சுந்தர ராமசாமி- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -


பதிவுகள் மார்கழி 2005 இதழ் 72
1. சு.ரா - ஒரு சாமன்யனின் குறிப்புகள்! - நேசகுமார் -

சுந்தர ராமசாமி இறந்ததை எனக்கு முதலில் அறிவித்தது அரவிந்தன் நீலகண்டன் தான். நாகர்கோவிலிலிருந்து அழைத்து, “சுரா இறந்துவிட்டாராம்” என்றார். நான் அவரது குரலில் வேறேதேனும் தொணி தென்படுகிறதா எனக் கவனிப்பதில் மும்முரமானேன். எதிர் முனையில் தென்பட்ட அமைதி, அவரும் என் மனவோட்டத்தை கணிக்க முற்படுகின்றார் என்பதைக் காட்டிற்று. அதன் பின்னரே ஏனைய நண்பர்களின் தொலைபேசிகள், சன் டிவி செய்தியில் அவரது கண்ணாடிக்குள்ளிருக்கும் உடல், மிகச் சிலரே அவ்வுடலைச் சுற்றியிருக்கும் காட்சி போன்றவற்றைக் காணவும், மத-சாதி அடையாளங்களும் சம்பிரதாயங்களுமின்றி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதை சன் டிவி செய்தி வழியாக கேட்டறியவும் முடிந்தது.

சுந்தர ராமசாமி பற்றி எப்போது அறிந்தேன்? காலச்சுழலில் பின்னோக்கிப் பயணித்தால்  வைதேகிக்கும் ஷோபனாவுக்கும் இடையே இருந்த பகைமைதான் சு.ராவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது என்பது நினைவிற்கு வருகிறது. வைதேகி தனது தாழ்வுணர்ச்சிகளை மீறி வெளிவருவதற்கு பயன்படுத்திய பல ஆயுதங்களுள் சுந்தர ராமசாமியும் ஒன்று - அவரது ".ஜே சில குறிப்புகளையும்", புளியமரத்தின் கதையையும் அடிக்கடி கையில் வைத்திருப்பார் - என் போன்ற ஞானசூன்யங்களுக்கும் அவற்றை அறிமுகப் படுத்தி வைத்தார். வைதேகி, தொண்டாம்புதூர்க்காரர். ஷோபனாவோ, திருச்சிக்காரர். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நவநாகரிக நங்கைக்கான குணாதிசயங்கள் மற்றும் அழகென நாங்கள் கருதிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் - பாலகுமாரன் ரசிகை.

வைதேகிக்கு சென்னை பிரமிப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில் சூட்டிகையான பெண் எனப் பெயரெடுத்தவர். வீட்டில் பதக்கங்களாகவும், சர்ட்டிபிகேட்டுகளாகவும் வாங்கிக் குவித்து தான் மற்றவர்கள் அனைவரிலும் சிறந்த பெண் எனப் பெயரெடுத்தவர். திடீரென்று சென்னைக்கு வந்தது அவரை மிகுந்த குழப்பத்திற்கும் மன சஞ்சலத்திற்கும் உள்ளாக்கியிருக்க வேண்டும். கல்லூரியில் முதன்முதலில் அறிமுகம் ஆகும் ஒரு நட்புக் கூட்டம் கடைசி வரை நீடிக்கும். இந்த கூட்டம் உருவாவது முழுக்க முழுக்க விபத்தே என்றாலும், அதனிலிருந்து பிய்த்துக் கொண்டுபோய் வேறு குழுவில் சேரமுடியாது - அது துரோகமாக அனைத்து குழுக்களாலும் கருதப்படும் - இது எங்கள் கல்லூரியின் எழுதா விதி. நான் நினைக்கின்றேன், எங்கும் இதே நிலைதான் என்று.

இந்த எழுதா விதியே வைதேகிக்கு கடைசி வரை - ஏன் இன்று வரை பிரச்சினையாயிருக்கின்றது. வைதேகி உயர்வதற்கும் காரணமாயிருக்கின்றது. அன்றோ, பாலகுமாரனை வீழ்த்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் வைதேகிக்கு. சு.ரா கையில் அகப்பட்டார். அப்போதெல்லாம் ஜெயமோகன் பற்றி யாரும் அறிந்திரா காலம். அவர் அப்போதெல்லாம் மும்முரமாய் ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழான 'விஜயபாரதத்தில்' கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார் என்று இப்போது அரவிந்தன் சொல்லித்தான் தெரிகிறது. இல்லையேல், தம்மை அறிவுஜீவி என்று நம்பிக்கொண்டிருந்த தமிழ் கருத்துலகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் அன்றே ஜெயமோகனை நன்கு அறிந்திருக்கலாம்,  பாலகுமாரனை வீழ்த்த ஜெயமோகனை வைதேகி பயன்படுத்தியிருந்திருக்கலாம்.

ஏறத்தாழ தமிழகம் முழுவதுமே இந்தமாதிரி ஒரு வைதேகி - ஷோபனா மனோநிலை இருந்தது என நினைக்கிறேன். சற்றே கிளர்ச்சியை ஆன்மீகத்துடன் சேர்த்து குழைத்து அடித்து, லாவகமாய் எழுதி வெகுஜன இதழ்களில் பவனிவந்து கொண்டிருந்த பாலகுமாரன் , புதுமையாக எதையாவது செய்யும்  நாகரிகமாய் ஜொள்விடும் சுஜாதா - இவர்கள் பெயர்களைக் கேட்டாலே அந்தக்கால ரம்பைகளின் காதில் ரிங்டோன் ஒலித்த காலமது. இவர்கள் மட்டுமல்லாது கிட்டத்தட்ட இதே மாதிரி ரகத்தில் எழுதிவந்த ஏராளமான எழுத்தாளர்களின் எழுத்துக்களை வார, மாத இதழ்களிலும், பஸ் ஸ்டாண்டுகளிலும், புகையூர்தி நிலையங்களிலும் மாய்ந்து மாய்ந்து வாங்கிப் படித்து, இவர்களின் அலட்டல்கள், டாம்பீகங்களையும் மீறி உள்ளே பார்த்து ஒன்றுமில்லை என்று உள்ளுக்குள் சலித்துப் போயிருந்த நேரத்தில் அறிமுகமானார் கி.ராஜநாராயணன். தொடர்ந்து ஒரே பாணியில் வந்த கரிசல் கதைகளும் பிறகு சோர்வைத் தர,  திடீரென வந்து நின்றார் சு.ரா, ஸ்டைலாக. தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் கொள்ள முனைந்த, தம்மை வித்தியாசமான அறிவுஜீவி என்று எண்ணிவந்த அனைவரிடத்தும் சு.ரா வந்தமர்ந்து கொண்டார்.

அவரது ஆக்கங்களுள் நான் முதலில் எதைப் படித்தேன் என்று நினைவில் இல்லை. புளியமரத்தின் கதையா, ஜே.ஜே சில குறிப்புகளா - தெரியவில்லை. ஆனால், நினைவில் நிற்பது ஜே.ஜே சில குறிப்புகள் தான். இன்னும் சொல்லப் போனால், இன்றுவரை எனது நினைவில் ஆழமாய் பதிந்து போயிருப்பது ஜே.ஜே சில குறிப்புகள் தான். அதுதான் சு.ராவின் இயல்பான ஆக்கம் என நினைக்கின்றேன். மற்றதெல்லாம், கி.ராஜநாராயணின் வெற்றியைக் கண்டு ஒரு ·பார்முலாவை உருவாக்கிய வணிக யுத்தி என்றே தோன்றுகிறது - நான் தவறாயிருக்கலாம். தமிழ்கூறும் நல்லுலகத்தின் நல்லுலகமாம் அறிவுஜீவி உலகம் முழுக்க மாய்ந்து மாய்ந்து புகழ்ந்து கண்ணீர்விட்டு கதறும்போது அது தானே உண்மையாயிருக்க முடியும்?

தீபாவளிக்கு முதல்நாள் வாழ்த்துக்களைச் சொல்ல ஜெயமோகனை தொலைபேசியில் அழைத்த போது அவரது குரல் கம்மியிருந்தது. தீபாவளியை கொண்டாட மனமில்லாமல் இருப்பதாகச் சொன்னார். எனக்கு இது புரிந்து கொள்ள முடியாதபடி இருந்தது. ஜெயமோகனிடம் எனக்கு அவ்வளவாய்ப் பரிச்சியம் இல்லாவிட்டாலும், மற்றவர்களிடமிருந்து கேட்ட தகவல்களை வைத்து நிறுவனமாய் நிமிர்ந்து நிற்கும் எந்தவொரு கருத்தும், குழுவும் பிறரை விழுங்கியே நிமிர முடிகிறது என்னும் முடிவுக்கு வந்திருந்தேன்  அது தமிழிலக்கிய உலகிலும் அசாதாரண இயல்பு நிலையோடு நிலைகொண்டிருப்பதைக் குறித்து அடிக்கடி கவலையும் கொள்வதுண்டு.

இதன் மிகச் சிறந்த உதாரணம் ஜெயமோகனின் முயற்சிகள் பலவந்தமாக பலவித வழிமுறைகளைப் பிரயோகித்து முடக்கப் பட்டது என்பது எனது எண்ணமாயிருந்தது. ஆங்காங்கே கேட்டிருந்த இப்படிப் பட்ட தகவல்களின் பிண்ணனியில் எனது மனதில் உருவான ஒரு சித்திரக் கோர்வைக்குப் புறம்பாக அவர் நடப்பது வியப்பாக இருந்தது.  பேசும்போது சு.ராவைப் பற்றிய ஒரு புத்தக உருவாக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக ஜெயமோகன் கூறினார். அன்றிலிருந்து அடிக்கடி இந்த முரண் குறித்து எதாவது சிந்தனை எழுந்துகொண்டே இருக்கிறது.

சமீபத்தில் என்னிடம் அரவிந்தன், ஜெயமோகன் 'திண்ணை'யில் சு.ரா குறித்து கட்டுரை எழுதியிருப்பதாகக் கூறினார். படித்துப் பார்க்க விருப்பமில்லை எனக்கு. அப்போதுதான் 'உயிர்மை' இதழில் சு.ரா பற்றிய அவரது நீண்ட கட்டுரையைப் படித்து, அது நினைவஞ்சலியா, வசவா, புலம்பலா என்று புரியாமல் ஆனால், சு.ரா பற்றிய எனது உடைந்து போன பிம்பம் சரியே என்ற திருப்தியோடும், இது போன்ற விபரீத திருப்தியால் விளையும் குழப்பத்தோடும் இருந்தேன்.

