Tuesday, 29 October 2019 05:46
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் மதுமிதா. - -
நேர்காணல்

மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தின் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிகிறேன். வாழ்த்துக்கள்.
ஜெயந்தி சங்கர்: நன்றி மதுமிதா. Dangling Gandhi என்ற நூல் 2019ல்பிரசுரம் கண்டிருக்கிறது. 2011ல் எழுதி உள்ளூர் Ceriph இதழில் பிரசுரமான ஒரு கதை தவிர மற்ற 11 கதைகளுமே கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை.
மதுமிதா: நல்லது, தமிழில் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பல வடிவங்களிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறீர்கள். ஆங்கில சிறுகதைகளை எழுதும் விருப்பம் எப்போது எப்படி உங்களுக்குள் எழுந்தது?
ஜெயந்தி சங்கர்: சுமார் இருபத்தோரு ஆண்டுகள் தமிழில் எழுதிய பின்னர் 2016 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முதலில் 1995ல் எழுதத் தொடங்கியபோதே ஈராண்டுகளுக்கு இரு மொழிகளிலுமே எழுதினேன். எனினும், ஒரு கட்டத்தில் என்னதிது ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாமே என்றெண்ணியதன் பயனாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.
அசோகமித்ரன் உள்ளிட்ட மதிப்பிற்குரிய சில மூத்த தமிழ் எழுத்தாளர்கள் சீக்கிரமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இறுதிவரை தமிழிலேயே எழுதி வந்தனர் என்பது நமக்கெல்லாம் தெரியும், இல்லையா? எந்தத் திட்டமும் இல்லாமலே எனக்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.
சீக்கிரமே ஆங்கிலத்துக்கு வந்துவிடுவேன் என்றே எண்ணியிருந்தேன் அப்போது. ஆனால், நான் நினைத்ததைவிட தமிழ் என்னை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டது. தாமதமாகவேனும் ஆங்கிலத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
Last Updated on Tuesday, 29 October 2019 06:29
Read more...
Sunday, 06 October 2019 23:50
- கண்டவர்: வ.ந.கிரிதரன் -
நேர்காணல்
- அண்மையில் ஓவியர் கெளசிகனுடன் மின்னஞ்சல் மூலம் நடைபெற்ற நேர்காணலிது. - பதிவுகள் -
ஓவியர் கெளசிகன் தன்னைப்பற்றி........
1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 திகதி பதுளையில் பிறந்தேன். கொழும்பு கொட்டாஞ்சேனையில் U.C. மெதடிஸ்ட் கல்லூரியில் G.C.E. O/L வரை கல்விகற்றேன். 1980 களில் சிந்தாமணி பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். அதன்பின்னர், 1990 களில் தினகரனில் பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். 1994 முதல் தொழில்முறை ஓவிய ஆசிரியராகவும், 1998 முதல் ஒரு தொழில்முறை கணினி வரைகலைஞராகுவும், இணையத்தள பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறேன். 2003 இலிருந்து தொடர்ச்சியாக 11 ஓவியக்கண்காட்சிகளை எனது மாணவர்களை இணைத்துக் கொண்டு நடாத்தியுள்ளேன். 2018 இல் முதன் முதலாக இந்தியாவில் கொல்கத்தாவிலுள்ள சாந்திநிகேதனில் எனது கண்காட்சி ஒன்று அரங்கேறியது. இலங்கையிலிருந்து சாந்திநிகேதன் சென்று ஓவிய கண்காட்சி ஒன்றை நடாத்திய முதல் இலங்கையர் என்பதில் பெருமிதம். சென்ற மாதம் தமிழ் இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் கலைஞர்களுக்கான 2019 மாநில விருது வழங்கும் விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம் ஆகியவற்றால் "கலைச்சுடர்" என்ற பட்டத்தை கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் எனக்கு வழங்கப்பட்டது.
கேள்வி: உங்களுக்கு ஓவியத்துறை மீதான ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? ஏன்?
Last Updated on Monday, 07 October 2019 00:46
Read more...
Friday, 16 August 2019 23:53
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன் -
நேர்காணல்
குரு அரவிந்தன்: வணக்கம் கே. எஸ். சுதாகர், அவுஸ்ரேலியாவில் இருந்து கனடா வந்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஏதாவது இலக்கியச் சந்திப்புக்களை இங்கே ஏற்படுத்தி இருக்கிறீர்களா?
கே.எஸ்.சுதாகர் : நண்பர்கள் வ.ந.கிரிதரன், பாலமுரளி (கடல்புத்திரன்), எல்லாளன் ராஜசிங்கம், தேவகாந்தன் என்பவர்களை கிரிதரனின் முயற்சியால் சந்தித்தேன். மற்றும் மூத்த எழுத்தாளர் கதிர்.பாலசுந்தரம், `வெற்றிமணி’ ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (ஜேர்மனி), இன்று தங்களையும் சந்தித்திருக்கின்றேன். ரொறன்ரோவில் பலரும் இருந்ததனால், போக்குவரத்து காரணமாக பிறம்ரனில் தங்கியிருந்த என்னால் சந்திக்க முடியவில்லை. பலரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தும் முடியவில்லை. தொலைபேசி மூலம் நண்பர் அகில் நீண்ட நேரம் என்னுடன் உரையாடியிருந்தார்.
