1) விக்டோரியா

- நடேசன் -கனடாவில் வதியும் எனது சகோதரங்களைப் பார்ப்பதற்காக இதுவரையில் மூன்று தடவைகள் சென்று திரும்பியிருக்கின்றேன். விமானம் முதலில் தரிக்கும் நகரமான வன்கூவரில் இறங்காது, மீண்டும் விமானத்திலேயே ரொண்ரோவிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் அதேவழியால் ஆஸ்திரேலியா திரும்பிவிடுவேன்.

கனடா என்ற பரந்த தேசத்தின் அழகான பகுதி மேற்கில் இருப்பதை அறிவேன். விமானத்திலிருந்து கீழே பார்க்கும்போது நீலக்கடலில் திட்டி திட்டியாக பல தீவுகளை தன்னகத்தே கொண்ட பிரதேசங்களை தரிசிக்க முடியும். இறங்கி பார்த்துவிட்டுபோவோமா என்ற ஆவலை அடக்கிக் கொண்டு மரங்களில் இலைகளற்ற பொட்டல் வெளிபோல் தெரியும் ரொரண்ரோவில் இறங்குவேன் .

நான்காவது தடவை வன்கூவரில் மிருகவைத்தியர்களின் மகாநாடு நடப்பதால் அங்கு செல்வதற்கு ரொரண்ரோ வழியாக செல்ல முயன்றபோது, அங்கே இடியும் மின்னலுமாக இயற்கை தாண்டவமாடியது. அதனால் பல மணிநேரம் விமானம் நிலையத்தில் தாமதமாகியது. காத்திருந்து இரவாகிவிட்டது. அந்த இரவுப்பொழுதை ரொரண்ரோவில் கழித்துவிட்டுப் போவோம் எனத் தீர்மானித்து விமான நிலையத்தை விட்டு வெளியேவந்தால் அதிர்ச்சி காத்திருந்தது. எனது பொதிகள் விமானத்தில் ஏற்கனவே வன்கூவர் செல்வதற்காக ஏற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது .

இரவு பத்து மணியாகிவிட்டது .

விமானநிலையத்தருகே ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு அடுத்த நாள் சகோதரத்தின் வீடு சென்றேன். அதன் பின்பு இரண்டு நாட்களில் எனது பொதியைக் கொண்டு வந்து அங்கு தந்தார்கள். மகாநாடும் வன்கூவரும் ஊமையின் கனவாகியது.

நான்காவது முறையாக புறப்பட்டபோது, வான்கூவரில் எனது நண்பன் ஒருவன் இருப்பதால் அவனிடம் சென்றேன். மூன்று நாள் மட்டும் தங்கியிருந்து ஒரு நாள் விக்ரோரியா நகரத்தைப் பார்ப்பதென்றும் அடுத்த நாட்களில் விசிலர் என்ற மலை சார்ந்த நகரமொன்றையும் பார்ப்பதென முடிவு செய்தேன் .

முதல்நாள் காலையில் எழுந்ததும் எனது நண்பனின் நண்பனுடன் பேசி, அன்றைய மதியத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மலைப்பாதைகளின் ஊடாக விசிலர் சென்றடைவதற்கு இரவாகிவிட்டது.

எதிரே இருளடைந்து கருமையாகத் தெரிந்த மலைகளை திருதராட்டினன் குருஷேத்திரத்தை பார்த்ததுபோல் பார்த்தேன் . அதன் பின்பு நிலத்திலுள்ள பனிக் குவியல்களைத் தாண்டி அங்குள்ள ரிம் ஹோட்டலில் வெற்றிகரமாக காப்பி குடித்து விட்டு விசிலரைப் பார்த்த களைப்பிலும் களிப்பிலும் நண்பனது வீடு திரும்பினோம்.

அடுத்த நாள் வன்கூவரில் இருந்து கப்பலேறி, தலைநகர் விக்ரோரியா நகர் சென்ற போதும் அங்கும் இரவு எம்மை நிழலாகத் தொடர்ந்தது. மின்னொளியில் அங்குள்ள பாராளுமன்ற கட்டிடத்தை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் கப்பலில் திரும்பினோம் . சிறிய பெரிய தீவுகளாக பசுபிக்கின் கரை எங்கும் இருந்ததைக் காணமுடிந்தது.