ஆனால், அரவிந்தனிடம் நான் கேட்டது வெங்கட் சாமிநாதனின் ரியாக்ஷன் குறித்து. அவர் சலனமேயில்லாமல் இருந்தார் என்றார். வெங்கட் சாமிநாதனின் நேர்மையை பாராட்டத் தோன்றியது. தமக்கு வக்கீல் நோட்டீஸ் கிட்டிய பின்னர் வெங்கட் சாமிநாதனுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஏனோ திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றது. இந்தியத் தந்தைகளுக்கே உரிய புத்திர பாசம் என்கிறார் ஜெயமோகன், தமது உயிர்மை கட்டுரையில். ஆனால், அதையும் மீறி ஒரு வணிகரின் மற்றொரு முகம் என்றே எனக்குத் தோன்றுகிறது, அடிக்கடி.

சு.ரா தமது அந்திமக் காலத்தில் சந்தித்த சரிவு மிகப் பிருமாண்டமானதுதான். எப்படி என் போன்ற சாமான்யர்கள் மத்தியில் திடீரென்று தோன்றி ஒரு பிரும்மாண்ட மனிதராக உயர்ந்து நின்றாரோ, அதே போன்று மிகக் குறுகிய காலத்தில் ஒடுங்கி, சுருங்கி, மறைந்தே போனார். அதை நினைத்துப் பார்த்தால், இந்த வீழ்ச்சி வாழ்க்கைக்கே உரிய சாபக் கேடு எனத் தோன்றுகிறது. அல்பாயுசில் இறந்து போகும் பாக்கியவான்களுக்கு மட்டும் தான் வீழ்ச்சி கிடையாது. அல்லது, ஒவ்வொரு தாழ்வான செயலுக்குப் பின்னாலும் மனித குலத்திற்கான கடவுளின் மகத்தான திட்டம் இருக்கிறது என்று பித்தலாட்டம் செய்யும் மதவாதியாக இருக்க வேண்டும். இந்த இருவகை மனிதர்களுக்குத்தான் சரிவே கிடையாது. பிந்தயவர்க்கத்தைச் சார்ந்த ஜென்மங்களுக்கோ  போகப் போக இந்த போலி பிம்பமும் பிரம்மாண்டமாகும் வாய்ப்பும் இருக்கிறது. சாமான்யர்கள் எப்போதுமே தமது தலைவர்களையும் சாமான்யர்களாகப் பார்க்க விரும்புவதில்லை. அவர்களிடம் தம்மையும் மிகுந்த ஒரு அமானுஷ்ய சக்தி அடங்கியுள்ளதாகவே நம்ப விரும்புகின்றனர். எந்தச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ் இலக்கிய உலகமும் இத்தகைய மனோநிலை கொண்டதுதான். என்ன ஒரு வித்தியாசம், அங்கே பாமரர்கள் தலைவர்களை அதிசக்தி கொண்டவர்கள் என்று நம்பி போஸ்டர் ஒட்டி, பெஞ்சாதி தாலியை அடகுவைத்து மாநாடு சென்று தலைவனை அல்லது தலைவியை தூரத்திலிருந்தே பார்த்து மெய்மறந்து போக, இங்கேயோ இவர்கள் தம்மையே அமானுஷ்ய ஜீவன்களாக நம்பி மெய்மறந்து செயல்படுகின்றனர். அப்படி தம்மைத் தேவதூதர்களாக நம்பி செயல்படும்போது தமது செயல்பாடுகளின் அபத்தம் இவர்களுக்குப் புரிவதில்லை.

ஒரு சிலரிடம் எனக்குக் கிடைத்த அறிமுகம் ஏற்படுத்திய அதிர்ச்சி இதுநாள் வரை நீங்கவே இல்லை. எது இலக்கியம் என்று கூடிப் பேசிய பின்னர் நிதானமிழக்கும் வரை தண்ணியடிப்பது, பிறகு பார்க்கின்றவர்களிடமெல்லாம் நான் இத்தனை இலக்கியவாதிகளூடன் சேர்ந்து தண்ணியடித்துள்ளேன் என்று மார்தட்டிக் கொள்வது, பலபேர் கூடியிருக்கும் இடங்களில் கொச்சையான வார்த்தைகளைக் கொட்டி அது தாம் பெரிய கலகவாதியென்பதின் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லி தமக்குத் தாமே உச்சி முகர்ந்து  கொள்வது, மற்ற இலக்கியவாதிகள் அனைவரையும் எப்பாடு பட்டாவது மட்டம் தட்டுவது , அதற்கு அவர்களது தனிப்பட்ட வாழ்வு, சம்பவங்கள், ஜாதி, உபஜாதி, ஜாதி உருவான மூலம் என்று எவ்வித புல்லையும் ஆயுதமாக்கிக் கொள்வது, அல்லது இத்துனை பெண் ரசிகைகள் தமக்கு அல்லது இத்துனை என்.ஆர்.ஐ க்கள் தமது ரசிகர்கள் என்று எதையாவது சொல்லி செல்லுமிடமெல்லாம் சுயதம்பட்டமிட்டுக் கொள்வது என்று அரசியல்வாதிகளையும் மிஞ்சும் நபர்கள் இவர்கள்.

இக்குழுக்களில் இயங்கும் அரசியலும் வெகுஜன அரசியலை விடவும் மிகவும் நுட்பமானது, அது என் போன்ற சாமான்யர்களால் கிஞ்சித்தும் கணிக்க முடியாததாகவே இன்றும் இருந்து வருகின்றது. தமிழக அரசியல் குறித்தாவது சில வெதர் ·போர்காஸ்டிங்குகளை செய்யலாம் – சோனியா ஜெயலலிதாவை பக்கத்திலேயே சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று சொல்லலாம் அல்லது அதையும் விட சேபாக பந்தயம் கட்ட வேண்டுமென்றால் ஜெயலலிதா கருணாநிதி அவர்களிடம் கூட்டே வைத்துக் கொள்ளமாட்டார் என்று சொத்தை பணயம் வைக்கலாம். ஆனால் தமிழிலக்கிய உலகில் ஏற்படும் கூட்டுறவுகள், நமது அரசியல்வாதிகளின் தேர்தல் நேர ஸ்டண்டுகளையும் விடவும் அதிர்ச்சியை அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

சு.ரா அறிமுகமான பிறகு எனக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி அவர் பிராமணர் என்பது. தமிழர்களுக்கு உள்ளூர பிராமணர்கள் மீது பிரியமும், மதிப்பும், அட்மைரேஷனும் கூடவே இவற்றை எல்லாம் மீறும் அளவுக்கு பொறாமையும் உண்டு என்பது எனது எண்ணம். அடிக்கடி நமது சமூகத்தின் பல தளங்களிலும், விவாதங்களிலும் தலைதூக்கும் பிராமண எதிர்ப்பு வெறுப்பால் விளைந்தது அல்ல. பொறாமையின் வெளிப்பாடு. ஒவ்வொரு துறையிலும் ஆதர்ஷ புருஷனாக அல்லது புருஷியாக ஒரு பிராம்மணரே தமிழர்களுக்கு இருப்பார். அது ஜெயலலிதாவாகட்டும், மணிரத்னமாகட்டும், சுந்தர ராமசாமியாகட்டும். தமிழர்களுக்கு ஜாதி-மத வித்தியாசங்களைத் தாண்டிய பிராமணப் ப்ரேமம் உண்டு.

சு.ரா பிராமண அடையாளங்களை முற்றிலும் துறந்தவர் என்கிறார் ஜெயமோகன். ஆனால் எனக்கோ, சுரா இந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றதன் பின்னே அவரது பிராமணத்துவமே இருக்கிறது என்றே படுகிறது. பிராமணர்களாலேயே, சூழ்நிலையிலிருந்து தனிமைப் படுத்திக் கொண்டு ரொமாண்டிக்காக எதையும் பார்க்க முடிகிறது. பிராமண எழுத்தாளர்கள் குரூரமாக வன்முறையை ரசிப்பது கிடையாது. ஜெயமோகனுக்கும் சுராவுக்குமான மிகப் பெரிய வித்தியாசமாக இதையே நான் காண்கிறேன். பிராமணர்கள் வன்முறையை விவரிக்கும் விதம் கூட ஏசி சினிமாவிலிலிருந்து ?¡லிவுட் படச் சண்டையை டிடிஎஸ் சவுண்ட் எபெக்டில் ரசித்துப் பார்ப்பது போன்றிருப்பதாலேயே, அவர்கள் எழுதுவதை மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுகிறது. வன்முறை தமிழ்நாட்டில் விலைபோகாது. ஈழப் பிரச்சினையைப் பாருங்களேன், நாம் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம். வலியையும் பார்ப்பதற்கு உள்ளத் துணிவு வேண்டும். அது நமக்குக் கிடையாது.

ஒரு முறை, சிறு வயதில் எங்கள் வீட்டில் பெண்டிர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தது நினைவுக்கு வருகிறது. எனது அம்மாயிக்கு இழவு வீட்டில் கண்ணீர் வராது - பொதுவாகவே அவர் கண்ணீர் விட்டு நான் பார்த்ததில்லை. மிகவும் வலுவான பெண்மணி அவர்.

ஆனால், இது இழவு வீட்டில் பெரிய பூசல்களைக் கிளப்பும் காரணியாயிருந்தது அந்தக் காலத்தில். நடவு நடும் பெண்களிடம் மரக்கால் நெல் கொடுத்து மாரில் அடித்து அழு என்று சொல்லி, அழுகையினூடே எந்தப் பெண்ணின் நெஞ்சு அதிகம் அடிபடுகிறது என்று பண்ணை வீட்டுப் பெண்டிர் கணக்கெடுத்துக் கொண்டிருந்த காலம் அது.

