கவிஞர் செழியன் ஆஸ்பத்திரியில் அனுமதி!- அண்மையில் மறைந்த எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' அவர்களின் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும் அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -


பதிவுகள்.காம், ஜூலை 2005 இதழ் 67!
சிறுகதை: ஒரு சாண் மனிதன்!    - செழியன் -

சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.

கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த  சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.

புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச்  செல்லவேண்டும். மிகுதி பாதிப்பேரும்  பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.

இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக்  கொண்டிருப்பார்கள்.

இதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தது. இது ஒன்றும் பெளதீக விதிகளைப் போல குழப்பமான, விளங்க முடியாத விடயம் ஒன்றும் கிடையாது. இந்தப் பாடநேரத்தின் போது மட்டும் தான்  இருபது அழகான மாணவிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து வந்தது. இத்தனைக்கும் இரு பாலாரும் சேர்ந்து படிக்கின்ற இந்துக் கல்லூரியாம் என்று இந்தக் கல்லூரிக்கு ஒரு மட்டமான பெயர்.

கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் இருக்கின்ற குறுகலான ஒரு சந்து போல இரண்டு அடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளத்துடன் இந்தக் கல்லூரியிலும் ஒரு சந்து இருக்கின்றது. புதன் கிழமைகளில் இதைக் கடந்துதான் நாம் செல்லவேண்டும்.

அந்த இடத்தில் சற்று அவதானமாக இல்லாது விட்டால் ஒரே சமயத்தில் எதிர் எதிராக வருகின்ற இரண்டுபேர் மோதிக் கொள்ளவேண்டி வரும்.

மோதிக் கொண்டது ஒரு மாணவனுடன் என்றால் அந்த இடத்தில் ஒரு குத்துச் சண்டைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மாணவியுடன் என்றால் பெச்சு மாமா என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் உப- அதிபரிடம் பத்து பிரம்படி ஆவது வாங்கிக் கொள்ளவேண்டும். அதைக் கூட சமாளித்து விடலாம். கல்லூரி விட்டதும் வாசலில் காத்திருக்கும் அவளது அண்ணனின் அடியைத் தாங்க முடியாது. அதனால் அந்த சந்தில் வரும்போது மெதுவாகவும், சற்று அவதானமாகவும் வரவேண்டியது மிக அவசியமான விடயமாக எமக்கு இருந்து வந்தது.

யுத்தப்பிரதேசத்தில் செயல்படுகின்ற கண்காணிப்புக் குழு உறுப்பினர்களைப் போல இந்த சந்தைக் கவனிப்பதற்கு என்றே விசேடமாக மாணவ முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்தக் கண்காணிப்புக் குழுவின் கண்ணுக்கே மண்ணைத் தூவுவதைப் போலத்தான் சுப்புறுவின் நடவடிக்கை இருந்தது.

அவன் தான் எங்களுடைய வகுப்பின் பின்வாங்கு உறுப்பினர்களில் மிக முக்கியமான ஆள். பின்வாங்கு உறுப்பினர்களின் தலைவன் என்றும் சொல்லலாம். ஆனால் முன்வாங்குகளிலும் அவனது செல்வாக்கு இருந்தது. அவனுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு முன்வாங்குப் பயலையும், வகுப்புத் தலைவராகக் கூட நியமிக்க முடியாது.

சுகாதார பாடத்திற்குச் செல்வதற்காக நாம் அந்த சந்தைக் கடக்கின்ற நேரம் பார்த்து, எதிர்த்திசையில் இருந்து பத்து -ஊ வகுப்பு மாணவிகள் இருபது பேர் பிரயோக கணிதத்திற்குச் செல்வதற்காக அதே சந்துக்குள் நுழைவார்கள்.

எந்த விதமான தற்பாதுகாப்பு உணர்வும் இன்றி வெகு அட்டகாசமாக அந்த சந்துக்குள் நுழைந்து அவர்கள் வரும் போது, நாம் தான் அவர்களின் அண்ணன்மாரை நினைத்துப் பயந்து சற்று ஒதுங்கிக் கொள்வது வழக்கம். அந்த இடத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்து வந்தது.

சுப்புறுவின் கையில் அனாயாசமாக இருக்கின்ற கொப்பி ஒன்று வெகு இலகுவாக யோகலட்சுமியின் கைக்கு  இடம் மாறும். அடுத்தவாரம் யோகலட்சுமி மார்போடு அணைத்துவரும் கொப்பி சுப்புறுவின் கைகளுக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் மாறிவிடும்.

இந்தக் கைமாற்றத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள் ஆனாலும் குறி பிசகாமல் கொப்பி கைமாறிக் கொண்டே இருந்தது.

நமது வகுப்பின் பின்வாங்குத் தலைவனுக்கும், பெண்கள் வகுப்பின் முன்வாங்குத் தலைவிக்கும் எப்படி உறவு வந்தது என்று பல நாட்களாக எனக்குக் குழப்பமாக இருந்தது. நித்திரை இல்லாமல் பாயில் பல நாட்கள் உருண்டு கொண்டிருந்தேன்.

பிரபஞ்சத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கின்றது. இரசாயனத்திலும் விதிகள் இருக்கின்றது. அந்த ஒழுங்கு முறையின் பிரகாரம்தான், மூலகங்கள் ஒன்று சேரமுடியும்.

ஒன்றுடன் ஒன்று சேரவே முடியாத இரண்டு மூலகங்கள் ஒன்று சேர்ந்தது என்றால், இரசாயனத்தில் எப்படி நம்பமுடியாதோ அது போல நம்பமுடியாத அதிசயமாக இது எனக்கு இருந்தது.

ஒழுங்கு முறையின் படி பார்த்தால் முன்வாங்கு உறுப்பினரான, எனது வகுப்பு மாணவ தலைவன் விக்னாவைத்தான் யோகலட்சுமி காதலித்து இருக்கவேண்டும். அது தள்ளிப்போனால் ரஞ்சித். போகட்டும் என்று அதையும் விட்டால் அடுத்து இருக்கின்றவன் நான். ஒழுங்கு முறை இப்படி இருக்க ஒரு ஆசிரியரின் மகளான யோகலட்சுமி எப்படி தறுதலையான சுப்புறுவைக் காதலிக்க முடியும்?

இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று நான் தீர்மானித்து விக்னாவிடம் சென்று கேட்டேன்.

“அடுத்த தடவை இந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமான விடயத்தைப் பற்றி நீ கதைத்தால் மிஸ்சிஸ் தவரட்ணம் டீச்சரிடம் சொல்லி விடுவேன்”  மிரட்டலோடு என்னை விரட்டி அடித்துவிட்டான். வகுப்புத் தலைவனாக அவன் வருவதற்கு ஓட்டுப் போட்டது சுத்த ‘வேஸ்ட்’.

ரஞ்சித் ஒரு அற்புதமான ஆள். இப்படி விக்னாவைப் போல முகத்தை முறித்துக் கதைக்க மாட்டான். தன்னால் இயன்ற அளவு நேரம் செலவழித்து எமது சந்தேகத்தை தீர்த்து வைக்கின்ற பேர்வழி. மறு நாள் காலை வகுப்புக்கு வந்ததும் ‘எல்லாம் விளங்கி விட்டதா? இன்னமும் ஏதாவது சந்தேகம் இருக்கின்றதா? என்று வெகு அக்கறையாகக் கேட்பான். ஆனால் அவனுடன் கதைப்பதற்கு ஏதாவது உயிரியல், இரசாயனக் கேள்விகளுடன் போகவேண்டும். பெளதீகத்தில் ஏதாவது சந்தேகம் என்று போனால் கூட ஒரு வாரத்திற்கு முகம் கொடுத்துக் கதைக்க மாட்டான்.

இந்த மாதிரி சமாசாரத்திற்கு, எனக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு அடிக்கடி ஏதாவது பிரச்சினை பண்ணிக் கொண்டிருக்கின்ற  ஸ்கொட் ரவீந்திரன் தான் சரி என்று எனக்குத் தோன்றியது.

நான் எனது சந்தேகத்தை கேட்ட மாத்திரத்தில், கடந்த ஒரு வருடமாக என்னுடன் இருந்த எல்லாப் பகையையும் ஸ்கொட் ரவீந்திரன் உடனேயே விட்டொழித்துவிட்டான். அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்கின்ற  பண்பு அவனுக்குத்தான் இருக்கின்றது.

ஸ்கொட் ரவீந்திரனுக்கு எங்கள் வகுப்பில் ஒரு செல்வாக்கும் இருந்தது. ஏதாவது பாடத்திற்கு ஆசிரியர்கள் வரவில்லை என்றால் அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் சேரும். ஸ்கொட் ரவீந்திரன் ஏதாவது கதை சொல்லத் தொடங்கிவிடுவான். இந்தக் கூட்டத்தில் பின் வாங்கு உறுப்பினர்கள் சேரமாட்டார்கள். அவர்களுக்கு வேறு பிராக்கு இருந்தது.

இப்படிக் கதை சொல்லிச் சொல்லியே இவன் களைத்துப்போய்விட்டான். கடைசியில் தனது ரசிகர்களை சமாளிக்க ‘ஒரு சாண் மனிதன்’ என்ற முடிவே இல்லாத ஒரு தொடர்கதையை ஆரம்பித்து விட்டான். உலகம்; விட்டு உலகம் மாறி வந்த ஒரு சாண் மனிதன் ஒருவனின் கதை அது. ஸ்கொட் கதை சொல்லத் தொடங்கிவிட்டால், வாயைப்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்குள் ஈ, இலையான் போனாலும் தெரியாது.

எனக்கும் ஸ்கொட் ரவீந்திரனின் கதைகள் பிடிக்கும் என்றாலும் எனக்குப் பக்கத்தில் இவன் இருக்கின்ற படியால் சில சமயம்  கூட்டம் கூடி எனக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்தது. அதனால் எப்போதும் எனக்கும் ஸ்கொட் ரவீந்திரனுக்கும் ஒரு உரசல் இருந்து கொண்டுதான் இருந்தது.

