Communist Party of India (Marxist)


30.11.2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை

இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. 

புதிதாக அமைந்துள்ள ராஜபக்சே அரசின் மீது தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு அடிப்படையற்றதல்ல. இந்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது, வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவது இலங்கை அரசின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் முழுவதையும் அம்மக்களுக்கு வழங்குவது, நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வது, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து இலங்கை ராணுவத்தை வாபஸ் பெறுவது, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பது, தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதை நிறுத்துவது, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது, 2009ல் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச மனித உரிமை நிபுணர்களையும் கொண்ட விசாரணைக்குழு அமைத்து விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவது, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களது வாழ்வாதார மேம்பாடு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலமே புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும். மக்களின் பரஸ்பர நம்பிக்கையே இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

எனவே, கடந்த கால துயர வரலாறுக்கு முடிவுக்கட்டி மேற்கண்டவைகளை இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. மேலும், தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபயா ராஜபக்சே அவர்களிடம் இந்திய அரசு தனக்குள்ள ராஜ்ஜிய உறவை பயன்படுத்தி தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசிடம் உறுதி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -

Communist Party of India (Marxist)
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017

Ph.: 044 + 24326800 / 900
Fax: 044 + 24341294

Email id: cஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Website: www.tncpim.org

Read: marxist.tncpim.org