அண்மையில் மறைந்த முன்னாள் ராணி வாராந்தரி ஆசிரியர் அ.மா.சாமிஅண்மையில் மறைந்த முன்னாள் ராணி வாராந்தரி ஆசிரியர் அ.மா.சாமி மறைவையொட்டிய காணொளியொன்று (எழுத்தாளர் அண்ணா கண்ணன் பதிவேற்றியது), பத்தியொன்று (எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதியது) ஆகியவற்றை வாசித்தபோது என் சிந்தனைக்குருவி சிறகடித்து என்  பால்ய காலத்துக்கே சென்று, கும்மாளமிடத்தொடங்கி விட்டது. நான் வாசிக்கத்தொடங்கி அதிலேயே பித்துப்பிடித்திருந்த பால்ய பருவத்தில் எனக்கு ராணி வாராந்தரி இதழுடனும் சிறிதுகாலம் தொடர்பேற்பட்டது. அத்தொடர்பு இன்று வரைக்கும் மறக்க முடியாத தொடர்பாகவே நினைவுகளில் பதிந்து கிடக்கின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப்படிகளில் பல்வேறு பருவத்து நினைவுகளும் , நினைக்குந்தோறும் இன்பமளிக்கும் நினைவுகளாக நிலைத்து நின்று விடுகின்றன. அவ்வகையில் எனக்கும் ராணி வாராந்தரியுடனான நினைவுகளும் நிலைத்து நிற்கின்றன.

ராணி வாராந்தரியில் முகப்பு எப்பொழுதும் பெண்களை, குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்களைத் தாண்டி வெளியாவதுதான் வழக்கம். இன்றுவரை அது தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. மிகவும் எளிய தமிழில் , தன் வாசகர்களுக்கேற்ப பல்வகைப்பட்ட படைப்புகளையும் தாங்கி வரும் ராணியின் நடுவில் ஓரிரு பக்கங்கள் சிறுவர்களுக்கானதாக வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் ராணி இதழினை விரும்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் நிச்சயம் ஒரு பக்கச் சிறுவர் தொடர்கதையொன்றும் பிரசுரமாகும். அப்பொழுது அவ்விதம் பிரசுரமாகி எம்மையெல்லாம் கவர்ந்திருந்த சிறுவர் தொடர்கதை 'பேசும்சிலை'. நானும் , என் சகோதர, சகோதரிகளும் போட்டி போட்டு வாசித்த சிறுவர் தொடர்களிலொன்று அத்தொடர்நாவல்.  அத்தொடர் நின்று விட, நாமும் ராணி வாசிப்பதை நிறுத்தி விட்டோம். அத்தொடர்கதையை அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்.

ராணியின் ஆசிரியராக 44 வருடங்கள் வரையிலிருந்த அ.மா.சாமி அவர்கள் ராணி, தினத்தந்தி ஆகியவற்றில் பல்வேறு புனைபெயர்களில் எழுதிக்கொண்டிருந்தார். அமுதா கணேசன் என்னும் பெயரில் எழுதும் அவரது தொடர்நாவல்களைப் பெண்கள் விரும்பி வாசிப்பார்கள். நீண்ட காலம் அமுதா  கணேசன் ஒரு பெண் என்றே நினைத்திருந்தேன். குரும்பூர் குப்புசாமியென்னும் பெயரிலும் அவர் பல தொடர்கதைகளை ராணியிலும், தினத்தந்தியிலும் எழுதியுள்ளார். அவ்விதம் வெளியான  தொடர்கதையொன்றின் ஒரு அத்தியாயத்தை மட்டும் வாசித்த நினைவுண்டு. அதில் இதய மாற்றுச் சத்திரச்சிகிச்சை செய்வதைப்பற்றி சம்பவமொன்றிருந்தது நினைவிலுண்டு. இவை தவிர கும்பகோணம் என்னும் பெயரிலும் அவர் நாவல்கள் எழுதியுள்ளார். அவ்விதம் எழுதிய நாவல்களிலொன்று 'பார் பார் பட்டணம் பார்' ராணிமுத்து வெளியீடாக அக்காலகட்டத்தில் வெளியாகியது.

ராணி வார இதழ்

 

அப்பொழுதெல்லாம் எனக்கு அ.மா.சாமி பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் குரும்பூர்  குப்புசாமி, அமுதா கணேசன், கும்பகோணம் பற்றியெல்லாம் தெரிந்திருந்தது. பல வருடங்களுக்குப் பின்னரே அ.மா.சாமியே மேற்படி புனைபெயர்கள் பலவற்றில் எழுதினாரென்பதை அறிந்து கொண்டேன்.

