(87) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -இல்லஸ்ட்ரேட்டட்  வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த ,கல்கிக்குப் பிடிக்காது போய் பிரச்சினைக்கு காரணமாகிய குறுக்கெழுத்துப் போட்டி போன்ற (Crossword Puzzle) சமாசாரமும் வீக்லியில் வந்து கொண்டிருந்தது. இரண்டாவது ஒவ்வொரு வாரமும் ஒரு பக்கம் முழுவதும் பிரசுரமான புதுமணத் தம்பதிகளின் படங்கள். தம்பதிகளின் பெயர்களுடன். இது இப்போது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அன்று இது மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும்.. 

சில. வருடங்களுக்குப் பிறகு ஏ. எஸ். ராமன் என்பவர் அதன் ஆசிரியரானார். இதே வீக்லி மூலமாகத் தான் ஏ.எஸ் ராமன் ஒரு கலை விமர்சகர் என்பதும் வாசகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தது.. அவர் ஆசிரியத்வத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் குணமே மாறியது. இந்தியாவின் அப்போதைய முன்னணி ஓவியர்கள் சிற்பிகளது படைப்புகளின் படங்கள் மட்டுமல்லாது அவை  பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் விரிவாகப் பேசும் கட்டுரைகளும் வெளிவந்தன. இது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்தது. அது முடிந்த பிறகு இந்திய சங்கீதக் கலைஞர்களைப் பற்றி விரிவான கட்டுரைகள். பின்னர் கர்னாடக சங்கீதக் கலைஞர்களைப் பற்றி. மதுரை மணி,அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், கும்பகோணம் ராஜமாணிக்கம்  பிள்ளை,திருவாடு துறை ராஜரத்தினம் பிள்ளை செம்மங்குடி சீனிவாசய்யர், ஜி.என்.பி, எம்.எஸ் சுப்பு லக்ஷ்மி என்று இப்படி நிறைய வரிசையாக கட்டுரைகள் வந்தன. ஏ.எஸ் ராமனின் ஆசிரியத்வத்தில் கர்நாடக சங்கீத கலைஞர்களை வடநாட்டு வாசக தளத்தில் பிராபல்யப் படுத்தும் காரியத்தை வீக்லி என்னும் ஒரு பம்பாய் பத்திரிகை தான் செய்தது. தமிழ் நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் செய்யவில்லை. வட நாட்டு பத்திரிகைகளைப் பற்றிப் பேசவே தேவையில்லை. அத்துடன் அனேக சமயங்களில் விசேஷ சிறப்பிதழ்களும் வீக்லியில் வெளிவந்தன. ஒவ்வொரு சிறப்பிதழும் ஒரு கலையைப் பற்றியதாக இருக்கும். ராஜஸ்தானி சிற்றோவியங்கள் ,பரத நாட்டியம், கதக், பெங்காளி ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்று இப்படி. இன்னம் ஒன்று கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி அவரது சிறுவயதிலிருந்து அன்று வரைய அவரது ஆன்மீகப் பயணத்தை பற்றி மிக விரிவான கட்டுரை ஒன்றும் நிறைய படங்களுடன் வெளி வந்தது. யெஹூதி மெனுஹினின் சென்னை விஜயம் பற்றிய கட்டுரையில் மெனுஹின் ”ஜெயராமன் (லால்குடி) எங்கே?,” என்று கூட்டத்தில் தேடிய செய்தியும் அதில் இருந்தது நினவுக்கு வருகிறது.

இவற்றை நான் வெகு வருஷங்கள் தில்லி வந்த பிறகு  கூட சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் தில்லியில் ஒரு வாடகை வீட்டில் நிலையாக ஒரு வருடம் இருக்க முடியாது. ஹோட்டல்களில் தங்கியிருந்த (1956 – 1974) இருபது வருட கால, மாறி மாறி பல ஹோட்டல்களில் தங்கியிருந்த, ஒற்றை அறையில் மூவரோடு பகிர்ந்து கொண்ட, வாசத்தில் கூட பத்திரமாக இருந்தவை, பின்  குடும்பத்தோடு வாழ்ந்த ஒற்றை அறை வாசத்தில் எங்கோ எப்போதோ மறைந்து விட்டன. மார்க் என்னும் கலைக்கேயான பத்திரிகையில் வரும் விசேஷ இதழ்கள் போலத்தான் இருந்தன வீக்லியில் ஏ.எஸ் ராமன் பதிப்பித்த சிறப்பு இதழ்களும். சி. ஆர்.மண்டி காலத்தில் பிரபலமாகியிருந்த “திருமண தம்பதிகள் புகைப்படங்களும், குறுக்கெழுத்துப்  போட்டிகளும்” ராமன் வந்ததும் மறைந்துவிட்டன.