 

மேற்குக் கனடாவில் சில நாட்கள் (1 & 2)

நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்து ஊர் பார்க்க முடியாது என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை. காலை உணவை முடித்துப் புறப்படுவதற்கே அரைநாள் முடிந்துவிடும். விருந்தோம்பல் எமது கலாசாரக் கூறானதால் அதை ஒரு சடங்காக்கி விடுவார்கள். முக்கியமாக கனடா சென்றால் விருந்தோம்பலை நினைத்து எனது இதயம் தாலிகட்டும் நேரத்து மேளமாக அடித்துக்கொள்ளும்.

உணவருந்தாதபோது அதனையும் அந்த உறவுகள் குறையாக நினைப்பதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் . சிலரது வீடுகளிலிருந்து எழுந்து வெளியாகிடவே அரை நாளாகிவிடும். நம்மவர் மத்தியில் பயணிப்பது என்பது தலயாத்திரைக்கானது எனவும் கோயிலை நோக்கிய பயணமாகவே காலம் காலமாக அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊரில் கோயில் கொடியேற்றம் வந்துவிட்டால் அதற்காக விடுமுறை எடுத்துப்போய்வருவார்கள். அதைக்கூட “ ஒருக்கா கோயிலுக்கு தலை கறுப்பைக் காட்டவேண்டும் “ என்றுதான் சொல்லியபடி அதனையும் ஒரு வேலையாக நினைத்துச் செய்பவர்கள் நம்மவர்கள்.

முன்னைய இரண்டு அனுபவங்களினாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக இம்முறை மேற்கு கனடாவைப் பார்க்கச் சென்றேன் . எனது மனைவி செயற்கை இடுப்பைப் பெற்றதன் பின்னர் தொடங்கிய நீண்ட பயணம். நோய்களுக்கு நாம் சரணாகதியுடையத் தேவையில்லை என்ற நினைப்பில் புறப்பட்ட பயணம்.

விக்டோரியா என்ற நகரத்தை நான் கேள்விப்பட்டது அங்கு காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நடந்தபோதுதான். பிரிட்டிஷ் கொலம்பியா என்ற கனடிய மாகாணத்தில் மேற்கு கனடாவில் உள்ள வன்கூவர்த்தீவின் தென்கரையில் உள்ள அழகிய சிறிய நகரமே விக்டோரியா . சிறிய நகரமான போதிலும் நெருக்கமாக மக்களையும் மின்னணுத்தொழில் துறை சார்ந்த உற்பத்திகளையும் கொண்ட நகரம்.

அங்கு மூன்று நாட்கள் நிற்க முடிந்தது . கால் நடையாக பல இடங்களைப் பார்க்க முடிந்தாலும், என்னை மிகவும் கவர்ந்த இடம் அங்குள்ள தனியார் ஒருவரால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் மலர்வனம் ஆகும். அதுதான் The Butchart Gardens. மிகவும் அழகான இடம். மேலும் நாங்கள் அங்கே சென்ற நேரம் ஜூலை மாதமானதால் சூரிய ஒளியில் சிலிர்த்தபடியே பூக்கள் மலர்ந்திருந்தன. உலகத்தின் சகலவிதமான மலர்களும் ஒரு இடத்தில் பூத்து சிரித்தன.

இந்த மலர்வனம் அமைந்த இடம் ஆரம்பத்தில் சிமெந்து தயாரிப்பதற்காக சுண்ணாம்புக்கற்கள் தோண்டப்பட்ட இடம் என்பதை அறிந்தபோது ஆச்சரியமளித்தது . பள்ளமான இடங்களுக்கேற்ப நிலத்தை செம்மைப்படுத்தி உலகத்தின் அழகிய மலர்வனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் அங்கு உலாவிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

சீன மக்கள் தங்களுக்காக உருவாக்கிய சைனா டவுன் பெரிதாக இங்குள்ளது. அவ்விடத்தை அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவிற்கு அடுத்தது என வர்ணிக்கிறார்கள் .

