15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!

15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிஅடுத்த வாரம் டாக்டர் சுரேஷ் சீமைக்குப் பயணமானான். ஸ்ரீதர் அவனுக்குத் தான் வாக்களித்த பிரகாரம் விலை உயர்ந்த உடைகளைப் பரிசளித்தான். கொழும்புத் துறைமுகத்தில் அவனை வழியனுப்பப் பத்மாவுடன் அவன் போயிருந்தான். அவர்களைத் தவிர சுரேஷின் சொந்தக்காரரான வெள்ளவத்தைக் கடைகாரர், அவனது மாமனார், மற்றும் நண்பர்கள் பலரும் துறைமுகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் அவனை வாழ்த்தி வழியனுப்பினார்கள். ஆனால் சுரேஷைப் பிரிவதற்கு மற்றவர்கள் எல்லோரிலும் பார்க்க ஸ்ரீதரே கஷ்டப்பட்டான். சுமார் ஐந்து வருடங்களாக அவனது வாழ்க்கையில் முற்றாக ஒட்டிக் கொண்டு இரவும் பகலும் கூடி வாழ்ந்த அறிவு நிறைந்த அருமை நண்பனல்லவா? ஆகவே அவனது பிரிவு ஸ்ரீதரை அப்படியே ஆட்டிவிடும் போலிருந்தது. இனித் தொட்டதற்கெல்லாம் ஆலோசனைகள் கேட்பதற்கும், மனதிலுள்ளவற்றையெல்லாம் கொட்டிப் பேசுவதற்கும் எங்கு போவது? அதை நினைத்ததும் கப்பல் புறப்படும் நேரம் வந்த போது ஸ்ரீதரின் கண்கள் கலங்கிவிட்டன. சுரேஷ் சிரித்துக் கொண்டு அவன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டான். "ஸ்ரீதர்! நான் இங்கிலாந்திலிருந்து மீள இரண்டு வருடங்களாகும். அதற்கிடையில் உன்னுடைய கல்யாணம் நடந்து முடிந்து விடுமல்லவா? நான் மீண்டு வரும்பொழுது ஒரு சின்ன ஸ்ரீதர் உன் கையைப் பற்றிக் கொண்டு ஓடித் திரிவான்! நான் இலங்கை வந்ததும் முதலில் உன்னைத்தான் சந்திப்பேன். அதன் பின் எனது திருமணமும் நடைபெறும். நீ அதற்குக் கட்டாயம் வர வேண்டும். அது தவிர உனது சுகம் பற்றி எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுத மறக்காதே. நானும் உடனுக்குடன் பதில் போடுவேன்." என்று கூறினான் சுரேஷ்.

 பின்னர், பத்மாவிடம் "ஸ்ரீதரைக் கவனமாகப் பார்த்துக் கொள். நீங்கள் இருவரும் இன்பமாக வாழ வேண்டுமாறு இப்பொழுதே எனது திருமண வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." என்றான். பத்மா நாணத்தோடு "உங்கள் அன்புக்கு எனது நன்றி" என்று பதிலளித்தாள்.

சுரேஷை வழியனுப்பி விட்டுப் பத்மாவுடன் துறைமுகத்துக்கு வெளியே வந்த ஸ்ரீதர் "பத்மா! சிறிது நேரம் கால்பேஸ் கடற்கரைக்குப் போய் விட்டு வரலாமா?" என்றாள். பத்மாவும் "ஆம்" என்று பதிலளிக்கவே கார் கால்பேஸ் மைதானத்தை நோக்கிச் சென்றது.

நேரம் இரவு எட்டு மணியாயிருந்தது. கால்பேஸ் கடற்கரையில் மின்சார விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஒரு சில காதலர்கள் இருள் மண்டிய இடங்களில் மோனத்தில் மூழ்கி ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இன்ப மோகத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். காற்றோடு போராடிக் கொண்டிருந்த பெரிய திரிகளுடன் கூடிய மண்ணென்ணெய் விளக்குகள் பொருத்திய தட்டுகளில் கடலை விற்றுக் கொண்டிருந்த கடலைக்காரர்களிடம் கடலை வாங்கி உண்டு கொண்டு இக்காதல் ஜோடிகளில் சிருங்கார சேஷ்டைகளைக் கடைக் கண்ணாற் பார்த்துக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். காதல் விஷயங்களில் அனுபவமில்லாத இளம் வாலிபர்கள்தான் இதில் ஈடுபட்டனர் எனபதற்கில்லை. நன்கு வழுக்கையாகிவிட்ட நடுத்தர வயதினர் பலரும் தமது பளபளக்கும் மண்டையோடுகளைத் தடவிக் கொண்டு இவற்றைக் கள்ளத் தனமாகப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரச் சுற்றுப் பயணிகள் சிலர் இலங்கையின் வெள்ளிப் பூவிட்ட கரு நீல இரவை அண்ணாந்து பார்த்து இரசித்த வண்ணம் கடலோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தார்கள். ஐஸ்கிறீம் வான்கள் குழல்களை முறுக்கிக் கொண்டு ஐஸ்கிறீம் விற்றுக் கொண்டிருந்தன. சிறுவர் சிறுமியர் அவற்றை மொய்த்துக் கொண்டு அட்டகாசம் செய்தார்கள். எத்தகைய கஷ்டங்களுக்கிடையேயும் வாழ்க்கை வாழத் தக்கது என்ற நம்பிக்கை மனிதனின் இதயத்தில் எவ்வளவு தூரம் ஊறியிருக்கிறது என்பதற்கு இக் கடற்கரைக் காட்சிகள் சான்று பகர்ந்தன. இருந்தாலும், கடற்கரைக்கு வந்திருந்த எல்லோருமே இன்பப் பொழுது போக்குகளிலேயே ஈடுபட்டிருந்தனர் என்பதற்கில்லை. நீலக் கடலின் பூப்பொன்ற வெள்ளலைகளில் ஏறி வந்த குளிர் காற்று உடலைத் தழுவ, தம் எதிர்காலத்துக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவர்களும், நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு முடிவு காண முயன்று கொண்டிருந்தவர்களும் பலர் துன்பத்தால் அலைந்து தனித்த மனதிற்கு அமைதியைக் கொணர்வதற்கு "இராம ஜெயம்" என்றும் " நமசிவாய" என்றும் மந்திரங்கள் சொல்லி மனதை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் சிலர். வேறு சிலர் தேகாப்பியாசம் செய்தார்கள். சிலர் பிராணாயாமம் செய்தார்கள். முஸ்லிம்கள் சிலர் மெக்காவை நோக்கி வணக்கம் செலுத்தினார்கள். இன்னும் சிலர் புல்லிலே படுத்துக் கொண்டு வானத்தின் அழகை வியந்துக் கொண்டிருக்க, வேறு சிலர் கண்களை மூடிக் காட்சிப் புலனை வெட்டி விட்டு, கால்பேஸ் கடல் எவருடனோ "உஸ்" என்று பேசிய இரகசிய வார்த்தைகளைத் தாமும் மெல்லச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒலிகளுக்கெல்லாம் மூல ஒலி என்று சொல்லப்படும் ஓங்கார நாதம் இது தானோ என்ற எண்ணத்துடன் இயற்கையன்னையின் நாப் போல இரவு பகலாகத் தூங்காது ஒலித்த அலைகயோசையில் மந்திரத்தில் கட்டுண்டவர் போல மயங்கிக் கிடந்தனர் சிலர். பலர் பாட்டிசைத்தனர். கடற் காற்றில் சப்தத்தில் தம் குரல் கேட்காதென்ற துணிவில் மனதிலுள்ள ஆசா பாசங்களைப் பைத்தியகாரர் போல் சப்தமிட்டே பேசித் தீர்த்தவர்கள் சிலர். இவ்வாறு பேசியவர்களில் சிலர், நல்ல வார்த்தைகள் பேச, மற்றும் சிலர் அருவருக்கும் ஆபாச வார்த்தைகளைக் கூடப் பேசினர்.

இரவில் இருளிலே வானத்திலே கார் முகில்கள் திரண்டு கொண்டிருந்ததை இவர்களில் பலர் கவனிக்கவில்லை. ஆனால் மழை நீரால் நிறைந்த மேகப் பொதிகள் ஆகாயத்தில் கட்டவிழத் தயாராகிக் கொண்டிருந்தன.

ஸ்ரீதர் இச் சூழ் நிலைகளில் தனது காரை முடிந்த அளவில் இருள் படிந்த ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். பத்மாவோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு "கண்ணே! என் கருமணியே!" என்றான் அவன். பத்மா அவன் நெஞ்சில் சாய்ந்த வண்ணமே "உங்கள் சுரேஷ் போய் விட்டார். இனி எங்கள் விஷயத்தைப் பற்றிப் பேசுவோமா?" என்று கூறிக் கொண்டே, அவனது கன்னங்களை இலேசாக முத்தமிட்டு விட்டுச் சிரித்தாள்.

ஸ்ரீதர் அவளது மென்மையான தோள்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணமே "பத்மா நாளை நான் வீட்டுக்குப் புறப்படுகிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எங்கள் நாடகம். அது முடிந்த பிறகு அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் பேசி முடித்துக் கொண்டு இன்பமான செய்தியுடன் இன்னும் இரு வாரங்களுக்குள் கொழும்பு வந்து விடுவேன். சரிதானே?" என்றான்.

ஸ்ரீதர் வாய் தான் அப்படிப் பேசியதே ஒழிய, உள்ளத்தில் அவனுக்குத் தன் திருமண விஷயமாகச் சிறிது அச்சம் இருக்கவே செய்தது. கந்தப்பர் மகள் அமுதா நினைவால் வந்த அச்சமே அது. அமுதாவின் நினைவு வந்ததும் பத்மாவிடம் உடனே அது பற்றிக் கூறி விடலாமா என்ற எண்ணம் அவனுக்கேற்பட்டதாயினும், அது அவளுக்கு அநாவசியமான கவலையையும் திகிலையும் தரக் கூடும் என்பதைக் கருதி, அந்த எண்ணத்தை அவன் மெள்ளக் கை விட்டான். இன்னும் அமுதா விஷயம் வெறும் சலசலப்பாக முடியுமேயல்லாமல் அதனால் பாரதூரமான விளைவுகள் வந்தே தீரும் என்ற திட்டவட்டமான எண்னமும் அவனுக்கில்லை. ஆகவே அதைப் பற்றிச் சிந்திப்பதையோ பேசுவதையோ விட்டு, பத்மாவிடம் வேறு விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

"பத்மா! யாழ்ப்பாணம் போகும் போது கல்கிசையில் நான் வரைந்த உன் படத்தையும் எடுத்துக் கொண்டு போகப் போகிறேன். அதை நான் இன்னும் பூர்த்தியாக்கவில்லை அல்லவா? யாழ்ப்பாணத்திலிருக்கும் போது அதை நான் பூர்த்தியாக்க உத்தேசித்திருக்கிறேன். அன்று நீச்சலுடையில் நீ அந்தப் படத்துக்குப் ‘போஸ்’ கொடுத்த போது, உன்னை எறும்பு கடித்ததல்லவா? அந்த எறும்புகளில் ஒன்றிரண்டு உன் காலில் ஊர்வதையும் நான் படத்தில் வரையப் போகிறேன் பார்" என்று சிரித்தான் ஸ்ரீதர்.

