"நண்பர் எழுத்தாளர் கற்சுறா அனுப்பியுள்ள நிகழ்வு பற்றிய இவ்வறிவித்தலை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். தேடக அமைப்புடன் இணைந்து இயங்கிய திரு. சண்முகலிங்கன் அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர்; தன்னார்வத்தொண்டர். அதன் காரணமாகவே சிறைவாசம் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அவரது அனுபவங்களைப்பதிவு செய்யும்படி கூறுவேன். சிரித்தபடியே செய்யவேண்டும். 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காக எழுதித்தருகின்றேன் என்று கூறுவார். அது நிறைவேறாமலே போனாலும் காலம் அவரை மறந்துவிடவில்லை என்பதற்குச் சான்று இந்நிகழ்வு. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள அவரது நண்பர்களுக்கு வாழ்த்துகள். சண்முகலிங்கம் அவர்களை நினைத்தால் அவரது சிரித்த முகமும், 'கிரிதரன்' என்று வாஞ்சையுடன் அழைக்கும் குரலுமே எப்பொழுதும் நினைவுக்கு வரும். ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றுப்பங்களிப்பைச் செய்த இவரைப்போன்றவர்களை வரலாறு ஒருபோதும் மறந்துவிடுவதில்லை." - வ.ந.கி -