குரு அரவிந்தன்: அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள், இதழ்களின்; பெயர்களைக் குறிப்பிட முடியுமா?
கே.எஸ்.சுதாகர் : மெல்பேர்ணில் இருந்து `எதிரொலி’ என்ற பத்திரிகை, `அக்கினிக்குஞ்சு’ என்ற இணையமும் வெளிவருகின்றன. அதேபோல் சிட்னியில் இருந்து ‘உதயசூரியன்’, `தமிழ் ஓசை’, `தென்றல்’ என்ற சஞ்சிகைகளும், `தமிழ்முரசு’ என்ற இணையமும் வெளிவருகின்றன.
குரு அரவிந்தன்: ஏனைய புலம் பெயர் நாடுகளைப் போல வாசிப்புப் பழக்கம் தற்போது அங்கும் குறைந்து கொண்டு வருகிறதா?
கே.எஸ்.சுதாகர் : வாசிப்புப் பழக்கம் இங்கும் குறைந்துகொண்டுதான் வருகின்றது. `மெல்பேர்ண் வாசகர் வட்டம்’ என்றொரு அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. இதில் காலத்துக்குக் காலம் பலரும் இணைந்துகொண்டு வாசிப்புப் பழக்கத்தை ஊக்கி வருகின்றார்கள். சிட்னியில் `தமிழ் அறிவகம்’ என்னும் நூல் நிலையம் வாரத்தில் நான்கு நாட்கள் முழுநேரமாக தொழிற்படுகின்றது.
குரு அரவிந்தன்: கனடாவிலும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் தற்போது அடுத்த தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றோம். அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகள் தமிழ் வளர்ப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்.
கே.எஸ்.சுதாகர் : இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது பல மொழிகளில் இயங்கிவரும் SBS (Special Broadcasting Service) வானொலி. இது பிரதிவாரமும் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு மணித்தியால சேவையை வழங்கி வருகின்றது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதுபோல் பலவிதமான நிகழ்ச்சிகளை இவ்வானொலி தருகின்றது. தவிரவும் சிட்னியில் இருந்து 24 மணி நேரம் இயங்கும் இயங்கும் ATBC (Australian Tamil Broadcasting Corporation), இன்பத்தமிழ் வானொலி, தமிழ் முழக்கம், டிஜிட்டல் மூலம் இயங்கும் `தாயகம்’ என்பவற்றையும் குறிப்பிடலாம். இவற்றைத்தவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் பல தமிழ் வானொலிகள் இயங்கி வருகின்றன.
Last Updated on Friday, 16 August 2019 23:59
Read more...
Friday, 21 June 2019 07:27
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் மதுமிதா -
நேர்காணல்

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் மதுரையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தற்போது வசிப்பது சிங்கப்பூரில். எழுத்து (சிறுகதை, கதை, கட்டுரை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு), ஓவியம் மற்றும் இசை எனப்பன்முக ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் பல நூல்களாக வெளியாகியுள்ளன. பல விருதுகளையும் பெற்றவர். 'பதிவுகள்' இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன.
கவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்
தேதி: 2.2.2018 | இடம்: ராஜபாளையம், தமிழ்நாடு, இந்தியா
* தமிழ்குஷி எஃப் எம் ஆட்டோகிராஃப் நிகழ்ச்சிக்காக எடுக்கப்பெற்ற இந்த நேர்காணல் ஊடகங்கள் எவற்றிலும் இதுவரை ஒலிபரப்பப்படவில்லை.
Last Updated on Friday, 21 June 2019 21:17
Read more...
Sunday, 17 February 2019 21:28
- நேர்காணல் - கோமகன் -
நேர்காணல்
- எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'நடு' இணைய இதழில் வெளியான நேர்காணலிது.-
 உலக மகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக் கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் அனல் கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தால் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் தின்ற எமது நிலத்தில் சரியான வகையில் திறனாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். போருக்கு முன்னரான காலங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சீரிய விமர்சனப்போக்கையும் தமது காலத்துக்குப் பின்னர் ஒரு பரம்பரையையும் விட்டுச்சென்றனர். பின்னர் யுத்தம் இவையெல்லாவற்றையும் தின்றது போக, பல்கலைக்கழக மட்டங்களில் விமர்சன மரபை தமிழ்துறைப் பேராசிரியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் யதார்த்தமாகும். இதனை தமிழகத்து எழுத்தாளர்கள் தமதாக்கி அண்டைய நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை வகைப்படுத்தியதுடன் நில்லாது எகத்தாளமாகப் பொதுவெளியில் கருத்துக்களையும் சொல்ல ஆரம்பித்தனர்.
ஆக எங்களிலே அடிப்படைத்தவறுகளை வைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு பொதுவெளியில் கூச்சலிடுவது நேரவிரையமாகும். ஒருவர் ஒரு தவறான கருத்தை முன்வைப்பாரானால் அதனை மறுதலித்து ஆதாரத்துடன் எதிர்வினையாற்றுவதே விமர்சன மரபு. அந்த வகையில் அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லெ முருகபூபதியை இது தொடர்பாக ஒரு சிறிய நேர்காணலை நடு வாசகர்களுக்காகச் செய்திருந்தேன். இனி ……….