எனது அம்மாயி அதற்கு ஒரு உபாயத்தை கண்டுபிடித்திருந்தார். வீட்டில் நுழையுமுன்னரே அவரது எழவுப்பாட்டு ஆரம்பித்து விடும். அந்தப் பாடலின் உரத்த ஓசையில், சொல் நயங்களில், அவரது கண்ணீரின்மை மற்றவர்கள் கவனத்திற்கு வராது. அவர் எப்போது வருவார் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கு அளவுக்கு நிலைமையை புரட்டிப் போட்டது அவரின் இந்த யுத்தி. இழவு வீட்டுக்குச் செல்வது ஒரு கடன், அங்கு ஓலமிடுவது ஒரு சமூக அங்கீகாரத்திற்கான கருவி, நமது இருப்பை நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கு நினைவுறுத்த ஒரு வாய்ப்பு என்பது நான் அங்கு கேட்டது. சுராவின் மறைவைத் தொடர்ந்து வரும் கட்டுரைகள், அழகிய அட்டைப் படங்கள், விளம்பரங்கள், விற்பனைகள் இதையே இன்று என் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. நானும் இதற்கு விதிவிலக்கல்ல!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 

பதிவுகள் ஜனவரி 2006 இதழ் 73 -
2. சுந்தர ராமசாமி சில குறிப்புகள்! - சுப்ரபாரதிமணியன் -

சுந்தர ராமசாமிஇவ்வாண்டின் கதா திருவிழா ஜனவரி 6-11  டெல்லியில் நடைபெறவுள்ளது. சுந்தரராமசாமிக்கு மறைவின் போது 75 வயது....வயதைமீறின உற்சாகம் அவரிடமிருந்து இளைய  தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய விடயம். சென்றாண்டில் தில்லியில் அவருக்கு " கதா சூடாமணி " விருது வழங்கப்பட்ட ஒரு வார கதா திருவிழாவின் போது 50 ஆண்டுகளுக்குள் காணப்படாத மோசமானக் குளிரிலும் பெரும்பான்மையான நாட்களில் அவர் கதா திருவிழா அரங்குகளின்  நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அவருக்கு அளிக்கப்பட்ட உயரிய விருது அது. அவரின் உரைநடையில் காணப்படும் எள்ளலும், நகைச்சுவையுடன் காணப்பட்டார். வட நாட்டு படைப்பாளிகளுக்கு தமிழ் படைப்பாளிகளை மனம் திறந்து பாராட்டி அறிமுகப்படுத்தியவண்ணம் இருந்தார். இடையில் சாகித்ய அகாதமியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒரு நாள் மாலை ஏற்பாடகியிருந்தது. அப்போது அவர் காட்டிய உற்சாகமும் அவர் கட்டுரை வாசித்த விதமும் அவரை இளையவராகவே காட்டிக் கொண்டிருந்தது.  " கதா விருதுக்கு பத்தாண்டு ஆகிறது. இவரையும், ஜெயமோகனையும்தான் முதல்   கதா விருதுக்கு   சிபாரிசு செய்திருந்தேன். இருவரும் முதலாண்டில் பரிசு பெற்றிருந்தார்கள்." என்பதை என்.எஸ்.ஜெகநாதனிடமும், கீதா தர்மராஜிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்.

" மறக்க முடியுமா அதை. இவரின் ' இடம் ' கதை ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்ற பின் உள்ளூர் ஆங்கிலப்பத்திரிகக்கைகளிலும் வெளிநாட்டு இதழ்களிலும் அதிகம் மறு பிரசுரம் ஆனதிற்கு காரணம் அக்கதையின் எளிமையும், தீவிரமான களமும்தான். அந்த ஆண்டில் மலையாளத்திலிருந்து  எம்.டி .வாசுதேவநாயரும், என்.எஸ்.மாதவனும்  கூட ஒருங்கே பரிசு பெற்றதையும் மறக்கமுடியாதே " என்றார் கதா இயக்குனர் கீதா தர்மராஜன். கதா சூடா மணி  பரிசளிப்பு ஏற்புரையை தமிழிலேயே  குறிப்பிடத்தக்கதாய் வழங்கினார். கதா பரிசு ஒரு வார விழாவின்போது உறைந்த பனிமூட்டத்தினூடே அவர் உருவம் தோன்றி மறைந்து நண்பர்களுக்கு  உவகை தந்து கொண்டுருந்தது . பனி மூட்டத்தினூடே அது நிரந்தரமாகிவிட்டது.  

கனவு 17 ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் அது செக்கந்திராபாத்திலிருந்து வர ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே அவர் 'கனவு'க்கு கவிதைகள் அனுப்பிருந்தார். வெளி மாநிலத்திலிருந்து வரும் இலக்கிய இதழ் என்ற முறையில் அதன் மீதான அக்கறை இருந்தது. 'கனவி'ன் சில இதழ்களின்  கடைசி சில பக்கங்கள் செக்கந்திராபாத் எழுத்தாளர்களுக்கானது என்ற அளவில் அந்த சிறு சமரசம் தேவைதானா என்றக் கேள்வியை எழுப்பியதாக   என்னிடம் ஜெயமோகன் தெரிவித்தார். அதன் பின் அந்த உள்ளூர் பக்கங்களை  கைவிட்டேன்.  எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு  "மாறுதடம்"  அட்டையில்  எனது சிறுகதைகள் பற்றின அவரது அபிப்பிராயத்தை காவ்யா சண்முகசுந்தரம் அச்சிட்டிருந்தார்.   " ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்பில் இவ்வகை வாசகங்கள்  அட்டையில் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில்  சுராவின் கருத்து இடம் பெற்றிருப்பது சிறப்பானது " என்று சொன்னார் சண்முகசுந்தரம்.

காலச்சுவடின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்ற போது அவரை சந்தித்தேன். சுகந்தியின் கவிதை   காலச்சுவடு கவிதைகள்   தொகுப்பில் இடம் பெற்றிருப்பதும் அப்பிரதியை கூரியரில் அனுப்பியது ஏனோ திரும்பி வந்ததையும்குறிப்பிட்டு சிபிச்செல்வன் பிரதி தந்தார். அப்போது காலச்சுவடில்  வெளிவந்த எனது சிறுகதை "ரூபங்கள்" பற்றி நினைவு கூர்ந்து சிலாகித்தார் சுந்தரராமசாமி. அன்று அவரின் பேச்சு காலச்சுவடு கவிதை தொகுப்பு பற்றினது.  எது கவிதை என்பதை விடஎது கவிதையில்லை என்பது பற்றினதாக அவரின் பேச்சு இருந்தது. எள்ளலும், நகைச்சுவையுமான பேச்சு சுவாரயஸ்யமாக இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த சில இடதுசாரி நண்பர்களுக்கு கவிதை பற்றின அவரின் விளக்கம்  உவப்பானதாக அமைந்திருக்கவில்லை. எரிச்சல் அடைந்தனர்.கவிதையை ரசனையோடும், வாழ்க்கையின் தரிசனமாகவும் பார்த்த அவரின் இலக்கிய பார்வை மீது வறட்டு இடதுசாரிகள் எரிசல் அடைவது சாதாரணம் தான்.

"சாந்தி" போன்ற இடதுசாரிப்பத்திரிக்கைகளில் இடம் பெற்ற அவரின் ஆரம்ப சிறுகதைகளை முன் வைத்து அவரின் படைப்பின்  முற்போக்கு திசையையும், படைப்பாளுமையையும் மனித நேயப்பண்பையும் அவரின் மறைவின் போது இடதுசாரித் தலைவர்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைகள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் கட்சி சார்ந்த இலக்கிய அமைப்புகளில் இடம் பெறாத எழுத்தாளர்களுக்கு நேரும் பல்வகை புறக்கணிப்பும் அவர்கள் மீதான் அவதூறும் கீழான் விமர்சனங்களும் சுந்தரராமசாமிக்கு  வாழ்க்கை முழுவதற்கும் நேர்ந்திருக்கிறது.அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஸ்மராய் இவ்வகை அவதூறு அம்புகளைத் தொடர்ந்து சுமந்தபடியே அவர் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். இது அவரை வேதனைப்பட வைத்திருந்தாலும்  தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு தமிழ் பிரதேசத்திற்கு அப்பால் நிகழ்ந்த அவமானங்கள் அவரைக் குப்புறத்தள்ளி  இருக்கிறது. தனிப்பட்டத் துயரங்கள்  மீறிமொழி சார்ந்த அவமானங்கள் அவருக்கு நிரந்தரப் புண்களாகி விட்டுருக்கிறது.இந்தப் புண்களை ஆர்ற வேண்டி அமரத்துவப் படைப்புகளில்  அக்கறை கொண்டு எழுத்தியக்கத்தில் ஈடுபட வேண்டி இருந்திருக்க வேண்டி இருந்திருக்கிறது. வறட்டுத்தனம், வியாபார நோக்கம் கொண்ட படைப்பாளிகளை எரிச்சலடையச் செய்வதும்,  வாழ்க்கையினை தரிசனமாக கொண்டதை  தனது படைப்புகளின் மூலம் முன் நிறுத்துவதும் அவரின் வாழ் நாள் இலக்கியப்  போராட்டமாக இருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் நவம்பர் 2006 இதழ் 83
3. சு.ரா.வுக்கு இறப்பே இல்லை!  - தாஜ் -

- சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன் -

சுந்தர ராமசாமிஎழுத்தாளர் சுந்தர ராமசாமிகாலச் சுவட்டில் சுந்தரராமசாமி மறைவையொட்டி 'சு.ரா: நினைவின் தடங்கள்' என்கிற தலைப்பின் கீழ், பலபடைப்பாளிகள் அவரைப் பற்றிய நினைவுகளை பதிவு செய்தார்கள். அந்த வரிசையில் திரு. அ.கா.பெருமாள், தனது டைரியில் குறிப்பிடத் தகுந்த சு.ரா.பற்றியத் தகவல்களை வருடம், தேதி கிரமமாகத் தொகுத்து பதிவு செய்திருந்தார். திரு.அ.கா.பெருமாள் சு.ரா.வின் இல்லத்திற்கு அருகான்மைக்காரர் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது. காலச்சுவட்டில் அவர் பதிவு செய்திருக்கிற 7.1.1984 டைரி குறிப்பு சு.ரா.வையும் என்னையும் பற்றியது.

7.1.1984 - சனி
மாலையில் சு.ரா. வீட்டிற்குப் போனேன். அங்கே தாஜ் என்னும் இளைஞர் இருந்தார். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துவிட்டு சு.ரா. வைப் பார்ப்பதற்கென்றே நாகர்கோவில் வந்திருந்தார். இவர் சிதம்பரம் அருகே சீர்காழியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் மோட்டார் மெகானிக் வேலை. சு.ரா.விடம் நாவலைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். சு.ரா.,"என் நாவலில் வரும் கதாபாத்திரங்களுடன் வேறு யாரையாவது தொடர்புபடுத்திப் பேசினால் நான் என்ன செய்யமுடியும்.அதற்கு நான் பொறுப்பல்ல. சிட்டுக் குருவியுடன் இந்துமதியோ சிவசங்கரியையோ ஒப்பிடுவதும் முல்லைக்கல்லுடன் ஜெயகாந்தனை இணைப்பதும் வாசகர்கள் செய்த வேலை. இப்படியே ஒப்பிடுவதாக இருந்தால் இந்தியாவில் பல எழுத்தாளர்களை ஜே. ஜே. நாவலின் பாத்திரங்களுடன் ஒப்பிட முடியும். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார்.