பத்மா பதிலுக்கு "உங்கள் படம் மிகப் பெரியது. எறும்பு மிகச் சிறியது. ஆகவே அதை நீங்கள் வரைந்தாலும் அது பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியப் போவதில்லை." என்றாள்.

ஸ்ரீதர் சிறிது யோசித்து விட்டு, " நீ சொல்வது உண்மைதான். ஆனால் எனக்கு வேறொரு யோசனை வருகிறது. ஒரு நண்டு உன் தொடையில் ஏறுவது போல் எழுதி விடப் போகிறேன். பார்ப்பதற்கு மிக வேடிக்கையாயிருக்கும்! படத்துக்கு " நண்டும் நங்கையும்" என்று பேரும் போட்டு விடப் போகிறேன். எறும்பைப் போலன்றி வர்ணங்களில் எழுதப்படும் பல கால்களையுடைய நண்டு மிக விழிப்பாகத் தெரியுமல்லவா? அது உன் காலுக்கு ஓர் அணிகலன் போல் விளங்கும்" என்றான்.

பத்மா சிரித்துவிட்டு, "ஆனால் படத்தில் அந்த நண்டை விட ஒரு கழுகின் படத்தையும் நீங்கள் வரைய வேண்டும்." என்றாள்.

"கழுகா? இது என்ன புதுக் குழப்பம்?" என்றான் ஸ்ரீதர். ஓரிரு மாதங்களின் முன்னர் வெளியாகிச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த ஒரு சினிமா படத்தில் அடிக்கடி உபயோகிக்கப்பட்ட "புதுக் குழப்பம்" என்ற சொற்றொடர் ஊரெல்லாம் பரவியிருந்ததாலேயே ஸ்ரீதரும் அச்சொற்றொடரை உபயோகித்தான். பத்மா கழுகென்று எதைப் பற்றிக் குறிப்பிடுகிறாளென்று முதலில் ஸ்ரீதருக்குக் குழப்பமாகத் தானிருந்தது. ஆனால் அவள் சீக்கிரமே ஐயத்தைத் தீர்த்து வைத்தாள்.

"அந்தத் தலைப்பாகைக்கார அதிகாரைத் தான் நான் குறிப்பிடுகிறேன். அவர் என்னை முன்னும் பின்னும் பக்கமுமாகப் பார்த்த வார்வை அசல் கழுகுப் பார்வையேதான். ஒரு டாக்டர் கூடத் தனது நோயாளியை அவ்வாறு உற்றுப் பார்க்க மாட்டார். என்னைப் பின்னாலிருந்து பார்ப்பதைப் போல் படம் போட்டு விடுங்கள். வேண்டுமானால் அவரது வால் முளைத்த மனைவியையும் வரைந்து விடுங்கள்."

ஸ்ரீதர் விழுந்து விழுந்து சிரித்தான். "அப்படி எல்லாம் வரையக் கூடாது. அவ்வாறு வரைந்தால் படத்தின் மதிப்பே போய் விடும். ஒரு ஹாஸ்யச் சித்திரம் போலாகிவிடும்" என்றாள்.

பத்மா "நண்டை வரைந்தாலும் அப்படித்தானே? என்றாள்.

ஸ்ரீதர் அதற்கு "இல்லை. நண்டு ஹாஸ்யத்தை உண்டாக்காது, பயங்கரத்தை உண்டாக்கும். இப் பேரழகியை நண்டு கடித்து விடுமோ என்று அச்சத்தை உண்டாக்கும்." என்றான். பத்மாவுக்கும் அது சரி போலவே பட்டது. என்றாலும் விட்டுக் கொடுக்காமல், "சீ, நீஙகள் சொல்லுவது பிழை." என்று கூறிக் கொண்டு மேலும் ஸ்ரீதருடன் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

இவ்வாறு காதலர்கள் பொழுது போக்கிக் கொண்டிருக்க, வானத்தில் திரண்டிருந்த கரு மேகங்கள் முதலில் மெல்லிய நீர்த் திவலைகளைப் பன்னீர் தெளிப்பது போல் நெளிந்து, பின்னர், பெருந் தாக்குதலைத் தொடங்கிவிட்டன. ஹோவென்று மழை கொட்ட ஆரம்பிக்க, மைதானத்து மக்கள் மந்தைகள் போல் சிதறியோட ஆரம்பிட்ததார்கள். கடலைக்காரர்கள் கடலையை மூடிக் கொண்டு கிளம்ப, ஐஸ்கிறீம் வான்களும் இதர மோட்டார் வாகனங்களும் கூட மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் மைதானமே வெறிச்சென்று விட்டது. கடலின் ஓசையும் காற்றோசையும் மழையோசையுமே எஞ்சின. மின்சாரக் கம்பங்களுக்குச் சமீபமாக ஒளிக் கதிர்களில் சிக்கிய மழைத் தாரைகள் வெள்ளி விறீசுகள் போல நிலத்தை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. சாம்பல் வர்ணமாயிருந்த இரவின் இருள், மேகக் குப்பாயம் கவிந்ததால் இருண்ட கரிய வெல்வெட் போன்ற கடும் இருளாகியிருந்ததால் மழைத் தாரை என்னும், வெள்ளி விறீசுகள் அங்கு வீழ்ந்து கொண்டிருந்த காட்சி, பகைப்புலத்தின் எதிர் நிலையின் காரணமாக மனதை மயக்கும் மோகனக் காட்சியாக இருந்தது.

அதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடீரென மைதானத்தில் மழையின் தாக்குதலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது கூட ஒருவரை ஒருவர் இறுக அணைத்த வண்ணமே போய்க் கொண்டிருந்த ஒரு காதற் ஜோடியைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான்.

"பார்த்தாயா அவர்களை? அதைப் பார்த்ததும் எனக்குத் திருக்குறளில் ஒரு செய்தி ஞாபகம் வருகிறது" என்றான் ஸ்ரீதர்.

"ஓகோ, சுரேஷின் வியாதி உங்களையும் தொற்றி விட்டதா? அல்லது சீமை செல்லும்போது கொழும்பில் தனது வியாதியை அவன் விட்டு விட்டுச் சென்று விட்டானா? அது எப்படி என்றாலும் பரவாயில்லை. எடுத்ததெற்கெல்லாம் மேற்கோள் காட்டுவதும், கதைகளும் சொல்வதும் குட்டிப் பிரசங்கங்கள் அடிப்பதும் அவன் வழக்கம். ஐயாவுக்கோ இது புதுக் குழப்பம். என்றாலும் பரவாயில்லை. கால்பேஸ் கடற்கரையில் மழையிலே கட்டிப் பிடித்துக் கொண்டு ஓடும் இக்காதலர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? சொல்லுங்களேன்" என்றாள்.

ஸ்ரீதர் விளக்க ஆரம்பித்தான். "காதலர் இருவர் இறுக அணைத்து கொண்டிருக்கும் போது இடையிலே காற்றுப் புகுந்தாலும் அவ்வணைப்பின் இறுக்கம் குறைந்து இன்பம் குன்றிவிடுமாம். நம் இருவருக்குமிடையே காற்றுக் கூட வரக் கூடாது என்பது காதலர் எண்ணம். அப்படிக் காற்றாலும் பிரிக்கப்படாத தழுவலன்றோ தழுவல் என்கிறார் வள்ளுவர்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைப்
போழப் படாஅ முயக்கு.

(ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதல்ர்களுக்கு இன்பளிப்பது காற்று இடயே புகுந்து ஊடறுக்காத தழுவலாகும்.)

அதோ மழையில் ஓடுகிற அத்தலைவனும் தலைவியும் அப்படிப்பட்டவர்கள் தாம். மழையால் கூடப் பிரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேதான் ஒட்டிக் கொண்டு ஓடுகிறார்கள் அவர்கள். அவர்களை இனிப் பிரிப்பதென்றால் கத்தியால் வெட்டித்தான் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது"

"அப்படியானால் நீங்கள் ஏன் அப்படித் தள்ளியிருக்கிறீர்கள்? மழைக் குளிருக்கும் நல்லது. இன்னும் நெருங்கி உட்காருங்கள்" என்று கூறிக் கொண்டு ஸ்ரீதருடன் மேலும் நெருங்கி உட்கார்ந்தாள் பத்மா.

மைதானத்தில் இப்பொழுது யாருமே இல்லை. காரில் காற்று வாங்கியவர்கள் கூடப் போய் விட்டார்கள். ஸ்ரீதர் மட்டும் தான் பத்மாவுடன் அங்கே காரில் இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தான். பத்மா பேச்சுக்குக் குளிரைப் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தாலும் உண்மையில் கார் கண்ணாடி ஜன்னல்கள் நன்கு பூட்டப்பட்டிருந்ததால் வெளியே குளிர் மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் காரின் உள்ளே மிகவும் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது.

மழையால் வீதிப் பார்வை மறைவதைத் தடுப்பதற்காகக் காரின் முன் கண்ணாடியை மேலும் கீழுமிறங்கித் துடைத்துக் கொண்டிருந்த மின் துடைப்பம் தங்களுடைய பேச்சுக்குத் தடையாயிருப்பதைக் கண்ட ஸ்ரீதர் அதை நிறுத்தி விட்டான். அதனால் கடலோடு சேர்ந்தொலித்த மழையின் மெத்தென்ற ஓசையை தவிர வேறு எவ்வித ஓசையுமே அங்கிருக்கவில்லை. ஆனாலும் அங்கியிருந்தாலும் காலி வீதியில் இடையிடையேனும் ஒரு கார் தனது முன் லைட்டுகளால் ஒளிக் கதிர்களைக் கொட்டி இருளைப் பிளந்து சென்று கொண்டிருந்தது.

பத்மா சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்துவிட்டு, "மழை கொட்டுகிறது. நேரமும் போய்க் கொண்டிருக்கிறது. வீட்டுக்குப் போவோமா?" என்றாள். ஸ்ரீதர் "மழை கடுமையாகக் கொட்டுவது எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா? மைதானத்தில் யாருமில்லை. நாங்கள் புல்லில் போயுட்கார்ந்து மழையை அனுபவிப்போமா? என்றான். பத்மா "உங்களுக்கென்ன பைத்தியமா? யாராவது அப்படிச் செய்வதுண்டா?" என்று கேட்டாள்.