1.தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை என்றும் தங்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஈழத்து எழுத்தாளர்களையே எல்லோரும் கொண்டாடுகின்றார்கள் என்றும் ஒரு காட்டமான விமர்சனத்தை வைத்திருக்கின்றார். ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்துள்ளதா ? இருந்திருந்தால் அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா?
Last Updated on Sunday, 17 February 2019 21:39
Read more...
Friday, 29 June 2018 20:47
- நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நேர்காணல்
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?
நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற ஊரில் பிறந்தேன். என் தந்தை சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். என் சகோதரியும் ஆரம்பத்தில் சிங்கள மொழிப் பாடசாலைக்குத்தான் சென்றார். வாசிப்புத் துறையில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் நான் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தேன். நான் ஆரம்பத்திலிருந்து மரீனா இல்யாஸ் என்ற பெயரில் தான் எனது ஆக்கங்களை எழுதி களப்படுத்தி வந்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் எனது அதிகமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
02. உங்களது ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் ஆரம்பக் கல்வியை எங்கள் ஊரிலும் உயர் கல்வியை மாவனல்லை சாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு மலேஷியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டம் முடித்தேன். இலங்கைக்கு திரும்பி வந்ததும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றினேன். அதன் பிறகு நியூஸிலாந்தில் குடியேறிவிட்டேன்.
03. கலை இலக்கியத் துறைக்குள் எப்பொழுது, எவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டீர்கள்?
1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளிலும் எழுத ஆரம்பித்தேன்.
04. உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது?
சிறுவர் உலகம் கட்டுரைகளை தொடர்ந்து, கவிதை, சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களை 1980 களில்தான் எழுத ஆரம்பித்தேன். முதல் கவிதையும் முதல் சிறுகதையும் தினகரன் வார மஞ்சரியில்தான் பிரசுரமானது.
05. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?
எனது ஆரம்ப காலப் படைப்புக்களில் பல பாடசாலை மட்டத்தில் நடந்த கலை இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்டவை. அவை சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட போதிலும், போட்டிகளில் வெற்றி பெறுவதே என் குறிக்கோளாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிற்காலப் படைப்புக்கள் என் அனுபவங்களையும், என்னைப் பாதித்த சமூக நிகழ்வுகளின் உந்துதலாலும் பிறந்தவை.
06. எழுத்துத் துறைக்குள் நுழைந்ததைப் பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்?
அது ஒரு விபத்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஓர் அழகிய விபத்து.
07. உங்களது எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் தந்தவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
என் பெற்றோர்களே எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். திருமணத்தின் பின்பு என் கணவர் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். 08. இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
1998 இல் இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அவை ''குமுறுகின்ற எரிமலைகள்'' என்ற சிறுகதைத் தொகுதியும், ''தென்னிலங்கை முஸ்லிம்களின் இலக்கிய பங்களிப்பு'' பற்றிய ஓர் ஆய்வு நூலுமாகும். சகோதரர் புன்னியாமீன் வெளியிட்ட அரும்புகள் என்ற கவிதைத் தொகுப்பில் எனது ஆரம்ப காலக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
Last Updated on Friday, 29 June 2018 20:55
Read more...
Thursday, 07 June 2018 00:49
- நேர்காணல் கண்டவர்: கத்யானா அமரசிங்ஹ -
நேர்காணல்
 (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)
கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?
பதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத்திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.
கேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா?
பதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.
கேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி?
பதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.
Last Updated on Thursday, 07 June 2018 01:01
Read more...
Tuesday, 03 April 2018 14:02
- நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன் -
நேர்காணல்
- பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடன் அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.
இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழ்யில் ஒரு பயணம்' ஆகியன லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
2003 இருந்து இதுவரை இவர் 11 சிறுகதைத் தொகுப்புகளும், 3 நாவல்களும், ஒரு சிறுவர் கதைத் தொகுப்பும், ஒரு கவிதை நூலும் மற்றும் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் ‘புத்தம் சரணம்’ என்ற பௌத்த ஆய்வு நூலையும் சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிங்கள் மொழியில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 200 சிறுகதைகள் வரையில் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று 'பதிவுகள்' கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.
1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?
நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.
சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) 'காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்' (Department of Land Title Settlement) ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer) வேலை பார்த்து வருகின்றேன்.
பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.
2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?
Last Updated on Tuesday, 03 April 2018 16:40
Read more...
Monday, 31 July 2017 22:38
- - நிஜத்தடன் நிலவன் -
நேர்காணல்
ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு ஒருநேர்காணல்
நிலவன் :- உங்களைப் பற்றிச் சற்றுக் கூறுங்கள்…?
