(ஒரு  தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)


ஶ்ரீராம் விக்னேஷ்

1.
கட்டிய  கணவர்தம்,  
மட்டிலா  அன்பினால்,
கட்டிப் பொன் :  கனியைப்பெற்  றேன்! – வாரிக்
கட்டியே  முத்தம்இட்  டேன்! – சிறு
தொட்டிலில்  போட்டவன்,
தூங்கிடும்  போதிலே,
தூய்மையாம்  தெய்வம்கண்  டேன்! – ஒரு
தாய்மையின்  உய்வில்நின்   றேன்!

2.

எட்டியே  பிடித்துமார்,
பற்றியே  முகத்தினால்,
முட்டியே  பருகக்கண்   டேன்! – முகம்
மோதியே  மகிழக்கண்   டேன்! -  தேன்
சொட்டென   வாயினால்,
விட்டிடும்   வீணிரால்,
சட்டையும்   நனையக்கண்   டேன்! – மனம்
சாலவே   குளிரக்கண்   டேன்!

 

3.
தத்தியே   தவழ்ந்து    பின்,
தளர்நடை   போட்டு    என்,
தாழ்தனைச்   சுற்றிவந்    தான் -  தன்
தாயெனும்   உரிமைகண்   டான்! – நான்
சுத்திய  சேலையில்,
தொத்தியே  பாய்ந்தவன்,
முத்தென  வாய்திறந்    தான்!- தன்
சொத்தெனத்   தமிழ் உதிர்ந்   தான்!      

4.
பள்ளியில்   கற்றிடப்,
பத்திரம்   பண்ணிநான்,
பாசமாய்   அனுப்பிவைத்   தேன்! – அவன்
படிப்பிலே   உயிரைவைத்   தேன்! – எந்தக்
கள்ளியின்   நெஞ்சிலும்,
பள்ளிகொள்ளா   தவன்,
கல்வியில்   கவனம்வைத்   தான்- கலையில்
கவுரவப்   பட்டம்பெற்   றான்!

5.
ஒருமகள்   இல்லையே,
எனும்குறை   தீர்த்திட,
மருமகள்   வரவும்வேண்   டும்! – மகன்
மாலையை   இடவும்வேண்   டும்! – நான்
அருமையாய்   கொஞ்சிட,
அன்பான   பேரனை,
உரிமையாய்   தரவும்வேண்   டும்! – மனம்
பெருமையில்  நிலவவேண்   டும்!

6.

வெள்ளிகள்   நடுவிலோர்,
வெண்மதி   போலவன்,
வெற்றிகள்   காணவேண்   டும்! – கண்டு
பெற்றநான்   மகிழவேண்   டும்! – உயிர்
கொள்ளிடக்   கூற்றுவன்,
துள்ளியே   வந்தபின்,
கொள்ளியை   வைத்தால்போ   தும்! – நெஞ்சில்
கோவிலாய்க்   கொண்டால்போ   தும்!

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.