மாணிக்கதாசன்உபதிஸ்ஸ கமநாயக்க'மக்கள் விடுதலை முன்னணி'த்தலைவர் ரோகண விஜேவீரா பற்றிய சிங்களத்திரைப்படம் பற்றிய காணொளியைப்பார்த்ததும் கூடவே ரோகண விஜேவீராவுடன் கைது செய்யப்பட்டுப் படையினரால் கொலைசெய்யப்பட்ட கட்சியின் உபதலைவரான உபதிஸ்ஸ கமநாயக்கவின் (Upatissa Gamanayake) நினைவும் தோன்றியது. கூடவே அவரது தாயாரின் சகோதரியின் மகனான இன்னுமொருவரின் நினைவும் தோன்றியது. உபதிஸ்ஸ கமநாயக்க சிங்கள சமுதாயத்தின் வர்க்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அரசபடையினரால் கொலைசெய்யப்பட்டால், அவரது அன்னையின் சகோதரியின் மகனோ இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காய் ஆயுதம் தாங்கிப்போரிட்ட ஒருவர். ஆரம்பத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பில் இணைந்தவர் பின்னர் அது தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம், விடுதலைப்புலிகள் என்னும் அமைப்புகளாகப்பிரிந்தபோது தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைத்துக்கொண்டவர். பின்னர் தன் இறுதிகாலத்தில் அவ்வமைப்பின் இராணுவத்தளபதியாகவும் , பிரதித்தலைவராகவுமிருந்தவர். அவர் வவுனியாவிலிருந்த கழகத்தின் முக்கிய பாசறையான லக்கி ஹவுஸுல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் மாணிக்கதாசன்.

மாணிக்கதாசன் என்றதும் அவரது இராணுவச்செயற்பாடுகள் மற்றும் அவை காரணமாகவெழுந்த விமர்சனங்கள்தாம் முதலில் நினைவுக்கு வரும். விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அனைத்து அமைப்புகளிலும் இவை போன்ற விமர்சனங்களுள்ளன.

மாணிக்கதாசனுக்கும் வடக்கு அராலிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இவரது சகோதரியொருவர் அங்குதான் திருமணம் செய்தவர். இவரது சகோதரரொருவர் அங்கு மாணவர்களுக்கு 'டியூசன்' கொடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறுவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் மாணிக்கதாசனே அங்குவந்து தேடப்படும் காலங்களில் உறைந்து வாழ்ந்ததாகவும் கூறுவர். இவரைப்பற்றி 1984 -1987 காலப்பகுதியில் கழகத்தின் அப்பகுதிப்பொறுப்பாளராகவிருந்த முரளி இவரைப்பற்றிக் கூறியது இவரைப்பற்றிய இன்னுமொரு பிம்பத்தையே தந்தது.

வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம் மாணிக்கதாசன். அவ்விதமொரு நாள் அப்பகுதிப்பொறுப்பாளரான தன்னைச் சந்திக்க வந்த நிகழ்வைப்பற்றி அவர் நினைவு கூர்கையில் (யாழ் கோட்டையில் 'புளட்' அரண் அமைத்துக் காவல் புரிந்து கொண்டிருந்த காலகட்டமது) வழக்கம்போல் வேகமாக வாகனத்தையோட்டி வந்த அவர் அவ்விதமே தன்னையதிலேற்றி முருகமூர்த்தி ஆலயத்தடிக்கு அழைத்துச்சென்று சிறிது நேரம் உரையாடிச்சென்றதாகவும், அப்போது அப்பகுதியில் இன்னுமொரு பயிற்சி முகாம் அமைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம்: 'தோழர் சின்ன மெண்டிஸ் போராளிகளுடன் மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். மாணிக்கதாசனும் அவ்வாறே மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் உரையாடுவார்.' இவ்விதமான அவரது ஆளுமையினால் அக்காலகட்டத்தில் கழகத்தோழர்களின் அன்புக்குரியவராகவுமிருந்தாரென்றும் அவர் மேலும் கூறினார்.

இன்றும் இயக்க முரண்பாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் சேறடித்துக்கொண்டிருக்குமிச்சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் (இவர்கள் எவ்வமைப்புகளைச் சா(சே)ர்ந்தவரர்களாக இருந்தபோதிலும்) வேடிக்கைக்காகத் தம் சுயநலன்களுக்காக ஆயுதங்களை ஏந்தியவர்கள் அல்லர். சமூக, அரசியல் முரண்பாடுகளின் விளைவாக, அவற்றுக்கான தீர்வுகளை நாடி, உறவுகளை, தம் சொந்த நலன்களைத் துறந்து போராட்டத்தில் தம்மைப்பிணைத்துக்கொண்டவர்கள். உள்முரண்பாடுகளை, புறமுரண்பாடுகளை, சமூகச் சீர்திருத்தங்களை இவர்கள் அனைவரும் கையாண்டதிலேற்பட்ட பாதக, சாதக விளைவுகளைப்பற்றிய எவ்வித சுயபரிசோதனைகள் எதுவுமின்றித் தொடர்ந்தும் கண்களை மூடிக்கொண்டிருப்பதில் பயனெதுவுமில்லை. சுயபரிசோதனையினைப் பக்கச்சார்புகளற்றுச் செய்யவேண்டிய காலகட்டம் இக்காலகட்டம். நடந்தவற்றைக் குறை, நிறைகளுடன் அணுகுவோம். பாடம் படிப்போம். கூடவே நினைவு கூர்வோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.