பாராசத்தி :- எனது பெயர் திருமதி பாராசத்தி ஜெகநாதன். முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளைக் காட்டு விநாயகர் கோயிலடி எனது சொந்த ஊராகும். தற்போது விநாயகர் வீதி உக்குளாங்குளம் வவுனியாவில் வாசித்து வருகிறேன். நான் கணபதிப்பிப்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் ஒரே புதல்வியாவேன். எனது தந்தையார் ஒரு நாட்டுக் கூத்துக் கலைஞன். எனது ஒன்பதாவது வயதிலிருந்து இசை, நாடகம் இரண்டையும் முறையாக பயின்று வந்தேன். எனது பாடசாலைக் கல்வியை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும் பட்டப்படிப்பை இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்று பத்து ஆண்டுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், இருபதாண்டு வவுனியா மாவட்டத்திலும் இசை ஆசிரியராக பணிபுரிந்து முப்பதாண்டுகள் பூர்த்தி செய்தும் தற்போது வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வு நிலை ஆசிரியராக இருக்கிறேன்.
நிலவன் :- பல்துறை சார் நிபுணத்துவம் உருவாக்கத்தில் உங்கள் இளைமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி கூறுங்கள்?
பாராசத்தி :- பெண் பிள்ளை என்று ஒரு காரணத்தைக் காட்டிப் பல்துறையிலும் ஊக்கப்படுத்தாதீர்கள் என்று பலர் தடைவித்தனர். என் பெற்றோர் எனக்குப் பக்கபலமாக இருந்து என்னை ஊக்குவித்தனர். மேலும் எனக்குக் கிடைத்த இசை ஆசான்களின் பயிற்சி மற்றும் வழிப்படுத்தலினாலே இது சாத்தியமானது.
Last Updated on Monday, 31 July 2017 22:46
Read more...
Thursday, 15 December 2016 03:44
பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியவர்: எழுத்தாளர் முருகபூபதி
நேர்காணல்
- இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை இலக்கியவாதியானதன் பின்னர், அருணகிரி அவர்களை மணந்து அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார். இன்று 13 ஆம் திகதி அவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. -
கேள்வி: இலங்கையிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறீர்கள். இம்மூன்று நாடுகளிலும் தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில் எவ்வாறு அமைந்துள்ளன ?
பதில்: " இலங்கை விஜயராணியே நான் ரசிக்கும் எழுத்தாளர். கன்னிப் பெண்ணாக இருந்து படைத்த படைப்புகள் தைரியமானவை. போலித்தனம் இல்லாதவை. யாருக்கும் பயப்படாமல் எழுதிய எழுத்துக்கள். திரும்பிய பக்கம் எல்லாம் இலக்கியம் பேச மனிதர்கள் இருந்தார்கள். கருத்துச் சுதந்திரம் இருந்தது. (சில அரசாங்கக் கட்டுப்பாடுகளைத் தவிர) மாற்றுக் கருத்துக்கள் பலவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும், அவற்றை முன்வைக்க மாறுபட்ட கருத்துடைய பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்று அங்கு ஓர் இலக்கிய உலகமே இருந்தது. எனவே நாம் சுழல விரும்பாத உலகத்தை ஒதுக்கி விட்டு இலக்கிய உலகில் மூழ்கித் திளைக்க அது வசதியாக அமைந்தது.
Last Updated on Thursday, 15 December 2016 03:48
Read more...
Tuesday, 06 September 2016 19:52
-- .கமலாதேவி அரவிந்தன் -(சிங்கப்பூர்) -
நேர்காணல்
மலேசிய இலக்கியத்தின் இன்றியமையாத சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், , முன்னாள் கெடா மாநில எழுத்தாளர் கழக தலைவர். கெடா மாநிலம் தந்த தமிழ்ச்சுடர் சுங்கைபட்டாணி க. பாக்கியம் விருதுகட்கு அப்பாற்பட்டவர்.பெண் எழுத்துக்களை மலேசிய வரலாற்றில் பதிவு செய்தே ஆகவேண்டும் என மூன்று தலைமுறை எழுத்தாளினிப் பெண்களை தேடித் தேடிக் கண்டடைந்தவர். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. பெண்ணிலக்கியவாதிகளுக்காக இவர் வெளியீடு செய்த ஆய்விலக்கிய நூல் வரலாற்றில் இவர் பெயர் சொல்லும். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. நேர்காணல்: கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -
கேள்வி 1:மலேசிய பெண் படைப்பாளர்களில் முதன் முதலில் நூல் வெளீயீடு செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் நீங்கள். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?
மலேசியத் தமிழிலக்கியத் துறையில் தொடர்ச்சியான நூல் வெளியீடுகள் நடைபெற்ற காலகட்டம் 1970/1980பதுகள் எனலாம். மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியத் தரம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. தரமிக்க இலக்கியவாதிகள் வரிசை பிடித்திருந்த காலம். பத்திரிகைத் துறையிலும் இலக்கியப் பரிச்சயமிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சூழ இருந்தனர். இலக்கிய போட்டிகளை அன்றைய தமிழ்ப் பத்திரிகைகள் முன்னெடுத்தன. சிங்கப்பூர் இலக்கிய களமும் தன் பங்குக்கு தரமிக்க இலக்கியத்தை அடையாளம் காட்ட முனைப்புடன் செயல்பட்டது.
மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகளின் தரம் எவ்வித பாரபட்சமுமின்றி அடையாளம் காணப்பட்டு இலக்கிய வெளியில் பதிவு செய்யப்பட்டது. பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் என இலக்கியவாதிகளை உருவாக்கவும், அடையாளப் படுத்தவும் பெரிதும் முனைப்புக் கொண்டு செயல்பட்ட மிக உன்னதமிக்க அந்தக் காலகட்டத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே பரபரப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தன. இலக்கியப் போட்டிகளில் வெற்றி கொள்ளும் முனைப்பும், தரத்தை உயர்த்திக் கொள்வதில் விளைந்த முயற்சிகளும் அக்காலகட்டம் மலேசிய இலக்கியவானில் உதயம் கொண்ட பொற்காலம்.
அக்காலகட்டத்தில் பெண்ணிலக்கியவாதிகளில் பலர் இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆண் பெண் என்ற பேதமில்லாமல் தரத்தைப் பதிவு செய்வதில் உற்சாகத்தோடு செயல்பட்டிருந்தனர்.
அச்சூழலில், நூல் வெளியீடும் எண்ணம் என்னுள் துளிர் விடத் துவங்கியது. இலக்கியப் போட்டிகளில் வென்றதும் சிங்கப்பூர் இலக்கிய களத்தின் வழி அன்றைய பிரபல தமிழிலக்கியவாதிகளால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்ற எனது சிறுகதைகள் என என்னுள் இலக்கியத் தாகம் ஊற்றெடுத்ததன் விளைவாக புத்தக வடிவில் பதிவு செய்வதில் முனைப்புக் கொண்டேன்.
Last Updated on Tuesday, 06 September 2016 20:10
Read more...
Sunday, 05 June 2016 01:55
- நேர்காணல் கண்டவர்: வ.ந.கிரிதரன் -
நேர்காணல்
பதிவுகள்: அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்'. விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீட்டுவிழா (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.
ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்தது. நீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.
இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.
Last Updated on Sunday, 05 June 2016 02:16
Read more...
Monday, 09 May 2016 00:50
- வ.ந.கிரிதரன் ('பதிவுகள்' இணைய இதழுக்காக) -
நேர்காணல்
பதிவுகள்: இலங்கைத்தமிழ் இலக்கியத்தை பலவகை எழுத்துகள் பாதித்துள்ளன. தமிழகத்தின் வெகுசனப் படைப்புகள் , மணிக்கொடிப்படைப்புகள், மார்க்சிய இலக்கியம், மேனாட்டு இலக்கியம் எனப்பல்வகை எழுத்துகள் பாதித்தன. இலங்கையைப்பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் இரு கூடாரங்களில் (சீன சார்பு மற்றும் ருஷ்ய சார்பு) ஒதுங்கிக்கொண்டு இலக்கியம் படைத்தார்கள். மார்க்சிய இலக்கியத்தின் தாக்கத்தினால் இலங்கைத்தமிழ் இலக்கியம் முற்போக்கிலக்கியம் என்னும் தத்துவம் சார்ந்த, போராட்டக்குணம் மிக்க இலக்கியமாக ஒரு காலத்தில் கோலோச்சியது. அதே சமயம் எஸ்.பொ.வின் நற்போக்கிலக்கியம், மு.தளையசிங்கத்தின் யதார்த்தவாதம், தமிழ்த்தேசியத்தை மையப்படுத்திய இலக்கியம் எனப்பிற பிரிவுகளும் தோன்றின. இவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளோம். இவை தவிர வேறு தாக்கங்களும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையிலுள்ளதாகக் கருதுகின்றீர்களா?
தேவகாந்தன்: சோவியத் நூல்கள் மட்டுமில்லை. வங்கம், மராத்தி முலிய மொழிகளின் எழுத்துக்களும் இலங்கை எழுத்துக்களைப் பாதித்தன. இது அதிகமாகவும் முற்போக்குத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருந்தது. இவ்வகையான மொழியாக்கங்களால் விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தபொழுது, ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகின. அ.ந.கந்தசாமி போன்றோர் இலங்கையிலேயே இது குறித்து பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். அது முற்போக்குக்கு வெளியே இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கும் கருதுகோளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் எவ்வாறு மார்க்சிய எழுத்துக்கு அப்பால் ஒரு இலக்கியம் உருவாக இவ்வகையான மொழிபெயர்ப்புக்கள் வழிவகுத்தனவோ, அதுபோலவே இலங்கையிலும் உருவாகிற்று. ‘அலை’ இலக்கிய வட்டம் அப்படியானது. ‘மெய்யுள்’ மற்றும் ‘நற்போக்கு’ போன்றனவும் அப்படியானவையே. ‘மெய்யுள் மேற்கத்திய புதிய கருத்தியல்களின் பாதிப்பினைக் கொண்டிருந்தவேளையில், நற்போக்கு இலக்கியம் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முற்போக்கு இலக்கியத்துக்கான எதிர்நிலைகளிலிருந்து, தனிநபர்களின் நடத்தையிலிருந்த நேர்மையீனங்களை எதிர்ப்பதிலிருந்து பிறந்திருந்தது. அதேவேளை அய்ம்பதுகளில் ‘சுதந்திரன்’ பத்திரிகையை மய்யமாகக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்தும் எழுத்துக்கள் பிறந்ததையும் சொல்லவேண்டும். இது தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருந்த திராவிட இலக்கியத்தின் பாதிப்பிலிருந்தும், தன் சொந்த அரசியல் நிலையிலிருந்தும் தோன்றுதல் கூடிற்று.
