(67) - நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கற வரைக்கும். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. இங்கேயிருந்து ஹிராகுட்டுக்கு பஸ்ஸில் போய்ட்டு வரலாம். அங்கே வீடு கிடைக்கலாம். இல்லையானால், அவர் இங்கே எந்த டிவிஷனுக்காவது மாத்திக்கலாம். என்ன சொல்றே?” என்று கேட்டார். அவர் என்னைக் கேட்பானேன்? நான் இங்கே ஊர் பேர் தெரியாத போது என்னை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு மாதம் எனனை அவர் வீட்டிலேயே சப்பாடும் போட்டு ஆதரித்தவர். “நீங்க எப்ப வேணும்னாலும் யாரை வேணும்னாலும் அனுப்பலாம் எவ்வளவு  நாள் வேணும்னாலும் இருக்கட்டும். என்னைக் கேட்கவே வேண்டாம். இவருக்கு இடம் கொடுன்னு ஒரு சீட்டு எழுதி அனுப்புகிறவர் கையில் கொடுத்தால் போதும்.” என்றேன். இல்லடா சாமா உன்னோட இன்னும் நாலு பேர் இருக்காளே, என்றார். அது பரவாயில்லே பாத்துக்கலாம் என்றேன். அவருக்கு மெனக்கெட்டு இதுக்காக ஹிராகுட்டிலிருந்து வந்த காரியம் நடந்தது. இதுக்காக அவர் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்றால், நிஜமாகவே சிரமத்திலிருக்கும் மனிதராகத்தான் வருகிறவர் இருப்பார் என்பது நிச்சயம்.

 என்னுடன் இருந்த தேவசகாயத்திடம் பேசினேன். அவருக்கு கொஞ்ச தூரத்தில், கொஞ்ச தூரம் என்றால் சுமார் 100 அடி தள்ளீ இன்னொரு ப்ளாக்கில் ஒரு வீடு கிடைத்திருந்தது. அவர் அதை சும்மா பூட்டியே வைத்திருந்தார். காரணம் எங்களோடேயே இருக்கவேண்டும் என்ற எண்ணம். “கவலையே படவேண்டாம். சாமிநாதன். நான் இன்னும் ரண்டு பேரை என்னோடே கூட்டிட்டு போரேன். நிங்க ஒரு ரூமில் இருந்து கொண்டு பாக்கி வீட்டை அவங்களுக்குக் கொடுத்துடுங்க. குழந்தை குட்டியோட வராங்க”  நீங்களும் என் ரூமிலே பாதி நேரம் கழிக்கலாம். அதுவும் உங்க இடம் தான். இந்த இடத்திலே நீங்க ஒரு கால் வச்சிருக்கணும் கிறதுக்குத் தான் ஒரு ரூமிலே நீங்க இருக்கணும்னு சொன்னது. இல்லேன்னா நீங்களும் அங்கேயே வந்துடலாம்.” என்றார்.

அந்தக் குடும்பமும் வந்தது. இரண்டு குழந்தைகள். அவர் பேர் என். க்ருஷ்ணமூர்த்தி. திருச்சி பக்கத்தில் ராமசந்திரபுரம் என்று ஒரு ஊர் இருக்காமே. அந்த ஊர் திருமதி கிருஷ்ணமூர்த்திக்கு. நான் அடிக்கடி தேவசகாயம் ரூமுக்குப் போய்விடுவேன். அது எஙகளிடையே கெஸ்ட் ஹவுஸ் என்ற பெயர் பெற்றது. கிருஷ்ணமூர்த்தியும் சுமுகமாகப் பழகுகிறவராக இருந்தார். அவர் மனைவியும் குழந்தைகளும். குழந்தைகளும் கொஞ்சம் பழகிய பிறகு மிகவும் பாசத்துடன் என்னிடம் ஒட்டிக்கொண்டன. குழந்தைகளுடன் பொழுது போவது இனிமையாக இருந்தது.

