கவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது!   வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில:

1.அகமும் புறமும் ஒரே பகல்


வெள்ளி ஜரிகை வெய்யில்       
கள்ளப் பரத்தையாய்
வீதியில் விரிந்து கிடக்கு
வாயிற்படி சார்பில் தரையோடு
வளைந்த  கந்தல் பூனைகள்      

இங்குமங்கும் நிழல்பூச்சிகளைக்
கவ்விக் கொள்ளும் ஒளிப்பல்லிகள்
நீட்டும் கனல் நாக்குகள்     
முதலிரவுப் பிள்ளை வெறியாய்
நிலப் பெண்ணை நெருப்பால்
வருடி வருத்திய பின்னும்
சுமந்து  பொறுத்து
சிவந்து சிரிக்கிறாள்
செம் பூமிப் பெண்
வியர்வை.... புழுக்களாய்
உடலில் மழமழக்க
வெறுப்பும் நெருப்பும்
வீட்டைத் தெருவாக்கி
தெருவை சுதையாக்குது
தீ....
எரிந்தேன்... எரிவேன்... என
சமணர் போல் எறும்புக் கூட்டம்
முற்றத்தில் மெதுவாய் பொரியுது
என்னெதிரில்.
பாதக் குருதியின்
பச்சை ருசிக்காக
காய்ந்து கிடக்கும்
வெய்யில் வாய்க்கு
ஏழைக் கால்கள்
விதியற்று தெரிந்து பலியாகி
பதறுது... பதறுது...
கண்ணதிரில்..
தாகத்தால் வானத் தேன் வேண்டி
வாய் பிளந்து
மொட்டை முனிமரங்கள்
முரட்டுத் தவமிருக்கு
முள்காட்டில்.
''மாஜி '' கவிக் குயில்கள்
மறைந்திருந்து மரக் கிளைக்குள்
ஏறும் தீயணைக்க
ஈரக் குரலில்
கூடிப் புலம்பிப் பின்
இறகு சலித்து ஓய்கிறது
உள்ளே  குமைந்து.

''தீ...தீ......"""
முடிவற்ற தீவெள்ளம்
கரையற்ற அனல் காடு..
எப்போது மாறும்?
எப்போது ஈரம்?
எப்போது மாற்றம்?

ஒட்டிக் கிடந்த சட்டையென
உடலை     
உரித்தெறிந்து தற்பரமாய்
தவமிருக்கத் தவிக்கிறது
தறி கெட்ட   மனம் .


2. மொழியற்ற கணம்

வானம் காணாத பார்வையுடன்
வாசலில் அமர்ந்திருக்கிறேன்.
எதிர்பாரா  திக்கிலிருந்து  விருட்டென்று
பாயும்  அம்புக்குறிகள்....
கூட்டமாய்
மனதில் வெடித்த ஆச்சரியங்கள் !!
அழகு  துடிக்கும் விசைத்துளியாக
மூலைக்கு மூலை  அதன் ஊசலாட்டம்
கிரணங்கள் படும் கணங்களில் தீப்பொறிகள்
அக்குருவிகள் .
நோக்கமற்ற என் மனதை  காட்டும்
அதன் அர்த்தமற்ற தேட்டம்.
சில சமயம்  அதன்  குறுக்குவெட்டுகளால்
வானம் திடம் பெற்று பார்வையைத் தொடுகிறது
எங்கோ நீளுகின்ற  எல்லையில்லாக் கற்பனைக் கைகள்
எதிரே நிகழ்த்தும்   அசாத்தியமான
ஒழுங்கும்  இயக்கமும் அழகும்..உயிர்த்துடிப்பும் .....
உணர்வை  மீட்டி இசையாக்குகிறது   இக்கணம்....
அதற்கு   ஒரு  அர்த்தம்   எதற்காக?

3.நினைவுகள்

கைநழுவும்  மீன்கள்

காலப் புதரில்  பதுங்கிக் கொள்ளும்
கைக்கெட்டாப் பச்சோந்தி....