அந்த இளைஞர் இரவு 11 மணிவரை சு.ரா.வுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் நானும் சு.ரா.வும் அவர் தங்கியிருந்த பாஸ்கர் லாட்ஜில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பி வர மணி 12 ஆகிவிட்டது.

- திரு.அ.கா.பெருமாள் அவர்கள் பதிவு செய்திருக்கிற தகவலின் சம்பவங்கள் அத்தனையும் சரியே. தேதிதான் மாற்றமாக இருக் கிறது. சு.ரா.வை நான் சந்தித்தது 7.1.1984 அல்ல 1.1.1984. திரு.அ.கா.பெருமாள் அவர்கள் குறிப்பிட்டிருக்கிற தேதி, அச்சுப்பி ழையாகக்கூட இருக்கலாம்! 'ஜனவரி ஒன்று வாருங்கள், உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்' யென சு.ரா. எழுதி அழைக்க, நான் சென்று அவரை சந்தித்த தேதியது.

கடிதம் எழுதினால் உடனுக்குடன் பதில்எழுதும் படைப்பாளிகளில் சுந்தரராமசாமியும் ஒருவர். நாம் எழுதியதை ஒட்டியச் செய்திக்கு, நிச்சயம் அதில் பதிலிருக்கும். அவரதுகருத்துக்கள் என்னளவில் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. மேம்போக்காக எழுதுவதென்பது அவரிடம் எப்பொழுதும் கிடையாது. எனக்கு அவர் உடனுக்குடன் பதில்எழுதியதாகச் சொல்வது சுமார் இருப த்திமூன்று ஆண்டுகளுக்கு முன்! ஜே.ஜே.சில குறிப்புகள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட நேரம்!

சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகளை முதன் முதலில் படித்தபோது, வியந்து பிரமித்துப் போனேன்! அந்தவயதில். அதன் தாக்கம் எனக்கு அப்படிதான் இருந்தது. காணாததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில், அவருக்கு சௌதியிலிருந்து கடிதம்எழுதினேன். என் கடிதத்திற்கு பதில் எழுதிய சு.ரா. என்னையொத்த வியப்பில்' அந்த புத்தகம் அங்கே எப்படி கிடைத்தது?'எனவும்,நாவலை வாசித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கடிதம் எழுதியிருப்பதாகவும் எழுதியிருந்தார்.நான் உணர்ச்சிவயப்பட்டது அவருக்கு தெரிந்து போனதில் வெட்கமாகம் மேவியது. தவிர அந்த கடிதத்தில், என் ரசனைக் குறித்தறிய எனக்கு இஸ்டமான இசை / நாடகம்/ சினி மா/ சித்திரம் போன்றவற்றை கேட்டு எழுதியிருந்தார். பொறுப்பாக பதில் எழுதினேன். கடிதத் தொடர்பு துளிர்த்தது.

ஜே. ஜே. சிலகுறிப்புகள் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகுகே, அப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதை அறிந்தேன். சூழ்நிலை அப்படி! அந்த புத்தகம் வெளிவந்த நாளில் நான் சௌதியில் இருந்தேன். அடுத்த ஆறுமாதம் கழித்து ஊர்வந்திருந்தபோது, செ ன்னை தி.நகரில் எனக்குத் தெரிந்த புத்தகக் கடைகளில் அந்த புத்தகத்தை தேடிப் போனபோது, அது கிடைப்பதாகவே இல்லை. பாண்டிபஜார் கலைஞன் பதிப்பகத்திற்கு சென்றபோது, அதன் உரிமையாளர் தனக்கு கிடைத்த 'complimentary copy' ஒன்றுதான் தன்னிடம் இருக்கிறது என்றும், இத்தனை ஆர்வமாய் சௌதியிலிருந்து அதை தேடி வந்திருப்பதினால் உங்களுக்குத் தருகிறேன் யெனத் தந்தார்.தொடர்ந்து, தான் இன்னும் அதைபடிக்கவில்லை என்றுகூறியவர், என்னை நேர்நோக்கி வியந்தப்படி' அந்த புத்தக த்தில் அப்படி என்ன இருக்கிறதென்றார்?'

ஒருமாத விடுமுறையில் ஊர்வந்த எனக்கு, பகலில் பெரும்பாலும் ஓய்வின்றிப் பணிகள்! இரவிலோ மனைவியோடு ஆற்றவேண்டிய கடமைகளின் தவிர்க்க முடியாமை வேறு! இதையெல்லாம் விட மேலாக அந்த புத்தகத்தை படிக்க வேண்டிய மனநிர்பந்தம் இன்னொருபுறம்! வேறுவழியின்றி அந்நாவலை வாசிப்பதற்கென நான் வகுத்துக்கொண்ட நேரம், நள்ளிரவு ஒருமணிக்குமேல். எங்கள் ஊரில் அந்த காலக்கட்டத்தில் மின்சாரம்தடையும், குறையழுத்த மின்சாரத் தொல்லையும் சகஜம்.தொடர்ச்சியான இந்த குறை ப்பாடுகள் எங்களுக்கு பழகிகூட இருந்தது. செல்லப் போனால் இரவு பத்து மணிக்குப் பிறகு நள்ளிரவு ஒரு மணிவரை அது தேவையும் இருக்காது. விளக்கை வலிய அணைத்து விடும் நேரம் அது! தமிழனின் கலாச்சாரப்படி தாம்பத்தியம் இருளில்தான் ஜொலிக்கிறது! நள்ளிரவில் படிக்கவென்று கிளம்பும்போது வெளிச்சமில்லாது என்ன செய்வது? இருளில் வாசிக்கும் மந்திரமும் தெரியாதவன் நான்! வித்தைக்காரர்கள் யாரிடமாவது அதை கற்றிருக்கலாம்!

அப்படியான வித்தைக்காரர்கள் இல்லாமலில்லை! சமீபத்தில், நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களுக்கு ஒரே நேரத்தில் விமர்சனக் குறிப்புகள் எழுதியிருந்ததை ஒருதரம் வலைப்பதிவில் கண்டேன். இத்தனைக்கு அதீதகாரியம் செய்ய ஒருவருக்கு சராசரி வாசிப்பு நேரங்கள் போதாது. தூக்கத்தில்கூட வாசிக்க முடிகிறவரால்தான் அது நடக்கும்! இந்தகையத் திறன் பெற்ற எழுத்தாளர் இன்றைக்குத்தான் என்றில்லை, அன்றைக்கும் இருந்தார்கள். வம்சத் தொடச்சி அற்றவர் இங்கு ஏது? இவருக்கு அண்ணன், பெரியண்ணனெல்லாம் இருக்கவே செய்தார்கள்!

தினைக்கும் விதியேயென சிம்னி வெளிச்சத்தில்தான் ஜே.ஜே. யோடு அடுத்த சல்லாபம்! கணவன் இப்படி தள்ளிப்போய் திளைப்பதென் பது மனைவிமார்களுக்கு பிடிக்காது. இன்னொன்றோடு என்பதே அவர்களுக்கு ஆகாது!அதுவும் இரவில் என்றால் சொல்லவே வேண்டாம்! தமிழ்ப் பெண்களுக்கு இந்த உணர்வு கூடுதல் சங்கதி! ஜெ.ஜெ.யோடு அன்னோனியம் கொண்ட அடுத்த நிமிடமே அவன் என்னை விஸ்தீரணவெளிக்கு இட்டுச் சென்று விடுவான்! அங்கே மனிதர்களின் வேஷங்களும், நடிப்பும், அவலங்க ளாக காட்சித்தரும் அலங்கோலக்கூத்தும், உண்மைகளின் வீழ்ச்சியும்,நடப்பு உணர்த்தும் அற்பங்களின் ஜொலிப்பும் நம்மை நிலை குலைய வைக்கும்!

நல்ல புத்தகங்களைப் படிக்கிறபோது, அது மனதை வருடாமல் விடாது. அதன் கவிநயம் கொண்ட வரிகள் மூளையின் மடிப்புகளில் சிக்கியும் கொள்ளும். கருத்தாழம் கொண்ட பாராக்கள் நம்மை திக்கு முக்காடவேறு வைத்துவிடும். வாசிக்கிறபோது இப்படி யானவைகளை அடிக்கோடிடுவது என்னளவில் தவிக்கமுடியாது! பழக்கம்அப்படி! ஜே.ஜே.சிலகுறிப்புகளை வாசித்தபோதும் அப் படித்தான் நடந்தது.ஒவ்வொருநாளும் மண்ணெண்ணை வாசனையோடு கொஞ்சம்கொஞ்சமாக ஒருவார காலத்தில் அந்த நாவலை வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தபோது, அந்த புத்தகம் இன்னொருப் பங்கிற்கு பெருத்து விட்டது! இப்படி அடிக்கோடிடுவ தால் அறிவின் தானங்கள் பரிணமிக்கிறதோ என்னவோ, வாசித்தப் புத்தகம் பரிணமித்துவிட்டது!

விடுமுறைமுடிந்து திரும்பவும் சௌதிபோனபோது அந்தப்புத்தகத்தை கையோடு கொண்டுபோனேன். விமானம் பறக்கிறப்போது அதில் சிலஅத்தியாயங்களைப் படித்தேன். குறிப்பாய் ஜே.ஜே எழுதிய குறிப்புகள் அடங்கியப் பகுதி. ரொம்பவும் இஸ்டமானப் பக்கங்கள் அவை! ஜே.கிருஷ்னமூர்த்தியின் தத்துவக்குறிப்புகளை படித்தபோது ஏற்பட்ட மனதாக்கத்தையொத்த,நெகிழ்ச்சித் தந்த பக்கங்கள் அவை!பூமி யின்மட்டத்திலிருந்து மிகஉயரத்தில் விமானம் பறந்தபோது, அதனை நான்படித்தேன் என்பது, அந்த படை ப்பாளியின் தீவிர உழைப்புக்கு செய்கிற மரியாதையாகவே நினைத்தேன். அதிலோர் திருப்தி!