அப்போது தான் ஒரு பத்திரிகை ஆசிரியத்வத்தின் சிறப்பையும் மகத்வத்தையும் அறிந்து கொண்டேன். ஒரு பத்திரிகையின் குணத்தை நிர்ணயிப்பது அதன் ஆசிரியர் கொண்டுள்ள பார்வையையும் அவரது செயல் முனைப்பையும் சார்ந்தது என்று எனக்கு ஏ.ஸ். ராமன் செயல் பாட்டிலிருந்து தெரிய வந்தது. அவருக்கு முன்னால் இருந்த வீக்லி, அவரது ஆசிரியத்வத்தின் வீக்லி, பின்னர் எம்.வி. காமத்,. அவரது காலம் ஏதும் விசேஷத்வம் கொண்டதில்லை.

அதன் பின் எழுட்பதுகளில் என்று நினைவு குஷ்வந்த் சிங்.அவரது ஆசிரியத்வத்தில அவரது ஒரு பக்க ஒரு பல்புக்குள் அடைபட்டுக் காணும் குஷ்வந்த் சிங்கின் காலமும் (With Malice Towards none) அவருக்கே முத்திரையாகிப் போன பாலியல் ஜோக்குகளும் வரும். அதில் அவர் தம் சக சீக்கியர்களையே கிண்டல் செய்வார். அவர் காலத்தில் வீக்லியின் வாசகப் பெருக்கம் ஒரு உச்சியை அடைந்தது. அவர் ஆசிரியத்வ காலத்தில் தான் ஒரு வருடம் பாரதி தாசனுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது. குஷ்வந்த் சிங் எல்லா மொழிகளிலும் அவ்வருடம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்கள் பற்றி கட்டுரைகள் எழுதச் சொல்ல, பாரதி தாசன் பற்றி எழுத எனக்குக் கடிதம் வந்தது. எம். கோவிந்தனின் சமீக்‌ஷா பத்திரிகையில் மௌனி பற்றி ஒரு கட்டுரையும் அவர் கதை ஒன்றின் ஆங்கில் மொழிபெயர்ப்பும் நான் எழுதியிருந்தது அவர் கண்ணில் பட்டு என்னை பாரதி தாசன் பற்றி எழுதக் கேட்டு கோவிந்தனின் மேற்பார்வையில் எனக்கு கடிதம் வந்தது. நானும் எழுதி அனுப்பினேன். மற்ற மொழிகளிலிருந்து வந்தவை எல்லாம் ஒரு இதழில் பிரசுரமாகியிருந்தது .நான் எழுதியதைத் தவிர. நான் குஷ்வந்த் சிங்குக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். நான் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதட்டுமா என்று நான் கேட்டேனா?. என்னை எழுதச் சொல்லிவிட்டு பின் தமிழை மாத்திரம் போடாமல் விட்டதற்கு என்ன காரணம்?. இப்படி ஏமாற்றும், சொல் தவறும் சீக்கியருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இப்படி வாக்குத் தவறிய மாஸ்டர் தாராசிங்குக்கு அம்ரித்சர் குருத்வாராவில் பாத்திரம் கழுவவும் செருப்புக்களைக் காவல் காக்கவும் கட்டளையிட்டு தண்டனை கொடுத்த பஞ்ச் பியாரேக்களுக்கு நான் உங்களைப் பற்றி எழுதினால் என்ன ஆகும்? “ என்று எழுதினேன்.
அவரிடமிருந்து, ஒரு சின்ன கடிதம் மூன்று நான்கு வரிகளே கொண்டது. “ உங்கள் கட்டுரை வெகு நீளமாக இருந்ததால் சேர்க்க முடியவில்லை சீக்கிரம் வரும் இதழ் ஒன்றில் அது பிரசுரமாகும்.” அவ்வளவு தான். என் சீற்றத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. கட்டுரை பிரசுரமானது.தான். அதைப் பார்த்த முரசொலி மாறன் அவர் பாணியில் எனக்கு பதிலடி கொடுத்திருந்தார். ஒரு தமிழ் பத்திரிகையில். எது? என்று இப்போது நினைவில் இல்லை. அப்போது நான் விடுமுறையில் சென்னையில் இருந்தேன், கசடதபற குழுவினர் சந்திக்கும் ஞானக்கூத்தன் அறையில். முரசொலி மாறன் எழுதியிருப்பதாகப் பார்த்து எனக்குச் சொன்னது ஞானக் கூத்தன் என்றும் எனக்கு நினைவு.  .  