ஸ்ரீதர் "எனக்குச் சின்ன வயதிலிருந்தே மழையில் கும்மாளம் போட ஆசை. எங்களூரில் இருந்த ஏழைச் சிறுவர்கள் மழை காலத்தில் வாய்க்கால்களிலும் வெள்ளத்திலும் குதித்துக் குதித்துக் கும்மாளமடிப்பார்கள். எனக்கும் அவர்க்ளோடு சேர்ந்து சேறில் புரண்டு குதூகலிக்க ஆசை. ஆனால் அப்பா விட மாட்டார். பணக்காரப் பிள்ளை ஏழைகளோடு சேர முடியுமா? இன்னும் சேறில் விளையாடுவது அசுத்தமான பழக்கமென்றும் அப்பா கூறிவிட்டார். ஆகவே அது நிறைவேறாத ஓர் ஆசையாக இன்றும் என் மனதில் மூலையில் இருந்து வருகிறது. கடந்த வாரங் கூட கும்பனித் தெருப் பகுதியில் ஏழைச் சிறுவர் சிலர் மழையில் குதித்து விளையாடுவதைப் பார்த்தேன். எனக்கு மட்டும் அப்படி விளையாடக் கொடுத்து வைக்க வில்லையே என்று நான் கவலைப்பட்டேன் பத்மா! நீயும் என்னோடு சேர்ந்து கொள்வதாயிருந்தால் இப்பொழுது இம்மழையில் நாம் ஆசை தீர விளையாடலாமல்லவா?" என்றான் ஸ்ரீதர்.

தண்ணீரில் விளையாட அழைத்த ஸ்ரீதரின் ஆலோசனை பத்மாவுக்கும் பிடிக்கவே செய்தது. ஆனால் சேலை சட்டை பழுதாகிவிடுமே என்ற எண்னத்தினால் முதலில் மழையில் விளையாட அவள் மறுத்தாள். "சேலையைப் பற்றிக் கவலைப்படாதே. ‘கிஷ்கிந்தா’வில் அம்மாவின் நல்ல சேலைகள் சில இருக்கின்றன. இங்கிருந்த நேரே அங்கு போய் அந்தச் சேலையிலொன்றை அணிந்து கொண்டு நீ வீடு போய் விடலாம்." என்றான் ஸ்ரீதர். அவ்வாறு சொல்லிக் கொண்டே ஸ்ரீதர் கார்க் கதவைத் திறந்து வெளியே இறங்கி விட்டான். பத்மாவும் வெளியே குதித்தாள்.

வெதுவெதுப்பான சூழ் நிலையிலிருந்து கொட்டும் மழைக்கு வந்ததும் பத்மாவுக்கு குளிரினால் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆனல் சில விநாடிகளில் அது குறைந்து போய் விட்டது. ஒரு வித உயிர்த்துடிப்பு அங்கங்களெல்லாம் பரவ, இருவரும் கொட்டும் மழையில் இறங்கிப் புல் தரையில் ஓடினார்கள். பெரியவர்களாகி விட்டவர்களுக்குக் கூடக் குழந்தைகள் போல் நடப்பதில் எவ்வளவு ஆசை. சமுதாய வழக்கங்களும், மற்றவர்கள் பரிகசிப்பார்கள் என்ற எண்ணமுமே பலரை அவ்வாறு செய்யமல் தடுக்கின்றன. ஸ்ரீதர் - பத்மாவைப் பொறுத்த வரையில் இன்னும் அவர்களைப் பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாதல்லவா? விளையாட்டுக்களில் ஆசையுள்ள வாலிபக் காதலர்களான அவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்தார்கள். சிரித்தார்கள். பத்மா கீச்சிட்டாள். யாருக்கும் தங்கள் சப்தம் கேட்காதென்பதும் தாங்கள் புரியும் அட்டகாசங்கள் தெரியாதென்பதும் அவர்களை அவர்கள் மனதின் இச்சைக்கு ஏற்றவாறு ஓடவும் ஆடவும் கூச்சலிடவும் செய்தன. இரு சிறு பூனைக்குட்டிகளோ, நாய்க் குட்டிகளோ சேர்ந்து விளையாடுவது போல் தம்மை மறந்து மழை நீராடினார்கள் அவர்கள். கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மனிதனே காணப்படாததால் அவர்கள் இம்முழு உலகமுமே தம்முடையது என்று எண்ணியவர்கள் போல் இறுமாந்து குதித்தார்கள். சிறிது துரம் சென்றதும் ஸ்ரீதர் நிலத்தில் உட்கார்ந்தான். பத்மாவும் உட்கார்ந்தாள். இருவரும் புல்லிலே சாய்ந்து படுத்தார்கள். உடம்பும் உடையும் சேறாகச் சேறாக ஒருவித இன்ப வெறி தலைக்கேறியது. ஸ்ரீதருக்குத்தான் சின்ன வயதில் கண்ட தனது கிராமத்து வாய்க்கால்களில் குதித்துக் குதித்துக் கூத்தாடிய சிறுவர்களின் நினைவு வந்தது. குழந்தைப் பருவ ஆசை இன்றுதான் இரவின் இருட்டிலே கொழும்பில் தன் கிராமத்துக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் நிறைவேறிக் கொண்டிருந்தது. நிறைவேறாத ஆசைகளே மனக் கிலேசங்கங்ளுக்கும், ஏன் சில சமயங்களில் மனக் கோளாறுக்கும் கூடக் காரணம் என்று உளவியலாளர் கூறுவார்கள். அதனால் தான் போலும் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் சின்ன வயதில் இப்பெரிய ஆசையின் நிறைவேற்றம் மனதிற்கு ஒருவித சாந்தி நிலையைக் கொண்டு வந்திருந்தது. அதில் இலயித்துச் சிறிது நேரம் புல்லில் எவ்வித ஆட்டமும் அசைவுமின்றி பத்மாவை அணைத்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவன்.

பத்மாவுக்கு ஏற்பட்ட அனுபவமோ இது போன்றதல்ல. அவளுக்கு மழையில் ஆடியதும், சேற்றில் புரண்டதும் நிறைவேறாத ஆசைகளின் நிறைவேற்றமல்ல; அதனால் பிறந்தது ஸ்ரீதருக்கு ஏற்பட்டது போன்ற மனச்சாந்தியுமல்ல. இவை எல்லாம் ஒரு வகைக் காதல் லீலைகள் போலவே அவளுக்குத் தோன்றின. சினிமாக்களில் காதலர் தண்ணீரில் கும்மாளமடிக்கும் காட்சிகளை அவள் கண்டிருக்கிறாள். அவைதான் அப்பொழுது அவளுக்கு நினைவு வந்து கொண்டிருந்தன. இப்படிப்பட்ட காட்சிகளைச் சினிமாக்களில் சினிமா மண்டபத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட அவளது உடலுணர்ச்சிகள் ஓரளவு தூண்டப்படுவது வழக்கம். இன்றோ அவை அதிகமாகத் தூண்டப்பட்டிருந்தன. அவள் மனதில் ஒரு புயல் தோன்றியிருந்தது. ஸ்ரீதரையும் அப்புயலில் மாட்டிவிட நினைத்தாள் அவள். ஆனால் ஸ்ரீதரோ அதில் அற்ப ஈடுபாடு கூடக் காட்டவில்லை. அவன் உலகு வேறாக இருந்தது.

ஆனால் பத்மாவுக்கோ உலகே மறந்து போயிருந்தது. தந்தையார் நினைவும் மறந்து போயிற்று. சமுதாயக் கட்டுப்பாடுகளும் மறந்து போயின. எங்கோ ஓரிடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது அவள் மனம். ஸ்ரீதரும் அதே இடத்தை நோக்கி வர மாட்டானா என்று ஏங்கியது நெஞ்சம். கவிஞரும் கதாசிரியரும் வர்ணித்த அந்த உலகுள் விரைந்து இப்பொழுதே புக வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஓர் ஆணும் பெண்ணும் சிநேகிப்பது அதற்காகத்தானே என்று கூட எண்ணினாள் அவள். சகுந்தலையை வனத்தில் சந்தித்து, துஷ்யந்தன் எவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் அவளை அவ்வுலகுக்கு அழைத்துச் சென்று விட்டான். அவனது ஆண்மையல்லவோ ஆண்மை என்று கூட நினைத்தாள் அவள். ஆனால் துஷயந்தனின் அந்த அவசர ஆண்மையால் சகுந்தலை பின்னல் பட்ட துன்பமும் துயரும் கொட்டிய கண்ணீரும் அடைந்த இன்னல்களும் அவளுக்கு ஞாபகம் வரவில்லை. கணநேர இன்பத்துக்கு யுகத்தையே பரிசளிக்கும் நிலையில் அவள் இருந்தாள். இன்னும் "ஸ்ரீதர் என்னைத் திருமணம் செய்யப் போவது நிசமென்றால் - இவற்றில் எல்லாம் இனிக் கட்டுப்பாடு என்ற பெயரில் எம் மனதோடு நாமே போராடிக் கொண்டிருப்பது ஏன்? களவொழுக்கம் என்று முன்னோர் சொன்ன பிரகாரம் நடந்துகொள்ள வேண்டியதுதானே?" என்று சிந்தித்த அவள் பெண்மைக்கு இயற்கையாயிருக்கும் நாணத்தால் மட்டுமே தன் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறாதிருந்தாள். இன்னும் வெளிப்படையான செயலாலோ சொல்லாலோ ஒரு பெண் தன் உள்ளத்தின் இத்தகைய அந்தரங்க ஆசைகளை ஓர் ஆணிடம் வெளியிட்டால், அவ்வாண் கூட அவளை மதிக்க மாட்டான் என்பது அவள் அறியாததல்ல. இவ்விவகாரங்களில் ஆணே முன் கை எடுக்க வேண்டுமென்ற உலக நியதியே அவள் செயல்களை அன்று கட்டுப்படுத்தின. உண்மையில் ஸ்ரீதர் போக்கு அவளுக்கு அடியோடு பிடிக்கவில்லை. என்றாலும் அவளால் என்ன செய்ய முடியும்? அவள் இதுவரை அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவிடமிருந்தும், கெட்டுப்போன குசுமாவிடமிருந்தும் ஆண்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்த விவரங்களின் படி அவர்கள் பெரிய அவசரக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்புவது தான் கஷ்டமென்று நினத்திருந்தாள். உண்மையும் அதுவாகத்தானிருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீதரோ எவ்வளவு வேடிக்கையாகப் பேசினாலும் என்னதான் தன்னோடு உராய்ந்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர் எல்லைக்கு அப்பால் போகாதவனாக அல்லவா இருக்கிறான்? - இது பத்மாவுக்குப் பெரியதோர் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பெண் நினைத்தால், ஆணைக் கொண்டு எதையுமே செய்வித்து விடலாம். ஆனால் அதற்கு அப்பெண் தன் பெண்மையின் கர்வத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். பத்மாவோ அதற்குத் தயாராகவில்லை. ஆகவே ஸ்ரீதரிடம் சலிப்போடு "போதும் மழை விளையாட்டு. குளிரும் அதிகமாயிருக்கிறது. தடிமன் பிடித்தாலும் பிடித்து விடும். போவோமா?" என்றாள்.