“சுப்புறு மட்டுமல்ல பின்வாங்கில் இருக்கின்ற எல்லாருக்கும், ஒரு மணி நேரத்திற்காவது ஒரு காதலி இருந்திருக்கின்றார்கள்”  ஸ்கொட் ரவீந்திரன் என்னிடம் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இரசாயனத்திற்கு ஒரு விதி, உயிரியலுக்கு இன்னோர் விதி. அது போலத்தான் காதலுக்கு இன்னோர் விதி இருக்கின்றது” என்று ஸ்கொட் ரவீந்திரன் கிசுகிசுத்தான்.

“உனக்குத் தெரியுமா அது?”

“எனக்குத் தெரியாது. ஆனால் சுப்புறுவுக்குத் தெரியும்”

“சுப்புறுவாஸ” அருவருப்பாக இருந்தது எனக்கு.

அத்தோடு அந்தக் கதை முடிந்து போனாலும் இரண்டு மூன்று தினங்களாக என் மனதில், வங்காள விரிகுடாவில் துள்ளி விழுகின்ற மீன்களைப் போல ஆசை துள்ளி விழுந்து கொண்டிருந்தது.

ஸ்கொட் ரவீந்திரன் நல்லவன். என் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மிக பக்குவமாக நடந்து கொண்டான். மகாபாரத யுத்தத்தில் அர்ச்சுனன் பலவீனப் பட்டுப் போகின்ற போது வெகு நிதானமாக கிருஸ்ணர் கீதா உபதேசம் செய்தது போல பல விதமான அறிவுரைகளை எனக்கு எடுத்துச் சொன்னான்.

“வில்வித்தையை துரோணரிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும். உயிரியலை நமது பூரணச்சந்திரன் மாஸ்டரிடம் கற்றுக் கொள்ளவேண்டும். தமிழை நவரத்தினம் பண்டிதரிடம் கற்க வேண்டும்ஸ. இந்த மாதிரியான விசயத்தை சுப்புறுவிடம் தான் கற்க வேண்டும்ஸ.”

“சரி இந்த வித்தையை சுப்புறு சொல்லித் தருவானா?” எல்லா குழப்பங்களையும், வெறுப்புகளையும் ஆசையால் ஒரே ஊதாக ஊதித் தள்ளிவிட்டுக் கேட்டேன்.

பதில் சொல்லாது சிரித்தான்.

சொன்னதைச் சொல்லிய படி செய்பவர்களும் இருக்கின்றார்கள் என்பதை நீங்களும் கொஞ்சம் நம்பத்தான்வேண்டும். ஸ்கொட் ரவீந்திரனின் பெரு முயற்சியினால், ஒரு  நேர்முகப் பரீட்சை நடாத்துவதற்கு சுப்புறு சம்மதித்தான். அது என்னை சி~;யனாக ஏற்றுக்கொள்ளலாமா? இல்லையா என்பதற்காக.

இந்த நேர்முக பரீட்சைக்காக, யாழ்ப்பாணம் ஐந்துலாமுச் சந்திக்கு அண்மையில் இருக்கின்ற ‘மொக்கன்’; கடையடியில், புதன் கிழமை இரவு ஏழு மணிக்கு நான் நின்றேன்.

‘மொக்கன்’ கடைக்கான எல்லாச் செலவுகளுக்கும், தயாராக வரும்படி ஸ்கொட் ரவீந்திரன் சொல்லியிருந்தான். இதற்காக சாமி அறையில் சேமிக்கப்பட்டிருந்த செத்தல் மிளகாய் மூட்டைகளில் இருந்து, மேலதிகமாக ஒரு கிலோ இந்த மாதம் எடுக்கவேண்டியதாகிவிட்டது.

பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு,  அந்த மாதம் மேலதிகமாய் ஒரு ரூபாய், உரும்பிராய் கற்பக விநாயகரின் உண்டியளலில் போட்டேன்.

‘மொக்கன்’ கடையில் சாப்பாடுகளை ஓடர் செய்யும் போதே சுப்புறுவின் திறமையை என்னால் எடை போடமுடிந்தது. புட்டோடு சேர்த்து சாப்பிட  மாட்டுக் குருமா, மாட்டீரல் அத்தோடு மாட்டு இரசம் என்று அவன் எடுத்த எல்லாமே மிகச் சுவையாக இருந்தது.

மாட்டு இறைச்சி சாப்பிடுவதா என்று எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது. “மாட்டு இறைச்சியும், மாட்டு ஈரலும் சாப்பிட்டால், தேகத்தில் ஒரு முறுக்கும், முகத்தில் ஒரு ஜொலிப்பும் வரும். பெட்டையளுக்கு எங்களைப் பார்க்கின்றபோது ஒரு கவர்ச்சி இருக்கும்” காஞ்சிப் பெரியவரைப்போல ஒரு பிரசங்கமே செய்துவிட்டான். சாப்பிட்டால் இனி மாட்டு இறைச்சி மட்டும்தான் என்று முடிவெடுத்தேன்.

“நீ நல்லாய் படிக்கிறனி. பிறகு என்னத்துக்கு உனக்கு இதுகள் எல்லாம்?” சாப்பிட்டு முடிந்ததும் தனது முதலாவது கேள்வியை எடுத்து விட்டான் சுப்புறு.

இந்தக் கேள்விக்கு என்ன பதிலை நான் சொல்வது என்று குழப்பமாகப் போய்விட்டது. எனக்கும் ஒரு இளம் பெண்ணின் சினேகிதம் வேண்டும் என்று பச்சையாக எப்படிச் சொல்வது?

ஆபாத்பாண்டவனாய் ஸ்கொட்ரவீந்திரன் தலையிட்டான்.

“ சுப்புறு, இது படிக்கிறது, படிக்காமல் இருக்கின்றது என்ற பிரச்சினைக்குள் அகப்படாத ஒரு கிளுகிளுப்பான விசயம். பெடியளுக்கு ஒரு பெட்டை வேண்டும். பெட்டையளுக்கு ஒரு பெடியன் வேண்டும். நீ என்ன சொல்லுகிறாய்?”

“பெடியளுக்கும், பெட்டையளுக்கும் ஒன்டுதான் வேண்டும் எண்டு சொல்லாதே. அப்படி யாரும் சொன்னாலும் நம்பாதே. பெடியளும், பெட்டையளும் இரண்டு, மூன்று என்று வைச்சிருக்கினம். இப்ப எனக்கு இருக்கிறவள் என்னுடைய ஆறாவது ஆள். அவளுக்கு நான் மூன்றாவது ஆள்.”

“பாத்தியே சுப்புறு. ஆளுக்காள் அஞ்சாறு பெட்டையள் என்று வைச்சிருக்கிறான்கள். இவன் இன்னமும், ஒரு பெட்டையோட கூட நேருக்கு நேர் நின்று கதைச்சதேயில்லை. பாவம்.” ஸ்கொட் ரவீந்திரன் எனக்காக அழுதுவடித்தான்.

“என்ன? ஒரே பெட்டைக்கு இரண்டு மூன்று காதலர்கள் இருக்கினமோ?” அதிர்ச்சியோடு நான் கேட்க, என்னை பரிதாபமாக சுப்புறு பார்த்தான்.

பதில் சொல்ல விருப்பம் இல்லாமல், தடால் என்று ஒரு மாட்டெலும்பை எடுத்து ஸ்கொட் ரவீந்திரன் உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

“நீ நிறைய கதையள் வாசிக்கிறனியோ?” சுப்புறு என்னைப்பார்த்துக் கேட்டான். எனக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

“குமுதம், ஆனந்த விகடன், கல்கி இதுகளில வாற எல்லாக் கதைகளையும் வாரா வாரம் வாசிக்கின்றனான். அதைவிட ராணி முத்து மாதம் மாதம் வாசிக்கிறனான்.”

“அதுகளில கண்ணும் கண்ணும் சந்தித்து, காதல் எல்லாம் வெடித்து கிளம்பி இருக்குமே”

எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. காதலின் தொடக்கமே இந்த கண்கள் தான். கண்கள் இரண்டும் சந்தித்து விட்டால் பிறகு என்ன? புத்தகங்கள் வாசித்தே இருக்கமாட்டான் இந்த சுப்புறு. ஆனால் அவுனுக்கும் இதுகள் தெரிந்துதான் இருக்கின்றது. பின்ன இதுகள் தெரியாமல் என்னெண்டு இவனால இந்த விசயத்தில கிங்காக வந்திருக்க முடியும்?

“இராமர் காலத்தில் இருந்தே இந்த கண்கள்தான் காதலின் ஆரம்பம்” உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னேன்.

“இவன் சரிப்பட்டு வரமாட்டான்.”

கோப்பையில் கரண்டியை எறிந்தான். கோபம் கடுப்பேற சுப்புறு, ஸ்கொட்ரவீந்திரனைப் பார்த்தான்

சத்தம் கேட்டு கல்லாவில் காசு எண்ணிக் கொண்டிருந்த முதலாளி எங்களை ஒரு முறைபார்த்து விட்டு தனது வேலையைத் தொடர்ந்தார்;.

மொக்கன் கடைக்கு செலவழித்தது சுத்தமாக ‘வேஸ்ட்;’ என்று எனக்கு அழகையே வந்துவிட்டது.

“கண்கள், காதுகள், கடிதங்கள் எல்லாம் காதலுக்கு சரியாய் வராது. அதெல்லாம் கதையளில தான்டா.”

“நிசமாய் காதலிக்க வேண்டும் எண்டால், அவளவையின்ட மார்பை நீ பார்க்க வேண்டும். அப்பத்தான்டா காதல் வரும்.”

“குட் பொயின்;ட்” சூப்பி முடித்த மாட்டுக்காலை கோப்பையில் மெல்லவைத்த படி ஸ்கொட் ரவீந்திரன் கூறினான்.

அதிர்ச்சியில் உறைந்து போய் வாய்பேச முடியாமல் இருந்தேன்.

கண்களில் இருந்து தொடங்க வேண்டிய காதலை எப்படி மார்பில் இருந்து தொடங்குவது? அசிங்கம்.

“பார்க்கிறதோட நிற்பாட்டுறதில்லை. பிறகு பிடிக்கவேண்டும்.” அடுத்த குண்டை எறிந்தான்.

ஒரு கிளாஸ் தண்ணீரை அப்படியே குடித்து முடித்தேன்.