கோடை காலம். காலை ஏழு மணிக்கே அலுவலகம் திறந்துவிடும். பின் மதியம் 1.30 மணி வரை. அவ்வளவு தான். 10.00 11.00 மணிக்கெல்லாம் வெயில் தகிக்க ஆரம்பித்து விடும். அலுவலகத்தில் கஸ்கஸ் தட்டிகள் ஜன்னலிலும் கதவு நிலைகளிலும் தொங்கும். அவ்வப்போது அதற்கு தண்ணீர் ஊற்றி ஈரம் சொட்டச் சொட்ட வைத்திருப்பார்கள். ஏஸி என்பதெல்லாம் அன்று நாங்கள் கேள்விப் படாத விஷயங்கள். எனவே பிற்பகல் அலுவலக வேலை முடிந்ததும், பக்கத்திலேயே இருக்கும் கடைத் தெரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு அலுவலகத் திற்கே திரும்பி வந்து விடுவது மிகச் சிலர் வழக்கம். அந்த மிகச் சிலரில் நானும் ஒருவன். காலையில் கஸ்கஸ் தட்டி தண்ணீர் ஊற்றி ஊற்றி ஈரமாகவே இருக்கும். திரும்பி இரண்டு மணிக்கு அலுவலகம் வந்தால் 5.00 மணி வரை அலுவலக மேஜை மேல் படுத்து தூங்குவோம். இல்லை ஏதாவது படிப்போம். எல்லோரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு செக்‌ஷனிலும் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இப்படி இருப்பார்கள். இது ஒன்றும் நாள் தவறாத பழக்கம் இல்லை. சிலசமயங்களில் ஏதோ காரணத்திற்காக வீட்டிற்கும் திரும்புவது உண்டு. வீட்டில் உஷ்ணம் வறுத்தெடுக்கும். வீட்டில் படுப்பதென்றால் க்யிற்றுக் கட்டிலின் மேல் ஈரவேட்டியைப் பரப்பி  மின் விசிறியின் வேகமாக வைத்து கட்டிலின் அடியில் படுப்பேன். இல்லையெனில் அறையில் தண்ணீரைக் கொட்டி கட்டில் மேல் படுத்துக்கொள்வேன். கட்டில் மேல் ஈரவேட்டியைப் பரப்பி கீழே படுப்பது தான் கொஞ்சம் சூட்டைத் தணிக்கும். ஆனால் வேட்டி வெகு சீக்கிரம் உலர்ந்து விடும். மறுபடியும் அதை நனைத்துக் கொண்டு வந்து பரப்ப வேண்டியிருக்கும். இதில் எது தேவலை?

குழந்தைகள் என்னிடம் ரொம்ப பாசத்துடன் இருந்ததால், நான் அலுவலகத்திலிருந்து வந்ததும். சட்டையைக் கழற்றி உடம்பை வியர்வை போக, தண்ணீர் விட்டுக் குளிர்வித்துக்கொள்ளக் கூட விடாது. உடனே என்னிடம் ஓடி வந்து கட்டிக்கொள்ளும். அவற்றை விலக்கிகொண்டு குளியலறைக்குப் போவது பெரும் பாடாக இருக்கும். எனக்கும். குழந்தைகளை வலுகட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்துக் குள்ளாகும் திருமதி கிருஷ்ணமூர்த்திக்கும். எனக்கு பாவமாக இருக்கும்.

கிருஷ்ணமூர்த்தியை கடைத்தெருவில் எனக்குத் தெரிந்த பலசரக்குக் கடை, ஹோட்டல், துணிக்கடைகெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தேன். அவ்வப்போது கடனில் ஏதும் வாங்கிக்கொள்ள சௌகரியமாக. வீடு இன்னொரு விதத்தில் கலகலப்பாக மாறியது.