இவ்வாறு அவள் சொல்வதற்கும் வானம் மின்னச் சிரிப்பொன்று சிரிப்பதற்கும் சரியாயிருந்தது. மின்னைலைத் தொடர்ந்து இடி நகை கேட்டது. காற்றும் கடுமையாக வீச ஆரம்பித்தது. ஆம், இயற்கை புயற் கோலம் காட்டத் தொடங்கியது. மழையும் அடித்தோங்கிப் பொழிய ஆரம்பித்தது. ஸ்ரீதரும் எழுந்தான். "சரி போவோம்." என்று காரை நோக்கி நடந்தான். திருப்தியற்ற உள்ளத்தோடு அவனைப் பின் தொடர்ந்தாள் பத்மா.

ஸ்ரீதர் பத்மாவை கொலீஜ் ரோட்டில் கொண்டு போய் விட்ட பொழுது, இரவு 9 மணியாகி விட்டது. "கிஷ்கிந்தா’விலிருந்து அன்னை பாக்கியத்தின் அழகான பெங்களூர்ச் சேலையொன்றைப் பத்மாவுக்கு அணியக் கொடுத்திருந்தான். இருவரும் மழையில் நீராடி வந்திருந்தமை அவர்களுக்கு ஒரு பரிசுத்தமான அழகுத் தோற்றத்தைக் கொடுத்தது. பத்மாவின் தந்தை பரமானந்தர் ஸ்ரீதரை வீட்டுள் வரச் செய்து சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் "ஈடிப்பஸ் நாடகத்தைத்தான் அடுத்த வாரம் இரண்டாம் முறையும். அரங்கேற்றம் செய்யவிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டான் ஸ்ரீதர். அனுபவஸ்தரான பரமானந்தர் நாடகத்தை முன்னிலும் பார்க்கச் சிறப்பாக அரங்கேற்றம் செய்வதற்கேற்ற சில நல்ல ஆலோசனைகளைக் கூறினார்.

அங்கிருந்து அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது பத்து மணியாகிவிட்டது. ஸ்ரீதர் பரமானந்தரிடம் "நான் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கல்யாணத்துக்கு நாள் குறித்துக் கொண்டு தான் வருவேன். கல்யாணத்துக்கு முன் நீங்கள் அப்பாவைக் கண்டு பேசுவதற்கும் ஏற்பாடு செய்வேன்." என்று கூறினான். பரமானந்தர் "எல்லாம் சுபமாக நடக்க வேண்டும்" என்று வாழ்த்தினார்.

இதற்கிடையில் கூரையில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு பல்லி ‘டிக் டிக்’ என்று ஓசை கிளப்பியது. "பல்லி சொல்லுகிறது" என்றான் ஸ்ரீதர். "உனக்கு பல்லி சொல்வதில் நம்பிக்கை உண்டா?" என்றார் பரமானந்தர். "ஆம்" என்றான் ஸ்ரீதர். பரமானந்தர் தன்னிடமிருந்த ஒரு பழைய பஞ்சாங்கத்தை எடுத்துத் தமது மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தார். "சுப செய்தி -வெற்றி நிச்சயம்" என்று மகிழ்ச்சியோடு கூறினார் அவர்.

ஸ்ரீதர் சந்தோஷத்தோடு புறப்பட்டாள். பத்மா வாசலுக்கு வந்து தனது கையை உயர்த்தி வளைக்கரம் குலுங்க "செரியோ" கூறினாள்.

ஸ்ரீதர் கண்ணுக்கு மறைந்ததும் பரமானந்தர் பத்மாவை நோக்கி "இன்று கமலநாதன் வந்திருந்தான். அவர்கள் விளையாட்டுச் சங்கத்தின் ஆண்டு விழா இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறுகிறதென்று கூறி, ஓர் அழைப்புக் கடிதத்தையும் உனக்குக் கொடுத்து விட்டுப் போனான். உள்ளே மேசையில் வைத்திருக்கிறேன். எடுத்துப் பார்" என்றார்.

பத்மா அறையுள் சென்று கடிதத்தை எடுத்த பொழுது, "இன்று கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருக்குக் கிடைத்த வாய்ப்பு போல் கமலநாதனுக்குக் கிடைத்திருக்குமானால் அவன் எவ்வாறு நடந்திருப்பான்? மீசைக்காரனான அவன் ஆண்மையுடன் நடந்திருக்கலாமல்லவா?" என்ற எண்ணம் தன்னை அறியாமலே அவளுக்கேற்பட்டது.

"ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அங்கே வாய்ப்பை அளித்தல்லவோ பார்க்க வேண்டும்?" என்ற பதிலும் உடனடியாகவே அவள் மனதில் எழுந்தது.

அன்றிரவு பத்மா நீண்ட நேரம் நித்திரை கொள்ளவில்லை. கட்டிலிலே வெறுமனே புரண்டு கொண்டிருந்தாள் அவள். யெளவனத்தின் துடிதுடிப்பு அவள் நெஞ்சையும் உடலையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. காதலென்பது உள்ளத்தின் உணர்ச்சி மட்டுமல்ல. உடலுணர்ச்சியும்தானே?" என்று தனக்குத் தானே வினவிக் கொண்டவள் தன் உடம்பெல்லாம் ஒரு நெருப்புப் பாவி வருவது போன்று உணர்ச்சியைப் பெற்றாள். "இதைத் தான் பண்டைக்காலத்துப் புலவர்கள் விரக தாபம் என்று வர்ணித்தார்கள் போலும்" என்றும் நினைத்துக் கொண்டாள் அவள்.

நித்திரையின்றி படுக்கையில் புரண்ட அவள் ஜன்னலூடாக வானைப் பார்த்த போது, பாதி மதி ஒன்று அங்கே தன்னையே நட்சத்திரப் பரிவாரங்களுடன் உற்றுப் பார்த்துக் கொண்டு நிறபது தெரிந்தது. "நட்சத்திரங்கள் எனபன விரக தாபத்தால் வானத்தேவியின் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள்’ என்று தான் எங்கோ ஒரு பழைய கவிதை படித்தது அவளுக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. ஆம். நளவெண்பாவில் புகழேந்தி பாடிய பாட்டில் அப்படி வருகிறது - என்ற நினைவு கூர்ந்த அவள், தனது உடலிலும் அப்படிக் கொப்புளங்கள் குமிழியிட்டிருக்கின்றனவா என்று தடவிப் பார்த்தாள். "இல்லை, கவியின் கற்பனை நடைமுறைக்கு ஒத்து வராது. என்றாலும் என்னுடலில் அனல் வீசுவது மட்டும் என்னவோ உண்மைதான்" என்ற எண்ணிய அவள் மனதிலே கமலநாதன் மீண்டும் மீண்டும் காட்சியளித்தான்.

வீடு சென்ற ஸ்ரீதருக்கோ இவ்வித அனுபவங்கள் ஏற்படவில்லை. சேற்றில் விளையாடியதால் ஏற்பட்ட ஆயாசத்துடன் சுப்பையா தயாரித்திருந்த சாப்பாட்டை ஊறுகாயுடன் இரசித்துச் சாப்பிட்ட அவனுக்கு நல்ல நித்திரை கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. படுக்கையில் படுத்து ஒரு வார சஞ்சிகையை எடுத்து இரண்டு மூன்று பக்கங்களைத் தட்டியதும், துயில் அவன் கண்களைத் தழுவிக் கொண்டது.

இப்படிப்பட்ட நேரங்களில் வழக்கத்தில் அவன் நண்பன் சுரேஷ் ‘லைட்’டை நிறுத்துவான். அன்று சுரேஷில்லாததால், வேலைக்காரச் சுப்பையா ‘லைட்’டை நிறுத்தினான். சுரேஷோ நடுக் கடலில் ஸ்ரீதர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற சிந்தனையில் இலயித்திருந்தான்.


16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர்

ஸ்ரீதர் மோகனாவுக்குப் பக்கத்தில் சென்று "ஏ! மோகனா என்ன ஒரே கூச்சல்" என்று கூறிக் கொண்டே தான் கொறித்துக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டையிலொன்றை அதன் வாயில் திணித்தான். மோகனா நிசப்தமாகியது.தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரண்டாவது முறையாக அரங்கேறவிருந்த "ஈடிப்பஸ் மன்னன்" நாடகத்திற்காகவும் தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஸ்ரீதர் இரண்டு மூன்று தினம் கழித்து டிரைவர் சுப்பிரமணியத்துடன் தனது காரில் யாழ்ப்பாணம் புறப்பட்டான். புறப்படும் முன் வழக்கம் போல் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பரிசுகள் வாங்கத் தவறவில்லை. தாயைப் பொறுத்த வரையில் அவளுக்கு எது பிடித்தமென்பது அவனுக்குத் தெரியும். தென்னிலங்கையில் கிடைக்கும் பொருள்களில் அவளுக்குப் பிடித்தமானது முந்திரிக் கொட்டையும், கித்துள் கருப்பட்டியுமே. அவற்றை வேலைக்காரனை அனுப்பி வாங்காது, தானே புறக்கோட்டைச் சந்தைக்குச் சென்று வாங்கிக் கொண்டான். தந்தையைப் பொறுத்த வரையில் தத்துவ சாத்திரத்தில் அதிக ஈடுபாடுடைய அவர் சில காலமாக நீட்சே என்ற ஜெர்மானிய தத்துவ தரிசகரின் நூல்களையும் கட்டுரைகளையும் தேடித் தேடிச் சேகரிப்பது, அவனுக்குத் தெரியுமாதலால் லேக் ஹவுஸ் புத்தகசாலைக்குச் சென்று அங்கு புதிதாக வந்திருந்த நீட்சே எழுதிய நூல்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

பெரும் பணவசதியுள்ள சிவநேசரரால் இப் புத்தகங்கள் எதையும் நினைத்தவுடன் வாங்கிவிட முடியுமென்றாலும், அன்பு மகன் அவற்றை அக்கறையுடன் விலைக்கு வாங்கிப் பரிசாகக் கொண்டு வரும்போது, அவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஒரு தனி இன்பம் அவருக்கு ஏற்படும் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்திருந்ததே அவன் அவற்றை வாங்கிச் சென்றதற்குக் காரணம். அது போலவே தாய் பாக்கியமும் நினைத்தவுடன் எவ்வளவு முந்திரிக் கொட்டைகளையும் கருப்பட்டியையும் வாங்கிக் கொள்ளக் கூடியவளே என்றாலும் தமது கையிலிருந்து அவற்றைப் பெறும்போது அவற்றின் உருசி அவளுக்கு இரட்டிப்பாய் இருக்கும் என்பது ஸ்ரீதருக்குத் தெரியும். அன்பெனும் பாகில் தோய்த்தெடுத்த முந்திரிக் கொட்டைகள் சுவையில் விருந்தாயிருக்கும் என்பது அவள் அனுபவத்தில் கண்ட உண்மை. வேறெந்தத் தேன் பாகும் அந்தச் சுவையை அவற்றுக்கு அளித்துவிட முடியாது.

ஸ்ரீதர் இவ்வாறு கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்க, ‘அமராவதி’ தனது அருமை வாரிசை வரவேற்பதற்காகத் தடல் புடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு மூன்று தடவை வந்தால் கூட ஒவ்வொரு தடவையும் சிவநேசரும் பாக்கியமும் அவனுக்கு இராஜ வரவேற்பளிக்கத் தவறுவதில்லை. இம்முறையோ அவன் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வருகிறான். ஆகவே வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் அமர்க்க்களமாயிருந்தன.