“இன்னும் ஏதாவது வேணுமா?” கடைப்பையன் வந்து நின்றான். அவனது முகத்தில் ஒரு விசமம் தெரிந்தது. ஒட்டுக் கேட்டிருப்பான்.

“பில்” ஸ்கொட் கூறினான்.

“ஒரு சிகரட் பிடிக்கப் போறன்ஸ. பில்லைக் குடுத்திட்டு வாங்கோ”

சுப்புறுவின் தலை மறைந்ததும் ஸ்கொட்டைப் பார்த்தேன்.

“எல்லாமே உனக்குப் புது புது விசயமாய் இருக்குது என்ன?” கண்சிமிட்டினான்.

“சுப்புறு சொல்லுற மாதிரியெல்லாம் என்னால செய்ய ஏலாது. இது பெட்டையளிட்ட செருப்படி வாங்குறதாய் முடியும்”.

“செருப்பாலை இல்லை குடையாலைதான் அடிப்பாளவை” சுப்புறு வந்து நின்றான். நெருப்புப் பெட்டி எடுக்க வந்திருந்தான்.

“சைக்கிளில போகேக்கை எதிர்க்க நடந்து வாற பெட்டையளின்ர மார்பை அப்பிடியே ஒரு பிடி பிடிச்சுட்டு போய்கொண்டே இருக்கலாம். அடுத்த தடவை அவளைப் பார்க்கேக்கை  கண்டுபிடிக்கலாம். ஆளை அமத்தலாமா? இல்லையாவென்டு”.

“இதில ஒரு கவனம் இருக்க வேண்டும். யாராவது குடையோட வாறாளவை எண்டால் உசாராய் இருக்கவேணும்.. குடையாலை கையை முறிச்சுப் போடுவாளவை.”

ஓகோ குடைக்கு இப்படியும் ஒரு பயன்பாடு இருக்குது. இது தெரிஞ்சால் குடையளின்ர விலை ஏறிவிடும்.

தனது இடது மணிக்கட்டை தடவியபடி “பில் முப்பது ரூபாய் வருகுது” ஸ்கொட் கூறினான். எங்கயோ குடையாலை அடிவாங்கி இருக்கின்றான்.

செத்தல் மிளகாய் வித்த காசில் எழுபது ரூபாய் மிச்சம். கடையை விட்டு வெளியே வந்தோம்.

“இதே உன்ர சைக்கிள்.”

மாடு வாங்க வந்தவன், மாட்டைச் சுத்திச் சுத்திப் பார்த்த மாதிரி சைக்கிளைத் தடவிப் பார்த்தான்.

“இது என்னடா கெரியல்?”

“ஒரு சைக்கிள்தான் நிற்குது. அப்பர் சந்தைக்கு கத்தரிக்காய் மூட்டை ஏத்துறதுக்;குத்தான் பெரிய கெரியல் போட்டவர்.”

“சந்தைக்கு வாழைக்குலை கட்டிக்கொண்டு போற சைக்கிள்களில திரிஞ்சா உங்களை எவளடா பார்ப்பாளவை.”

“மட்காட் எல்லாம் ஆடுது. பு¢ரிவில் சத்தம் போடுது. நீ நாளைக்கு சைக்கிளை ஒருக்கா கழட்டிப் பூட்டக் கொடுத்திடு. பிறகு வெள்ளிக்கிழமை மத்தியானத்துக்குப் பிறகு சைக்கிளை பள்ளிக் கூடத்தில விடாதே. முன்வீட்டு வளவுக்கை நிற்பாட்டிவை.”

பெரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிடுகின்ற தளபதியைப் போல சுப்புறு தெரிந்தான்.

“உந்த கெரியலை கழட்டிவைச்சிட்டு வா. கொப்பர் காலையில தானே சந்தைக்குப் போறவர்.”

“நான் வழமையாய் சைக்கிளை பள்ளிக் கூடத்தில தான் விடுறனான்ஸ.”

“வெள்ளிக்கிழமை, நாங்கள் பள்ளிக்கூடம் முடிய பத்து நிமிசம் முந்தியே வெளிக்கிட்டுட வேண்டும்.”

“பள்ளிக் கூட கேட் பூட்டிக் கிடக்குமே.”

“ முன்வழியால இல்லை. பின் மதில் ஏறிக்குதிக்க வேண்டும். குதிப்பை தானே? சைக்கிளை முன்வீட்டில விட்டால்தான் அதை எடுத்துக் கொண்டு போகலாம்.”

“பள்ளிக் கூடம் விட்டதுமே போகலாமே?”

“கோப்பாய் கிறிஸ்டியன் கொலிச் விட்டுப் பெட்டையள் ரோட்டில வாறநேரம், நாங்கள் அங்க நிற்க வேண்டும்.”

“அதுக்கு இஞ்சை இருந்து பதினைஞ்சு நிமிசம் முந்தி வெளிக்கிட்டால் தான் சரி சுப்புறு” ஸ்கொட் கூறினான்.

“பத்துநிமிசம் போதும். இரண்டு தரம் ஊன்றி உழக்க வந்திடும்.”

அங்க அழகான பெண் ஒருத்தியை எனக்கு சுப்புறு அறிமுகம் செய்து வைக்கப்போகின்றான். எனக்கு குதியாட்டமாய் இருந்தது. எப்படி முதலில் கதையை ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியேலை. அது தெரியும் தானே என்று நினைத்து, எனக்குச் சொல்லித்தரமால் விடப்போகின்றான்.

“என்னென்டு முதலில நான் பேசவேண்டும்..?” தயங்கிய படி கேட்டேன்.

“பேச்சு ஒன்றும் கிடையாது. உனக்கு எப்படி இந்த மார்பு பிடிக்கின்றது என்று காட்டித்தாறன்.”

எனக்கு அந்த இரவிலும் வியர்த்துக் கொட்டியது.

இரவிரவாக நித்திரையில் விதம் விதமான மார்புகளும், விதம் விதமான குடைகளும் வந்து வந்து
பயமுறுத்தின.

காலையில் முதல் வேலையாக சைக்கிள் கெரியலை சாவி போட்டு கழட்டி வைத்தேன்.

“டேய் கொப்பர் நாளைக்கு காலை சந்தைக்குப் போகவேண்டுமடா.” ஆச்சி புறுபுறுத்தாள்.

“சும்மா தொண தொணக்காதையன. இரவைக்கு திரும்பவும் பூட்டலாம்.”

சைக்கிளை ஓடும் போது தெரிந்தது. கட கட என்று ஒரே சத்தம். இவ்வளவு நாளும் எனக்கு
கேட்காமல் இருந்திருக்கு.

வல்லிபுரம் கடையில் பிரேக் போட்டு நிறுத்தினேன்.

“அண்ணை சைக்கிளை ஒருக்கா கழட்டிப் பூட்;ட வேண்டும்.”

“உதில விட்டு பூட்டித் திறப்பை தந்திட்டுப்போம்.”

“பின்னேரம் எடுக்கலாமே அண்னை.”

“ பின்னேரமோ? சனிக்கிழமை வந்து பாரும்.”

“அண்ணை அவசரமாய் வேணும். காசைப்பற்றிப் பிரச்சினை இல்லை.”

வல்லிபுரத்தார் ஏற இறங்க ஒருக்காப்பார்த்தார்.

“இருபது கூட வரும். ஓ கேயோ.?”

“ஓ கே அண்ணை.”

“நாளைக்கு மத்தியானம் வாரும். ரெடியாய் இருக்கும்.”

சைக்கிளை விட்டு விட்டு பள்ளிக்கு நடந்தேன்;. இரண்டு புறம் மாணவர்களும் மாணவிகளுமாய்
நடந்து கொண்டிருந்தனர். நடப்பதும் சந்தோசமாகத்தான் இருந்தது.

ஒரு பத்து அடி தூரத்தில் வனிதா போய்க் கொண்டிருந்தாள். அவளை உரசிக் கொண்டு தாண்டுவம்
என்று இரண்டு அடி எட்டு வைத்தேன். நேரம். பார்த்து,அரச வீதியால் வந்து கொண்டிருந்த மிஸ்சிஸ்
தவரட்ணம் டீச்சர் மெயின் ரோட்டுக்குள் ஏறினார்.

அவ எப்பவும் வெகு நிதானமாகத்தான் நடந்து வருவா. நடையில் எந்த அவசரமும் கிடையாது. இன்னமும்
எத்தனை காலடி எடுத்து வைச்சால் பள்ளிக்கூட வாசலில் நிற்கலாம் என்று அவவுக்கு தெரியும்.

அங்கை இங்கை என்று எந்தப் பக்கமும் திரும்பிப்பார்க்கிற பழக்கமும் இல்லை. ஆனால் மனுசிக்கு
என்னென்ன நடக்கிறது என்று தெரியும்.

“குட் மோனிங் டீச்சர்.”

“குட் மோனிங். குட் மோனிங்.”

“என்ன சைக்கிளைக் காணேல்லை. நேற்றைக்கு டவுனுக்கு போய் வந்ததில பழுதாப்போச்சுப் போல”  ஒரு
பார்வை பார்த்தார். அது கண்களை துளைத்து அதில் உள்ளதை படிக்க முயன்றது.

“இல்லைச் டீச்சர். காத்துப் போட்டுது. ஒட்ட விட்டிருக்கிறன்.”  மனுசி எங்கயோ வழி தெருவில, சுப்புறுவோட
வைச்சு என்னைக் கண்டிட்டுது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

“வீட்டில ஒரு டொக்கிமனை விட்டுட்டன். சைக்கிள் எண்டால் நீர் எடுத்துக் கொண்டு வரலாம்.”

“ஓடிப்போய் எடுத்துக் கொண்டுவாறன் டீச்சர்.”

“மிக்க உபகாரமாய் இருக்கும். வீட்டில மகள் நிற்கிறா. இண்டைக்கு அவ கொலிச்சுக்குப் போகேல்லை.
கதவை கொஞ்சம் ஊண்டித் தட்டும். ஏதாவது கதைப்புத்தகத்தோட இருப்பாள், கேட்காது. எண்ர
மேசையில உள்ள பச்சை கலர்; அட்டை போட்டது  எண்டு சொல்லும்.”

டீச்சர் சொல்லி முடிக்க முதல் பறந்;தேன். டீச்சரின் மகளும் வடிவுதான். இராமநாதன் கொலிச்சில
படிக்கிறாள்.