முகங்கள்  எவ்விதம் பெயர்  மாறுகின்றன?...
சில சமயம் இறந்த வருஷங்களை
இடம் மாற்றி நிறுத்துகின்றன..
வேளைகள்  இப்போது  வெவ்வேறு  வரிசையில்
விடிகிறது..
பலமுறை
நேற்று நடந்ததை இன்றாகவும்
இன்று பார்ப்பதை இனிமேல் தான்
பார்க்கப்  போவதாகவும்  ஏமாறிக் குழம்புகிறது
மனம்.  ஒரு சிலந்திக்கூடு........
வந்த போது தெரிந்த நீங்கள்
விடை பெறும்போது வேறொருவராகிப்
போகிறீர்கள்...... ஏன்  அப்படி?
நினைவு மூட்டைகள்  சிதறித் தெறித்து
உருளுகின்றன  நிகழ்வுகள்.......
பாரமற்ற  தலை..
ஆசிரியரற்ற  ஆரம்பப் பள்ளிக் கூடம்...
இப்போது ஆகாசம்  எனக்கு உள்ளும் புறமும்
ஏதோ ஒருமுடிவில் இறங்கி
இப்போது  குடையும் கையுமாக
கால் வீசி நடை பயில்கிறேன்...
நடையா....இல்லை...
குழந்தைகள் எப்போது  மீனானார்கள்?
குளத்தின்  ஆழமா இது ?
அல்லது  இப்படி ஒரு  செவ்வானமா?
என்  பயணத்தில் நானே  இல்லாமல் போகிறேன்!!


4.உயிர்க்குருவி

 

கிழித்தெறிந்த கவிதைத் துணுக்குகள் போல்
சிதறிப்  பறக்கும் பறவைத் துகள்கள்
மாலை வானம்.......
பகல் துக்கங்களை
ஆழப் புதைத்துக் கொண்டு
இருட்டை அணைத்தவாறு  உறையும்
நீர் நிலைகள். ஏரிகள்
தூக்கத்தின் சகதியில்
மொழி அழிந்த நினைவுகள்
கீறி விடும்  துயரக்கனவுகள்..
அவள் ஏன் முகத்தைத்
திருப்பிக் கொண்டாள்?
இவன் ஏன்  வெறுப்புடன்  முறைத்தான்?
நாய்களுக்கு ஏன் நான்
திருடனாகத் தெரிகிறேன்?
எனக்கு ஏன் என் மேல்
வெறுப்பு?............இவ்விதம்
உலகம்  தட்டைத் தகரமாகி
வெளியை ரத்தக் களரியாக்குகிறது.
சிதறும் பறவைத் துணுக்குகளாய்..............
அலைகிறது  உயிர்க் குருவி
இறப்புக்கு முன்னும் பின்னுமாக


5. சின்னக் கவி ரஸங்கள்
(ஆங்கில மொழிபெயர்ப்பு – லதா ராமகிருஷ்ணன்)


புல்லின் நுனிகளில்
வைரத் துளிகள் என்று சொல்லி
அலுத்து விட்டேன்....
அவைகள்  பனித்துளிகள் தான்!
(Fed up I am, saying that
there are diamond-drops on
grass-blades.
They are but dew-drops indeed!)

கிளிகள் எத்தனை அழகென்று
அண்ணாந்து  நின்றேன்.
புளிச்சென்று  போட்டது
சாதாரணமாக!!

(Marveling at the beauty of parrots
I stood there looking above.
It shit on me
all too casually!)

சற்றுக் கண்ணயர்ந்தேன்
அதற்குள்  பூமி
எங்கோ சென்று விட்டது!

(I dozed off a bit.
Lo, the world had gone
faraway!)


பாவம்!
பள்ளி வகுப்பின் ஜன்னலோரம்
பாடத்தை ஒட்டுக் கேட்கின்றன
பன்றிகள்.

(Crowding near the classroom window
eavesdropping the lesson_
poor pigs!!)


சட்டையை  மரத்தில்
தொங்கவிட்டு
நீருக்குள் பாய்ந்தது
சாரைப்பாம்பு.

(Shedding its coat
to hang on the tree
the Snake dived
into the water.)