அவன் வருவதற்கு முதல் நாளே தாய் பாக்கியம் அவனது மாடி அறையை வேலைக்காரரைக் கொண்டு அப்பழுக்கில்லாமல் சுத்தம் செய்வித்து வைத்தாள். அவனது படுக்கைக்குப் புதிய விரிப்புகள் விரிக்கப்பட்டன. தலையணைகளுக்கு அழகான உறைகள் இடப்பட்டன். வெளியே இருந்த ரேடியோ கிராமும், புதிதாக வாங்கப்பட்ட பல இசைத்தட்டுகளும் அவன் படுக்கைக்கு அருகே கொண்டு போய் வைக்கப்பட்டன. இன்னும் படுக்கைக்கு அருகே முக்காலியில் இருந்த டெலிபோன் கிருமி நாசினியால் சுத்திகரிக்கப்பட்டு அத்தரால் வாசனையூட்டி வைக்கப்பட்டது. அறையில் நடுவே அழகான இரத்தினக் கம்பளம் ஒன்றும் விரிக்கப்பட்டது. ஸ்ரீதர் இவற்றை எல்லாம் விரும்பி அனுபவிப்பவன் என்பது அவன் தாய்க்கு நன்கு தெரிந்திருந்ததே அவன் இவ் விஷயங்களில் இவ்வளவு கவனமெடுத்ததற்குக் காரணம். சாதாரணமாக அவன் படுக்கையில் படுத்திருக்கத் தாய் பாக்கியம் கம்பளத்தில் உட்கார்ந்து வெற்றிலையை மென்று கொண்டு அவனோடு உரையாடுவது வழக்கம். அவ்வாறு உட்கார்ந்து பேசுவது அவளுக்கு எல்லையில்லாத ஒரு மன நிறைவைக் கொடுத்தது. ஆகவே இரத்தினக் கம்பளத்தை அவள் விரித்தது ஸ்ரீதருக்காக மட்டுமல்ல. தன் வசதிக்காகவும் தான், இன்னும் ஸ்ரீதர் சித்திரம் வரையும் ‘ஸ்டான்’டையும் ஜன்னலுக்கு அருகே வெளிச்சம் நன்கு விழும் ஓரிடத்தில் வைக்கும் படி ஏற்பாடு செய்தாள். அந்த ‘ஸ்டான்டில்’ அவன் அரை குறையாக எழுதி நிறுத்திய ‘மோகனா’ என்னும் அமராவதி இல்லத்தின் பஞ்சவர்ணக் கிளியின் படத்தையும் அவள் எடுத்து வைத்தாள். ஸ்ரீதர் வந்ததும் அவனிடம் அந்தப் படத்தை எழுதி முடித்துவிடும்படி கூற வேண்டுமென்றும், அதற்குத் தக்க முலாமிட்ட ‘பிரேம்’ போட்டு விறாந்தைகளில் மாட்டி வைக்க வேண்டுமென்பதும் அவள் அவா.

"ஸ்ரீதர் எவ்வளவு கெட்டிக்காரன். என்ன அழகாகப் படமெழுதுகிறான் பார்த்தாயா? அவனைப் போல் தத்ரூபமாகப் படமெழுத யாராலும் முடியாது" என்று வேலைக்காரி தெய்வானையிடம் கூறிய வண்ணமே படத்தில் பட்டிருந்த தூசைத் தன் சேலையின் முன்றானையால் தட்டிவிட்டாள் பாக்கியம்.

வேலைக்காரி தெய்வானை அதைக் கேட்டு "ஆம் அம்மா. நீங்கள் சொல்வது முற்றிலும் மெய். அவர் படமெழுதியதை தான் நேரில் பார்த்திருக்காவிட்டால், இப்படம் மனிதர் கையால் எழுதப்பட்டதென்று யாராவது எனக்குச் சொல்லியிருந்தால் நான் அதை நம்பி இருக்கவே மாட்டேன்." என்று கூறினான்.

"மோகனா"வின் படத்தைப் பார்த்ததும் பாக்கியம் தெய்வானையிடம் "வீட்டின் பின் புறத்திலிருக்கும் மோகனாவைக் கூட்டோடு தூக்கி வா. இங்கே படுக்கை அறையிலேயே தூக்கி வைத்து விடுவோம். ஸ்ரீதர் அறையுள் நுழைந்ததுமே அது அவனை "ஸ்ரீதர்" என்று அழைக்கட்டும். அவனுக்கு அது சந்தோஷமாயிருக்கும்" என்றாள்.

தெய்வானை "அம்மா சரியான வேடிக்கைக்காரி. அத்துடன் மகன் மீது எவ்வளவு அன்பு. அவரை மகிழ்விப்பதற்காக எவ்வளவு ஏற்பாடுகள்" என்று மெச்சினாள்.

"அவனைப் போல் மகனிருந்தால் யாருக்குத்தான் அன்பேற்படாது. அவன் என் மகனாகப் பிறக்க நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்." என்றாள் பாக்கியம். "ஆம் அம்மா, அவரைப் போல் அழகானவரையும் திறமையுள்ளவரையும், அன்புள்ளவரையும் நான் பார்த்ததில்லை. கதையில் வரும் அர்ச்சுனராசா அப்படியிருந்திருப்பாரோ என்னவோ" என்றான்.

ஆனால் பாக்கியம் அறை விஷயத்தை மட்டும் நான் கவனித்தாள் என்பதில்லை. அவனுக்கு வேண்டிய உணவு வகைகளையும் ஏற்பாடு செய்து வைத்தால். கோழி சூப், கருணைக் கிழங்குக் கறி, பொரி விளங்காய் போன்ற அவனுக்குப் பிரியமான உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வைத்தாள். வேப்பம் பூ வடகம், எலுமிச்சங்காய் ஊறுகாய் என்பதையும் போதிய அளவு இருக்கின்றனவா என்று கவனித்துக் கொண்டாள். இன்னும் சீமைச் சொக்கிளேட் வகைகளும், பிஸ்கட்டுகளும், கொக்கோ போன்ற பான வகைகளும் அவளால் அலுமாரியிலிருந்து மேசை மீது எடுத்து வைக்கப்பட்டன. அத்துடன், அடுத்த நாட் காலையிலிருந்து ஸ்ரீதர் வரும் வரைக்கும் அமராவதி வளவின் பெரிய இரும்பு கேட்டுகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென்றும் வாயிற் காப்பாளனுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த நாட் காலையில் வீதியில் சென்றவர்கள் யாவரும் அமராவதி மாளிகைக்கு யாரோ ஒரு முக்கிய விருந்தினர் வருவதாக அறிந்து கொண்டனர். கொழும்பிலிருந்து இலங்கையின் பிரதம நிதியரசர், சிவநேசரின் விருந்தினராக வருவதாகப் பொய்க் கதையொன்றும் வீதியோரத்திலிருந்த தேநீர்க் கடையில் பிறந்து பாவி விட்டது.

பாக்கியத்தின் பரபரப்பைப் பார்த்து சிவநேசரும் ஒரு வகைப் பரபரப்பை அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியத்திடம் ஒரு விஸ்கி போத்தலையும் கிளாஸ்களையும் நல்ல தட்டொன்ற்¢ல் ஸ்ரீதரின் அறையில் வைக்கும்படி கூறினார் அவர்.

"எதற்கு? அவன் தான் குடிக்க மாட்டானே?" என்றாள் பாக்கியம்.

"உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளை என்றால் இப்படிப்பட்ட விஷயங்களிலும் ஓரளவு பயின்றல்லவா இருக்க வேண்டும்? சிறிது குடிப்பது உடம்புக்கும் நல்லது. நானும் அவனைப் போலவே குடிகாரனல்லாவிட்டாலும், அவன் வயதில் ஒரு நாளுக்கு அரை போத்தல் விஸ்கி குடித்து விடுவேனே" என்றார் சிவநேசர்.

"ஆமாம். குடிக்காதவர் தான் நீங்கள். அது தான் அரைப் போத்தல் குடித்தீர்களா. என் மகன் குடிக்கவே மாட்டான்" என்று பாக்கியம் சிவ நேசரைக் கிண்டல் பண்ணிக் கொண்டே விஸ்கி போத்தலைத் தேடிக் கிளம்பிவிட்டாள். இந்த உலகில் சிவநேசரைக் கிண்டல் பண்ணும் துணிவு பாக்கியத்துக்கு மட்டும் தான் இருந்தது. அவளது கிண்டலை அவர் சில சமயம் விரும்பி இரசிப்பதுமுன்று.

பாக்கியம் விஸ்கித் தட்டை ஸ்ரீதர் அறையில் வைத்தது அவன் குடிப்பான் என்ற எதிர்பார்ப்பில் அல்ல, அவன் விரும்பினால் அந்தக் குறைக் கூட அவனுக்கு இருக்கக் கூடாது என்றது அவளது அன்னை உள்ளம்.

ஸ்ரீதர் பகல் பத்து மணியளவில் காரில் வீடு வந்து சேர்ந்தான். மோகனா "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று ஒரே ரகளைப் படுத்திவிட்டது. வேலைக்காரி தெய்வானை கூட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அதைப் பேசும்படி தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதர் மோகனாவுக்குப் பக்கத்தில் சென்று "ஏ! மோகனா என்ன ஒரே கூச்சல்" என்று கூறிக் கொண்டே தான் கொறித்துக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டையிலொன்றை அதன் வாயில் திணித்தான். மோகனா நிசப்தமாகியது.

தாய் பாக்கியம் " நீ போன முறை மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்யாமல் போனாயல்லவா? அதுதான் அதைப் பூர்த்தி செய்யும்படி சப்தம் போடுகிறது அது" என்றாள்.

ஸ்ரீதர், "ஆமாம் அதைப் பூர்த்தி செய்து, அடுத்த மாதம் நடக்கும் கலைக் கழகப் போட்டிக்கு அனுப்ப வேண்டும். எனக்கு முதலாம் பரிசு கிடைக்கும் அம்மா" என்றான் உற்சாகமாக. அத்துடன் "அம்மா உனக்கு நிறைய முந்திரிக்கொட்டையும் கருப்பட்டியும் வாங்கி வந்திருக்கிறேன். தெய்வானை அவை எல்லாவற்றையும் அம்மாவுக்கு எடுத்துக் கொடு" என்று உத்தரவிட்டான் அவன்.

பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். ஸ்ரீதருக்குச் சமீபமாகச் சென்று "அப்பாவுக்கு என்ன கொண்டு வந்தாய்" என்றாள் மெல்லிய குரலில்.

"புத்தகங்கள். அவர் அறிஞர். உன்னைப் போல் சாப்பாட்டு ராமரல்லவே அவர்" என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் செல்லமாக அவனை அடித்து விடுவது போல் கையை ஓங்கினாள். ஸ்ரீதர் சிரித்து விட்டு, "அம்மா அடிக்காதே. நான் விளையாட்டுக்குச் சொன்னேன்." என்று சொல்லிக் கொண்டே புத்தகங்களை எடுத்துத் தெய்வானை மூலம் சிவநேசர் அறைக்கு அனுப்புவித்தான்.