மெல்லமாக கதவைத் தட்டினேன். கதவு உடனேயே திறந்தது.

டீச்சரின் அம்மாதான் வந்தார். தலை மயிர் எல்லாம் நரைத்திருந்தது. முகத்தில் இரண்டு குழி
விழுந்திருந்தது. அந்த குழிகளுக்குள் இருந்த கண்களைக் கொண்டு, என்னை ஒரு அசிங்கமான
பிராணியைப் பார்ப்பது போல பார்த்தார்.

“என்ன வேணும்?”

“இல்லைஸ. டீச்சர் தன்ர டொக்கிமன் ஒன்றை விட்டுட்டாவாம்ஸ மேசையில பச்சைக் கலர் அட்டை
போட்ட படி இருக்கும்ஸ.” நான் முடிக்கும் என் முகத்திற்கு நேரே அது நீண்டது.

“ரோட்டில விழுத்தாமல் கொண்டு போடா.”

இந்தக் கிழவிக்கு என் மேல் என்ன ஆத்திரம் என்று புரிந்து கொள்ள முயற்சி பண்ணினேன். அதற்குள்
பள்ளிக் கூடம் வந்து விட்டது.

ஆசிரியைகளின் அறையடியில் நின்று எட்டிப்பார்த்தேன்.

வாசலில் என்னைக் கண்டதும் டீச்சர் உள்ளே வரும்படி சைகைகாட்டினார்.

பவ்யமாக அந்த டொக்கிமன்டை அவர் கையில் ஒப்படைத்தேன்.

“தாங்யூ சுந்து.”

ஜப்பானியர்களின் ஸ்டைலில் தலை சாய்த்து டீச்சருக்கு மரியாதை செய்து விட்டுக் கிளம்பினேன்.

He is my favourite student .....நல்ல பிள்ளை” மிஸ்சிஸ் தவரட்னம் சொல்லியது எனக்கும்
கேட்டது.

பத்திரிகையும் கையுமாக இருந்தவர்கள், தமது கைப்பைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தவர்கள்,
தங்களுக்குள் ஏதோ வம்பளந்துகொண்டிருந்;தவர்கள் என்று எல்லா டீச்சர்மாரும் என்னை
நிமிர்ந்து பார்த்தது என் உள்ளுணர்விற்குத் தெரிந்தது.

கர்வமாக இருந்தது. வகுப்பை நோக்கிப் போனேன். சுப்புறுவும் அப்போதுதான் வகுப்புக்கு வந்து
கொண்டிருந்தான்.

“சைக்கிளை கழட்டிப் பூட்டக் கொடுத்தனியே?”

“ஓம்”

“குட். நாளைக்கு பின்னேரம் மூன்று மணிக்கு மதில் பாயிறம். மறந்து போகாதே.”

“நான் உதுகளுக்கெல்லாம் வரேல்லை.”

சுப்புறு ஆச்சரியமாக என்னைப்பார்த்தான். அண்டம் காகம் கண்ணை உருட்டி விழித்தது போல கோணலாக முகத்தை சரித்து விழித்தான். பிறகு சிரித்தான்.

“உங்களுக்கு ஒரு சாண் கதைதான்டா சரி” திரும்பியே என்னைப் பார்க்கவில்லை, போய்விட்டான்.

அதற்குப் பிறகு என்றைக்குமே என்னை திரும்பிப் பார்த்தது கிடையாது. சுப்புறு நல்லவன், யாரைப்பற்றியும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சொன்னவன் இல்லை.


பதிவுகள்.காம்,  ஆகஸ்ட் 2005 இதழ் 68.
சிறுகதை: வளைந்து போன வீரவாள்! - செழியன் -


மார்கழி மாத விடுமுறை விடவும் மாமா வந்து இறங்கவும் சரியாக இருந்தது. மார்கழி மாத விடுமுறையில் பெரிய பெரிய வசதிகள் எல்லாம் இருக்கின்றது. முப்பது நாட்களுக்கும் குறையாமல் வருகின்ற மிகப் பெரிய பள்ளிக்கூட விடுமுறை இது என்பதால் பள்ளிக்கூடம் போகாதவர்களுக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்த விடுமுறை இது.

இறுதிப் பரீட்சை முடிந்ததின் பின்னர் வருவதால் ‘புத்தகத்தை எடுத்துப் படியடா’ என்கின்;ற வன்முறைகள் எதுவுமே கிடையாது. அன்டை நாட்டுக்கு எதிரான பெரும் படையெடுப்புக்குத் தயாராவது போல, அடுத்த கட்டப் பயிர்ச்செய்கைக்காக ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் தயாராகின்ற காலகட்டம் என்பதால் ‘மிளகாய்ப் பழம் பிடுங்க வாடா’, ‘கத்தரிக்காயை கழுவிச் சாக்கில் கட்டு’  என்கின்ற சிறுவர்கள் மீதான கொடுமைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிடும்.

‘தம்பியின் கொப்பிப்பேப்பரை கிழித்து விதம் விதமாகக் கப்பல் செய்து விடுவது’, ‘முழங்காலை நனைத்துக் கொண்டு நின்று, தெருவில் ஓடி வருகின்ற வெள்ளத்தை கரிகாலன் பாணியில் அணை கட்டி வெடிவாணரின் வளவுக்குள்ளை விடுகின்றது’ போன்ற வித்தைகளைக் கற்றிருந்தால் இந்த மார்கழி மழை கூட ஒரு பெரிய பிரச்சனை கிடையாது.

ஒட்டுமொத்தமாகக் கூறுவது என்றால் இடை இடையே வந்து போகின்ற பேச்சுவார்த்தைக் காலகட்ட குதூகலம் போல மார்கழி விடுமுறை இருக்கும். இதிலே வசதி என்னவென்றால் இந்த கண்காணிப்புக் குழு போன்ற பிரச்சனை ஒன்றுமே கிடையவே கிடையாது.

வழமைபோல ஒரு பழைய சூட்கேசுடன் மாமா வந்து இறங்கினார். அதற்கு இரண்டு பூட்டு போட்டுப் பூட்டி வைத்திருப்பார்.  சூட்கேசுக்குள் முகச்சவரம் செய்வதற்கான சவர அலகு, சின்னக் கண்ணாடி மற்றும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு கால்சட்டையும் இரண்டு மூன்று சட்டைகளுடன் ஒரு கிழிந்த பெனியனும் இருக்கும். நிச்சயமாக சாரம் மற்றும் துவாய் வைத்திருக்க மாட்டார்;. இரண்டு நாளைக்கு ஒரு தடைவை நாங்கள் தான் அவற்றை அவருக்கு ‘சப்ளை’ செய்ய வேண்டும்.

இந்த சமாசாரங்களுக்கும் அப்பால் ஒரு புத்தம் புதிய கத்தி அல்லது புது மண்வெட்டி, வாள் அல்லதும் போனால் கூர்மையான ஒரு கோடாலி நிச்சயமாய் சூட்கேசுக்குள் வைத்திருப்பார். பழைய சிங்களப் பேப்பர் ஒன்றில்  மிகக் கவணமாகச் சுற்றப்பட்டு, அடிப் பெட்டிக்குள் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். யாராவது இதைப் பார்த்தால்  மாமா ஏதோ பெரிய சண்டியர் என்று நிச்சயமாக நம்புவார்கள்.

பதினாறு வயதில் அப்புவிடம் அடிவாங்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போனவர்தான் இந்த மாமா. ‘முற்றத்துக் கொடியில் காய்ந்து கொண்டிருந்த அப்புவின் கோமணத்தில் முடிந்திருந்த இருபது ரூபாயைக் களவெடுத்துக் கொண்டு ஓடிப் போய்ட்டான்’- ஆச்சி அலுக்காமல் அடிக்கடி இதைச் சொல்லுவா.

டிக்கட்டும் எடுக்காமல் இரயில் ஏறிப் போனவர் சிங்களம், இங்கிலீஸ் எல்லாம் அளவாகப் படித்து இன்றைக்குப் பெரிய ஒரு அரசாங்க உத்தியோகத்தர். இப்போ அநுராதபுரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கின்ற ஒரு சிங்களப் பகுதியில் ‘பெரும்  தெருக்கள் திணைக்களத்தில்’ ஸ்டோர் கீப்பராக வேலை செய்கிறார். 

அடிக்கடி வேலை காரண நிமிர்த்தம் அவருக்கு இட மாற்றங்கள் கிடைக்கும். விடுமுறைக்கு வந்து போகிறபோது தவறாமல் புதுக் கத்தி, கரண்டி, கோடரி என்று விதம் விதமாய்க் கொண்டு வந்து அம்மா, பெரியம்மா, சின்னம்மாவுக்கு கொடுத்து, பதிலாக உடைந்து முறிந்த பழைய சாமான்களை அள்ளிக் கொண்டு போய் கணக்குக் காட்டுவதில் ஆள் ஒரு பெரிய கிள்ளாடி. அவருடைய இந்த சேவைக்காக யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் மேலதிக உபசரிப்புகள் எப்போதும் அவருக்கு உண்டு. 

இது மட்டுமல்லாது ‘தடியன்;’, ‘எருமையன்’, ‘குத்தியன்’ என்று அப்பா, பெரியப்பா மற்றும் சின்னய்யாவை, அவர்கள் இல்லாத சமயமாகப் பார்த்து மாமா திட்டுவதைப்பற்றி மூன்று பெண்களும் கண்டு கொள்வதும் இல்லை.

மாமா வந்தால் எங்களுடைய வீட்டில் தான் தங்குவார். அந்த இரண்டு மூன்று கிழமைக்குள் மாமா நடத்துகின்ற தர்ப்பாரில் அம்மா மனம் கிழிந்து, இட்டிலி அவிக்கின்ற துணிபோல நொய்ந்து போய்விடுவாள்.

“இவருக்குத் தான் ஏதொ ஒரு பெரிய குறு நில மன்னன் என்ற நினைப்பு.” ஆத்திரத்தில் அம்மா ஒரு தடைவை வாய் விட்டுக் கூறினாலும்  இது மாமாவுக்கு கேட்டு விட்டதோ என்று பயந்து போனாள்.

