சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்'இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை  முற்போக்கு எழுத்தாளர் சங்கக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

இத்தொகுப்பில் 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளை  எழுதியவர்கள்:

1. தேசிய இலக்கியம் என்றால் என்ன? - பேராசிரியர் க.கைலாசபதி (மரகதம் 1961).
2. தேசிய இலக்கியம்  -சில சிந்தனைகள் - ஏ.ஜே.கனகரத்தினா (மரகதம் செப்டம்பர்  1961)
3. தேசிய இலக்கியம் - அ.ந.கந்தசாமி (மரகதம் அக்டோபர் 1961)

இதுபற்றி மேற்படி நூலுக்கான முன்னுரையில் இளங்கீரன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

"1954இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிறுவப்பட்டது.  அது நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் , ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது.  எனவே ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் என்னும் பொதுப்பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில், அதன் தனித்துவத்தைக் காட்டவும் அத்தனித்துவத்தை நமது  மக்கள் இனங்கண்டு அதன் மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும் , நேசிக்கவும், யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்துகொள்ளவும் அதற்குத் 'தேசியம்' என்னும் சொற் பிரயோகம் தேவையாகவிருந்தது.  எனவே இ.மு.எ.ச தனது முதலாவது மாநாட்டில் முன்வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் 'தேசிய இலக்கிய'த்தைப் பிரகடனம் செய்தது. இதனைத்தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது.  1961இல் வெளியான எனது கலை இலக்கிய சஞ்சிகையான 'மரகதம்' இப்பணியை ஏற்றது.  அதில் முதல் இதழில் பேராசிரியர் கைலாசபதி 'தேசிய இலக்கியம்' பற்றிய  தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து இரண்டாவது மூன்றாவது கட்டுரைகளாக ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதியதை மரகதம் வெளியிட்டது. "

தேசிய  இலக்கிய பற்றிய விழிப்புணர்வைப்பொறுத்துக்கொள்ளாத பழமைவாதிகள் மத்தியில் இதற்குக்கடுமையான எதிர்ப்பு எழுந்தது.  அதுபற்றியும் மேற்படி முன்னுரையில் இளங்கீரன் பின்வருமாறு கூறுவார்:

".. இலக்கிய உலகில் அரசோச்சிக் கொண்டிருந்த செல்வாக்கை இழந்திருந்த இலக்கிய சனாதனிகள் படைப்பிலக்கியவாதிகள் மீது கடும் தாக்குதலை நடாத்தினார்கள்.  கண்டனக்கணைகளை வீசினர். போதிய கல்வியறிவும் படிப்பும் இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள் மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள்.  இவர்களின் இலக்கியம் இழிசனர் இலக்கியம் என்றெல்லாம் வசைபாடினர். இதனைத்தொடர்ந்து மரபுப்போராட்டம் தொடங்கியது. 1962 ஜனவரில் தினகரனில் 'தற்காலத் தமிழ் இலக்கியம் தமிழ் மரபுக்குப் புறம்பானதா?' என்னும், விவாதக்கட்டுரைகள் வெளியாயின. மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி ஆ.சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ.நடராஜன் போன்றோரும்,  எழுத்தாளர் தரப்பில் பேராசிரியர் சிவத்தம்பி, அ.ந.கந்தசாமி, இளங்கீரன் போன்றோரும் கட்டுரைகள் எழுதினர். இறுதியில் படைப்பிலக்கியவாதிகள் சார்பில் விவாதம் முடிவுற்றது. மேற்கூறிய  விவாதத்தில் நானும், அ.ந.க.வும் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன."

அக்கட்டுரைகள் விபரங்கள் வருமாறு:

1. 'ஈழத்து  சிருஷ்டி இலக்கியத்துக்கு குழி தோண்டும் முயற்சி' - அ.ந.கந்தசாமி (தினகரன் 2.1.1962)
2. மாறுதல் பெறுவதே மரபு - சுபைர் இளங்கீரன் (தினகரன் 1962 ஜனவரி 19,21,23 & 25)

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி , இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு முயற்சிகள் பற்றி எழுத முனைவோர் முதலில் இது போன்ற நூல்களை வாசிக்க வேண்டும். காய்தல் உவத்தலினிறி எழுதப்பழகிக்கொள்ள வேண்டும். இளந்தலைமுறையினர் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கடந்த கால வரலாற்றினை அறிந்துகொள்ள இது போன்ற நூல்களைத் தேடியெடுத்து வாசிக்க வேண்டும். இவ்வகையில் சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது போன்ற நூல்கள் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் திறனாய்வுத்துறையில் பங்களிப்புச் செய்த இலக்கிய ஆளுமைகள் பற்றி அறிய உதவுகின்றன என்பதாலும் முக்கியமானவை. உண்மையில் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் பங்களிப்பானது நன்றியுடன் விதந்தோதப்பட வேண்டியது. முதன் முதலாக மக்களுக்காக இலக்கியம் படைத்தார்கள் அவர்கள். மக்கள் வாழும் சூழலின் சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி அவர்கள் சிந்தித்தார்கள். 'தேசிய  இலக்கியம்' பற்றிய கோட்பாடு பற்றி விவாதித்தார்கள். அதனைத் தமிழ் இலக்கியத்தில் உள்வாங்கி வளப்படுத்தினார்கள். மரபுக்கெதிராகத் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்து மரபினை மீறினார்கள். பன்னாட்டு இலக்கிய முயற்சிகளை, கோட்பாடுகளை, கருத்துகளையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவந்தார்கள். இவ்விதமான காரணங்களினால் அவர்கள் முன்னெடுத்த முற்போக்கு இலக்கியமானது பெருமைப்படத்தக்க பங்களிப்பினை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது. காத்திரமான வரலாற்றுப்பங்களிப்பு அது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.