அவ்வப்போது சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரமல்ல, மற்ற நாட்களில் கூட சம்பல்பூர போவது எனக்குக் கிடைத்த மாற்றமாக இருந்தது. சம்பல் பூர் போவது அலுவலக நாட்களில் கூட ஒன்றும் பெரிய சிரம சாத்தியமான காரியம் இல்லை. பஸ் கிடைத்தால் 10 மைல் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்து சம்பல்பூர் சேர்ந்து விடலாம். ஆறு மணீக்குத் தான் படம் ஆரம்பிக்கும். மிக நல்ல படங்கள் பார்க்க முடிந்தது. ஷிகஸ்த் என்று ஒரு படம். அசோக் குமாரும் மீனா குமாரியோ அல்லது நூதனோ நடித்தது. மிகவும் மனதைக் கலக்கிய படம். இப்போது கதையெல்லாம் நினைவில் இல்லை. இப்போது எல்லோர் மனத்திலும் பதிந்துள்ள பர்சாத், ராஜ் கபூரை பெரிய ஸ்டாராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் ஒரு சினிமா பெருந்தலையாக்கிய படம். உத்தம் குமார் என்னும் அக்கால வங்காளத் திரைப்படத்தின் சூப்ப்ர் ஸ்டார், பின் சுசித்ரா சென் படங்கள் நிறைய பார்க்க முடிந்தது. பெரும்பாலான ஹிந்தி தமிழ் படங்களின் தரத்துக்கு மேலான, படங்களாகவே வங்காளி மொழியில் வருவன இருந்தன. ஆனால் ஹிந்தி படங்கள் வங்காளப் படங்களின் சராசரித் தரத்திற்கு வெகு கீழே இருந்த போதிலும், ஜோகன், மஹல், ஷிகஸ்த் போன்றவை இப்போதும் ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பின்னும் அவற்றை நினைக்கும் போது மனதில் ஒரு வேதனைக் கீற்று கீறிச்செல்வது போல ஒரு உணர்வு. அவ்வளவு தூரம் ஆழமாக அந்தப் படங்களின் பாதிப்பு அந்த வயதில் இருந்திருக்கிறது.

நாம் அறியாதே பல விஷயங்கள் நடந்துவிடுகின்றன. நாம் அதற்குப் பொறுப்பாளியாகிவிடுகிறோம். இத்தகைய ஒரு காயம் நாம் ஏற்படுத்தினோமா, அந்த எண்ணத்தில் தான் அந்தச் செயல்கள் இருந்தனவா என்று யோசிக்கும் போது ஏன் இப்படியெல்லாம் என்றும் மனதில் ஒரு கலவரம்.

கிருஷ்ணமூர்த்தி குடும்பம் குழந்தைகள் எனக்கும் சரி, அவ்வப்போது என் வீட்டுக்கு வந்து போகும் கெஸ்ட் ஹவுஸ் நண்பர்களுக்கும் சரி, மிக அன்பான மனதுக்கு இதமான நேரங்கள் அவை. இருப்பினும் அது வெகு சீக்கிரம் எப்படியோ முனை திரும்பி எதிர்பாராத பாதைக்குயில் சென்று விட்டன நிகழ்வுகள். சுமார் ஆறு ஏழு மாத காலம் கடந்திருக்கும். ராஜாவும் அவ்வப்போது ஹிராகுட்டிலுருந்து வந்து போய்க்கொண்டிருப்பார். ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்தை ராமச்சந்திர புரத்துக்கு கொண்டுவிட்டு வரப்போவதாகவும் திரும்பி வந்து  ஹிராகுட்டில் எங்காவது தங்குவது சௌகரியமாக இருக்கும்ம் என்று சொன்னார். குழந்தைகளைப் பிரிவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் எல்லாப்பிரிவுகளும் இருக்கும். என்றும் யாரும் எப்போதும் உடன் இருந்துவிடப் போவதில்லை. நானே கூட பிரிய நேரிடலாம். அப்போதும் அது நானே வர வழைத்துக்கொண்ட வேதனையான பிரிவாகத் தானே இருக்கும்? நான் என் தங்கை தம்பிகளைப் பிரியவில்லையா என்ன? என் பெற்றோர்கள், பாட்டி எல்லாரும் என்னைப் பிரிந்து வாழ வில்லையா என்ன? அவர்களை சம்பல்பூர் வரை சென்று ரயில் ஏற்றிவிட்டு வந்தேன்.  பின் ஒரு நாள் புர்லா வந்த ராஜா திடுக்கிட வைக்கும் கேள்வி ஒன்றைக் கேட்டார். ”ஏண்டா சாமா, கிருஷ்ணமூர்த்தி சாமான் வாங்கின கடை பாக்கியை நீ கட்டினாயாமே? எதற்கு?” என்று கேட்டார். “ஆமாம் நான் தான் அவரை அந்தக் கடைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என்னை நம்பித்தான் அந்தக் கடைகாரன் கடனுக்கு சாமான் கொடுத்தான். ”பாக்கி வைத்திருக்கிறார் உங்க தோஸ்த். பணம் வருமா? என்று கேட்டான். “வரும். என்னை நம்பு வரவில்லையென்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அடுத்த மாதம் நானே கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு என்ன கஷ்டமோ என்னவோ பிறகு சாவகாசமாக நான் அவர்களி டமிருந்து பணம் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் கடைக் காரனுக்கு காத்திருக்கவேண்டுமென்று என்ன முடை?. ஏன் என்ன ஆச்சு? என்றேன்
.
“என்னமோடா, எனக்கு ஒண்ணும் சொல்லத் தோணலை. அவர் என்னத்துக்கு கொடுக்கணும். இனிமே நாம் இங்கே இருக்கறது சரியில்லை” என்று அவர்களுக்குப் பட்டிருக்கிறது. அதனால் தான் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு அவர் மாத்திரம் ஹிராகுட்டுக்கு வருவதாக் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கடைக்காரன் ஒன்றும் சொல்லவில்லை நீ இதை டயரியில் எழுதி வச்சிருக்கே. அதைப் படிச்சிருக்கா.” என்றார்.

எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. இன்னொருத்தர் டயரியை யாராவது படிப்பார்களா? அதுவும் படித்தது கிருஷ்ணமூர்த்தியா அவர் மனைவியா? ரொம்ப பண்புள்ளவர்களாகத் தெரிந்தார்களே. ஒரு வேளை இது தப்பு என்று தெரியவில்லையோ என்னவோ. குடும்பத்தில் யாருக்கும் வரும் கடிதத்தை எல்லோருமே படிக்கிறதில்லையா?” என்னவோ மனம் சமாதானம் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எல்லாம் நொண்டிச் சமாதானமாக எனக்கே பட்டது.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் என்னிடம் எந்தவித அன்னிய பாவனையோ அல்லது வெறுப்போ காட்டியவர்கள் இல்லை. சம்பல்பூர் ரோட் ஸ்டேஷனில் விட்டு வரும் வரை குழந்தைகள் அவர்கள் எல்லோருமே மிகவும் அன்போடு தான் இருந்தார்கள். ஊருக்குப் போய் ராமசந்திரபுரத்திலிருந்து. கிருஷ்ண மூர்த்தி எனக்கு கடிதமும் எழுதினார்.

ஆனால் அன்றிலிருந்து நான் டயரி எழுதுவது என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன். அந்த வருஷம் தான் யாரோ டயரி ஒன்றை பரிசளிக்கப் போக, அந்த வயதில் எனக்கு இதெல்லாம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்க எழுதத் தொடங்கினேன். அதன் விளைவு இப்படி இருக்குமென்றால்… விட்டு விட்டேன். 1952-ம் வருடம். இது 2011- வருடம். டயரி என்ற நினைப்பே எழுந்ததில்லை. எதெது நினைவில் தங்குகிறதோ தங்கட்டும்.

அப்படி நினைவில் தங்கியவை தான் நினைவுகளின் சுவட்டில் என இங்கு பதிவாகின்றன.