நல்ல வேளை அது எனக்கு மட்டும் தான் கேட்டது. ஆனால் எனக்கு மாமாவைப் பார்க்கின்ற போதெல்லாம் குறுநில மன்னனைப் போலத் தோன்றியதே இல்லை. கல்கியின் தொடர் கதையில் வருகின்ற வீர பாண்டியனின் நினைவுதான் வரும். வீரவாளை இழந்து விட்ட பின்னரும்  கம்பீரமாகக் குரல் எழுப்பிப்  பாட்டுப் பாடிக் கொண்டு திரிகின்ற சுந்தர பாண்டியன்.

கல்கியின் கதையில் ஒரு வசதி இருக்கிறது. ஆரசன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலும் பிரச்சினை முடிந்து போவதில்லை. இந்த மணிமுடியையும், வீரவாளையும் மட்டும் எங்காவது ஒளித்து வைத்துவிட்டால் போதும். பிறகு சமயம் பார்த்து அந்த வீரவாளையும், முடியையும் யாராவது தூக்கிக் கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடித்துவிடலாம். நல்லகாலம் இந்த வசதி இப்பபோது கிடையாது. இருந்தால் யாருடைய துப்பாக்கியை யார் எடுத்துக் கொண்டு வந்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.

மாமா  வீரவாளை வெகு பவுத்திரமாக எங்கோ ஒளித்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.

எங்களுக்கும் இந்த மாமாவினால் பெரிய ஆக்கினை. ஏதோ ஆபத்து சமயத்துக்கென்று தயாராக வைத்திருப்பதைப் போல அவர் வைத்திருக்கும் ஒரே பெனியனையும் ஐட்டியையும் நானும் தம்பியும்  தோய்த்துக் கொடுக்கவேண்டும். கை படாமல் அதைத் தோய்த்து எடுத்து அலசிக் காயப்போடுவது §யுளுயு வின் புது முயற்சி போன்ற ஒரு அபூர்வமான வேலை.

இதை விட அவருடைய சாப்பாட்டுக் கோப்பை, தேத்தண்ணிக் கோப்பைகளைக் கழுவுவது, கடைக்குப் போய் அவர் சொல்லுற சாமான்கள் வாங்கிக் கொண்டு வருவது, சைக்கிளின் பின்னால் அவர் இருக்க, வேர்வை வழிய வழிய சைக்கிள் மிதிப்பது, வழியில் திடீரெனச் சைக்கிளை விட்டுக் குதித்து யாருடனாவது வம்பளக்கும் போது மிகப் பொறுமையாக காத்திருப்பது என்று பல விதமான வேலைகளும் எமக்கு இருக்கும்.

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு விடுவோம். மாமா கடைசியாய் யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகின்ற படத்துக்குக்காகவும், மலாயன் கடை வடை, தேத்தண்ணிக்காகவும் இன்னும் எத்தனை வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம்.

“மாமாவுக்கு ஏன் மாமி இல்லை” என்று மிக நீண்ட காலமாக எனக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை ஒரு நாள் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் கேட்டு விட்டேன்.

ஒரு தடைவ என்னை முறைத்துப் பார்த்தாள். “ உனக்கு என்னத்துக்கடா?” என்று முறுகல் முறுகி விட்டு “ மாமி செத்துப் போய்விட்டார்” என்று அம்மா சொல்லியதை நான் நம்பவில்லை.

அம்மாவும் பெரியம்மாவும் குசு குசுக்கின்ற போது மிகத் தந்திரமாக ஒட்டுக் கதை கேட்டுத் தம்பி தான் விசயத்தை ஒரு நாள் கூறினான். ஒட்டுக் கதைகள் கேட்டு ஆளுக்கு ஆள் பிரச்சனைகள் உண்டு பண்ணுவது, இவனுக்கு கில்லி விளையாட்டுப் போல ஒரு விளையாட்டு.

இவனைப் பார்த்தால் ஒட்டுக் கதை கேட்கின்றான் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அயன்ஸ்டீனின் ஏதோ ஒரு கொள்கையை எடுத்து பரீட்சித்துப் பார்ப்பதைப் போல பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருப்பான். கைகள் கிறு கிறுவென வேகமாக வேலை செய்யும். நெற்றியையும் கண்களையும் அடிக்கடி சுருக்கியும் விரித்தும் தன்னுடைய மூளை அந்த இடத்தில் இல்லை என்று காட்டிக் கொள்வான், சில சமயம் தன்னுடைய பாட்டில் ஏதோ புலம்புவான். காதுகளை மட்டும் தன்னுடைய இந்த வேலைகளோடு எதுவும் சம்பந்தம் இல்லாமல் தள்ளி வைத்துக் கொள்வான். அதை எத்தனை பாகையில் சரியாக சரித்து வைத்துக் கொள்வது என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த கலை.

“மாமி எப்பவோ ஓடிப்போய்;டா.”

எனக்குக் கண்ணீர் வந்தது. பாவம் மாமி எவ்வளவு பொறுமையாய் இருந்திருப்பாள். மூவேந்தர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய அறிவு குறைந்த ஒரு மூட வேந்தனைப் போல் மாமா போட்ட மிக மட்டமான அட்டகாசங்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட வாயில்லாப் பூச்சி.

அடிக்கடி மாமி கிணற்றுக் கட்டில் குந்தி இருந்து கண் கலங்குகின்ற காட்சி எனக்குள் வந்தது. அவள் கண்ணீர் கலந்த தண்ணீரைத்தான் ச+ழ இருந்த இந்த எல்லாக் குடும்பங்களுக்கும் குடித்திருக்கும். ஆனால் மாமியின் மீது எந்த ஒரு கருணையும் காட்ட மறுக்கின்றது.

“மாமி ஓடிப் போயிருக்க மாட்டா, மாமா தான் துரத்தி விட்டிருப்பார்.” நான் இப்படிச் சொன்னதையும் கேட்டு வைத்துக் கொண்டான் தம்பி. நேராக பெரிம்மா வீட்டுக்குப் போனான். போனவன் சின்னக்காவிடம் போட்டுக் கொடுத்து நல்ல பிள்ளை என்ற பட்டத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டான்.

தெருவில போன ஓணானை மடியில பிடிச்சுக் கட்டிவைச்ச மாதிரித்தான் என்னுடைய தம்பி. ஒரு மாதிரியான நிலையில் தான் தம்பியுடனான எனது வாழ்கை போய்கொண்டிருந்தது. அடிக்கடி என் காலை வாரிவிட்டு விடுவான்.

“வர வர உன்னுடைய பழக்கங்கள் சரியில்லைஸ. ஒரு இத்துனியாய் இருந்து கொண்டு பெரிய விசயங்களுக்கை தேவையில்லாம் மூக்கை நுளைக்கின்றாய். குஞ்சப்பாட்;டை சொல்லட்டேஸ” சின்னக்கா  மிரட்டினாள்.

அவள் லேசில சொல்லமாட்டாள். சொன்னால் அவள் தாற கடிதங்களைக் குடுக்க இனி வேற ஆளத்தான் அவள் பார்க்க வேண்டும்.

மாமியால் தாங்க முடியாத மாமாவின் அட்டூழியங்களை எல்லாம் என்னுடைய அம்மா என்ன வென்று தலைக்கு மேல்;; தாங்குகிறாள் என்பது எனக்கு அதிசயமாய் இல்லாவிட்டாலும், அது அற்புதங்களில் ஒன்றாக ஆவது இருக்கக் கூடியது என்று தோன்றியது.

ஒட்டுக் கதை மன்னன் இதையும் கண்டு பிடித்துச் சொல்லி விட்டான். எங்களுடைய புது வீட்டைக் கட்டி முடிக்க வட்டியே இல்லாமல் இருபது ஆயிரம் ரூபாய் மாமா கொடுத்த கதை தெரிந்த பின்னர், அம்மா மிகவும் நியாயமாய் நடப்பதாகவே எனக்குத் தோன்றியது. நீதி நியாயங்கள் தெரிந்தவள்.

மாமா இந்த முறை வரும் போது எப்படியாவது எங்களுடைய ரேடியோவைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு நானும் தம்பியும் இருந்தோம். ஆனால் அவர் வழமை போல கொண்டுவரவில்லை. எனக்கும் தம்பிக்கும் சரியான கோபம் வந்தது. அவருக்கு முன்னால் காட்டிக்கொள்ளவில்லை. அது சாத்தியமான விடயமும் இல்லை.

இந்த ரேடியோப் பிரச்சனை ஒரு நீண்ட காலப்பிரச்சனை. அப்பாவிடம் ஒரு பழைய பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. ஆறு மாதத்துக்கு ஒரு தடைவ அதற்கு மிகப் பெரிய பற்றி வாங்கிப் போடுவது கட்டுப்படி ஆகாது என்பது கூட பிரச்சனையாக இருந்ததில்லை. வாரத்துக்கு இரண்டு தடைவை மாமரத்துக்கும் புளிய மரத்துக்கும் இடையில் தொடுத்து கட்டியிருந்த ஏரியல் அறுந்து விழ விழ மறுபடியும் ஏறிக் கட்ட வேண்டும் என்பது பெரிய பிரச்சனை. ஒரு தடைவ மாமரத்தில் ஏறும் போது அப்பா சறுக்கி விழுந்தும் விட்டார்.

“இந்தக் குத்தியனுக்கு ஏன் இந்த வேலை?” என்று அம்மாவிடம் மாமா செல்லமாகத் திட்டினார். அம்மா இதுகளையெல்லாம் காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்வதில்லை.

“இந்த ரேடியோவை நான் முதியான்சேயிடம் கொடுத்து டிரான்சிஸ்டர் ரேடியோவாக மாற்றிக்கொண்டு வருகிறேன்” என்று கூறிக் கொண்டு போனவர் தான் இரண்டு வருடமாயும் திருப்பிக் கொண்டு வரவில்லை. ஒவ்வொரு முறையும் வரும் போது அடுத்த முறை கொண்டுவருவதாக சளைக்காமல் கூறுவார்.

‘கழுவிக் காயப் போடும் போது மாமாவின் கோவணத்துக்குள் காஞ்சோண்டி இலையைப் பூசி விடவேண்டும்.’ தம்பி கண்ணி வெடி வைப்பதற்குத் திட்டம் போட்டது போல திட்டம் போட்டான்.