நில்லாமல்
நகருகிறது நிலவு.
நில்லாமல்
சுற்றுகிறது பூமி.
நகராமல் நிற்பதுபோல்
தற்பெருமை  எனக்குள்!

(Never static
the Moon moves on.
Never static
the Earth revolves.
As if I remain stationed
I feel proud within!)


வானத்தை
சிறைப்பிடித்துவிட்டதான
கர்வம்
எப்போதும் உண்டு
காலிப்பானைகளுக்கு!

(The sense of pride
of having imprisoned the
Sky
fills for ever
the Empty  Pots!)


மலரென்று  நினைத்தேன்
பறந்து  போயிற்று!...     

(A flower, thought I
it flew off!)


வளைந்த கிளைகளில்
சிக்கிக்கொண்டது
சூரியன்

(In the curved branches
entrapped_
the Sun)


வாசலைப் பூட்டிவிட்டு
உள்ளேவந்தேன்.
கூடத்துக்குள் நிலவொளி.

(Locking the door
I came in.
Moon-shine in the hall)




கவிஞர் வைதீஸ்வரனின் சிறுகதை!

1.முடிவாக ஒரு வார்த்தை

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! நான் வேலையிலிருந்து களைப்புடன் உள்ளே நுழைந்தேன்.

நான் வருவதை அம்மா கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் "என்ன?“ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தேன் அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.

“எப்படி இருக்கே அப்பா? சட்டையைக் கழட்டிக்கொண்டே கேட்டேன்.

அப்பா அரை மயக்கத்திலிருந்தார். போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ள தலையைத்திருப்பி குரல் வந்த  திசையைப் பார்த்தார்.

“ நீ வந்துட்டியா?”

நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது.  அம்மா மெதுவான குரலில் சொன்னர்.

“இதோட ஆறெழு தரம் சிறு நீர் கழிச்சுட்டார்..”

நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன்  அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்கு தேவையான மாத்திரைகள் இருந்தன.டாக்டர் நாளைக்குத்தான் வரச் சொல்லியிருந்தார்.

கடந்த ஆறு மாத காலமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது. அவருக்கு சிறுநீரகக்கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக்களெல்லாம் சிறுநீர் மூலமாக வெளியேறிக்  கொண்டிருந்தன. ஆபத்தான நிலைக்குப்போய் விடுவார்.

ஆஸ்பத்திரிக்குப்போய் இரண்டு மூன்று நாட்களுக்கு  நாலைந்து பாட்டில்கள் ஊட்டத்தை செலுத்தினால்தான் ஓரளவு நிலைமை சீராகி  வீட்டிற்கு வருவோம்.  ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பி விடும்.

"இது தற்காலிக வைத்தியம்தான்... வயதாகி விட்டது...   பார்த்துக் கொள்ளுங்கள்...””   என்றார் டாக்டர் எச்சரிக்கையுடன்

அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்.

"இன்னிக்குத் தானே போகணும்...?”

"இன்னிக்கு இல்லேப்பா..நாளைக்குத்தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்....”

“அப்போ...இன்னிக்கு இல்லையா?...”

“இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை இருக்கே! அதுமுடிந்தபின் நாளைக்குப் போகலாமே...”

என் பதில் அப்பாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டார்.  நான் உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனேன்.

“அப்போ இன்னிக்கு இல்லையா?... இன்னிக்கே போ..க. லா..மே...”

அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன் தனக்குள்ளே  முனகலுடன்  முடிந்தது.

எனக்கு அவர் வேதனையை  உணர முடிந்தது.  இதை கவனித்துக் கொண்டிருந்த  அம்மா அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே... அவருக்கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு இருக்கு . ..” என்று எதிர்பார்ப்புடன் என்  முகத்தைப் பார்த்தாள்.

சிறிது தயக்கத்துக்குப் பிறகு நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில்தான் நகரத்தின்  பிரதான சாலை இருந்தது.ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும்சிரமம் அல்ல.

கடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும்  அப்பாவின் உடல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் நிவர்த்தியில்லாத   துக்கத்தையும்  சலிப்பையும் ஏற்படுத்தி யிருந்தன.

அப்பாவைப் பற்றி அப்படிப்பட்ட  சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாதென்று எனக்குள் எவ்வளவோ எச்சரிக்கை செய்து கொண்டேன்.

அப்பா  சமீபகாலம்வரை ஆரோக்கியத்துடன்  இருந்தவர்.  சொல்லப்போனால் என்னை விட  உடல் தெம்புடன் இருந்தவர்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட தீராத  ஆஸ்துமா  வேதனையில் நான் தவித்த போது  மழை கொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்து கொண்டு நடந்து போய்  டாக்டரை அழைத்து வந்து  ஊசிபோடச் செய்து  மூச்சுத் திணறலை  ஆறுதல்படுத்தினார். அவருக்கு வயதாகி உடல்நலம் இப்படிக்  கெட்டுப் போகு மென்று  நான்  எண்ணிப் பார்த்ததேயில்லை

பிரதான சாலை  ஒரு ஆட்டோ கூட இல்லாமல் விரிச்சோடிக்கிடந் தது. வித்யாசமாக பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலையின் இருபக்கமும் காவல்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக் கொடிகள் எந்த அக்கறையுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

மெதுவாக ஒரு காவல்காரரரை நெருங்கி   "இன்னிக்கு என்ன ஸார் விசேஷம்?..”  என்று கேட்டேன்.

“இது தெரியாதா?.. பேபர்லே எல்லாம் வந்திருக்கே! இந்தத் தெரு முனையிலே இருக்கற பெரிய ஆஸ்பத்திரியை  பிரதமர் வந்து தொறக்கறாரே... முதல் மந்திரி எல்லாம்  வரப்போறாங்களே!.....”

“அப்போ...”

இன்னும் ரெண்டு ’அவரு’க்கு இந்த ரோடு க்ளோஸ்...”

நான் உதவியற்று  சாலையின் வெறுமையைப் பார்த்து விட்டு நடந்தேன்.

வீட்டுக்குள் நுழைந்து சட்டையை கழட்டினேன். நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி  தலையைத்  தூக்கினார் அப்பா.

”இன்னிக்குப் போக முடியாதுப்பா...”

“ என்னாச்சு? “

“பிரதம மந்திரி இந்தவழியா போறாராம். அதனாலெ ட்ராபிக்கை எல்லாம் நிறுத்தி வச்சிருக்கான்.  இப்போ போகலைன்னா  டாக்டரை நாளைக்குத் தான் பாக்க  முடியும்.  “

அப்பா இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார் .பெருமூச்சு விட்டார்.

“பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா...நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”

அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாக சொன்னதாக தெரியவில்லை.   அவர் கேட்டது ஒரு வகையில் நியாயமாக யதார்த்தமாகக் கூட இருந்தது.

மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை .அவர் வாயில் மெள்ள  ஊற்றி   மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன் . போர்த்தி விட் டேன்.

“கொஞ்சம் பொறுத்துக்கோங்கோப்பா.....நாளைக்கு போயிடலாம்... ஏற்கனவே நாளைக்குத் தான் டாக்டர்  அப்பாய்ண்ட்மெண்ட்  கொடுத் திருக்கார்..”

நான் மெதுவாக என் அறைக்குள் போய்க் கொண்டிருந்தேன்.

“ஏம்ப்பா..பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா ஜனங்களை இப்படிவிரட்டி அடிக்கணுமா?.. எம்மாதிரி பிராணாவஸ்தை பட்றவனெல்லாம்...... ‘ வார்த்தை வராமல் துக்கம் தொண்டையை அடைத்து ஏதோ முணுமுணுப் பாக முடிந்தது.  ..

அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுமுணுப்பாக தொனிக் காமல்இதுமாதிரி வேதனைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் எத்தனையோ பாமர மக்களின்  குரலாக ஒலித்தது.

மறு நாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனேன்.

நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகிவிட்டது. அப்பா பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையை  பார்த்து அறிந்து கொண்ட  நர்ஸ் ஓடிப்போய்  டாக்டரை  அவசரமாக வெளியே அழைத்து வந்தார்.

டாக்டர்  அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு  “அய்யய்யோ...” என்றார், தனக்கு மட்டும் சொல்லிக்கொண்ட மாதிரி.

“நேற்றே வந்திருக்க வேண்டும் டாக்டர்...  .வரமுடியாமல் போய் விட்டது....”  என்றேன்  கவலையுடன்

"அடடா..... நேற்று  வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!   .....ஏன் இப்படி தாமதப் படுத்தினீங்க? .  என்னா ஆச்சு?””””

“அது  வந்து..   ரோட்லே ....”  நான் சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் அப்பாவின் கையும்  தலையும்  வேகமாக அசைந்தது.

பேச்சு வராமல் மூச்சு தொண்டையில் சிக்கிக்கொண்டு உயிரின் இரைச்சலுடன் இழுத்துக்கொண்டிருந்தது ..

அப்பா  நடுங்கிய விரல்களை அந்தரத்தில் யாரையோ சுட்டிக் காட்டியவாறு  அவர் சொன்ன அந்த முடிவான  வார்த்தை.....

“பி...ர....தழ்..  ம்ம ….. ர்..



2. என் அம்மாவின் காப்பிப் பாட்டு

இந்த “காப்பி ”  குடிக்கும் வழக்கம்  நமக்கு  ப்போது  தொத்திக்  கொண்டது?   இந்த  வழக்கத்தை   நம்  கலாசாரத்தோடு  கலந்து  கரைத்தது  வெள்ளைக்காரர்கள்தான்  என்று  தெரிகிறது.   எனக்குத் தெரிந்தவரை 1920க்கு மேல்  தான்  பிராமணக் குடும்பங்களின்  சமையலறைக் குள்   இந்தக் காப்பி பானம்  சகஜமாக  புகுந்திருக்கலாம்.

1916ல் கல்யாணம் செய்து  கொண்டு புகுந்த வீட்டுக்கு  வந்தபோது  குடும்பத்தில் புருஷர்கள்  மட்டும்தான்  காப்பி   குடிக்க  அனுமதிக்கப் படுவார்கள் என்று என்  தாயார்  சொல்லக்  கேட்டிருக்கிறேன் . பிறகு இந்தப்பானத்தின் ஆதிக்கம் மெள்ள மெள்ள பொதுவான காலைப்  பழக்கமாக  மாறி  பிராமணக் குடும்பத்தைத்  தாண்டி  சமூகத்தின்  பிற ஜாதி வட்டங்களிலும் இன்றியமையாத  பானமாக நிலைத்து  விட்டது.
..
1920க்கு முன்பு .. காப்பி குடிப்பது  ஆசாரத்துக்கு அவ்வளவு பொருத்தமான விஷயமாக   ஒப்புக்கொள்ளப் படவில்லை. மேலும் அது வெள்ளைக்காரனின்   நாகரிகம் என்ற அன்னியத்வேஷமும்   நிலவி வந்திருக்கக்  கூடும்.. ..

ஐம்பதுகளில்  வெளிவந்த  ஒரு  சினிமாவில்  கூட   என்.எஸ்.கிருஷ்ணன்  பகட்டான  வாழ்க்கையை  கேலி  செய்து  பாடுகிற பாட்டில்  “ அவ  கார்லெ  போவா.... ஊரைச்  சுத்துவா...கண்ணாடி  பாப்பா...காபீ  குடிப்பா.....”  என்று  இளக்காரமாக  பாடுவார். கஞ்சி  குடிப்பது  தான் நமது கலாச்சாரப் பண்பு...என்று  சொல்லுவார். ஆனால் சூடான காப்பியின்  விறுவிறுப்பு  உள்ளே போனபோது அது இந்த   சம்பிரதாய தயக்கங்களை மீறிக்கொண்டு நாக்கையும் மனதையும்   வளைத்துப் போட்டு விட்டது. முக்கியமாக சங்கீதக்காரர்களும்  கலைஞர்களும்  இதை ‘சோமபானமாகவே’’ பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் .கர்நாடக சங்கீதத்துக்கும்  காப்பிக்கும்  ஏதோ ஒரு அபாரமான  பொருத்தம்..  மெள்ள மெள்ள காப்பியின் இந்த ஆக்ரமிப்பு  இந்தியக்  குடும்பங்களில் இன்றிய மையாத  ஒரு கலாசார அடையாளமாகவே  மாறிவிட்டது.

