- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -உறவுகள் வாழ்வில் என்றும்
உணர்வுடன் கலக்க வேண்டும்
அளவிலா அன்பை நாளும்
அள்ளியே வழங்க வேண்டும்
தெளிவுடன் என்றும் வாழ
வழியினை காட்ட வேண்டும்
நலமுடன் இருக்க வேண்டில்
நாடுவோம் நல்லுறவை என்றும் !

பற்பல உறவை எங்கள்
பண்பாட்டில் காணு கின்றோம்
பாட்டியாய் தாத்தா என்று
பரம்பரை வளர்ந்தே போகும்
பெரியம்மா சித்தி அத்தை
பெரியப்பா மாமா மச்சான்
அன்புடை அக்கா அண்ணா
அருகினில் வந்தே நிற்பார் !

ஆசையாய் கொஞ்சும் அம்மா
ஆவலாய் அணைக்கும் அப்பா
கோபமாய் கிள்ளும் மாமி
கொஞ்சியே பேசும் மச்சாள்
பாசமாய் பார்க்கும் தங்கை
பரிவுடன் அணைக்கும் பாட்டி
நேசமாய் நிறையும் உறவால்
நெஞ்சமே நிறையும் வாழ்க்கை !

இத்தனை உறவைக் காட்டும்
எங்களின் பண்பாட்டைப் பார்க்க
எத்தனை பெருமை என்று
எண்ணி நாம் பார்ப்பதில்லை
தமிழிலே நிறைந்து நிற்கும்
அமிழ்தான உறவை நாங்கள்
அகமதில் எண்ணி எண்ணி
ஆனந்தம் அடைவோம் நாளும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.