இவனுடன் சேர்ந்து திட்டம் போடுவது காஞ்சோண்டி இலையை நானே பூசிக் கொள்வதை விட மோசமான நிலைமைக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும். இது எனக்குத் தெரியும். அதனால் அவனுடைய திட்டம் பிடித்திருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டேன்.

‘சமாதான ரீதியான ஏதாவது திட்டம் போட்டால் தான் சரி’ என்று நான் கூறியதை தம்பி சற்று சந்தேகத்துடனேயே பார்த்தான்.

சற்றும் எதிர்பாராமல் அம்மாவே ஒரு திட்டம் போட்டுக் கொடுத்தாள். “டேய் நீங்கள் இரண்டு பேரும் மாமா போகிற போது அவரோடையே போய், வரும் போது ரேடியோவையும் எடுத்துக் கொண்டு, மாமா வாங்கித் தாற அரிசியையும் கொண்டு வாங்கோவன்டா.”

மாமாவுக்கும் இந்தத் திடீர்த் திட்டம் பிடித்துக் கொண்டது ஏன் என்று பிறகு தான் எனக்கும் தம்பிக்கும் தெரிய வந்தது. அவர் சில மூட்டைகளை அநுராதபுரத்திற்கு கடத்தல் செய்ய என்னையும் தம்பியையும் நம்பி முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்.

புது வருடம் முடிந்ததும் மாமாவின் விடுமுறையும் முடிவுக்கு வந்து விட்டது.

வெங்காயம், செத்தல் மிளகாய், பாணிபோட்ட போயிலை சகிதம் இணுவில் ஸ்டேசனுக்குச் சென்று ரெயின் எடுப்பதற்காக நாங்கள் வெளிக்கிட்டோம்.

வேலிக்குப் பின்னால நின்று சர சர என்று சத்தம். பெரியம்மா அவரமாய் ஆனால் பதுங்கிப் பதுங்கி வந்தாள்.

பெரியம்மா முன் வாசல் வழியால் எங்கட வீட்டுக்கு வந்ததை ஒரு நாளும் நான் கண்டதேயில்லை. எப்பவும் அவள் பொழுது விழுந்ததுக்கும் பிறகு: வேலியைப் பொத்துக் கொண்டு, கிணத்தடிப் பக்கமாய் நின்று, திடீரென்று ஒரு மரத்துக்குப் பின்னாலை அல்லது ஆட்டுக் கொட்டிலுக்குள் பதுங்கி இருந்து அதிரடியாய் வந்து தரிசனம் தருவாள். அவளுக்கு என்ன பாதுகாப்புப் பிரச்சனை என்று கரிசனையாய் கேட்டறிய யாருமே யோசித்ததில்லை.

கையில் கட்டுக் கிளுவம் இலையோட வந்த பெரியம்மா தம்பியின்ட காதுக்குள்ளை சொன்னாள் “ஆளுக்கொரு மூட்டையோடை வந்திடுங்கோடா.”

அநுராதபுரம் ஸ்டேசனில இறங்கி  மாமாவின் குவாட்டசுக்கு போவதற்கான பஸ்சில் ஏறும் வரை பட்டவேதனைகளை சொல்ல முடியாது. என் தம்பிக்கு கை வீங்கியே விட்டது. இரகசியமாய் அழுதிருப்பான் போலவும் தோன்றியது.

குவாட்டசுக்கு அருகிலேயே பஸ் நின்றது. இறங்கியதுமே மாமாவை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல லொக்கு பண்டா எங்களடிக்கு வந்து விட்டான். அவன் தான் அந்தக் குவாட்டசுக்கு காவல்காரன். இவனுக்கு காவலுக்கு இரண்டுபேரைப் போட வேண்டும் போல எனக்கிருந்தது.

“ஐயா” என்று சிங்களத்தில் பணிவாக அழைத்தவன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை மாமாவுக்கு தெரிவித்தான். மாமாவும் பதிலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

லொக்கு பண்டா எங்களை ஆச்சரியமாகப் பார்த்தான். எங்களை மாமா சிங்களத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

“ஓ..” என்று இழுத்தவன் “ஸ்கூல் எல்லாம் லீவு தானே இப்ப” என்று தமிழில் எங்களைப்பார்த்துக் கூறினான்.

மூட்டைகளை வெகு அனாயாசமாகத் தூக்கிக் கொண்டு வந்து இறக்கி வைத்தான். மாமாவின் இருப்பிடம் எனக்கு மிக்க அசெளகரியமாக இருந்தது.

‘எங்களுடைய ஆட்டுக் கொட்டில் இதைவிடப் பெரிசு’  தம்பி குசு குசுத்தான். அவனுடைய காலில் நான் ஒரு மிதிமிதிக்க அமைதியாகி விட்டான்.

லொக்கு பண்டா காலையில் வருவதாகக் கூறி புறப்படும் போது “பெரிய மாத்தையா வந்து விட்டாரா?” என்று  மாமா கேட்டார்.

“மாலையிலேயே வந்து விட்டார்” என்று கூறியபடி இருட்டுக்குள் போய் மறைந்துவிட்டான்.

“மாமா ரேடியோ எங்கே?”

லொக்கு பண்டா போனதுமே ஆவலாய் கேட்டேன். அதை ஒரு தடவையாவது பார்த்துவிட்டால் பட்ட கஸ்டங்கள் நீங்கி விடும் போல இருந்தது.

“இப்ப படுங்கோடா. அதையெல்லாம் காலையில பார்க்கலாம்” என்று கடுமையாகக் கூறினார்.

ஒரே ஒரு மரக்கட்டில் இருந்த அந்த இடத்தில் எப்படி படுப்பது என்று தீவிரமாகத் தம்பி யோசித்தான். மாஐ¢சியன் சர்க்காரைப் போல மாமா ஒரு இடத்தில் கைவைத்து இரண்டு சாக்குகளை எடுத்து  தந்தார்.

“இதிலை படுங்கோ. சாராத்தாலை போர்த்துக் கொள்ளுங்கோ”

எனக்கும் தம்பிக்கும் நித்திரை வரவில்லை. மாமாவின் குறட்டை சத்தம் கேட்டதும் தம்பி துள்ளி எழுந்தான். அந்த இருட்டுக்குள் பரபரப்பாக எதையோ தேடினான்.

கள்ள நாய். இவன் மாமாவின் காசை ஏதும் களவெடுக்கின்றான் போல. எனக்கு ஆத்திரம் வந்தது. ‘மாமாவை எழுப்பிச் சொல்லுவமோ’ என்று நான் நினைக்க, மறுபடியும் என்னருகில் வந்து படுத்தான்.

மெல்ல என்னை சுரண்டினான். நான் ஆத்திரத்தில் பேசாமலே இருந்தேன்.

“ரேடியோ இருக்கிறது” என்று கூறினான். நான் திரும்பவே இல்லை. ஆனால் மனதுக்கு சந்தோசமாக இருந்தது. நின்மதியாக நித்திரை வந்தது.

பரபரப்பாக காலையில் எழுந்த மாமா “இரண்டுபேரும் வெளிக்கிடுங்கோ” என்று அவசரப்படுத்தினார். எங்கு எதற்;கு என்ற எந்த விபரமும் மாமா வழமையாக கூறுவதில்லை.

பாணிபோட்ட போயிலை மூட்டையில் இருந்து நல்லதாய் இரண்டு போயிலை கட்டுகளைத் தேடி எடுத்துக் கொண்டார். யாரையோ முக்கியமாக சந்திக்கப்போகின்றார் என்று நினைத்தேன்.

அந்த குவாட்டசை விட்டு வெளியேறி இன்னொரு குச்சு ஒழுங்கை வழியாக சிறிது தூரம் நடந்தோம். ஒரு சிறு கல் வீட்டுக்கு முன் நின்றார். எங்கள் இருவரையும் பார்த்தார்.

“ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாய் இருக்கவேண்டும்” என்று மிரட்டல் தொனியில் கூறினார். இப்படியான சந்தர்ப்பங்களில் என்னுடைய தலை எனக்கும் தெரியாமல் தானாகவே ஆடிவிடும். தம்பி யோசித்துத் தான் ஆட்டுவான்.

“பின்னாலேயே வாங்கோ”

மூங்கிலால் செய்த படலையை திறந்து கொண்டு மாமா அந்த வீட்டு வளவுக்குள் காலடி வைத்தார். எனக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. சிங்கள மாமியைத் தான் சந்திக்கப் போகின்றோமோ?

வீட்டுக் கதவைத்தட்ட ஒரு பெண்மணி கதவைத்திறந்தாள். அழகான பெண்மணிதான். மாமியா ஏற்பதற்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் தயார்.

“நோனா”  சிங்களத்தில் மாமா கூறினார்.

“ஓ! யாப்பண இரிந்து வந்ததா?........ உல்லுக்கு வந்தி கொஞ்சம் இரிங்க.”

அந்தப் பெண் உள்ளே சென்று விட்டார். நானும் தம்பியும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொண்டோம். தம்பியின் முகத்தில்  பெரும் விசமம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

மாமா போயிலையை இரண்டு கைகளாலும் ஏந்தி ஒரு வீரனைப்போல தயாராக நின்று கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடத்தில் யாரோ வரும் காலடிச்;சத்தம் கேட்க மாமா பரபரப்பாகினார்.

வெறும் மேலுடன், கண்ணாடியும் சாரமும் அணிந்த ஒரு மனிதர் வர தடாலென்று மாமா சரிந்து விழுந்தார்.

மாமாவுக்கு என்ன?  நான் திடுக்கிட்டேன்.

“மாத்தையா! புத்தாண்டு வாழ்த்துக்கள்”  மாமாவின் குரல் பாதாளத்தில் இருந்து கரகரப்பாக கேட்டது.

“ஓ. கே. நட்ராஐ¡”  மாத்தையா கட்டைக் குரலில் கூறினார். அவர் தான் மாமாவின் மேலதிகாரி.

ஏதோ ஒரு வளையில் மாட்டிக் கொண்ட கரடியைப் போல், மிக மெல்லமாக, கஸ்டப்பட்டு எழுந்த மாமா, சளைக்காமல் தனது முதுகை வளைத்து குனிந்து மாத்தையாவிடம் பாணிப் போயிலையை நீட்டினார்.