ஒரு சுமுகமான வரவேற்புக்கு  காப்பி ஒரு அவசியமான ஆரம்பமாக ஆகி விட்டது...

“வீடு  தேடிப்  போன  போது  ஒரு  வாய்க்  காப்பி  கூடவா  கொடுக்கலே... அந்தக்  கடங்காரி..”  என்ற  வசனத்தை  நாம்  கேட்டிருக்கிறோம்.

இந்த காப்பி பானத்தின் அன்னியத்தன்மையை பின்னுக்குத்  தள்ளி  நம் கலாசாரத்தோடு சகஜமாக  ஒட்டவைக்கும் முயற்சி அந்தக்  காலத்தில்  பரவலாக  இருந்திருக்கும்போல்  தெரிகிறது..

அதற்கு ஆதரவாக  அந்தக் காலத்தில்  யாரோ ஒரு “ காப்பி வெறித் தாத்தா “ஒரு பாட்டு எழுதி  எல்லோரையும்  பாடச்  சொல்லி  சமூகத்தின்  உளவி யலை பாதித் திருக்கிறார்..

கீழ்க்காணும் “காப்பி  பாட்டை “  என்  அம்மா தான்  சிறு வயதில் கேட்ட  பாட்டை  தன்  90  வயதில் எனக்கு  பாடிக்காட்டினாள்.  அதை  உடனே  எழுதிக்கொண்டேன். “அந்தக் காலத்துலே  எல்லாரும் பாடுவா. கல்யாணத்துலே  கூட  பாடுவா... கேலியும்  சிரிப்புமா  இருக்கும்..  ஆனா  வார்த்தை கொஞ்சம்  விட்டுப் போயிடுத்து...”  என்றாள்..

காப்பீ குடிக்க வேணும் ஜனங்களெல்லாம்
க்ருஷ்ணனை ஸ்மரிக்க வேணும் ஜனங்களெல்லாம்
காசு பணம் செலவில்லை ஜனங்களுக்கு
கடன் காரன் தொல்லையில்லை ஜனங்களுக்கு

*க்ளப்புக்கு போகவேண்டாம் ஜனங்களெல்லாம்
{காபி  வீட்டில்  அனுமதியில்லை...க்ளப்புக்குப்  போக வேண்டியிருந்தது ..என்கிற   சூழ்நிலை  தெரிகிறது..}

ஜப்திவாரண்டு இல்லை இல்லை ஜனங்களுக்கு

[அடுத்த சில வரிகள் தெளிவாக இல்லை }
[விருத்தம் ]

உத்தரத்து  உரியிலேருந்து  பாலெடுத்து
ஆசையெனும் பாத்திரத்தில் பொடியைக்கொட்டி
பாசமுள்ள வஸ்திரத்தில் வடியக் கட்டி
நேசமுடன் சூடு பண்ணிய  திக்குக்   காப்பி
திக்குத்  திக்கான  காபி.....]

தருமர் சாப்பிட்ட தரமான காப்பி
அர்ஜுனன் சாப்பிட்ட அசலான காப்பி
பீமன் சாப்பிட்ட பேஷான காப்பி
நகுலன் சாப்பிட்ட சூடான காப்பீ
சகதேவன் சாப்பிட்ட ஸ்ட்ராங்கான காப்பீ

எல்லாரும் சாப்பிடுங்கோ..
தேவாளும்  தேடி வருவா!!!


[வேதாந்தப் பாட்டு   எஸ். வி கிருஷ்ணம்மாள்]


'பதிவுகளு'க்கு அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.