குஷ்வந்த் சிங்க் பொறுப்பேற்றிருந்த வருடங்களில் வீக்லியின் விற்பனை எக்கச் சக்கமாகக் கூடியதாகச் சொல்லப்பட்டது. காரணம் அதில் தவறாது வெளிவந்து கொண்டிருந்த  Pin up girls  படங்கள் என்றும் கேலி பேசப்பட்டது. அவருக்குப் பின் கடைசியில் வந்த ப்ரீத்தீஷ் நந்தி தான் கடையை மூடச் செய்தவர் என்று நினைக்கிறேன்

.இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்த  ஆசிரியர்களின் அணிவகுப்பையும் அவ்வப்போது வீக்லியின் குணமாற்றத்தையும் கண்ட பிறகு தான் ஒரு பத்திரிகையின் குணத்தை நிர்ணயிப்பது அதன் ஆசிரியப் பொறுப் பேற்பவர் என்ற தெரிவு எனக்கு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் இன்னொரு மாற்றமும் அன்றைய சூழலில் ஏற்பட்டது.  பி.வி. கேஷ்கர் என்னும் ஒரு மராட்டியர் Information and Broadcasting மந்திரியாக மத்திய அமைச்சரவையில் வந்து .சேர்ந்தார். அவர் வந்ததும் ரேடியோ ஒலிபரப்பில் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாற்றங்களைக்கொணர்ந்தார். அன்னாட்களில் ஆல் இந்தியா ரேடியோவைக் கேட்பாரை விட இலங்கை வானொலியைக் கேட்பார் தான் அதிகம். இருந்தனர் இலங்கையிலிருந்து நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி தான் மூலை முடுக்கெல்லாம் எந்த ரேடியோ பெட்டியிலிருந்தும் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தது. வீடோ கடைத்தெருவோ, ஹோட்டலோ எங்கும். சென்னை, திருச்சி ரேடியோவைக் கேட்பாரில்லை. இலங்கை ரேடியோவிலிருந்து எப்போதும் சினிமா பாட்டுக்கள் தான் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். இந்தப் பாட்டை விரும்பிக் கேட்ட நேயர்கள்  என்று, ”விருத்தா சலத்திலிருந்து ராமகிருஷ்ணன், அவர் குடும்பத்தினர் செங்கல்ப்பட்டிலிருந்து மூத்து சாமி,யும் அவர் நண்பர்கள் வடிவேலு, ரங்கசாமி, வீரண்ணன் ஆகியோர், சேலத்திலிருந்து பழ்னியப்பன், அவர் சகோதரி செண்பகம்…….” என்று இப்படி இந்த பெயர்கள் ஊர் அவர் குடும்பத்தினர் என்றொரு நீண்ட பட்டியலே ஒவ்வொரு பாட்டுக்கும் வாசிக்கப்படும். எனக்குத் தெரிந்து தன் பெயர் சொல்லப்படுவதைக் கேட்க ஆவலோடு காத்திருக்கும் கூட்டதையும் பார்த்திருக்கிறேன். தன் பெயர் சிலோனிலும் தெரிந்திருக்கக் கேட்கும் பரவசம் இருக்கிறதே, அது தனிதான். இந்த நிகழ்ச்சியை அந்நாட்களில் நடத்தி வந்தவர் ஒரு மயில்வாஹனனோ என்னவோ. அப்படித்தான் பெயர் நினைவில் பதிந்திருக்கிறது.