பாணிப்போயிலையைக் கண்டதும் மாத்தையாவின் விரிந்த முகம் அகலப்பக்கமாக இன்னமும் விரிந்தது.

தம்பியைப் பார்த்தேன். காணக் கூடாததைக் கண்டதைப் போல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். மறுபடி அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து, இரயில் வண்டி புறப்படும் வரை எதைப்பற்றியுமே அவன் மூச்சே திறக்கவில்லை.

இப்போதெல்லாம் மாமாவைப் பார்க்கின்ற போது எனக்கு பாண்டியனின் நினை வருவதேயில்லை. வளைந்து போன ஒரு வாளின் நினைவு மட்டும் மறுபடி மறுபடி வந்து தொலைக்கின்றது.

[ஜேர்மன் ‘பூவரசு’ இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது]


பதிவுகள்.காம், மார்ச் 2006 இதழ் 75.
ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! தமிழையும், தமிழ் தேசியத்தையும் அழிப்பதற்கு திட்டமா? - செழியன் -


1
தமிழ் பெற்றோர்களே! இனவெறி அரசின் மிருகத்தனமான செயலால் நமது தாயக மண்ணில் வாழ முடியாமல் வெளியேறி கனடாவில் தஞ்சம் அடைந்தவர்களே கனடாவாழ் தமிழ் பெற்றோர்கள். வேற்று மொழி, மாறுபட்ட கலாச்சாரம். சமூக பொருளாதர சிக்கல்கள். அது மட்டுமா? கால நிலை கூட இவர்களது உடல் நிலைக்கு ஒத்துழைப்பதில்லை. இத்தகைய இடர்களுக்கும் மத்தியில் வாழ்வதற்காக போராடுகின்றனர். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் தமது குழந்தைகள் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கனடாவில் வாழும் பெரும்பான்மையான பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதில் சந்தேகத்து இடமேயில்லை.

நமது குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக உரிய ஏற்பாடுகளை ரொறொன்ரோ கல்விச்சபையுடன் இணைந்து செய்தவர்களை- அவர்கள் யாராய் இருந்தாலும் சரி நாம் பாராட்டுவதுடன் நன்றியும் சொல்ல வேண்டும். அவர்களுக்கு மட்டுமல்ல அ, ஆ, இஸ என்று நமது குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தளித்தவர்களான நமது தமிழ் நல்லாசிரியர்களுக்கும் நாம் தலை வணங்கத்தான் வேண்டும்.

நமக்கு கல்வி ஊட்டிய ஆசியர்களை வாழ் நாள் முழுதும் மதிக்கும் கலாச்சாரம் தமிழர்களிடம் உள்ளது. எத்தனையோ துயரங்களுக்கு மத்தியில் தமிழை நமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் நமது நல்லாசிரியர்களை ‘மடத்’ தமிழ் ஆசிரியர்கள் என்று விழித்து கட்டுரை எழுதும் நபரின் மனநிலையை என்ன என்று சொல்வது. இது இவ்வாறு இருக்க  ‘தமிழேந்தி’ என்ற பெயரில் எழுதியவர் என்ன எழுதியுள்ளார்?.

“ரொறொன்ரோ கல்விச்சபையின் தமிழ் படிப்பிக்கும் சில ஆசிரியர்களோடு இன்று கனடாவில் ‘தமிழ் படிக்கத் தேவையில்லை’ என ஒப்பாரி வைக்கும் தமிழ் தெரியாத ‘கலாநிதிகளும்’இ ‘பண்டிதர்களும்’, ‘வித்துவான்களும்’, ‘கவிஞர்களும்’ ‘அறிஞர்களும்’, ‘பேரறிஞர்களும்’ தமிழ் அறிவைப் பெருக்க தமிழ் மழலையர் பள்ளியில் தமிழ் படித்தால் தமிழ் மொழி எதிர்காலத்தில் சிறப்புப் பெரும்” என்று கூறியுள்ளார். (கவனிக்கவும் இவை எல்லாமே பன்மையில் சொல்லப்பட்டுள்ளன - செழியன்)

நான் இக் கட்டுரையை வாசித்த உடன் ‘தமிழேந்தி’ என்ற பெயரில் எழுதியவரிடம் அவருடைய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு (கட்டுரையுடன் கைத் தொலைபேசி இலக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது) “எந்தக் கலாநிதி தமிழ் படிக்கத் தேவையில்லை என்று கூறினார்?” என்று கேட்டேன்.

“என்னுடைய நண்பர் ஒருவர் கலாநிதி. அவர்தான் அப்படிக் கூறினார்” என்று சொன்னார்.

நீங்கள் கூறுவதை நம்ப முடியவில்லை. தமிழ் படிக்கத் தேவையில்லை என்று சொல்லும் அவருடைய பெயரைக் கூறுங்கள் என்று கேட்டேன். அவர் யார் என்று சொல்ல விரும்பவில்லை என்று ‘தமிழேந்தி’ கூறிவிட்டார். அவரிடம் உடனடியாகச் சொன்னேன் “உங்கள் நண்பரான கலாநிதி நமது குழந்தைகள் தமிழ் படிக்கக் கூடாது என்று சொல்கின்றார் என்று கூறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கலாநிதிகளும் என்று பன்மையில் எழுதி உள்ளீர்கள். ஒருவர் சொன்னால் ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சொன்னால்தான் அது பன்மை.”

“ஐயா ‘தமிழேந்தி’ உங்களுக்கு வாய்த்த ஒரு கலாநிதி நண்பர் தமிழ் படிக்கக் கூடாது என்று சொல்லி உள்ளார் என்று சொல்லுகின்றீர்கள். (முடியுமானால் நிரூபிக்கவும்). ஆனால் உங்களது கட்டுரையில் கலாநிதிகள் என்று பன்மையில் எழுதி உள்ளீர்கள்.”

“யாராவது ஒருவர் உண்மையில் சொல்லி இருந்தால் கூட அதை பன்மையாக்கி கலாநிதிகள் சொல்லுகின்றார்கள், பண்டிதர்கள் சொல்லுகின்றார்கள், வித்துவான்களும், கவிஞர்களும் அறிஞர்களும், பேரறிஞர்களும் சொல்லுகின்றார்கள் என்று பொய்யாக ஏதோ ஒரு சமூகமே சொல்வது போல் பன்மையாக்கித் திரித்துக் கூறுவது  அப்பட்டமான பொய்.

நான் உங்களுக்கு சவால் விடுகின்றேன். உங்களால் சொல்லமுடியுமா? எந்தெந்தக் கவிஞர்கள், கலாநிதிகள், பண்டிதர்கள், அறிஞர்கள், பேரறிஞர்கள், வித்துவான்கள், தமிழ் ஆசிரியர்கள் நமது தமிழ் குழந்தைகள் தமிழ் படிக்கக் கூடாது என்று சொல்கின்றனர் என்று.

2
இது மட்டுமல்ல “தமிழ் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் கள்ளச் சான்றிதழ்களை ஒப்புவித்து ஆசிரியத் தொழிலைபெற்றுக்கொண்டு எமது தாய் மொழியாம் தமிழை அழித்துக் கொண்டிருப்பவர்கள்” என்றும் “ ரொறொன்ரோ கல்விச் சபையில் தமிழ்க்கல்வி கற்பிக்கத் தெரிவானவர்களில் பலர் இலங்கையில் கல்விப் பொதுத்தராதரத் தேர்வில் சாதாரண மட்டத்தில் தேறாதவர்களே. இதை கல்விச் சபைத் தமிழ் ஆசிரியர்கள் பலரின் சான்றிதழ்களைப் படி எடுத்து கிழமை இதழ்களில் வெளியிடுவதலர் உறுதிப்படுத்தலாம்” என்றும் ‘தமிழேந்தி’ உறுதியாகக் கூறியுள்ளார்.

அப்படியானால் ‘தமிழேந்திக்கு’ நிறைய உண்மைகள் தெரிந்திருந்தும் அதை இதுவரை மறைத்து வந்திருக்கின்றார். கள்ளச் சான்றிதழ்களை ஒப்புவித்து ஆசிரியத் தொழிலைபெற்றுக்கொண்டு செயல்படுகின்றவர்களைப் பற்றி உடன் ரொறொன்ரோ கல்விச்சபையிடம் ‘தமிழேந்தி’ முறையிட்டு இருக்கவேண்டும். ஏன் அதை செய்யவில்லை?

‘தமிழேந்தி’ கூறுவது உண்மையாயின் இத்தகையவர்கள்தான் நமது குழந்தைகளுக்கு கற்பிக்க என்று மிகப்  பிழையான தமிழ் பாடப்புத்தகத்தை எழுதி இருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குள் எழுகின்றது.

நமது குழந்தைகள் நல்ல தமிழ் கற்க வேண்டும் என்று கூறுகின்ற ‘தமிழேந்தி’ கள்ளச் சான்றிதழ்கள் ஒப்புவித்து தமிழ் ஆசிரியராக தொழில் பெற்றுக் கொண்டவர்களின் விபரம் தெரிந்தும் அதை இதுவரை மறைத்து வந்துள்ளார்.

3

தமிழ் மொழியில் வேற்று மொழி கலந்திருக்கின்றது என்றது ஒரு புதிய கண்டுபிடிப்பல்ல. ஏதோ இன்றைக்குத் தான் இதைக் கண்டுபிடித்தது போல் கனடாவில் இருந்து கொண்டு இரண்டு பேர் அலறுகின்றனர். நான் தமிழ் கற்கும் போதே எனது தமிழ் ஆசிரியர் வழக்கில் உள்ள தமிழ் சொற்களை கற்பிக்கின்ற அதே சமயம் இது எந்த மொழியில் இருந்து வந்த சொல் என்றும் தன்னால் இயன்ற மட்டும் கற்பித்துள்ளார்.

கக்கூசு,  அலுமாரி, கத்தி, லாச்சி, பாண், அலவாங்குஸ. என்று பல சொற்கள் போர்த்திகேசிய மொழியில் இருந்து வந்த சொற்கள் என்று அந்தத் தமிழ் ஆசிரியர் சொல்லித்தந்திருக்கின்றார். அவர் ஒன்றும் ‘மாமூலனும்’  ‘தமிழேந்தியும்’  விரும்புகின்றது போல் தமிழ் பண்டிதரோ, தமிழ் ஆராட்சியாளனுமோ  இல்லை. கல்விப் பொதுத் தராத பரீட்சையில் சித்தி எய்தி 5ம் வகுப்பு வரை பாடம் படிபித்தவர். ஒரு ஏழை வாத்தியார்;. தமிழ் மட்டுமல்ல கணிதம், சூழல், புவியியல், சமயம் என்று எல்லா பாடங்களிலும் திறமையாக கல்வி கற்பித்தவர்.