1867 இல் கனடாவும் ஒரு நாடாக அமைந்தாலும், நான்கு வருடங்களின் பின்பு, 1871 இல் கனேடிய சமஷ்டியில் கொலம்பியா சேர்ந்ததற்கான முக்கிய காரணம் கிழக்கையும் மேற்கையும் இணைத்து இரயில்வே பாதை போடப்படும் என்ற வாக்குறுதிதான்.

இப்படிக் கேட்டதற்கான காரணம் அமெரிக்கர்களுக்குப் பயந்தே என்பதும் ஒரு செய்தி. ஏற்கனவே 1812 இல் அமெரிக்கர்கள் ரொரண்டோவை எரித்து விட்டுச் சென்றார்கள். அதற்குப் பதிலாக வெள்ளை மாளிகையை பிரித்தானியர்கள் எரித்தார்கள். பிரித்தானியர்களின் பாதுகாப்பு பிரிட்டிஸ் கொலம்பியாவிற்கு இல்லாது போய்விட்டது .

இதைவிட 1858 இல் தங்கம் தேடுவதற்காக கலிபோஃர்ணியா வந்தவர்கள் , மேற்கு கனடாவில்வந்து மதுபானம் விற்பதைத் தடுப்பதற்கே 1873 இல் அங்கு பொலிஸ் துறை (The North West Mounted Police) உருவாகியது .

கனடாவின் இரு பகுதிகளையும் இரும்புச்சங்கிலியால் பிணைத்து அமெரிக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கமாக இந்த ரயில் பாதை உருவானது. ஆனால், ரொக்கி மலையூடாக பாதை போடுவதற்கான ஆள்பலமில்லாதபடியால், மேற்கு கனடாவில் ரயில் பாதை போடுவதற்காகச் சீனர்களை கூலிகளாக அழைத்தார்கள்.

குறைந்த வேதனத்தில் (ஒரு நாள் கூலி 7 சதம் ) ரொக்கி மலைப்பகுதியைக் குடைந்து பாதை அமைத்தார்கள். பெரும்பாலான வேலைகள் மனித உடலுழைப்பால் செய்யப்பட்டன. குதிரைவண்டிகள் மற்றும் நீராவி இயந்திரங்கள் மட்டுமே இந்த கடின வேலைக்குப் பாவிக்கப்பட்டன . ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பலர் இறந்தனர். மிகுதியானவர்களில் சிலர் சீனா திரும்பினாலும் பலர் கனடாவிலேயே தங்கிவிட்டனர் . தற்பொழுது அவர்களின் சந்ததியினர்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவில் முக்கிய மக்கள் தொகையினர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சட்டசபை மிகவும் அழகான கட்டிடம். கடல் அதற்கு எதிரில் ஓசை எழுப்புகிறது. அருகே கனடா ரயில்வேயால் கட்டப்பட்ட எம்பரஸ் ஹோட்டல் உள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களும் அக்காலத்தின் ஐரோப்பியக் கட்டிடக் கலை வடிவத்தைக் கொண்டவை. இரண்டு நாட்கள் இந்த இரு கட்டிடங்களின் உள்ளே இலவசமாகச் சென்று பார்க்க முடிந்தது . கெமராவால் படம்பிடிப்பதற்கே உருவாக்கிய நகரமாக விக்டோரியா எனக்குத் தோற்றமளித்தது.

(2) விசிலர்

பஸ்ஸில் முப்பதிற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்களுடன் எங்கள் பயணம் ரொக்கி மலையின்மீது தொடங்கியது. பிஜியைச் சேர்ந்த இந்திய இளைஞனே எங்கள் வழிகாட்டி. கேர்ணல் ரம்புக்கா, எண்பதின் இறுதியில் செய்த ஆயுதப் புரட்சி பிஜி இந்தியர்களை வெளித்தள்ளியது. பலர் அவுஸ்திரேலியா, கனடா , இங்கிலாந்து என இலங்கைத் தமிழர்கள்போன்று தப்பியோடினார்கள்.