இது பற்றி பி.வி. கேஷ்கர் வரும் வரை யாரும் கவலைப் படவில்லை. சீனப் பொருட்கள் கொட்டிக்கிடப்பதைப் பற்றி நம்மில் யாரும் கவலைப் படுகிறார்களா? ஆனால் கேஷ்கர் மராத்திச் சூழலிருந்து வந்தவர். சாஸ்தீரீய சங்கீதத்தில் ரசனை மிகக் கொண்டவர். அவர் சிலோன் ரேடியோவின் பாமரத்தனமான வணிக. ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொள்ளமுடியாதவராக மத்திய அமைச்சரவில் அவர் ஒருவர் தான் இருந்திருக்கிறார்.  இந்த வணிக ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள பல புதிய திட்டங்களைக் கொண்ர்ந்தார். ஒன்று விவித் பாரதி என்ற மெல்லிசை ஒலிபரப்புக்கான அலைவரிசை அதில் மெல்லிசைப் பாட்டுக்களே ஒலிபரப்பாகும் .இரண்டு, எல்லா ரேடியோ நிலையங்களிலும் சாஸ்த்ரீய சங்கீதம் ஒன்று National Programme of Music  அது சனிக்கிழமையோ என்னவோ ஒவ்வொரு வாரமும் கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி சங்கீதமும் மாறி மாறி தேசம் முழுதும் உள்ள எல்லா ரேடியோ நிலையங்களிலிருந்தும் ஒலிபரப்பாகும். இதன்  மூலம் தேசம் முழுதும் இரண்டு சங்கீத வடிவங்களுக்கும் பரிச்சயமும் ஞானமும் பரவ வழி ஏற்படுத்தப்பட்டது. சாஸ்திரீய சங்கீதத்துக்கும் அது சார்ந்த மெல்லிசைக்கும் ரேடியோ நிலயங்களில் உள்ளே நுழைய கதவுகள் திறந்தன். பின் வருடங்களில் இலங்கையின் மயில்வாஹனன் போல் இங்கும் ஒரு அமீன் சயானி என்பவர் தனக்கே யான ஒரு விசித்திர பாணி குரலுடன் அகில இந்திய பிராபல்யம் பெற்றார். .பி.வி. கேஷ்கரின் இந்த புதுமைகள். பாமரத்தனத்திற்கும் வணிக ஆக்கிரமிப்பிற்கும் எதிராக இருந்தது மக்களுக்கு எதிரான,  தனிமனித விருப்புக்களைத் தன் யதேச்சாதிகாரப் போக்கால் மக்களின் மீது திணிப்பதாக பெரும் எதிர்ப்புப் பிரசாரப் புயலைக் கிளம்பியது. அது சுலபத்தில் அடங்கவில்லை. ஆயினும் பி.வி. கேஷ்கரின் திட சங்கல்பத்தாலும் மன உறுதியாலும் இது ரேடியோ ஒலிபரப்பின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது.  இந்த National Programme of Music தான், பி.வி. கேஷ்கரின் பாமர சலசலப்புக்கு அடங்காமல் மன உறுதியோடு இருந்த காரனத்தால் தான் அது நிலை பெற்று, பின்னர் தொலைக்காட்சி தொடங்கியபோது இந்தியா முழுதும் ஒரே சமயம் ஒளிபரப்பாகும் National Programme of Dance- க்கும் வழிவகுத்தது. அதற்கு ஏதும் எதிர்ப்பு எழவில்லை. விரும்பாதவர்கள் கேட்பதில்லை, பார்ப்பதில்லை ஆனால் எதிர்ப்புப் பிரசாரம் ஏதும் தேசீய நடன நிகழ்ச்சிக்கு இருக்கவில்லை.  


 (88) -  நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது  ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து  வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் நான் மீன் சாப்பிட ஆரம்பித்து, பின்  எல்லா மீன் வகைகளையும் ருசித்து அவற்றின் தராதரம் அறிந்த பின் தானே அந்த அபூர்வ ஹில்ஸா மீனை வங்காளிகளைப் பைத்தியமாககும் அதன் தனி ருசியை நான் அனுபவிக்க முடியும்? முதலில் நான் மீனே சாப்பிட்டதில்லையே. பட்நாயக்குக் கொடுத்த பார்ட்டி தினத்தன்று அவன் சொல்ல ஆரம்பித்தது. பல தடவை சொல்லி விட்டான். அது அவனுக்கு என்னிடம் இருந்த பற்றுதலின்  வெளிப்பாடு .