சிவநேசர் புத்தகங்களின் தலைப்புகளை மட்டும் வாசித்து விட்டு, ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தார். புத்தகங்கள் எல்லாமே அவர் தேடிக் கொண்டிருந்த நீட்சேயின் புத்தகங்கள். அவர் எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நூலொன்றுக்கு அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய துணை நூல்கள் அவை. ஆகவே அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

சிவநேசர் ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தது. அவனுடன் உரையாடி அளவளாவுதற்கல்ல. அவ்வித கலகலப்பான பழக்கம் தான் அவரிடம் எப்பொழுதுமே இல்லையே. அவன் கொழுத்திருக்கிறானா மெலிந்திருக்கிறானா என்பதை நேரில் பார்க்க வெண்டும். அவ்வளவுதான் அவர் எண்ணம். அவர் அதற்காக வெளியே வந்து பார்த்தபோது ஸ்ரீதர் மொளு மொளு என்று காட்சியளித்தது அவருக்கு இன்பத்தையே அளித்தது. நவீன மோஸ்தரில் அமைந்த டீ ஷேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து ஸ்ரீதர் பாக்கியத்துடன் சிரித்துப் பேசி கொண்டிருந்ததைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்தார்.

தந்தையைக் கண்டதும் மகன் அவரை நோக்கித் திரும்பினான். சிவநேசர் மகனைப் பார்த்து "என்ன வீடு மறந்து போய் விட்டதா? மூன்று மாதமாக வீட்டுக்கே வரவில்லையே" என்றார்.

ஸ்ரீதர் பதிலளிக்கவில்லை. புன்னகை செய்து கொண்டு நின்றான்.

சிவநேசர் தொடர்ந்து "சுரேஷ் சீமை போன பிறகு தான் வீடு ஞாபகம் வந்தது போலிருக்கிறது. ஏன் ‘கிஷ்கிந்தா’வில் தனியாய் இருக்கப் பயமாயிருக்கிறதா? பழையபடி பேய் நடமாட்டம் உண்டாகி விட்டதா?" என்றார். கொழும்புக்குப் போய்த் தனியாக வாழத் தொடங்கிய புதிதில் ஸ்ரீதர் தனியாய் இருக்கப் பயமாய் இருக்கிறது என்று தபால் எழுதி டெலிபோனிலும் பேசியதை அவ்வாறு ஞாபகமூட்டினார் அவர்.

"நான் இப்போது பெரியவனாகி விட்டேன். எனக்குப் பேய்க்குப் பயமில்லை" என்று சிறிது அடக்கமாகவே முனகிய ஸ்ரீதர். வாயில் வந்த ஒரு நகைச்சுவை வார்த்தையை அடக்க முடியாதவனாக "இப்போது நான் பேயைக் கண்டு பயப்படுவதில்லை. பேய்க்குத்தான் என்னைக் கண்டு பயம், அப்பா." என்று மெதுவாகக் கூறிவிட்டான். சிவநேசர் சிரித்தார். "சுரேஷ் உனக்கு நன்றாகப் பேசப் பழக்கி விட்டிருக்கிறான். அவன் எவ்வளவு காலம் இங்கிலாந்திலிருப்பான். அவன் மிகவும் நல்ல பையன். அவன் பிரயாணத்தின் போது நீ அவனுக்கு ஏதாவது பரிசளிக்க வில்லையா?" என்றார்.

"பரிசளித்தேன். ஒரு ஜோடி உடுப்பு" என்றான் ஸ்ரீதர்.

"என்ன விலை?" என்றார் சிவநேசர். எங்கே தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாத முறையில் மலிந்த செலவில் ஏதாவது பரிசைக் கொடுத்து விட்டானோ என்று அவர் அஞ்சினார்.

"ரூபா எழுநூற்றைம்பது. வைட்டவேய்ஸில் வாங்கினேன்." என்றான் ஸ்ரீதர்.

"எங்கே மலிந்த பரிசு ஏதாவது கொடுத்துவிட்டாயோ என்று நான் நினைத்தேன். இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் பணத்தைப் பார்க்கக் கூடாது. எங்கள் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார் சிவநேசர் திருப்தியுடன்.

பாக்கியம் "ஸ்ரீதர் சின்னப் பையனல்ல. அவனுக்கு இப்பொழுது இவை எல்லாம் நன்கு தெரியும்" என்று சிபாரிசு செய்தாள் . அவ் வார்த்தைகளுக்காக அன்னையை நன்றியோடு பார்த்து புன்னகை செய்தான் ஸ்ரீதர்.

"பரிசளிக்கப் பணத்திற்கு எங்கே போனாய்? என்னைக் கேட்டிருக்கலாமே" என்றார் சிவநேசர்.

"ஏன்? என்னிடம் பணம் நிறைய இருக்கிறது." என்றான் ஸ்ரீதர்.

"எப்படி?"

"ஏன் என்னுடைய அலவன்ஸ் முழுவதும் பாங்கில் மிஞ்சியிருக்கிறது"

"எவ்வளவு?"

"50 அல்லது 60 ஆயிரம் இருக்கலாம்"

"அப்படியானால் நீ பணத்தைச் செலவழிப்பது இல்லையா?"

"எனக்கு என்ன செலவு? சாப்பாடு, பெட்ரோல் எல்லாம் தான் சும்மா கிடைக்கின்றன. புத்தகங்கள் வர்ணங்கள், வெளியே போனால் கைச் செலவு, உடைகள் அவ்வளவு தானே என் செலவு" என்றான் ஸ்ரீதர்.

சிவநேசர் புன்னகை பூத்தார். "நீ எங்கள் குடும்பத்திலேயே பெரிய கருமியாய் வருவாய் போலிருக்கிறது. என்னுடைய இறந்து போன மாமனார் ஒருவர் இப்படித்தானாம். சாகும் போது அவர் தலையணையுள் ஐயாயிரம் தங்கப் பவுன்களை வைத்திருந்தார். ஆனால் ஒன்று. ஒருவன் எவ்வளவுதான் கருமியாயிருந்தாலும் கருமி என்று பெயரெடுக்கக் கூடாது. அதைப் போன்ற அபவாதம் உலகிலேயே வேறு இல்லை. எவனாவது ஒருவன் ஊதாரியாக வாழ்ந்தான் என்று உலகம் ஏசும் போது, அந்த எச்சில் கூட ஒருவித அன்பு தொனிக்கும். ஆனால் கருமியை ஏசும்போது ஒரு புழுவை ஏசுவது போல் ஏசுவார்கள்." என்றார்.

பாக்கியம் "ஸ்ரீதர் கருமியல்ல" என்று இடை மறித்தாள். சிவநேசரும் தம் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

வெளிப்படையாக, சிவநேசர், ஸ்ரீதர், பாக்கியம் ஆகிய மூவரும் இவ்வாறு உல்லாசமாகப் பேசிக் கொண்டாலும் நீரு பூத்த நெருப்புப் போல அவர்கள் எல்லோர் உள்ளத்திலும் ஸ்ரீதரின் திருமணப் பிரச்சினை ஒரு பெரிய பாரமாகவே கிடந்தது. பாக்கியம் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதிலும் அதனை மறப்பதற்கு முயன்றாள். ஸ்ரீதரோ படுக்கையில் சாய்ந்து கொண்டு அடுத்த நாள் நாடக வசனங்களை மனனம் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே அவன் அவற்றைத் தலை கீழாக மனனம் செய்திருந்தது உண்மையேயாயினும், சிறு தவறுமின்றி மிக நேர்த்தியாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முன்னிலையில் நடிக்க வேண்டுமென்ற பேரார்வத்திலேயே அவன் அவ்வாறு அதில் அதிக கவனம் செலுத்தலானான். பாக்கியத்தின் உத்தரவின் படி ஐஸ் போட்டுக் குளிரச் செய்யப்பட்டிருந்த செவ்விளநீரைத் தெய்வானை உயர்ந்த பெரிய ‘கிளாசில்’ ஊற்றி ஸ்ரீதரின் படுக்கைக்கு அருகே வைத்திருந்தாள். அதை இடையிடையே அருந்தியவாறு ஸ்ரீதர் நாடக வசனங்களை உரக்கப் பேசிப் பழகிக் கொண்டிருந்தான். இடையிடையே கூண்டிலிருந்த மோகனா அவனைப் பார்த்து "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று அழைத்தது. "சப்தம் போடாதே. எனக்கு வேலையிருக்கிறது." என்று விரலை வாயில் வைத்து அதற்குச் சைகை காட்டிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

சிவநேசர் சிறிது நேரம் நீட்சேயின் கருத்துகளோடு மல்லாடிவிட்டு விஸ்கி அருந்தினார். தோட்டத்தில் உலாவினார். இயற்கை மர நிழலுக்குச் சென்று புள்ளி மன்களுக்கும் மயில்களுக்கும் தம் கையால் உணவு கொடுத்தார். பின்னர் காரியாலய அறைக்குள் சென்று கிளாக்கர் நன்னித்தம்பிக்கு வேலைகள் சொல்ல ஆரம்பித்தார். அப்பொழுதும் ஸ்ரீதரைப் பற்றி மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டிருந்த விஷயங்களும் அதிகார் அம்பலவாணர் கூறிய விஷயங்களும் அவருக்கு ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் நாளை நாடகம் முடித்து வேலைப் பரபரப்புகள் அடங்கிய பிறகு - அதாவது நாளை மறு தினம் இவ்விஷயங்களைக் கவனிக்கலாம் என்றிருந்து விட்டார் அவர்.

ஆனால் அவர் அவ்வாறு நினைக்கச் சுழிபுரம் கந்தப்பர் வேறு விதமாக நினைத்தார். சுழிபுரத்திலிருந்து ‘ட்ரங் கோல்’ போட்டுப் பேசினார் அவர்.

"நாளைக்கு உங்கள் மகன் ஸ்ரீதர் இந்துக் கல்லூரி நாடகத்தில் நடிக்கிறாராமே உண்மைதானா?"

"ஆமாம். நீங்களும் வாருங்கள். நன்றாக நடிக்கிறானாம்"

"நான் வராமலிருப்பேனா. டாக்டரையும் கூட்டி வருகிறேன்."

"டாக்டரா? யாரது?... ஓகோ உங்கள் மகளைக் கூறுகிறீர்களா? சரி. அழைத்து வாருங்கள்... இல்லை... இன்னும் நான் ஸ்ரீதரிடம் பேச வில்லை. எதற்கும் நாளைக்கு நாடகத்தில் சந்திப்போம்."

டெலிபோன் பேசி முடித்த பின்னர் சிவநேசர் எழுந்து சென்று விட்டார்.

அவர் போய்ச் சிறிது நேரத்தில் காரியாலய அறைக்கு ஸ்ரீதர் வந்தான். கிளாக்கர் நன்னித்தம்பி எழுந்து நின்று "தம்பி ஸ்ரீதரா, வாருங்கள்" என்று விநயமாக வரவேற்றார்.