Last Updated on Sunday, 05 June 2016 02:17
Read more...
Tuesday, 19 April 2016 22:30
- அகில் -
நேர்காணல்
எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. 'தமிழ் ஆதர்ஸ்.காம்' அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.
அகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்?
எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே எனும் ஆசை --இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்ததே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.
Last Updated on Thursday, 21 April 2016 20:03
Read more...
Thursday, 14 April 2016 21:39
- நேர்காணல் கண்டவர்: 'பதிவுகள்' ஆசிரியர் வ.ந.கிரிதரன் -
நேர்காணல்
எழுத்தாளர் தேவகாந்தன் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களிலொருவர். இம்முறை 'பதிவுகள்' அவருடனான நேர்காணலைப்பிரசுரிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றது. முதலில் அவரைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிப்பதும் பொருத்தமானதே.
தேவகாந்தனும் அவரது படைப்புகளும்
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட, 1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிடத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரிய நாவலாகும்.
முனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி அதுபற்றிய அவரது விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: ‘திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழு நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை நுனித்துநோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.’
Last Updated on Sunday, 05 June 2016 02:23
Read more...
Tuesday, 08 December 2015 20:11
- ஜெயந்தி சங்கர் -
நேர்காணல்
சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருபவர் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனதுபடைப்புகளைப்பிரசுரித்துள்ளார். இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணையில் வெளிவந்தவை. தொடராக 'ஜென் ஒரு புரிதல்', முள்வெளி- சமூகநாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரேகேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை திண்ணையில் பிரசுரங்கண்டன. இவை அச்சு வடிவில் வராதவை. புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் சத்யானந்தன். வாசகர்களும் படைப்பாளிகளும் அவரைக் குறித்து மேலும் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவரிடம் மின்னஞ்சல்வழி உரையாடி பதில்களைத் தொகுத்துள்ளார்.
ஜெயந்தி சங்கர்; உங்கள் புனைபெயர் குறித்த பின்னணியைச் சொல்லுங்கள்.
சத்யானந்தன்; அம்மா பெயர் சத்தியபாமா. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர் போல என் பெயர் முடிய வேண்டும் என்ற ஆசை பதின்ம வயதிலேயே இருந்தது.
ஜெயந்தி சங்கர்; அண்மையில்எழுதிய, உங்களுக்கு திருப்தியளித்த உங்களுடைய விமர்சனம் எது?
சத்யானந்தன்; நவம்பர் 2015 உயிர்மையில் வந்த இமையத்தின் 'ஈசனருள்' என்ற நீள்கதைக்கு எழுதிய விமர்சனம்.
ஜெயந்தி சங்கர்; ஒரு தேர்ந்த வாசகனின் அடிப்படை அடையாளமாக எதைச்சொல்வீர்கள்?
Last Updated on Tuesday, 08 December 2015 22:31
Read more...
Tuesday, 27 October 2015 20:12
- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -
நேர்காணல்
 என்ன எழுதியிருக்கிறாய் என்று பெண்ணை, ஆண் கேட்பது என்பது ஒரு சீண்டல், அதற்குச் சவாலாகப் பெண் எழுதிக்காட்ட வேண்டும் எனச் சொல்லும், அருண்மொழிநங்கை ஜெயமோகன், ஒழுக்கம் என்பது பெண்ணுக்குக்கான ஒரு அளவுகோல் இல்லை, அதைச் சொல்லிவிட்டார்களே என்று பெண் எழுத்தாளர்கள் அனுதாபம் தேடியிருக்கக் கூடாது. பெண் என்றால் கொஞ்சம் திமிர் தேவை என்கிறார்.
கேள்வி: ஜெயமோகன் அவர்களின் வாசகி என்ற நிலையிலிருந்து மனைவியாக மாறிய அந்தக் காலகட்டத்தை மீட்க முடியுமா? மனைவியான பின் உங்களின் வாசிப்பு மனநிலையில் ஏதாவது மாற்றத்தை அவதானித்தீர்களா?
பதில்: வியப்புடன் பார்க்கும் ஓர் ஆளுமையின் எழுத்தை மட்டுமே வாசகியாக இருக்கும்போது நாம் பார்க்கிறோம். அவர்களின் அன்றாட வாழ்க்கை நமக்குத் தெரிவதில்லை. அப்போது நான் அறிந்த ஜெ, ஓர் அறிவுஜீவி. அவரது எழுத்துப் பற்றிய பிரமிப்பு மட்டும்தான் என்னிடம் இருந்தது. திருமணம் ஆனதும் அவரின் அன்றாட வாழ்க்கை தெரியவந்தது. சாதாரண மனிதர்களின் அன்றாடவாழ்க்கையை விடவும் அது குழறுபடியானது என்று புரிந்தது. அப்போது எழுத்தையும் ஆளையும் நான் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை நன்றாக அறிந்து அந்த அறிதலின் வழியாக, மேலும் நெருங்கியபோதுதான் அவருக்குள் படைப்புத்தன்மை மிகுந்த ஆளுமையைக் கண்டேன். இன்று படைப்புமனம் கொண்ட ஒருவர்தான் எனக்கு முதன்மையாவராகத் தெரிகின்றார். இது படிப்படியாக மாறிவரும் ஒரு சித்திரம்.