கடந்தமுறை இரவில் சென்று பார்க்க முடியாத மலை சார்ந்த இடமான விசிலர் 11 ஆயிரம் நகரம் மக்கள் வசிக்கும் நகரம். ஆனால், குளிர்காலத்தில் இங்கு பத்துமடங்காக மக்கள் பெருகுவார்கள். இரண்டு மலை முகடுகள் நடுவே இருப்பதால் வட அமெரிக்காவிலே பனிச்சறுக்கு விளையாட்டுக்கு முதன்மையானது. 2010 இல் இங்கு குளிர்கால ஒலிம்பிக் நடந்தது

அவுஸ்திரேலியர்கள் ஆதிவாசிகளை அபோரிஜின்ஸ் ( பழங்குடியினர்) என்பார்கள். அமெரிக்காவில் 500 வருடங்கள் முன்பாக ஸ்பானியர்கள் பாவித்த வார்த்தையை பாவித்து அமெரிக்க இந்தியர்கள் என்பார்கள். ஆனால், கனடாவில் மட்டும் அழகாக இவர்களை முதல் தேசற்றவர்கள் என்கிறார்கள் (First nation people) , நாங்கள் சென்றவிடத்தில் விசிலர் ஸ்குவாமிஸ் ( The Squamish Nation ) இனத்தினர்களது கலாச்சார நிலையத்திற்குச் சென்றபோது இவர்களது நடனம், பாடல்களைக் கேட்க முடிந்தது .

இவர்கள் செமன் மீன்களை ஆற்றில் பிடிப்பதற்கும், காட்டை உரிமை கொண்டாடுவதற்கும் அதிகாரத்தைப் பெற்ற சுயாதீனமான குழுவாக தொழிற்படுகிறார்கள். இவர்களது கவுன்சில்கள் மத்திய அரசுடனும் மாகாண அரசுடனும் இணைந்து பல தொழில்களில் ஈடுபடுகின்றன. ஆறுகளில் மீன்பிடிப்பதற்குச் சீடர் (Cedar) என்ற தனி மரத்திலிருந்து குடைந்து படகுகளையும் பட்டையின் உட்பகுதியிலிருந்து குளிரிலிருந்து பாதுகாக்க மிகவும் அழகிய உடைகளையும் தயாரித்தார்கள் .

Marmots மமொட்ஸ் எனப்படும் அணில் போன்றவை தங்களுக்குப் பயம் வந்தால், ஒரு வித விசில்போல சத்தமிடும். அப்படியான அணில் வகையானவை வசிப்பதால் இந்த இடத்திற்கு அந்தப்பெயர் வந்தது .

இங்குள்ள மலை உச்சிகள் பனிபடர்ந்த குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்குப் பிரபலமானவை. கடந்த குளிர்காலத்தில் எங்கும் பனி முழங்காலளவில் இருந்தது. இப்பொழுது கோடைக்காலத்தில் பனியாடையை நீக்கிய தரை பச்சையாகியிருந்தது. முக்கியமான சிகரங்கள் இடையே கொண்டலியர் என்ற வான்கதிரைகளில் சென்று பார்த்துக்கொண்டோம். கொண்டலியர் இல்லாத சிகரங்களில் கரடிகள் இருக்கலாம் என்பதால் அங்கு போவதற்கு ஒருவரைத் தேடி ஜீப்பொன்றையும் பதிவு செய்தோம். எங்களைத் தேடி உயரமான வெள்ளை இளைஞன் வந்து தனது பெயர் ரிச்சர்ட் என்றபோது அவுஸ்திரேலிய தொனியில் இருந்தது எந்த இடம் எனக்கேட்ட போது குயின்சிலாண்ட் என்றான்.

“ ஜீப்பில் ஏறி மலை உச்சிக்கு செல்லவேண்டும் “ என்றோம்.