ஸ்ரீதர் தந்தையின் சுழல் நாற்காலியில் உல்லாசமாக உட்கார்ந்து சுழன்று கொண்டே "நன்னித்தம்பி என்ன புதினம்?" என்று கேட்டான்.

நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு "புதினமா? ஒரு புதினமுமில்லை. என் மகள் சுசீலா பீ.ஏ பாஸ் பண்ணிவிட்டாள். அப்பாவிடம் அவளுக்கு எங்காவது ஒரு வாத்தியார் வேலை பார்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் அவளை நாளை மறு தினம் இங்கே அழைத்து வரும்படி சொல்லியிருக்கிறார். மற்றப்படி உங்கள் புதினம் தான் பெரிய புதினம்?"

"எனது புதினமா? இது என்ன புதுக் குழப்பம்? எனக்கொன்றும் விளங்கவில்லையே. விவரமாய்ச் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

நன்னித்தம்பி, "இல்லை, உங்கள் திருமண விஷயமாகச் சொன்னேன். கந்தப்பசேகரர் மகள் டாக்டர் அமுதாவை உங்களுக்குக் கல்யாணம் பேசி இருக்கிறார் அப்பா. நான் சொன்னேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை இந்துக் கல்லூரி நாடகத்துக்கு உங்களைப் பார்க்க டாக்டர் வருகிறாளாம். இப்பொழுதுதான் அது பற்றிச் சுழிபுரத்திலிருந்து கந்தப்பர் டெலிபோனில் பேசினார்" என்றார் விநயமாக.

"அப்படியா? ஆனால் டாக்டர் பார்ப்பதற்கு எனக்கொன்றும் சுகவீனம் இல்லை...அல்ல.. மறந்து விட்டேன். இரு நாட்களாக கண்ணில் தண்ணீர் வருகிறது. சில சமயங்களில் எரிச்சல் கூட எடுக்கிறது. அதை வேண்டுமானால் டாக்டருக்குக் காட்டலாம்" என்றான் சிரித்துக் கொண்டு.

"நீங்கள் குறும்பாகப் பேசுகிறீர்கள். ஆனால் கண்ணில் சுகவீனமென்பது உண்மைதானா தம்பி? அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். எனது இறந்து போன மைத்துனர் சிவலிங்கத்துக்கு இப்படித்தான் கண்ணில் சுகவீனமாகிப் பின்னர் பார்வையே பழுதாயிற்று. அதற்காகச் சந்திர சிகிச்சை செய்தோம். ஆனால் அச் சந்திர சிக்கிச்சை அவர் உயிரையே கொண்டு போய் விட்டது" என்றார் நன்னித்தம்பி.

"என்ன கண்ணில் சந்திர சிகிச்சை செய்ததால் உயிர் போயிற்றா? நான் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதேயில்லை" என்று ஆச்சரியத்தோடு கூறினான் ஸ்ரீதர்.

அதற்கு நன்னித்தம்பி, "எனக்கும் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றியோ சந்திர சிகிச்சையைப் பற்றியோ முன்னர் தெரியாதுதான். அவருக்கு நோய் ஏற்பட்ட பிறகு தான் இது விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். எதற்கும் முன் ஜாக்கிரதையாக டாக்டருக்குக் காட்டுவது நல்லதல்லவா?" என்றார்.

ஸ்ரீதர் "காட்டத்தான் வேண்டும். ஆனால் இந்த லேடி டாக்டருக்கல்ல." என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.

கிளாக்கர் அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே வேலையில் மூழ்கினார்.

அன்று மாலை நாலரை மணியளவில் தாயாருடன் சேர்த்து அமராவதி வளவு முழுவதும் சுற்றித் திரிந்தான் ஸ்ரீதர். மான்கள், மாடுகள், மயில்கள் ஆகியவற்றோடு விளையாடினான். தடாகத்திலிருந்த தாமரைப் பூக்களையும் அல்லியையும் கொய்தான். வளவிலிருந்த கோயிலுக்குப் போய் அங்கிருந்த சந்தனக் கல்லில் தன் கையாலேயே சந்தனத்தை அரைத்துத் தன் நெற்றியில் அழகாகப் பொட்டிட்டுக் கொண்டு அம்மாவின் நெற்றியிலும் பொட்டு வைத்தான்.

தாயார் கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலைப் பற்றி விசாரித்தாள். கோவிலின் தெற்குக் கோபுரத் திருப்பணியைத் தந்தையார் சீக்கிரம் தொடங்கவிருக்கிறாரென்றும் தானும் அப்போது அங்கே வந்து ‘கிஷ்கிந்தா’வில் ஒரு வாரம் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள் அவள். "அந்தக் கோவில் உனது பரம்பரைக் கோவில். அதுதான் இந்த அமராவதி வளவையே எப்பொழுதும் பாதுகாத்து வருகிறது. மணவாள சுந்தரேஸ்வரர் தான் எங்களுக்கு இந்த இலங்கை முழுவதுமே இவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே நீ கோவில் நிர்வாகத்தில் அப்பொழுதும் அக்கறையாயிருப்பதோடு நேரடியாக அதைக் கவனிக்கவும் வேண்டும்." என்றாள் பாக்கியம்.

"ஆம். அப்படியே செய்வேன்" என்று வாக்களித்தான் ஸ்ரீதர்.

பின் தாயும் மகனும் வேலைக்காரி தெய்வானையுடன் ஸ்ரீதர், சுரேஷ் என்ற ஈர் ஆமைகளையும் பார்க்கச் சென்றனர். அவற்றுக்கும் அவற்றோடு வாழ்ந்த மீன்களுக்கும் உணவளித்தான் ஸ்ரீதர். "மிருகங்களுக்கு உணவளித்தல் பெரிய புண்ணியம். கடவுள் எங்களுக்குச் செல்வம் அளித்திருப்பது மனிதருக்கும் மிருகங்களுக்கும் உதவுவதற்காகத்தான்." என்று கூறிய பாக்கியம் ஸ்ரீதரிடம் "கிஷ்கிந்தா"வில் கண்னாடி நீர்ப் பெட்டிகளை வைத்துச் சில மீன்களை வளர்க்கலாமே என்றும் ஆலோசனை கூறினாள். அத்துடன் " நீ கொழும்புக்குப் போகும் போது மோகனாவையும் எடுத்துச் செல். அது "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று உன்னை அழைத்துக் கொண்டே இருப்பது உன் நண்பர்களுக்கு வேடிக்கையாயிருக்கும்" என்றும் சொன்னாள் அவள்.

பின்னர் இருவரும் குளத்தின் கட்டில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். ஸ்ரீதர் குழந்தை போல் அம்மாவின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான். "அம்மா என் தலையில் பேனிருக்கிறதா பார்" என்று குறும்பாகச் சொன்னான் அவன். பாக்கியத்துக்கு அவன் தலையில் பேனில்லை என்பது தெரிந்தாலும் பொய்க்குப் பேன் பார்த்தாள். தெய்வானை அதைப் பார்த்துச் சிரித்தாள்.

திடீரென ஸ்ரீதர் "அம்மா, நான் அப்பாவைப் படம் எழுதியிருக்கிறேன். உன்னை எழுதவில்லையல்லவா? இன்றைக்கு எழுதப் போகிறேன்" என்றான்.

பாக்கியத்துக்கும் அது பிடித்தது. "சரி எழுது. நான் எப்படியிருக்கிறேன் என்று படத்தில் பார்க்க எனக்கும் ஆசைதான்" என்றாள் அவள்.

" நான் உன்னை உனது மான்களுடன் ரவிவர்மாவின் சகுந்தலை படம் போல் எழுதப் போகிறேன்." என்றான் ஸ்ரீதர்.

"சகுந்தலை இளம் பெண். என்னை அப்படி எழுத முடியுமா? அது நல்லாயிருக்காது" என்றாள் பாக்கியம்.

"யார் சொன்னது? சகுந்தலை இளம் பெண்ணென்று? அவளும் அவள் மகன் பரதனுக்கு இருபத்து முன்று வயதாயிருக்கும்போது உன் வயசை அடைந்திருப்பாள் தானே? அநேகமாக, அவளும் உன்னைப் போல் உருண்டு திரண்ட, பூசணிக்காயாகத்தான் இருந்திருப்பாள். அப்படி நினைத்துக் கொண்டு நானுன்னைச் சகுந்தலை போலவே எழுதப் போகிறேன்." என்றான் ஸ்ரீதர்.

"ஆனால் பரதனுக்கு இருபத்துமூன்று வயதான பொழுது சகுந்தலை காட்டில் இல்லையல்லவா? ஆகவே மான்களை எழுதக் கூடாது" என்றாள் பாக்கியம்.

"ஏன்? மான்களோடு வனத்தில் வளர்ந்த சகுந்தலை நிச்சயம் அரண்மனையிலும் மான்களை வளர்த்துத்தான் இருப்பாள். துஷ்யந்தன் என்ன எங்க அப்பாவைவிடக் குறைந்தவனா? தன் மனைவிக்கு மான்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்க மாட்டானா?" என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் சிரித்தாள். "உன்னோடு என்னால் வாதிட முடியாது. சரி. படத்தை எழுது. எப்படி விருப்பமோ, அது போல் எழுது. ஆனால் ஒன்று. என்னை அதிகம் கிழவியாக எழுதிவிடாதே. வயசைச் சிறிது குறைத்தெழுது" என்றாள் பாக்கியம்.

"ஆ! அப்படியா? எவ்வளவு தூரம் வயசைக் குறைக்க வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்னாக எழுதிவிடட்டுமா?" என்று கேலி செய்தான் ஸ்ரீதர்.

பாக்கியம் "இப்படி நீ என்னைப் பரிகாசம் செய்வதாயிருந்தால் படம் எழுதவே வேண்டாம். நீ அப்பாவின் படத்தை எழுதி விட்டாயல்லவா? நீ அப்பாவின் மகன் தானே? என்னை எழுத வேண்டாம்." என்று கோபித்துக் கொண்டாள்.

ஸ்ரீதர் அதற்கு "இல்லையம்மா. உன்னை எழுதித்தான் தீருவேன். ஆனால் உன் வயசை ஐந்து வயதுக்கு மேல் குறைக்க முடியாது. என்ன சொல்கிறாய்?" என்றான்.

"அது போதும். ஐந்து வயதுக்கு முன் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? நானும் அப்பாவும் அப்பொழுது கவர்னர் மாளிகை விருந்துக்குப் போன போது, அங்கிருந்த வெள்ளைக்கார ஆண்களும் பெண்களும் அப்பாவிடம் என் அழகை மிகவும் புகழ்ந்தார்களாம். என் படம் பத்திரிகைகளில் கூட வெளி வந்தது. நான் அப்பொழுது இன்று போல் கிழவியல்ல" என்றாள் பாக்கியம்.

