செப்தெம்பர் 15, 2013  / ஊடக அறிக்கை
தேர்தல் முடிவு தமிழ்மக்கள்  அபிவிருத்தி அல்ல தங்கள் மண்ணில்   தன்மானத்தோடு வாழ்வதையே விரும்புகிறார்கள் என்பதை  மகிந்த இராஜபக்சேக்கும்  உலகத்துக்கும் எடுத்துச் சொல்ல  வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி இழுத்தடித்து வந்த வட மாகாண சபைத் தேர்தலை வேறு வழியின்றி மகிந்த இராஜபக்சே நடத்துகிறார். இதன் மூலம் தான் சனநாயகத்தை நடைமுறைப் படுத்துவதாகச்  சொன்னாலும் அனைத்துலகச் சமூகத்தின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தத்தின் கீழ்  மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள அதிகாரப் பகிர்வு மிகச் சொற்பமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தமிழர்களது கையில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.  அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இத் தேர்தலில் போட்டியிடுகிறது. 13 ஆவது சட்ட திருத்தம் இனச் சிக்கலுக்கு தீர்வாக அமையமாட்டாது என்பதில் ததேகூ  தெளிவாக இருக்கிறது.

ததேகூ இன் கையில் இருக்கின்ற  வட மாகாண சபையானது  தமிழர் தமது  அரசியல், பொருளியல், பண்பாடு, தனித்துவம்  போன்றவற்றை  நிலைநாட்டுவதற்கு ஓரளவிற்காவது  உதவும் என எண்ணுகிறோம்.  ததேகூ இத் தேர்தலில் பங்கு பற்றாது விட்டால் தமிழர்களது அடிப்படை உரிமைகளை மறுக்கும் மகிந்த இராஜபக்சேயின் கட்சி மற்றும் அதன் தமிழ்க் கைகூலிகளின் கைக்கு  மாகாண சபை நிருவாகம் பறிபோய் விடும். 

ததேகூ முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர்  சீ.வி. விக்னேஸ்வரனை தனது முதன்மை வேட்பாளராக நிறுத்தியிருப்பது மகிந்த இராஜபக்சே உட்பட தென்னிலங்கை பேரினவாதிகளின் கோபத்தைக் கிளறியுள்ளது. ஆனால் பன்னாட்டு சமூகத்தின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்விமான், சட்டம் படித்தவர், பண்பாளர், இன, மொழி, சமூகப் பற்றாளர் அரசியலுக்கு வந்திருப்பது நல்ல சகுனம் ஆகும்.

தேர்தல் நெருங்க நெருங்க அரசின் முழு வளமும் ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (அமசுகூ)  வேட்பாளர்களது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சிங்கள இராணுவமும் தேர்தல் களத்தில் இறங்கி அமசுகூ க்கு ஆதரவாக வேலை செய்கிறது. இதனால்  இராணுவத்தின் கெடுபிடிகள், நெருக்குவாரங்கள், வெருட்டல், மிரட்டல், உருட்டல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 

ததேகூ இன் ஆதரவாளர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களது வீடுகள் தாக்கப்படுகின்றன. முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத் தலைவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஒரு நீதியான, நியாயமான, வெளிப்படையான, சுதந்திரமான தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு  அருகி வருகிறது.
மகிந்த இராஜபக்சே துரிதகெதியில்  வடக்கை இராணுவ மயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி, பவுத்த மயப்படுத்தி தமிழர்களின்  கலை, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருகிறார்.

அபிவிருத்தி என்ற  பெயரில்  மகிந்த இராஜபக்சாவின் அரசு இராணுவ தளங்கள், கடற்படைத் தளங்கள், இராணுவ குடியிருப்புக்கள், விளையாட்டு மைதானங்கள், உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் போன்றவற்றை நிறுவியுள்ளது.  அதே சமயம் இடம் பெயர்ந்த தமிழ்மக்களுக்கு ஒரு வீடு தன்னும் இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

