சுதந்திரனில் அ.ந.க 8.7.51

அ.ந.கந்தசாமியின் சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை -

அறிஞர் அ.ந.கந்தசாமி- இது ஒரு புரட்சிகரமான கட்டுரை. பழமையில் ஊறியவர்களுக்கு பதட்டத்தைக் கொடுக்கக்கூடிய கருத்துக்கள் நிறைந்தது.. எனினும் பிரசுரிக்கிறோம் கட்டுரை தர்க்கரீதியாக எழுதப்பட்டிருப்பதால். சிலப்பதிகாரத்தின் தலைவியாகிய கண்ணகி தமிழ்ப்பெண்மையின் சிறப்புக்கு உதாரணமாக இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகிறாள்.  சிற்சிலப பகுதிகளில்  கண்ணகி சிலை வடித்து தேவதையாகவும் பூஜிக்கப்படுகிறாள்.  ஆனல், "அவள் பெண்மையின் உயர்வைக் காட்டவில்லை, பெண்ணடிமைத்தனத்தின் அதல பாதாளத்தை நமக்கு அறிவுறுத்துகிறாள்." என்று வாதிக்கிறார் நமது கட்டுரையாளர் பண்டிதர் திருமலைராயர்.  துணிகரமான அவர் கருத்துகளுக்கு அவரே தாம் பொறுப்பாளர் என்பதை வாசக நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.  இக்கட்டுரையின் கருத்துகளுக்கு சாதகபாதகமான அபிப்பிராயங்கள் சின்னஞ்சிறு கட்டுரையாக தீட்டப்பட்டு எமக்கு அனுப்பப்பட்டால் அவை உசிதம் போல் பிரசுரமாகும்.  - ஆசிரியர் , சுதந்திரன்; 8.7.1951 -

அ.ந.கந்தசாமி சுதந்திரன் ஆசிரிய பீடத்திலிருந்த காலகட்டத்தில் (1949 -1952) 'பண்டிதர் திருமலைராயர் ' என்னும் பெயரில் எழுதிய முதலாவது கட்டுரை. இது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது. பலர் எதிர்வாதங்களை முன் வைத்தார்கள். அவற்றுக்கு அ.ந.கந்தசாமியும் (பண்டிதர் திருமலைராயர்) தன் தர்க்கங்களை முன் வைத்தார். இவ்விடயத்தில் அவரது மூன்று கட்டுரைகள் எமக்குக் கிடைத்துள்ளன. அவை இங்கு பிரசுரமாகும். இவற்றில் சிலவற்றைப் பெரியார் தனது 'குடியரசு' பத்திரிகையில் மீள்பிரசுரம் செய்ததாக அறிகின்றோம். ஆனால் அவை எவை என்பது தெரியவில்லை. அறிந்தவர்கள் அறியத்தரவும். - ஆசிரியர், பதிவுகள் -


'உண்மை கசப்பானது. ஆனால் அதை எவராவது கூறித்தான் ஆகவேண்டும்' -   ஒரு அறிஞர் -

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெண்ணினம் ஆணினத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து வந்திருக்கிறது. ஆண்களின் விளையாட்டுப் பொருட்களாகவும், வேலை செய்யும் ஏவலாளராகவும் , சமைத்துப்போடும் சமையற்காரிகளாகவும், பிள்ளைபெறும் யந்திரங்களாகவும் பெண்கள் விளங்கி வந்திருக்கின்றார்கள்.

முதலில் ஆண்கள் தங்கள் அதிகரித்த பலத்தைக்கொண்டும், பெண்ணுக்குத் தாய்மையால் ஏற்படும் தவிர்க்கவொண்ணாத பலவீனத்தைத் துணையாகப்பெற்றும், தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இவ்வுலகையே ஆணின் உலகமாகவும் ஆக்கிவிட்டார்கள் அவர்கள்.