"என்ன என் அம்மா கிழவியா? யார் சொன்னது? இதோ படத்தை எழுத ஆரம்பிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே படம் எழுதுவதற்கு வேண்டிய பொருள்களைத் தெய்வானையை அனுப்பி எடுத்து வரச் செய்து, படம் வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

படம் எழுத அரம்பித்த சிறிது நேரத்தில் பாக்கியம் வேலைக்காரி தெய்வானையை ஸ்ரீதருக்குத் தேநீரும் தனக்கு வெற்றிலையும் எடுத்து வர அனுப்பி வைத்தாள். இதனால் ஏற்பட்ட தனிமையை உபயோகித்து அம்மாவிடம் பத்மாவைப் பற்றிப் பேசுவதற்குத் தீர்மானித்தான் ஸ்ரீதர்.

"அம்மா, உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். ஆனால் பேச வெட்கமாயிருக்கிறது. என்றாலும் பேச வேண்டிய விஷயந்தான்.." என்று பீடிகை போட்டான் ஸ்ரீதர்.

"எதென்றாலும் பேசு. என்ன விஷயம்? சொல்லு" என்று வினவினாள் பாக்கியம்.

ஸ்ரீதர் தட்டுத் தடுமாறிக் கொண்டு முடிவில் எப்படியோ விஷயத்துக்கு வந்து சேர்ந்தான். ‘அப்பா எனக்குக் கல்யாணம் பேசியிருக்கிறாராமே. அது உண்மையா?" என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான் ஸ்ரீதர்.

"ஆம். அது உனக்கு எப்படித் தெரியும்" என்றாள் பாக்கியம்.

"கொழும்பில் நாதசுரம் வேணுவைச் சந்தித்தேன். வேணு சொன்னான்"

"இதைக் கேட்கத்தானா நீ இவ்வளவு வெட்கப்பட்டாய்? நீ இன்னும் சின்னப் பையன் அல்லவே? கல்யாணம் செய்யும் வயதுதானே? அதுதான் அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்." என்றாள் பாக்கியம்..

"மணப்பெண் யார்?"

"வேணு சொல்லவில்லையா?"

"சொன்னான். கந்தப்பருடைய மகள் அமுதா என்று."

"ஆமாம். அவள்தான். படித்தவள். அழகி. நீயும் அவளும் நல்ல ஜோடி. அவள் அமெரிக்காவுக்குப் படிக்கப் போகு முன் இங்கு பல தடவை வந்திருக்கிறாள். நீ பார்த்திருக்கிறாயல்லவா? இன்னும் அவள் ஒரு லேடி டாக்டர். எல்லா வகையிலும் அவள் உனக்கேற்றவள்."

"அம்மா. எனக்கு லேடி டாக்டர்களைப் பிடிக்காது."

"அப்படியானால் அவளை டாக்டர் வேலை செய்ய வேண்டாமென்று சொல்லிவிட்டால் போகிறது. அவள் சம்பாதித்தா நீ சீவிக்க வேண்டும்? சுந்தரேஸ்வரர் அந்த நிலையில் எங்களை வைக்கவில்லை.

"இல்லை அம்மா. எனக்கு அமுதாவைப் பிடிக்காது. எனக்கு இந்தத் திருமணம் வேண்டவே வேண்டாம் அம்மா"

" நீ அமுதாவிடம் பேசிப் பழகாததால் அப்படிச் சொல்கிறாய். போன மாதம் கீரிமலையில் நான் அவளைச் சந்தித்தேன். மிகவும் இனிமையான குணம். நிச்சயம் அவளை உனக்குப் பிடிக்கும். அது மட்டுமால்ல. அவளுக்கு உன் மீது மிகவும் பிரியம். உன்னுடைய நாடகப் படம் ‘தினகரனி’ல் வெளிவந்ததல்லவா? அதை அவள் வெட்டி ஒட்டி வைத்திருப்பதாக அவளது தாயார் எனக்கு இரகசியமாகச் சொன்னாள். அப்பாவும் அவர்களும் ஏன் நானும் கூடத்தான் இந்தத் திருமணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பர்த்திருக்கிறோம்."

ஸ்ரீதருக்கு விஷயம் தலிக்கு மேல் போய்விட்டது போல் தோன்றியது. திடீரென அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து திகிற் கோலம் தோன்றியது. இருந்த போதிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "அம்மா, அமுதாவிலும் பார்க்க நல்ல மருமகளை நான் உனக்குக் கொழும்பிலே பார்த்து வைத்திருக்கிறேன் . அமுதா எனன அமுதா? அவளை விட எத்தனயோ மடங்கு நல்ல பெண்ணை நான் பார்த்து வைத்திருக்கிறேன்" என்றான் ஸ்ரீதர்.

"என்ன? கொழும்பிலே உனக்கேற்ற பெண்னா? அமராவதி வளவின் அந்தஸ்துக்கேற்ற பெண் கொழும்பில் எங்கே இருக்கிறாள்? இந்த இலங்கை முழுக்கப் பார்த்தாலும் கந்தப்ப்சேகரர் குடும்பத்தை விட எஙகளுக்கு சமமான அந்தஸ்துள்ள குடும்பம் வேறு இல்லை. அவர்கள் கூடப் பணத்தைப் பொறுத்த வரையில் எங்களுக்குக் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே எங்களுடன் சம்பந்தம் செய்யத்தக்கவர்கள்."

"அம்மா, நீ கூறும் அந்த அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை."

"அதற்கென்ன செய்வது? அப்பாவுக்கு அதில் முழு நம்பிக்கை. அதை மாற்ற யாராலும் முடியாது."

"அப்படியானால் நான் பத்மாவைக் கட்ட முடியாதா?"

ஏக்கம் நிறைந்த ஸ்ரீதரின் இவ்வசனத்தைக் கேட்டதும் தாயுள்ளம் ஸ்தம்பித்துவிட்டது. நம்பிக்கை இழப்பதனால் ஏற்பட்ட சோகத்தில் எல்லைக் கோட்டில் நின்று ஒலித்த திகிலும் பயமும் நிறைந்த அந்தப் பரிதாப வார்த்தைகளை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை. ஆம், ஸ்ரீதர் பத்மாவின் மீது கொண்ட முழுக் காதலும் அக்கேள்வியில் அப்படியே எதிரொலித்தது. பத்மா இல்லாத வாழ்வு வாழ்வல்ல, சாவே என்ற முடிவான தீர்மானத்தில் எழுந்த வார்த்தைகள் போல் தோன்றின அவை. சற்றும் எதிர்பாராத வகையில் நம்பிக்கைக் கோட்டைகள் யாவும் இடிக்கப்பட்டவனின் வாயிலிருந்து வெளி வந்த சக்தியற்ற சொற்களாகத் தோன்றின அவை.

பாக்கியம் ஸ்ரீதரின் முகத்தைப் பார்த்தாள். வெளிறிப் போலிருந்த அவன் முகத்தை வேதனை நிறைந்த அந்த நிலையில் அவள் அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை. அவனை அப்படியே அணைத்துக் கொண்டு தேறுதல் கூற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருந்தாலும் மனதைக் கெட்டிப்படுத்திக் கொண்டு "பத்மாவா அது யார்?" என்று ஒன்றுமறியாதவள் போல் கேட்டாள் அவள்.

ஸ்ரீதர் "பத்மா என்னுடன் படிக்கும் ஒரு மாணவி. ஒரு வாத்தியாரின் மகள். அவள் என்னை நேசிக்கிறாள். நானும் அவனை நேசிக்கிறேன். அம்மா, அவளை விட்டு வேறு ஒருவரையும் ஒரு போதும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன். என்னால் அமுதாவைக் கட்ட முடியாதம்மா?" என்றான்.

பாக்கியம், "அப்பா உனது பத்மாவை ஒருபோதும் ஏற்க மாட்டார், ஸ்ரீதர். நீ அமுதாவைக் கட்டுவதுதான் சரி" என்றாள்.

ஸ்ரீதர் "இல்லையம்மா. நீ அப்பாவிடம் பேசு. விஷயங்களை எடுத்துச் சொன்னால் அவர் நிச்சயம் ஒப்புக் கொள்ளுவார். பத்மா மிகவும் நல்லவன். நீ கொழும்புக்கு வந்தால் பத்மாவை ‘கிஷ்கிந்தா’வுக்கு அழைத்து வந்து உனக்குக் காண்பிப்பேன். உனக்கு அவளை நன்றாய்ப் பிடிக்கும். அப்பாவுக்கும் பிடிக்கும். அம்மா, நீ அப்பாவிடம் பேசுவாயா?" என்றான்.

பாக்கியத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கலங்கியிருந்த அவன் கண்களைக் கண்டு அவள் கண்களும் கலங்கிவிட்டன.

"சரி. பேசிப் பார்க்கிறேன். ஆனால் எனக்கென்னவோ இவ்விஷயங்களில் அப்பா விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை." என்றாள்.

இமயமலையை அசைத்தாலும் அசைக்கலாம். ஆனால் சிவநேசர் மனதை மட்டும் இப்படிப்பட்ட விஷயங்களில் அசைக்க முடியாது என்பது பாக்கியத்துக்கு நன்கு தெரியும். எனவே ஸ்ரீதரின் எதிர்காலத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

இன்னும் ஸ்ரீதரின் பேச்சிலே அவனது காதலின் வலிமையும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதுவும் அசைக்க முடியாததாகவே அவளுக்கு பட்டது. சிறிய விஷயங்களில் எல்லாம் அவன் விருப்பபட்டதை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்துப் பழகிய அவள் கல்யாணம் போன்ற பெரிய விஷயத்தில் அவன் மனதுக்கு மாறாக எப்படி நடிப்பது என்றறியாது திக்குமுக்காடினாள்.

நிச்சயம் சிவநேசர் இதில் விட்டுக் கொடுக்க மாட்டார். என்னதான் மென்மை நிறைந்தவனாகக் காட்சியளித்தாலும் ஸ்ரீதரும் அவர் வளர்ப்பில் வளர்ந்தவன்தான். அவனும் இக்காதலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இந்த நிலையில் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ என்று அஞ்சினாள் பாக்கியம். காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தவர்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் ஸ்ரீதரின் உயிருக்காக அவள் அஞ்ச ஆரம்பித்தாள் அவள். தாய் உள்ளம் நடுங்கியது.

அதன் பின் தாயும் மகனும் சிறிது நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீதர் குளக்கட்டில் உட்கார்ந்து ஆமைகளைப் பார்த்தான். அங்கே சுரேசும் ஸ்ரீதரும் ஒன்றுக்கொன்று அருகருகாகக் காணப்பட்டன. இப்பொழுது எனது சுரேசும் அந்தச் சுரேஷைப் போல என் பக்கத்திலிருந்தால் அவனிடம் நான் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டிருக்கலாமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டான்.அவன்.

இதற்கிடையில் நேரம் ஆறு மணியாகி இருந்தது. இரணியனைக் கொன்ற நேரம். இது வரை இயற்கை மர நிழலை மட்டும் நிலவிய இருள் இப்பொழுது நாலாதிசைகளிலும் பார்த்து தாயையும் மகனையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

[தொடரும்]


- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள் -