அந்த ஒரு நாளும் வந்தது. “என் தங்கை வந்திருக்கிறாள். ஹில்ஸா கொண்டு வந்திருக்கிறாள். நாளைக்கு நீ வா சாப்பிட,’ என்றான் ஆபீஸில் இருக்கும் போது. இதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது  எங்கள் செக்ஸனில் வயதில் மிகவும் மூத்தவரும் எங்களோடு வயது வித்தியாசம் பார்க்காது தமாஷாக கிண்டல் அடித்துக்கொண்டு, மற்றவர் செய்யும் கிண்டலையும் கேட்டுத் தானும் சிரித்துக்கொண்டு இருந்தவரான பாண்டே, எஸ். பி. பாண்டே என்று நினைவில் பதிந்திருக்கிறது, எஸ் பி. யின் முழுப்பெயர் என்னவென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. எங்களுக்கெல்லாம் அவர் ”பாண்டே சாப்” தான். அது போதும். அவர் அந்த ஊர்க்காரர். அதாவது ஒடியா. எப்போதும் 10 முழ வேட்டியை வங்காளிகளைப் போல் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு முனையை பஞ்சாபி குர்த்தாவின் பக்கவாட்டு  பையில் வங்காளிகளைப் போல  சொருகிக்கொண்டு தான் வருவார். “ஏய், பங்காளி சோக்ரா,,, என்னை ஏன் கூப்பிட மாட்டேன் என்கிறாய், ஒரு மதராஸி சோக்ராவை மாத்திரம்  போய் மீன் திங்க  கூப்பிடுவாயா? அதுவும் அபூர்வமா ஹில்ஸா மாச் வந்திருக்கு. நீ கூப்பிடாட்டாலும் நான் வந்துவிடுகிறேன். கவலைப் படாதே. நான் கிராமத்துக்கு போகலை அடுத்த வாரம் போய்க்கொள்கிறேன். நாளைக்கு காலை 12 மணிக்கு வந்துவிடுகிறேன்,”” என்று சொல்லிவிட்டார். எல்லோரும் சிரித்தார்கள். அவர்களைக் கூப்பிடாததை மிருணாலைச் சீண்டுவதற்கு வைத்துக்கொள் வார்கள். ஆனால் காலை 12 மணிக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்ல மாட்டார்கள். பாண்டே சாபுக்குத் தான் அந்த உரிமையும் ஆசையும் உண்டு. மிருணாலுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவனும் சிரிப்பில் கலந்துகொண்டான். .

மிருணாலின் தங்கைகள் இரண்டு பேர். அவர்கள் டாக்காவிலிருந்து வந்து கல்கத்தாவில் உறவினர்களுடன் இருந்திருக்கிறார்கள். மிருணாலுக்கு இங்கு வேலை கிடைத்ததும் இங்கு வர இருந்தார்கள். மிருணாலின் அப்பா சுரேஷ் சந்திர சக்கரவர்த்தியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். குட்டித் தங்கையிடம் அப்பாவிற்கு மிகவும் பிரியம். அது பற்றியெல்லாம் மிருணால் முன்னாலேயே அவ்வப்போது பேச்சோடு பேச்சாக சொல்லி வந்திருக்கிறான். அவர் இன்னும் டாக்காவில் தான் இருக்கிறார். டாக்காவிலிருந்து நண்பர்கள் அவ்வப்போது கல்கத்தா வருவார்கள். அவர்களிடம் தன் கடைக்குட்டிக்கு ஏதாவது வாங்கி வரச்சொல்வார். மிருணாலின் அப்பா. இது வழக்கம். எல்லா இடத்திலும் உள்ள வழக்கம் தான். ஒரு தடவை கல்கத்தா போய் வந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி சொன்ன பொருளை வாங்கி வரவில்லை. மிருணாலின் அப்பாவுக்கு  வந்த கோபத்துக்கு அளவே இல்லை. முதலில் கோபத்தை அடக்கிக்கொண்டு “ஏன்? என்று சாதாரணமாகக் கேட்டிருக்கிறார். அவர்,”விலை கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கணுமா என்று வந்துவிட்டேன் என்று சொன்னதும், சுரேஷ் உடனே வெடித்துக் கனல் கக்கிவிட்டாராம். “ என் குழந்தைக்கு எது விலை அதிகம்?.என்று நீ யார் தீர்மானிப்பதற்கு? என்ன விலையானால் என்ன?, நான் என் சம்பளம் முழுதையுமே என் கோக்கிக்கு (குழந்தைக்கு) செலவழிக்கமாட்டேன் என்று நீயாக எப்படித் தீர்மானித்துக்கொண்டு கை வீசி வந்தாய்? உனக்கு என்னைப் பத்தி கோக்கியைப் பத்தி என்ன தெரியும்? எப்படி நீ  என்னை அப்படிப் பட்ட கருமி என்று தீர்மானித்தாய்? என்ன ஆதாரத்தில்.? சொல்லு பாப்போம் ஏதாவது ஒரு சம்பவம் சொல்லு? என்று பிடி பிடி என்று பிடித்து குதறிவிட்டார் குதறி  என்றே சொல்ல வேண்டும். அந்த மனிதன் பாவம், ஒரு ஸ்கூல் வாத்தியார். எவ்வள்வு தான் செலவழிக்க முடியும் என்று பரிதாப்பப்ட்டு வந்தால், இபபடி எரிந்து விழுவார் என்று நினைக்கவே இல்லை

