கவிதை: பஞ்சரத்துச் சேவல்!

பட்டினத்திற்குத் தொழிலுக்காய்
போன உன் வருகைக்காக
காத்துக்கிடக்கிறது பண்டிகை

பண்டிகைக்காய் வருகின்ற
உனக்கென்று என்னை முடிக்க 
நிச்சயம் செய்த நாளிலிருந்து
உன் அம்மா மிகவும்
ஆதரவோடுதான் இருக்கிறாள்

என்னோடு உன்னை பிரிந்த தவிப்பில்
உன் முகம் காணும் நாளுக்காய்
தவமிருக்கும் உன் அம்மாவுக்குக் 
ஒரு பட்டு சேலையோ இல்லை
உன் வசதிக்கேற்ப ஒரு
கைத்தறி புடவையோ கொண்டுவரலாம்

பண்டிகைகாய் வரும் நீ
உன் தங்கைக்காய் பாவாடைத் தாவணி 
கொண்டு வரலாம்

பள்ளிக்கூடப் புத்தகப் பை
வரும் வீதிகளை
பார்த்துப் பார்த்துக் காத்திருக்கும்
உன் தம்பியின் ஏக்கம் தீர்க்கலாம்

வீட்டைத் திருத்திக்கொள்ளும்
உன் அப்பா எதிர்பார்ப்புகளுக்கு
பணம் கொண்டு வரலாம்

நண்பர்களுக்கு
வாசனை திரவியமும்
இன்னோரன்ன பொருட்களும்
கொண்டு வரலாம்

இன்னும் நீ
உன் காதலிக்கும் இரகசியமாய்
ஏதேனும் கொண்டுவரலாம்

எல்லோருக்குமான உன் வருகையில்
எனக்கு மட்டும் பகிரங்கமாக
நீ கொண்டு வருவதென்னவோ
மரணம் மட்டுமே

அத்தனைப் பேருக்கும்
பெருநாளாக நீ வரும் நாள்
வந்துவிடக்கூடாது என்பதுதான்
என் பிரார்த்தனையாய்

நீ வருகின்ற பண்டிகையில் நாளில்
உயிரே வந்ததாய் உணரும்
உறவுகளுக்கு ஆனந்த பந்தியாகி
நாட்டுக்கோழின்னா நாட்டுக்கோழின்னு
நா ருசித்து நீ மகிழும் நிமிஷத்தை 
எண்ணிய மரண பீதியில்
அதிகாலையிலே அலறுகிறேன்

ஆனாலும் சேவல் கூவிடிச்சு என்று
எழுந்து அவரவர் கடமைகளில் மூழ்கும்
உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல
உனக்கும் கூட எப்படி புரியும்
பஞ்சரத்துச் சேவல் என் தவிப்பு?


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.