(68) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது அவர்கள் இல்லை. வீடு வெறிச்சோடிக்கிடந்தது. ஆனால் சுகமோ துக்கமோ இம்மாதிரியான மனச்சலனங்கள் அதிக நாட்கள் நீடிப்பதில்லை. வீடு காலியானதும் நண்பர்கள் மறுபடியும் வந்து குழுமத் தொடங்கிவிட்டார்கள். தேவசகாயம் கூட தனக்கென ஒரு வீடு அரசு கொடுத்திருந்த போதிலும், “இது தாங்க நம்ம வீடு. அது வெறும் கெஸ்ட் ஹவுஸ் தான். அப்பப்ப யார் வேணும்னாலும் அங்கே போய் தங்கிக்கலாம். ஆனா இதுதானே பழகின இடம் என்றார். கொஞ்ச நாட்களில் அவர் ஊரிலிருந்து வேலு என்ற தன் நண்பரையும் அழைத்திருந்தார். அவரும் எங்களோடு தங்கினார். வேலுவுக்கு ஒரு வேலை பாத்துக் கொடுங்களேன் உங்க ஆபிஸில் என்று கேட்டார் தேவசகாயம். நான் என்ன யாருக்கும் வேலை தேடித்தரும் நிலையிலா இருந்தேன்?. இப்போது நான் வேறொரு ஆஃபீசுக்கு மாற்றப்பட்டிருந்தேன். வேறென்றால் எங்கோ தூரத்தில் அல்ல. அதே பெரிய கட்டிடத்தில் ஒரு சூப்பிரண்டெண்டிங் என்ஜினீயர் ஆஃபீஸில். தர்ம ராஜன் என்று பெயர் சூப்பிரண்டெண்டிங் என்ஜினியருக்கு. அவருக்கு உதவியாக ஜே ஆர் லாமெக் அவரும் ஒரு என்ஜினியர் தான். தர்மராஜன் ஹிராகுட் அணையோடு மின் உற்பத்திக்கும் உற்பத்தியான மின்சக்தியை வெளியே எடுத்துச்செல்ல ட்ரான்ஸ்மிஷன் வேலைகளுக்கும் பொறுப்பாவார். லாமெக் தமிழ் நாட்டின் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிறித்துவர். நான் இந்த அலுவலகத்திற்கு பதவி உயர்வில் மாற்றப்பட்டிருந்தேன். பதவி உயர்வு என்றால், கீழ்நிலை குமாஸ்தா(LDC) விலிருந்து ஒரு படி உயர்ந்து மேல்நிலை குமாஸ்தா(UDC)வாகியிருந்தேன். அங்கு எனக்கு நல்ல பெயர்.” யாரையும் எதுவும் சந்தேகங்களோ, சொல்லிக்கொடு என்றோ கேட்பதில்லை. தானாகவே யோசித்து என்ன செய்யவேண்டும் என்று செய்து கொள்கிற ஆள். என்னை ஒரு தடவை கூட இந்த கேஸை எப்படி கையாள்வது என்று கேட்டதில்லை,” என்று எங்கள் சூப்பிரண்டெண்ட்ண்ட் பட்டாச்சார்யா மர்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.  இதனால் என் தலை கொஞ்சம் கூடவே நிமிர்ந்து உயர்ந்து விட்டதாகத் தோன்றியது. .