ஆதியில் பெண்களுக்கு கால் கைகளில் விலங்குகள் இடப்பட்டதுமுண்டு. இவையே பின்னாள் பொற்காப்பாகவும், காற்சிலம்பாகவும் மாறின என்று பரிணாம நாகரீகத்துறையில் ஆராய்ந்த மேனாட்டு அறிஞர்கள் அனுமானித்திருக்கின்றார்கள்.

இது மனிதன் மிருக பலத்திலே நம்பிக்கொண்டிருந்த காலத்தின் நடைமுறை. பின்னால் நிலைமை மாறியது.

மனிதந் அதாவது ஆண் - அறிவுத்துறையிலே முன்னேறினான். புத்தியைத்தீட்டி புதுவழிகளை வகுத்தான். மொழியும் கலையும் கண்டான். கவிதை, சிற்பம், மதம் எல்லாம் கண்டான்.

அ.ந.கந்தசாமியின் சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை -

கற்பா? அடிமைப் புத்தியா?
பெண்களின் அடிமைப்புத்தியை வளர்க்க வேண்டும் என்று அதற்கான பிரசார வித்தையை மேற்கொண்டது ஆணுலகம். "பெண்களுக்குக் கற்பே அணிகலன். அதனை அணிந்துகொள்ளுங்கள். கற்பரசிகளால் ஆகாதது ஒன்றுமில்லை.  கடவுளைக்கூடக் கும்பிட வேண்டாம். கணவனைக்கும்பிடுங்கள். வெய்யில் எரிக்கட்டும் என்று பதிவிரதை பகர்ந்தால் நள்ளிரவிலும் பட்டப்பகல்போல் வெடில் எரிக்கும்!" இந்தத்தோரணையில் இருந்தது இந்தப்பிரச்சாரம்.

பெண் புத்தி  பின் புத்தி என்பார்கள். பெண்கள் இந்தப் பதிவிரதைத் தன்மை,  கற்பு என்ற கதைகளிலே முற்றாக மயங்கி விட்டதோடு அந்த இயற்கைக்கு மாறான பாதையிலே தங்கள் வாழ்க்கையை நடத்தவும் ஆரம்பித்தார்கள். உண்மையிலே சரித்திரத்திலே பல மோசடிகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கின்றதென்றாலும் ஆண் பெண்ணை ஏமாற்றக் கண்டு பிடித்த காதல் , கற்பு என்னும் இந்த மோசடிக்கு ஈடாக வேறு எதையுமே கூறிவிடமுடியாது.

நாலுகால் பிராணிகளுள்ளே நாய் நன்றி விசுவாசம் நிறைந்தது என்று கூறப்படுகிறது. இந்தப் பிராணி உதைத்த காலை முத்தமிடுவதை நாம் காணலாம். நன்றி விசுவாசத்திலும்பார்க்க அடிமைப்புத்தியின் தடிப்பு இந்தச் செய்கையில் இருக்கிறதென்று கூறினால் அது அதிகம் பொருந்தும்.

அடிமைப்புத்தியை விசுவாச உணர்ச்சி என்று பூசி மெழுகிய கூட்டத்தினர்தான் அடிமைப்புத்தி தடித்த ஏமாந்த பெண்களை , தன்மானமற்று தமது கணவர்களின் காலுதைதையும் பொறுத்து வாழந்த கோழைப்பெண்களை கற்பரசிகள், பதிவிரதைகள் , பத்தினிகள் என்று கூறி ஏமாற்றினார்கள். அதன் மூலம் இதர பெண்களையும் என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கக்த் திட்டம் தீட்டியது.

சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் மனைவி கண்ணகி இந்த பெண் அடிமைத்தனத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டு. அவளிடம் காணப்படும் கற்புணர்ச்சியை நாயிடம் காணப்படும் நன்றி விசுவாசத்துக்கே ஒப்பிட வேண்டும்.  அந்தப் பாத்திரத்தை ஆக்கிய இளங்கோவடிகள் பெண்ணினத்தின்மீது ஆணினத்தின்பிடியை மேலும் இறுகச் செய்வதற்கே அதனைச் சமைத்ததோடு பெண்கள் இந்தப்பத்தினித்தெய்வத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஒழுகவேண்டும் என்று விரும்புவதும் நன்கு தெரிகின்றது.