சௌதியில் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் அந்த நாவலை என்னை யொத்த ஆர்வத்துடனேயே படித்தார்கள். ஒரு விடுமுறை தினத்தில் நண்பர்கள் ஒன்று கூடி அதை சர்ச்சிக்கவும் செய்தார்கள். பொதுவில் அந்த நாவல் எல்லோருக்கும் பிடித்துதிருந்தது. சிலர் அதை உன்னதம் என்றார்கள். ஹாஜா அலி என்கிற நண்பர் தனது கருத்தாக ஒன்றைச் சொன்னார். அது எனக்குப் பிடித் திருந்தது. 'உன்னதம் நோக்கியப் பயணத்தில் நம்பிக்கைத் தரும் நாவலிது' என்றார்.

அன்றைக்கு சௌதியில் நான் நடத்திய சிற்றிதழான 'தமிழ்ப் பூக்களில்' அந்நாவலுக்கு ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டு, திரு.சு ஜாதா அவர்கள் கணையாழியில் அந்நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனத்தையும் மறுபிரசுரம் செய்திருந்தேன். அது வழக்கமாதிரி யான சுஜாதாதனமான விமர்சனம்தான். இத்தனைக்கும் அன்றைக்கு கணையாழியின் ஆசிரியர் பொறுப்பை வகித்த ஜானகி ராமன் அவர்கள் சுஜாதா வைக் கூப்பிட்டு தமிழிழ் ஒரு நல்ல நாவல் வந்திருக்கிறதென்று சு.ரா.வின் ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றிக் குறி ப்பிட்டு,"கணையாழியில் பிரசுரிக்கவேண்டி,டேமேஜ் இல்லாமல் அதற்கோர் விமர்சனம்எழுதித்தாருங்கள்"யென கேட்டும், திரு.சுஜா தா அவர்கள் தனது பாணியிலான சுவாரசியத்தோடே அந்த விமர்சனத்தை எழுதியிருந்தார்.

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' தமிழில் புதிய வடிவங்களைக் கொண்ட நாவல். "ஒருகுட்டியை ஏக காலத்தில் ஒன் றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கும் தொடர் கதைகளை""மாய காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயா மல் நம்மேல் உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள்" எழுதும் "தமிழ் சீதபேதி" சூழ் நிலையில் ஆழ்ந்திருக்கும் நம் வாசகர்களுக்கு இதன் வடிவம் லேசில் அகப்படாது. திரு. சுஜாதா அவர்கள் இப்படி அந்த விமர்சனத்தை தொடங்கியிருந்தாலும், ரொம்பவும் பெருமைப் படத்தான் கடைசியில் முடித்திருந்தார்.

ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலைமெச்சி வெளிவந்த 'தமிழ்ப்பூக்களை'யொட்டி, அறிமுகமே இல்லாத ஒருவர் திண்டுக்கல்லிலிருந்து என் சௌதி முகவரிக்கு கடிதம் எழுதியிருந்தார். 'தமிழக முற்போக்கு இலக்கியச் சிற்றிதழ்' அமைப்பின் காரியதரிசியாம் அவர்! "பிற்போக்கு த்தனமான ஒரு நாவலுக்கு நீங்கள் இத்தனை முக்கியத்துவம் தந்திருக்கக் கூடாது" என்று கோபத்தைக் காட்டியிருந் தார். அந்த கடிதத் தை வாசித்ததுடன் தோன்றிய முதல்கேள்வி அந்நாவலில் எதை பிற்போக்குத்தனம் என்கிறார்? என்பதுதான். திரும்பத் திரும்ப யோசித்தும் அன்றைக்கது விளங்கவில்லை. அதன்பின் தொடர்ச்சியாக மூன்றுகேள்விகள் எழுந்தது. 1.தமிழ்ப் பூக்கள் அவருக்கு எப்படி கிட்டி இருக்கும் 2. இடதுசாரிகள் ஏன் இந்த நாவலை எதிர்க்கிறார்கள் 3.சௌதியில் வெளிவரும் ஒரு சாதாரண சிற்றிதழைக் கூட விடாது விரட்டிப்பிடித்து மறுப்பு செய்யும் அளவுக்கு ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் மீது அவர்களு க்கு அப்படி என்ன காழ்ப்பு?

முதல் கேள்விக்கு பதில் கிட்டவில்லை. அடுத்த இரண்டுக்கும் ஓரளவு பதில் கிடைத்தது. சு.ரா.இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர் என்றும், ஸ்டாலினின் சிந்தனை / செயல்பாடுகளை ஒட்டி இடதுசாரிஇயக்கம் இரண்டாகப் பிரிந்தபோது, அவர் இடதுசாரி இயக்க த்தை விட்டே வெளியேறிவிட்டவர் என்றும், ஜே.ஜே.சிலகுறிப்புகளில் பிரதானப் பாத்திரமான 'முல்லைக்கல்' வழியாக இடதுசாரி களை விமர்சன த்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பதால் அவர்கள் சீற்றம்கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன். அரசியல், எல் லாத்துறைகளையும் படுத்தும்பாட்டிற்கு குறையாமல் இலக்கியத்தையும் சீண்டுகிறதென்பது புரிய வந்தபோது, இந்திய அரசியல் களம் இன்னும் எனக்கு தெளிவானது.

ஒருவருடம் கழித்து மீண்டும் ஊர் வந்திருந்தேன். அன்றைக்கு, நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெயர்சொல்லும்படி விலங்கிய ஒரே பதிப்பகமான க்ரியாவுக்கு சென்று, அங்கே தேங்கிக் கிடந்த சிற்றிதழ்கள் அனைத்துப் பிரதிகளையும் பொறுக்கியெடுத்து, தூசித் தட்டி வாங்கினேன். அவற்றை வாசித்த வகையில், அனைத்து சிற்றிதழ்களிலும் ஜே.ஜே.சில குறிப்புகள் குறித்து, ஒன்றுக்கு மேற் பட்ட விமர்சனங்களும், கலந்துரையாடல்களும் வெளிவந்திருப்பது தெரிந்தது! இடதுசாரி சிந்தனைக்கொண்ட 'இனி' என்கிற மாத இதழில், அந் நாவலுக்கு தொடர்விமர்சனம் வெளிவந்தப்படி இருப்பது கண்டும் வியந்தேன். இடதுசாரி மனோபாவம் கொண்ட பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா, ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு தனியே ஒருவிமர்சனப் புத்தகம் வெளியிட்டிருந்தார்! (அவ ரது அந்த விமர்சனத்தையொட்டி பாண்டிச்சேரிபோய், அவரிடம் வலிய தர்க்கம்புரிந்ததை இன்றைக்கு நினைக்கிறபோது சிரிப்பு வருகிறது. இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், பிந்திய காலக்கட்டத்தில் சாருவின் விமர்சனத்தை மறு வாசிப்பு செய்த போது அதன் பெரும்பகுதி ஒப்புக்கொள்ளும் படியாக த்தான் இருந்தது.) புத்தக விமர்சனப் பக்கமே தலைவைக்காத, சிறுகதை களையும் நாவல்களையும் மட்டுமே எழுதி வந்த எழுத்தாளர்களில் பலர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிந்ததையும்,கருத் துக்கள் சொல்லியிருந்ததையும் கண்டு வாசித்து கணித்தவகையில் 'ஒரு நாவலுக்கு இத்தனை சக்தியா? யெனத் தோணியது.

ஜே.ஜே. சிலகுறிப்புகள் நாவலுக்கு விமர்சனங்கள் ஒருபாடு வந்து முடிந்தும்,வந்திருந்த பல்வேறு விமர்சனங்களில் தங்களது விம ர்சனமே துல்லியமென சிலஎழுத்தாளர்கள் அடுத்த ரவுண்டில் அந்நாவலைப் பற்றி மீண்டும் பேசத்துவங்கிய வேடிக்கை நடந்தே றிய நாளிலும் கூட, விமர்சனமே தங்களது ஆத்மார்த்தப் பணியென இயங்கி வந்த திரு.க.நா.சு.வும், திரு.வெங்கட்சாமி நாதனும் அந் நாவலுக்கு விமர்சனம் என்கிற அளவில் விரிவாக எதையும் எழுதினார்கள் இல்லை. க.நா.சு.மட்டும் ஏதோ சில கருத்துகள் (ஜே.ஜே. சிலகுறிப்புகள்,'வித்தைத்தனம்' கொண்டதென க.நா.சு.கூறியதாக அப்பொழுது ஒரு பேச்சுஉண்டு) கூறியதாகவும், அது குறித்த தெளிவை அறிய சு.ரா. முயன்றதாகவும் அறிந்தேன். என்னைக் கேட்டால், அந்த இரண்டு ஜாம்பவான்களும் அந்நாவல் குறித்த விரிவான விமர்சனத்தை வைத்திருக்கவேண்டும். அவர்களின் ஆத்மார்த்தப் பணியின் பங்கமற்ற உயர்வை அது இன்னும் கூட்டியிருக்கும். அவர்கள் ஏன் செய்யவில்லை? தெரியாது. க.நா.சு./ வெங்கட் சாமிநாதன் தவிர்த்து, ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு பலரின் விமர்சனங்கள் பலகோணங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோதும், சு.ரா. எந்தவொரு விளக்கமோ, எதிர்வினை யோ செய்தாரில்லை! தனது நாவலை வெளியிட்டு விட்டு இலக்கியப் பரப்பின் பரப்பரப்பை அவர் மிக நிதானமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. இந்த மனோநிலை சராசரிக்கு மீறியவே தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு மேலாக அந் நாவலுக்கு வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு அவரது அபிப்ராயம் எனக்கு முக்கியமெனப்பட்டது. அது குறித்து நேரிடையாக கேட்டரிந்தால் என்ன? என்பதாக தோன்றியயுடன் பரபரப்புக்கு ஆளானேன்.

1993 - டிசம்பர் மாத இரண்டாம் வாரத்தில் அவரைச் சந்திக்க அனுமதி மற்றும் தேதி, நேரம் கேட்டு சு.ரா. வுக்கு கடிதம் எழுத பதில் வந்தது. அடுத்தவாரத்தில் ஓர் தேதியைக் குறிப்பிட்டு, வாருங்கள் என எழுதியிருந்தார். சீர்காழியில் இருந்து சென்னையை விட, நாகர்கோவில் இன்னும் தூரம்அதிகம். அந்த பயணத்திற்கு ஆயத்த ஏற்பாடுகளோடு இருந்தபோது, சு.ரா.விடமிருந்து தந்தி வந்தது. தவிர்க்க முடியாத பணியின் காரணமாக வெளியூர் செல்வதாகவும், வரவேண்டியத் தேதியினைக் குறிப்பிட்டு அடுத்து கடிதம் எழுதுவதாகவும் அதில் தகவல் செய்திருந்தார். ஒரு சில நாளில் அந்த கடிதமும் வந்தது. 'ஜனவரி முதல் தேதி வாருங் கள், உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்' என்று எழுதியிருந்தார்.