விளையாடப் போன குழந்தை குறித்த நேரத்துக்குள் திரும்பாவிட்டால், கைலியோடேயே செருப்பை மாட்டிக்கொண்டு உடனே கிளம்பி விடுவாராம். அப்படி ஒரு நாள் போய்தான் ஒரு ஸ்கூலில் நடந்த கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டு அவர்க்ளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து அவர் பேசியது அடுத்த வார கல்கத்தா  தேஷ் பத்திரிகையில் அது வெளிவந்திருந்தது. அதை மிருணால் என்னிடம் காட்டினான். தேஷ் மிக தரமான, பத்திரிகை. மிகப் பெரிய தலைகள் எல்லாம் அதில் எழுதினார்கள். ஆனால் ஒவ்வொரு வங்காளியின் வீட்டிலும் வாங்கப்படும் பிரபல பத்திரிகையும் ஆகும். புர்லாவிலும் அது வந்தது. மிருணால் வீட்டில் பார்த்திருக்கிறேன். சில சமயம் ஆஃபீஸுக்கு எடுத்து வருவான்

அந்த ஹில்ஸா மீன் விருந்து  ஒன்றும் நினைவில் தங்கியிருக்கும் அளவுக்கு விசேஷமான ஒன்றல்ல. மனோஹர் லால் சோப்ராவின் தங்கை, செய்து கொடுத்த பராட்டாவும் உருளைக்கிழங்கு சப்ஜியும் சலாதும் இன்னம் நினைவில் இருக்கிறது. அது பழகிவிட்ட உணவு சிறந்த முறையில் ஒரு சிறுமி செய்தது என்ற காரணங்கள் இருக்கலாம் இதற்கு முன்னால் ஹிராகுட்டில் அங்கு போய் வேலைக்குச் சேர்ந்த புதிதில் என்னுடன் இருந்த மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்னை ஒரு நாள் சாப்பிடக் கூப்பிட்டிருந்தான். அது இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்னாக இருக்கும். அவனுடன் அதிக நெருக்கமோ, சினேகமோ இல்லை. ஆனால் தினப்படி அலுவலகத்தில் அவனுடன் உரசல் இருந்து கொண்டே இருக்கும். அதைச் சரிக்கட்டத் தான் அவன் சாப்பிட அழைத்தான். அது ஒரு சமாதான உடன்படிக்கைக்கான சடங்கு. முதல் தடவையாக ஒரு பெங்காளியின் வீட்டுச் சாப்பாடு. அது நினைவிலிருக்கக் காரணம் மீன் இல்லாத பெங்காளி சாப்பாடு. இந்த ஆளுக்கு இது போதும் என்று நினைத்தானோ என்னவோ. வீட்டில் அவன் மனைவி. ஒரு கைக்குழந்தை. நல்ல ஜீவன்கள். ஏதோ பருப்பு, சாதம் பின் ஏதோ கீரையில் செய்த ஒன்று. முதல் தடவையாக மோர் இல்லாத ரசம் இல்லாத சாப்பாடு. ஒரு Three course meal  என்பதை எப்படியோ தமிழர்கள் கண்டுபிடித்துவைத்திருக்கிறார்கள். மேற்கத்திய நடைமுறைக்கு கொஞ்சம் கிட்ட வருகிற சமாசாரம். இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நீராவியை வைத்து இட்லி என்ற ஒரு உணவுப் பண்டம் தென்னிந்தியா முழுதும் பழக்கமாகிவிட்ட, இந்தியாவிலும் தன் கியாதியைப் பரப்பி விட்ட இட்லி. அது தமிழ் தானா? தமிழ் ஒலிகொண்டதாக இல்லை. 19-ம் நூற்றாண்டு அன்றாட வாழ்க்கைச் சித்திரம் தரும் உ.வே.சா. கூட இட்லி காஃபியைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவருக்கே தெரியாத விஷய்ங்கள் போலும். பாரதியும் பேசவில்லை. அவர்கள் எல்லாம் காலை உணவு என்ன சாப்பிட்டார்கள்? சத்திரம் பற்றிப் பேசுகிறார்கள். ஹோட்டல்கள் பற்றி ஏதும் இல்லை. இவை பற்றியெல்லாம் எந்த தமிழறிஞரோ, பல்கலைக் கழகமோ ஆராய்ந்ததில்லை. இன்னமும் சங்ககால புலியை விரட்டிய முறம், பெண்டிர், கற்பு களவு பற்றிய ஆராய்ச்சிகளே இன்னம்  முடியவில்லையோ என்னவோ.