அத்துடன் நான் என்றைக்குமே ஒரு நல்ல வாசகி. அவர் எழுதும்போதே வாசிப்பவள். திருமணம் ஆனபோது அவர் எழுதும் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் இப்போது ஆச்சரியமெல்லாம் இல்லை. அது இயல்பாகத் தெரிகிறது. நான் வாசகியாக இருந்த அவரின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஜெ வேறு ஒருவராகத்தான் தெரிகிறார். அது அவரது ஓர் உச்சநிலை மட்டும்தான்.
கேள்வி: ஜெயமோகன் அவர்களின் முதல் வாசகியாக இருக்கும் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் பின்னூட்டம், அவருடைய படைப்புக்களில் குறிப்பிடத்தக்க ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?
பதில்: அவரின் ஆரம்பகால படைப்புகள் எல்லாவற்றையுமே நான் வாசித்து எடிட் செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் முழுக்கமுழுக்க என் தொகுப்பில் உருவான ஒரு நாவல். நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதியது என்றுகூட அவர் சொல்லியிருக்கிறார். காடு, ஏழாம் உலகம் யாவுமே நான் எடிட் செய்தவைதான். கதையோட்டம், அமைப்பின் சமநிலை இரண்டையும் நான் புறவயமாக அளந்து சொல்வேன். அது அவருக்கு உதவியாக இருக்கின்றது என்று அவர் சொல்வார்.
Last Updated on Tuesday, 27 October 2015 23:52
Read more...
Sunday, 01 June 2014 18:48
கேள்விகள்/ மின்னஞ்சல் நேர்காணல்: ஷாந்தினி முத்தையா, அருண் மகிழ்நன்
நேர்காணல்
1. வணக்கம்! உங்கள் குடும்பப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள்
ஜெயந்தி சங்கர்: என் பெற்றோரின் பூர்வீகம் மதுரை. நான் பிறந்ததும் மதுரை. இருப்பினும், பள்ளிவிடுமுறைநாட்களுக்குப் போவது தவிர மதுரையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் குறிப்பிடும் அளவிற்கு இருந்ததில்லை. அம்மா சாதாரண இல்லத்தரசி. இசை அறிந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட அப்பா மத்திய அரசாங்கத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். வாசிப்பு, தொழில்நுட்பம், புகைப்படம், ஓவியம், தோட்டக்கலை போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பாவுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். ஆகவே, கோவை முதல் ஷில்லாங் வரை பல ஊர்களிலும், மாநிலங்களிலும் வளர்ந்தேன். ஆகவே, பல மொழிகளும் பல்வேறுபட்ட கலாசாரங்களும் எனக்கு சிறு வயது முதலே அறிமுகம். குடும்பத்தில் நானே மூத்தவள். ஒரு தங்கை, லண்டனில் ஆங்கில ஆசிரியையான இருக்கிறாள். இரண்டு தம்பிகள். இருவரும் பொறியாளர்கள். கணவர் ஒரு பொறியாளர். இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு பொறியாளர். சிறியவன் சட்டம் இரண்டாம் வருடம் படிக்கிறான்.
Last Updated on Sunday, 01 June 2014 19:08
Read more...
Tuesday, 09 April 2013 02:43
- சு.குணேஸ்வரன் -
நேர்காணல்
1. 1 நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்துக்கள் பற்றியும் கூறமுடியுமா? உங்களுக்கு எழுதும் உத்வேகத்தை எது தருகிறது?
 வணிகரான என் தந்தைக்கு ஒன்பது பிள்ளைகள் அவர்களில் கடைசியாகப் பிறந்த ஒரே பெண் நான். தொடக்கக் கல்வியை உள்ளுர்ப் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் (அக்கடமி) பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். (பத்தாண்டுகளுக்குப் பின்னர்) புத்தளம் மாவட்டத்திலும் பின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் ஆசிரியையாகப் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றேன். முதலில் சில கதைகள் எழுதினாலும் என் புனைபெயரை பரவலாக அறியச் செய்தது 1963இல் ஆனந்தவிகடனில் அந்தக்கிழமையின் சிறந்த கதையாக வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற கதையே. (அந்தக்காலத்தில் இப்பொழுது உள்ளதுபோல் விகடனும் குமுதமும் தரம்கீழ் இறங்கியவையாக இல்லை) நீண்ட இடைவெளிக்குப் பின் கணையாழியில் வெளிவந்த ‘யோகம் இருக்கிறது’ இதுவும் பலராலும் வாசிக்கப்பட்டது. கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தை சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அநேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.
Last Updated on Tuesday, 09 April 2013 02:52
Read more...
Wednesday, 27 February 2013 19:18
- சந்திப்பு: கேடிஸ்ரீ; தொகுப்பு: மதுரபாரதி -
நேர்காணல்
 [குழந்தைக் கவிஞர் என்றால் அழ. வள்ளியப்பா, நவாலியூர்த் தாத்தா சோமசுந்தரப் புலவர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள்தாம் முதலில் நினைவுக்கு வருவார்கள். அது போல் குழந்தை எழுத்தாளர்களென்றால் வாண்டுமாமா, பூவண்ணன் ஆகியோர்தாம் முதலில் நினைவுக்கு வருவார்கள். எழுத்தாளர் பூவண்ணன் அண்மையில் காலமானார். அவரது நினைவாக, 'தென்றல்' இணைய இதழில் வெளியான இந்த நேர்காணலை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]
டாக்டர் பூவண்ணன் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய வரலாறு முதலிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஏராளமான பரிசுகளை வென்றவர். இவரது 'ஆலம்விழுது' கதை தமிழ் தவிர இன்னும் பல மொழிகளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. பெரியவர்களுக்காகவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் பூவண்ணன். இதோ அவரே பேசுகிறார்....