புத்தாண்டு பிறக்கும் இரவில், எங்கள் ஊர் பஸ்ஸ்டாண்டில் பயணம் புறப்பட நின்றேன். தூரத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் பிராத்தனை ஒலி மிதந்து வந்தது. பஸ்ஸ்டாண்டின் மையத்தில் மாணவர்கள்குழு ஒன்று, எதிர்பாராத தருணத்தில் வந்து ஆக்கி ரமித்தப்படி, இரவு பண்ணிரெண்டு முடிந்த நொடியில் வெடிகளை வெடிக்கச்செய்து 'சில்க் ஸ்சுமீதா வாழ்க' வெனக் கோஷமிட்ட னர்.கூடவே 'ஹாப்பி நியூ இயர்' கோஷமும் எழுந்தது.

மறு நாள் பகல் நாகர்கோவில்போய் இறங்கியபோது ஊரே புத்தாண்டு குதூகலத்தில் இருந்தது. எனக்கு 'பெத்தலெகம்'வந்து சேர் ந்து விட்ட மகிழ்ச்சி ! வாடகைஅறையில் என்னை சரி செய்துக்கொண்டு, சு.ரா.தரிசனத்திற்காக புறப்பட்டேன். சு.ரா.வீட்டில் இரு ந்தார். வரவேற்றார். காலில் போட்டிருந்த 'ஸ்ஸூ'வுடன் வீட்டின் உள்ஹாலுக்கு அனுமதித்தார். ஸ்வீட், காரம், பில்டர் காஃப்பி யெல்லாம் ஆனது. வீட்டின் மாடியில் உட்கார்ந்து பேசலாமென அழைத்தார். ஒரு சிறுரூம் தடுப்பும், மெட்டைத்தளமுமான அந்த இடம், அதன் சுற்றுபுறத் தோடு எனக்குபிடித்திருந்த்து.'காகங்கள்' என்கின்ற இலக்கியஅமைப்பின் மாதாந்திரக்கூட்டம் இங்குதான் நடக்கும் என்றார் சு.ரா.! நான் வேறு யோசிப்பில் கொஞ்சம் படபடப்பாக இருந்தேன். அதை சு.ரா.புரிந்துக் கொண்டவராக, 'நீங் கள் புகைப் பிடிக்கனுமென்றால், புகைக்கலாம் என்றார்.' அவரிடம் நான் சிகிரெட்பாக்கெட்டை திறந்து நீட்டியபோது, சமீபத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.

அந்த வீடு அழகான சூழலில் அமையப்பெற்றிருந்தது. நாலாபுறமும் பசுமையான மரங்கள். மெயின் ரேட்டையொட்டி அது இருந் தாலும், வெளிச் சப்தம் எட்டாத உட்புறத்தில் இருந்தது. இடைப்பட்ட தூரத்தை மூடி மறைப்பது மாதிரி வயது கூடிய சப்போட் டா மரம் ஒன்று ஏகத்திற்கும் கிளை விட்டு தழைத்து, பூத்து, காய்த்து, அடித் தரையெல்லாம் போர்வையாக காய்ந்த உதிரிப் பூக் கள். மரத்தின் ஒரு பகுதி கிளைகள் மொட்டை மாடியை எட்டித் தொட்டுக் கொண்டிருந்தது. மாடியின் முகப்பில் பசு உருவின் பின்புலத்தோடு புல்லாங்குழல் வாசி த்தப்படி 'ஸ்டைலான' கண்ணன். அந்த 'சுந்தரவிலாஸ்' இன்னும் மனதில் அதே பசுமையோடு தான். அதன் வசீகரம், அங்கே இன்றைக்கும் அப்படியே இருக்கிறதா? தெரியவில்லை!

சு.ரா.விடம்,ஜே.ஜே.சில குறிப்புகள் எழுதிய அனுபவத்தைக் கேட்டேன். நீண்டகால அவகாசம் எடுத்துக்கொண்டு அந்த நாவலை எழுதியதாகச்சொன்னவர், 'புளிய மரத்தின்கதை' எழுதி முடித்தப்பின் தொடங்கியநாவலிது என்றும், 'புளிய மரத்தின்கதை' எழுதி முடித்து இருபது வருஷமாவதாகவும் கூறினார். படைப்பின் மீது அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை மற்றும் கால அவகாசத்தை யூகித்த எனக்கு, ஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்த நாழியில் நான் சொக்கிய தருணங்கள் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரத்தை யும், இத்தனை கால அவகாசமும்தான் அந்த நாவலை அத்தனை உயரத்திற்கு உயர்த்தியிருப்பதாக தோன்றியது.

சு.ரா.வுக்கு முன்பாகவும், அவர் வாழ்ந்தகாலத்திலும் தனிமனிதன் தூக்கமுடியாத அளவுக்கு புத்தகங்கள் எழுதுகிறவர்களையும், அதற்கு அவர்கள் வைத்த சொத்தை வாதங்களையும் நாம் கவனித்தப் படித்தான் இருக்கிறோம். வியபார நோக்கும், புகழ்ச்சி வேண்டி தனக்குஇல்லாத கீர்த்திகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதையும் தாண்டி அந்த புத்தகச்சுமையைப் படைத்ததில் வேறு என்ன இலக்கியக் காரணம் இருக்க முடியும்?

ஜே. ஜே. சிலகுறிப்புகள் எழுதும் போதே, தனது இலக்கிய நண்பர்கள் அதன் சில பகுதிகளைப் படித்து, சிலாகித்து அபிப்ராயம் சொன்னப்பிறகே தெடர்ந்தெழுத ஆவல் கொண்டதாகச்சொன்னார்.அந்த நாவலின் இரண்டாம்பகுதியான ஜே.ஜே.யின் டைரி குறி ப்புகளை எழுதி முடித்தபோது, தலை தெறிக்கும் படியானதோர் வலியினை தான் கொண்டதாகச் சொன்னார். நிச்சயம் அப்படி யோர் வலியின் அவஸ் த்தையை அவர் கொண்டிருக்கக் கூடும். நம்பவும் நம்பினேன். அந்த டைரி குறிப்பின் உள்ளார்ந்த வெளி ப்பாடு கனமான சங்கதிதான்.

ஜே.ஜே.யின் டைரி, ஜே.கே.கிருஷ்ண மூர்த்தியை நினைவூட்டுகிறதே என்றதற்கு, அதை ஒப்புக்கொண்டவர் கொஞ்ச காலம் அவ ரைப் பின் தொடர்ந்ததையும் சொல்லி விட்டு, உங்களால் ஜே.கே. வை பின்பற்ற முடிகிறதா?யென என்னைக் கேட்டார். பின்பற்ற நிறைய ஆசையிருந்தும் முடியவில்லை என்றேன். அது அப்படித்தான் யென ஒப்புக்கொண்டார்.

என்னோடு அண்ணாமலையில் படித்த செலவராஜ் என்ற நண்பர்தான் எனக்கு ஜே.கே.வின் எழுத்துகளை அறிமுகம்செய்தான். அன்று ஜே.கே. யை படித்து முடித்ததும் அவனோடு அது பற்றிப் பேசியபோது, ஜே.கே.யுடைய தத்துவங்கள் அனைத்தும் யோசி க்கும் படியும், யோசித்தவைகளை ஒப்புக்கொள்ளும் படியும் இருக்கிறது.ஆனால், நம்முடைய இந்த வயதில் அதைப்பற்றிக் கொ ள்ள முடியும் என்று தோனவில்லை என்றேன்.அதற்கு அந்த நண்பன் சொன்னான்,"இன்றைய நம்உணர்வுகள் சதையோடும், இரத் தத்தோடும் கலந்து விட்டவைகள். திடுமென இன்றைக்குப்போய் அந்த தத்துவங்களை வாழ்வில் பிணைத்துக் கொள்ள முடியாது. ஒரு வேளை நாம் பரம்பரைப் பணக்காரனாக இருந்தோமெனில் எது குறித்தும் கவலைப்படாமல் அவரோடு தாராளமாகப் போக லாம் என்றான்.அவன் கூறியதை திரும்பத்திரும்ப யோசித்ததில் சரியென்றுதான் பட்டது. அதனால்தான் சு.ரா. அது குறித்து கேட் டபோது உடனே அப்படிச் சொன்னேன்.

கணையாழி இதழ், அன்றைக்கு இலக்கிய வாசகர்களின் பெரியவரவேற்பைப் பெற்ற இலக்கியஇதழ். பல படைப்பாளிகள் அதில் எழுதியபோதும் சு.ரா. அதில் எழுதுவதில்லை. அது குறித்தும் கேட்டேன். கணையாழியின் போதாமையைச் சொல்லியவர், இந்த இதழ் கணையாழியை வாசித்தீர்களா? என்று கேட்டார். வாசித்தேன் என்றேன். நடந்துக்கொண்டிருக்கும் தமிழீழப் பிரச்சனை எத் தனை கனமானது? அதை அவர்கள் அணுகும் விதத்தைப்பார்த்தீர்களா? என்றார்.அவர் குறிப்பிட்டசெய்தி, கணையாழில் நான்கு விசயதானங்களுக்குக் கீழ் எழுதப்பட்ட ஒரேதலையங்கத்தில்,தமிழீழம் குறித்த ஏதோ ஓர் பிரச்சனையின் அலசல் வேறும் நான்கு வரியில் இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்த சம்பாசனையில், நான் எதுகுறித்து அவரைச் சந்திக்க நினைத்தேனோ அந்தமுனைக்கு வந்தேன். ஜே.ஜே.சில குறிப்பு களுக்கு கடந்த இரண்டுவருடங்களாக எல்லாதரப்பிலிருந்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டது, உங்கள் நாவலில் முல்லை க்கல் நாயரை இடது சாரி சிந்தனைக் கொண்ட எழுத்தாளராகக் காட்டி, அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியதின் பொருட்டே, இடதுசாரி சிந்தனையாளர் கள் அநியாயத்திற்கு உங்களையும், உங்களது நாவலையும் விமர்சிக்கிறார்கள். நீங்களோ எந்தவொரு விமர்சனத்திற்கும் இன்றுவரை பதில் செய்யவில்லை! உங்களது விளக்கத்தை / எதிவினையைப் பதிவு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றேன்.