மிருணால் வீட்டிலும் அதே கதை தான். ஹில்ஸாவைத் தவிர வேறு நினைவிருக்கும் பண்டம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் அங்கு அன்பு மழை கொட்டியது. ஒரு சின்ன பெண் 10-12 வயசுப் பெண் நான் மீனைச் சாப்பிட தடுமாறுவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? ஹில்ஸா மீனின் சின்னச் சின்ன எலும்புகளை நீக்கி சதைப் பற்றை மாத்திரம் எடுத்துக் கொடுத்தார்கள். எனக்கு அந்த சாமர்த்தியம் இல்லாத காரணத்தால். இங்கே நின்று கொண்டிருக்கிறதே, இன்னொரு தங்கை. மிருணாளினுடைய 18-19 வயசுத் தங்கை அவளுக்கு இன்னம் இரண்டு வருஷங்களில் கல்யாணம் ஆகப் போகிறது. மாப்பிள்ளை எங்கள் ஆபீஸிலேயே வேலை பார்க்கும் சன்யால் எனபவன். தான் மாப்பிள்ளை.  கல்யாணம் கல்கத்தாவில். கல்யாணம்  முடிந்து திரும்பி வந்ததும் என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள். அன்று அந்தத் தங்கை தான் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என் தட்டிலிருக்கும் மீனின் எலும்புக்ளை நீக்கி சாப்பிடும் பக்குவத்தில் தரவிருக்கிறாள். அதற்கு நான் இன்னம் இரண்டு வருஷம் காத்திருக்க வேண்டும். என் எதிர் நாற்காலியில் உடகார்ந்திருக்கும் சன்யாலும் மிருணாலும் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரிக்கவிருக்கிறார்கள்.

உண்மையில் அது சிரமமான காரியம் தான். அப்போது தான் இந்தியாவின் Naval Chief எஸ் முகர்ஜி என்பவர் ஜப்பானுக்கு அரசு அழைப்பில் போயிருந்தவர் எங்கோ விருந்தில் மீன சாப்பிடும் போது அதன் எலும்பு அவர் தொண்டையில் சிக்க மூச்சடைத்து அங்கேயே அந்த விருந்து மேஜையிலேயே இறந்து போனார். ஒரு வங்காளி கடற்படை வீரர் போயும் போயும் மீன் எலும்பு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி உயிர் இழந்தார்  என்றால், பத்தொன்பது வயது தமிழ் கிராமத்து பிராமணன் பாடு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அது தெரிந்து தானோ என்னவோ மிருணாளின் வீட்டில் ஹில்ஸா மாச் தந்தது மட்டுமல்லாமல் அதைச் சாப்பிடவும் முதல் பாடம் கற்றுத் தந்தார்கள்.

மீன் சாப்பிட்டது, அதுவும் புர்லாவில் இருந்த வேறு எந்த பெங்காளிக்கும் அன்று கிடைக்காத ஹில்ஸா மாச் எனக்குக் கிடைத்தது. ஒரு பெங்காளி அடைந்திருக்கக்கூடும் பரவசம் எனக்கு கிடைக்காவிட்டாலும், அதற்கு வேண்டிய ரசனை எனக்கு இருக்காவிட்டாலும்.  அந்தச் சூழல் புதுமையாகவும் அன்பில் தோய்ந்த தாகவும் இருந்தது. பொழுது மிக நன்றாகக் கழிந்தது. மறு நாள் அலுவலகத்தில், ஒரே ரகளை. ”மதராஸி மீன் சாப்பிட்டுட்டு வந்திருக்கான் பார், நமக்குக் கிடைக்காத அதிர்ஷடம் ஒரு மதராஸி சோக்ராவுக்கு கிடைச்சிருக்கு” என்று. ஒரே கூச்சல்