ராணி என்றதும் அந்நிறுவனம் வெளியிட்ட ராணிமுத்து மாதநாவல்களின் நினைவுகளும் கூடவே தோன்றிவிடும். ஆரம்பத்தில் ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அகிலன், மு.வரதராசன், காண்டேகர், ஜெயகாந்தன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பானுமதி ராமகிருஷ்ணா (நடிகை பானுமதி), சாண்டில்யன், சி.ஏ.பாலன், லக்சுமி, குரும்பூர் குப்புசாமி, விந்தன், அமுதா கணேசன், கும்பகோணம், நாரண துரைக்கண்ணன், மாயாவி என்று எழுத்தாளர்கள் பலரின் புகழ்பெற்ற நாவல்கள் ராணிமுத்து நாவல்களாக மாதந்தோறும் வெளியாகியிருந்தன.

என்  வாசிப்புப் படிக்கட்டுகளில் அ.மா.சாமி ஆசிரியராகவிருந்தபோது வெளியான ராணி பத்திரிகைக்கும், ராணிமுத்து வெளியீடுகளுக்கும் நிச்சயம் மறக்க முடியாத இடமுண்டு. அவையெல்லாம் எம் குழந்தைப்பருவத்து அழியாத  கோலங்கள்.

ராணி: குரங்கு குசாலா

அதே ராணி வாராந்தரியில்தான் முதன் முதலில் நான் மர்மக்கதை மன்னன் என்று அந்நாளில் அறியப்பட்ட நாஞ்சில் பி.டி.சாமியை முதன்  முதலில் அறிந்துகொண்டேன். அவரது தொடர்கதையொன்று , 'சிவப்புச் சேலை' என்று பெயரென்று நினைவு, வெளியாகிக்கொண்டிருந்தது. முதல் அத்தியாயத்தில்  பெண்ணோருத்தி மாடியொன்றிலிருந்து விழுந்து இறந்து விடுகின்றாள். அவளது மரணம் கொலையா , இல்லையா என்பதை அறிவதுதான் நாவலின் பிரதான கருப்பொருள். அவரது இன்னுமொரு தொடரொன்றும் நான் வாசிப்பதற்கு முதல் வெளியான ராணி இதழ்களில் வெளியாகிக்கொண்டிருந்தது. அதன் ஓரிரு அத்தியாயங்களை வாசித்திருக்கின்றேன். அத்தொடர் நாவலின் பெயர் : அழகியின் ஆவி.

ராணி என்றதும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம். அதன் முதற்பக்கத்தில் வெளியாகும் குரங்கு குசாலா கேலிச்சித்திரம்.

அ.மா.சாமிதான் தினத்தந்தியில் அறுபதுகளில் தொடங்கி இன்று வரை வெளியாகிக்கொண்டிருக்கும் சிந்துபாத்தின் கன்னித்தீவு சித்திரத்தொடரை ஆரம்பித்து வைத்தவர். இதனையும் அண்மையில்தான் அறிந்துகொண்டேன்.


1. அமரர் அ.மா.சாமி பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் பத்தி கீழே:

அஞ்சலி:அ.மா.சாமி - ஜெயமோகன்

தமிழ் வாசகர்களுக்கு அ.மா.சாமி அவர்களின் பெயர் பெரும்பாலும் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய எழுத்தை படிக்காத வாசகர்களும் இருக்க மாட்டார்கள். ராணி வார இதழின் ஆசிரியராக 44 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவ்விதழில்

குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன்,கும்பகோணம்,  குண்டுமணி போன்ற பல பெயர்களில் எழுதினார். அல்லி பதில்கள்கூட நெடுங்காலம் அவரால்தான் எழுதப்பட்டன. ராணி வார இதழை பெரும்பாலும் தனியாளாகவே எழுதி நிரப்பி வாராவாரம் கொண்டுவந்தார். ராணி வார இதழ் ஆரம்பநிலைக் கல்வி மட்டுமே பயின்ற வாசகர்களுக்கு உரியது. ஆகவே மிகமிக எளிய மொழி கொண்டது. அதற்கான ஒரு நடையை அவர் உருவாக்கிக்கொண்டார். அந்த நடையே பின்னர் தினமலர் நாளிதழின் நடையாக ஆகியது. இன்று முகநூலில் புழங்கும் நடை அதுதான். அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி.

குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன்,கும்பகோணம்,  குண்டுமணி போன்ற பல பெயர்களில் எழுதினார்.

