக்கையை திட்டிப் பாடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக்கண்டு அதிர்ந்து , இரவில் நகர் உலா சென்ற கலிஃபா உமர் ரலியல்லாஹ் அவர்கள் , வெளிநாட்டிலிருந்த தன் படைகளுக்குப் போட்ட உத்தரவு - ஆயிரத்து முன்னூத்தி சொச்சம் வருடங்களுக்கு முன்பு. தனது மகளும் ரசூல் (ஸல்) அவர்களின் மனைவியுமான அன்னை ஹ·ப்ஸா அவர்களிடம் கேட்டபிறகுதான் அந்த ஆறு மாதக் கணக்கு தெரிந்ததாம் உமருக்கு. என் அஸ்மாவே சொல்கிறாளே, 'ஆறு மாசத்துக்கு மேல தாங்கலம்மா...' என்று.

'இஸ்லாமிய' நாடுகளுக்கு இதெல்லாம் தெரியாதா? தெரியும். ஆனால் 'தொழில்வளம்' பெருக வேண்டுமே... அதனால்தான் , துள்ளும் எங்கள் துபாய் 'இங்கேயே தணித்துக்கொள்வீராக' என்று தெருவுக்கு நாலு 'ஹோட்டல்கள்' வைத்திருக்கிறது. கோடம்பாக்கம் மஜூதித்தெரு கிராக்கிகள் ஒரு லட்ச ரூபாய் ஒப்பந்தத்தில் வந்து குத்தாட்டம் போடுவதெல்லாம் அங்கேதான். கொஞ்சம் மிஞ்சுதையும் குடியோடு அங்கே கொட்டுகிற, அல்லது அரபி வீடுகளில் வேலைக்கு வந்து சாகும் பல்வேறு ஆசிய இனப் பெண்களை அப்படியே 'செட்-அப்' செய்து விழுந்து கிடக்கிற மசுரான்கள் - ஐய்யய்யோ , இப்படிலாம் வெளிப்படையா எலக்கியத்துல எளுதலாமா? - ஊர் எப்படிப் போகமுடியும்? உயிரைத்தான் விடமுடியும். இழுத்து மூடப்படும் கம்பெனிகளால் வேலை இழப்பு என்கிற வெலவெலப்பு வேறு... மனநோயாளிகளாகி, தற்கொலைகளும் அதிமாகிவிட்டன என்பதால், இந்தியத் தூதரகத்தோடு இணைந்து - ஓர் இஸ்லாமிய அமைப்பு இங்கே 'கவுன்ஸிலிங்' மையம் தொடங்கிற்று சென்றமாதம் - 'உண்மை உணர்' என்ற பெயரில். இந்த மாதம் உண்மையிலேயே எண்ணிக்கை கூடிவிட்டது. மையங்களைச் சொன்னேன்.

வாழ்பவர்கள் பக்கம் வருகிறேன். பொறுப்பு, கடமைகள் என்று என்று தன்னை அடக்கிக்கொண்டு பல கனவுகளோடு வாழும் சில 'பாடாவதி'க் கேசுகள் பக்கம்.

30 வருடமாக ஊருக்கே போகாதவர்களில் ஒருவர் அவர். எந்த ஊர்க்காரர் என்பது முக்கியமல்ல, இங்கே அவர் இருக்கும்போது ஊரில் அவருக்கு ஏழெட்டு பிள்ளைகள் பிறந்தது முக்கியம். தன்னால் இயலும்போது - குப்பை பொறுக்கியாவது - மனைவிக்கு பணம் அனுப்புகிறார் இப்போதும். 'புள்ளைங்க என்ன பாவம் செஞ்சிச்சி தம்பி?' என்று அவர் கேட்கும்போது அழுகை வந்துவிடும் - அவருக்கும் , நமக்கும். பெரும்பாலும் அவரைப் பள்ளிவாசலில்தான் பார்க்கலாம். ·பாத்திஹா ஓதும் இடங்களிலும் பார்க்கலாம். 'வத்னி மரைக்கார்' என்று கேலியாக அவரைச் சொல்வார்கள். மண்ணின் மைந்தனான அரபியைத்தான் 'வத்னி' அல்லது 'லோகல்' என்று சொல்வது வழக்கம். விசாவெல்லாம் காலாவதியாகி எத்தனையோ வருடங்களாகி , எந்த 'லேபர்' அதிகாரிகளிடமும் மாட்டாமல், ஷார்ஜா, அல்-ஐன், அபுதாபி என்று என்று இங்கேயே - இறைவனின் அளப்பரிய கருணையால் - உழன்றுகொண்டு வரும் இவருக்கும் அந்தப் பெயர். இருக்கட்டும், 'ஏர்போர்ட்டுலேந்து நே..ரா நை·ப் ரோட்டுக்கு வந்து இறங்குனவன் அத்தனை பேரும் அவுட்' என்று கிண்டலாக சொல்லப்படும் நை·ப் ரோட்டில் ('மதறாஸி'கள் கூடும் இடம்) அந்த வத்னி மரைக்காரிடம் ஒருவர் கேட்டார்: 'ஏன் ஊருக்கே போவலெ நீங்க?'. 'ப்ச்.. வுடுங்க தம்பி'. 'ஏன்?'

'போனாலும் திரும்பிதானே வரனும்?' என்றார் வத்னி மரைக்கார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R