Last Updated on Wednesday, 27 February 2013 19:45
Read more...
Thursday, 12 July 2012 18:10
- அ.பரசுராமன் -
நேர்காணல்
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரின் தொகுப்பு நூல்களில் ஒன்று மேற்கண்டவாறு சுதாராஜ் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. உண்மையில் சுதாராஜின் வாழ்வும் எழுத்தும் சமகோட்டில்தான். அதை நான் திரும்பிப் பார்க்க விரும்பியபோது, இந்தக் களத்தை அவரின் வாழ்வைவிட எழுத்துக்குப் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். சுருக்கமாக சுய வாழ்வையும் விரிவாக இந்தப் பந்தியில் அடங்கக் கூடிய அளவிற்கு எழுத்துலக வாழ்வை பற்றியும் மனம் திறந்தார். பொறியியலாளரான இவர் பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பணி புரிந்திருக்கிறார். அங்கெல்லாம் சந்தித்த சில விந்தையான மனிதர்களுடனான அனுபவங்களை மிகை குறைப்படுத்தாமல் நூலுருவாக்கியிருக்கிறார். இலக்கிய நூல், நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என பட்டியல் மிக நீளமானது. திரை கடலோடி தேடிய திரவியம் எல்லாம் எழுத்துக்காகவே அர்ப்பணித்தவர். எழுத்துலகிற்கு அவர் போட்ட பிள்ளையார் சுழியைப்பற்றி அவரிடமே பேசுவோம். மூன்று தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்று பெருமைக்குரிய இவர் மின்னாமல் முழங்காமல் தன் எழுத்துப்பணியைப் பற்றி பேசத் தொடங்கினார்.
Last Updated on Thursday, 12 July 2012 18:27
Read more...
Friday, 19 August 2011 01:38
- ஊர்க்குருவி -
நேர்காணல்
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழொன்றில் வெளிவந்த ஜெயகரனுடனான நேர்காணல் இம்முறை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.]-கனடாவில் நாடகமென்றால் பா.அ.ஜயகரனின் நினைவு வராமல் போகாது. அந்த அளவுக்குக் கனடாத் தமிழ் நாடக உலகில் காத்திரமான பங்களிப்பினைச் செய்தவர் , செய்து கொண்டிருப்பவர் ஜயகரன். கவிஞராகத் தன்னை ஆரம்பத்தில் வெளிக்காட்டிய ஜயகரன் தற்போது தன்னை நாடக உலகிற்கே அதிகமாக அர்ப்பணித்துள்ளதை அடிக்கடி இங்கு மேடையேற்றப்படும் நாடகங்கள் புலப்படுத்துகின்றன. 'எல்லாப் பக்கமும் வாசல்', 'இன்னொன்று வெளி', 'சப்பாத்து', 'பொடிச்சி' உட்படப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர் ஜயகரன். தமிழில் காத்திரமான நாடகப் பிரதிகளில் இல்லாத குறையினை நீக்கும் முகமாக அவற்றினைத் தானே எழுதித் தயாரித்து மேடையேற்றும் ஜயகரன் பாராட்டிற்குரியவர். அவரை இம்முறை பதிவுகளிற்காகப் பேட்டி கண்டோம்.-
Last Updated on Sunday, 21 August 2011 05:24
Read more...
Tuesday, 17 May 2011 16:59
- அண்.சிவ. குணாளன் -
நேர்காணல்
தமிழ் முரசு 27.3.2011
சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுலகுக்கு படைப்புகளைத் தந்து வருபவர் எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன். இவரது படைப்புகள் யாவும் நூலாக்கம் பெறவேண்டுமெனில் அதற்கு நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவரவேண்டும். தமிழில் எண்ணற்ற படைப்புகளைத் தந்துள்ள இவரது தாய்மொழி மலையாளம். சமூகத்தில் வலுவிழந்தோர் படும் இன்னல்களை அப்படியே அச்சுப் பிறழாமல் படம்பிடித்து கதைமாந்தர்களின் மொழியில் அவருக்கே உரிய தனித்துவம்பெற்ற பாணியில் வாசகர்களுக்கு விளக்கும் விதமே தனி. அவர் எழுதிய ஒவ்வொரு கதையிலும் ஓர் எழுத்தாளனின் உழைப்பை நம்மால் காணமுடியும். கதை எழுதி முடிக்கும் தருணத்தில் வேள்வியிலிருந்து எழுந்த சுகத்தை அனுபவிப்பாராம் எழுத்தாளர் திருமதி கமலா தேவி அரவிந்தன். அவருடைய கதைகள் பிறந்த கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன்.
Last Updated on Tuesday, 17 May 2011 17:15
Read more...
|