அந் நாவலுக்கு இன்னும் விமர்சனங்கள் வந்தபடி உள்ளது என்றும், கொஞ்சம் காலம் கழித்து நிச்சயம் பதில் செய்வேன் என்றும் கூறினார். சிலஆண்டுகள் கழித்து எதிர்வினையையற்ற தன்னிலை விளக்கத்தையும் பதிவு செயயவே செய்தார். ஆனால், விமர்ச னம் செய்த பலரின் குறைகளுக்கு அதில் பதில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வகையில் எல்லோரின் விமர்சங்களுக்கும் பதில் சொல்வதென்பது ஆகிற காரியமுமில்லைதான்.

அந்த நாவலின் ஓரிடத்தில்,'இந்த பறவைகளின் இறப்பை நாம் காணமுடிவதில்லை! அவைகள் எங்கேபோய் இறக்கின்றன?' என் பதாக சு.ரா. வியந்திருப்பார். அது ஒரு கவிதைநயம் கொண்ட வரி! சு.ரா.வுக்கு இதுகூட தெரியாதுப் போனதேயென நாம் நினை த்து விடமுடியாது. ஏனெனில் அது அவருக்குத்தெரியும்! நாவலில் ஏதோ அர்த்தத்தில் அப்படி அந்தவரியினை கவிதையாக்கியிரு க்கிறார் என்றுதான் நினைக்கத்தேன்றும். அதுதான் சரியான வாசிப்பின் அடையாளமாகவும் இருக்கும். ஆனால், அந் நாவலுக்கு விமர்சனம் எழுதிய தருமு. சிவராம் அந்த வரியினைச் சுட்டி, இதுகூட சு.ரா.வுக்கு தெரியாதாயென எள்ளி நகையாடி, பறவைகள் எங்கே எப்படி இறக்கிறதெனறும், இறந்தப் பறவைகள் எந்தந்த மிருகங்களுக்கும் ஜந்துக் களுக்கும் இரையாகிறதென்றும் பெரிய தோர் வியாக்கியானமே செய்திருந்தார். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் யாரால்தான் பதில் தந்து மாளும்!

ஜே.ஜே பற்றியும்,முல்லைக்கல் பற்றியும் கேட்ட ஒருகேள்விக்கு ஜே.ஜே.யும் முல்லைக்கல்லும் எல்லா மொழி எழுத்தாளர்களிலும் இருக்கிறார்கள் என்றும், அவர்களை நாம் வாசர்களின் பார்வைக்கு கொண்டுவந்து சர்ச்சிக்க வேண்டியது அவசியம் என்றார்.

ஜே.ஜே.யின் சில கோபங்களை யதார்த்தகோணத்தில் பார்க்கிறபோது, அதில் பெரிய அர்த்தமிருப்பதாக தெரியவில்லையே என்ற நான், ஒரு மாட்டின்மீது யாரோ ஒருவன் வெற்றிலையைக் குதப்பிய எச்சியலைத் துப்பினான் என்பதற்காக அவன் கொள்ளும் பெரும்கோபமும், அதுகுறித்த அவனது அநியாயத்திற்கு மன உலைச்சலையும் முன் வைத்தேன்.

ஜே.ஜே. ஒரு'perfectionist' என்றும், அவனால் இந்தரீதியிலான மனிதசெயல்களை ஜீரனிக்க முடியவில்லை என்பதாகவும் கூறினார். அப்படி அவர் கூறினாலும், அந்த பதில் ஏற்கத்தகுந்ததாக இல்லை. மனித கோமாளித்தனங்களும், சேட்டைகளும் நிரவிக்கிடப்ப துதான் சமூகம். அது ஓர் ஓர் யுனிவர்சல் சாபம்! எந்த ஒரு தேசத்தின் எந்த ஒருசமூகமும் இதற்குவிதிவிலக்கல்ல. இங்கே நூறு சதவீதம் யாரும் சரியான கோணத்தில் உருகொள்வதும் சாத்தியமில்லை. இப்படியே தொடர்ந்து, தான் ஒரு 'perfectionist' என்கிற விரைப்பில் அவன் கோபப்படுவானேயானால், அவனுக்கு நாளின் இருபத்திநாலு மணி நேரமும் அதற்கே போதாது. யோசிக்கிற போது பச்சை இந்தியனான ஜே.ஜே. கூட சிறு நீர் கழிக்க வெளியில், பாதையோரத் திருப்பங்களைப் பயன்படுத்தவும் தவறியிரு க்க மாட்டான். சு.ரா.விடம் இப்படி யெல்லாம் அதுகுறித்து அடுத்தடுத்து பேசுவது சரியாகப்படவில்லை. அவர் வீட்டில் பருகிய பில்டர்காஃப்பியின் மணமும், அதன் சுவையும் இன்னும் நாவில் மீதம் இருந்தது. சிகிரெட் பாக்கெட்டைத் திறந்தேன்.

இந்த நாவல் தமிழுக்குப் புதுமையான ஒன்று என்கிறரீதியில் கேட்கிறேன், வாசகர்கள் இந்த நாவலை எப்படி அணுகுகிறார்கள்? உங்களுக்கு அது திருப்தி தருகிறதா? வாசகர்கள் இந்த நாவலை வித்தியாசமாகப் பார்கின்றார்கள் என்றும்,பிற தீவிரப் படைப்பு களை வாசிக்கசிரமப்படுவது மாதிரி இந்தநாவல்வாசிப்பும் அவர்களுக்கிருப்பதாகத் தெரிவதை,அவர்களின் கடிதம்வழியே அறிய முடிகிறதென்றார். நாவலில் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள அனுபந்தத்தில் காணும் ஜே.ஜே.யின் புத்தகங்கள் எங்கே கிடைக் கும் என்பதாககூட கடிதத்தில் கேட்டு எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னபோது, முகத்தில் கீற்றாய் அர்த்தப் புன்னகை.

ஜே.ஜே. சில குறிப்புகளில் அவர் வகுத்த அப்படியான அமைப்பியலின் நேர்த்தியினால், வாசகர்கள் சிலர் அந்த அனுபந்தத்தை நாவலோடான கடைசிப் பக்கங்கள்யென உள்வாங்கிக்கொள்ள முடியாமல், தனியாக பிரித்துப்பார்த்து விட்டார்கள்! ஜே.ஜே.யை நிஜத்தில் வாழ்ந்த எழுத்தாளனாக கூட அவர்கள் நம்பியிருக்கக் கூடும்!

நான் அந்த நாவலை முதல்வாசிப்பு செய்தபோது, என் இலக்கிய நண்பரான ஹாஜாஅலியிடம் டெலிபோனில் பேசினேன். அவர் அந்நாவலை எனக்கு முன் வாசித்திருந்ததினால், அதைப்பற்றிபேச சௌகரியமாகவும் இருந்தது.ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை விட,பின்னால் இருக்கிற ஜே.ஜே.யின் டைரி குறிப்பு நன்றாக இருந்தது என்றேன். அவர் சிரிப்பது கேட்டது. என்ன விசயம் என் றேன். "அது அப்படி இல்லிங்க 'It's totaly a novel' என்றார். எனக்கு குழப்பமாக இருந்தது.Fast page - திருப்பிப்பாருங்க, அதி லே நாவலுன்னுப் போட்டிருக்கும், டைரின்னுயெல்லாம் தனியா ஒன்னும் கிடையாது" என்றார். கொஞ்ச நேரம் கழித்துதான் அந் நாவலின் அமைப்பியலிலான மயக்கம் புரிந்தது. அவரும் இந்த அமைப்பியல் வெற்றியை உணர்ந்தவராகத்தான் இருந்தார். அத னால்தான் அந்த புன்னகைக்கீற்று! இந்த அமைப்பியலை யூகித்துதான் அந்நாவலை க.நா.சு. வித்தை என்றாரோ?

சு.ரா.வைச் சந்தித்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து க.நா.சு.வை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.அவர் டெல்லியிலிருந்து சென்னை க்கு தனது ஜாகையை மாற்றிக்கொண்டு வந்திருந்த நேரமது. 'ஏன் ஜாகையை மாற்றிக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டீர்கள்?' என்ற பத்திரிகைப் பேட்டி ஒன்றின் கேள்விக்கு 'சாவதற்காக சென்னைக்கு வந்துள்ளேன் என்றிருந்தார்.அவரது பதில் யோசிக்கு ம்படி இருந்தது. தவிர, அவரைப் பார்க்கவும் தூண்டியது. சாவதற்காக சென்னை வந்திருந்த அவரை, மகிழ்ச்சியுடன் சந்தித்தேன். மதிப்பிற்குறிய 'க்ரியா'திலிப்குமார்தான் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார். போனஇடத்தில் அவரிடம் ஏகப்பட்டகேள்விகள். 'நீங்கள் ஏன் ஜே.ஜே.சில குறிப்புகளை ஒப்புக்கொள்ளவில்லை?' என்ற கேள்விக்கு, கொஞ்சமும் நேரம் எடுத்துக் கொள்ளாமல், "அவரது புளிய மரத்தின்கதையை நான் நாவலாக ஒப்புக்கொள்வேன்"என்றார். தொடர்ந்து அந்நாவல் குறித்து பேசுவதை அவர் தவிர்ப்பது மாதிரி தெரிந்தது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை நாம், நாவலின் புதிய வடிவம் என்று சிலாகித்த அதே வேளை அதை அவர் நாவல் வடிவமாகவே ஒப்புக் கொள்ளவில்லை என்பதாக உணர்ந்தேன்.

ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன், கணையாழி அலுவலக வாசலில் வைத்து பெரியவர்.வெ.சா. சந்தித்தேன்.அவருக்கு வணக்கமெல் லாம் செய்தப் பிறகு கூடுதல்நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் மறக்காமல் கேட்டது, 'நீங்கள் ஏன் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு விமர்சனம் எழுதவில்லை?' என்பதுதான். இல்லை, நான் எழுதியிருக்கிறேன் என்றும், கர்நாடகாவிலி ருந்து வரும் ஆங்கில நாளிதழில் அது வந்தது என்றும் சொன்னார். தொடர்ந்து அது குறித்து பேச முற்படும்முன் அவர் பக்கத்தி லிருந்தவரிடம் வேறுபேச்சுக் குப் போய் விட்டார். பிறகும்கூட நிறைய நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், டீயெல்லாம் கூட குடித்தோம் ஆனால் அவர் நான் எதிர்பார்திருந்த முனைக்குவரவில்லை. அந்த ஆங்கிலநாளிதழில் அவர் என்ன எழுதியி ருந்தார்? என்பது இன்றுவரை எனக்கு தெரியாது. அதை யாரேனும் தமிழில் பதிந்திருக்கிறார்களா? என்பதும் தெரியாது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, சு.ரா.வுடன் அவர் வீட்டு மாடியைவிட்டு இறங்கி முன்புறம்உள்ள பிரதானசாலையில் வலது புறமாக நடந்தப்படி பேசிக்கொண்டே போனோம். அந்த சாலையின் முடிவில், இரண்டு மூன்று சாலைகள் சந்திக்கும் மிகப்பெரிய வட்ட வடிவிலான இடம் தென்பட்டது.அதன் மையத்தில் சிதைந்த,வயதுகூடிய ஓர் புளிய மரம்! பார்க்க பரிதாபகரமாகத் தெரிந்தது. எங் கள் ஊர் பக்க சாலையோரங்களில் மையில்கணக்கில் ஏகத்திற்கும் பெருத்த வளமான புளிய மரங்களை பார்த்திருக்கிற எனக்கது அப்படித் தெரிந்ததில் ஆச்சரியமில்லை! அந்த புளியமரத்தைச் சுட்டிக்காட்டிய சு.ரா., புளியமரத்தின் கதையில் பேசப்பட்ட புளி யமரம் இதுதான் என்றார். அவர் சொன்னார் என்பதற்காக அதை விசேசமாகப்பார்த்தும் அதுஎனக்கு அதே பரிதாபத்தோடுதான் தெரிந்தது. தவிர, புளியமரத்தின் கதையை அன்றைக்கு நான் படிக்கவுமில்லை. படித்திருந்தேன் என்றாலும், நாவலின் கட்டியக்கா ரன் மாதிரி கதைகூறிய அந்த வித்தகக்காரக் கிழவனைத்தான் தேடியிருப்பேன்!

இன்னொரு திருப்பத்தில் நடந்துக் கொண்டிருந்த போது, அந்த சாலையில் இருந்து இன்னொருசாலைக்கு குறுக்கு வழியாக ஓர் உயர் நிலைப் பள்ளிக்கட்டிடத்தைக் கடந்தபோது, தான்படித்த பள்ளிக்கூடம் என்றார். அவரது சிறுகதைகள் சிலவற்றில் அந்த பள்ளிக் கூடம் இடையோட்டமாக காட்டப்பட்டிருப்பதை வாசித்திருக்கிறேன்.அந்த பள்ளிக்கூடத்தையும் அதையொட்டிய பெரிய விளையாட்டு மைதானத்தையும், அந்த மாலை வேளையில் மாணவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்ததையும் ஓர் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு நான்மட்டும் எழுந்து நின்று, அந்த உயர்நிலைப் பள்ளியின் நான்கு புற காம்பௌண்ட் சுவரையும், நடைப் பாதையின் ஓரமாக ஓங்கி வளர்ந்து நின்ற 'நெட்லிங்'கையும் பார்த்தேன். நான் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பதாக சு.ரா. நினைத்திருக்கக் கூடும்! அப்படி அவர் நினைத்திருந்தால் அது தவறாகப் போயிருக்கும். சீர் காழியில் நான் படித்த 'சபாநாயக முதலியார் இந்து உயர் நிலைப்பள்ளி' யின் கட்டிடமும் அந்த நடைப்பாதை நெட்லிங்கும் அப் படியே இங்கே பேர்த்து வைத்தமாதிரி தெரிந்ததினாலோ என்னவேதான் அப்படி கண்கொட்டாமல் பார்த்தேன்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலையில் வெகுதூரம் நடந்தோம். ஒரு திருப்பத்திலிருந்த, டீகடையில் டீசாப்பிட்டு விட்டு மீண் டும் வீடுநோக்கி திரும்பினோம். அவரது வீட்டின் அருகான்மையில் ஒரு புத்தகக்கடை! ஏதோ பல சரக்குகடை மாதிரி அல்லது அதை விட மோசமான நிலைக்கொண்டதாக இருந்தது.புத்தகங்களை கீரைக்கட்டு மாதிரி திட்டுத்திட்டாக குவித்து வைத்திருந்தார் கள். என்றாலும், அந்த கடையில் புத்தகம் வாங்கவே நினைத்தேன். அந்த காலக்கட்டத்தில் புத்தகக்கடையைப் பார்த்துவிட்டால் எனக்கு ஏற்படும்ம் பரபரப்பு சொல்லிமாளாது. அறிவே புத்தகத்திலிருந்துதான் என்பதாக ஓர் மாயை. சு.ரா. அவர்களை அவரது டேஸ்டிற்கு ஒருபுத்தகத்தை தேர்ந்தெடுத்து தரும்படிச் சொன்னேன்.முதலில் தயங்கியவர்,'வா.ரா.வாசகம்' என்கிற புத்தகத்தை பின் தேர்வு செய்து தந்தார். இன்றைக்கும் என் புத்தக அடுக்கில் அது தலைக்காட்டிக் கொண்டிருக்கிறது.

இரவென்றும் பாராது நான் தங்கிருந்தலாட்ஜ்வரை உடன்வந்திருந்து சு.ரா என்னை வழியனுப்பி வைத்தார். சு.ரா.வுடன் இன்னொரு எழுத்தாளரும் உடன்வந்தார். அவர்தான் திரு.அ.கா.பெருமாள் அவர்கள். சு.ரா.வுடன் நான் சம்பாசனைகள் தொடங்கிய போதே அவர் வந்தார். சு.ரா.எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னால் நான் அவரது எழுத்தைப் படித்தது இல் லை. சரியாகச்சொன்னால், இலக்கிய வட்டத்திற்குள் அவரை அறிய நேர்ந்து அப்பொழுதுதான். அன்றைக்கு இலக்கியத்தில் அத் தனைக்கு பொடுசு. திரு.அ.கா.பெருமாள் அவர்கள் ஆரம்பம் தொட்டு கடைசிவரை அன்பு கொண்ட பார்வையல்லாமல் வேறொ ன்றும் என்னோடு பேசினாரில்லை! ஜே.ஜே. சில குறிப்புகள் படித்துவிட்டு எல்லைகள் பல தாண்டி வந்துவிட்ட பொடியன் என்ற றவர் நினைத்திருக்கலாம். நிஜமும் அதுதான்.

சு.ரா.வேடு எனக்கு அதன் பிறகும் சிலகாலம் கடிததொடர்பு இருந்தது. எனது தந்தை இறந்ததை யொட்டிய என் ஆற்றாமையை சு.ரா.வுக்கு எழுதியிருந்தேன். சு.ரா.விடமிருந்து பதில் வந்தது. ஒரு கவரில் இரண்டு கடிதங்கள். ஒன்று, அதற்கு முன் நான் எழு திய இலக்கியம் சார்ந்த சங்கதிகளுக்கானது. இன்னொன்று, என் துயரத்தை துல்லியமாக அவர் புரிந்துக் கொண்டதிற்கான பதில். அவரது ஆறுதல் வரிகள் எனக்கன்றைக்கு சரியான மனவைத்தியம்.

இன்றைக்குகூட எனக்கு, ஒருவரின் இறப்பு குறித்து அவரின் சம்பந்தப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி எழுத வராது. இயற் கையின் தத்துவத்தையும், நடைமுறை வாழ்வின் போதாமையுமாக பெருவெளித் தத்துவங்களை அதில் மொழுவி, சம்பந்தப் பட்ட வர் மதவாதியாக இருந்தால், ஆண்டவனையும் ஆன்மாவையும் துணைக்கழைத்து... பெரியகஷ்டம்! வாசிக்கும் சம்பந்தப் பட்டவ னுக்கோ, இருக்கிற சோகம் போதாதென்று அந்த கடிதத்தமும் கூடிக்கொள்ளும். சு.ரா. மறைவையொட்டி அவரது மகன் கண்ண னுக்கு ஆறுதல்கூற நினைத்தபோது, நல்லப்பிள்ளையாக சு.ரா.எனக்கு எழுதிய அந்த ஆறுதல் கடித வரிகளையே காப்பிசெய்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.

சு.ரா.வை நாகர்கோவிலில் வைத்து சந்தித்தப்பிறகு, அடுத்து அவரை சந்தித்தது பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு! 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' புத்தக வெளியீட்டின் விழாவின் போதுதான் அவரை பார்த்தேன். அந்த நாவலை அரங்கத்தில் வாங்கிய நான், விழா முடிந்த நேரத்தில் அதில் அவரிடம் கையெழுத்து வாங்கப்போனேன். கையெழுத்து இட்டுத் தந்தார். 'என்னை நினை விருக்கிறதா ஸார்?' என்றேன். ஏறிட்டுப்பார்த்து யேசித்துவிட்டு 'தெரியவில்லையென' உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினார். 'ஜனவரி ஒன்னில் வாருங்கள் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்' என்ற அவரது கடித வரி ஞாபகத்தி ற்கு வந்தது. நிஜமாகவே அப்பொழுது ரெம்பவும் அவர் தளர்ந்திருந்தார். முதுமை மனிதர்கள் மீது ரொம்பவும்தான் ஆளுமைச் செய்கிறது. மனிதர்களை அது மறதியின்பால் தள்ளுவது ஆகப் பெரிய கொடுமை. யார்தான் தப்பிக்க முடியும்?

எழுத்தாளர் தாஜ்'தமிழ் இனி 2000'விழாவின் முதல்நாளன்று சென்னை மியூசியம்அரங்கில் கவிஞர்.சல்மாவின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் மீண்டும் சு.ரா.வை காணும் வாய்ப்புகிடைத்து. இந்தமுறை தூரத்தில் மேடையில் வைத்துக் கண்டேன். அவரது முகம் சரிவரப் பார்க்க கிடைக்காது போனதில் சங்கடமில்லை. அவரது உருவம்தான் மனதில் தெளிவாக இருக்கிறதே!

இன்றைக்கு சு.ரா. இல்லை.ஜே.ஜே.சிலகுறிப்புகளில், 'ஜே.ஜே.' மாதிரி ஆகனுமென பாலு என்கிற இளைஞன் ஆசை கொள்வான். அதை எழுதிய சு.ரா. மாதிரி ஆகனும் என்பதாகக்கூட அந் நாவலைப் படித்த பல இளைஞர்கள் ஆசைக்கொண்டார்கள். அவர் களது ஆசை வீண்போகவில்லை.சிலர் தங்களின் படைப்பின் வழியே அப்படி முயன்று சாதித்தும் இருக்கிறார்கள்! அந்த தொட ர்ச்சியான முயற்சிகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சு.ரா.வுக்குப் பதிலாக பல சு.ரா.க்களை காலத்தில் நாம் பார்க்கலாம். பின், சு. ரா. வுக்கு இறப்பேது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R