தொடர்ச்சியாக அவனுடன் உரையாடல் நடந்தது.

“இரண்டு வருடங்களாக விசிலரில் வேலை செய்கிறேன் . நண்பர்களுடன் இருக்கிறேன்”

“கேர்ள் பிரண்ட் இல்லையா ? “

“ இல்லை “ .

“ மீண்டும் எப்பொழுது அவுஸ்திரேலியா? “

“ இன்னமும் அதைப் பற்றி நினைக்கவில்லை. “

ஒருவிதத்தில் அவுஸ்திரேலிய இளைஞர்கள் அதிர்ஸ்டசாலிகள். ஐரோப்பா , வட அமெரிக்கா எங்கும் வேலை தேடிப் போகமுடியும். இளமையில் உலகத்தையும் , மனிதர்களையும் சந்தித்து வருவதால் பலரதும் மனமும் பரவலாகிப் பண்படுகிறது. எந்தச் சந்தர்ப்பங்களையும் சகித்துக்கொள்ளும் இயல்பு கிடைக்கிறது.

பல இடங்களில் வாகனத்தில் சென்று இறங்கியபோது அவனே எங்களது போட்டோ கிராபர். ஐந்து நிமிடத்திற்கு ஒருதடவை அவனுக்கு, அவனது அலுவலகத்திலிருந்து வானொலி அழைப்பு வந்தது.

“ என்ன…? “ என்றுகேட்டபோது, “ ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பாதுகாப்பினை உறுதிப்படுத்த அழைக்கிறார்கள். “ என்றான்.

பாதுகாப்பு - போக்குவரத்து விடயத்தில் கனடா முன்னுதாரணமாகத் தெரிகிறது.

அவுஸ்திரேலியாவிலிருந்து போகும் எனக்குக் கனடாவின் நில அமைப்பும் அங்குள்ள மிருகங்களுமே புதியதாக இருக்கும். அவுஸ்திரேலியா போன்று கனடாவிலும் குளிர்பிரதேசத்திற்குப் பிரத்தியேகமான மிருகங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு ஆவலாக இருந்தேன்.

மலையுச்சியில் முதலில் தெரிந்தது மமொட்ஸ் என்ற அணில் . அணில் வகையில் இது பெரிதானது . குளிர்காலத்தில் உறங்கி கழிப்பதற்குத் தேவையான கொழுப்பை உடலில் வைத்தபடியிருக்கும். மலையுச்சியில் பாறையருகே இருந்து அங்குமிங்கும் பார்த்தபடியிருந்தது. வாகனத்தைவிட்டு இறங்கினால் மறைந்துவிடும் என்பதால் வாகனத்திலிருந்தே பார்த்துக் கொண்டேன் .

அணில்களைப்போன்று தாவரபட்சணியான இவற்றிலிருந்து ரேபிஸ் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அறிந்து கொண்டேன்.

மலையடிவாரத்தில் கடைகள், தங்கும் விடுதிகள் எல்லாம் உள்ளன. இங்கே 2010 இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் அடையாளங்களாக ஐந்து வளையங்கள் உள்ளன.

மலை உச்சிக்குச் செல்லும் கொண்டலாவில் பயணிக்கும்போது முழு நகரமும் தெரியும் . கனடாவில் மற்றைய இடங்களிலும் இயற்கை வளங்கள் அதிகமாகப் பாதுகாக்கப்படுகின்றன .

பைன் மரங்கள் வழியெங்கும் தொடர்ச்சியாகப் பச்சையாக காட்சி தருகின்றன. சிறுவயதில் படித்த ஊசியிலைக்காடுகள் நினைவுக்கு வந்தன. பச்சை மரங்களிடையே சிவப்பு பைன் மரங்கள் காணப்படுவது அழகான காட்சி. வழிகாட்டியின் கூற்றுப்படி அவை பைன் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் பட்டுப் போனவை.

“ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ. வானகமே இளவெயிலே மரச்செறிவே

நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ.”

பாரதியின் கவிதை ஞாபகத்துக்கு வந்தது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R