க.பொ.தா சாதாரணப் பரீட்சையில் சித்தி எய்தியவர்கள் தமிழ் படிக்கத் தகுதி அற்றவர்கள் என்ற இவர்களது வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்னமும் சொல்லப் போனால் இலங்கையில் குறிப்பிட்ட வகுப்புகள் வரை தமிழ், கணிதம், விஞ்ஞானம், சூழல், சுகாதாரம், சமயம், புவியியல்ஸ. என்று பாடங்கள் சொல்லிக் கொடுத்தவர்கள் க.பொ.தா சாதாரண வகுப்பு படித்தவர்களே. அவர்களிடம் கல்வி பயின்றவர்கள் சிறந்த மாணவர்களாக இருந்ததுடன் பல்கலைக்கழகம் வரை சென்று கல்வி பயின்று இன்று சமூகத்தில் தமது துறைசார்ந்து திறமையானவர்களாக உள்ளனர்.

4

தமிழில் இன்று எத்தனையோ வேற்று மொழி சொற்கள் கலந்துள்ளன. இதை எமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த வேற்று மொழிகளுக்கு பதிலாக நமது தமிழ் சொல்லை அறிமுகம் செய்வது சரியானதா? அதில் என்ன சந்தேகம்.  அப்படி செய்தாக வேண்டும் என்பதுதான் எனது எண்ணமும்.

ஆனால் அது ஒரு தனிநபர் எதாட்சகரமாக செய்கின்ற காரியம் இல்லை. அப்படி தனிநபர் அதை செய்யவும் அனுமதிக்கக் கூடாது. ஒரு தனிநபருக்கு என்ன தகுதி? என்ன அதிகாரம் உள்ளது. தான் விரும்பிய படி தமிழ் எழுத்துக்களை மாற்றும் படி ஆணையிட? இந்த தனிநபர் சொல்லுவது சரிதான் என்று எப்படி நாம் ஏற்றுக்கொள்வது.

உதாரணத்துக்கு சிலவற்றைப்பார்க்கலாம்.

சமாதானம் என்ற சொல்லை வேற்று மொழி என்று குறிப்பிடுகின்ற ‘தமிழேந்தி’ அதற்குரிய சரியான தமிழ் சொல் அமைதி என்று எழுதியுள்ளார். இது பிழையானது.

சமாதானம் என்பதன் அர்த்தமும் அமைதி என்பதன் அர்த்தமும் வெவ்வாறானவை. சமாதானம் என்பது Peace என்றும், அமைதி என்பது Silence  அல்லது Calm என்ற அர்த்ததிலுமே உள்ளது.

ஸ்ரீலங்கா என்ற நாட்டின் பெயர் தமிழ் இல்லை என்பதால் அந்நாட்டின் பெயரை இலங்கை என்று எழுதும் படியும் ‘தமிழேந்தி’ கூறுகின்றார். [ ஸ்ரீலங்கா என்னும் பெயர் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஸ்ரீமா அம்மையாரின் ஆட்சியின்போது இலங்கை பெளத்த குடியராசானபோது இலங்கை என்னும் பெயருக்காக மாற்றீடு செய்யப்பட்ட பெயர் என்னும் காரணத்தினால் அதனைப் புறக்கணிக்க வேண்டுமெனக் கூறியிருந்தால் ஏற்றுக் கொள்ளத்தக்கது.-ஆசிரியர்-]

கனடா என்ற நாட்டினுடைய பெயரை இது தமிழ் பெயர் இல்லையென்று சொல்லிவிட்டு தமிழருக்காக இன்னொரு பெயர் வைக்க முடியாது. நாடுகள், ஆறுகள், மலைகள், மனிதர்களுடைய பெயர்கள், பத்திரிகைகள் என பலவற்றுக்கு மொழிபெயர்ப்பு கிடையாது. அவற்றை மொழிபெயர்ப்பு செய்வதும் தவறு.  இந்த அடிப்படை அறிவற்றவர்களுடைய கையில் தமிழை சீர்திருத்தும் பணியை தமிழ் மக்கள் வழங்கவில்லை.

(யாழ்ப்பாணத்தை பிரித்தானியர்கள் தமது மொழி மயப்படுத்தி Jaffna  என்று அழைத்ததையும், திருகோணமலையை Trinco என்று அழைத்ததையும் நினைக்க எமக்கு கோபம் வருகின்றது. ஆனால் நாம் மற்ற நாடுகளின் பெயர்களை தமிழ் இல்லை என்று கூறுவது என்ன நியாயம்?)

ரொறொன்ரோ கல்விச்சபை சார்பாக “தவறான- சரியான பதங்கள் என்று தொகுக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் அலுமாரி தவறான சொல் என்று  குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதற்குரிய சரியான பதம் பெட்டகம் என்றும் கூறப்படுகின்றது.

அலுமாரியை, பெட்டகம் என்று கூறுவது  தவறு என்று க.க. பாலசுந்தரம் எழுதியுள்ளார். பெட்டகம் என்பது நமது இடுப்பளவு உயரமே அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ இருக்கலாம்.  ஏறத்தாள 5அடி நீளமும், 2.5 அகலமும் கொண்டது. எனது பாட்டி வீட்டில் இருந்தது. அரிசி, குரக்கன், காணி உறுதி என்று பல வகையான பொருட்களையும் இந்தப் பெட்டகத்தில் தான் வைத்திருந்தனர். நாலுபேர் என்ன ஆறு பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாது. இந்த பெட்டகமும் ‘அலுமாரி’ என்று அழைக்கப்படும் பொருளும் ஒன்றல்ல. அவை வெவ்வேறானவை.

ரொறொன்ரோ கல்விச்சபையின் தமிழ் பாலர் வகுப்பு கீழ் பிரிவு பாடநூலில் கத்தரிக்காயின் படத்தைப் போட்டு அதன் கீழ் கத்தரி என்று பெயரிட்டுள்ளனர்.

கத்தரி என்று சொன்னால் அது கத்தரிக் கன்றாக இருக்கலாம், கத்தரிச் செடியாக இருக்கலாம், அல்லது கத்தரிக் காயாகவும் இருக்கலாம். கத்தரிக்காயை கத்தரி என்று சொல்வது தவறு.

பிராணி என்ற சொல்லுக்கு உயிரி என்பதுதான் சரியான சொல் என்றும் (உயிர் உள்ளவை எல்லாமே பிராணியாக மாட்டாது. பற்றீரியாவுக்கு உயிர் உள்ளது. ஆனால் அது ஒரு பிராணி அல்ல- மொழி பெயர்ப்பதற்கு தமிழ் அறிவு மட்டும் காணாது. விஞ்ஞான அறிவு உள்ளவர்களும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும்-செழியன்), New Year’s day  என்பதை பொதுப் புத்தாண்டு நாள் என்றும் (புத்தாண்டு நாள் என்பதே சரி), Valentine’s day என்பதை வலன்ரைன் நாள் என்றும் (காதலர் தினம் என்;பதே சரியானது), Easter தினத்தை ஈசுரர் என்றும் ( உயிர்ப்பு நாள் என்பது சரியானது), Ramadan நாளை  இறமழான் என்றும் (நோன்புப் பெருநாள்- சரியான சொல்) ஸ. தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.

இவ்வாறு இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று ஸ பார்த்துக் கொண்டு போனால் ஏராளமான பிழைகள் உள்ளன. இப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றி ஆசிரியர் மகாலிங்கம் எழுதிய கட்டுரையைப்  படித்தீர்கள் என்றால் புரியும். இவ்வாறான பலவகையான பிழைகளைக் கொண்ட ரொறொன்ரோ கல்விச்சபையின் தமிழ் புத்தகங்களைப் படித்து  நமது குழந்தைகள் நல்ல தமிழ் படிக்கப் போகின்றனராம் என்று சிலர் வக்காலாத்து வாங்குகின்றனர். அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபமாக உள்ளது.

தமிழில் கலந்துள்ள வேற்று மொழிச் சொற்களை நீக்கி அதற்கு பதிலா உரிய தமிழ் சொற்களை அறிமுகப்படுத்த வேண்டுமாயின் அதற்கு தமிழ் அறிஞர்களின் குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும். அந்த அறிஞர்கள் தகுதியானவர்களாகவும், அங்கீகாரத்திற்கு உரியவர்களாகவும், புலமையானவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுடைய தீர்மானத்தை நமது முழுச் சமூகமும் பின்பற்ற வேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழை தமது மூன்றாவது மொழியாக ஆர்வத்துடன் கற்ற வரும் குழந்தைகளுக்கு இதை கற்பிப்பதற்கு முன்பாக-  தமிழ் அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பத்திரிகைகள், தமிழ் வானொலிகள், தமிழ் பதிப்பாளர்கள், தமிழ் பல்கலைக் கழகங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். அதன் பின்னர் தமது மூன்றாம் மொழியாக தமிழைக் கற்கின்ற கனடாத் தமிழ் குழந்தைகளுக்கு இதை நாம் அறிமுகம் செய்யலாம்.

தமது பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைத்தவர்கள் மட்டும் தான் தமிழ் மொழி பற்றிக் கதைக்க முடியும். அப்படி தமது பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைக்காதவர்கள் தமிழ் பற்றி கதைக்காதீர்கள் என்று முட்டாள் தனமாக எழுதியுள்ளார்கள். தமிழர்களின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனின் பெயர் தமிழ் பெயர் இல்லையே. அதற்காக தந்தை செல்வா தமிழர் பிரச்சனையில் கதைத்திருக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? சொன்னால் அது சரியாக இருந்திருக்குமா? தந்தை செல்வா தானே தமிழ் மக்களுக்காக சாத்வீகமாக போராடினார். அவர் தானே தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கதைத்தபடியால் தானே  இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அமைப்புகள் உருவாகின. ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.