ராணி வார இதழ் ஒருகாலத்தில் தமிழில் மிக அதிகமாக விற்பனை கொண்டதாகவும் இந்திய அளவில் மலையாள மனோரமா வார இதழுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்திலும் இருந்தது.விற்பனையை கருத்தில்கொள்வதென்றால் இதழியலில்

அவர்தான் தமிழின் மிகப்பெரிய சாதனையாளர். ஆனால் அவ்வடையாளங்களை அவர் விரும்பியதில்லை. அவர் எந்த மேடையிலும் அவ்வண்ணம் தோன்றியதில்லை. அவருடைய எந்தப்புகைப்படமும் எங்கும் வெளியானதில்லை. அவருடைய முகமே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. நான் அவரை ஒருமுறை சந்தித்து அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன்

அவருடைய அறிவுலகச் சாதனை அவர் தமிழ் இதழியலின் வரலாற்றை தொடர்ச்சியாக எழுதியவர் என்பதே. நீண்டநாட்களாக அவர் அதற்கான தரவுகளை சேகரித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்த இதழ்த்தொகுப்பு மிகப்பெரியது. அவருடைய தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி  என்ற நூல் 1987ல் வெளிவந்தது.தமிழ் இதழியல் வரலாற்று ஆய்வில் அதுதான் இன்றும் அடிப்படையான முன்னோடி நூல். அதன்பின்னர் திராவிட இயக்க இதழ்கள்,வரலாறு படைத்த தினத்தந்தி, தமிழ் இதழ்கள் வரலாறு,இந்திய விடுதலைப் போர் , இந்து சமய இதழ்கள், தமிழ் இசுலாமிய இதழ்கள், தமிழ் கிறித்தவ இதழ்கள்,19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் என இதழியல் வரலாறு சார்ந்தே பல நூல்களை எழுதியிருக்கிறார்.

அ.மா.சாமியின் ஆய்வுநூல்கள் அனைத்துமே முறையான சான்றுகளுடன் தொகுக்கப்பட்ட சீரான ஆவணத்தொகைகள். பொதுவாசகனுக்குக் கூட வியப்பும் திகைப்பும் அளிக்கும் செய்திகள் கொண்டவை. தமிழ்ப்பண்பாட்டை புரிந்துகொள்ளவும்

விவாதிக்கவும் இன்றியமையாதவை. அ.மா.சாமியின் இயற்பெயர் அருணாச்சலம் மாரிச்சாமி. தன் 85 ஆவது அகவையில் காலமானார்.தமிழ் இதழியல் ஆய்வுகளில் அவர் என்றும் பேசப்படுபவராகவே இருப்பார்.



2. அ.மா.சாமி பற்றிய எழுத்தாளர் அண்ணா கண்ணனின் யு டியூப்  காணொளி: https://www.youtube.com/watch?v=bw7WcwvQz3U

இக்காணொளியில் அண்ணா கண்ணன் அவர்கள் ராணி வாராந்தரியில் பணியாற்றிய காலகட்டத்தில் அதன் ஆசிரியர் அ.மா.சாமியுடனான தனது அனுபவங்களை நனவிடை தோய்கின்றார். ஆவணச்சிறப்புள்ள காணொளி.


குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன்,கும்பகோணம்,  குண்டுமணி போன்ற பல பெயர்களில் எழுதினார்.
3. எழுத்தாளர் அ.மா.சாமி பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு:

அ. மா. சாமி (மே 7, 1935) என்று அறியப்படும் அருணாசலம் மாரிசாமி என்பவர் தமிழ் எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பல தகுதிகள் கொண்டு விளங்கி வருபவர். ராணி வார இதழின் ஆசிரியர் பொறுப்பில் 44 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு

பெற்றவர்.[சான்று தேவை] தினத்தந்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணியைத் தொடங்கினார். சி. பா. ஆதித்தனார் அவர்களின் அறிவும் அனுபவமும் இவரை நெறிப்படுத்தின.

பிறப்பும் படிப்பும்
முகவை மாவட்டத்தில் கோப்பை நாயக்கன்பட்டியில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி இறுதி வரை கல்வி பயின்றார். சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியங்களையும் நூல்களையும் கற்றார்.

படைப்புகள்
சிறுகதைகள், நெடுங்கதைகள், சிறுவர் கதைகள், பயண நூல்கள், இதழியல், வாழ்க்கை வரலாறு எனப் பல வகை நூல்களை அ .மா சாமி எழுதியுள்ளார். தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி என்னும் நூலை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் புதிய உரை

எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் என்னும் புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள் எழுதினார்.
எழுதிய முக்கிய நூல்கள்

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை (2014)
சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் (2013)
தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி (1987)
திராவிட இயக்க இதழ்கள்
நாம் தமிழர் இயக்கம்
வரலாறு படைத்த தினத்தந்தி
திருக்குறள் செம்பதிப்பு
தமிழ் இதழ்கள் வரலாறு
இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர்
இந்து சமய இதழ்கள்
தமிழ் இசுலாமிய இதழ்கள்
தமிழ் கிறித்தவ இதழ்கள்
19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

விருதுகள்
மூத்த இதழாளர் விருது (தமிழ் நாடு அரசு)[சான்று தேவை]
பெரியார் விருது (முதல்வர் கருணாநிதி)
சிறந்த இதழாளர் விருது (சென்னைப் பல்கலைக் கழகம்)
முனைவர் பட்டங்கள் (இரண்டு அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்)[சான்று தேவை]

அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.[ஏன்?]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.