பட்டாச்சார்யா வங்காளி. கொஞ்சம் குள்ளமான மனிதர். அவருடைய பண்பும் மென்மையுமான பழகும் குணம் அவரவர் குணத்துக் கேற்ப ஒன்று மரியாதை உணர்வை வேண்டும். அல்லது வேறு சிலரை,, கேலி செய்யத் தூண்டும். எனக்கு அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாகவும் இருக்கும். இரக்கமும் தோன்றும். அதோடு மரியாதையும் கலந்து வரும். என்ன இருந்தாலும் அவர் எனக்கு மூத்த அதிகாரி. அவருடைய மனைவி அவரை விட ஏழு அல்லது எட்டு அங்குலம் உயரமானவள். நல்ல அழகி. நல்ல அழகி என்றால் எங்கள் இரண்டு காலனிகளிலும், மகாநதிக்கு அக்கரையிலிருந்த ஹிராகுட்டிலும் இக்கரையிலிருந்த புர்லாவிலும் அவள் போன்ற அழகி இன்னொருத்தி இல்லை. எங்கள் ஊர் க்ளியோபாட்ரா தான்.. அவர்கள் இருவரும் சேர்ந்து மாலையில் காலாற நடை போவது காலனியில் எல்லோரும் காண விரும்பிக் காத்திருக்கும் காட்சி. தனியாகத் தான் செல்வார்கள். குழந்தைகள் இல்லை. ஊரின் பொறாமைக்கு ஆளாகலாம். அதுவே பட்டாசார்யாவின் உயரைத்தை சில அங்குலங்கள் கூட்டி அவரை நிமிர்ந்து நடக்க வைக்கும். ஆனால் கேலிக்கு ஆளாவது பாவம். அதுவும் நடந்தது. ஒரு நாள் பட்டாசார்யா எங்களில் சிலரை தேனீர் அருந்த வீட்டுக்கு அழைத்திருந்தார். போயிருந்தோம். எங்களை வரவேற்பதில் அவ்வளவாக அந்த அம்மையார் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. என்று தோன்றியது. நாங்கள் பாட்டாசார்யாவின் கீழ் வேலை செய்பவர்கள். எங்களை வரவேற்றார் பட்டாசார்யா. உட்கார வைத்தார். பேசிக்கொண்டிருந்தோம். தன் மனைவிக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அம்மையார் சற்றுக் கழித்து உள்ளே போனார். பின்னர் தான் தெரிந்தது தேனீரோடு அவர் திரும்பிய போது. எங்களுகெல்லாம் தேனீர் கொடுத்தார். ஆனால் தன் கணவருக்குக் கொடுக்கவில்லை. பட்டாசார்யாவுக்கு முகம் சுண்டியது. “கீ ஹொயேச்சு?, ஏக்ட்டு அமாகெ திபே நா கி?. அமார் சா கொதாய்?” (என்ன ஆச்சு?. எனக்கும் கொஞ்சம் டீ கொடுக்க மாட்டியா?} என்று கேட்டார் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு.  “நா துமி காபே நா. எக்கொனி துமி கேயெச்சு. கொத்தோ பார் சா காபே துமி (ஊஹூம் நீ சாப்பிடக் கூடாது. இப்போதானே சாப்ப்ட்டே. எத்தனை தடவை சாப்பிடுவே நீ” என்று அந்த அம்மையார் வெடுக்கென கடிந்து சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார். நாங்கள் இருக்கும் போது கொஞ்சம் புன்னகையோடு மென்மையாகச் சொல்லியிருக்க்லாம் என்று தோன்றிற்று. எங்களில் யாருக்கும் வங்காளி தெரியாது என்றே பாவனை செய்தோம் வெளியில் எல்லோரும் சொல்வதன் நிருபணமோ அது என்று நினைத்தோம். “யார், பீபீ ஸே டர்தா பஹூத் ஹை யார்” (பொண்டாட்டி கிட்டே பயப்படுகிற ஆசாமி} என்பது அனேகமாக ஊர் வழக்கு. அது கேலிக்குப் பிறந்த கற்பனை அல்ல. நடப்பதைத் தான் சொல்கிறார்கள் என்று தெரிந்தது.

பட்டாசார்யா என்னேரமும் வெத்திலை போட்டுக் குதப்பிக் கொண்டே இருப்பார். அதோடு ஜர்தாவும் (புகையிலை) சேர்ந்ததோ என்று சந்தேகம் எங்களுக்கு. வெத்திலைக் குதப்பலோடு தான் அவர் எங்களோடு பேசுவதைப் பார்த்திருக்கிறோம். தர்மராஜன் அழைத்தால் என்ன செய்வார் என்பது தெரியாது. பார்த்ததில்லை. இத்தோடு சோடா புட்டி கண்ணாடி வேறு. அவருக்கு கொஞ்ச நாளில் கண் பார்வை மங்கிக்கொண்டு வந்தது. ”கல்கத்தா போகணும் போய் டாக்டரிடம் காட்டணும்,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒரு நாள் திடீரென கல்கத்தா போய்த் திரும்பினார். பல் எல்லாம் காவியேறி கெட்டு விட்டதென்றும் அதனால் எல்லா பற்களையும் எடுத்து விட்டு புது செட் கட்டிக்கொள்ளவேண்டும் என்று டாக்டர் சொன்னதான், புதுசாக பல் செட் ஒன்றுடன் அவர் திரும்பிய போது தோற்றம் அளித்தார்.  எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவருக்கு அதிகம் போனால் 40 வய்து இருக்கும். இப்போது பல் செட். புர்லா வாசிகளில் அவரைத் தெரிந்தவர்களுக்கு, திருமதி பட்டாசார்யா இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார் என்ற கவலையில் ஆழந்தனர். பட்டாசார்யாவுக்கு இனி ஜர்தாவோடு வெத்திலை எப்படி போடுவது என்ற பிரசினை முன்னிற்கும் என்று நான் நினைத்தேன். வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை எல்லாவற்றையும் போட்டு நீட்டிய கால்களுடன் உட்கார்ந்து இடித்துக்கொண்டிருக்கும் கிழவிகளை நிலக்கோட்டையில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. ஆனால் 1953 லேயே அவை சரித்திரமாகிவிட்ட  பழமையைப் பின்னோக்கும் நினைவுகள் தான். இருப்பினும் இது இன்னமும் மோசமான விளைவுகளுக்கு இழுத்துச் சென்றது. ஒரு மாதம் கழிந்தது. பட்டாசார்யாவின் கண் பார்வை இன்னமும் மோசமாகவே மறுபடியும் கல்கத்தா போய்வந்தார். இம்முறை ஒரு செகண்ட் ஒபீனியன் (இன்னொரு டாக்டரின் ஆலோசனை) பெற்றுத் .திரும்பி வந்தபோது அவர் சொன்ன செய்தி அவருக்கு மாத்திரம் அல்ல எங்களுக்கும் அதிர்ச்சியாகவும் சிலருக்கு மனவேதனை தருவதாகவும் இருந்தது. இரண்டாம் ஆலோசனை தந்த டாக்டர் சொன்னாராம் “ ”பற்களை எடுத்திருக்க வேண்டாம். அதற்கும் உங்கள் கண் பார்வை மங்கிப் போவதற்கும் சம்பந்தமில்லை” என்று. என்ன சொல்ல!. ஊரே பொறாமைப் பட வைக்கும் அழகு படைத்த பெண்ணை துர்காதேவி  அவருக்கு மனைவியாகக் கொடுத்துக் கடாட்சித்தாள். . எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய அருளா அது? ஆனால் அவர் வாழ்க்கையின் நிம்மதியைக் குலைக்கும் இத்தனை மன வேதனைகளையுமா துர்கையம்மன் அந்த அருளோடு பாலித்திருக்கவேண்டும்?

என் பிரதாபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் பட்டாசார்யாவும் அவர் நினைப்பு வந்ததும் அத்தோடு அவர் அழகு மனைவியும் உடன் வந்து குறுக்கிட்டு விட்டார்கள். குறுக்கிட்ட காரணத்தை நான் இன்னும் சொல்லவில்லை. தேவசகாயம் தன் ஊர் நண்பரை புர்லாவுக்கு வேலை தேடித்தருவதாகச் சொல்லி அழைத்து வந்தார் என்று சொன்னேன். அந்த நண்பர் வேலுவும்  என் அறையில் தான் வாசம். கல்யாணம் ஆகிவிட்டது. குடும்பப் பொறுப்பு அவர் தலைமேல். வேலை தேடியாக வேண்டும். பின்னர் புது மனைவியை அழைத்து வரவேண்டும். குடும்ப வாழ்க்கை தொடங்க வேண்டும். என் புதிய ஆஃபீஸில் எங்கள் சூப்பிரண்டெண்டிங் என்ஜினியருக்கு உதவியாளராக வந்த ஜே ஆர் லாமெக்கைப் பற்றிச் சொன்னேன். தில்லி அமைச்சரகத்திலிருந்து ஒரு பழைய கேஸ் ஒன்று ஹிராகுட் அணை நிர்வாகத்துக்கு வந்து அது சுற்றிச் சுற்றி கடைசியில் ஜே ஆர் லாமெக்கிடம் வந்து சேர்ந்தது. அவர் அந்தப் பெரிய ஃபைல் கத்தையைப் பார்த்து” இந்தத் தலைவேதனை என் கிட்டே தானா வரணும்? என்று அலுத்துக்கொண்டிருந்த போது நான் அவர் முன்னே உட்கார்ந்திருந்தேன். “சாமிநாதன், இந்த ஃபைலைப் பார்த்து என்ன செய்யவேண்டும் என்று சொல். சரி வேண்டாம். முழுமையாக ஒரு சம்மரி ஒன்று தயார் செய்து கொடு போதும். நான் தர்மராஜனிடம் பேசிக்கொள்கிறேன்” என்று சொன்னார். அடுத்த நாள்முழுதும் அந்த ஃபைலைப் படித்து சுருக்கமாக எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி ஒரு சம்மரி தயார் செய்து கொடுத்தேன். லாமெக்குக்கு ஒரே சந்தோஷம். “சாமிநாதன், ஒரு பெரிய வேலை செய்து என் காரியத்தைச் சுலபமாக்கி யிருக்கிறாய். ஒண்ணு சொல்லட்டுமா? எனக்கு ஒரு ஸ்டெனோ டைபிஸ்ட் வேணும். உனக்கு யாரையாவது தெரியுமா? ஒரு நல்ல உபயோகமான ஆளைப் பிடிச்சுக் கொடுத்தா நீயும் அந்த ஸ்டெனோ டைபிஸ்டை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். உன் நேரம் அனாவசியமா செலவாகாது” என்றார். எனக்கு சந்தோஷமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. நான் ஒரு(UDC) மேல் நிலை குமஸ்தா. எனக்கும் என் அதிகாரிக்கும் ஒரே ஸ்டெனோ டைபிஸ்டா? இடையில் இருக்கும் பட்டாசார்யா நான் ஒரு ஸ்டெனோ டைபிஸ்டுக்கு டிக்டேஷன் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பார் என்று யோசித்தேன்.