நெடுஞ்சாலைகள், பாலங்கள், தொடர்வண்டி, மின்சாரம் போன்றவற்றைக் காட்டித்  தேர்தலில் வெல்லலாம் என மகிந்த இராஜபக்சே நப்பாசைப் படுகிறார்.  தமிழ்மக்கள் தார்ச்சாலைகள் மற்றும் தொடர்வண்டிகளை விட  தங்கள் மூதாதையர்களது பூமியில் தங்களது பூர்வீக  வீடுகளில் அமைதியாக வாழ்வதையே விரும்புகிறார்கள் என்பதை  சிறீலங்காவின் ஆட்சியாளர்களுக்கும் உலகத்துக்கும் எடுத்துச் சொல்ல  ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழ் பேராயர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. (“Go to vote and tell the Sri Lankan rulers and World above that it is important for Tamils to live in Peace with dignity in their ancestral land and home than of those carpet road and railways”)

பட்டதாரி ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  சமுர்த்தி ஊழியர்கள் சிலருக்கு வேலை கொடுப்பது,  ஆளும் கட்சி வேட்பாளர்களுடைய அனுசரணையுடன் நடமாடும் சேவைகளை நடத்துவது போன்றவற்றின் மூலம் தமிழ்மக்களது வாக்குகளைப் பெறலாம் என  மகிந்த இராஜபக்சே பகல் கனவு காண்கிறார். இந்தக் கண்துடைப்புகளுக்கு  தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள். தமிழ்மக்கள் அபிவிருத்தியை விட அடிப்படை உரிமைகளோடு சுதந்திரமாக, தன்மானத்தோடு,  பாதுகாப்போடு   வாழவே விரும்புகிறார்கள். கிளியைத் தங்கக் கூட்டில் அடைத்து வைத்துப் பாலும் பழமும் கொடுத்து வளர்த்தாலும் அது வானவெளியில் சிறகடித்துப் பறப்பதையே விரும்புகிறது. 

இன்று தமிழர்களது கையில் இருக்கும் பலமான ஆயுதம் வாக்கு மட்டுமே. அதனைத் தமிழ்மக்கள் தேர்தல் நாளன்று உரியமுறையில் பயன்படுத்த வேண்டும். உள்ள 4 வாக்குகளில்  முதல்  வாக்கை வீட்டுச் சின்னத்துக்கு நேரே புள்ளடி இட வேண்டும். எஞ்சியுள்ள 3 விருப்பு வாக்குகளில் ஒரு வாக்குச் சீட்டில்  முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனது 10 எண்ணுக்கு நேரே புள்ளடி போட வேண்டும்.  மிஞ்சிய இரண்டு வாக்குகளை விருப்பமான வேட்பாளர்களுக்குப் போட வேண்டும். கவனமாக வாக்களிக்காவிட்டால் வாக்குகள்  பழுதான வாக்குகள் எனக் கணிக்கப்படும். கிழக்கு மாகாண தேர்தலில் மொத்தம் 45,291 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகள்  பதிவாகியது கவனிக்கத்தக்கது. 

வாக்காளர்களில் 75  விழுக்காட்டுக்கும் மேலானவர்கள்  ததேகூ வாக்களிப்பதன் மூலம் மாகாண சபையின் மொத்த (38)  இருக்கைகளில் 2/3 இருக்கைகளை கைப்பற்ற முடியும். எனவே கனடிய தமிழ் மக்கள் தாயகத்தில் வாழும்  தங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோரோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு   வரும் செப்தெம்பர் 21 (சனிக்கிழமை)   காலை அச்சுறுத்தல் எதற்கும் அடிபணியாது வாக்களிப்பு நிலையத்துக்குத் தவறாது சென்று வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு  அறிவுறுத்த வேண்டும்.    ததேகூ எப்படியும் வெல்லும் என்ற நம்பிக்கையில் வாக்காளர்கள் வாக்களிக்காது இருந்து விடக் கூடாது. வட மாகாண சபைக்கான தேர்தலில் ததேகூ  க்கு வாக்களிக்குமாறு உலகத் தமிழர் அமைப்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே போல் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் அமைப்பு உட்பட  பல  தமிழ் அமைப்புகளும் ததேகூ  க்கு வாக்களிக்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளன.

எம்மைப் பொறுத்தளவில் கனடிய தமிழ் உணர்வாளர்கள் நல்கிய  ஆதரவு காரணமாக ததேகூ இன் வெற்றிக்கு எம்மாலான உதவியைச்  செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.


Phone: 416-877-8409      /   Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அனுப்பியவர்: நக்கீரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.