மார்ச் மாதம். எங்கள் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் இரண்டே இரண்டு கிறித்துவர்கள் தான் இருந்தார்கள். தேவசகாயமும், ஜியார்ஜும் தான். ஈஸ்டருக்கு வெளியே போ9கவேண்டும் என்று முன்னர் ஒரு நாள் புது வருஷ பிரார்த்தனைக்கு சம்பல்பூர் போய் அங்கு நான் தூங்கிக் வழிந்த தினத்திலிருந்து, ஜியார்ஜ் ஈஸ்டர் பற்றியே பேசி வந்தார். எங்கே போவது, எங்கே தங்குவது போன்ற ஏற்பாடுகளையெல்லாம் ஜியார்ஜ் தலையில் தான் சுமத்தப்பட்டது.  இரண்டு கிறித்துவர்கள், இரண்டு சிந்தாதிரிப் பேட்டைகள், ஒரு உடையாளூரான், வேலுவும் சகாயம் போல் நாஸ்ரத் காரர் தானா? தெரியாது. ஆனால் சகாயத்தின் நண்பர். அவர் மூலம் தான் எங்கள் கூட்டத்தில் அவர் சேர்ந்தார். ஏன். புர்லாவுக்கே வந்தார். ஆக அவரும் திருநெல்வேலிக்காரராகத் தான் இருக்கவேண்டும். நாஸரெத் இல்லையென்றாலும். 

நாங்கள் போக விருந்தது கலுங்கா என்னும்  காட்டு நடுவிலிருந்த ஒரு இடத்துக்குப் போக விருந்தோம். முதலில் சம்பல்பூருக்கு பஸ்ஸில் போய், அங்கிருந்து கல்கத்தா- பம்பாய் மெயில் ரயில் பாதையில் இருந்த ஜர்ச்ஸகுடா ஜங்ஷன் சென்று அங்கிருந்து கல்கத்தா மெயில் ஏறி சிலமணி நேர பயணத்த்திற்குப் பிறகு வரும் கலுங்கா நிலையத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து உள்ளே ஒத்தடிப் பாதையில் காட்டுக்குள் நடந்து செல்லவேண்டும்.

நாங்கள் கலுங்கா போய்ச்சேர்ந்தது இரவில். இரவில் எங்கே போவது. காட்டுக்குள் ஒத்தடிப் பாதையில் போவது? ஸ்டேஷனிலேயே படுத்துக்கொள்வது என்று தீர்மானித் தோம். படுத்திருந்தோம். நடு இரவில் மணி விழித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை தொட்டு எழுப்பி, இது யார் பாருங்க, ஒரு மாதிரியா இருக்கு” என்று எழுப்ப, இரண்டு பேரும் எழுந்து உட்கார்ந்து பார்த்தால் பஞ்சாட்சரத்துக்கும் அது வினோதமாக இருந்திருக்கிறது. ஒரே கசமுச என்று சாதாரண மனிதக் குரல்களே ஆனாலும் நிசப்தமான, நடு இரவில் அதுவே  சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனித அரவமாகத் தோன்றவில்லை. தேவசகாயத்துக்கு “இனி தூங்கினாப்பல தான்” என்று அலுத்துக் கொள்ளத்தான் தோன்றியது. ”அது ஒண்ணும் இல்லிங்க நாம் மாட்டிலே தூங்கலாம். எல்லாரும் ஈஸ்டர் ப்ரேயர்ஸ்க்கு சுத்து வட்டாரத்திலேருந்து வந்திருக்காங்க,” இவங்கள் எல்லாம் பழங்குடிங்க,” என்று சொன்னார்..  ”இல்லிங்க, தெரியாமச் சொல்றிங்க. சர்ச்சுக்கு பிரார்த்தனை பண்ணப் போறவனா இப்படி ஒவ்வொத்தனும் கம்பும் கழியுமா வருவானுங்க. வேறே என்னமோ இருக்குங்க, நீங்க எதுனாச்சும் தெரிஞ்சாப்பில கதை விடாதீங்க.” என்று மணி சொல்ல, கடைசியில் ஒவ்வொத்தரும் முறை வைத்து ஒரு மணிநேரம் விழித்திருப்பது என்று தீர்மானமாயிற்று. ஆனால் தீர்மானம் தான் ஆயிற்றே ஒழிய அந்தக் களைப்பில், நடு இரவில் யார் விழித்திருந்து காவல் காப்பார்கள்?. அதுவும் தனியாக?. எல்லோருமே தூங்கிப் போயிருந்தோம். அது காலையில் விழித்த போது தான் தெரிந்தது.  .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.