அன்று மாலை வீடு திரும்பியதும் தேவசகாயத்திடம் சொன்னேன். வேலுவுக்கு வேலை கிடைக்கலாம், எங்கள் ஆபீஸிலேயே. அவருக்கு டெஸ்ட் வைப்பார்கள். அதில் தேறினால் நாளைக்கே அவருக்கு வேலைக்கான ஆர்டர் கிடைத்து விடும் என்றேன்.  இரண்டு பேருக்குமே ஏதோ டெர்பி லாட்டரி விழுந்த மாதிரி சந்தோஷம்.

மறு நாள் வேலுவை லாமெக்கின் முன் நிறுத்தினேன். அவர ஆச்சரியப்பட்டுப் போனார். அசகாய சூரனாக இருக்கிறானே, என்ன சொன்னாலும் இவன் செய்துவிடுகிறானே என்று திகைத் தாரோ என்னவோ. வேலு அவருக்கு வைத்த டெஸ்டில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், லாமெக்குக்கு ஒரு ஸ்டெனோ டைபிஸ்ட் கிடைக்கப் போவதை நினைத்து, “பரவாயில்லை, போகப் போகக் கத்துக்கொள்வார். புதுசு அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லி வேலுவை தர்மராஜனிடம் சொல்லி வேலைக்கு அமர்த்தினார். அப்போதெல்லாம் எங்கள் அணைக்கட்டு நிர்வாகத்துக்கு எங்கள் இஷடப்படி வேலைக்கு உரியவர்களைத் தேர்ந்து அமர்த்தலாம். இப்போது போல U,P,S.C. மூலம் தான் ஆட்கள் எடுக்கவேண்டும் என்பது என்பதில்லை.

லாமெக் வேலுவிடம், “வேலு இங்கே அப்படி ஒன்றும் அதிகம் வேலை இல்லை. அப்பப்போ சாமிநாதனும் உங்களுக்கு வேலை கொடுப்பார், சரிதானா?” என்றார். வேலுவுக்கும் சந்தோஷம் தான்.

அன்றிலிருந்து அந்த அணைக்கட்டு ஆபீஸிலேயே ஒரு அப்பர் டிவிஷன் க்ளார்க்குக்கு ஸ்டெனோ டைபிஸ்ட் கொடுக்கப் பட்டிருப்பது, எங்கள் எலெக்ட்ரிகல் சர்க்கிள் செக்‌ஷனில் மாத்திரமல்ல, எல்லோரையும் பொறாமைப் பட வைத்தது. நான் ஒரு இஞ்ச் அதிகம் வளர்ந்துவிட்டதாக பிரமையில் மிதந்தேன். ஒரு நாள் நான் வேலுவுக்கு டிக்டேஷன் கொடுத்துக் கொண்டிருந்த போது, பட்டாசார்யா பார்த்துவிட்டு, ”:சாமிநாதன் வேலையை முடித்துவிட்டு என் ரூமுக்கு வா, கொஞ்சம் வேலை இருக்கு,” என்று சொல்லி போனதைப் பார்த்து எல்லோரும் திக்கித்துப் போனார்கள். அந்த நிமிஷம் நான் இன்னும் ஒரு இஞ்ச் வளர்ந்தேன்.   .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.