கண்ணகியின் பண்புகள் யாவை?
கண்ணகி என்ற இப்பெண் எப்படிப்பட்டவள்? கணவன் வேசி வீடே சதமெனக்கிடந்தான்.  தன் கைப்பொருள் யாவற்றையுமிழந்து ஒட்டாண்டியுமானான் கோவலன். அதன் பயனாக வறுமையுற்ற அவன் வீடு வருகிறான்.  அவள் எதிர்கொண்டு வரவேற்கின்றாள்.  பின் அவனுடன் தன் நாடு விட்டு மதுரை மாநகருக்குச் செல்கின்றாள்.  கோவலன் தன் சாமர்த்தியமான பேச்சினால் அவளை மயக்கி விடுகிறான். கண்ணகி தனது சிலம்பையும்  அவனுக்குத்தர அவன் அதை விற்றுப் பணமாக்க முயல்கிறான். அப்பொழுது அச்சிலம்பின் வெளித்தோற்றத்தின் ஒற்றுமையைக்கண்டு பாண்டிய மன்னன் தனது தேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வனென எண்ணி நாட்டு வழக்கப்படி மரண தண்டனை விதிக்கிறான். கண்ணகி இதை அறிந்து வெகுண்டெழுந்து ஒன்றுமறியாத மதுரை மக்களைத் தீயிலிட்டுக் கொல்கிறாள்.  அவளுக்கு இப்பணியில் உதவ வந்த அக்கினியிடம் பார்ப்பாரைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவு வேறு பிறப்பித்து விடுகிறாள்.

இச்செய்கைகளின் அடிப்படையில் கண்ணகியிடம் மூன்று பண்புகள் உயர்ந்து நிற்பதைக் காண்கிறோம்.  அவையாவன: ஒன்று முன்னே கூறிய கற்பென்னும் ஏமாளித்தனம்.  இரண்டாவதாக மன்னனின் தவறால் நேர்ந்த ஒரு பிழைக்காக குற்றமற்ற மதுரைப்பொதுமக்களை நெருப்பினால் கொளுத்திய கொடுமையைக் காண்கிறோம்.

மூன்றாவதாக நாம் காண்பது பார்ப்பார ஜாதியினரை நீக்கி மற்றவர்களை நீறாக்கிய பாரபட்ச நீதி.

இந்த மூன்று சிறப்பற்ற பண்புகளும் பொருந்தியவள்தான் கண்ணகி. இவளைத் தமிழ்ப்பெண்மையின் உயர்வுக்கு எடுத்துக்காட்டெனச் சிலர் கூறுவது பொருந்தா வாதமே. இழிவுக்கே இவள் உதாரணமாகக் கூடும்.

ஆனால் இன்று கண்ணகியைப் பெண்மையின் உயர்வுக்கு எடுத்துக்காட்டுபவர் எல்லோரும்  பிற்போக்குவாதிகள் என்று பெயர்  வேண்டிக்கொண்ட பேர்வழிகளல்ல. பகுத்தறிவுவாதிகள். தன்மான இயக்கத்தினர் சிலரும் கண்ணகியைப் பிடித்துகொண்டு கதறுகிறார்கள். ஆரியத்தையும், பார்ப்பனியத்தையும் ஒழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் திராவிடச் சிங்கங்கள் கூட கண்ணகி தமிழச்சி  என்று கூவுகிறார்கள். ஆனால் பார்ப்பனர்களைக் கொல்லாதே என்று அக்கினி  தேவனுக்குக் கட்டளையிட்ட தமிழச்சி அவள் என்பதை  அவர்களில் பலர் அறிய மாட்டார்கள். அறிந்தவர்கள்  பூசி மெழுகுகிறார்கள் போலும்.

நன்றி: சுதந்திரன் 8.7.51

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R